படம் காட்டினால் பணம்

photo_slideshow_pptஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 23

நிகழ்ச்சிகள், விழாக்கள் குறித்த மக்களின் கண்ணோட்டம் வெகுவாக மாறியிருக்கிறது. ஒரு எளிய பிறந்த நாள் விழாகூட பலருடைய கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு கொண்டாட்ட அனுபவமாக இருக்கவேண்டும் என்று பலர் இன்று விரும்புகிறார்கள். நிறுவனங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். ஒரு புதிய தயாரிப்பு அல்லது சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது என்றால் அது விமரிசையாக, பலருடைய கவனத்தைக் கவரும் வகையில் இருக்கவேண்டும் என்றே விரும்புகிறார்கள். இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியை முன்னின்று நடத்துவது மிகவும் கடினமானது.

இந்தச் சூழலில்தான், ஈவண்ட் மேனேஜ்மெண்ட் எனப்படும் தொழில் வாய்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இந்தத் துறையில் ஈடுபட விரும்புபவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய சில முக்கிய அம்சங்கள் உள்ளன. உதாரணத்துக்கு, நல்ல பேச்சுத் திறமை வேண்டும். சோஷியல் நெட்வொர்கிங் எனப்படும் சமூக தொடர்புகளை நல்லவிதமாக ஏற்படுத்திக்கொள்ளும் திறன் வேண்டும்.

சினிமா துறை (ஒலிநாடா வெளியீடு), கல்லூரி, பள்ளி ஆண்டு விழாக்கள், கலை நிகழ்ச்சிகள், புத்தக வெளியீட்டு விழாக்கள், திருமணம், விளையாட்டுப் போட்டிகள், கோவில் விழாக்கள், சமூக ஆர்வலர்களால் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் என்று பலதரப்பட்ட வாய்ப்புகள் கொடடிக்கிடக்கின்றன.

முதலில் ஒரு பெயரைப் பதிவு செய்து நிறுவனமாக உங்களை மாற்றிக்கொள்ளவேண்டும். சிறுசிறு நிகழ்ச்சிகளை வடிவமைத்து நடத்தவேண்டும். மக்கள் தொடர்புகளை அதிகப்படுத்திக் கொண்டே வரவேண்டும். எங்கே, எந்த இடத்தில், எந்தப் பொருள், சேவை கிடைக்கும் போன்ற தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்க வேண்டும். இணையம் இதற்குக் கைகொடுக்கும்.
எந்தெந்த நிகழ்ச்சிகள் எங்கெங்கே நடக்கவிருக்கிறது போன்ற தகவல்களை சிறிது சிறிதாகச் சேகரிக்க வேண்டும். இந்த நிகழ்ச்சியை நடத்த நினைப்பவரை தொடர்புக்கொண்டு, உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளவேண்டும்.

ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒவ்வொரு வடிவம் இருக்கும். நிகழ்ச்சியை நடத்துபவர்களுக்கென்று பிரத்தியேக குணங்கள், ரசனைகள் இருக்கும். இவற்றை நன்கு அறிந்துவைத்துக்கொண்ட பிறகே நிகழ்ச்சிக்கான திட்டமிடல்களைத் தொடங்கவேண்டும். அதே போல், நிகழ்ச்சி நடத்த இருப்பவரின் பட்ஜெட் என்ன என்பதை அறிந்துகொள்ள வேண்டும். ஒரு சிலர் விழாக்கள் எளிமையாகவும் நளினமாகவும் இருக்கவேண்டும் என்று விரும்புவர். வேறு சிலரோ நல்ல ஆடம்பரத்துடன் விழா நடைபெறவேண்டுமென்று விருப்பப்படுவர். இடத்துக்கு ஏற்ப, நீங்கள் அளிக்கபோகும் சேவைகளைப் பகுதிவாரியாகப் பிரித்துக்கொண்டு பணியாற்றவேண்டும்.

நிகழ்ச்சியை நடத்துவதற்கு நல்ல கற்பனை வளம் தேவை. நிகழ்ச்சி நடக்கவிருக்கும் அரங்கம், வரும் விருந்தாளிகளின் எண்ணிக்கை போன்றவற்றை மனதில் கொண்டு முடிவு செய்ய வேண்டும். உணவு வழங்கப்படும் நிகழ்ச்சியாக இருப்பின் எத்தகைய உணவு, அதில் பரிமாறப்படும் வகைகள் என்னென்ன ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும்.

குழந்தைகள் பங்கு கொள்ளும் நிகழ்ச்சியாக இருக்கும் பட்சத்தில், குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சிகள், பரிசுகள் என்று பலவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும். நுழைவு வாயில் அலங்காரம், மேடை அலங்காரம், அரங்க அமைப்பு, விழா அழைப்பிதழ், நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்கும் நபர்கள் என்று ஒவ்வொன்றையும் கவனத்தோடு முடிவு செய்ய வேண்டும்.

