கருணையும் மரணமும்

Afzal Guruஇந்திய அரசாங்கம் சமீப காலமாக மக்களுக்கு காலையில் சுட சுட செய்திகளை வழங்கிவருகிறது. 26/11 மும்பை தாக்குதல் கைதி அஜ்மல் கசாப் பூனே ஏரவாடா சிறையில் தூக்கிலிடப்பட்டார். அதைத் தொடர்ந்து டில்லி பாராளுமன்ற தாக்குதலின் முக்கியக் குற்றவாளி அப்சல் குரு டில்லி திகார் சிறையில் கொல்லப்பட்டார். இந்த மரண தண்டனைகளுக்கெல்லாம் காரணம், தூக்கிலிடப்பட்டவர்களின் கருணை மனு இந்திய ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டதுதான். அஜ்மல் கசாப், அப்சல் குரு சர்ச்சை ஓய்வதற்குள் சந்தன மரக் கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகள் நால்வரின் மரண தண்டனை மீதான கருணை மனுவையும் ஜனாதிபதி நிராகரித்திருக்கிறார்.

உச்ச நீதிமன்றத்தால் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டு பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருந்த நிலையில் இப்பொழுது தடாலடியாக ஒவ்வொருவராத தூக்கிலிடப்படுவதை மக்கள் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.

ஏன் அவசரம்?

2014 நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி காங்கிரஸ் அரசாங்கம் இவ்வாறு அவசரமாக கைதிகளை தூக்கிலிடுகிறார்கள் என்கிறார்கள் சிலர். இந்துக்களின் ஓட்டு வங்கியை குறிவைத்தே அஜ்மல் கசாப்பும், அப்சல் குருவும் தூக்கிலிடப்பட்டதாக சிலர் விமரிசனமும் செய்கிறார்கள். எது எப்படி இருப்பினும் ஜனாதிபதியின் அதிரடி முடிவு சட்டப்படி சரிதானா என்று பலருக்கு சந்தேகம் இருந்துவருகிறது.

உண்மையில், மரண தண்டனை கைதிகளின் கருணை மனுவைத் தள்ளுபடி செய்வதில் ஜனாதிபதிக்கு அப்படியொன்றும் பெரும் பங்கு இல்லை. அவர் மற்ற விவகாரங்களைப் போல் இதிலும் ஒரு ரப்பர் ஸ்டாம்புதான். இந்திய அரசியல் சட்டத்தின் 72 ஆம் ஷரத்தின்படி, உச்ச நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி தன் மீது வழங்கப்பட்ட மரண தண்டனையை நிராகரிக்கக் கோரி ஜனாதிபதியினிடம் கருணை மனு அனுப்பி வைக்கலாம் (ஒரு மாநிலத்தின் ஆளுனரிடமும் இந்திய அரசியல் அமைப்பின் 161 வது ஷரத்தின்படி கருணை மனு தாக்கல் செய்யலாம். இது குறித்து மேலும் அறிய  தமிழ்பேப்பரில் முன்னர் வெளியான ஹாய் அட்வகேட் பகுதியைப் பார்க்கவும்).

ஜனாதிபதி, தன்னிடம் வந்து சேரும் கருணை மனுக்கள்மீது தன்னிச்சையாக முடிவெடுக்கமுடியாது. ஒவ்வொரு கருணை மனுவையும் உள்துறை அமைச்சகத்தின்மூலம் மத்திய மந்திரி சபையின் ஆலோசனைக்கு அவர் அனுப்பி வைப்பார். மத்திய மந்திரி சபை தன்னுடைய முடிவை உள்துறை அமைச்சகத்தின்மூலம் ஜனாதிபதிக்கு தெரிவிக்கும். மந்திரி சபை எடுத்த முடிவை நிராகரிக்க ஜனாதிபதிக்கு அதிகாரமில்லை. சம்பந்தப்பட்ட மரண தண்டனை கைதியை தூக்கிலிடவேண்டும் என்று அரசாங்கம் முடிவெடுத்தால் அதை ஜனாதிபதி ஏற்றுதான் ஆகவேண்டும். வேண்டுமென்றால் மறு பரிசீலனை செய்ய மறுபடியும் கருணை மனுவை மந்திரி சபைக்கு அனுப்பி வைக்கலாமே தவிர, இந்த விவகாரத்தில் ஜனாதிபதியால் செய்வதற்கு மேலதிகம் ஒன்றுமில்லை. அதனால் ஜனாதிபதியை இதில் குற்றம் சொல்லிப் பலனில்லை.

