மலர்மன்னன் மறைவு

malarmannan_1திமுக உருவானது ஏன்?, ஆரிய சமாஜம், திராவிட இயக்கம் : புனைவும் உண்மையும் உள்ளிட்ட புத்தகங்களை எழுதிய எழுத்தாளர் மலர்மன்னன் 9 பிப்ரவரி 2013 அன்று காலை மரணம் அடைந்துவிட்டார். மேற்சொன்ன மூன்று புத்தகங்களும் கிழக்கு பதிப்பக வெளியீடுகள்.

திமுக உருவானது ஏன்?, ஆரிய சமாஜம் என்ற இரண்டு புத்தகங்ககளையும் எடிட் செய்தது சுவையான அனுபவம். குறிப்பாக, திமுக உருவானது ஏன் என்ற புத்தகத்துக்கு அவர் கொடுத்த தலைப்பு “திமுக தோன்றுவானேன்?’ – ஓர் ஆய்வுப்பார்வை என்பதுதான். மேற்கோள்களாலும் விமரிசனங்களாலும் நிறைந்த புத்தகம். பெரியாரின் செயல்பாடுகளைக் கடுமையாக விமரிசிக்கும் மலர்மன்னன், அண்ணாவின் செயல்பாடுகளைக் கொஞ்சம் மென்மையாகவே கையாண்டிருப்பார்.

திமுக உருவானதன் பின்னணியை ஆய்வுசெய்யும் புத்தகம் என்பதால் புத்தகம் முழுக்க கருணாநிதி என்ற பெயரே வராதவாறு பார்த்துக்கொண்டிருந்தார் மலர்மன்னன். அந்தப் புத்தகத்தில் ஆறேழு முறை கருணாநிதியின் பெயர் வரும். அவற்றில் மூன்று முறை, கவிஞர் கருணானந்தம் பற்றிய செய்திகளை எழுதும்போது, “இவர் கருணாநிதியின் நண்பர்’ என்று குறிப்பிட்டிருப்பார். அண்ணா பேரவையை திமுகவே நடத்தும் என்று சொன்னபோது ஒருமுறையும் கண்ணதாசனுடனான மோதல் குறித்துச் சொல்லும்போது ஒருமுறையும் கருணாநிதியின் பெயர் வரும். இவையும்கூட திமுகவின் உருவாக்கத்துக்குப் பிறகு நடந்த சம்பவங்களே. ஆக, திமுகவின் உருவாக்கத்துக்கும் கருணாநிதிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை வலியுறுத்த இந்தப் புத்தகத்தில் முயற்சி செய்திருப்பார் மலர்மன்னன்.

புத்தகத்தை எடிட் செய்யும் சமயத்தில் அடிக்கடி தொலைபேசியில் பேசுவார். தனக்கும் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர் ஆகியோருக்கும் உள்ள தொடர்புகள் பற்றிப் பேசுவார். அண்ணாவுடன் அமர்ந்து அசைவ உணவு (மீன்) உண்ட சம்பவத்தைப் பெருமிதத்துடன் சொல்வார். எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளர்களுள் அடியேனும் ஒருவன் என்பார். பெரியாரின் மீது அளவற்ற கோபமும் அண்ணாவின் மீது அளவுகடந்த அன்பும் கொண்டவர் என்பதைத் தன்னுடைய பேச்சில் வெளிப்படுத்துவார்.

malarmannan murasoliகருணாநிதியைக் கடுமையாக விமரிசிக்கக்கூடியவர். எம்.ஜி.ஆருக்கும் மலர்மன்னனுக்கும் இருந்த நட்பு கருணாநிதியை அதிருப்தியடையச் செய்தது என்றும் அதனை வெளிப்படுத்தும் வகையில் முரசொலியில் “மலர் மன்னன் கதை’ என்ற தலைப்பில் கதை வடிவிலான கட்டுரை ஒன்றை கருணாநிதி எழுதியிருக்கிறார் என்றும் சொல்வார். ஒருமுறை அந்தக் கதையின் ஒளிநகலை அனுப்பிவைத்தார்.

இந்துத்வ சிந்தனையாளராகவும் தீவிர திராவிட இயக்க எதிர்ப்பாளராகவும் அறியப்பட்ட மலர்மன்னனின் ஆரிய சமாஜம் புத்தகத்தை எடிட் செய்துகொண்டிருந்த சமயத்திலும் திமுக, திராவிட இயக்கம் பற்றியே என்னிடம் அதிகம் பேசுவார். குறிப்பாக, காலச்சுவடு உள்ளிட்ட இதழ்களில் அவர் எழுதும் கட்டுரைகள், அவற்றுக்கான எதிர்வினைகள், பாராட்டுகள் பற்றிப் பேசுவார். இரண்டு புத்தகங்களும் வெளியான பிறகுதான் அவரை நேரில் சந்தித்தேன். கிழக்கு அலுவலகத்துக்கு வந்தபோது சில மணி நேரங்கள் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது கலைஞரின் கல்லக்குடி போராட்டம் பற்றி கேலியும் கிண்டலுமாகப் பேசினார்.

பின்னர் திராவிட இயக்கம்: புனைவும் புரட்டும் என்ற தலைப்பில் தான் எழுதிக்கொண்டிருக்கும் புத்தகம் பற்றியும் நான் எழுதிய திராவிட இயக்க வரலாறு புத்தகம் பற்றியும் பேசினார்.

அவர் எழுதிய அந்தப் புத்தகம் தற்போது “திராவிட இயக்கம்: புனைவும் உண்மையும்’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. கடந்த சென்னை புத்தக்காட்சியில் நல்ல கவனத்தைப் பெற்றது. தொடர்ந்து நிறைய எழுதவேண்டும் என்ற ஆர்வத்துடன் இருந்த மலர்மன்னனின் மறைவு தமிழ்நாட்டில் உள்ள இந்துத்வ எழுத்தாளர் சமூகத்தில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.

0

ஆர். முத்துக்குமார்

பதிப்புரிமை: எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் கவனத்துக்கு

copyright lockபதிப்பாளர்கள், எண்ணற்ற எழுத்தாளர்கள், எண்ணிலடங்கா புத்தகங்கள் என்று சென்னை புத்தக கண்காட்சி நம்மை மலைக்கவைக்கிறது.  தினம் தினம் புதுப்புது எழுத்தாளர்கள் தோன்றுகிறார்கள். தங்கள் புத்தகங்களை அச்சிட்டு வெளியிட முடியாதவர்கள் பதிப்பாளர்களை நாடிச் செல்கிறார்கள். பதிப்பாளர்களால் புத்தகங்களை எளிதில் சந்தைப்படுத்த முடியும். அதற்கான கட்டமைப்பு அவர்களிடம் உண்டு. உள்நாட்டின் மூலைமுடுக்கு தொடங்கி  வெளிநாடுகள் வரை ஒரு புத்தகத்தைக் கொண்டுசெல்லமுடியும் என்றால் அது பதிப்பாளர்கள் அல்லது வெளியீட்டாளர்களால்தான் முடியும்.

அதேபோல் என்னதான் வியாபார உத்தி கடைப்பிடிக்கப்பட்டாலும் புத்தகம் சுவாரஸ்யமாக இல்லை என்றால் வாசகர்கள் வாங்கமாட்டார்கள். புத்தகம் விற்காது. பதிப்பாளர்களுக்கு நட்டம்தான். ஒரு புத்தகம் மக்களிடையே பேராதரவைப் பெற வேண்டுமென்றால் நல்ல எழுத்தாளரும் தேவை, நல்ல பதிப்பாளரும் தேவை. இன்றைய புத்தக வியாபாரத்தில் பதிப்பாளரைச் சார்ந்து எழுத்தாளரும், எழுத்தாளரைச் சார்ந்து பதிப்பாளரும் இருக்கின்றனர்.

ஏனைய தொழிலைப் போல புத்தக வெளியீட்டிலும் வருமானத்தை வைத்துதான் வியாபாரம். புத்தக விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தைப் பதிப்பாளரும், எழுத்தாளரும் ஒரு குறிப்பிட்ட விகிதக்கணக்கில் பங்கிட்டுக் கொள்கிறார்கள். புத்தக விற்பனையில் எழுத்தாளருக்குக் கிடைக்கும் வருமானத்துக்கு ராயல்டி என்று பெயர்.

பிரபலமான எழுத்தாளர் என்றால் அதிகமான ராயல்டி கிடைக்கும். புதிய எழுத்தாளர் என்றால் பதிப்பாளர் நிர்ணயிக்கும் ராயல்டிதான். சில எழுத்தாளர்களுக்கு, அவர்கள் புத்தகத்தை எழுதத் தொடங்கும் முன்பே பதிப்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு ராயல்டி கொடுத்து விடுகிறார்கள். உதாரணத்துக்கு, ஹாரி பாட்டர் புத்தகங்களை எழுதி வரும் ஜே.கே.ரவுலிங் என்ற எழுத்தாளருக்கு ஸ்காலஸ்டிக் என்ற புத்தக நிறுவனம் 1 லட்சம் அமெரிக்க டாலர்களை முன்பணமாக கொடுத்தது. ரவுலிங் எழுதிய சார்சரர்ஸ் ஸ்டோன் என்ற புத்தகம் உலகம் முழுவதும் சுமார் 70 மில்லியன் பிரதிகளை விற்றுத்தீர்ந்தன.