பல நபர்களை ஒருங்கிணைப்பதன் மூலமே ஒரு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த முடியும் என்பதால் பலதரப்பட்ட மனிதர்களையும் அவர்களுடைய குணாதிசயங்களையும் அறிந்து கொள்ளவேண்டும். மதம் மற்றும் சமூகத் தொடர்பான நிகழ்ச்சியாக இருக்கும் பட்சத்தில், மற்றவர்கள் மனம் புண்படாதவாறு நிகழ்ச்சி நிரலை அமைத்தல் மிக அவசியம்.

உதாரணத்துக்கு, ஒரு திருமண நிகழ்ச்சியாக அல்லது பிறந்த நாள் விழாவாக இருக்கும் பட்சத்தில், அதை நடத்துபவரின் விருந்தாளிகளில் சைவம் உண்பவர்களும் அசைவம் உண்பவர்களும் இருப்பார்கள். அனைவரையும் திருப்திபடுத்தும் வகையில் தனித்தனியே ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்.

நிகழ்ச்சி நடப்பதற்கு முதல் நாளோ அல்லது நடக்கும்போதோ ஒருசில தடைகள் உருவாகலாம். குறிப்பிட்ட நேரத்தில் எதிர்பார்த்த பொருள்கள் வந்து சேராமல் இருக்கலாம். அல்லது தகுந்த நபர்கள் ஒரு வேலையைச் செய்வதற்கு கிடைக்காமல் போகலாம். எப்படி இருப்பினும், எந்த ஒரு சிக்கலிலும் மாற்று ஏற்பாடுகளை யோசிக்கத் தெரிந்தவர்களாக இருக்கவேண்டும். அந்த மாற்று ஏற்பாடுகளை குறித்த நேரத்தில் சரியாக செய்து நிகழ்ச்சி நடத்துபவர்கள் மனம் கோணாதவாறு முடிக்க வேண்டும்.

எழுத்துப்பூர்வமாக தான் செய்யும் ஏற்பாட்டை நிகழ்ச்சி நடத்துபவரிடம் கொடுத்து அவர்களின் சம்மதத்தை எழுத்துப்பூர்வமாகப் பெற்றுக்கொள்ளவேண்டும். இதன்மூலம் விழாவை நடத்துபவருக்கும் நடத்த முன்வரும் தொழிலதிபருக்கும் கருத்து வேற்றுமையைத் தவிர்க்க முடியும். இத்தொழிலில் உள்ள ஒரு பெரிய அனுகூலம் என்னவென்றால், முதலில் நான்கைந்து நிகழ்ச்சிகளை மிகச் சிறப்பாக நடத்தி கொடுத்துவிட்டால், ஏனைய நிகழ்ச்சிகள் தாமாகவே தேடிவரும். நிறைவடைந்த வாடிக்கையாளர்களே மக்கள் தொடர்பு அதிகாரிகளாக மாறிவிடுவார்கள்.

ஒரு விழா சிறப்பாக நடைபெறும்போது, விருந்தாளிகளின் கவனத்தைக் கவர்ந்துவிட்டால் யார் இதை நடத்துவது என்று விசாரிதது நிச்சயம் உங்களைத் தேடி அவர்களே வருவார்கள். பெரும் செல்வந்தர்களின் வீட்டில் நிகழ்ச்சிகளும் கேளிக்கை விருந்துகளும் எப்போதும் நடந்துகொண்டே இருக்கும்.

0

கணினி தொழில்நுட்பத்திலும், கணினி மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவராக நீங்கள் இருக்கும் பட்சத்தில் டாகுமெண்ட் ரைட்டிங் எனப்படும் தொழில் வாய்ப்புகளை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இன்று பல சிறிய/பெரிய நிறுவனங்கள் தங்களைப் பற்றி குறுந்தகடு அல்லது டாகுமெண்டரி படம் உருவாக்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

விற்பனைப் பிரிவு அதிகாரிகளை வைத்துக்கொண்டு பல மணி நேரம் தங்கள் நிறுவனத்தைப் பற்றியும், தாங்கள் விற்பனை செய்யும் பொருள்களைப் பற்றி பேசுவதை விட, PPT எனப்படும் பவர் பாயிண்ட் பிரஸென்டேஷன் மூலம் பல வாடிக்கையாளரைக் கவரமுடியும்.
வேண்டிய கருத்துக்களை நறுக்கென்று, எளிமையாக ஆனால் புதுமையாக எடுத்துச் சொல்ல இப்படிப்பட்ட முறைகள் பெரிதும் பயன்படுகின்றன. சுயதொழில் செய்ய நினைப்போர் கற்பனைத்திறன் உள்ளவர்களாக இருந்தால் இத்தொழிலில் மிக நல்ல முறையில் இறங்க முடியும்.

சிறு முதலீட்டில் இத்தொழிலை ஆரம்பிக்க முடியும் என்பது இதன் மிகப்பெரிய பலமாகும். விளம்பரங்களுக்கான வாசகங்களை எழுதுதல், விளம்பரப் படங்களுக்கான உட்கருத்துகளை வடிவமைத்தல் போன்றவையும் சுயத் தொழிலுக்கு ஏற்றவையே. அதேபோல் பல நிறுவனங்களைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றை அந்த நிறுவனம் கடந்து வந்த பாதை, சந்தித்த சவால்கள், பெற்ற விருதுகள், தொழிலில் செய்த சாதனைகள் போன்றவற்றை ஒரு திரைப்படத்துக்குரிய நேர்த்தியோடு, வடிவமைக்க முன்வந்தால் அதுவும் நல்ல தொழிலாக அமையும்.

