நான் மோடியை ஆதரிக்கிறேன் (கண்டிஷன்ஸ் அப்ளை)

Narendra-Modiசெவ்வாய்க்கிரகத்தில் இருந்து இறங்கி வரும் ஒருவர் ஏதாவது ஒரு அரசியல்வாதியின் பேச்சைக் கேட்டாலோ ஊடகங்களில் வரும் செய்திகளைப் படித்தாலோ அறிவுஜீவிகளின் உரைகளைக் கேட்டாலோ மதக்கலவரங்கள் பற்றி ஒரே ஒரு முடிவுக்குத்தான் வருவார். அதாவது சுதந்தர இந்தியாவில் குஜராத்தில் மட்டுமே மதக்கலவரம் வெடித்துள்ளது. அதிலும் நரேந்திர மோடியே அந்தக் கலவரத்துக்கு முழுக்காரணம்!

இதுதான் எங்கு திரும்பினாலும் கேட்கும் கோஷமாக இருக்கிறது. ஆனால், பகுத்தறிந்து பார்க்கும் ஒருவரின் மனசாட்சியோ, உண்மை அது அல்ல என்பதைச் சொல்லும். மத்தியில் இனி கூட்டணி அரசே சாத்தியம் என்று ஆகிவிட்ட நிலையில் பிஜேபி ஆட்சியைப் பிடிக்கப் பெரும் தடையாக இன்றும் இருந்துவருவது மோடிபற்றி ஊடகங்களும் அறிவுஜீவிவர்க்கமும் உருவாக்கியிருக்கும் அந்தப் பிழையான கோஷமே.

இப்போது 2014 நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. பிஜேபி தரப்பில் மோடியே பிரதமராக நிறுத்தப்படப்போகிறார். மோடியின் சாதனைகள் பற்றி எவ்வளவுதான் பிஜேபி முன்வைத்தாலும் குஜராத் கலவரங்களே பிற கட்சிகளின் பிரதான ஆயுதமாக இருக்கப்போகிறது. இந்தநிலையில் சுதந்தர இந்தியாவில் இதுவரை நடந்திருக்கும் கலவரங்கள் குறித்து விரிவாகப் பார்ப்பது மிகவும் அவசியம்.

1967க்குப் பிறகு 47 இடங்களில் 58 மிகப் பெரிய வகுப்புவாத மோதல்கள் நடைபெற்றிருக்கின்றன. இந்தியாவின் தென் பகுதியில் 10, கிழக்குப் பகுதியில் 12, மேற்குப் பகுதியில் 16, வடக்கில் 20. 1964க்குப் பிறகு அகமதாபாத்தில் ஐந்து மிகப் பெரிய கவலரங்கள் வெடித்துள்ளன. ஹைதராபாத்தில் 4. கடந்த ஐம்பது ஆண்டுகளில் நடைபெற்ற கலவரங்களிலே 1990களில்தான் மிக அதிக வன்முறைச் சம்பவங்கள் அதாவது 23 கலவரங்கள் நடைபெற்றுள்ளன. 1970களில் ஏழு, 1980களில் 14, 2000 களில்13. இறந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 12,828 (தெற்கில் 597, மேற்கில் 3426, கிழக்கில் 3581, வடக்கில் 5224).

ஐந்து நபர்களுக்குக் குறைவாகக் கொல்லப்பட்ட சம்பவங்கள் கணக்கில் சேர்க்கப்படவில்லை. வகுப்புவாதம் சார்ந்த குண்டுவெடிப்புகளும் இதில் சேர்க்கப்படவில்லை.

100க்கு அதிகமாவர்கள் இறந்த வன்முறைச் சம்பவங்களில் எந்தெந்த கட்சி ஆட்சியில் இருந்ததிருக்கிறது. யார் முதலமைச்சராக இருந்திருக்கிறார் என்பதை முதலில் பார்ப்போம்.

1967க்குப் பிறகு நூற்றுக்கும் அதிகமான உயிரிழப்பு ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களும் அப்போது ஆட்சியில் இருந்த கட்சியும்.

எண் வருடம் இடம் உயிரிழப்பு ஆண்ட கட்சி முதலமைச்சர்
1 1967 ஹாதியா ராஞ்சி 183 ஜன கிராந்தி தளம் எம்.பி.சின்ஹா
2 1969 அகமதாபாத் 512 காங்கிரஸ் ஹிதேந்திர கே தேசாய்
3 1970 ஜல் காவ் 100 காங்கிரஸ் வசந்தராவ் நாயக்
4 1979 ஜம்ஷேட்பூர் 120 ஜனதா கட்சி கர்பூரி தாகூர்
5 1980 மொராதாபாத் 1500 காங்கிரஸ் வி.பி.சிங்.
6 1983 நெலே, அஸ்ஸாம் 1819 ஜனாதிபதி ஆட்சி  
7 1984 பிவந்தி 146 காங்கிரஸ் வசந்ததா பட்டில்
8 1984 டில்லி 2733 காங்கிரஸ் (யூனியன் பிரதேசம்) -
9 1985 அகமதாபாத் 300 காங்கிரஸ் எம்.எஸ்.சோலன்கி
10 1989 பகல்பூர் 1161 காங்கிரஸ் எஸ்.என்.சிங்
11 1990 டில்லி 100 யூனியன் பிரதேசம்  
12 1990 ஹைதராபாத் 365 காங்கிரஸ் சென்னா ரெட்டி
13 1990 அலிகர் 150 ஜனதாதளம் முலாயம் சிங்
14 1992 சூரத் 152 காங் + ஜனதா தளம் சிமன்பாய் படேல்
15 1992 கான்பூர் 254 ஜனாதிபதி ஆட்சி  
16 1992 போபால் 143 ஜனாதிபதி ஆட்சி  
17 1993 மும்பை 872 காங்கிரஸ் சுதாகர் ராவ் நாயக்
18 2002 குஜராத் 1267 பி.ஜே.பி. நரேந்திர மோடி

மேலே இடம்பெற்றிருக்கும் 18 கலவரங்களில் 10 காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது நடந்திருக்கின்றன. மூன்று ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்தபோதும் நான்கு பிற கட்சிகள் ஆட்சியில் இருந்தபோதும் நடந்திருக்கின்றன. பி.ஜே.பி. ஆட்சியில் இருந்தபோது ஒன்று.

இன்னொரு முக்கியமான புள்ளிவிவரம் நேரு குடும்பத்தின் ஆட்சி காலம் பற்றியது. 1950-1964-ல் நேரு இறப்பதுவரையிலான காலகட்டத்தில் சிறிதும் பெரிதுமாக 243 கலவரங்கள், 16 மாநிலங்களில் நடைபெற்றுள்ளன. இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் 15 மாநிலங்களில் 337 கலவரங்கள் நடைபெற்றுள்ளன.

ராஜீவ் காந்தியின் ஆட்சி காலத்தில் 16 மாநிலங்களில் 291 கலவரங்கள் நடைபெற்றுள்ளன. அதிலும் 1984-ல் தன் அம்மாவின் படுகொலைக்குப் பழிவாங்கும் நோக்கில் சீக்கியர்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட வன்முறைக்கு இணையாக இந்தியாவில் நடந்த எந்தவொரு வன்முறையையும் சொல்ல முடியாது. ஏனென்றால் அது இரு சமூகங்களுக்கு இடையில் நடந்த வன்முறை அல்ல. ஒரு கட்சியின் ரவுடிகள் ஒரு சமூகத்தின் அப்பாவிப் பொதுமக்கள் மீது நடத்திய கொலைவெறித் தாக்குதல் அது.

1950லிருந்து 1995 வரை 1194 வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அதில் 871 அதாவது 72.95 சதவிகிதம் காங்கிரஸின் காலத்தில் நடந்தவை.

இதுமட்டுமல்லாமல் 1990 முதல் 1995 வரை குஜராத்தில் மட்டும் 245 கலவரங்கள் நடைபெற்றுள்ளன. அதாவது நரேந்திர மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பே குஜராத்தின் மத மோதல் வரலாறு இது. மோடியின் ஆட்சி காலத்தில் 2002க்குப் பிறகான பத்து வருடங்களில் எந்த பெரிய மத மோதலும் நடந்திருக்கவும் இல்லை. இத்தனைக்கும் மோடி பெரும் வில்லனாகச் சித்திரிக்கப்படும் அந்த  வன்முறைச் சம்பவங்களில் கொல்லப்பட்டவர்களில் 30%த்தினர் இந்துக்கள்.

இவையெல்லாம் மோடி செய்தது சரிதான் என்று சொல்வதற்காகப் பட்டியலிடப்பட்டவை அல்ல. உண்மையில் மோடியும் பி.ஜே.பி.யினரும் எந்த அளவுக்கு விமர்சிக்கப்படுகிறார்களோ அதைவிட பல மடங்கு கூடுதலாக காங்கிரஸும் அதன் தலைவர்களும் விமர்சிக்கப்படவேண்டும். ஆனால், ஊடகங்களையும் அறிவுஜீவிகளையும் பொறுத்தவரை மோடி மட்டுமே இந்தியாவின் ஒரே வில்லன்.

இந்தியாவில் நடைபெற்ற கலவரங்களில் சுதந்தரத்துக்கு முந்தைய காலகட்டத்தை எடுத்துக்கொண்டு பார்த்தால் அப்போதும் இந்துக்களே அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். இத்தனைக்கும் காந்தியடிகள் இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக முயற்சிகள் எடுத்த நேரம் அது. 1920-1940கள் வரையிலான காலகட்டத்தில் நடந்த கலவரங்கள் பற்றி அம்பேத்கர் தனது தாட்ஸ் ஆன் பாகிஸ்தான் நூலில் சில புள்ளிவிவரங்கள் சொல்லியிருக்கிறார். இந்துக்களும் முஸ்லீம்களும் சேர்ந்து ஒரு தேசமாக வாழ முடியுமா என்று சந்தேகப்படும் அளவுக்கு அந்த 20 ஆண்டுகளில் கிட்டத்தட்ட உள்நாட்டுப் போர் என்னும் அளவுக்கு கலவரங்கள் வெடித்துக் கிளம்பியிருக்கின்றன.