யார் காரணம்?

கருணை மனு விவகாரத்தில் காலம் தாழ்த்தப்பட்டால் அதற்கு முழுக் காரணமும் மத்திய அரசுதான். அதே போல் கருணை மனுவின்மீதான இப்படிப்பட்ட அதிரடி நடவடிக்கைகளுக்குக் காரணமும் மத்திய அரசுதான். குறிப்பிட்ட ஒரு மனு ஏன் துரிதமாகச் செயல்படுத்தப்படுகிறது, இன்னொன்றுக்கு மட்டும் ஏன் காலதாமதம் போன்ற கேள்விகளுக்கு அரசுதான் பதிலளிக்கவேண்டும்.

கருணை மனுவும் தாமதமும்

ஒரு கருணை மனுவை இத்தனை நாள்களுக்குள் விசாரித்து முடிவு வழங்கவேண்டும் என்று சட்டவிதிகளெல்லாம் இல்லை. ‘எங்களிடம் 33 கருணை மனுக்கள் நிலுவையில் உள்ளன. நாங்கள் ஒன்றன் பின் ஒன்றாகத்தான் முடிவெடுப்போம். அதனால் ஏற்படக்கூடிய கால அவகாசத்தால்தான் கருணை மனுக்களின் மீதான முடிவு தாமதப்படுகிறது‘ என்று அரசாங்கம் சொல்லி வருகிறது. ஆனால், முன்னதாக தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குரு பின்னால் தூக்கிலிடப்பட்டிருக்கிறார். பின்னதாக தண்டனை விதிக்கப்பட்ட அஜ்மல் கசாப் முன்னதாகத் தூக்கிலிடப்பட்டிருக்கிறார்.

வீரப்பனின் கூட்டாளிகள் நால்வரின் (ஞானபிரகாசம், சைமன், மீசை மாதையன், பிளவேந்திரன்) கருணை மனுக்கள் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ’கருணை மனுவின் மீதான முடிவை அரசாங்கம் மிகவும் தாமதமாக சுமார் 9 ஆண்டுகள் கழித்து எடுத்திருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் எங்களுடைய கருணை மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு நாங்கள் உயிரோடு இருப்போமா அல்லது கருணை மனு நிராகரிக்கப்பட்டு தூக்கிலிடப்படுவோமா என்ற மன சஞ்சலத்திலேயே வாழ்ந்து வந்திருக்கிறோம். இது இந்திய அரசியல் சட்டத்தின் 21 ஆவது ஷரத்துக்கு எதிரானது. எனவே எங்களுடைய மரண தண்டனையை ரத்து செய்து அதை ஆயுள் தண்டனையாக குறைக்கவேண்டும்.’

இந்த மனுதாரர்கள் தங்கள் வழக்குக்கு முன்மாதிரியாக, ஏற்கெனவே இதே போன்று தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மேற்கோள் காட்டுகின்றனர். அது, வைத்தீஸ்வரன் -எதிர்- தமிழ் நாடு அரசு – (1983) 2 SCR 348. அதில் குறிப்பிடப்படும் விஷயங்கள் இவை. ‘இந்திய அரசியல் சட்டத்தின் 21 ஆவது ஷரத்தின்படி, கவுரவத்துடன் வாழவேண்டியது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை. (பந்து முக்தி மோர்ச்சா -எதிர்- மத்திய அரசாங்கம் (1984) 3 SCC 161). சிறையில் தண்டனை அனுபவிக்கும் குற்றவாளிகளுக்கும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படக் கூடாது. (சார்ல்ஸ் சோப்ராஞ் -எதிர்- திகார் சிறை அதிகாரி – AIR 1978 SC 514; சுனில் பாத்ரா – எதிர் – டில்லி நிர்வாகம் AIR 1994 SC 1675). வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் எங்கள் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. நாங்கள் எப்பொழுதும் மரண பயத்துடனே வாழ்ந்து கொண்டிருக்கிறாம். எங்கள் கருணை மனு மீதான முடிவை அரசாங்கம் இரண்டாண்டுகளுக்கும் மேலாக தாமதப்படுத்தியதின் மூலம் எங்களுக்கு பெரும் மன உளைச்சல் ஏற்பட்டிருக்கிறது. நாங்கள் நிம்மதியாக வாழமுடியவில்லை. அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கையால் எங்களுக்கு அரசியல் சாசனம் வழங்கிய அடிப்படை உரிமை மீறப்பட்டிருக்கிறது. எனவே எங்களுடைய மரண தண்டனையை ரத்து செய்து அதை ஆயுள் தண்டனையாக மாற்றவேண்டும்.’