இத்தொழிலில் இறங்குவோர்க்கு மொழிகளின் ஆளுமை, நல்ல தேர்ச்சி போன்றவை மிக அவசியம். இதுவும் மக்கள் தொடர்புடைய தொழிலென்பதால், மக்களின் உணர்வுகளை, விருப்பங்களை, ரசனைகளை எடைபோடத் தெரியவேண்டும். எளிதாக மாநில எல்லைகளைத் தாண்டி நாட்டின் எல்லைகளைத் தாண்டித் தொழிலை விரிவுப்படுத்தும் வாய்ப்புகளும் மிக அதிகம். மேலும் செல்வத்தோடு சேர்த்து பெரும் புகழும் உங்களை வந்தடையும்.

உங்கள் டார்கெட் என்ன?

ஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 19

கடந்த காலங்களில் வங்கிகள் தொழிலதிபர்களுக்கு அதிக அளவு சாதகமாக இருந்தது. இந்திய வங்கிகளின் கண்ணோட்டம் பெரும்பாலும் தொழிலதிபர்களுக்கு கடன் கொடுப்பதை ஊக்குவிக்கும் விதமாகவே இருந்தது. இந்திய வங்கிகளின் கூட்டமைப்பு தொழில் கடன்களை கொடுப்பதில் நடுத்தரமான ஒரு கொள்கையைக் கையாண்டு வந்தது. அதாவது கடன் கொடுக்கும்போது மீடியம் ரிஸ்க் உள்ள தொழில்களையே தேர்ந்தெடுத்தனர். இதன் பொருள், தொழில் தொய்வடைந்தாலும், வங்கிக்கு வர வேண்டிய நிலுவைகளைப் பிணையாக அசையாச் சொத்துக்களிலிருந்து பெற்றுக்கொண்டுவிடலாம்.

ஒரு தொழிலைத் தொடங்க நினைப்பவர் எதிர்காலத்தில் வங்கிக் கடனை ஒழுங்காகச் செலுத்துவார் என்ற நம்பிக்கையிலும் அவரது கடந்த கால வங்கிக்கணக்குகளை வைத்தும் ஒரு வங்கி முடிவு செய்கிறது. ஒரு நல்ல கடந்தகாலத்தை உருவாக்கத் தெரியாத தொழிலதிபர்களால் எப்படி ஒரு நல்ல வளமான வருங்காலத்தை உருவாக்கமுடியும்? வங்கி அதிகாரிகள் வங்கிக் கடன் கொடுக்கும்போது பெரும்பாலும் நமது அதிகபட்ச பொறுமையைச் சோதிப்பது வழக்கமாகும். இது தொழிலதிபர்களுக்கு பெரும் சுமையாக இருந்தாலும், ஏன் அவ்வாறு செய்கிறார்கள் என்றால், உங்கள் தொழிலை நடத்தக்கூடிய அளவு பணத்தை உங்களை வைத்தே புரட்டச் செய்ய வேண்டுமென்பதால், இதை சரியாகப் புரிந்துக் கொள்ளவேண்டும்.

சுயதொழிலுக்கு வருபவர்கள் சவால்களைச் சமாளிக்கும் திறன் படைத்தவர்களாக இருப்பது அவசியம். அதனால் புதிதாக வரும் தொழில்முனைவோர் தங்கள் கனவுகளை எண்களோடு அதாவது டார்கெட்டோடு தொடர்புப்படுத்தி தொழில் செய்யப் பழகுங்கள். மாதாந்திரத் தொழிலுக்கான குறியீடுகளை நிர்ணயித்துக் கொள்ளுங்கள்.

இப்படி நிர்ணயித்துக்கொண்டு பணிபுரியும்போது வியாபாரம் நிச்சயமாக விரிவடையும். விரிவடைந்து வரும் தொழில் மூலதனத்திலிருந்து, ஒரு குறிப்பிட்ட தொகையை எடுத்து தனியாக சேமிப்பது அவசியம். இது நிறுவனத்தின் பலமாக உருமாறும்.

உங்கள் தொழில் நிறுவனங்களுக்கு கிடைக்கும் கடன்கள் என்பது (குறுந்தொழில்களைப் பொருத்தவரை) தனிநபர் கடன்களே. ஆகவே தனிநபர்களின் Networth எனப்படும் சுயமதிப்பீட்டை முடிந்தவரை உயர்த்திக்கொள்ளவேண்டும்.

சமீபத்தில் DARE எனப்படும் நாளிதழ் குறுந்தொழிலுக்கான சமூக அறிவை அதிகப்படுத்தும் நோக்கத்துடன் ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது. அதில் சிறு மற்றும் குறுந்தொழில்களைப் பாதிக்கும் இரு பெரும் அங்கங்களாக கடனுதவியும் தொழில்நுட்ப அறிவும் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் தமிழ்நாட்டிலுள்ள சில முக்கிய நகரங்களின் போக்கைப்பற்றி விரிவாக அலசப்பட்டது. அதன் ஒரு சில துளிகளை கீழே பார்ப்போம்.

