பில்லா 2 : அத்து மீறு, அடங்க மறு!

அடக்க நினைக்கும் கூட்டத்திலிருந்து தப்பித்து அகதியாக ஒதுங்கும் ஒரு மனிதனின் கதை. ‘அங்கருக்கப்பவே நீ ஒழுங்கா இருந்ததில்ல, இப்பவும் அப்டியே தான் இருக்கியாடா’ன்னு அக்கா கேட்கிறார். தவறி விழுந்த துப்பாக்கியை தடவி எடுத்து அஜித் தன் பேண்ட் பாக்கெட்டில் வைக்கும்போது.

சீண்டப்படுதல், ஒதுக்கிவைத்தல், மிருகம் போல நடத்தப்படுதல், முழுக்க அங்கீகாரம் கிடைக்கவிடாது தள்ளிவைத்தல், தாம் நினைத்த அமைதி வாழ்க்கையை எல்லோரும் போல வாழ நினைப்பவனை வாழ விடாது தடுத்தல்…. இவையெல்லாம் தொடர்ந்தும் நடந்தால் ஒருவன் என்னதான் செய்வான் ? இதற்கும் மேலாக சொந்த நாட்டிலேயே அவன் அகதி. இந்தப் பின்னணியில், ‘அடங்க மறு அத்து மீறு’ என்று களம் இறங்கியிருக்கிறார் ‘தல’ அஜித்.

இதுபோல பல படங்கள் ஆங்கிலத்தில் வந்திருந்தாலும் எனக்கு உடனே நினைவுக்கு வருவது First Blood தான். ஒரு ராணுவ வீரனை , யார் எதிரி என்றே தெரியாத வியட்நாம் காட்டில் கொண்டுபோய் விட்டுவிடுவார்கள். அமைதியான வாழ்க்கை சீரழிந்ததில் வரும் அவனுடைய முறையான கோபம் வன்முறையாகப் படம் முழுக்க வெடிக்கும்.

அதே போல், தன்னையும் ஒரு சக மனிதனாக சமூகம் கருதவேண்டும் என்னும் துடிப்பில் வெறி கொண்ட ஒருவனின் இலக்கில்லாத வாழ்க்கையே பில்லா 2.

Prequel , Sequel என்பதிலெல்லாம் எனக்கு உடன்பாடில்லை. இதை ஒரு தனிப்படமாகவே பார்க்கலாம். டேவிட் பில்லா என்னும் பெயர் மட்டுமே முந்தைய படத்தோடு ஒத்துப்போகிறது.

ஏதிலியாக வந்தவர்களுக்கு தகுதி, படிப்பு, அனுபவம் ஆகியவை முக்கியமல்ல. அவர்களால் மற்றவர்களைப் போல் இயல்பாக வாழமுடிவதில்லை. அஜித் அவர்களில் ஒருவர். மீன்களை அனுப்பிவைக்கும் சம்பவத்தில் அவர்களை மாட்ட வைப்பதில் இருந்து தொடங்குகிறது வலை. அருமையாகச் சிக்கிக்கொள்கிறார் அஜித். ஒவ்வொரு தடவை சிக்கும்போதும் தனக்கிருக்கும் இயல்பான கோபத்தினாலும், திருப்பியடிக்கும் திறமையாலும் தப்பிக்கிறார்.

‘என் வாழ்க்கைல ஒவ்வொரு நிமிஷமும், ஏன் ஒவ்வொரு நொடியும் நானாச்செதுக்கினதுடா’ என்று அடிபட்ட புலி போலச் சீறுகிறார்.எத்தனை பேருக்கு அப்படி ஒரு வாழ்க்கை அமையும்? நாமெல்லாம் வாழ்க்கை பயணத்தில் அடித்து செல்லப்படுகிறோம். அடித்துச்செல்லப்படும் வாழ்க்கையையும் நம்மால் செதுக்க முடிந்தால் ?அது தான் இந்த டேவிட் பில்லாவின் வாழ்க்கை.