இந்த இடத்தில் ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது. சந்தையில் வெளிவரும் புத்தகத்தின் பதிப்புரிமை யார் வசம் இருக்கிறது?  எழுத்தாளரிடமா? அல்லது பதிப்பாளரிடமா?

ஒப்பந்த அடிப்படையில் ஒரு எழுத்தாளர் பதிப்பாளருக்கு புத்தகம் எழுதிக்கொடுத்தார் என்றால், அந்த ஒப்பந்தத்தின்படி பதிப்பாளரிடம்தான் பதிப்புரிமை இருக்கும். ஏனைய சமயங்களில் எழுத்தாளரிடம் மட்டுமே புத்தகத்தின் பதிப்புரிமை இருக்கும். இந்த விவகாரத்தில் கேரள நீதிமன்றத்தின் வி.டி.தாமஸ் -எதிர்- மலையாள மனோரமா (AIR 1989 Ker 49)  என்ற வழக்கில் வெளியிட்ட தீர்ப்பு பிரபலமானது.

வி.டி.தாமஸ் மலையாள மனோரமா என்ற பத்திரிகை நிறுவனத்தில் கேலிச் சித்திர ஓவியராக வேலை பார்த்து வந்தார். அவர் ஊழியராக இருந்த சமயத்தில் மலையாள மனோரமா பத்திரிக்கைக்கு நிறைய கார்டூன்களை வரைந்துவந்தார். அதில் பொப்பன் மற்றும் மோலி என்ற கார்டூன்கள் மிகவும் பிரபலமானவை. மலையாள மனோரமா இந்த கார்டூன்களை வைத்து நிறைய படைப்புகளை வெளியிட்டது.

சில ஆண்டுகளுக்குப் பிறகு வி.டி. தாமஸ் மலையாள மனோரமா நிறுவனத்தை விட்டு வெளியேறி, கலா கௌமுதி என்ற பத்திரிக்கைக்கு பொப்பன், மோலி கார்டூன்களை வரைந்து கொடுத்தார். மலையாள மனோரமா வி.டி. தாமஸ் மீது வழக்கு தொடர்ந்தது.  வி.டி.தாமஸ் தங்களுடைய நிறுவனத்தில் சம்பளத்திற்காக வேலை பார்த்தபோது உருவாக்கிய கார்டூன்கள்தான் இந்த பொப்பன் மற்றும் மோலி. ஆகவே, இந்த கார்டூன்களின் மீதான பதிப்புரிமை தங்களுடையது என்றது மலையாள மனோரமா தரப்பு. வழக்கை விசாரித்த நீதிமன்றம், வி.டி.தாமஸ் மலையாள மனோரமாவுக்காக வரைந்து கொடுத்த பொப்பன், மோலி கார்டூன்களின் பதிப்புரிமை மலையாள மனோரமாவிடம் இருப்பதாகவும், அதைத் தவிர வி.டி.தாமஸ் மலையாள மனோரமாவை விட்டு வெளியே வந்த பிறகு வரைந்த ஏனைய பொப்பன், மோலி கார்டூன்களின் மீது மலையாள மனோரமா சொந்தம் கொண்டாட முடியாது என்ற தீர்ப்பை வெளியிட்டது.

சரி, ஒரு எழுத்தாளருக்கு தன்னுடைய படைப்புகளின் மீது எத்தனை ஆண்டுகள் பதிப்புரிமை இருக்கிறது? அவரது ஆயுள் முழுவதற்கும் உண்டு. பின்னர் அவர் இறந்து ஒருவருடம் கழிந்து 60 ஆண்டுகள் வரை அவருடைய வாரிசுகளுக்குப் பதிப்புரிமை உண்டு. பதிப்புரிமை காலம் முடிந்த பிறகு, ஒரு எழுத்தாளரின் படைப்புகள் பொதுவில் வந்துவிடும். பொதுவில் வந்த பிறகு அந்த புத்தகத்தை யார்வேண்டுமானாலும் அச்சிடலாம், வியாபாரம் செய்யலாம். எழுத்தாளரின் வாரிசுகளுக்குப் பதிப்பாளர்  ராயல்டி வழங்கவேண்டிய அவசியம் இல்லை.

பதிப்புரிமை நிலுவையில் உள்ள காலம் வரை ஒரு எழுத்தாளர் தன்னுடைய படைப்பைப் பதிப்பாளருக்கு உரிமை மாற்றம் செய்யலாம். அதே போல் ஒரு எழுத்தாளர் தான் எழுதப்போகும் புத்தகத்துக்கும் உரிமை மாற்று ஒப்பந்தம் செய்யலாம். ஆனால் அந்த ஒப்பந்தம் புத்தகம் வெளியிட்டபிறகுதான் அமலுக்கு வரும். இந்த உரிமை மாற்றம் பதிப்புரிமை காலம் முழுமைக்கும் இருக்கலாம் அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்துக்கும் இருக்கலாம். எவ்வளவு காலத்துக்கு உரிமை மாற்றம் இருக்கவேண்டும் என்பது ஒப்பந்தம் செய்து கொள்பவர்கள் எடுக்க வேண்டிய முடிவு.

உரிமை மாற்றம் எழுத்துப்பூர்வமாகத்தான் இருக்கவேண்டும். வாய்மொழி ஒப்பந்தம் செல்லுபடியாகாது. உரிமை மாற்று ஒப்பந்தத்தில் எந்த படைப்புக்காக உரிமை மாற்றம் செய்யப்படுகிறது, என்னவிதமான உரிமைகளெல்லாம் பதிப்பாளருக்கு வழங்கப்படுகிறது, எந்தெந்த இடங்களிலெல்லாம் சம்மந்தப்பட்ட படைப்புகளை விற்கலாம், எத்தனை ஆண்டுகளுக்கு இந்த உரிமை மாற்றம் செல்லும் என்பன போன்ற விவரங்கள் குறிப்பிடப்படவேண்டும். ஒப்பந்தத்தில் உரிமை மாற்று காலம் குறிப்பிடப்படவில்லை என்றால் அது ஐந்தாண்டுகளுக்கு மட்டும்தான் என்று பதிப்புரிமை சட்டம், 1957 தெரிவிக்கிறது. மேலும் ஒப்பந்தத்தில் எந்தெந்த இடங்களிலெல்லாம் புத்தகம் விற்கப்படலாம் என்ற விவரம் குறிப்பிடப்படவில்லை என்றால், இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் புத்தகத்தின் பிரதிகளை விற்கலாம் என்பதுதான் அதன் சட்டப்படியான அர்த்தம்.

பதிப்புரிமை உரிமை ஒப்பந்தம், உரிமை மாற்று ஒப்பந்தம் ஆகியன இப்படித்தான் இருக்க வேண்டும், இந்த வடிவத்தில்தான் இருக்கவேண்டும் என்ற எந்தவொரு கட்டாயமும் இல்லை. முன்னாள் பிரதமர் நேருவின் சுயசரிதத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட சா.கணேசன் என்பவர் உரிமம் பெற்றிருந்தார். சா.கணேசன் நேருவுக்கு முறையாக ராயல்டி தராததால், நேரு அந்த உரிமையை ரத்து செய்துவிட்டு, புக்ஸ் இந்தியா என்ற நிறுவனத்துக்கு உரிமையை வழங்கியிருக்கிறார். இருந்தபோதிலும் சா.கணேசனுடன் தொடர்புடைய திருமகள் அண்ட் கோ என்ற நிறுவனம் நேருவின் சுயசரிதத்தை தமிழில் வெளியிட்டது. இதை எதிர்த்து புக்ஸ் இந்தியா நிறுவனம் திருமகள் அண்ட் கோ நிறுவனத்தின் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

வழக்கில் திருமகள் அண்ட் கோ தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம்,  நேரு தனது சுயசரிதை புத்தகத்தின் உரிமை மாற்றம் சம்மந்தமாக பிரேத்யேகமாக எந்த ஒரு ஒப்பந்தத்திலும் வாதி நிறுவனத்துடன் ஈடுபடவில்லை என்பதாகும். ஆனால் புக்ஸ் இந்தியா தரப்போ,  நேருவின் பிரதிநிதி நேருவின் விருப்பத்திற்கிணங்க எங்க்ள் நிறுவனத்துக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். மேலும் அந்தக் கடிதத்தில், திருமகள் அண்ட் கோ என்ற நிறுவனம் தன்னுடைய சுயசரிதத்தை தமிழில் வெளியிட எந்த அதிகாரமும் இல்லை என்றும், எங்கள் நிறுவனமே தன்னுடைய சுயசரிதத்தை வெளியிட வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார் நேரு’ என்று கூறியதோடு,  நேரு எழுதிய கடிதத்தையும் நீதிமன்றத்தில் ஒப்படைத்தது.