கோவையைப் பொருத்தவரை பெரும் என்ஜினியரிங் சார்ந்த யூனிட்களின் தேவை அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்தப் பயிலரங்கில் பேசிய பலரும் தொழில்நுட்ப அறிவை வளர்த்துக் கொள்ளுதல் தொழிலதிபர்களுக்கு மிக அவசியமானது என்பதையும், இதனால் தொழிலுக்கு ஏதுவாகும் என்றும், பணமும் நேரமும் மிச்சப்படுத்த தொழிலதிபர்களால் இயலும் என்பதையும் எடுத்துக்காட்டினார்கள்.

சென்னையைப் பொருத்தவரை கணினிச் சார்ந்த துறைகள் (ஹார்ட்வேர், சாஃப்ட்வேர்) மிக அதிக அளவில் பொருளீட்டும் வாய்ப்புகள் பெற்றுள்ளன என்று கணிக்கப்பட்டது. திருவனந்தபுரமும் இத்துறைகளில் மிக அதிக அளவில் பேசப்படும் ஒரு வர்த்தக இடமாக மாறிக்கொண்டு வருகிறது.

0

இந்தியாவில் ஒரு நிறுவனத்தை உருவாக்கி அதைப் பதிவு செய்வதற்கு குறைந்தது 20 முதல் 40 நாள்கள் தேவைப்படுகின்றன. தொழில் என்று வரும்பொழுது நிறுவனங்களின் தன்மையையும் அதை பதிவு செய்வதற்கு வேண்டிய சட்டத்தேவைகளையும் அடிப்படையாகத் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

தனி நபர்கள் மட்டும் அங்கத்தினராக இருந்து தொடங்குவதை நிறுவனம் என்று அழைப்பர். இத்தகைய நிறுவனங்களை நடத்துபவர், அதாவது தொழில்முனைவோர் Current Account எனப்படும் வியாபாரக் கணக்கை வங்கியில் தொடங்க வேண்டும். நான் முன்பே சொல்லியது போல் இத்தகைய தனிநபர் நிறுவனங்களுக்கு வருமான வரிக்கான பதிவுகள் மற்றும் சேவை வரிக்கான பதிவுகள் அவசியம். மின்சாரம் வணிகத்துக்குத் தேவையான மறுமதிப்பீடு செய்து, செலுத்த தொடங்கியிருக்க வேண்டும் (Commercial E.B).

அடுத்து பிரைவேட் லிமிடெட் எனப்படும் கூட்டு நிறுவன அமைப்பைப் பற்றி பார்ப்போம். இத்தகைய நிறுவனங்களுக்கு குறைந்தபட்சம் இரண்டு இயக்குநர்களும் இரண்டு பங்குதாரர்களும் தேவை. அதிகபட்சமாக 50 பங்குதாரர்கள் வரை இருக்கலாம். இயக்குனர்களின் அளவுக்கு உச்சவரம்பு கிடையாது. ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்கென்று Articles of Association என்பதை உருவாக்கி, அதாவது நிறுவனத்துக்குரிய சட்டவிதிகளை ஏற்படுத்தி அதிகபட்ச இயக்குநர்களின் தொகையை நிர்ணயித்துக் கொள்ளலாம். இத்தகைய பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச முதலீடு ஒரு லட்சம். பொதுமக்களிடமிருந்து முதலீடு வாங்க முடியாது. எனினும் இயக்குனர்களிடமிருந்தும் பங்குதாரர்களிடமிருந்தும் அவர்களது உறவினர்களிடமிருந்தும் deposit எனப்படும் வைப்புத் தொகைகளை முதலீடாகப் பெற்றுக் கொள்ள முடியும். பங்குதாரர்கள் தங்களுடைய பங்குகளை அந்நிறுவனத்தின் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள முடியும்.

பப்ளிக் லிமிடெட் எனப்படும் பொதுத்துறை நிறுவனங்களின் அடிப்படை விதிகளைப் பார்ப்போம். இந்த நிறுவனங்களின் குறைந்தபட்ச முதலீடு 5 லட்சமாகும். இயக்குனர்களின் எண்ணிக்கை மூன்றாக இருத்தல் அவசியம். பங்குதாரர்களின் குறைந்தபட்ச எண்ணிக்கை ஏழு, அதிக பட்ச உச்சவரம்பு இல்லை. பொதுமக்களிடமிருந்து முதலீட்டுக்கு பணத்தை வசூலிக்கலாம்.

0

கலைகள் ஆயிரம்

ஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 16

இன்று உற்பத்தி தொழில்களை உருவாக்கி, அதற்குரிய தகுந்த நபர்களைத் தேர்வு செய்து தொழில்களை நடத்திச் செல்வது கடினமாக உள்ளது என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். தொழில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது பல தொழிலதிபர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்நிலையில், அறிவு சார்ந்த தொழில்களுக்கு இனிவரும் காலங்களில் வரவேற்பு கூடுதலாக இருக்கக்கூடும்.