அவனுக்கு பயம் இல்லை.  தளைகள் இல்லாத ஒருவனுக்கு பயம் இருக்கணும்ங்கற அவசியம் இருப்பதில்லை. எதிர்ப்போர் யாராக இருப்பினும் தம் வழியை மறைப்பவராயின் அவர்களைப் போட்டுத்தள்ளி விட்டு முன்னேறுகிறான் பில்லா. வகை தொகையில்லாதபடி கொலைகள், தம்மிடம் இருக்கும் அத்தனை ஆயுதங்களையும் அத்தனை சுளுவாக உபயோகிக்கிறான் பில்லா. “சாவுக்குத்தான் மார்க்கெட், ஆயுதங்களுக்கு இல்ல, சாவுங்கற ஒண்ணு இருக்கிற வரை ஆயுதங்கள் தொடர்ந்து கொண்டேதானிருக்கும்” என்று நமக்குப்புரிய வைக்கிறான் பில்லா.

The Devils புதினத்துல பீட்டர் வெற்கோவென்ஸ்கி என்னும் பாத்திரத்தின் மூலம், தம் கருத்துக்களைத் தஸ்தயேவ்ஸ்கி வெளிப்படுத்துகின்றார். “நாம் முழுமனதுடன் அழித்தலுக்கு நம்மை ஆட்படுத்திக்கொள்ள வேண்டும். இத்தகைய அழித்தலானது தொடர்ந்து நடைபெற வேண்டும். இப்போது இருக்கக் கூடிய நடைமுறைகள் எதுவுமே எஞ்சியிருக்கவில்லை என்னும் நிலை வரும் வரை, அந்த அழித்தல் பணியினை நாம் தொடர்ந்து செய்துகொண்டிருக்க வேண்டும். இந்தப் போரிலே புரட்சியாளர்கள் விஷம், கத்தி, கயிறு போன்றவற்றைம் பயன்படுத்தலாம்.”

இதையேதான் பில்லாவும் செய்கிறான்.

நீ நினைச்சத சாதிச்சிட்டன்னு (யோக் ஜேப்பி) ரஞ்சித் சொல்லும்போது , இல்ல இதுதான் ஆரம்பம் என்பான் அகதியான எனினும் அனாதையில்லாத பில்லா. பவளத்துறையிலிருந்து தொடங்கும் அவன் பயணம் வைரக்கற்கள் கொண்டு சேர்ப்பதிலிருந்து , பௌடர் வரை சென்று, படிப்படியாக ஆயுதம் கொள்முதல் மற்றும் கலாஷ்னிக்கோவ் கடத்தல் வரை தொடர்கிறது. முடிவுறா சளைக்காத பயணம் அது. ஒருபோதும் உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்காத பில்லா.

அஜித் அதிகம் மெனக்கெடாமல், அலட்டிக்கொள்ளாமல் , ஒரு கேங்க்ஸ்ட்டருக்கான முகப்பாங்குடன், கொஞ்சம் அதைத்த, எப்போதும் முந்தினநாள் அடித்த பியரின் மப்பில் இருக்கும் முகத்துடனேயே காணப்படுகிறார். எந்தப் பெண்ணிடமும் ஒட்டுதலோ உறவோ வைத்துக்கொள்ளாமல், அவள் அக்கா மகளான (பார்வதி) முறைப்பெண்ணிடம் கூட ஒட்டிக்கொள்ளாமல் தன் போக்கில் பயணிக்கும், எதற்கும் இடம் கொடாத பாங்குடனேயே இருக்கிறான் பில்லா. சில இடங்களில் மட்டுமே கோட் அணிந்து வருகிறார், மற்ற காட்சிகளில் சாதாரண Angry Young Man ஆகத்தான் காட்சியளிக்கிறார் தல.

ராமேஸ்வரக்கரையில் வந்திறங்கியதிலிருந்து , அங்கிருக்கும் சக மனிதர்களிடம் பேசும் போதும், படம் முழுக்கவும் ஈழத்துப்பாணியில் ஒரு சொல் கூடப் பேசாமல் சாதாரணத் தமிழ்நாட்டுத் தமிழுடனேயே உலா வருகிறார் அஜித்.அவரின் சக தோழரும் அவ்வாறே. அது மட்டும் இடிக்கிறது. மேலும் எல்லோரும் அவரிடம் அடி வாங்குவதற்கெனவே ஜனித்தவர்கள் போலக்காணப்படுவதும்  (போலீஸ்காரர்கள் கூட), ரொம்பவே இடிக்கிறது.

