ஆசிரியர் கி.வீரமணியுடன் ஒரு சந்திப்பு

திராவிட இயக்க நூற்றாண்டு கொண்டாடப்பட்டுவரும் சூழ்நிலையில் மூன்று முக்கிய மனிதர்களைச் சந்தித்துப் பேசும் வாய்ப்புகள் கிடைத்தன. மூவருமே திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்; சிந்தனையாளர்கள். தலைவர்கள். முதலில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணியுடனான சந்திப்பு பற்றி. பிறகு மற்ற இருவரையும் பற்றி.

நூற்றாண்டுக் கொண்டாட்டங்கள் தொடங்கியதில் இருந்தே ஆசிரியர் வீரமணியைச் சந்தித்துப் பேசவேண்டும் என்று விரும்பினேன். விடுமுறை தினங்களில் பெரியார் திடல் நூலகத்துக்குச் செல்வேன். குறிப்புகள் எடுப்பேன். ஆசிரியர் இருக்கிறாரா என்று விசாரிப்பேன். இல்லை அல்லது சந்திப்பில் இருக்கிறார் என்று சொல்வார்கள். திரும்பிவிடுவேன். தற்போது சந்தித்தே தீருவது என்று முடிவெடுத்தேன். காரணம், கிழக்கு பதிப்பகத்தின் புதிய அறிமுகமான ஆழம் மாத இதழ். புதிய இதழை ஆசிரியரிடம் நேரில் கொடுத்துவிட்டு, அவருடைய கருத்துகளைக் கேட்டுவரலாம் என்று நினைத்தேன்.

கல்கி பத்திரிகையில் இருந்தபோது ஆசிரியர் வீரமணியை ஓரிரு முறை சந்தித்திருக்கிறேன். விரிவான பேட்டி ஒன்றையும் கல்கியில் வெளியிட்டிருக்கிறேன். இடையில் சிலபல ஆண்டுகள் கடந்துவிட்டதால் ஆசிரியர் என்னை மறந்திருக்கக்கூடும். ஆகவே, முகநூல் நண்பர் திராவிடப் புரட்சியிடம் அதுபற்றிப் பேசினேன். அவரே பெரியார் திடலுக்கு என்னை அழைத்துச் சென்றார். அன்றைய தினம் எம்.என். ராயின் 125வது பிறந்த நாள் விழா பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் ஆசிரியர் கி. வீரமணி கலந்துகொண்டு பேசுவதாக இருந்தது.

விழா தொடங்குவதற்கு முன்னால் ஆசிரியரை சந்தித்துப் பேசினேன். நான் எழுதிய திராவிட இயக்க வரலாறு புத்தகத்தின் இரண்டு பாகங்களையும் (ஒன்று | இரண்டு ) அவருக்கு அன்பளிப்பாகக் கொடுத்தேன். மகிழ்ச்சியுடன் வாங்கிக்கொண்டார். திராவிட இயக்கம் தொடர்பான குறிப்புகளுக்காக நூலகத்தில் இருந்து புத்தகங்கள் வந்தபோது என்னுடைய புத்தகத்தின் பிரதி ஒன்று தன்னுடைய கவனத்துக்கு வந்ததாகச் சொன்னார். விரைவில் படிக்கவேண்டும் என்றார். புத்தக உருவாக்கத்தில் பெரியார் திடல் நூலகத்தின் பங்களிப்பு மற்றும் நூலகர் செய்த உதவிகளுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்தேன்.

அடுத்து, ஆழம் இதழை அவரிடம் கொடுத்தேன். முகப்புக் கட்டுரையின் தலைப்பு, “ஸ்டாலின் தலைவராகலாமா?’ சமூக, அரசியல் இதழாகக் கொண்டுவருகிறோம், மாத இதழ் என்றேன். சில பக்கங்களைப் புரட்டிப் பார்த்தார். விழா முடிந்ததும் படிக்கிறேன் என்றார். பிறகு, கிழக்கு பதிப்பகம் பற்றி விசாரித்தார். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பத்ரி எழுதிய கட்டுரைகளைப் படித்தேன் என்றார். தான் எழுதிய கட்டுரை ஒன்றில் பத்ரியின் கருத்தை மேற்கோள் காட்டியதையும் சொன்னார்.