அந்த வரிசையில் முதலில், கலை ஆர்வம் உள்ள பெண்களுக்கான வாய்ப்புகளை இனி பார்ப்போம்.

  1. ஓவியம் : கண்ணாடி, பானை, உலோகம் ஆகியவற்றில் வரையும் ஆர்வமும் தேர்ச்சியும் கொண்டவர்கள் பயிற்சி வகுப்புகள் எடுக்கலாம். இப்படிப்பட்ட வகுப்புகளுக்கு இன்று நல்ல தேவை உள்ளது. இதற்கு பெரிய முதலீடுகள் தேவையில்லை. வீட்டின் ஒரு பகுதியை வகுப்பறையாக மாற்றி, ஒரு சில உள்ளூர் பத்திரிகைகளில் விளம்பரம் செய்தால் நல்ல வரவேற்பு கிடைக்கும். குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கான பயிற்சி முகாம்களை நடத்தினால் நல்ல வருமானம் ஈட்ட முடியும். மற்ற பயிற்சி வகுப்புகளிலிருந்து சிறு வித்தியாசப்படுத்தி கற்பனை வளத்துடன் சொல்லிக் கொடுக்கும்போது நல்ல அறிமுகங்கள் கிடைக்கும்.
  2. இசை வகுப்புகள்: இசையில் பட்டபடிப்பு பெற்றவர்கள் அல்லது முறையாக இசையைக் கற்றவர்கள், அது எந்தப் பிரிவைச் சேர்ந்த இசையாக இருந்தாலும், இசை வகுப்புகள் நடத்தலாம். இசைக் கருவிகள் வாசிக்கக் கற்றுக்கொடுக்கலாம். இன்று டிவியில் பலவித போட்டிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதையும் பெற்றோருக்கு அதில் ஆர்வம் அதிகரித்துக்கொண்டிருப்பதையும் நாம் காண்கிறோம். பயிற்சி வகுப்புகள் இவர்களிடையே எளிதில் பிரபலமடையும்.
  3.  யோகா /தியானப் பயிற்சி : பொதுவாக இன்றைய தலைமுறையினர் உடல் ஆரோக்கியத்தில் அக்கறையும் ஆர்வமும் கொண்டிருக்கின்றனர். தியானம், யோகா ஆகியவற்றில் முறைப்படி தேர்ச்சி பெற்ற தகுதியானவர்கள் பயிற்சி வகுப்புகள் தொடங்கலாம்.
  4. உடற்பயிற்சிக் கூடங்கள் : உடல் நலம் பேணிக்காப்பதில் நல்ல அறிவுப் படைத்த பெண்கள் ஓரளவுக்கு முதலீடு செய்யவும் முடியும் என்று நினைப்பவர்கள் உடற்பயிற்சிக் கூடங்களை நிறுவலாம். வங்கியில் கடன் பெறுவதும் சாத்தியமே. நல்ல இடத்தைத் தேர்வு செய்தல் மற்றும் அந்த இடத்தை அழகாக வடிவமைத்தல், பயிற்சி கூடங்களைக் குளிரூட்டுதல் போன்றவற்றைச் செய்துவிட்டால் நிச்சயம் பலன் கிடைக்கும். பயிற்சிப் பெற்ற ஒன்றிரண்டு திறமையாளர்களைப் பணியில் வைத்திருப்பது அவசியம். தக்க முறையில் விளம்பரப்படுத்தினால் பலரும் ஆர்வத்துடன் இணைந்துகொள்வார்கள்.
  5. தற்காப்புக் கலைகள் : பல்வேறு சீண்டல்களுக்கு ஆளாகும் இளம்பெண்கள் தம்மைக் காப்பாற்றிக்கொள்ள சில தற்காப்புப் பயிற்சிகளைப் பெறுவது இன்று கட்டாயமாகிவிட்டது. அனுபவம் வாய்ந்தவர்கள் இவர்களுக்கு வகுப்புகள் எடுக்கலாம். பள்ளி மைதானங்கள், மாநகராட்சிக் கூடங்கள் போன்றவற்றை குறிப்பிட்ட சில மணி நேரங்களுக்கு வாடகைக்கு எடுத்து பயிற்சி அளிக்கலாம்.
  6. தனிவகைத் திறமைகள்: ஒரு சிலருக்கு காய்கனிகளை வைத்து அலங்காரம் செய்வதிலும் மற்றும் காய்கனிகளைச் செதுக்கி பலவகை உருவங்களை ஏற்படுத்துவதிலும் ஆர்வம் இருக்கும். இவர்களும் பயிற்சி வகுப்புகள் நடத்தலாம். அதே போல், தோட்டக்கலை தொடர்பான அறிவியல்பூர்வமான அறிவு படைத்தவரும், துறை சார்ந்த தகவல்களை அறிந்து வைத்திருப்பவரும், தோட்டம் அமைப்பதில் வகுப்புகள் நடத்தலாம். தோட்டங்களை நிர்வகிப்பதில் ஆலோசகர்களாகச் செயல்படலாம்.  சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வு அதிகமாகிவரும் நிலையில் நிச்சயம் உங்களுக்கு இத்துறையில் நல்ல வாய்ப்புகள் உருவாகும்.
  7. சமையல் கலை  : பேக்கரி, மைக்ரோவேவ் சமையலில்  அனுபவம் வாய்த்தவர்கள் பயிற்சி வகுப்புகள் எடுத்தால் இன்றைய சூழலில் நல்ல வரவேற்பு இருக்கும். பெருநகரங்களில் மட்டுமல்லாது கிராமப்புறங்களில்கூட இத்தகைய பயிற்சி வகுப்புகளுக்கு நல்ல தேவை உள்ளது. ஒரே பகுதியைச் சேர்ந்த இருவரோ அல்லது மூவரோ ஒன்று சேர்ந்து, இத்தகைய பயிற்சி மையங்களில் முறையாகப் பயிற்சி பெற்று cakes, pasteries உள்ளிட்ட பலவகையான பண்டங்களைச் செய்வதிலும் ஈடுபடலாம்.
  8. அலங்காரம் : இண்டீரியர் டெகரேடிங் எனப்படும் வீட்டு அலங்கார கலையில் தேர்ச்சிப் பெற்றவர்களும் பல நூதனமான கலைத்திறனைப் படைத்தவர்களும் தங்கள் திறமையை அறிவுபூர்வமாக செலுத்தி சிறு தொழில் முயற்சியில் ஈடுபடலாம்.
  9. நடன வகுப்புகள் : இசை தொடர்பான பயிற்சிகளைப் போல் இன்று பலவித நடன வகைகளைக் கற்றுக் கொள்வதிலும் பெரும்பாலான இளைய சமுதாயத்தினர் ஆர்வமாக உள்ளனர். பலவித தொலைக்காட்சி ஊடகங்களும் இதற்கென வித்தியாசமானப் போட்டிகளை நடத்தி வருகின்றன. பரதம், ஒடிஸி போன்ற பாரம்பரிய நடன வகுப்புகள் தவிர, மேற்கத்திய பாணியில் பல புதிய நடன பயிற்சிகளுக்கும் பலரிடம் ஆர்வம் பெருகியுள்ளது.