இந்தியாவில் மதக் கலவரங்கள் ஏற்படுவது சகஜம்தான். இதில் அலட்டிக்கொள்ள என்ன இருக்கிறது என்ற கோணத்தில் இவற்றைச் சொல்லவில்லை. ஆனால், 2002க்கு முன்பாகவும் மத மோதல்கள் நடந்துள்ளன. அதன் பிறகும் நடந்துவருகின்றன என்பதை ஒருவர் கவனத்தில் கொள்ளத்தானேவேண்டும்.

மதக் கலவரங்கள் எதனால், எப்படியெல்லாம் நடக்கின்றன?

இரு சமூகங்களுக்கு இடையே இருக்கும் அதிருப்தியும் கோபமும் மெள்ள மெள்ள வெடி குண்டு ஒன்றில் கெட்டிப்படுத்தப்படும் வெடி மருந்துபோல் இறுகிக்கொண்டே வரும். அரசாங்கம் உரிய தீர்வுகளைத் தராமல் இருக்கும்போது ஏதாவது அரசியல் கட்சி சிறு தீப்பொறியைப் பற்ற வைத்தால் போதும் வன்முறை வெடித்துக் கிளம்பும். பொதுவாக இரண்டு பக்கத்து அடிப்படைவாத சக்திகள்தான் இந்த கலவரத்தில் ஈடுபடும். இரு தரப்பிலும் இருக்கும் பெரும்பான்மை மக்கள் அமைதியாகத்தான் இருப்பார்கள். ஆனால், அவர்கள்தான் பெரும் அழிவுக்கு ஆளாகவும் செய்வார்கள்.

சமூகத் தளத்தில் : தனிமைபடுத்தப்பட்டது போன்ற உணர்வு. பொதுவாக, மைய நீரோட்ட நிகழ்வுகள், கொண்டாட்டங்களில் இருந்து விலகி நிற்கும் சிறுபான்மையினரிடம் இந்த தனிமைப்படுத்தல் நிகழும்.

பொருளாதாரம் : கைவிடப்பட்டதுபோன்ற உணர்வு. மோசமான கல்வி, வேலையின்மை போன்றவை பின்தங்க வைக்கும். நுகர்வுகலாசாரத்தின் கண்ணைக் கவரும் ஆடம்பரங்கள் பெரும் இழப்பின் வலியை ஏற்படுத்தும்.

அரசியல் : வோட்டு வங்கியைக் குறிவைத்துச் செயல்படும் அரசியல்வாதிகள் தமது சமூகம் பெரும் இழப்பை சந்தித்துவருவதாக தூண்டிவிடுவார்கள்.

நிர்வாகம் : காவல்துறை, குடிமை அரசு யந்திரம் போன்றவற்றால் குறிவைத்துத் தாக்கப்படுவதாக உணர்தல். தமது சமூகத்துக்கு அநீதி இழைக்கப்படுவதாக கருதுதல்.

மதம் : ‘அபாயம்’ நிறைந்த பகுதியில் நடக்கும் சிறு ஊர்வலம், சத்தமாகச் செய்யப்படும் ஒரு பிரார்த்தனை, புனித இடங்கள் இழிவுபடுத்தப்படுதல் என சிறு நெருப்பு போதும்.

வர்த்தகம் : பாரம்பரியமாக ஒரு சமூகம் வெற்றிகரமாக இயங்கிவரும் துறையில் இன்னொரு சமூகம் நுழைவதால் ஏற்படும் போட்டி, பொறாமை.

ஆவேசப் பேச்சுகள் : எதிர் தரப்பைச் சீண்டும் வகையிலான பேச்சுகள், ஒரு பிரிவுக்கு மட்டும் அதிக சலுகைகள் தருவதாக தூண்டிவிடுதல்.

வகுப்பு மோதல்களைப் போன்றதுதான் வெடி குண்டு சம்பவங்களும். ஏதாவது ஒரு பிரிவின் அடிப்படைவாத சக்திகள் தமது ஆத்திரத்தை அப்பாவி மக்களைப் பொது இடங்களில் வெடிகுண்டு வைத்துக் கொல்வதன் மூலம் வெளிப்படுத்துவதுண்டு. இதில் குற்றம் இழைத்தவர்களை கலவரங்களில் ஈடுபடுபவர்களைப்போல் எளிதில் அடையாளம் காண முடியாது.  அவர்கள் வெளிநாடுகளில் இருந்து வந்து வன்கொடுமையை நிகழ்த்திவிட்டுத் தப்பித்துப் போகிறவர்களாகவும் இருக்கக்கூடும். இதனால் எங்கு வெடி குண்டு வெடித்தாலும் பகை தேசத்தின் மீது பழியைப் போடுவது வாடிக்கை. ஆனால், எந்தவொரு வெடி குண்டு வெடிப்பும் உள்ளூர் ஆதரவு இல்லாமல் நடக்க வாய்ப்பு மிகவும் குறைவுதான்.

1993 மும்பை வெடி குண்டு வெடிப்பில் இருந்து இந்தியாவில் வெடி குண்டு தாக்குதல்களின் அணிவரிசை ஆரம்பித்தன. 1993-ல் இருந்து 2013 மார்ச் மாதம் வரை நடந்த வெடிகுண்டு தாக்குதல்களில் 1446 இந்தியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 4333 பேர் காயமடைந்திருக்கிறார்கள். காஷ்மீரிலும் அஸாமிலும் நடந்துவரும் வெடிகுண்டு தாக்குதல்களை இதில் சேர்க்கவில்லை.

எங்கெங்கு வெடிகுண்டுகள் வெடித்துள்ளன. அப்போது எந்தக் கட்சி ஆட்சியில் இருந்திருக்கிறது?

எண்    வருடம்      இடம்                     உயிரிழப்பு      ஆண்ட கட்சி

1       1993          மும்பை                             257     காங்கிரஸ்

2       2003         மும்பை கேட்வே         52      காங்கிரஸ் – தேசியகாங்கிரஸ்

3       2006         மும்பை ரயில்             209    காங்கிரஸ் – தேசியகாங்கிரஸ்

4       2008         26/11                                   186     காங்கிரஸ் – தேசியகாங்கிரஸ்

5       2002         காந்தி நகர்                           25      பி.ஜே.பி.

6       2005         டெல்லி, பரன்ஜி               63      காங்கிரஸ்

7       2006         வாரணாசி                           28      சமாஜ்வாதி கட்சி

8       2006         மாலேகாவ்                          28      காங்கிரஸ் – தேசியகாங்கிரஸ்

9       2007         சம்ஜோதா எக்ஸ்பிரஸ்   66      காங்கிரஸ்

10      2007         பானிப்பட்                                66      காங்கிரஸ்

11      2007         ஹைதராபாத்                        42      காங்கிரஸ்

12      2008         ஜெய்பூர்                                     63      பி.ஜே.பி.

13      2008         அகமதாபாத்                           50      பி.ஜே.பி.

14      2008         குவஹாத்தி                            84      காங்கிரஸ்

மேலே கூறப்பட்டுள்ள 14 வெடி குண்டு தாக்குதல்களில் 10 காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது நடந்துள்ளன.

பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை நிபுணரான பி.ராமன் 2009-ல் குறிப்பிட்ட ஒரு விஷயத்தை இங்கு சொல்வது பொருத்தமாக இருக்கும். 1981க்குப் பிறகு நான்கு மிகப் பெரிய வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்துள்ளன. நான்கிலுமே ஆட்சியில் இருந்தது காங்கிரஸ்தான். 1991க்குப் பிறகு அயல் நாட்டினர் மூன்று முறை குறி வைத்துத் தாக்கப்பட்டுள்ளார்கள். இரண்டு ஜம்மு காஷ்மீரில். ஒன்று மும்பையில். மூன்று சம்பவங்களின்போதும் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ்தான்.  1971க்குப் பிறகு ஐ.எஸ்.ஐ. தூண்டுதலின்பேரில் ஏழு விமானக் கடத்தல்கள் நடைபெற்றுள்ளன. அதில் ஆறு காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது. ஒன்று பி.ஜே.பி. ஆட்சியில் இருந்தபோது. ஏர் இந்திய விமானம் ஒரு முறை வானில் வெடி வைத்து தகர்க்கப்பட்டு 250க்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். அப்போது ஆட்சியில் இருந்தது காங்கிரஸே.

வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட 1446 பேர்களில் 52% பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள். காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த முதல்வர்களோ தலைவர்களோ மும்பையை வெடி குண்டுதாக்குதல்களில் இருந்து காப்பாற்ற என்ன நடவடிக்கைகள் எடுத்திருக்கிறார்கள். இந்த தாக்குதல்களுக்கு அவர்களைக் குற்றம்சாட்டி யார் கேள்வி கேட்டிருக்கிறார்கள்?

வன்முறைக் கலவரங்களைத் தடுக்கத்தான் முடியவில்லை. அது நடந்த பிறகாவது நீதித்துறையும் காவல்துறையும் சரியாக நடந்துகொள்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. இந்த விஷயத்திலும் காங்கிரஸின் ஆட்சிக் காலமே பிஜேபியைவிட பல மடங்கு படு மோசமாக இருந்துவருகிறது.

இடதுசாரி மற்றும் ”நடுநிலை’ அறிவுஜீவிகள் இந்த விஷயங்களை ஒருபோதும் கவனத்தில் கொண்டதே கிடையாது. பி.ஜே.பி. குறிப்பாக நரேந்திர மோடி மட்டுமே அவர்களுடைய செல்ல இலக்காக இருந்துவருகிறார். இன்னும் தெளிவாகச் சொல்வதானால், இந்து அடிப்படைவாத சக்திகள் மட்டுமே எல்லா பிரச்னைகளுக்கும் காரணம் என்ற அணுகுமுறையே அவர்களிடம் இருக்கிறது. மோடியைப் பார்க்கும்போது பூதக்கண்ணாடியை அணிந்துகொள்பவர்கள், காங்கிரஸைப் பார்க்கும்போது கண்களையே கழட்டிவைத்துவிடுகிறார்கள்.