உடையும் இந்தியா பற்றிப் பேச்செடுத்தேன். அந்தப் புத்தகத்துக்கான மறுப்புரை புத்தகமாக வெளியாகி, வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுக்கொண்டிருக்கும் தகவலைப் பகிர்ந்துகொண்டார். ஆசிரியரின் மறுப்புரை மூலம் உடையும் இந்தியா புத்தகத்துக்குக் கிடைத்த விற்பனை வெளிச்சம் பற்றி எடுத்துச் சொன்னேன். சிரித்துக்கொண்டார். என்னுடைய திராவிட இயக்க வரலாறு புத்தகத்துக்கும் நீங்கள் மதிப்புரை எழுதினால் நன்றாக இருக்கும் என்றேன். அடேயப்பா, உடையும் இந்தியாவுக்குக் கொடுத்த ‘மதிப்பு’ரைக்குப் பிறகும் உங்கள் புத்தகத்துக்கு மதிப்புரை கேட்கிறீர்களே என்றார் சிரித்தபடியே.

நாங்கள் சந்தித்தது, இலங்கைக்கு எதிரான ஐ.நா மனித உரிமை ஆணையத் தீர்மானம் தொடர்பான விவாதங்கள் நடந்துகொண்டிருந்த சமயம். ஆகவே, எங்கள் பேச்சில் அதுவும் கலந்தது. ஐ.நா தீர்மானமே ஈழப்பிரச்னைக்கான இறுதித் தீர்வு என்று சொல்லிவிடமுடியாது; தீர்வை நோக்கி நகர்வதற்கான நல்ல தொடக்கம் என்றார். விழாவுக்கான நேரம் நெருங்கிவிட்டதால், பேசிக்கொண்டே விழா அரங்கு நோக்கி நடக்கத் தொடங்கினோம்.

செல்லும் வழியில் என்னைப் பற்றி, என்னுடைய சொந்த ஊர், படிப்பு பற்றியெல்லாம் கேட்டுக்கொண்டே வந்தார். மயிலாடுதுறைக்காரன் என்று சொன்னதும் அவர் முகத்தில் மகிழ்ச்சி. அடடா, நம்ம மாயவரமா? என்றார். பிறகு ஆழம் இதழுக்காக சிறப்புப் பேட்டி ஒன்று வேண்டும் என்றேன். நிச்சயம் சந்திக்கலாம் என்றார். சுமார் இருபது நிமிட உரையாடலுக்குப் பிறகு விடைபெற்றுத் திரும்பினேன். ஆழம் இதழுக்காக மீண்டும் சந்திக்கவேண்டும்.

0

ஆர். முத்துக்குமார்

கி. வீரமணியும் கிழக்கு பதிப்பகமும் – 2

உடையும் இந்தியாவா? உடையும் ஆரியமா? கருத்தரங்கின் முதல் அமர்வு ஒலிவடிவம் இங்கே.

தலைமை தாங்கி உரையாற்றியவர் பேராசிரியர் அ. கருணானந்தன். திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் செயலாளர். அவரது உரையில் இருந்து சில பகுதிகள்.