வைத்தீஸ்வரனின் வாதத்தை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், அவருடைய மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியது. இந்த வழக்கின் தீர்ப்பை வைத்து பல மரண தண்டனை கைதிகள், தங்களுடைய கருணை மனுவின் முடிவை அரசாங்கம் தாமதமாக வெளியிட்டது. அதனால் நாங்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளானோம் என்று உச்ச நீதிமன்றத்தை அணுகினர்.

உச்ச நீதிமன்றத்துக்கு இந்த இடத்தில் ஒரு சந்தேகம் வந்தது. ஒரு கொலை வழக்கை மூன்று நீதிமன்றங்கள் விசாரித்து மரண தண்டனை வழங்குகிறது. அதாவது சாட்சிகளை விசாரித்து தீர்ப்பை வழங்கிய செஷன்ஸ் நீதிமன்றம் (கீழ் நீதிமன்றம்); அந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம்; பிறகு உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம். இந்த மூன்றும் குற்றவாளிக்கு மரண தண்டனை அளிக்கவேண்டும் என்று ஏகமனதாக முடிவெடுக்கிறது. இந்நிலையில், காலதாமதத்தை முன்னிறுத்தி ஆயுள் தண்டனையாக மாற்றுவது சரிதானா? திரிவேனிபென் – எதிர்- குஜராத் அரசு – 1989 1989 AIR SC 1335 என்ற வழக்கில், உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே வழங்கிய வைத்தீஸ்வரன் வழக்கின் தீர்ப்பை மறுபரிசீலனைக்கு ஆட்படுத்தியது. ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற பென்ச் திரிவேனிபென் வழக்கை விசாரித்தது. முடிவில் பின்வரும் தீர்ப்பை வெளியிட்டது.

‘ஒரு நீதிமன்றம் ஒரு குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கிய பிறகு, சம்பந்தப்பட்ட மரண தண்டனை கைதி ரிட் மனு தாக்கல் செய்து ’தனக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமைளுக்கு எதிரானது’ என்று வாதிடமுடியாது. கருணை மனுவை முடிவெடுப்பதில் அரசாங்கம் இரண்டாண்டுகள் காலம் தாழ்த்தியதால் வைத்தீஸ்வரன் வழக்கில் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியது தவறானது. குறிப்பிட்ட காலத்துக்குள் ஒரு கருணை மனுவின் மீதான முடிவை ஒரு அரசாங்கம் வெளியிடவேண்டும் என்று கட்டளையிட முடியாது. கருணை மனுவின்மீதான விசாரணையை நடத்துவதில் காலதாமதம் ஏற்பட்டால் அதை காலதாமதமாக கருதமுடியாது. ஆனால் காரணமே இல்லாமல் ஒரு அரசாங்கம் கருணை மனுவின் மீதான தன்னுடைய முடிவை தாமதப்படுத்தினால் அதை கருத்தில் எடுத்துக்கொண்டு மரண தண்டனை கைதிகளுக்கு தகுந்த பரிகாரங்களை நீதிமன்றம் வழங்கலாம். ஆனால் அப்படி தண்டனையை குறைப்பதற்கு முன்னர் குற்றத்தின் தன்மையையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.’