சில பொதுவான விஷயங்கள். மேற்கூறிய பயிற்சி வகுப்புகளை வீட்டிலேயே நடத்துவது ஏற்றதல்ல. வீட்டுக்கு அருகில் ஏதேனும் ஓரிடத்தை அடையாளம் கண்டு அங்குதான் வகுப்புகள் நடத்தவேண்டும். ஒருவேளை வீட்டிலேயே நடத்துவது என்று முடிவு செய்துவிட்டால், அதற்கென தனி அறையை ஒதுக்கவேண்டும்.

பயிற்சிக்கான நேரம், கட்டண விவரம், வயது வரம்பு, பயிற்சித் திட்டங்கள் போன்றவை மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்க வேண்டும். நம் வீட்டில் நடக்கும் வகுப்புதானே என்ற அலட்சியப் போக்கு கூடவே கூடாது. அதே போல் எந்தக் கலையாக இருந்தாலும், சொல்லிக் கொடுக்கும் நபர்கள் தங்களை முழுமையாக தயார்படுத்திக் கொண்ட பின்னரே, அதை சுயத்தொழிலாக செய்ய முன்வர வேண்டும். அவ்வப்போது முன்னறிவிப்பின்றி பயிற்சி வகுப்புகளுக்கு விடுமுறை அளித்தல் மற்றும் பயிற்சசி கொடுக்கும்போது கைபேசியில் பேசி கொண்டிருத்தல், வீட்டுக்கு வருபவர்களிடம் அரட்டை அடித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவது சரியல்ல.

பயிற்சி வகுப்புகள் நடக்குமிடங்கள், கற்க வருபவற்கு பாதுகாப்பான உணர்வைக் கொடுக்க வேண்டும். அவர்கள் தங்களிடம் படித்த மாணவர்களை அவ்வப்போது ஊக்குவித்து பல்வேறு போட்டிகளில் பங்குபெறும்படிச் செய்ய வேண்டும். திறமையாகவும் பொறுமையாகவும் அக்கறையுடனும் வகுப்புகள் எடுத்தால் கற்கும் மாணவர்கள் மூலமே மேலும் பலர் வந்து இணைந்துகொள்வார்கள். மிக எளிதாக உங்கள் தொழில் முயற்சி பிரபலமடைந்துவிடும். சிறிது காலத்துக்குப் பிறகு தங்களிடம் கற்ற மாணவர்களையே பயிற்சியாளர்களாக நியமித்து தொழிலை மேலும் விரிவுபடுத்தலாம்.

0

செல்வம் தேடும் வழி

கீதா பிரேம்குமார், மனித மேம்பாட்டு ஆலோசகர் மற்றும் பயிற்சியாளர். உளவியல் துறையில் பட்ட மேற்படிப்பு முடித்தவர். இவர் எழுதும் ஜெயிக்கலாம் தோழி தமிழ்பேப்பரில் ஒவ்வொரு வாரமும் திங்கள் அன்று வெளிவரும். இது பெண்களுக்கான தொழில் முனைவோர் கையேடு.

ஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 1

மனித குலத்தை மேம்படுத்தக்கூடிய கருவி ஒன்று உண்டு. மனிதனின் கனவுகள் நனவாகவும், தேவைகளைப் பூர்த்தி செய்யவும் இது உதவுகிறது. இந்தக் கருவி நல்லவிதமாகப் பயன்படுத்தப்படும்போது வையகம் மனித குலத்தின் வசத்துக்குள் வருகிறது. அதே கருவி தவறாகச் செலுத்தப்படும்போது மனிதக்குலத்தையே வேரறுக்கும் வல்லமையைப் பெற்றுவிடுகிறது. இது இல்லையேல் மகன் தாயை மறக்கலாம், மனைவி கணவனை இழக்கலாம்; எவரும் உயிரைத் துறக்கலாம். இனம், குலம், மதம், மொழி, நாடு என்ற எந்தவிதப் பாகுபாடும் இன்றி மனிதகுலத்தை தன் வசத்தில் வைத்திருக்கிறது அந்தக் கருவி.

செல்வம்.

காலையில் கண் விழித்ததும் இன்று என் தேவைகள் என்ன, அதற்குத் தேவைப்படும் பணம் என்ன என்று யோசிப்பவரா நீங்கள்? பணம் இல்லாததால் என் மதிப்பு குறைகிறது என்று மனக்குமுறலுடன் வாழ்பவரா நீங்கள்? பணம் மட்டும் என் கையில் இருக்கட்டும், என்ன செய்கிறேன் பார் என்று உலகுக்குச் சவால் விட விரும்புவரா நீங்கள்? பணம் இல்லாததால் சாவின் விளிம்பை எட்டிப்பார்க்க விரும்புவரா நீங்கள்? எந்தப் பிரிவில் நீங்கள் இருந்தாலும் சரி, உங்களுக்காகத்தான் இந்த எழுத்து.

இதை எழுதுவதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது?

இருக்கிறது. இல்லாமையிலிருந்து உயிர் பெற்று, வல்லமையைப் வென்று கொண்டிருக்கும் ஒருவருடைய அனுபவம் இது. வாழ்க்கை எனக்குக் கற்றுக் கொடுத்த பாடங்களைத்தான் உங்களுடன் நான் பகிர்ந்துகொள்ளவிருக்கிறேன். இதிலிருந்து ஒரு துளி உங்கள் நினைவை, நிலையை மாற்றுமேயானால் மகிழ்ச்சியே.

வேண்டாம் என்று ஒதுங்கிப் போவோருக்கும் ஒரு சிறு விண்ணப்பம். என் நிலையை நீங்கள் அடையும் நாளில் இப்புத்தகத்தின் ஒரு சில பக்கங்களைப் புரட்டிப் பாருங்கள். ஒற்றுமையை உணர்வீர்கள்.

என் அனுபவச் சிதறல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள என்னைத் தூண்டிய வல்லமைப் படைத்த இறைவனுக்கும், ஈன்றெடுத்த பெற்றோருக்கும், கல்வி தந்த ஆசிரியருக்கும், வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் என்னைச் செலுத்தும் உந்து சக்தியாக இருந்து, என்னை வசீகரித்த மனிதர்களுக்கும், என் வாழ்வின் நினைவலைகளுக்குச் சங்கிலிப் போடாத குடும்பத் தலைவருக்கும், என் வளர்ச்சிக்கு எப்போதும் தடை விதிக்காது மறைந்த என் மாமனார், மாமியார் அவர்களுக்கும், என் பணிக்குத் தங்கள் வாழ்வில் சிறு சிறு தியாகங்கள் செய்த என் குழந்தைகளுக்கும், மற்றும் என் வாழ்வின் மிகப்பெரிய திருப்புமுனையாக, நட்பென்ற பெயரில் என்னுடன் இணைந்து, தன்னுடன் இணைந்ததால் மீண்டும் பலம் பெறச் செய்து, புனிதமான உறவுமுறைத் தொடர தோழிகளாக வந்த பலருக்கும் இப்புத்தகத்தை மனமுவந்து காணிக்கை ஆக்குகிறேன். இதில் குறைகள் இருப்பின் அவை என்னைச் சேரட்டும். நிறைகள் இருந்தால் அது மேற்கூறிய அனைவரையும் சார்ந்தது.

இந்தப் புத்தகம் கீழ்கண்டவர்களுக்கு :

  1. குடும்பத் தலைவர்கள்
  2. பெண்கள்
  3. இளைஞர்கள்
  4. தொழிலதிபர்கள்
  5. வறுமையை எதிர்கொண்டு போராடும் கீழ், மத்தியதரக் குடும்பத்தினர்
  6. மத்தளமாக இருக்கும் நடுத்தரக் குடும்பத்தினர்
  7. மேல்தட்டு வர்க்கத்தினர்
  8. தொழில்முனைவோர்.