  • நூலாசிரியர்களுக்கு தமிழ்நாடு மற்றும் இந்திய வரலாறு மட்டுமல்ல உலக வரலாறும்கூட தெரியவில்லை என்பது தெளிவாகிறது. கிறிஸ்தவத்தைப் பற்றி அவர்கள் குறிப்பிடும் செய்தியே இதற்கு அத்தாட்சி. ஐரோப்பாவின் வரலாறும் அமெரிக்காவின் வரலாறும் கிறிஸ்தவத்தின் வரலாறே என்று புத்தகம் ஓரிடத்தில் கூறுகிறது. அதுவா உண்மையா? எப்போது மதத்தின் ஆளுமையில் இருந்து தங்களைத் துண்டித்துக்கொண்டனவோ அப்போதிருந்துதான் அந்நாடுகள் வளர்ச்சிபெற ஆரம்பித்தன. Age of Reason என்று சொல்வார்கள். Renaissance, Reformation என்று சொல்வார்கள். அறிவியல் வளர்ச்சிகளும் தொழில்நுட்ப வளர்ச்சிகளும் சிந்தனை வளர்ச்சியும் பகுத்தறிவும் இந்நாடுகளில் செழிப்படைந்ததற்குக் காரணம் மதத்தை அவர்கள் துறந்ததுதான். எந்தவொரு நவீன ஐரோப்பிய நாட்டின் வரலாற்று நூலையும் எடுத்து நீங்கள் பார்க்கலாம். அவை, ஆதாம், ஏவாள் காலகட்டத்தில் இருந்து தொடங்குவதில்லை. கற்காலம், நவீன கற்காலம் என்றுதான் அவை தொடங்குகின்றன. ஆனால், இந்தியாவில் நிலைமை என்ன? இங்கே மதத்தை நாம் கைவிட்டுள்ளோமா? வரலாற்றில் இருந்து மதத்தைத் தனித்து வைத்துள்ளோமா?
  • உடையும் இந்தியா? நிச்சயம் ஓர் ஆராய்ச்சி நூல் அல்ல. மட்டுமின்றி, இது ஒரு வரலாற்று நூலும் அல்ல. ஆரிய திராவிடப் புரட்டு என்று பெயரளவில் சொல்லிவிட்டு, ஆரியர்களுக்குச் சாதகமான அம்சங்களை மட்டும் பட்டியலிட்டுக் காட்டியிருக்கிறார்கள்.
  • பிரிவினை, பிரிவினை என்று புத்தகம் நெடுகிலும் ஆசிரியர்கள் புலம்புகிறார்கள். இந்திய ஒருமைப்பாட்டின்மீது தங்களுக்கு மட்டும்தான் அக்கறை என்பதாகக் காட்டிக்கொள்ள முயல்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல என்பதை நாமறிவோம்.
  • திராவிட இயக்கத்தினர் பிரிவினைவாதிகளாம். பிரிவினை என்பதை ஏன் ஒரு மோசமான அணுகுமுறையாகப் பார்க்கவேண்டும் என்று கேட்கிறேன். உலக வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப் பாருங்கள். எங்கெல்லாம் பிரிவினைக்கான கோரிக்கைகள் எழுந்துள்ளன? எங்கெல்லாம் பிரிவினைகள் நடைபெற்றுள்ளன? எங்கெல்லாம் மக்கள் போராடியிருக்கிறார்கள்? எங்கே தெரியுமா? எங்கெல்லாம் (ஒரு பிரிவினருக்குச்) சுதந்தரம் மறுக்கப்படுகிறதோ, எங்கெல்லாம் சமநீதி புறக்கணிக்கப்படுகிறதோ, எங்கெல்லாம் சமத்துவம் கிடைப்பதில்லையோ அங்கெல்லாம் பிரிவினைவாதம் தோன்றியிருக்கிறது. அங்கெல்லாம் சுதந்தர வேட்கையுடன் பாதிக்கப்பட்ட மக்கள் போராடியிருக்கிறார்கள். சுதந்தரம் பெற்றிருக்கிறார்கள்.