கருணை மனுமீதான காலதாமதமான முடிவை எதிர்த்துதான் ரிட் மனு தாக்கல் செய்யலாமே தவிர, கருணை மனுவை தனக்கு சாதகமாக ஜனாதிபதி முடிவெடுக்கவில்லை என்று அரசாங்கத்தை எதிர்த்து மரண தண்டனை கைதி ரிட் மனு தாக்கல் செய்யமுடியாது. ஆனால் ஆந்திர மாநில ஆளுனர் ஒரு மரண தண்டனை கைதியின் கருணை மனுவை ஏற்றுக்கொண்டு மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தார். ஆந்திர ஆளுனர் முடிவு தவறானது என்று உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆந்திர ஆளுனர் கருணை மனுவை சரியாக யோசிக்காமல் முடிவெடுத்திருக்கிறார். அவர் அவ்வாறு முடிவு எடுத்ததற்கு காரணங்கள் தகுந்ததாக இல்லை. ஆளுனர் தன் முடிவை எடுப்பதற்கு தேவையான தகுந்த ஆதாரங்கள் அவர் பார்வைக்கு வழங்கப்படவில்லை. எனவே ஆளுனர் எடுத்த முடிவு தவறானது. சம்பந்தப்பட்ட கைதியின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியது சரியில்லை என்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வெளியிட்டது. (எப்புரு சுதாகர் -எதிர்- ஆந்திர அரசு – AIR 2006 SC 3385).

ராஜிவ் கொலை வழக்கு

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை வழங்கப்பட்ட சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரின் கருணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு 11 ஆண்டுகள் கழித்து ஆகஸ்ட் 2011ல் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டது. கருணை மனுவை முடிவெடுப்பதில் அரசாங்கம் தேவையற்ற காலதாமாதம் செய்திருப்பதாக மேற்பஐ மூவரும் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை முடிந்து, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நிலுவையில் உள்ளது.

இதற்கிடையில்தான் மேற்சொன்ன வீரப்பன் கூட்டாளிகளும், ’தங்கள் கருணை மனுக்களை அரசாங்கம் தேவையற்ற கால தாமதத்துடன் நிராகரித்திருக்கிறது’ என்று உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். ரிட் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ராஜிவ் காந்தி கொலையாளிகளின் ரிட் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் வேறொரு பென்ச் முடிவை வெளியிடும் தருவாயில் இருப்பதால், அந்த முடிவு வரும் வரை வீரப்பன் கூட்டாளிகளின் மனுவின் மீதான விசாரணையை ஒத்தி வைப்பதாக அறிவித்தார். இதற்கிடையில், மூவருக்கும் அரசு தூக்கு தண்டனை நிறைவேற்றாதபடி இடைக்காலத் தடையும் விதிக்கப்பட்டது. ராஜிவ் கொலையாளிகளின் ரிட் மனு தீர்ப்புக்காக வீரப்பன் கூட்டாளிகள் ஆவலாகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் போலவே பொதுமக்களும் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

0

டெல்லி சம்பவம்: The End

justice-crawls-1_350_122712090047டெல்லியில் ஓடும் பேருந்தில் ஒரு குழுவால் வன்புணர்ச்சி செய்யப்பட்டு, குடல் உருவப்பட்டு, ரத்த வெள்ளத்தில் தூக்கி வீசப்பட்ட பெண்ணுக்குப் பாதுகாப்பு அளிக்கத் தவறிய டெல்லி அரசாங்கம் தற்போது அவர் உடல் பத்திரமாக சிங்கப்பூரில் இருந்து வந்திறங்குவதற்காக டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்தியுள்ளது. இன்னொரு போராட்ட அலை இதன் பொருட்டு எழுந்துவிடக்கூடாது என்பதற்கும், உறங்கிக்கொண்டிருக்கும் இந்தியாவின் ஆன்மாவை யாரும் தட்டியெழுப்பிவிடக்கூடாது என்பதற்கும் சேர்த்துதான் லத்தி, கண்ணீர்ப் புகை, துப்பாக்கி சகிதம் டெல்லியைக் காவல்துறை பாதுகாத்துக்கொண்டிருக்கிறது.