இந்த உலகில் எல்லா நாடுகளிலும் மதக் கலவரங்களும் வெடிகுண்டு விபத்துகளும் நடந்த வண்ணமே இருக்கின்றன. ஆனால், இந்தியாவுக்கும் பிற பகுதிகளுக்கும் இடையில் பெரியதொரு வேறுபாடு உண்டு. உலகின் பிற பகுதிகளில் எல்லாம் பெரும்பான்மை மதத்தைச் சார்ந்த அடிப்படைவாத சக்திகளே அதிக தாக்குதல்களை நிகழ்த்தியிருக்கும். இந்தியாவில் மட்டுமே சிறுபான்மை மதம் அதிக தாக்குதல்களை நிகழ்த்துவதாக இருக்கிறது. ஆனால், பெரும்பான்மை மதத்தின் அடிப்படைவாத சக்திகள் மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த பெரும்பான்மை மதமே எல்லாவற்றுக்கும் காரணம் என்று கட்டம் கட்டப்பட்டுவருகிறது. இது இரட்டை அநியாயம்.

மேலே சொல்லப்பட்டிருப்பவை நவீன கால உதாரணங்கள் மட்டுமே. சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டால் இந்த சித்திரத்தின் முழு பரிணாமம் புரியவரும். ஆனால், ஊடகங்களும் அறீவுஜீவி வர்க்கமும் ஒருதலைப்பட்சமான நிலைபாட்டையே எடுத்துவருகின்றன.

பிரிவினை காலகட்டத்தில்கூட இந்தியாவும் (இந்து, சீக்கியர்களும்) பாகிஸ்தானுக்கு (முஸ்லீம்களுக்கு) இணையாக வன்முறையில் ஈடுபட்டது என்று சொல்வதில்தான் அவர்களுக்கு மிகுந்த உற்சாகம். பாகிஸ்தானில் 90 சதவிகித முஸ்லீம்களுக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட பத்து சதவிகித இந்துக்கள் அனைவருமே தாக்கப்பட்டனர். இந்தியாவிலோ பஞ்சாபை ஒட்டிய எல்லைப் பகுதி நீங்கலாக பிற 20க்கு மேற்பட்ட மாநிலங்களில் சுமார் 85% இந்துக்களுக்கு மத்தியில் இருந்த பத்து சதவிகித முஸ்லீம்கள் மேல் ஒரு கீறல்கூட விழுந்திருக்கவில்லை. இந்த உண்மை ஒரு எளிய விஷயத்தை நம் முன் அழுத்தமாகச் சொல்கிறது: எல்லைப் பகுதியில் நடந்த எதிர் தாக்குதல்கூட மத துவேஷத்தால் நடந்திருக்கவில்லை. சொத்து சுகங்களையும் பூர்விக மண்ணையும் விட்டு அநாதையாகத் துரத்தப்பட்ட சோகமும் ஆத்திரமுமே இந்தியத் தரப்பு தாக்குதலுக்குக் காரணமாக இருந்திருக்கிறது. இந்து மத அடிப்படைவாதத்துக்கு இந்துப் பெரும்பான்மையின் ஆதரவு துளிகூடக் கிடையாது என்பதை உணர்த்தும் எளிய உண்மை இது. இதை நீங்கள் எந்த அறிவுஜீவியின் மயிர்பிளக்கும் வாதத்திலும் கேட்கவே முடியாது. இன்னும் சொல்லப்போனால், இந்தியாவின் அஹிம்சை வழியிலான சுதந்தரப் போராட்டத்தை எள்ளி நகையாட இந்த பிரிவினைக் கால வன்முறையை முன்வைக்கும் அபத்தத்தைக்கூட நீங்கள் கேட்க முடியும்.

இந்த அரசியல் சரி (?) தன்மையின் இன்னொரு வடிவம்தான் மோடிமட்டுமே மத கலவரத்தின் அடையாளமாகச் சித்திரிக்கப்படுவதும். இதையெல்லாம் எதற்காக அவர்கள் செய்கிறார்கள். ஒருவேளை உலக வரலாற்றில் மத ரீதியான வெறுப்பு மிக மிகக் குறைவாக இருந்துவந்திருக்கும் இந்தியாவில், அனைத்து மத அகதிகளுக்கும் அடைக்கலம் தந்த இந்தியாவில், உலகில் எந்த நாட்டையும் மத ரீதியாக வன்முறைமூலமோ ஆசை காட்டியோ அடக்கி ஒடுக்க ஒருபோதும் முன்வந்திருக்காத பெரும் பாரம்பரியத்தைக் கொண்ட இந்தியாவில் இப்படி ஒரு மதம் சார்ந்த மாநில அரசு அமைந்தது குறித்த வேதனை அவர்களை ஆழ்மனத்தில் இருந்து வாட்டுகிறதா? அதனால்தான் வள்ளல் பரம்பரையில் பிறந்த கருமியைக் கரித்துக் கொட்டுவதுபோல் மோடியை சுற்றி வளைத்துத் தாக்குகிறார்களா?

கிறிஸ்தவ, இஸ்லாமிய அடிப்படை சக்திகள் சரித்திரத்தின் பக்கங்களில் பெருக்கெடுத்தோடச் செய்திருக்கும் ரத்த ஆறுகள் பற்றி அவர்களுக்குத் தெரிந்துதான் இருக்கும். அதனால்தான் அது குறித்து பெரிதும் எதுவும் சொல்வதில்லையா..? ஓநாய் 10 பேரைக் கடித்துக் கொன்றது என்று சொன்னால் அதில் எந்த அதிர்ச்சியும் ஒருவர் அடையப்போவதில்லை. பசு ஒருவரைத் தன் கொம்புகளால் தூக்கி எறிந்தது என்றால் அது அதிர்ச்சி தரும் விஷயம் மட்டுமல்ல. அபாயமானதும்தானே. அந்தவகையில் அவர்களின் ஆதங்கம் புரிந்துகொள்ள முடிந்த ஒன்றுதான். மோடி இப்படி நடந்துகொண்டிருக்கக்கூடாது. அதுவும் எந்த ஆன்மிகப் பாரம்பரியம் உலகுக்கு எல்லா நதிகளும் கடலை நோக்கியே என்ற பெரும் உண்மையை உரத்துச் சொன்னதோ அந்த வழியில் பிறந்த பிறகும் மத அடையாளத்தை மையமாக வைத்து வெறுப்பை வெளிப்படுத்தியது மிக மிகத் தவறான செயலே.

உயிரிழப்பு என்பது எப்போதுமே வேதனைக்குரிய விஷயமே. அது இந்துவாக இருந்தாலும் முஸ்லீமாக இருந்தாலும். எல்லா அடிப்படைவாத சக்திகளும் விமர்சிக்கப்படவேண்டியவையே. ஆனால், கொலைகாரனையும் கொள்ளைக்காரனையும் தப்பித்துப் போகவிட்டுவிட்டு ஜேப்படி திருடனை மரத்தில் கட்டிவைத்து அடிப்பது என்பது நல்ல காவலனுக்கு அழகல்ல. உண்மையைப் பேசுவது பெரும்பான்மை அடிப்படைவாத சக்திகளுக்கு சாதகமாகிவிடுமோ என்ற பயத்தினால் அறிவுஜீவிகள் இப்படியான விசித்திரமான நிலைப்பாடை எடுத்திருக்கிறார்கள் என்றால் அது, மிகவும் தவறான, வீணான பயமே.

அந்தவகையில் ஊடகங்களும் அரசியல்வாதிகளும் அறீவுஜீவி வர்க்கமும் குஜராத் பற்றியும் மோடி பற்றியும் பேசிவருவதை ஒருவர் பொருட்படுத்தத் தேவையே இல்லை. அதில் உண்மையும் இல்லை. நேர்மையும் இல்லை. சமூக அக்கறையும் இல்லை. இருப்பதெல்லாம் இந்துத்துவ துவேஷம் மட்டுமே.

ஆனால், இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இன்னொருவர் செய்யும் தவறு நம் தவறை ஒருபோதும் நியாயப்படுத்திவிடமுடியாது. மோடி மட்டுமே தவறு செய்தார் என்று சொல்வது எப்படித் தவறாகுமோ அதுபோலவேதான் மோடி தவறே செய்யவில்லை என்று சொல்வதும். இரண்டு எதிர்நிலைகளுமே மிகவும் அபாயகரமானவையே.

குஜராத்தில் இந்து-முஸ்லீம் கலவரங்கள் நீண்டகாலமாகவே நடந்துவருவது உண்மைதான். என்றாலும் அந்த மண்ணுக்கு இன்னொரு மகத்துவமும் உண்டு. அது காந்தி பிறந்த மண். உலகுக்கு அஹிம்சையையும் மத நல்லிணக்கத்தையும் போதித்தவர் பிறந்த மண். பிரிவினைக்கால கலவரத்தில் தன் மகன் கொல்லப்பட்டதற்கு என்ன பதில் என்று ஆவேசத்துடன் கேட்ட இந்துவைப் பார்த்து, இதே போல் கலவரத்தில் கொல்லப்பட்ட ஒரு முஸ்லீம் குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்துவா… அதுவும் அந்தக் குழந்தையை ஒரு முஸ்லீமாகவே வளர்த்து வா என்று சொன்னவர் பிறந்த மண். அங்கு இப்படியான வன்முறை நடந்தது என்பது ஜீரணிக்கவே முடியாத விஷயமே.