  • அந்த வகையில், எல்லாப் பிரிவினைப் போராட்டங்களையும் இந்தப் புத்தகம் மலினப்படுத்தியுள்ளது என்றுதான் சொல்லவேண்டும். சரி, ஒரு வாதப்படியே பிரிவினை தீங்கானது என்றே வைத்துக்கொள்வோம். பிரிந்து போகும் உரிமையை எழுப்புபவர்கள், அதற்காகப் போராடுபவர்கள் தீயசக்திகள் என்றே எடுத்துக்கொள்வோம். பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தில் இருந்து பிரிந்து தனி நாடாக வேண்டும் என்னும் கோரிக்கையை எழுப்பிப் போராடியவர்கள் அத்தனை பேரும் தீங்கானவர்களா? இந்தியா சுதந்தரம் அடைய போராடியவர்கள் அனைவரும் பிரிவினைவாதிகளா?
  • சாதிய ஏற்றத்தாழ்வுகளும் பாகுபாடுகளும் அநீதிகளும்தான் இந்தியாவின் ஒருங்கிணைப்பைக் கட்டிக் காக்கின்றன என்றால், அப்படிப்பட்ட ஒருங்கிணைப்பு தேவையில்லை. அப்படியொரு நாடு தேவையில்லை. அது உடைவதே சரியானதாகும்.
  • இந்தப் புத்தகத்தின் யோக்கியதையைச் சுட்டிக்காட்ட ஒரே ஒரு விஷயத்தை மட்டும் குறிப்பிடுகிறேன். தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது பற்றி இதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை கவனிக்கவேண்டும். தேவதாசி பெண்கள் தங்கள் தொழில் பாதிக்கப்பட்டது பற்றி கண்ணீருடனும் கவலையுடனும் தங்கள் எதிர்காலம் குறித்த நிச்சயமின்மையைப் பதிவு செய்திருக்கிறார்களாம். இது ஓர் அநீதி என்றும் சமகாலச் சரித்திரத்தில் இப்படியொரு அநீதியை வேறு யாரும் சந்தித்ததில்லை என்றும் உடையும் இந்தியா ஆசிரியர்கள் அக்கறையுடன் கவலைப்படுகிறார்கள். தேவதாசி ஒழிப்புக்கு நீண்ட நெடியப் போராட்டம் நடைபெற்றதை நாமறிவோம். எவ்வளவு அரும்பாடுபடு அந்த முறை ஒழிக்கப்பட்டது என்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது. ஆனால், அது ஒழிககப்பட்டிருக்கக்கூடாது என்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள். அவர்களுடைய ‘தொழில் வளர்ச்சிக்கு’ நாம் உதவியிருக்கவேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் போலும். இந்தப் புத்தகத்தை நிராகரிக்க இந்த ஒரு உதாரணம் போதாதா?
கி. வீரமணியின் உரையில் இருந்து சில பகுதிகள்.
  • நேற்று திடலில் நடைபெற்ற உரையாடல் குறித்து வெளிவந்திருக்கும் சில செய்திகளை முதலில் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இதோ இன்று காலைதான் என்னிடம் இவை ஒப்படைக்கப்பட்டன. இணையத்தளத்தில் வெளியான செய்திகள் இவை. (கணிணியில் இருந்து அச்சிடப்பட்ட தாள்களை அவர் உயர்த்திக் காட்டுகிறார்). நாங்களும் இணையத்தைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறோம், உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டும் இருக்கிறோம்.