பெண்களை எப்படிப் பாதுகாப்பது, குற்றவாளிகளை எப்படித் தண்டிப்பது, இப்படிப்பட்ட கொடுமைகள் நிகழாமல் இருக்க நாம் என்ன செய்யவேண்டும் என்றெல்லாம் பக்கம் பக்கமாக பலரும் எழுதப்போகிறார்கள், மணிக்கணக்காக டிவியில் பேசப்போகிறார்கள், மெழுகுவர்த்தி ஏற்றி, பதாகைகள் பிடித்து குரல் கொடுக்கப்போகிறார்கள். பிடிபட்ட குற்றவாளிகளை Castration செய்யவேண்டுமா, தூக்கிலிடவேண்டுமா, ஆயுள் தண்டனை கொடுக்கவேண்டுமா என்று விவாதிக்கப்போகிறார்கள். வாகனங்களில் சிசிடிவி பொருத்துவது, பெண்களுக்கு பெப்பர் ஸ்ப்ரே கொடுப்பது, போலிஸ் பேட்ரோல் அதிகப்படுத்துவது உள்ளிட்ட பல யோசனைகள் உதிர்க்கப்படவிருக்கின்றன.

எல்லாம் ஓய்ந்த பிறகு,  டெல்லியில் இயல்பு வாழ்க்கை திரும்பிவிடும். இந்தியா தனது துக்கத்தை உதறித்தள்ளும். மெழுகுவர்த்திகள் அணைக்கப்படும். அறுந்த செருப்புகளையும் சிதறிய காகிதங்களையும் கிழிந்து தொங்கும் பதாகைகளையும் டெல்லி முனிசிபில் தொழிலாளர்கள் பெருக்கிச் சுத்தப்படுத்தி அகற்றுவார்கள். டிவி ரிப்போர்டர்கள் டெல்லியில் இருந்து விடைபெறுவார்கள்.

சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் குழுமிய பெண்களைப் பிரணாப் முகர்ஜியின் மகனும் காங்கிரஸ் அமைச்சருமான அபிஜித் முகர்ஜி இவ்வாறு மதிப்பிட்டுள்ளார்.

“These pretty women, dented and painted, who come for protests are not students. I have seen them speak on television, usually women of this age are not students”.

இந்த வாரத் தொடக்கத்தில், ஆந்திரா காங்கிரஸ் தலைவர் போட்சா சத்யநாநாரயணா, விளக்கு வைத்த பிறகு பெண்கள் வெளியில் செல்லக்கூடாது என்று எச்சரித்திருக்கிறார். டெல்லி விஷயத்தைப் பெரியப்படுத்தவேண்டாம் அது ஒரு ‘சிறிய சம்பவம்தான்’ என்றும் சொல்லியிருக்கிறார்.

உண்மைதான்.  நாம் இவ்வளவு கலவரப்படவேண்டிய அவசியமில்லை. இந்தியாவே துக்கப்படவேண்டிய அளவுக்கான துயரம் அல்ல இது. இறந்துபோன வளர்இளம்பெண்ணுக்கு ட்விட்டரில் அனுதாபம் தெரிவித்துவிட்டு, காங்கிரஸ் அரசைக் கண்டித்துவிட்டு (66A நினைவிருக்கட்டும்!) ஆகவேண்டிய காரியங்களைப் பார்க்கவேண்டியதுதான்.

Traffic Beat update. மத்திய டெல்லியில் குறிப்பாக விஜய் சவுக், ராஜ்பத், இந்தியா கேட், அசோகா ரோட், ரஃபி மார்க் ஆகிய பகுதிகளில் தற்சமயம் டிராஃபிக் அதிகமாக உள்ளதால் பயணிகள் மாற்று வழியில் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறார்கள்.

That’s all for now and wish you all a  Happy New Year!

0

சாத்தான்

குடியரசுத் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?