கோத்ராவில் கர சேவகர்களின் படுகொலை நடந்தபோது காந்தி இருந்திருந்தால் இப்படி நரகத்தின் கதவுகளைத் திறந்துவிட்டிருக்க முடியுமா? சில அடிப்படைவாத சக்திகள் செய்த செயலுக்காக ஒட்டுமொத்த சமூகத்தைப் பழிவாங்கும் வெறிச்செயலை எப்படி ஒரு உண்மையான இந்துவால் பொறுத்துக்கொள்ள முடியும்? இந்துத்துவவாதிகளுக்குப் புரியும் மொழியில் கேட்பதானால், மோடியின் அரசு முஸ்லீம்களையா கொன்றது? சக இந்தியர்களை அல்லவா கொன்று குவித்திருக்கிறது. இந்தியர்களைக் கொன்று குவித்துப் பெறும் வெற்றியை உண்மையான இந்துவோ இந்தியனோ எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

காங்கிரஸ் அரசு இந்தியாவின் அழிவுக்காக அயராது பாடுபடுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. தலைவி எவ்வழி… தொண்டர்கள் அவ்வழி. ஆனால், வலுவான பாரதத்தை உருவாக்குவதாகச் சொல்லும் ஒருவர் ஒரு சமூகத்தைத் தனிமைப்படுத்தித் தாக்குவது எந்தவகையிலும் தேச நலன் சார்ந்த செயலாக இருக்கமுடியாதே.

அமெரிக்காவின் மீது ஆயிரம் விமர்சனங்கள் வைக்க முடியும் என்றாலும் ஒரு விஷயத்தில் மட்டும் அவர்களைப் பாராட்டித்தான் ஆகவேண்டும். உலகில் எங்கு வேண்டுமானாலும் சென்று போராடுவார்கள். அதில் எவ்வளவு ரத்த ஆறு பெருக்கெடுத்தாலும் பரவாயில்லை… ஆனால், தங்கள் பூமியில் ஒரு சொட்டு ரத்தம்கூடச் சிந்தக்கூடாது என்பதில் தெளிவாக இருப்பார்கள். அதனால்தான் 9/11 தாக்குதலில் ஈடுபட்டது முஸ்லீம்கள்தான் என்பது தெரிந்த பிறகும் கண்ணில் தென்பட்ட முஸ்லீம்களை எல்லாம் வெட்டிக் குவிக்கவில்லை. தங்கள் வீட்டை சுத்தமாக வைத்துக்கொண்டு, ஆப்கானிஸ்தானையும் இராக்கையும் குறிவைத்தார்கள். பக்கத்தில் இருப்பவர்களுடனான நட்பை முறித்துக் கொள்ளவில்லை. தொலைதூர எதிரிகளைத் தங்கள் இலக்காகத் தேர்ந்தெடுத்துக்கொண்டார்கள். அம்பைத் தாக்கவில்லை. அம்பை எய்த கரங்களை வெட்டி எறிந்தார்கள்.

அவர்கள் ஆப்கானிஸ்தானிலும் இராக்கிலும் செய்துவரும் அராஜகத்தை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. ஆனால், ஒரு அமெரிக்கராக இருந்து பார்த்தால் புஷ்ஷும் ஒபாமாவும் அவர்களுடைய ரட்சகரே. மோடியோ இந்துத்துவம் பேசி இந்தியர்களைக் கொல்லும் தவறை அல்லவா செய்துவிட்டிருக்கிறார். அமெரிக்க ரட்சகர் போல் வெண்ணிற அங்கிக்குள் குறுவாளை மறைத்து வைத்திருக்கும் தந்திரம் நமக்குத் தேவை இல்லை. ஆனால், சொந்த மண்ணில் ஒரு சொட்டு ரத்தம்கூடச் சிந்தக்கூடாது என்ற விஷயத்தை மட்டும் அமெரிக்கர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளவேண்டும்.

கோத்ராவில் கரசேவகர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்ற செய்தி தெரிய வந்ததும் என்ன செய்திருக்கவேண்டும்? உண்மையில் இந்தியாவின் மத நல்லிணக்கத்தைக் குலைக்க விரும்பிய சதிகாரர்கள் செய்த நாசகாரச் செயல் அது. ஒரு திட்டமிட்ட பொறி. புத்தியுள்ள ஒருவர் அதில் விழாமல் தப்பிக்கத்தானே பார்த்திருக்கவேண்டும். இந்து முஸ்லீம் இடைவெளியை பெரிதாக்கச் செய்யப்பட்ட அந்த செயலைக் கொண்டே இந்து – முஸ்லீம் ஒற்றுமையை அல்லவா பலப்படுத்தி இருக்கவேண்டும். கொல்லப்பட்ட கரசேவகர்களின் அஸ்தியை தேசம் முழுவதும் ஊர்வலமாக எடுத்துச்சென்று 56 சமஸ்தானங்களிலும் ஒரு பிரமாண்ட இராமர் கோவிலை இஸ்லாமிய சமூகத்தின் ஆதரவுடன் கட்டி எழுப்பி இருக்கவேண்டும். சில அடிப்படைவாத சக்திகள் நீங்கலாக, ஒட்டு மொத்த இஸ்லாமிய சமூகமும் இதற்கு நிச்சயம் கல்லெடுத்துக் கொடுத்திருக்கும். அப்துல்கலாம் போன்ற எத்தனையோ மத நல்லிணக்க சிந்தனைகொண்ட முஸ்லீம் தலைவர்களை முன்வைத்து அதை எளிதில் நிகழ்த்தியிருக்க முடியும்.

அப்படியாக பழி வாங்குதலின், வெறுப்பின் அடையாளமாக இன்று இருக்கும் கோத்ராவை தியாகத்தின் சின்னமாக மத நல்லிணக்கத்தின் அடையாளமாக ஆக்கியிருக்கவேண்டும். மனதில் இருக்கவேண்டிய மத நல்லிணக்க தெய்வத்தை விரட்டி அடித்துவிட்டு வெளியில் கருங்கல்லால் ஆன கோவிலைக் கட்டிவைத்தால் அது கோவிலாக இருக்காது. மிகப் பெரிய சமாதியாகத்தான் இருக்கும்.

இன்றைக்கு இஸ்லமியர்களைக் கட்டி அணைத்து அன்பை வெளிப்படுத்துவதுபோல் அன்றே ஆத்மார்த்தமாக நட்பின் கரங்களை நீட்டிருக்கவேண்டும். அன்றும் மோடி ஒரு கரத்தை நீட்டினார். ஆனால் அந்தக் கரத்தில் ரத்தம் தோய்ந்த கொலை வாளல்லவா மின்னியது. காந்தியின் மண்ணில் பிறந்த அவரால் எப்படி அதைச் செய்ய முடிந்தது. காந்திய வழியில் நின்று மது விலக்கைப் பெருமளவுக்கு வெற்றிகரமாக அமல்படுத்திவந்திருக்கும் மோடி காந்தியிடமிருந்து மத நல்லிணக்கத்தையும் அல்லவா கற்றுக் கொண்டிருக்கவேண்டும்.

இப்போதும் எதுவும் கெட்டுப் போகவில்லை. மோடிக்கு இந்தியாவை வழி நடத்தும் தலைமைப் பதவி வரவிருக்கிறது. பதவி உயர்வுகளுடன் சில பொறுப்புகளும் சேர்ந்து வரும். அனைவரையும் அரவணைத்துச் செல்லும் வளர்ச்சியே தன்னுடைய இலக்கு என்பதை மோடி வெளிப்படையாக அறிவிக்கவேண்டும். கோத்ரா கலவரங்கள் தன் ஆட்சியின் முதல் கலவரம் மட்டுமல்ல… அதுவே கடைசி கலவரமும்கூட என்ற வாக்குறுதியைத் தரவேண்டும். நடந்த துர்நிகழ்வுகளுக்கு மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்கவேண்டும்.

அறிவிஜீவிகளுக்கும் ஊடகங்களுக்கும் பிஜேபியும் மோடியும் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஆனால், ஓர் எளிய இந்தியனுக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும். வேறென்ன… அவர்களின் அனுமதியைக் கேட்டுத்தானே வீதி வீதியாக வலம் வரப்போகிறார்கள்.

(ஆழம் ஜூன் 2013 இதழில் வெளியான, ‘மோடி மட்டும்தான் வில்லனா?’ கட்டுரையின் முழுமையான வடிவம்).

நேருவுக்கு சம்பத் எழுதிய கடிதம்

மொழிப்போர் / அத்தியாயம் 12

7 ஏப்ரல் 1960 அன்று இந்திய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத்திடம் இருந்து புதிய ஆணை ஒன்று வெளியானது. 1965 ஆம் ஆண்டு முதல் இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சிமொழியாக ஆகிவிடும். அதற்கான ஆயத்த நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பதுதான் அதன் உள்ளடக்கம்.

இந்தி பேசாத மக்கள் விரும்பும்வரை ஆங்கிலமே இருக்கும் என்ற பிரதமர் நேருவின் வாக்குறுதியை அடித்து நொறுக்கும் வகையில் வெளியான இந்த அறிவிப்பு இந்தி பேசாத மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, தமிழ்நாட்டு முக்கிய அரசியல் அமைப்புகளான திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியன குடியரசுத் தலைவரின் இந்தித் திணிப்பு அறிவிப்புக்கு எதிராகப் போராட்டம் நடத்துவதற்குத் தயாராகின.

இந்தி என்னும் விஷ விருட்சத்தின் ஆணிவேரைக் கெல்லி எறிய ஒரே வழிதான் இருக்கிறது. அது, நாட்டுப் பிரிவினை. இந்திய யூனியன் வரைபடத்தில் தமிழ்நாடு தவிர்த்த மற்ற பகுதிகளுக்குத் தீவைத்து எரிக்கும் போராட்டத்தை நடத்தவேண்டும் என்று அழைப்பு விடுத்தார் திராவிடர் கழகத் தலைவர் பெரியார். திராவிடர் கழகத்தைப் பின்பற்றி திமுகவும் போராட்டத்தில் இறங்கத் தயாரானது.