  • முதலில் தமிழ்பேப்பர் டாட் நெட். நேற்றைய நம் சொற்பொழிவை இவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். சரியாகவே எழுதியிருக்கிறார்கள்.
  • அடுத்து தமிழ் ஹிந்து டாட் காம். ஆம் நண்பர்களே இதுதான் அந்தத் தளத்தின் பெயர். இதென்ன பெயர் என்று எனக்குப் புரியவில்லை. இந்து என்றால் காஷ்மிர் முதல் குமரி வரை உள்ளவர்கள் அனைவரும் இந்துக்கள்தானே? பிறகு என்ன தமிழ் ஹிந்து? அவர்கள் தனிப் பிரிவா? இது பிரிவினைவாதம் இல்லையா? இது உடைக்கும் முயற்சி இல்லையா? சரி போகட்டும் என்று பார்த்தால் கீழே இன்னொரு வாசகத்தை எழுதி வைத்திருக்கிறார்கள். ‘தமிழரின் தாய்மதம். ‘ இதென்ன புது குழப்பம்? என்ன சொல்லவருகிறார்கள் இவர்கள்?
  • ‘உடையும் இந்தியா? குறித்து வீரமணியின் வசையரங்கு’ இதுதான் கட்டுரையின் தலைப்பு. கவனியுங்கள். இங்கே பேராசிரியர்கள், படித்தவர்கள் அனைவரும் இருக்கிறீர்கள். நேற்று இங்கே நடைபெற்றது வசையரங்கமா? இங்கே நாம் அவர்களை வசையா பாடினோம்? புத்தகத்தை விமரிசித்தால் அது வசவா? என்ன செய்வது? அது இவர்களுக்கு வசையாகத் தெரிகிறது. சிலருக்கு இசையாகத் தெரிகிறது.
  • இதோ அவர்களுடைய முதல் விமரிசனம். அவர்களுடைய கட்டுரையில் இருந்தே படிக்கிறேன். “முதலில் முனைவர் மங்கள முருகேசன் ஆரம்பித்தார். முதல் கோணல் முற்றும் கோணல் என்பதாக திருஞானசம்பந்தர் ‘ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்’ என்று சொன்னதாக சொல்லி திராவிட இனத்தின் தொன்மையை நிறுவினார். முனைவருக்கு அந்த வார்த்தைகளை கூறியவர் திருஞானசம்பந்தர் அல்ல, அப்பர் என யாராவது சொன்னால் நல்லது. ” இதை ஒரு பெரிய தவறாக அவர்கள் சுட்டிக்காட்டியிருப்பதைப் பார்க்கும்போதே தெரிகிறது. நம்மைக் குறைகூற இதைவிடப் பெரிய தவறு எதுவும் அவர்கள் கண்ணில் தென்படவில்லை. இந்தக் குற்றச்சாட்டுக்கு என் பதில் இதுதான். ஆம், அது தவறு. அவ்வாறு சொன்னவர் திருஞானசம்பந்தர் அல்ல, அப்பர்தான் என்று எனக்குத் தெரியும். பேராசிரியர் பேசிக்கொண்டிருக்கும்போது இடைமறித்து திருத்துவது சபை நாகரிகமாக இருக்காது என்று கருதிதான் பேசாமல் இருந்தேன். சரி, அது அப்பர்தான். உங்கள் பதில் என்ன ஐயா? திருஞானசம்பந்ததோ, அப்பரோ, ஏதோ ஒரு குறவர் சொன்னார். யார் சொன்னார் என்பதில்தான் தவறு ஏற்பட்டிருககிறது? என்ன சொன்னார் என்பதில் இல்லையே! அதற்கு பதில் சொல்லவேண்டியதுதானே?