ஜூலை 19 அன்று இந்தியாவின் 13வது குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இரு தினங்களுக்கு முன்னால், மமதாவும் முலாயம் சிங்கும் இணைந்து அப்துல் கலாமைத் தங்களின் முதல் விருப்ப வேட்பாளாராக அறிவித்தனர். காங்கிரசுக்கு மமதா பாணர்ஜி வைத்த செக் என்று ஊடகங்கள் அதனைக் குறிப்பிட்டன. இந்த ஆண்டே தேர்தல் நடைபெறலாம் என்றும் ஆருடம் கூறின.
பதிலுக்கு பிரணாப் முகர்ஜியை முன்னிறுத்தியிருக்கிறது சோனியா. சோனியாவின் விருப்ப வேட்பாளர் அல்ல அவர் என்றாலும், அப்துல் கலாமுக்கு மாற்றாக பிரணாப் அமைவார் என்பது சோனியாவின் நம்பிக்கை. அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பது நிஜமே, என்றாலும் முலாயம் சிங், பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவாக அடித்த அந்தர் பல்டி, மமதா தனக்குத் தானே செக் வைத்துக் கொண்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.
பிஜேபி என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறது. இனி ஆட்டம் சூடு பிடிக்க வேண்டுமானால் மாயாவதியும் கம்யூனிஸ்டுகளும் பிரணாப் முகர்ஜிக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெறவேண்டும். அப்போதுதான் பிஜேபியால் தெளிந்த நிலைப்பாட்டை எடுக்க இயலும்.  சங்மாவைப் பொறுத்தவரையில் அதிமுகவும் பிஜூ ஜனதாதளமும் ஆதரவு அளிக்கும் பட்சத்தில் வேட்பாளராக அவர் நிற்கப் போவது உறுதி.

அலங்காரப் பதவி என்று வருணிக்கப்பட்டாலும், தற்போது சிக்கலான சதுரங்க ஆட்டத்தில் சிக்கிக்கொண்டிருக்கிறது குடியரசுத் தலைவர் பதவி. இந்தப் பின்னணியில், ஒரு குடியரசுத் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்று பார்க்கலாம்.

குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் ஓட்டுரிமை யாருக்கு இருக்கிறது? 

  1. மாநில சட்டசபை உறுப்பினர்கள்
  2. மக்களவை லோக்சபா உறுப்பினர்கள்
  3. மாநிலங்களவை ராஜ்யசபா உறுப்பினர்கள்.  
ஒரு எம்ல்ஏவின் ஓட்டு  மதிப்பு எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

ஒரு எம்எல்ஏவின் ஓட்டு என்பது அவரது மாநில மக்கள் தொகைக்கு ஏற்றவாறு எண்ணிக்கை அளவில் வேறுபடும். அதாவது தமிழ்நாட்டில் உள்ள ஒரு எம்எல்ஏ வின் ஓட்டின் மதிப்பும் மணிப்பூரில் உள்ள ஒரு எம்எல்ஏவின் ஓட்டின் மதிப்பும் வேறு.

(குறிப்பு: இந்திய அரசின் சட்டப் பிரிவு 52 -2 ன் கீழ் , 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதால் , அதையே இங்கு கணக்கீட்டுக்காக எடுத்துள்ளேன்.)

எம் எல் ஏ வின் ஓட்டு மதிப்பு = மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை (1971 ஆம் ஆண்டின் கணக்கின்படி) / மாநிலத்தின் மொத்த சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை * 1000

உதாரணம் :

தமிழ்நாட்டில் ஒரு எம் எல் ஏ வின் ஓட்டு மதிப்பு = 4,11,99,168/234*1000=176.06 (1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு)

தமிழ்நாட்டில் ஒரு எம் எல் ஏ வின் ஓட்டு மதிப்பு = 7,21,38,958/234*1000=308 (2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு)

சிக்கிமில் ஒரு எம் எல் ஏ வின் ஓட்டு மதிப்பு = 2,09,843/32*1000 = 7 (1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு)

சிக்கிமில் ஒரு எம் எல் ஏ வின் ஓட்டு மதிப்பு = 6,07,688/32*1000=18 (2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு)

2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கின்படி, இந்தியாவைப் பொறுத்தவரையில் மொத்தமுள்ள 30 மாநிலங்களில், ஒரு எம் எல் ஏ வுக்கான அதிக ஓட்டுகளைப் பெற்றுள்ள மாநிலம், உத்தரப் பிரதேசம். மதிப்பு, 495. குறைந்த ஓட்டுகளை சிக்கிம் மாநிலம் பெற்றுள்ளது. மதிப்பு, 18. தமிழ்நாடு 308 எம் எல் ஏக்களைக் கொண்டுள்ளது.