18 ஜூன் 1960 அன்று குமாரபாளையத்தில் திமுக பொதுக்குழு கூடியது. இரண்டு நாள்களுக்கு நடந்த ஆலோசனைகளுக்குப் பிறகு மத்திய அரசின் இந்தித் திணிப்பு குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 30 ஆகஸ்டு 1960க்குள் குடியரசுத் தலைவர் தனது உத்தரவைத் திரும்பப்பெறவேண்டும். இந்தி பேசாத மக்களைக் கலந்தாலோசிக்காமல் இந்தி பற்றி முடிவெடுப்பதில்லை என்று அறிவிக்கவேண்டும். தவறினால், மறுநாளில் இருந்து இந்தி ஆதிக்கத்தில் இருந்து தென்னகத்தை விடுவிக்கும் விடுதலைப்போர் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

போராட்டத்தை நடத்துவதற்கு வசதியாக ஈ.வெ.கி. சம்பத் தலைமையில் போராட்டக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழுவில் இரா. நெடுஞ்செழியன், க. அன்பழகன், மு. கருணாநிதி, கே.ஏ. மதியழகன் உள்ளிட்ட பலரும் இடம்பெற்றனர். போராட்டக்குழுவினர் விளக்கக் கூட்டங்கள், கண்டனக் கூட்டங்கள் ஆகியவற்றுக்கு ஏற்பாடுசெய்து, கலந்துகொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

திமுகவின் போராட்ட அறிவிப்பு முதலமைச்சர் காமராஜரின் கவனத்துக்குச் சென்றது. திமுகவினர் போராட்டம் நடத்தினால் அரசு கடும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டியிருக்கும் என்றார். முக்கியமாக, துப்பாக்கி இருக்கிறது. அதில் தோட்டாவும் இருக்கிறது என்று காமராஜர் பேசியதாக அண்ணாவுக்கு செய்தி வந்தது. “1938லே மொழிப்போர் நடந்தபோது மூன்று இளைஞர்கள்தான் தியாகம் செய்தனர். தற்போது திமுகவில் 3300 கிளைகள் இருக்கின்றன. மூன்று லட்சம் தொண்டர்கள் இருக்கிறார்கள்’ என்று காமராஜருக்குப் பதில் கொடுத்தார்.

பின்னர் பொதுக்குழுத் தீர்மானங்களைப் பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. அப்படியொரு பொதுக்கூட்டத்தில் பேசிய போராட்டக்குழுத் தலைவர் ஈ.வெ.கி. சம்பத்தின் பேச்சு கவனிக்கத்தக்கது.

‘காமராசருக்கு நாட்டு மக்கள் மீது, மொழியின் மீது நல்லெண்ணம் இருக்குமானால், இங்கு நடைபெறுவதை டில்லிக்கு எடுத்துச்சொல்லி, குடியரசுத் தலைவரின் தாக்கீதை நிறுத்திவைக்கச் சொல்லவேண்டும்… ஆனால் அவர் நம்முடைய மைதானத்துக்குள்ளே புகுந்து ஏதாவது செய்ய முடியுமா? என்று பார்க்கிறார். அதுதான் முடியாது’

பொதுக்குழுத் தீர்மானங்களை மக்களுக்கு விளக்கியதோடு நிறுத்திக்கொள்ளாமல் போராட்டக்குழுத் தலைவர் என்ற முறையில் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத்துக்குக் கடிதம் ஒன்றை எழுதினார் ஈ.வெ.கி.சம்பத். ‘தவறான யோசனை அடங்கிய 27 ஏப்ரல் 1960 தேதியிட்ட தங்களுடைய கட்டளையில் அடங்கியிருக்கக்கூடிய, அச்சுறுத்துகின்ற கேடுகளை, திராவிட சமுதாயம் முழுதுமே எதிர்த்துக்கொண்டு இருப்பதுடன், மேற்படி கட்டளையைத் தாங்கள் திரும்பப்பெற்றுக்கொள்வதை பேராதரவுடன் எதிர்நோக்கி இருக்கிறது’ என்று எழுதியிருந்தார் ஈ.வெ.கி. சம்பத்.

திமுக சார்பில் பல பொதுக்கூட்டங்கள் நடந்தன. அவற்றின்மூலம் தமிழ் மக்கள் மத்தியில் இந்தித் திணிப்புக்கு எதிரான உணர்வுகள் மேலோங்கத் தொடங்கின. நிலைமை மோசமடைவதைத் தடுக்கும் வகையில் திமுக நடத்தும் கூட்டங்களுக்கு அனுமதி வழங்க மறுத்தது காமராஜர் தலைமையிலான தமிழக அரசு. ஏற்கெனவே தரப்பட்ட அனுமதிகளும் திரும்பப்பெறப்பட்டன. ஆனாலும் தடையை மீறிப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன.

குடியரசுத் தலைவரின் இந்தித் திணிப்பு உத்தரவுக்குக்கு திராவிடர் கழகமும் திமுகவும் பலத்த எதிர்ப்புகளைத் தெரிவித்துக் கொண்டிருந்த சமயத்தில் 14 ஜூலை 1960 அன்று மதுரையில் கூடிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, குடியரசுத் தலைவரின் இந்தித் திணிப்பு உத்தரவுக்கு வரவேற்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது.

காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியதற்கு மறுநாள் ஈ.வெ.கி.சம்பத் தலைமையிலான இந்தி எதிர்ப்புப் போராட்டக்குழு கூடியது. இரா. நெடுஞ்செழியன், என்.வி. நடராசன், கே.ஏ. மதியழகன், க. அன்பழகன், மதுரை முத்து, கோவை. ராசமாணிக்கம், அன்பில் தர்மலிங்கம், கவிஞர் கண்ணதாசன் ஆகியோர் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். அந்தக்கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

  1. சென்னையில் திமுக சார்பாக இந்தி எதிர்ப்பு மாநாட்டை நடத்துவது.
  2. போராட்டத்தில் ஈடுபட விருப்பமுள்ளோரின் பட்டியலைத் தயார்செய்து போராட்டக்குழுத் தலைவருக்கு அனுப்புமாறு கிளைக்கழகச் செயலாளர்களைக் கேட்டுக்கொள்வது.
  3. திமுக ஆதரவு மாணவர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோருக்கு போராட்டத்தில் கலந்துகொள்வதில் இருந்து விலக்களிப்பது.
  4. போராட்ட நிதிக்காக 20 ஜூலை 1960 முதல் 27 ஜூலை 1960 வரை உண்டியல் மூலம் நிதிபெற்று தலைமைக் கழகத்துக்கு அனுப்பிவைக்குமாறு கழக நிர்வாகிகளைக் கேட்டுக்கொள்வது.

திட்டமிட்டபடி இந்தி எதிர்ப்பு மாநாடு ஒன்று சென்னை கோடம்பாக்கத்தில் 1 ஆகஸ்டு 1960 அன்று கூடியது. மாநாட்டுக்கு முன்பாக இந்தி எதிர்ப்பு சுவரொட்டிகளைத் தயார் செய்து சுவர்களில் ஒட்டுவதற்குத் தயாராகினர் திமுக தொண்டர்கள். ஆனால் அவற்றுக்கு அரசு திடீர் தடை விதித்தது. அதுவும், ஆபாச சுவரொட்டித் தடுப்புச் சட்டத்தின்கீழ். அரசின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் இந்தி எதிர்ப்பு மாநாட்டுக்கு பலத்த ஆதரவு இருந்தது.

விரைவில் தமிழ்நாட்டுக்குச் சுற்றுப்பயணம் வரவிருக்கும் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்துக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டவேண்டும் என்றும் இந்தித் திணிப்பு அறிவிப்பைத் திரும்பப் பெறுக என்று கோஷங்களை எழுப்பவேண்டும் என்றும் அந்த மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. அந்தப் போராட்டத்தின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றி அண்ணா பேசினார்.

கறுப்புக்கொடி காட்டுகிற நேரத்தில் குடியரசுத் தலைவரைத் திரும்பிப் போ என்று எவரும் சொல்லக்கூடாது. “இந்தி ஒழிக! கட்டளையைத் திரும்பப் பெறுக!’ என்றுதான் முழங்க வேண்டும். குடியரசுத் தலைவர் செல்லும் காரில் எதையும் எவரும் எறியக்கூடாது. அவர் தங்கியிருக்கும் கட்டிடத்துக்கு அருகில் எவரும் செல்லக்கூடாது. இவற்றை மீறுபவர்களை துரோகிகள் என்று சொல்லமாட்டேன்; மாறாக, அவர்கள் என் தம்பிகளே அல்ல!

போராட்ட தினத்தன்று தொண்டர்கள் ஏந்த வேண்டிய கறுப்புக்கொடிகளை அந்த மாநாட்டில் வைத்தே தலைவர்கள் வழங்கினர் அண்ணா. போராட்டம் பெரிய அளவில் இருக்கும் என்பதை உணர்ந்த மத்திய உள்துறை அமைச்சர், இந்தி ஆட்சி மொழி குறித்த அரசின் நிலைப்பாட்டை விளக்கும் வகையில் பேசினார்.

பிரதமரின் வாக்குறுதியில் இருந்து மாறுபடும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை. அவர் அளித்த உறுதிமொழிக்கு ஏற்பவே அரசின் நடவடிக்கைகள் இருக்கும். இவையெல்லாம் குடியரசுத் தலைவரின் ஆணையிலேயே தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 1965க்குப் பிறகும் ஆங்கிலம் நீடிக்கவேண்டும் என்பதைத் திட்டவட்டமாகத் தீர்மானித்துவிட்டோம். இதை உறுதி செய்யும் வகையில் 1965க்கு முன்பாகவே நாடாளுமன்றத்தில் புதிய மசோதா கொண்டுவரப்படும்.