  • என்மீது சுமத்தப்பட்டுள்ள இன்னொரு குற்றச்சாட்டை வாசிக்கிறேன் கேளுங்கள். “உண்மையில் அவர் (கி. வீரமணி) கூறிய மனுஸ்மிருதி பகுதிகள் ‘உடையும் இந்தியா’ கூறும் வாதங்களுக்கே வலு சேர்ப்பதாக அமைந்தன. ‘உடையும் இந்தியா?’ நூல் என்ன சொல்கிறது? பிராம்மணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்பவை சமூக வெளிகள். சாதிகள் என்பவை ஒவ்வொரு வர்ணம் எனும் சமூக வெளியின் உள்ளேயும் வெளியேயும் சென்று வருவதாக உள்ளன. அந்த இயக்கம் சமூக-பொருளாதார மற்றும் அரசியலதிகார காரணிகளால் நிர்ணயிக்கப் படுகின்றனவே அன்றி இனத்தால் அல்ல.” இந்த வாக்கியத்தின் பொருளைப் புரிந்துகொள்வது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்று பேராசிரியர்கள் இங்கே சொன்னார்கள். நான் கீதையையேப் புரிந்துகொண்டவன் என்பதால் இதைப் புரிந்துகொள்வது சிரமமாக இல்லை. இப்படியெல்லாம் குழப்படியாக எதையாவது எழுதிவைத்து அவர்களும் குழம்பி, நம்மையும் குழப்புவதுதான் அவர்கள் வேலை. அதாவது மேல் சாதி, கீழ் சாதி என்பதெல்லாம் சமூக வெளியின் (அப்படியென்றால் என்னவென்றே எனக்குப் புரியவில்லை – பலத்த கைத்தட்டல்!)  உள்ளேயும் வெளியேயும் சென்று வந்துகொண்டிருக்கிறதாம். இனம் அல்ல, பொருளதார, அரசியல் காரணிகளே வர்ணத்தை நிர்ணயிக்கிறதாம். ஆனால் இதுவா உண்மை? பெரியார் அன்றே தெளிவாகச் சொல்லிவிட்டார். ஒரு பணக்காரன் நாளை ஏழையாகலாம். ஒரு ஏழை நாளை பணக்காரன் ஆகலாம். ஆனால், கீழ்ச்சாதிக்காரன் என்றைக்கும் மேல் சாதிக்காரன் ஆகமுடியாது. ஆக இங்கே ஒருவரது பொருளாதாரத்தையும்கூட சாதியேதான் தீர்மானிக்கிறது என்பது புலனாகிறது. வர்ணம்தான் அனைத்துக்கும் அடிப்படை. ஒரு கீழ்ச்சாதிக்காரன் அவனே சொந்தமாகச் சேர்த்துவைத்த சொத்துக்களையும்கூட ஒரு பார்ப்பனன் கைப்பற்றிக்கொள்ளலாம் என்கிறது மனு ஸ்மிருதி. இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?
  • பெரியார் சொன்னதாகச் சில விஷயங்களை அவர்கள் புத்தகத்தில் போட்டிருக்கிறார்கள். அதாவது ஈ.வே. ராமசாமி என்று போட்டு பிரேக்கட்டில் ஈவேரா என்று எழுதுகிறார்கள்.  பெரியார் என்று சொல்ல மாட்டார்களாம். சொன்னால் அவர் பெரியவர் ஆகிவிடுவாராம். இவர்கள் சொல்லி அவர் பெரியார் ஆவது போல! மேலும் இது ஓர் ஆய்வு நூல் அல்லவா? அவ்வாறான உணர்ச்சி மேலீடுகள் இருக்கக்கூடாது அல்லவா? (கைத்தட்டல்!) அதாவது பெரியார் யூதர்களை வெறுத்து எழுதியிருக்கிறாராம். யூதர்கள் கொன்றொழிக்கப்பட்டது சரிதான் என்னும் தொனியில். உண்மை இதுதான். பெரியார் யூதர்களை விமரிசித்தது உண்மை. தாம் மட்டுமே உயர்ந்தவர்கள், பிறர் தாழ்ந்தவர்கள் என்னும் பிரிவினையைப் பாராட்டியதற்காக பெரியார் அவர்களைக் கண்டித்தார். இதில் தவறு என்ன இருக்கிறது? நாங்கள் எந்த மதத்தையும் ஏற்றுக்கொண்டவர்கள் கிடையாதே!  மேலும், இந்தப் பார்ப்பனர்கள் யூதர்களையே விஞ்சிவிட்டவர்கள் அல்லவா? அவர்களாவது பிற மத நம்பிக்கையாளர்களை வெறுத்தார்கள். இவர்கள் சொந்த மதத்தினரையை அல்லவா வெறுத்தும் ஒதுக்கியும் வைத்திருக்கிறார்கள்?