இந்தியாவின் மொத்த மாநில சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 4120 ஆகும். எம் எல் ஏ க்களின் மொத்த ஓட்டுகளின் எண்ணிக்கை மதிப்பு  5,49,474 .(2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கின் படி).

எல்லா மாநிலங்களின் , எம் எல் ஏ வின் எண்ணிக்கை மதிப்பை அறிய இங்கே செல்லவும்.

எம்.பிக்களின் ஓட்டு மதிப்பு எவ்வாறு கணக்கிடப்படுகிறது ?

மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் = லோக்சபா உறுப்பினர்கள் (543 ) + ராஜ்ய சபா உறுப்பினர்கள் (233 ) = 776.

ஒரு எம்.பியின் ஓட்டு மதிப்பு = மாநில சட்டசபை உறுப்பினர்களின் மொத்த ஓட்டு மதிப்பு / மொத்த எம் பிக்களின் எண்ணிக்கை (லோக்சபா + ராஜ்யசபா)

ஒரு எம் பியின் ஓட்டு மதிப்பு = 5,49,474/776=708

மொத்த எம் பிக்களின் ஓட்டு எண்ணிக்கையின் மதிப்பு = 776 * 708 = 5,49,408

ஆதலால், குடியரசுத் தலைவருக்கு விழும் மொத்த ஓட்டுகளின் எண்ணிக்கை = 50% (எம் எல் ஏ ) + 50 % (எம் பி )

அந்த அடிப்படையில் மொத்த ஓட்டுகளின் மதிப்பு = 5,49,474+5,49,408=10,98,882 .

குடியரசுத் தலைவராக தகுதி பெற வேண்டிய ஓட்டு மதிப்பு என்ன?

குடியரசுத் தலைவருக்கான வேட்பாளர் வெற்றி பெற தேவைப்படும் ஓட்டுகள் = (மொத்த ஓட்டுகளின் எண்ணிக்கை/2 )+1

அதாவது, 10,98,882/2+1= 5,49,441+1=5,49,442

குடியரசுத் தலைவர் எவ்வாறு தேர்நதெடுக்கப்படுகிறார்?

இரண்டே இரண்டு பேர் தேர்தல் களத்தில் இருக்கும் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. ஏனெனில், முதல் விருப்ப வேட்பாளர் 50 % க்கும் அதிகமான ஓட்டுகளை பெற்றிருப்பார். அவர் வெற்றி பெற்றவர் என எளிதாக அறிவித்து விடலாம். ஆனால், நான்கு பேர் நிற்கும் பட்சத்தில் எவ்வாறு தேர்ந்தடுக்கப்படுவார்? கீழே கொடுக்கப்பட்ட பெயர்கள் தங்களின் கற்பனைக்கு மட்டுமே.

உதாரணமாக ,

அப்துல் கலாம், பி ஏ சங்மா, பிரணாப் முகர்ஜி, ராம்ஜெத்மலானி என நான்கு பேர் நிற்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.  விழுந்த மொத்த ஓட்டுகளின் எண்ணிக்கை 15௦௦௦ எனக் கணக்கில் கொள்வோம். ஒவ்வொரு வாக்காளரும் தனது விருப்ப அடிப்படையில் முதல், இரண்டு, மூன்று, நான்கு  என வேட்பாளரைத் தெரிவு செய்ய வேண்டும்.

தேர்தல் முடிவுகள் கீழ்க்கண்டவாறு இருக்கும் பட்சத்தில் வெற்றி எவ்வாறு தீர்மானிக்கப் படுகிறது?