கடிதத்தை பரிசீலித்த நீதிபதிகள், பதிப்புரிமை சட்டத்தின் கீழ் பதிப்புரிமை உரிமை மாற்றத்துக்கென பிரேத்யேக ஆவணங்கள் ஏதும் தேவையில்லை, கடிதத்தின் மூலமாகக் கூட ஒரு படைப்பாளி தன்னுடைய பதிப்புரிமையை மற்றவருக்கு மாற்றம் செய்து கொடுக்கலாம் என்ற தீர்ப்பை வெளியிட்டது  (AIR 1973 Mad 49) பதிப்புரிமை உரிமை மாற்று ஒப்பந்தத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், ஏனைய உரிமை மாற்றத்துக்கு விதிக்கப்படும் முத்திரைத் தீர்வை (Stamp Duty)  இதற்குk கிடையாது. அதேபோல் பதிப்புரிமை உரிமை மாற்று ஆவணத்தை, மற்ற ஆவணங்கள் போல பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யவேண்டிய அவசியமில்லை. பதிப்புத்துறை நன்கு வளர வேண்டும், நாட்டில் மக்கள் படிப்பதற்கு புத்தகங்கள் மலிவான விலையில் கிடைக்கவேண்டும் என்ற நோக்குடன் மேற்குறிப்பிட்ட ஒப்பந்தங்கள் சார்பாக முத்திரைத் தீர்வை வசூலிப்பதிலிருந்தும், பதிவுசெய்வதிலிருந்தும் விதி விலக்கு செய்யப்பட்டிருக்கிறது.

உரிமை மாற்று ஒப்பந்தத்தின் மூலம் பெறப்பட்ட உரிமைகளை ஒரு பதிப்பாளர் ஒப்பந்தம் கையெழுத்து இடப்பட்ட ஓர் ஆண்டுக்குள் செயல்படுத்தவில்லை என்றால் அந்த உரிமைகள் ரத்தாகிவிடும். ஆனால் ஒப்பந்தத்தில், ”பதிப்பாளர் எழுத்தாளரிடமிருந்து பெற்ற உரிமைகளை செயலபடுத்தாத போதிலும் சம்மந்தப்பட்ட ஒப்பந்தம் ரத்தாகாது” என்று ஷரத்து இருந்தால் மேலே சொன்ன சட்ட விதி பதிப்பாளரைப் பாதிக்காது. ஏனைய சமயங்களில், பதிப்பாளர் தனக்கு வழங்கப்பட்ட உரிமைகளை ச்செயல்படுத்தத் தவறும் பட்சத்தில், எழுத்தாளர் பதிப்புரிமை வாரியத்திடம் புகார் அளிக்கலாம். பதிப்புரிமை வாரியம் புகாரை விசாரித்து எழுத்தாளர், பதிப்பாளருக்கு இடையேயான ஒப்பந்தத்தை ரத்து செய்யும். அதே போல் ஒப்பந்தம் சம்பந்தமாக எழுத்தாளருக்கும், பதிப்பாளருக்குமிடையே ஏதேனும் சண்டை சச்சரவு, ராயல்டி தொடர்பாகவோ அல்லது ஏனைய காரணங்களுக்காகவோ ஏற்பட்டால், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் பாதிப்புரிமை வாரியத்திடம் புகார் செய்யலாம். புகாரை விசாரித்து பதிப்புரிமை வாரியம் தகுந்த உத்தரவை பிறப்பிக்கும். தேவைப்பட்டால் உரிமை மாற்று ஒப்பந்தத்தையே ரத்து செய்யலாம். ஒப்பந்தத்தை ரத்து செய்யும் பரிகாரத்தை எழுத்தாளர் நலன் கருதி தேவைப்பட்டால் மட்டுமே வழங்க வேண்டும் என்று சட்டம் வரையறை அளிக்கிறது. மேலும் சட்டம் இன்னொரு நிபந்தனையயும் முன்வைக்கிறது. அதாவது ஒப்பந்தம் செய்யப்பட்டு ஐந்தாண்டுகளுக்கு உள்ளாக அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய பதிப்புரிமை வாரியத்திற்கு அதிகாரமில்லை.

பதிப்புரிமைச் சட்டம், 1957 ஒரு எழுத்தாளருக்கு பதிப்புரிமையைத் தவிர மேலும் ஒரு உரிமையை வழங்கியிருக்கிறது. அதன் பெயர் தார்மிக உரிமை. எழுத்தாளர் தன்னுடைய படைப்பை பதிப்பாளருக்கு உரிமை மாற்றம் செய்து விட்டாலும் கூட அந்த படைப்பின் மீதான எழுத்தாளரின் தார்மீக உரிமையை பதிப்பாளர் உட்பட வேறு யாரும் மறுக்க முடியாது.

ஒரு படைப்பாளியின் தார்மீக உரிமைகள் என்னென்ன?

ஒரு படைப்பின் ஆசிரியர் தானே என்று பறைசாற்றும் உரிமை; தன்னுடைய படைப்பை மற்றவர்கள் திரித்துக் கூறாமல், உருக்குலைக்காமல், மாற்றி அமைக்காமல் இருத்தல். அவ்வாறு யாரேனும் செய்தால் அவர்களைத் தடுக்கவும், அவர்களிடமிருந்து நஷ்டயீடு பெறவும், ஒரு எழுத்தாளரின் தார்மீக உரிமை வழிவகை செய்கிறது.


{ஆழம் பிப்ரவரி 2013 இதழில் வெளியான கட்டுரை}

 

கிழக்கு : புதிய புத்தகங்கள் / அறிமுகம் 1

Thamizhaga Arasiyel Varalaru 1 copy1) தமிழக அரசியல் வரலாறு / ஆர். முத்துக்குமார்

இரு பாகங்களில் வெளிவந்திருக்கும் புத்தகம். முதல் பாகம் 1947 தொடங்கி எமர்ஜென்ஸி வரையிலான காலகட்டத்தைப் பற்றியது. இரண்டாவது பாகம், எம்ஜிஆர் ஆட்சிக்காலம் தொடங்கி 2000 வரையிலானது. ஒரு காலத்தில் காங்கிரஸின் கோட்டையாக இருந்த இந்தியா படிப்படியாக பிராந்திய கட்சிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்து சேர்ந்த கதையின் ஒரு பகுதி இதில் விவரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கம் தோன்றியது எப்படி, திமுகவும் அதிமுகவும் போட்டிக்கட்சிகளாக வளர்ந்த பின்னணி என்ன, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற சாதிக் கட்சிகள் எப்படித் தோன்றின, தேர்தல் களத்தில் வெற்றி, தோல்விகள் எப்படித் தீர்மானிக்கப்படுகின்றன ஆகியவை இந்தப் புத்தகங்களில் எளிமையாக விவரிக்கப்பட்டுள்ளன.

எம்ஜிஆர் தொடங்கிவைத்த கவர்ச்சிவாதம் (populism) எப்படி Thamizhaga Arasiyel Varalaru 2 copyஅரசியல் களத்தை உருமாற்றியது என்பதை அறிந்துகொள்வது முக்கியமானது. ஆந்திராவில் என்டிஆர் ஆட்சியைப் பிடித்தது இப்படித்தான்.  இன்றும்கூட கவர்ச்சிவாதம்தான் ஓட்டு வங்கிகளை உருவாக்கிக்கொண்டிருக்கின்றன. அதை மட்டுமே கொண்டு ஆட்சியாளர்கள் செல்வாக்கு செலுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

காவிரி பிரச்னை, தென் தமிழகத்தின் சாதிப் பிரச்னைகள், ஈழம்,  கச்சத்தீவு என்று தமிழகத்தின் அரசியல் களத்தில் அழுத்தமாகத் தடம் பதித்த பல விஷயங்களின் பின்னணியை முத்துக்குமார் தனது நூல்களில் பதிவு செய்துள்ளார்.

 

India arasiyal Varalaru copy2)  இந்திய அரசியல் வரலாறு / வி. கிருஷ்ணா அனந்த் / தமிழில் : ஜனனி ரமேஷ்

சுதந்தரத்துக்குப் பிறகான இந்திய அரசியலை விவாதிக்கும் கிருஷ்ணா அனந்த் புத்தகத்தின் மொழிபெயர்ப்பு இது. தமிழக அரசியல் வரலாற்றோடு இணைத்து வாசிக்கவேண்டிய புத்தகம் இது.  தமிழக அரசியல் களத்தில் ஏற்பட்ட மாற்றங்களுக்கும் டெல்லியில் நடைபெற்ற மாற்றங்களுக்கும் உள்ள நேரடி மற்றும் மறைமுகத் தொடர்புகளை இந்நூலில் இருந்து தெரிந்துகொள்ளமுடியும். இப்போதுதான் வாசிக்கத் தொடங்கியிருக்கிறேன் என்பதால் புத்தகம் குறித்த விமரிசனத்தைப் பிறகு பார்க்கலாம்.

இந்திய அரசியல் தொடர்ந்து ஆர்வமூட்டக்ககூடியதாகவே இருக்கிறது. இந்திய எழுத்தாளர்கள் மட்டுமல்ல, பல வெளிநாட்டு எழுத்தாளர்களும்கூட தொடர்ந்து இந்தியா குறித்து ஆய்வு செய்துகொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறார்கள். பாட்ரிக் ஃபிரெஞ்ச், வில்லியம் டார்லிம்பிள், மார்க் டுல்லி போன்றோரை உதாரணமாகச் சொல்லலாம். இந்திய எழுத்தாளர்களிடையே சர்வதேச கவனம் பெற்றவர், சமீபத்தில் ராமச்சந்திர குஹா. கிருஷ்ணா அனந்தின் நூலை குஹாவின் நூலோடு ஒப்பிடலாம்.  ஒரே ஒரு வித்தியாசம். ராமச்சந்திர குஹாவைப் போன்ற  ஈர்க்கும் எழுத்து நடை கிருஷ்ணா அனந்திடம் இல்லை.