  • பெரியார் வன்முறையைத் தூண்டினார் என்கிறது இன்னொரு குறிப்பு. அது உண்மையா? காந்தி யாரால் கொல்லப்பட்டார்? பெரியார் கூட சொல்வார். ’125 வயது வரை வாழ்வேன் என்று காந்தி சொல்லியிருந்தார். அந்த எமன் கூட காந்தியை விட்டு வைத்துவிட்டான்;  பார்ப்பான் கென்றுவிட்டானே!’ பெரியார் பிள்ளையாரை உடைத்தார் என்றுதான் நாம் அறிந்திருக்கிறோம். சொந்தமாகப் பிள்ளையார் சிலைகள் வாங்கி, அவற்றை மட்டும்தான் பெரியார் உடைத்தார் என்பது தெரியுமா? பொதுச சொத்துக்கு ஆபத்து விளைவிப்பதில் நம்பிக்கையற்றவர் பெரியார் என்பதை நீங்கள் அறிவீர்களா? காந்தியைக் காட்டிலும் பெரியார் சிறந்த அகிம்சைவாதி என்பதை விளக்க உங்களுக்கு எத்தனை ஆதாரங்கள் வேண்டும், சொல்லுங்கள் நான் தருகிறேன்.
  • பெரியாரால் ஒரு வன்முறை நிகழ்ந்தது, உயிர்கள் பலியாயின என்று எந்தவொரு ஆதாரத்தையாவது உங்களால் காண்பிக்கமுடியுமா? ஆனால், பார்ப்பனர்களால்தான் இன்றைய இந்தியா அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறது என்பதை என்னால் சான்றாதாரங்களுடன் நிரூபிக்கமுடியும். கோட்ஸே. கோத்ரா. மாலேகான். பாபர் மசூதி இடிப்பு. சொல்லிக்கொண்டே போகலாம்.
  • பெரியார் அந்நியச் சக்திகளிடம் பணம் பெற்று தன் இயக்கத்தைக் கட்டினார் என்று உங்களால் நிரூபிக்கமுடியுமா? என்னால் முடியும். பார்ப்பன இயக்கங்கள் அந்நியச் சக்திகளிடம் நிதியுதவி பெற்றதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அது குறித்து கல்கி எழுதிய தலையங்கம் இதோ. (முழுமையாக வாசித்து காட்டினார். 2002ல் வெளிவந்த அந்தத் தலையங்கத்தைத் தேடிப்பிடித்து இங்கே பிரசுரிக்க முயற்சி செய்கிறேன்).
  • சுட்டிக்காட்டுவதற்கு பற்பல ஆதாரங்கள் கைவசம் உள்ளன. அனைத்தையும் இந்த மேடையில் பகிர்நதுகொள்ள நேரம் போதாது. எனவே ஒரு நூல் வடிவில் — வேண்டாம், நூல் என்று நாம் குறிப்பிடவேண்டாம், நூலால்தானே இத்தனைப் பிரச்னை, அவர்கள் நூலை வைத்துக்கொள்ளட்டும், நாம் புத்தகம் என்றே அழைபபோம் (அரங்கம் அதிர்கிறது!) –  நம் கருத்துகளைத் தொகுத்து கொண்டுவரப்போகிறோம். விரைவில் எதிர்பார்க்கலாம்.
இரண்டாவது அமர்வின் ஒலிவடிவம் நாளை இங்கே கிடைக்கும்.
நேற்று விடுதலையில், இந்தச் சொற்பொழிவு பற்றி தலைப்புச் செய்தி வெளிவந்துள்ளது. இரு நாள் அமர்வின் உரைகள் முழுவதும் வெளியிடப்படும் என்னும் அறிவிப்பும் வெளிவந்துள்ளது. அதற்கான சுட்டிகளையும் பின்னர் இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.
0
பட்டாம்பூச்சி