அப்துல்கலாம் = 5,250

பிரணாப் முகர்ஜி=4,800

ராம்ஜெத்மலானி = 2,700

பி ஏ சங்மா =2,250

7501 ஓட்டுகள் வாங்கியவர் தான் வெற்றி பெற்றவர் என அறிவிக்கப்பட வேண்டும். முடிவுகள் மேற்கூறிய நால்வருக்கும் வராத பட்சத்தில்,  நான்காம் இடத்தில் இருப்பவர் போட்டியிலிருந்து விலக்கப்பட்டு, அவருக்கு விழுந்த இரண்டாம் விருப்ப  ஓட்டுகள் மற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அதாவது, அவருடைய ஓட்டு சீட்டில், இரண்டாம் விருப்ப ஓட்டுகள் யாருக்கு என்பதைப் பொறுத்து அந்த ஓட்டுகள் பகிர்ந்தளிக்கப்படும்.

இந்த நிலையில் பி ஏ சங்மா போட்டியிலிருந்து விலக்கப்பட்டு, அவருக்கு விழுந்த இரண்டாம் விருப்ப ஓட்டுகள் கீழ்க்கண்டவாறு இருக்கும் பட்சத்தில் அந்த ஓட்டுகள் அந்தந்த வேட்பாளருக்குப் போய்ச்சேரும்.

பி ஏ சங்மாவின் ஓட்டு சீட்டில் இரண்டாம் விருப்ப ஓட்டுகளாக பதிவானவை  :

அப்துல் கலாம் = 600

பிரணாப் முகர்ஜி=750

ராம் ஜெத்மலானி = 900

இப்போது வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்:

அப்துல்கலாம்= 5,250+600= 5,850

பிரணாப் முகர்ஜி= 4800+ 750 = 5,550

ராம் ஜெத்மலானி = 2,700+900=3,600

இந்நிலையிலும் எந்த வேட்பாளரும் வெற்றி பெறுவதற்கான 7501 ஓட்டுகளைப் பெறாத காரணத்தினால் , மூன்றாம் நிலையில் உள்ளவர் போட்டியில் இருந்து விலக்கப்படுவார் . மூன்றாவது முறையும் வாக்குகள் எண்ணப்பட்டு, மூன்றாம்  நிலையில் உள்ளவரின் மூன்றாம்  விருப்ப ஓட்டுகள் பகிர்ந்தளிக்கப் படும்.

ராம் ஜெத்மலானி ஓட்டு சீட்டில்  மூன்றாம் விருப்ப ஓட்டுகளாக பதிவானவை  :

அப்துல்கலாம் = 1,450
பிரணாப் முகர்ஜி = 2 ,150
இந்த ஓட்டுகள் பகிர்ந்தளிக்கப் படும் பட்சத்தில் அப்துல் கலாம், பிரணாப் முகர்ஜி பெற்ற வாக்குகள்:
அப்துல் கலாம் = 5,850+1,450=7,300
பிரணாப் முகர்ஜி = 5,550 + 2,150= 7,700
இறுதி சுற்றில் பிரணாப் முகர்ஜி 7 ,501 ஓட்டுகளை விட அதிகமாக பெற்று விட்டதால் அவரே இந்தியாவின் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். ஆட்டத்தின் போக்கு எந்த சுற்றில் வேண்டுமானாலும் மாறலாம். ஆகையால் அதிக வேட்பாளர்கள் நிற்கிற பட்சத்தில் யார் வெற்றி பெறுவார் என்பது மிகச் சிறந்த சதுரங்க ஆட்டமாகவே இருக்கும்.
இன்னும் சில தினங்களில் வேட்பாளர்கள் எத்தனை பேர் , எதிர் கட்சிகள் சார்பில் எத்தனை பேர் நிற்கப் போகிறார்கள், ஆளுங்கட்சி சார்பில் எத்தனை பேர் நிற்கப் போகிறார்கள் என்பதைப் பொறுத்துதான் இந்த ஆட்டம் சூடு பிடிக்கும்.  தற்போதைய நிலையில் வைத்துப் பார்க்கும் போது, இந்தியாவின் வர்த்தகத் துறை அமைச்சராக இருமுறையும், வெளியுறவு அமைச்சராக ஏற்கெனவே ஒரு முறையும் பணியாற்றிய தற்போதைய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜிதான் இந்தியாவின் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தோன்றுகிறது. இது என் தனிப்பட்ட முடிவு. என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.
0
லஷ்மண பெருமாள்