தமிழக அரசியல், இந்திய அரசியல் இரண்டையும் விவரிக்கும் மேற்காணும் நூல்கள் நிச்சயம் நல்ல வாசிப்பனுபவத்தை அளிக்கும்.

0

ஒரு வெளிநாட்டு அல்வா

halwaநண்பர் ராம் சுரேஷ் (‘பெனாத்தல்’ சுரேஷ் என்று சொல்வதுதான் இயல்பாக இருக்கிறது, ஆனாலும் Brandகளை தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் மதித்தாகவேண்டும் என்று எப்பவும் சொல்கிறவன் என்றமுறையில், அது ‘ராம் சுரேஷ்’ன்னே இருக்கட்டும்) எழுதிய ‘அல்வா’வை அது தமிழ் பேப்பரில் தொடராக வந்தபோதே ஆர்வமாகப் படிக்க ஆரம்பித்தேன், சரியாக மூன்றாவது அத்தியாயத்தில் அந்த ஆர்வம் தீர்ந்துவிட்டது, கதையில் குறை ஏதும் இல்லை, வாராவாரம் காத்திருந்து படிக்கும் பொறுமை எனக்குக் கிடையாது. ஆகவே, ‘மொத்தமா புக்ல படிச்சுக்கறேன்’ என்று அவரிடம் சொல்லிவிட்டேன்.

சொன்னபடி, ‘அல்வா’ புத்தகமாக வெளிவந்தவுடன் வாங்கிப் படித்தேன். ரசித்தேன்.

தொடர்ந்து பேசுவதற்குமுன்னால் ஒரு விஷயம், இது முழுக்க முழுக்க வேக வாசிப்புக்கான நாவல், இலக்கியப் பூச்சு ஏதும் கிடையாது, கையில் எடுத்தால் முழுக்கப் படித்து முடித்துவிட்டுதான் கீழே வைப்பீர்கள், அப்புறம் சில மணி நேரத்தில் மறந்துபோய்விடுவீர்கள். மறுபடி எப்போதாவது எதேச்சையாகக் கையில் எடுத்தால், மறுபடி அதே வேகத்தில் படிப்பீர்கள். அப்படி த்ரில்லர்களுக்கான இலக்கணத்தைச் சிறிதும் குறைவைக்காமல் பின்பற்றியிருக்கிறார் ராம் சுரேஷ்.

அதேசமயம், இது டெம்ப்ளேட் கதை அல்ல. சர்வதேசக் களம் என்பதை வைத்து வெறும் பிரமிப்பு காட்டாமல், நிஜமாகவே அந்தப் பின்னணியை மிக அழகாகக் கதையில் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். முடிந்தவரை க்ளிஷேக்களைக் குறைத்து, கட்டுக்கோப்பான வடிவில் தந்திருக்கிறார். கதைப்போக்கில் வரும் பல Twists and turns முற்றிலும் எதிர்பார்க்கமுடியாதவையாக உள்ளன (குறைந்தபட்சம் எனக்கு).

அடிதடி, கொலை, கொள்ளை, கடத்தல்தான் கதையின் அடிப்படை என்றாலும், ஆங்காங்கே பல சின்னச் சின்னக் குறிப்புகள், வர்ணனைகள், வசனங்கள் மிகவும் ரசிக்கவைக்கின்றன. உதாரணமாக, துபாயில் எங்கு பார்த்தாலும் (செயற்கை) நீரூற்றுகள் என்று சொல்லி, அதற்கு அவர் சொல்லும் உளவியல் காரணம்.

அடுத்து, வசவசவென்று ஏகப்பட்ட கேரக்டர்களைக் கொட்டி நிரப்பாமல், அளவான எண்ணிக்கையில் கதாபாத்திரங்கள், அவை எல்லாவற்றுக்கும் அழுத்தமான ஒரு பின்னணி, அதையும் தனியே ‘ஆதௌ கீர்த்தனாரம்பத்திலே’ என்று தொடங்கி விளக்காமல் கதையோடு சொல்லிய விதம், எல்லாமே ரசிக்கவைக்கிறது.

இதற்குச் சிறந்த உதாரணம், மோனிகா என்ற ஓர் உப பாத்திரம். அநேகமாக அந்தப் பெண்ணுக்கு இந்தக் கதையில் வேலையே இல்லை, ஆனாலும் ஒரு சிறுகதையின் கதாநாயகிபோன்ற கவனத்துடன் அவளைச் செதுக்கியிருக்கிறார். இப்படி ஒவ்வொரு கதாபாத்திரத்தைப்பற்றியும் ஒரு தெளிவான முகம் வாசகர்களுக்குக் கிடைக்கிறது.

அப்புறம், தகவல்கள், ஏதோ ஒரு பார்சல் எங்கிருந்தோ எங்கோ சென்று ஒரு பேங்க் லாக்கரில் பாதுகாக்கப்படுகிறது என்றால், அதுதொடர்பான அத்தனை பின்னணி விவரங்களும் உறுத்தாமல் கதைக்குள் நுழைக்கப்பட்டிருக்கின்றன. கூகுளும் மேப்ஸும் உள்ள சூழ்நிலையில் இது ஒரு பெரிய விஷயம் இல்லைதான் என்றாலும், அதற்கென்று மெனக்கெட ஒரு மனோநிலை வேண்டுமே. அது என்னை மிகவும் ஈர்த்தது.

குறைகள் என்று பார்த்தால், அநேகமாக ஒரு தமிழ்க் கதாபாத்திரம்கூட இல்லாத முதல் தமிழ் த்ரில்லர் நாவல் இதுவாகதான் இருக்கும் என்று நினைக்கிறேன்!

இது எப்படிக் குறையாகும்? என்று நீங்கள் கேட்கலாம். கதையில் வருகிற யாருமே தமிழ் பேசுவதில்லை என்பதால், மொத்த நாவலும் மொழிபெயர்ப்புமாதிரிதான், ஒரு வசனம்கூட நேரடித் தமிழில் இல்லை.

அந்தப் பின்னணியில் பார்க்கும்போது, கதையில் ஆங்கில வார்த்தைகள் மிக மிக அதிகம். ‘தமிழர்கள் இப்பல்லாம் அதிகம் ஆங்கிலம்தானே பேசறாங்க’ என்று ‘நேட்டிவிட்டி’யைச் சொல்லி ராம் சுரேஷ் தப்பித்துக்கொள்ளமுடியாது, மொழிபெயர்த்த அவரே இதற்கு முழுப் பொறுப்பு.

‘அதற்காக, த்ரில்லர் நாவலைச் செந்தமிழிலா எழுதமுடியும்?’ என்பதும் நியாயமான கேள்விதான். க்ரைம் நாவல்களை விரும்பிப் படிக்கும் வாசகர் வட்டம் இத்தனை தீவிரமான ஆங்கிலக் கலப்பை விரும்பாது என்பது என் கட்சி.

த்ரில்லரையெல்லாம் அனுபவிக்கணும், ஆராயப்படாது என்ற மூத்தோர் வாக்கை மதிப்போமாக!

அல்வா, ராம் சுரேஷ், மதி நிலையம் : விலை ரூ 45/-. புத்தகம் வாங்க இங்கே செல்லவும்.

லெனினும் இந்திய விடுதலையும்

ஜூலை 1, 1905 அன்று இந்தியன் ஒப்பீனியன் ஏட்டில் காந்தி இப்படி எழுதினார். ‘ரஷ்ய மக்கள் வெற்றி பெற்றால், ரஷ்யாவில் இந்தப் புரட்சியானது இந்த நூற்றாண்டின் மாபெரும் நிகழ்வாகக் கருதப்படும். நாங்களும்கூட கொடுங்கோன்மைக்கு எதிராக ரஷ்யாவின் பாதையைப் பின்பற்றலாம்.’ புரட்சி வெற்றிபெற்ற பிறகு, 1928ல் காந்தி இவ்வாறு எழுதினார். ‘போல்ஷ்விக் பதாகைக்குப் பின்னர் எண்ணற்ற ஆண்கள் மற்றும் பெண்களின் தூய்மையான தியாகம் உள்ளது என்ற உண்மையை யாரும் சந்தேகிக்க முடியாது. அவர்கள் தங்கள் லட்சியத்துக்காக அனைத்தையும் இழந்தார்கள். லெனின் போன்ற இத்தகைய உயர்ந்த ஆத்மாக்களின் தியாகத்தினால் புனிதப்படுத்தப்பட்ட ஒரு தத்துவம் வீணாகாது.’

1917 ரஷ்யப் புரட்சி இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கத்தை விரிவாக ஆராயவேண்டியிருக்கிறது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் பொதுச் செயலாளர் பி.சி. ஜோஷி எழுதிய லெனினும் இந்திய விடுதலையும் என்னும் நூல் இந்தப் பணியைச் சீராகத் தொடங்கிவைத்தது.