திப்பு சுல்தான் தாடியுடன்கூடிய ஒரு வில்லன், “து தின் பேதின் தேரா லிமிட் க்ராஸ் கர் ரஹாஹை பில்லா” (நீ நாளுக்கு நாள் உன் எல்லை தாண்டிப்போற பில்லா ) என்று ஹிந்தியில் வசனம் பேசுகிறார்.  இன்னொரு வில்லன் சின்னதாக French Cut வைத்துக்கொண்டு எப்போதும் ரஷ்யனில் பேசுகிறார். சாரி, இந்தப்படத்தின் வில்லன்கள் என்னைக் கவரவேயில்லை.

படத்தில் வரும் பெண்கள் , ஜேம்ஸ்பாண்டு படத்தில் வரும் வில்லிகள் போலவும் , கதாநாயகிகள் போலவும் , ஒல்லியாக தமது ஸீரோ சைஸ் உடலைக் காட்டுவதற்கெனவே வந்தது போல இருப்பது பெரிய குறை. முந்தைய பில்லாவில் கொஞ்சம் நம்மூர் பெண்  போல குண்டாக நமீதா நடித்திருந்தார். இதில் மருந்துக்குக்கூட அப்படி ஒருவரும் இல்லை. மதுரப் பொண்ணு பாடலில் வரும் மீனாக்ஷி தீக்ஷித்கூட ரஷ்யன் டான்ஸர் போலவே இருப்பது வருத்தமே. அதிலும் அவர் கதம்பத்தை தலையிலணிந்துகொண்டு பாடுவது பார்க்கச் சகிக்கவேயில்லை.

“ஆசையில்ல அண்ணாச்சி, பசி.” இது பஞ்ச் டயலாக் மாதிரி இல்லை. இது போல பல விஷயங்கள் அஜித் குரலின் மூலம் இரா. முருகன் பேசுகிறார். ரசிக்கவும் சிந்திக்கவும் அவ்வப்போது தைக்கவும் செய்கிறது வசனம்.

வகைதொகையற்ற கொலைகள் மற்றும் வன்முறைகளால் அளவுக்கதிகமாக தணிக்கையில் வெட்டுகள் வாங்கியது , திரைக்கதை பல இடங்களில் நொண்டியடிப்பது, பல காட்சிகளை பள்ளிக்கூடப்பிள்ளைகள் கூட யூகிக்கும் வகையில் அமைந்திருப்பது போன்றவற்றால் படம் பல இடங்களில் தாவித் தாவிச்சென்று , ஆயாசம் அளிக்கிறது.

சண்டைக் காட்சிகள் பற்றி பேசவேண்டுமெனில் , அந்த சர்ச் காட்சியை மட்டுமே குறிப்பிட்டுச்சொல்லலாம். பார்வதி ஓமனக்குட்டனைக் காப்பாற்ற முயற்சிக்கும் காட்சியில் தல பட்டையக் கிளப்புகிறார். இந்தக் காட்சியை வைத்தே திரைப்படம் தொடங்குகிறது.வெறும் கைகளால் தொடங்கி, பிறகு சிறு கத்தியை வைத்து அனைவரையும் குத்திச்சாய்ப்பது, குறிப்பாக கடைசியில் அந்த முகத்தில் வெள்ளைத் தழும்புகளுள்ளவரை நெஞ்சில் குத்திச் சாய்ப்பது நினைத்தே பார்க்காத இடம். Hats Off தல! பின்னர் அந்தக் கார்னிவல் நடக்கும் சமயத்திலான சண்டைக்காட்சி, வெகு இயல்பான காட்சியமைப்புடன் கவர்கிறது. மற்ற சண்டைக்காட்சிகளில் Latest Machine Guns வைத்துக்கொண்டு சண்டையிடுவது Hollywood படங்களில் ஏற்கெனவே பார்த்துச் சலித்தவை.