0

என் கையில் பணம் இல்லை, என்னால் பணம் ஈட்ட முடியவில்லை, என் தேவைகளுக்குப் பணம் போதவில்லை என்றுதான் நம்மில் பலரும் நம்மைப் பற்றி சுயமதிப்பீடு செய்கின்றோம். உண்மை என்னவெனில் காற்று எங்கும் வியாபித்திருப்பது போல், நீர் எங்கும் பரவிக்கிடப்பது போல், செல்வமும் உலகில் ஏராளம் கொட்டிக்கிடக்கிறது. தாகத்தால் தவிப்பவன் நீரைத் தேடி அலைந்து, திரிந்து அதைக் குடித்து உயிர் வாழ நினைப்பது போல், செல்வத்தையும் மிகவும் கஷ்டப்பட்டுத்தான் அடைய முடியும்.

தான் ஈட்டும் பணத்தால் எந்தவித மனச்சாட்சி உறுத்தலும் இன்றி யார் வாழ்கிறார்களோ அவர்களே செல்வத்தால் பயன் பெறுகின்றார்கள். அநியாயத்துக்குத் துணை நின்று அளவில்லாத செல்வத்தைச் சிலர் பெற்றிருக்கலாம். அவர்கள் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்கிறார்கள் என்று நம்மில் பலரும் நினைப்பது இயல்பு. உண்மையில் அந்தப் பணம் அவர்களுடைய  பொருளாதார நிலையை மட்டுமே உயர்த்தியிருக்கிறது. சமூகத்தின் மதிப்பை அவர்கள் பெறுவதில்லை. ஊரைக் கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகள், கள்ளக் கடத்தல், போதைப்பொருள் கடத்துதல், சாராய வியாபாரிகள் இன்னும் பிற சீர்கேடான செயல்களில் ஈடுபட்டு, கோடிக் கணக்கில் பணம் குவிக்கும் பலரும், மன உளைச்சலோடு மட்டுமே தங்கள் வாழ்வை நடத்துகிறார்கள்.

நேர்மையான வழியில் செல்வத்தை ஈட்ட நினைப்பவர்கள் கீழ்வருமாறு சொல்லிக்கொள்ளுங்கள்.

அளவில்லாத செல்வம் என்னைச் சுற்றி இருக்கிறது. அது என்னைத் தேடி வரும் முன்பு, நான் என்னை அதனுடன் இணைத்துக் கொள்வேன்.

கேட்பதற்கு வினோதமாக இருந்தாலும், உளவியல் ரீதியாக இந்த வாக்கியம் ஏற்படுத்தும் தாக்கம் முக்கியமானது.

கண்ணாடி அறைக்குள் இருக்கும் ஆடைகளை நம் மேல் பொருத்திப் பார்ப்பது போல், ஒரு கடைக்குள் இருக்கும் இனிப்புப் பலகாரத்தை நம் நினைவில் சுவைத்துப் பார்ப்பது போல், தெருவில் செல்லும் ஒரு அழகான வாகனத்தை ஆள நினைப்பது போல், செல்வத்துடன் நம்மை இணைத்துக் கொண்டு, செயல்படவேண்டும்.

வீட்டில் அரிசி இல்லை, பணம் இல்லை என்பதை அந்தக் காலத்தில் வெளிப்படையாகச் சொல்லமாட்டார்கள். ‘வீட்டில் அரிசி நிறைந்து கிடக்கிறது, நாளைக்கு அரிசி வாங்க வேண்டும்’ என்பார்கள். இல்லாமை என்ற நிலையை அகற்ற வேண்டும் என்று உள்ளுக்குள் முதலில் சொல்லிக்கொள்ளவேண்டும்.

Think Positive always and talk Positive about the aspects of life என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். நம்மில் பெரும்பாலோர் இதைச் செயல்படுத்துவதே இல்லை. நம்மிடம் என்ன இல்லை என்பதைத்தான் மிக அதிக அளவில் கணக்கெடுக்கிறோம். என்னிடம் உள்ளவை இவை என்று மிகக் குறைவானவற்றையே பட்டியலிடுகின்றோம். விளைவு? பெருமூச்சு, சுய பச்சாத்தாபம், தாழ்வு மனப்பான்மை, மன உளைச்சல், தூக்கமின்மை.

இப்படிச் சொல்லிப் பாருங்கள். உலகத்தில் வியாபித்திருக்கும் காற்றை நான் இயல்பாக எடுத்து சுவாசித்து வெளிவிடுவது போல், உலகத்திலுள்ள நீரை எனக்கு வேண்டிய அளவு எடுத்து உயிர் வாழ்வது போல், என்னைச் சுற்றியிருக்கும் செல்வத்தில் இருந்து எனக்குரிய பங்கை நான் அடைந்தே தீருவேன்.

இது ஓர் உறுதிமொழியாக உங்கள் நினைவலைகளில் தொடர்ந்து ஒலிக்க வேண்டும். இதுதான் செல்வத்தை நோக்கி நாம் நடத்தும் பயணத்தின் முதல் படி.

(தொடரும்)