ரஷ்யப் புரட்சியைக் கண்டு பிரிட்டிஷ் இந்தியா சினமும் அச்சமும் கொண்டிருந்த காலகட்டம் அது. அவ்வாறு அச்சப்படவேண்டிய அவசியமில்லை என்பது காந்தியின் கருத்து. போல்ஷ்விக் புரட்சியை அவர் அபாயம் என்று கருதவில்லை. யங் இந்தியாவில் 1920ல் காந்தி எழுதியது.‘போல்ஷ்விக் அபாயம் என்பதை நான் ஒருபோதும் நம்பியதில்லை. ரஷ்ய போல்ஷ்விக் அபாயம் அல்லது வேறு எந்தவொரு அபாயம் குறித்து இந்திய அரசாங்கம் ஏன் பயன்படவேண்டும்?’

ஆனால், பிரிட்டிஷ் இந்தியா நிம்மதியின்றி தவித்துக்கொண்டிருந்தது. ரஷ்யர்களை முன்மாதிரியாகக் கொண்டு இந்தியர்கள் ஒன்றுதிரண்டு ஒரு புரட்சியை இங்கே அரங்கேற்றமாட்டார்கள் என்று என்ன நிச்சயம்? லெனினையும் அவரது போல்ஷ்விக் கட்சியையும் முன்னுதாரணமாகக் கொள்ளமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? ஜார் அரசுக்கு ஏற்பட்டது பிரிட்டிஷ் அரசுக்கும் ஏற்பட்டுவிட்டால் என்ன செய்வது?

ஓர் உபாயத்தைக் கையாண்டது பிரிட்டன். போல்ஷ்விக் புரட்சி பற்றியும் குறிப்பாக லெனின் பற்றியும் செய்திகள் எதுவும் பரவாதபடி தடை செய்தது. ரஷ்யாவிலிருந்து ஆவணங்கள் கொண்டு வருவது தடை செய்யப்பட்டது. கிடைத்தவையெல்லாம் எதிர்மறையான செய்திகள்தாம். லெனினின் சர்வாதிகாரம் பற்றிய, போல்ஷ்விக்குகளின் வன்முறை செயல்பாடுகள் பற்றிய செய்திகளே பிரிட்டனால் வரலாறு என்னும் போர்வையில் பரப்பப்பட்டன. கம்யூனிசம் மனித குலத்துக்கு விரோதமான ஒரு தத்துவம் என்பது தீவிரமாக வாதிடப்பட்டது. கம்யூனிசத்தைப் பின்பற்றுவது அல்ல, அவ்வாறு நினைப்பதும்கூட சமூக விரோதமான செயல் என்று அறிவுறுத்தப்பட்டது. லெனின் ஒரு கொடூரமான கொலைகாரன் என்றும், ரத்தக் காட்டேரி என்றும் மண்டையோட்டு மாலை போட்டுக்கொண்டு வலம் வருபவர் என்றும் குறிப்பிடப்பட்டது.

ஆனால், அனைத்து தடைகளையும் மீறி, ஆங்கிலேயர்களின் கட்டுக்கதைகளை உடைத்து, லெனினை இந்தியர்கள் தரிசித்தார்கள். நேரு, காந்தி, திலகர் போன்ற இந்திய தேசியவாதத் தலைவர்களையும் இந்திய மக்களையும் போல்ஷ்விக் தத்துவம் ஒருசேரப் பற்றிக்கொண்டது. உண்மையில், போல்ஷ்விக்குகள் பற்றிய பிரிட்டனின் தவறான பிரசாரமே, பல மக்களை லெனினை நோக்கித் திருப்பியது என்றும் சொல்லலாம். அப்படி என்ன ஆபத்தான சித்தாந்தம் என்னும் ஆர்வக் குறுகுறுப்புடன் பலர் சோவியத் நோக்கி நகரத் தொடங்கினர்.

இது குறித்து எஸ்.ஏ. டாங்கே இவ்வாறு எழுதுகிறார். ‘போல்ஷ்வியம் என்பது ரஷ்யாவின் தலைவன் ஆனபின், அனைத்து நாடுகளையும் சேர்ந்த அரசாங்கங்களும் அதை பேய்த்தனமானது, அட்டூழியமானது மற்றும் சர்வாதிகாரமானது என்று சித்தரித்து மக்களின் சிந்தனையில் அவை குறித்து அவப்பெயர் ஏற்படுத்த முயற்சிக்கின்றன. கம்யூனிஸ்ட் செயல்பாடு என்று லேசான சாயல் உள்ள ஒவ்வொரு முயற்சியும் ஒடுக்கப்படுகிறது என்பதுடன் எந்தவொரு நாட்டிலுமுள்ள மக்களுடன் தொடர்பு கொள்வதில் இருந்தும் மக்கள் துண்டிக்கப்படுகிறார்கள்…போல்ஷ்விக்குகளின் உறுதியான சர்வதேச கொள்கையில் இதற்கான காரணம் பொதிந்துள்ளது.’

அந்தக் கொள்கை இதுதான். அடிமைப்படுத்தப்பட்டுள்ள அனைத்து காலனி நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கும் அவர்களுடைய தேசிய விடுதலைப் போராட்டங்களுக்கும் சோவியத் ஆதரவு அளிக்கும் என்று லெனின் குறிப்பிட்டிருந்தார். மக்களை காலனியாதிக்கத்தின் பிடியில் இருந்து மீட்டெடுப்பது ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் கடமை என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

காந்தியின் அமைதி வழியிலான போராட்டம் இந்திய சுதந்தரத்தைப் பெற்றுத்தராது, ரஷ்யாவில் நடைபெற்றதைப் போன்ற புரட்சி மூலமே ஆங்கில ஆதிக்கத்தை உடைக்கமுடியும் என்னும் கருத்தாக்கம் உருபெற ஆரம்பித்தது. எஸ்.ஏ. டாங்கேயின் எழுத்துகளில் இந்த உண்மை காணக்கிடைக்கிறது.

‘ஒரே ஒரு பரிகாரம்தான் உள்ளது… அது இந்தியத் தொழிலாளரின் கரங்களில் உள்ளது. பயங்கரப் போக்கில் ஈடுபடும் ராணுவச் செயல்பாடுகளும், அவற்றின் வெற்றியும் சிப்பாய்களை ஒரு மையத்திலிருந்து மற்றொரு மையத்துக்கு வேகமாகக் கொண்டுசெல்வதிலும், ராணுவத்திற்கான உணவுப் பொருட்கள் வெடிபொருட்களை கொண்டுசெல்வதிலும் பிரதானமாகச் சார்ந்துள்ளன. இவை அனைத்தும் இந்தியத் தொழிலாளிகளால் செய்யப்படுகின்றன. முக்கியமான தருணத்தில் இந்தியத் தொழிலாளிகள் ஒட்டுமொத்தமாக வேலை செய்ய மறுத்தால், ரயில்வேத் தொழிலாளிகள், தந்தி ஊழியர்கள், கூலிகள் மற்றுமிதர வகைப்பட்ட தொழிலாளிகள் அரசாங்கத்துடன் ஒத்துழைக்க மறுத்தால், அதாவது சதிவேலை என்றழைக்கப்படுவதை ஏற்பாடு செய்தால் நம்முடைய வெற்றி நிச்சயம். அரசாங்க பயங்கரப் போக்கு என்பதன் முழுச் செயல்பாடும் முடக்கப்படும் என்பதுடன் அது பணிந்தே தீரவேண்டும்.’

மராத்தி மொழியில் லெனினின் முதல் வாழ்க்கை வரலாறு 1922ல் வெளியிடப்பட்டது. ‘நிகோலய் லெனின் : ரஷ்ய ஜனநாயகத்தின் நிறுவனருடைய வரலாறு’ என்னும் இந்நூலை எழுதியவர், ராம்கிருஷ்ண கோபால் பிடே என்பவர். ஏன் லெனினின் வாழ்க்கை வரலாறை அவர் எழுதத் துணிந்தார் என்பதற்கான காரணம் முன்னுரையில் காணப்படுகிறது.

‘அது ஆங்கிலேய ஏகாதிபத்தியம் கொடிகட்டிப் பறந்த நாட்களாகும். இந்தியர்களாகிய நாங்கள் சுதந்தரத்திற்கான எங்களுடைய போராட்டத்திற்கான ஆதர்சனத்தைப் பெற தெரிந்த ஒவ்வொரு ஆதாரத்தையும் நாடினோம். லெனின் மற்றும் அவருடைய போல்ஷ்விக் ரஷ்யாவைவிட சிறந்த ஆதாரம் வேறென்ன இருக்கமுடியும்? ஆனால் அந்நாட்களில் இந்த ஆதாரங்கள் பொதுமக்களுக்குத் தெரியாது. எனவே புரிபடாமல் இருந்தது. அந்தக் காரணத்திற்காகவே அது எங்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமாக இருந்தது. லெனினுடையதானது ஒரு இணையற்ற தத்துவத்தோடு கூடிய புரட்சியின் ஒரு முற்றிலும் புதிய பரிசோதனை என்று நாங்கள் உணர்ந்தோம். அது நம்முடைய பண்டைக்கால தத்துவம் புகுந்திருந்த எங்களுடைய சிந்தனைக்கு ஒரு பெரும் ஈர்ப்பாக இருந்தது.’