குடியரசுத் தலைவருக்குக் கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தை நடத்துவது என்று முடிவுசெய்துவிட்ட நிலையில், அதுகுறித்து பிரதமர் நேருவுக்குக் கடிதம் எழுதினார் போராட்டக்குழுத் தலைவர் ஈ.வெ.கி. சம்பத். அந்தக் கடிதத்தில், ‘ஏற்க மறுக்கும் மக்கள் மீது இந்தி ஒருபோதும் திணிக்கப்பட மாட்டாது’ என்ற பிரதமர் நேருவின் உறுதிமொழியை நினைவூட்டிய சம்பத், அந்த உறுதிமொழியை உருக்குலைக்கும் வகையில் குடியரசுத் தலைவரின் உத்தரவு அமைந்துவிட்டதைப் பதிவுசெய்தார். மேலும், இந்தி பேசாத மக்ககளுக்கு பிரதமர் நேரு முன்னர் அளித்த உறுதிமொழியை மீண்டும் ஒருமுறை அளிக்கும் பட்சத்தில், இந்தப் பிரச்னையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையை இந்த சந்தர்ப்பத்தில் தணிக்கும் என்று நம்புவதாக எழுதியிருந்தார்.

அதற்குப் பதில் கடிதம் எழுதினார் பிரதமர் நேரு. அந்தக் கடிதத்தில், ‘மொழிப்பிரச்னை பற்றி நான் மக்களவையில் அளித்த வாக்குறுதிக்குப் புறம்பான காரியங்களை எப்போதும், எந்தச் சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் நிறைவேற்ற வாய்ப்பில்லை… நாங்கள் அளித்த வாக்குறுதிக்குக் கட்டுப்பட்டே இருக்கிறோம்’ என்று எழுதினார். இத்தனைக்குப் பிறகும் குடியரசுத் தலைவருக்குக் கறுப்புக்கொடி காட்டி அவரை அவமதிப்பது தமக்கு வருத்தத்தை ஏற்படுத்தும் என்றும் நேரு அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

நேருவின் பதில் கடிதம் குறித்து திமுகவின் போராட்டக் குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட அதேசமயத்தில், ஐதராபாத் இந்தி பிரசார சபாவில் பேசிய குடியரசுத் தலைவர், ‘எதிர்காலத்தில் மொழிப்பிரச்னை குறித்து பரிசீலிக்கும்போது அல்லது விவாதிக்கும்போது, இந்தி பேசாத சகோதரர்களின் இடர்கள், உணர்ச்சிகள் புறக்கணிக்கப்பட மாட்டாது என்று நான் உறுதியாக நம்புகிறேன். நமது பிரதமர் அடிக்கடி பொதுமக்களிடமும் மக்களவையிலும் கூறியிருப்பது போன்று, இந்தி எவர் மீதும் திணிக்கப்பட மாட்டாது’ என்றார்.

பிரதமர் நேரு எழுதிய வாக்குறுதிக் கடிதம், குடியரசுத் தலைவரின் ஐதராபாத் பேச்சு ஆகிய இரண்டையும் மையமாக வைத்து 4 ஆகஸ்டு 1960 அன்று ஆய்வுசெய்தது திமுக போராட்டக்குழு. எதிர்பார்த்த இடத்தில் இருந்து நம்பிக்கை தரக்கூடிய உறுதிமொழிகள் பிரதமர் நேருவிடம் இருந்து கிடைத்துவிட்டதால் கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் நிறுத்தப்பட்டுவிட்டது என்று அறிவித்தார் திமுக பொதுச்செயலாளர் இரா. நெடுஞ்செழியன். போராட்டம் முடிவுக்கு வந்தது, அப்போதைக்கு!

0

‘பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் எழுதியிருக்கமாட்டேன்!’

பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் ராஜிவ் கொலை வழக்கை விசாரித்த சி.பி.ஐ. சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் தலைமைப் புலனாய்வு அதிகாரியாகப் பணியாற்றியவர் கே. ரகோத்தமன். பிரபாகரன் மரணம் வரை ஒரு சந்தர்ப்பத்தில்கூட வாய் திறக்காதிருந்த இவர், ராஜிவ் படுகொலை வழக்கு: மர்மம் விலகும் நேரம் (வெளியீடு: கிழக்கு பதிப்பகம்) என்ற புத்தகத்தின்மூலம் பல அதிர்ச்சிகரமான செய்திகளை முதல் முறையாக வெளியிட்டிருக்கிறார்.

விடுதலைப் புலிகள் தங்களுக்குள் எழுதிக்கொண்ட பல கடிதங்களை ஆதாரங்களாக முன்வைக்கும் இந்நூல், பல தமிழக அரசியல்வாதிகள், இந்திய உளவுத்துறை அதிகாரிகள், சிறப்புப் புலனாய்வுக் குழுத் தலைவர் என்று பலர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது. இது குறித்து ஆர். முத்துக்குமார் ரகோத்தமனிடம் மேற்கொண்ட உரையாடலின் ஒரு பகுதி குமுதம் ரிப்போர்ட்டரில் மூன்றாண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது. அவசியம் கருதி முழுவடிவம் இப்போது உங்களுக்காக.

பதினெட்டு வருடங்கள் அமைதியாக இருந்துவிட்டு இப்போது ராஜிவ் கொலை வழக்கு பற்றி எழுதவேண்டிய அவசியம் என்ன?

மொத்தம் மூன்று காரணங்களைச் சொல்லவேண்டும். நம்முடைய நாட்டில் நடந்த முக்கியப் படுகொலை இது. அதைப் பற்றிய புலன் விசாரணையைத் தொடங்கி, மூளை உழைப்பு, மனித உழைப்பு எல்லாவற்றையும் கொட்டி, ஏ டு இஸட் எல்லா விவரங்களையும் சேகரித்தோம். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தோம். விடுதலைப் புலிகள்தான் செய்தார்கள் என்று திட்டவட்டமாகக் கூறியிருந்தோம். இத்தனைக்குப் பிறகும் ராஜிவ் கொலையை விடுதலைப் புலிகள் செய்யவில்லை என்ற ஒரு கருத்து தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. சந்திராசாமி செய்யச் சொன்னார் என்கிறார்கள். சிஐஏ உளவு அமைப்பின் கைங்கர்யம் என்கிறார்கள். இந்தத் திசை திருப்பல் எனக்குப் பிடிக்கவில்லை. ஆகவே, இதற்கு ஏதேனும் செய்யவேண்டும் என்று நினைத்தேன்.

அடுத்து, படுகொலை செய்யப்பட்ட ராஜிவின் மனைவி இன்று இந்தியாவின் மிகப்பெரிய கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார். அவரது கட்சி ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது. ராஜிவ் காந்தியைக் கொன்றது யார் என்பதைத் தெரிந்துகொள்வது வெகு சுலபம். அவர்களாக ஏஜென்ஸி வைத்துக்கூட விசாரித்து உண்மையைத் தெரிந்துகொண்டிருக்கலாம். ஆனால் தனது மகள் பிரியங்காவை அனுப்பி குற்றவாளி நளினியிடம், ‘என் அப்பாவைக் கொலை செய்தது யார்?’ என்று கேட்டதாக செய்தி வந்தது. எனில், ராஜிவ் குடும்பத்தினர் சிறப்பு புலனாய்வுக் குழுவையோ, அதன் குற்றப்பத்திரிகையையோ நம்பவில்லை என்றுதானே அர்த்தம். இது எனக்கு மனவருத்தத்தைக் கொடுத்தது. உண்மையில் தடா நீதிமன்றத்தில் நாங்கள் தாக்கல் செய்த பல சாட்சியங்கள், ஆவணங்கள் வெளியே வராமல் போய்விட்டன. அவை முறைப்படி எல்லோருக்கும் தெரியவந்திருந்தால் இந்த சர்ச்சைகளைத் தவிர்த்திருக்கலாம். ஆதாரங்கள் கைவசம் இருந்தும் யாருக்கும் தெரியாமல் இருக்கிறதே என்ற ஆதங்கம் எனக்குள் இருந்தது.

எல்லாவற்றுக்கும் மேலாக, ராஜிவ் கொலை வழக்கைப் பொருத்தவரை நான் தலைமைப் புலனாய்வு அதிகாரி. வழக்கின் பிரதம குற்றவாளியான பிரபாகரனும், அடுத்த நிலைக் குற்றவாளியான பொட்டு அம்மானும் தேடப்படும் குற்றவாளிகளாக இந்திய அரசால் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், புலனாய்வு அதிகாரியான நான் – ஓய்வு பெற்றுவிட்டாலும் – அது குறித்துப் பேசக்கூடாது. அது சட்ட விரோதம். அதனால்தான் ராஜிவ் கொலை வழக்கு விசாரணை தொடர்பாக நான் அறிந்த உண்மைகளை இதுநாள் வரை வெளியில் பேசாமல் இருந்துவந்தேன்.

ஆனால் சமீபத்தில் இலங்கையின் முன்னாள் அமைச்சர் லக்ஷ்மண் கதிர்காமர் கொலை வழக்கு விசாரணையில், பிரதான குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்த பிரபாகரனும் பொட்டு அம்மானும் இறந்து விட்டதாக இலங்கை அரசே அறிவித்து, அந்த வழக்கை மூடிவிட்டார்கள்.

இனி இந்தியாவிலும் ராஜிவ் கொலைவழக்கில் தேடப்படும் குற்றவாளிகளாக நிச்சயம் பிரபாகரனும் பொட்டு அம்மானும் இருக்கப்போவதில்லை. இதுதான் என்னை புத்தகம் எழுதத் தூண்டியது. எழுதிவிட்டேன். ஒருவேளை பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் புத்தகமே எழுதியிருக்கமாட்டேன்.

பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதை நீங்கள் நம்புகிறீர்களா?

பரிபூரணமாக. இலங்கை அரசு நீதிமன்றத்திலே அதைப் பதிவுசெய்த பிறகு ஏன் நம்பாமல் இருக்கவேண்டும். இந்த விஷயத்தில் எந்த நாடும் பொய் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. சொல்லவும் மாட்டார்கள். விடுதலைப் புலிகளை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். அதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இறந்து போனவர் பிரபாகரன் என்று கருணாவே அடையாளம் காட்டியிருக்கிறார். ஆகவே, பிரபாகரன் உயிரோடு இருக்க வாய்ப்பே இல்லை.