பில்லா 1-ஐ ஒப்பிட்டுப் பார்க்கையில் யுவனின் பங்களிப்பு, பின்னணி இசையில் குறைந்தே காணப்படுகிறது. பில்லா 1-ல் முழுக்க Jazz மற்றும் அவ்வப்போது Rock இசையுமாக 80- களில் வந்த இசை போல வெள்ளம் போலபாய்ந்து வந்தது. இங்கு Hip Hop மற்றும் Arabian Style பல இடங்களில் தெளிவாகத்தெரிகிறது. அந்த டிமிட்ரியின் கோட்டையைத் தகர்த்துவிட்டு அஜித் வெளியேறும் போது , முழுக்க தீ பற்றி எரிவதற்கான பின்னணி இன்னும் மனதில் ரீங்கரித்துக்கொண்டு இருக்கிறது.

இருப்பினும் பில்லா-2 ஆல்பமில் இடம்பெறாத அரேபியன் பெல்லி டான்ஸுக்கான பாடலில் பின்னியிருக்கிறார் யுவன். ஊது குழல்களும் டபுள் பாஸுமாக பின்னணி இசை நம்மை சீட்டின் விளிம்புக்குக் கொண்டு செல்கிறது. பார்வதி ஓமனக்குட்டன் அறிமுகக் காட்சியில் “இதயம்” பாடலுக்கான Bitஐ பியானோவின் அழுத்தமான கட்டைகளால் வாசித்திருப்பது நம்மைக் கொள்ளை கொள்ள் வைக்கிறது. கடைசி வரை அந்தப் பாடலை படத்தில் தேடித்தேடிப்பார்த்து அலுத்தே போனேன்.

மற்ற அத்தனை பாடல்களும் , அதனதன் தேவையான இடத்தில் கனக்கச்சிதமாகப் பொருந்திப்போகிறது. பில்லா 1 -ன் Theme Musicஐ அளவோடு இசைத்திருப்பது படத்தை  வேறுபடுத்திக் காட்டப் பயன்பட்டிருக்கிறது . “ஏதோ ஒரு மயக்கம்” பாடல் காட்சியமைப்பு , சுற்றும் Focus Lights- களுடன் அப்படியே விளையாடு மங்காத்தா பாடலின் காட்சிகளை நினைவுபடுத்துகிறது. “எனக்குள்ளே மிருகம்” பாடல் படமாக்கிய விதம் அந்தப் பாடலுக்கு யுவன் கொடுத்திருந்த முக்கியத்துவத்தைக் காப்பாற்றுவது போல இருப்பது மிகவும் வலுச்சேர்க்கிறது. படத்தின் கடைசியில் தல-க்காக அவர் நாற்காலியில் அமர்ந்துகொண்டு பாடும் கேங்க்ஸ்ட்டர் பாடல் அசத்தல்.

படத்தின் வெட்டவெளிச்சமான குறைகள் இவை. தர்க்கரீதியாக நம்ப இயலாத நிகழ்வுகள். தொடரும் வகைதொகையில்லாத கொலைகள்.  வன்முறை. சீராகப் பயணிக்காத திரைக்கதை. சர்வசாதரணமாக பல மொழிகள் கையாளப்படுதல். சப் டைட்டில் பார்த்தே பல விஷயங்களைப் புரிந்து கொள்ள வேண்டியிருப்பது.

தல அஜித்துக்கு இது இன்னொரு படம் . யுவனுக்கு தன்னுடைய சில புதிய இசை முயற்சிகளை செய்து பார்க்க முடிந்த ஒரு படம். ரசிகர்களுக்கு Hollywood Range-ல் தமிழில் பார்க்க முடிந்த ஒரு படம். ஒளிப்பதிவாளருக்கு சரியான தீனி கொடுத்த படம். இப்படியெல்லாம் சொல்லி நம்மை சமாதானப்படுத்திக்கொள்ள வேண்டியது தான்.

0

சின்னப்பயல்