லெனின் பற்றிய விவாதங்கள் இங்கே மும்முரமாக தொடங்கின. பால கங்காதர திலகர் நடத்திய கேசரி பத்திரிகை அலுவலகத்தில் அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் இருந்து தருவிக்கப்பட்ட ஆங்கில மாத ஏடுகள் இருந்தன என்றும் அலுவலக நூலகத்தில் சில புத்தகங்கள் இருந்தன என்றும் தெரியவருகிறது. (லெனினும் இந்திய விடுதலையும், பி.சி. ஜோஷி).

சம்ஹதி (ஒற்றுமை) என்னும் வங்கமொழிப் பத்திரிகை 1923ம் ஆண்டு ஜிதேன் குப்தா என்னும் ஏழை அச்சுத் தொழிலாளியால் தொடங்கப்பட்டது. தன் வாழ்நாள் முழுவதும் வறுமையில் கிடந்து துவள நேரிட்டபோதும்கூட கடைசி வரை பத்திரிகையை அவர் நடத்தி வந்தார். ரஷ்யப் புரட்சி குறித்து சம்ஹதி என்ன சொல்லியிருக்கிறது? ‘எவ்வாறாயினும் மேல்தட்டு வர்க்கங்கள் தாம் உலகில் நீண்டகாலம் ஆதிக்கம் செலுத்தின. தற்பொழுது கீழ்மட்ட வர்க்கங்கள் விழித்துக்கொண்டுவிட்டன என்பதுடன் அவற்றை யாரும் தடுத்து நிறுத்தமுடியாது. இன்று பேய்கள் அடிமைப்படுத்தி வைத்திருந்த ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகாரத்தைப் பெற்றுள்ளனர். இந்தப் புதிய மகிழ்ச்சியானது மிக்க வேதனைகள் மூலம் வருகிறது. உருவாக்கத்திற்கு இத்தகைய வேதனைகள் தேவைப்படுகின்றன.’

ஜனவரி 30, 1925ல் முகம்மதி என்னும் இஸ்லாமிய ஏட்டிய வெளிவந்த கருத்து இது. ‘லெனின் ரஷ்யாவை மட்டும் விடுதலை செய்தார் என்று கூறுவது உண்மையைக் குறைத்துச் சொல்வதாகும். செயலற்றிருந்த மனித குலத்தை சுதந்தரப் பாடலுடன் ஒருவர் கிளர்ந்தெழச் செய்தானென்றால், லட்சோப லட்சம் மக்களுக்கு மகிழ்ச்சி என்று எதிர்பால ராஜ்யத்தின் கதவை ஒருவர் திறந்தானென்றால், துன்பதுயரமும், வறுமையும் நிறைந்த இவ்வுலகில் ஒருவர் சாந்தப்படுத்தும் அமிர்தத்தை விநியோகித்தாரென்றால் அவர்தான் லெனின்.’

இங்கு சிறு கலகம் ஏற்பட்டாலும், சிறு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டாலும் லெனினை நோக்கி கை நீட்டியது பிரிட்டிஷ் இந்தியா. காந்தியும்கூட லெனினின் சித்தாந்தத்தால் கவரப்பட்டுவிட்டார் என்றும் இருவருக்கும் இடையில் தொடர்பு ஏற்பட்டுவிட்டது என்றும் அவர்கள் குற்றச்சம்சாட்டினார்கள். ஸ்வராஜ்யா புனா, மராத்தி வார இதழில் மார்ச் 30, 1920 அன்று இந்தக் குற்றச்சாட்டுக்கு மறுப்பு வெளியானது. ‘இந்தியா மீது போல்ஷ்விக் திட்டங்கள் குறித்தும் போல்ஷ்விக்குகளுடன் திரு. காந்தியின் தொடர்புகள் குறித்தும் செய்திகள் எங்கும் பரவியுள்ளன. ஆனால், உண்மையில் இத்தகைய செய்திகள் அனைத்தும் தவறானவையாகும். போல்ஷ்விக் பிரசாரம் இல்லாமலேயே இந்தியாவில் அதிருப்தி நிலவுகிறது. நாட்டின் பொருளாதார திவால் நிலைமையும் ஆட்சியாளர்களின் அடக்குமுறையும்தான் போல்ஷ்வியத்தை தோன்றச் செய்துள்ளது. இங்கிலாந்து அரசியல்வாதிகள் உலகம் முழுவதும் அதிகாரத்தைச் செலுத்த ஆசை கொண்டுள்ளனர். அவ்வாறிருக்கும்போது, ஏன் போல்ஷ்விக்குகள் மீது தேவையில்லாமல் குற்றம் சுமத்தப்படுகிறது?…நான்கு ஆண்டுகளுக்கு 90 கோடி ரூபாய்க்கு குறையாத பற்றாக்குறைக்கு பொறுப்பான நிர்வாக முறையின் விளைவுதானே போல்ஷ்வியமாக இருக்கமுடியும்?’

காங்கிரஸ் தலைமையேற்று நடத்திய தேசிய விடுதலைப் போராட்டம் ரஷ்யப் புரட்சியின் தாக்கத்தால் தன் திசைவழியை மாற்றிக்கொண்டது என்கிறது ஜூலை 26, 1922 அன்று வெளிவந்த ஆத்ம சுத்தி என்னும் இந்தி இதழ். ‘ஏழைகள் பிரச்சினை இதுவரை காங்கிரஸில் இடம்பெறவில்லை. காங்கிரஸ் கட்சியானது நடுத்தர வர்க்க மனிதர்களின் கரங்களில் உள்ளது. ஆங்கிலேயர் நாட்டைவிட்டுப் போகும்போது அதிகாரம் தங்கள் கரங்களில் வருமென்று அவர்கள் நம்புகிறார்கள். காங்கிரஸ் உறுப்பினர்களில் பெரும்பாலானோர் வழக்கறிஞர்களும் வர்த்தகர்களுமாவர். சுயராஜ்ஜியம் வரும்பொழுது அன்னியப் பொருள்களுக்கு வரி விதிப்பதன் மூலம் லாபம் பெற வர்த்தகர்கள் விரும்புகிறார்கள். வழக்கறிஞர்கள் அப்பொழுது உயர் பதவிகள் கிடைக்குமென்று கருதுகின்றர். எனவே, சாதாரண மக்கள் காங்கிரஸ் குறித்து அக்கறை காட்டவில்லை.’

காஸி இஸ்லாம் தூமகேது, டிசம்பர் 15, 1922 இதழில் இந்தக் கருத்தைத் தெளிவாக முன்வைக்கிறார். ‘ஒரு நாட்டின் சுதந்திரமானது, மக்களால் உதவிடப் பெறாத ஒரு சில படித்த மனிதர்களைக் கொண்டு மட்டும் அடையப் பெற்றுவிடாது என்ற மகத்தான உண்மை இயக்கத் தலைவர்களுக்குத் தோன்றவில்லை. துவக்கத்தில் நாம் செய்த தவறை இன்று நாம் கண்டுபிடித்து விட்டோம். அனைத்து அதிகாரங்களும் ஒரு சில படித்த தலைவர்களின் பிடியில் இருப்பது மட்டும் சுதந்திரமல்ல. சுய பாதுகாப்பிற்காக நமது நாட்டை நாம் பலப்படுத்த விரும்பினால் நாம் இதயபூர்வமாக ஆன்மாபூர்வமாக மக்களுடன் இணைத்துக்கொள்ளவேண்டும்.’

ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் மட்டுமல்ல உலக மக்களுக்கும் லெனினும் ரஷ்யப் புரட்சியும் கற்றுக்கொடுத்த பாடம் இதுதான். மக்களிடம், குறிப்பாக உழைக்கும் வர்க்கத்திடம் ஒன்றுகலக்காமல், அவர்களை இணைத்துக்கொள்ளாமல் எதிலும் எப்போதும் வெற்றிபெறமுடியாது.

0

மருதன்

சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள்

நாவல், கட்டுரை, சிறுகதை என்று பல்வேறு வடிவங்களில் சுஜாதா எழுதி இருந்தாலும், அவரது மிக சிறந்த எழுத்துகள் வெளிப்படுவது சிறுகதையில்தான் என பலரும் கருதுவதுண்டு. சுஜாதாவின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்று ஸ்ரீரங்கத்து தேவதைகள். வாசிக்கும் ஒவ்வொரு முறையும் புன்னகைக்கமுடியும். வாசிக்கும் ஒவ்வொரு முறையும் நம் இளமை காலத்தை தரிசிக்கமுடியும்.

ொத்தம் 14 சிறுகதைகள். அதற்குள் தான் எத்தனை மனிதர்கள் உயிரோடு வலம் வருகிறார்கள் !