சிறப்புப் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் கார்த்திகேயன் மீது நீங்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை இதற்கு முன்னால் எந்த அதிகாரியும் வைத்ததில்லை. புலனாய்வின்போது நிறைய இடையூறுகள் ஏற்பட்டதாகவும் புத்தகத்தில் சொல்லியிருக்கிறீர்கள். ஓரிரு உதாரணங்களைச் சொல்லமுடியுமா?

கார்த்திகேயன் மீது குற்றச்சாட்டு எதையும் முன்வைக்கவில்லை. ஆனால் சில குறைபாடுகள் இருந்தன என்பதுதான் என்னுடைய வாதம். புலனாய்வு தொடங்கிய புதிதில் இதில் சம்பந்தப்பட்ட ஒருவரைக்கூட விட்டுவிடக்கூடாது. எல்லோரையும் கண்டுபிடிக்கவேண்டும் என்று எல்லோருமே சொன்னார்கள். அவர் எவ்வளவு பெரிய அரசியல்வாதியாக இருந்தாலும் சரி என்றார்கள். விசாரணை தொடங்கி, அரசியல்வாதிகளின் தலையீடு இருக்கிறது என்று தெரிந்தால் யாராக இருந்தாலும் கொஞ்சம் பின்வாங்குவார்கள். இதுதான் ராஜிவ் கொலை வழக்கு விசாரணையிலும் நடந்தது.

ஒரு புலனாய்வு நடக்கிறது என்றால் அதில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகளுக்கு எல்லா கோணங்களிலும் விசாரிக்க சுதந்தரம் கொடுக்கப்படவேண்டும். ஆனால் இவரைப் போய் விசாரிக்காதே… அவரைப் போய் எதுவும் கேட்காதே என்று சொல்வது தவறு.

ராஜிவ் படுகொலைக்கு முன்பு அந்தப் பகுதியில் நடக்க இருந்த கருணாநிதியின் பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது என்றால் அது ஏன் என்பது குறித்து விசாரிக்கவேண்டும். நான் கருணாநிதியை விசாரிக்கவேண்டும் என்று கார்த்திகேயனிடம் கேட்டேன். ஆனால் கார்த்திகேயன் என்ன சொன்னார் தெரியுமா? ‘இனிமே இந்தமாதிரி வேலையெல்லாம் செய்யாதீங்க’ இதற்கு என்ன அர்த்தம்? கருணாநிதியை விசாரிப்பதில் கார்த்திகேயனுக்கு விருப்பமில்லை என்றுதானே!

புலன் விசாரனையின்போது பல வீடியோ கேசட்டுகள் கிடைத்தன. அதில் ஒன்று, புலிகளின் குகையில் என்ற தலைப்பிடப்பட்ட வீடியோ. வைகோ இலங்கைக்கு சென்று பிரபாகரனைச் சந்தித்தது, அவருடன் பேசியது போன்ற காட்சிகள் எல்லாம் அதில் இருக்கும். ஆகவே, புலிகளுடன் நெருக்கமான தொடர்பு கொண்ட அவரிடம் விசாரணை செய்யவேண்டும் என்று நினைத்தேன். பிறகு சின்ன சாந்தனிடம் விசாரணை செய்தோம். அப்போது அவர், ‘கொடுங்கையூரில் சிவராசனை வெள்ளை உடையில் வந்த ஒருவர் சந்தித்து, ‘இந்தக் காரியத்தை நல்லபடியாக முடியுங்கள். அடுத்த இலக்கு வைகோவை சி.எம் ஆக்குவதுதான் என்றார்’ என்று சின்ன சாந்தன் கூறினார். இது என்னுடைய சந்தேகத்தைக் கிளறியது.

பாளையங்கோட்டையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய வைகோ, ‘பிரபாகரனுக்குத் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் உள்ளது’ என்று விவரித்துப் பேசினார். அதைப் பற்றி அவரிடம் கேட்டபோது, ‘அந்த உருவம் என்னுடையது. ஆனால் குரல் என்னுடையது அல்ல’ என்று பொய் சொன்னார். அது பத்திரிகையில் வெளியான செய்திதான். ஆனால் அதைச் சொல்வதற்கே தயங்கி, பொய் சொன்னார். இது என்னுடைய சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்தியது. அவரை விசாரிக்கவேண்டும் என்று சொன்னேன். அனுமதி கொடுத்தார் கார்த்திகேயன். ஆனால் சந்தேகத்துக்குரியவராக அல்ல; முக்கியமான சாட்சியமாக மட்டுமே விசாரிக்கவேண்டும் என்று சொன்னார். விசாரணையை சரியான பாதையில் செல்வதற்கு அனுமதி மறுக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டேன். இது எனக்கு மன உளைச்சலைக் கொடுத்தது.

புலனாய்வு நடந்துகொண்டிருந்தபோது கார்த்திகேயனுக்கும் உங்களுக்கும் உறவு எப்படி இருந்தது?

ஒருமுறை என் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார். சிவராசனின் செயற்கைக் கண், துப்பாக்கி மறைத்து வைக்கப்பட்டிருந்த புத்தகம் போன்ற தடயங்களைப் பத்திரிகைகளுக்குக் கொடுத்துவிட்டேன் என்று சொன்னார். உண்மையில் அந்த தடயங்களைக் கொடுத்து பெரிய பெரிய அதிகாரிகள்தான். ஆனால் என்னைக் குற்றம்சாட்டியபோது அதை நான் ஆதாரத்துடன் மறுத்தேன். உங்களுக்கு என் மீது சந்தேகம் இருந்தால் இந்த விசாரணையில் இருந்து விலகிக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டேன். பிறகு என்னைப் புரிந்துகொண்டார். தொடர்ந்து பணியாற்றக் கேட்டுக்கொண்டார்.

ராஜிவ் கொலைச் சம்பவம் அது நடப்பதற்கு முன்பே வைகோவுக்குத் தெரியும் என்று எழுதியுள்ளீர்கள். இந்த முடிவுக்கு நீங்கள் வர எது ஆதாரமாக இருந்தது?

இரும்பொறை என்பவருக்கு திருச்சி சாந்தன் எழுதிய கடிதம். ராஜிவ் கொலை வழக்கு பற்றி எனக்குத் தெரியும் என்று யாரிடமும் பேசாதே. ரவிச்சந்திரனின் வீட்டில் விடுதலைப் புலிகளை அழைத்துச் சென்று பாதுகாப்பாக வைத்தார்கள். ஆக, என்ன நடக்கப்போகிறது என்பது நிச்சயம் வைகோவுக்குத் தெரிந்திருக்கும். அதேபோல, இந்தமுறை ராஜிவ் வந்தால் உயிருடன் திரும்ப முடியாது’ என்று பேசியதாக செய்திகள் வெளியாகின. உடனே வைகோ, ‘மண்டல் கமிஷனை எதிர்த்தால் தமிழ்நாட்டில் இருந்து வெளியே போக முடியாது என்றுதான் சொன்னேன் என்று மாற்றி விளக்கம் கொடுத்தார். அவர் என்ன பேசினார், என்ன வார்த்தைகள் பயன்படுத்தினார் என்பதை இன்னும் கொஞ்சம் கூர்மையாக விசாரித்திருக்கவேண்டும்.

ராஜிவ் கொலைவழக்கு விசாரணையிலும் கொலைக்கு முந்தைய புலனாய்வு சேகரிப்பு நடவடிக்கைகளிலும் உளவு அமைப்புகளின் ஒத்துழைப்பு எப்படி இருந்தது?

தொடக்கத்தில் இருந்தே கொலையைச் செய்தவர்கள் விடுதலைப்புலிகள் அல்ல என்று ’ரா’ அமைப்பின் இயக்குனர் பாஜ்பாய் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தார். அதிலும் பொலிட்டிகல் அஃபயர்ஸ் கமிட்டி என்ற உயர்மட்டக்குழு கூட்டத்தில் பிரதமரிடம் சொல்லியிருக்கிறார். அந்தக் கூட்டத்தில் அமைச்சர் சுப்ரமணியன் சுவாமியும் இருந்துள்ளார். ‘புலிகள் இல்லை என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?’ என்று பிரதமர் சந்திரசேகர் கேட்டதற்கு, ‘என்னுடைய உளவாளி கிட்டு சொன்னார்’ என்று சொல்லியிருக்கிறார். இதைவிட அபத்தம் வேறு என்ன இருக்கமுடியும்?

புலிகள் செய்யவில்லை என்று கிட்டு சொன்னதை ராவின் தலைவரும் திரும்பத் திரும்பச் சொன்னால் இவருக்கும் அவருக்கும் என்னதான் வித்தியாசம்? குற்றவாளிகளை திரைபோட்டு மறைக்கப்பார்த்த பாஜ்பாய்தான் முதல் குற்றவாளியாக விசாரிக்கப்பட வேண்டியவர் என்று நினைத்துக்கொண்டேன்.

ராஜிவ் கொலை தொடர்பாக ஒரு முக்கிய வீடியோ ஆதாரம் இண்டலிஜென்ஸ் பியூரோவுக்குக் கிடைத்தது. வர்மா கமிஷன் சார்பாக அந்த வீடியோ கேசட்டைக் கேட்டபோது இறுதிவரை இண்டலிஜென்ஸ் பியூரோ தரவேவில்லை. அப்போது ஐ.பியின் இயக்குனராக இருந்தவர்
எம்.கே. நாராயணன். பாஜ்பாய் முழுப்பூசணிக்காயை மறைக்கிறார். எம்.கே. நாராயணன் கேசட்டைக் கொடுக்கத் தயங்கினார். இந்த அளவில்தான் ரா மற்றும் ஐ.பி என்ற இரண்டு உளவு அமைப்புகளின் ஒத்துழைப்பு இருந்தது.

சுப்ரமணியன் சுவாமியின் எந்தக் கருத்தையும் தமிழக மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என்னும் நிலையில் ராஜிவ் கொலையை அடுத்து நடைபெற்ற அதிமுக்கியமான உயர்மட்ட அதிகாரிகள் கூட்டத்தில் நடந்தவை பற்றி சுப்ரமணியன் சுவாமி எழுதியதை நீங்கள் ஒரு முக்கிய ஆதாரமாகக் கொடுத்திருக்கிறீர்கள். உளவுத்துறை மீதான சுவாமியின் விமரிசனங்களையும் ராஜிவ் கொலை தொடர்பாக அவர் எழுப்பிய கேள்விகளையும் சந்தேகங்களையும் நீங்கள் நம்புகிறீர்களா?