நம் சிறுவயதில ஊரில் தொடர்ந்து பார்த்த ஏதாவது ஒரு பைத்தியத்தை இன்று வரை நம் நினைவு இடுக்குகளில் விடாது வைத்திருக்கிறோம் தானே? அப்படி ஒரு பைத்தியத்தின் கதை தான் கடவுளுக்கு ஒரு கடிதம். கோவிந்து என்கிற மனிதர் தினம் கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதி போஸ்ட் செய்கிறார். மன நிலை பாதிக்கப்பட்ட இவருக்கு திருமணம் செய்யலாம் என பேச, (” சாந்தி முகூர்த்தம் ஆனால் எல்லாம் சரியா போயிடும்”) நல்ல வேளையாக அப்படி நடக்கவில்லை. கதையின் இறுதியில் கோவிந்துவின் தம்பியும் அதே மாதிரி ஆகி போனதாகவும், அவர் அம்மா இருவருக்காகவும் வேண்டி கொண்டு தினம் கோவிலில் விளக்கு போடுவதாகவும் முடிக்கிற போது மனம் கனத்து போகிறது.

இன்னொரு பைத்தியத்தின் கதை குண்டு ரமணி. இது தன் குழந்தையை மரணத்திடம் கொடுத்த ஒரு பெண், புத்தி பேதலித்து திரிவதை சொல்கிறது. ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் வந்து அமர்ந்து கொண்டு சாப்பாடு கொடுக்க சொல்லி வற்புறுத்துவதும், அப்படி தராவிடில் அந்த வீட்டு வாசிலிலேயே படுத்து தூங்குவதும்… இது மாதிரி பைத்தியங்களை நிச்சயம் நாம் பார்த்திருப்போம் !

சிறு வயதின் இன்னோர் வித்தியாச அனுபவம் சொல்லும் கதை “பாம்பு”. சுஜாதா வீட்டில் பாம்பு வந்து விட, அவர் தங்கையை சைட் அடிக்கும் சுஜாதாவின் நண்பர் ஹீரோ மாதிரி பாம்பு பிடிக்க பார்க்கிறார். கடைசியில் பாம்பை பிடிப்பது அவர் தங்கை தான். “அது என்ன பாவம் பண்ணுச்சு விட்டுடலாம்” என அவள் சொன்னாலும் அந்த பாம்பு அடித்து கொல்லப்படுகிறது. “என் தங்கையை நான் நன்கு உணர அது ஒரு சந்தர்ப்பம்” என்கிறார் சுஜாதா.

நம் சிறு வயதில் ஏதாவது ஒரு நண்பன் நம்மை டாமினேட் செய்து கொண்டிருந்திருப்பான். பெஞ்சில் உட்காருவது முதல், விளையாட்டு வரை இப்படி சுஜாதாவை மிக டாமினேட் செய்த ஒருவரை பற்றிய கதையை சுவாரஸ்யமாய் சொல்லி விட்டு.. இன்று அவன் “வேலை கேட்டு என் அறையின் வாசலில் அமர்ந்திருக்கிறான். வேலை கொடுக்கலாமா வேண்டாமா சொல்லுங்கள் என முடிக்கிறார் சுஜாதா!

சுஜாதா பாட்டி வீட்டில் வளர்ந்ததால், கதைகளில் பாட்டிக்கு முக்கிய இடம் இருக்கிறது. தனிமையில் சுஜாதாவை திட்டுபவராக, மற்றவர் முன் எப்போதும் விட்டுத் தராதவராக இருக்கிறார் பாட்டி. தன் வீட்டில் வேலை செய்த பெண்மணியின் சம்பள பணத்தை திருடிய கதையை சுஜாதா மறைக்காமல் பகிர்ந்தது நெகிழ்வாக உள்ளது.

போகப்போக ரங்கு கடை, ஸ்ரீரங்கத்து தெருக்கள் எல்லாமே நமக்கு பழக்கப்பட்ட இடமாகி விடுகிறது. கே. வி, ரங்குடு, அம்பி ஆகிய பாத்திரங்கள் (நண்பர்கள்) பல கதைகளில் வருகிறார்கள். அனைத்து சிறுவயது விளையாட்டுகளிலும் சுஜாதா ஒப்புக்கு சப்பாணியாக இருக்கிறார். (எல்லா எழுத்தாளர்களுக்கும் இதே நிலை தானோ?)

உள்ளூர் கிரிக்கெட் மேட்ச்கள் எப்போதும் சுவாரஸ்யம் தான். சுஜாதா தஞ்சை டீமுடன் ஆடி ஜெயித்த அனுபவத்தை மிக சுவாரஸ்யமாய் சொல்கிறார். தங்களுக்கு சாதகமான அம்பயர் வைத்து கொள்வதும், அவர் எல்.பி .டபிள்யூ வுக்கு அவுட் கொடுக்காததும் எல்லாருக்கும் நடந்திருக்கும் ! இந்த மேட்ச் முடிந்து அதன் செய்தி சில வரிகளில் பத்திரிகையில் வந்த போது கிடைத்த சந்தோஷம் அதன் பின் எத்தனையோ முறை பத்திரிக்கையில் தன் பெயர் வந்த போதும் கிடைத்ததில்லை என்கிறார் சுஜாதா!

கிராமத்து டிராமாவில் சுஜாதா (சாமரம் வீசும் ) பெண் வேடம் போட்டதை ஏறக்குறைய கண்ணீருடன் நம்மிடம் சொன்னாலும், நமக்கு சிரிப்பு பிய்த்து கொண்டு போகிறது. நாடகம் பார்ப்பவர்களுக்கு குலுக்கல் முறையில் ஒரு கறவை மாடு பரிசு என்று சொல்லி விட்டு, நாடக அரங்கத்தில் கட்டப்பட்டிருந்த மாடு ஒரு மாதிரி நெர்வசாக சுற்றி வந்து சாணி போட்டு கொண்டிருந்தது என்பது டிப்பிக்கல் சுஜாதா !

ஒவ்வொரு கதையும் வாசித்து விட்டு சற்று இடை வெளி விட்டு தான் அடுத்த கதை வாசிக்க வேண்டியிருக்கிறது.

தமிழில் வெளிவந்த மிக சிறந்த சிறுகதை தொகுப்புகளுள் ஒன்றான இந்த புத்தகத்தை வாசிக்கத் தவறாதீர்கள் !

0

மோகன் குமார்

 

ராகுல்ஜியின் பிரிட்டன் பயணம்

படிக்கும் வயதில் வீட்டைவிட்டு ஓடிச்சென்ற ராகுல்ஜி தன் வாழ்நாளின் இறுதிவரை பயணம் செய்துகொண்டே இருந்தார். தன் பெற்றோரையும் நண்பர்களையும் கிராமத்தையும் விட்டு அவர் பிரிந்துசென்றதற்குக் காரணமே பயணங்கள் மீது அவருக்கு ஏற்பட்டிருந்த காதல்தான். எங்கோ புத்தகம் ஒன்றில் படித்த இந்த நான்கு வரிகள் ராகுல்ஜியை ஓர் ஊர்சுற்றியாக மாற்றியமைத்தன. அசந்து ஓரிடத்தில் ஓய்வெடுக்கும்போது, இந்த வரிகள் நினைவுக்கு வந்துவிடும். கிளம்பிவிடுவார். இப்படியே 45 ஆண்டுகளை அவர் கழித்திருந்தார்.

உலகைச் சுற்றிப்பார் விழித் தெழுந்து,
மறுமுறையும் மனிதப் பிறப்பு வாய்க்குமா உனக்கு?
மனிதப் பிறப்பு தொடர்ந்தாலும்
மறுமுறையும் இளமை கிடைக்குமா உனக்கு?

ராகுல் சாங்கிருத்யாயன் (ஏப்ரல் 9, 1893 – ஏப்ரல் 14, 1963), கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஆஸிம்கர் என்னும் கிராமத்தில் பிறந்தார். தந்தை கேதாரநாத் பாண்டே ஆழ்ந்த இறைபக்தி கொண்ட பிராமணர். ராகுல்ஜியும் அவ்வாறே வளர்க்கப்பட்டார். பிறர் சமைத்தால் தீட்டு ஒட்டிவிடும் என்பதற்காக எங்கு சென்றாலும் தானே சமைத்து உண்பவராகவும், பிரம்மனே அனைத்தும் என்று தீவிரமாக நம்பியவராகவும், தன் மதத்தைத் தரக்குறைவாகப் பேசுபவர்களோடு மல்லுக்கட்டி சண்டை போடுபவராகவும் வளர்ந்தவர். பள்ளிப்பாடங்கள் அவருக்குச் சலிப்பை ஏற்படுத்தின. ஒரு மாதத்துக்கும் குறைவான காலத்தில் படிக்கவேண்டியவற்றை எப்படி ஓராண்டு முழுவதும் படித்துக்கொண்டிருப்பது?

பாடப்புத்தகங்களைக் கடந்து, ஆன்மிகப் புத்தகங்களைக் கடந்து, இந்து மத இலக்கியங்களையும் தத்துவங்களையும் கடந்து, அடுத்து என்ன என்னும் யோசனை பிறப்பதற்குள் அவர் ஊர்சுற்ற ஆரம்பித்துவிட்டார். காசியில் தொடங்கி கிட்டத்தட்ட உலகம் முழுவதையும் ராகுல்ஜி சுற்றிவந்தார். தன் பயணங்கள் குறித்தும், கற்றுக்கொண்ட பாடங்கள் குறித்தும் அவர் ஆழமாகச் சிந்தித்தார். இதுகாறும் சேகரித்து வைத்திருந்த அறிவையும் கறாராகக் கடைபிடித்து வந்த நம்பிக்கைகளையும் நேர்மையாக மறுபரிசீலனை செய்ய ஆரம்பித்தார். இலங்கை, திபெத் ஆகிய நாடுகளில் மேற்கொண்ட பயணங்களின் காரணமாக பௌத்தத்தைத் தழுவினார். ஒரு பௌத்த துறவியாக ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றபோது, சோவியத் யூனியன் குறித்து அவர் தெரிந்துகொண்டார். சோஷலிசம் குறித்து ஆழ்ந்து வாசிக்கவும் ஆரம்பித்தார். அதன் தொடர்ச்சியாக சோவியத் யூனியன் செல்லும் வாய்ப்பு கிடைத்தபோது, பௌத்தத்தின் வசீகரித்தையும் கடந்து மார்க்சியத்தில் தன்னைப் பிணைத்துக்கொண்டார்.

தத்துவம், பயணம், வரலாறு, மதம், மொழி, இலக்கியம் என்று ராகுல்ஜியின் பங்களிப்பு படர்ந்து விரிகிறது. ராகுல்ஜியின் சுயசரிதையை நியூ செஞ்சுரி தமிழில் வெளியிட்டிருக்கிறது. ஆயிரம் பக்கங்களுக்கு நீளும் முற்றுப்பெறாத இந்த சுயசரிதையின் மூலம், ராகுல்ஜியின் அறிவுத் தேடலையும் அவர் சென்றடைந்த உயரங்களையும் துல்லியமாகத் தெரிந்துகொள்ளமுடிகிறது.

1932-33 ஆண்டுகளில் இலங்கையில் தொடங்கி லண்டன் வரை ராகுல்ஜி விரிவாகப் பயணம் செய்தார். மஞ்சள் வண்ண அங்கிகளை அணிந்துகொண்டு லண்டன் வீதிகளில் அலைந்துகொண்டிருந்த ராகுல்ஜியை ஒரு விநோதப் பொருளாகவே அங்கிருந்தவர்கள் கண்டார்கள். கேள்விகளால் அவரைக் குடைந்து எடுத்தார்கள். பிரிட்டிஷ் பத்திரிகையாளர்கள் அவரைத் தேடி வந்து பேட்டி கண்டார்கள். ராகுல்ஜியும் தன் பயண அனுபவங்களை அவர்களிடம் பகிர்ந்துகொண்டார். மறுநாள் அவரைப் பற்றி வெளியான செய்திகளைக் கண்டு அவர் திகைத்துப்போனார்.

‘உண்மையைப் பொய்யாகவும் பொய்யை உண்மையாகவும் சித்திரிப்பதில் பிரிட்டிஷ் பத்திரிகைகள் இந்தியப் பத்திரிகைகளைத் தோற்கடிக்கின்றன. இங்கிலாந்தில் மிக அதிகமாகப் படிக்கப்படும் பத்திரிகைகளில் ஒன்றான தொழிலாளர் கட்சியின் டெய்லி ஹெரால்ட் நிருபர் எங்கள் நோக்கம் பற்றிக் கேட்டார். இங்கிலாந்து மக்கள் முன்பு புத்தரின் உபதேசங்களை வைக்க விரும்புகிறோமென்று நாங்கள் கூறினோம். மறுநாள் பத்திரிகையைப் பார்த்தால் இங்கிலாந்து முழுவதையும் நாங்கள் பவுத்த நாடாக மாற்றிவிட விரும்புகிறோமென்று பிரசுரிக்கப்பட்டிருந்தது.’

இதே போல் இன்னொரு அனுபவம். ‘டெய்லி மெயில் என்னும் இன்னொரு பெரிய பத்திரிகையின் நிருபர் வந்து என்னுடைய திபேத்திய பயணத்தைப் பற்றிக் கேட்டார். என் திபேத்திய அனுபவங்களை விவரித்தேன். மறுநாள் பத்திரிகையில் அந்த நிருபர் ஒரு கதையே கட்டிவிட்டிருந்தார். ‘இந்தப் பவுத்த பிட்சு திபேத்திய பயங்கரக் காடுகளில் தனியாக எவ்வளவோ தூரம் பிரயாணம் செய்தார். ஆனால் இதுவரை ஒரு மிருகமும் அவருக்குத் தீங்கிழைத்ததில்லை. ஒருநாள் அவர் காட்டிலே சென்றுகொண்டிருந்தபோது திடீரென்று ஆறேழு கொள்ளைக்காரர்கள் அவரைத் தாக்க வந்தார்கள். அப்போது கர்ஜித்துகொண்டே தாவிய சிங்கத்தைக் கண்டு அவர்கள் ஓடிப் போய்விட்டார்கள். ஆனால் அந்தச் சிங்கம் இந்தப் பிட்சுவை மட்டும் ஒன்றும் செய்யவில்லை.’ இந்தப் பேட்டியைப் படிக்கும் பகுத்தறவாளர்கள் என்னைப் பொய்யன், புரட்டன் என்று கருதிக் கொள்வார்கள். சாதாரண அப்பாவி வாசகர்களாக இருந்தால் இன்னும் மந்திர சக்தி இருப்பதாக நம்புவார்கள். மதத்தையும் தெய்வீக சக்தியையும் நம்பக்கூடாதென்று சொல்லும் புத்துலக இளைஞர்களுக்கு எதிராக இந்த அப்பாவிகளை ஏவிவிடலாமல்லவா! இதற்காகத்தான் இந்தப் பணமூட்டைப் பத்திரிகைகள் இவ்வாறெல்லாம் எழுதுகின்றன.’

பிரிட்டனின் பணமூட்டைப் பத்திரிகைகள் எப்படி இயங்குகின்றன என்பதை ராகுல்ஜி நமக்குப் புரியவைக்கிறார். இது பிரிட்டனுக்கு மட்டுமே பொருந்தும் உண்மை அல்ல. ‘இங்கிலாந்தில் கோடீஸ்வரர்கள்தான் பத்திரிகைகளை நடத்தமுடியும். பொய்யை இனிப்புடன் கலந்து பரப்புவதுதான் அவர்களுடைய வேலை.’

மதவாதிகளை மட்டுமல்ல பகுத்தறிவுக்கு முரணாக இயங்கும் அனைவரையும் ராகுல்ஜி கடுமையாக விமரிசிக்கிறார். பிரிட்டன் கல்வித்துறையும் அதற்கு விதிவிலக்கல்ல. ‘பள்ளிகள், புத்தகங்கள், பத்திரிகைகள் முதலியவை பகுத்தறிவைப் பரப்பக்கூடியவை என்று கருதப்படுகின்றன. ஆனால் இங்கிலாந்தில் இவற்றின் மகத்தான பணி முட்டாள்தனத்தைப் பரப்புவதுதான். குதிரைப் பந்தயம், நாய்ப் பந்தயம், பரிசுச்சீட்டு போன்ற எத்தனையோ சட்ட பூர்வமான சூதாட்டங்கள் அங்கே நடைபெறுகின்றன. நாளை தாம் வேலையில்லாதோர் பட்டாளத்தில் சேர்ந்து விடுவோமோ என்று அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கும் பிரிட்டிஷ் தொழிலாளர்கள் தம்முடைய வயிற்றைக் கட்டி வாயைக்கட்டி இந்தச் சூதாட்டங்களுக்காகத் தம் பணத்தைச் செலவழிக்கின்றனர். பிரிட்டிஷ் பத்திரிகைகள் இந்தச் சூதாட்டங்கள் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதித்தள்ளுகின்றன.’

ஏன் இவ்வாறு செய்கிறார்கள்? ‘காரணம் என்னவெனில், பிரிட்டிஷ் பாட்டாளி மக்கள் தலைவிதிக்கு அடிமைகளாக இருக்க வேண்டுமென்பதும், பண முதலைகளின் ஆதிக்கத்தை ஒழித்துக்கட்ட முயற்சிக்கக்கூடாது என்பதும்தான்.’

எங்கெல்ஸைப் போலவே ராகுல்ஜியும் பிரிட்டனின் இருண்ட பகுதிகளுக்குச் செல்கிறார். கூடுகள் போன்ற குடிசைகளையும் எலும்பும் தோலுமாக வாடும் மனிதர்களையும் அவர் கண்டுகொண்டார். ‘வசதி படைத்தவர்கள் லண்டனில் வெஸ்டெண்ட் பகுதியில் இருந்தார்கள். ஏழைகள் ஈஸ்டெண்ட் பகுதியில் இருந்தார்கள். அந்தப் பகுதியில் சென்று பார்த்தோம். ஆங்கிலேய ஆட்சியாளர்கள் அங்கே தமது சகோதரர்களுக்காக எப்படிப்பட்ட நகரத்தை சிருஷ்டித்து வைத்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டோம்.’ அந்த வகையில் பிரிட்டன், இந்தியர்களை மட்டுமல்ல, தன் மக்களையும்கூட அடிமைப்படுத்தியே வைத்திருக்கிறது என்பதை ராகுல்ஜி நேரடியாகத் தெரிந்துகொண்டார். ஒரு முதலாளித்துவ அமைப்பால் வேறு எப்படியும் இருக்கமுடியாது என்பதையும் அவர் அறிந்துகொண்டார்.

0

மருதன்