பொலிட்டிகல் அஃபயர் கமிட்டி கூட்டத்தில் பேசியதாக சுப்ரமணியன் சுவாமி சொன்னதை நான் நம்புகிறேன். அங்கே பேசப்படும் விஷயங்களுக்குப் பதிவுகள் இருக்கும். ஆகவே அந்த விஷயத்தில் பொய் சொல்வதற்கு வாய்ப்பில்லை. ஒருவேளை என்னை அனுமதித்திருந்தால் அந்தப் பதிவையும் எடுத்துவந்திருப்பேன். திரும்பவும் சொல்கிறேன். சுப்ரமணியன் சுவாமி எழுதிய புத்தகத்தில் இருக்கும் மற்ற விஷயங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை.

புலனாய்வின்போது ஏற்பட்ட ஏராளமான சயனைடு மரணங்கள் சிபிஐயின் அலட்சியத்தால்தான் நடந்தன என்பதற்கு உங்கள் பதில் என்ன?

சயனைடு என்பது விடுதலைப்புலிகளின் முக்கிய ஆயுதம். விடுதலைப்புலி ஒருவர் போலீஸாரால் பிடிபடுவதற்கான சூழல் ஏற்பட்டால் உடனடியாக குப்பி கடித்து சாக்வேண்டும் என்பது அவர்கள் இயக்கத்தின் ஆணை. சிவராசனை கர்நாடகாவில் சுற்றிவளைத்தபோது தேசிய பாதுகாப்பு படையை அனுப்பி அதிரடியாகப் பிடித்திருக்கவேண்டும். அதைவிடுத்து, டெல்லியில் இருந்து சிறப்புப் படைகள் வந்துகொண்டிருக்கின்றன என்று சொல்லி ஒருநாளுக்கு மேல் தாமதம் செய்ததுதான் சிவராசன் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பு கொடுத்தது. அதைவிடக் கொடுமை, அவர் வசம் இருந்த ஆவணங்களை எல்லாம் அழிப்பதற்குத் தேவையான கால அவகாசம் கொடுக்கப்பட்டதுதான். அதிரடியாகச் செயல்பட்டிருந்தால் சிவராசனை உயிரோடு பிடிக்க முடியவில்லை என்றாலும் ஆதாரங்களைக் கைப்பற்றியிருக்கலாம்.

ஜெயின் கமிஷன் விசாரணையின்போது சிபிஐ ஒத்துழைப்பு தரவில்லை என்று எதன் அடிப்படையில் சொல்கிறீர்கள்?

ஜெயின் கமிஷனை நியமித்த உடனே அவர் விசாரணையைத் தொடங்கவில்லை. சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் விசாரணை முடியட்டும். அதைப் பற்றிய தகவல்களை எனக்குக் கொடுங்கள். அதன்பிறகு நான் விசாரணையைத் தொடங்குகிறேன் என்றார் ஜெயின். விசாரணைகள் எல்லாம் முடிந்ததும் திரட்டப்பட்ட ஆதாரங்கள் பற்றிய அறிக்கையின் பிரதி ஒன்றை ஜெயின் கமிஷனுக்குக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் தலைவர் கார்த்திகேயன் அப்படிச் செய்யவில்லை. தடா நீதிமன்றத்தில் பெட்டிஷன் ஒன்று சிபிஐ பப்ளிக் பிராசிகியூட்டரால் போடப்பட்டு, வழக்கு விவரங்களை அதிகாரப்பூர்வமற்ற நபர்களுக்குக் கொடுக்ககூடாது என்று ஆர்டர் வாங்கப்பட்டது.

அதன்மூலம் ஜெயின் கமிஷனுக்கு எந்த விவரங்களையும் கார்த்திகேயன் தரவில்லை. இதன் பின்னணியில் ஜெயின் சொன்ன ஒரு கருத்து இருக்கிறது. ‘சிறப்புப் புலனாய்வு குழு விசாரிக்காத நபர்களை எல்லாம் நான் விசாரிப்பேன்’ என்றுச் சொல்லியிருந்தார்.

தனக்குத் தகவல் கொடுக்காத ஆதங்கத்தில்தான் எல்லோருடைய அஃபிடவிட்டுகளையும் வாங்கி, விசாரித்து, இடைக்கால அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதன் விளைவாகவே குஜ்ரால் அரசு கவிழ்ந்தது. பிறகு விசாரணை செய்வதற்காக கார்த்தியேகயனை அழைத்தார். அப்போது தலைமைப் புலனாய்வு அதிகாரி என்ற முறையில் நானும் சென்றிருந்தேன்.

‘என்னிடம் எந்த ஆதார நகலையும் தரவில்லை. எனக்கு ஒத்துழைப்பும் தரவில்லை. உங்களைப் போன்ற போலீஸ் அதிகாரியை நான் பார்த்ததே இல்லை’ என்றார் ஜெயின்.

உளவுத்துறைத் தலைவர் முதல் கலைஞர் வரை, மரகதம் சந்திரசேகர் முதல் வைகோ வரை இந்நூலில் ஏராளமானவர்கள் மீது நீங்கள் கடுமையாகக் குற்றம்சாட்டுகிறீர்கள். இதன் எதிர்வினைகள் எப்படி இருக்கும்?

அரசியல்வாதிகளோ, மற்றவர்களோ எப்படி பார்க்கிறார்கள் என்பது பற்றி எனக்குக் கவலை இல்லை. யாரையும் குற்றம் சாட்டவேண்டும், நடவடிக்கை எடுக்கச் செய்யவேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இல்லை. சாட்சி இருந்தால் எவரையும் விடக்கூடாது. இல்லையென்றால் ஒருவரையும் தண்டிக்கக்கூடாது. இதுதான் என்னுடைய எண்ணம்.

0

அன்னா ஹசாரே தாக்குப்பிடிப்பாரா?

தகவல் அறியும் உரிமைச் சட்டம், ஜன்லோக்பால், ஊழலுக்கு எதிரான போராட்டம் என்று படிப்படியாக முன்னேறி இறுதியாக அரசியல் களத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள் அன்னா ஹஸாரே குழுவினர்.

ஜன்லோக்பாலை வலியுறுத்தி மீண்டும் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார் அன்னா ஹஸாரே. தளபதி அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரும் அதில் கலந்துகொண்டனர். கடந்தமுறை ஹஸாரே நடத்திய உண்ணாவிரதப் போராட்டங்களின்போது கூடிய கூட்டம், திரண்ட ஆதரவு இம்முறை இல்லை என்றபோதும் ஹஸாரே கூடுதல் உற்சாகத்துடன் இருந்தார். இந்நிலையில் திடீரென உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வதாக அன்னா ஹசாரே அறிவித்தார். தொடர்ந்து அன்னா குழுவினர் வெளியிட்ட அறிவிப்புதான் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. ‘ஊழல் உள்ளிட்ட பிரச்னைகளை அறவழிப்போராட்டம் மூலம் தீர்த்துவிடலாம் என்று நினைத்து போராடினோம். அரசு அசைந்துகொடுப்பதாகத் தெரியவில்லை. குறிப்பாக, வலுவான லோக்பால் விஷயத்தில் அரசு காட்டிவரும் அலட்சியம் எங்களை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியிருக்கிறது. இனி பிரச்னைகளை அரசியல்ரீதியாகத் தீர்த்துக்கொள்ள முடிவுசெய்திருக்கிறோம். விரைவில் அரசியல் கட்சி தொடங்கப்போகிறோம்.’

உண்ணாவிரதம் முடித்தபிறகு அன்னா ஹஸாரே பேசினார். ‘நம் நாட்டில் இருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஊழல் நிரம்பியவை; தார்மிக நெறிமுறைகள் அனைத்தையும் உதறித்தள்ளியவை. ஏழைகளின் பிரச்னைகளைப் புரிந்துகொள்ளாதவை. ஆகவே, மக்களுக்கு ஒரு மாற்று சக்தியை, மாற்று அரசியல் கட்சியை அடையாளம் காட்டப்போகிறேன். மக்கள் கொதித்து எழுந்தால் ஊழல் நாட்டைவிட்டு ஓடிவிடும். அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு நாடு தழுவிய பிரசாரப் பயணம் மேற்கொள்ளப் போகிறேன். ஊழலுக்கு எதிராக மக்களைத் திரட்டும் எங்களுடைய முயற்சிகள் இறுதிவரை தொடரும். ஆனால், நான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை.’

அன்னா ஹஸாரேவின் தலைமைத் தளபதி அர்விந்த் கெஜ்ரிவால் உண்ணாவிரதம் தொடங்கிய சில தினங்களிலேயே மிகவும் பலவீனமடைந்துவிட்டபோதும் கட்சி தொடங்கும் அறிவிப்பை உற்சாகமாக வெளியிட்டார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசைக் கவிழ்ப்பதற்கான இதுதான் சரியான தருணம் என்று ஆரம்பித்த கெஜ்ரிவால், ‘எங்கள் கட்சியின் பெயரை மக்களே தேர்வுசெய்வார்கள். கட்சியின் கட்டமைப்பையும் மக்களே தீர்மானிப்பார்கள். வேட்பாளர்களையும் மக்களே தேர்வுசெய்வார்கள். ஏசி அறையில் அமர்ந்து கொண்டு எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை தயார்செய்ய மாட்டோம். அதை மக்களே தயாரிப்பார்கள். ஏனென்றால், எங்கள் கட்சி மக்கள் கட்சி’ என்றார்.

இன்று தெருக்களில் போராடிக்கொண்டிருக்கும் நாங்கள் நாளை நாடாளுமன்றத்துக்குள்ளும் போராடப்போகிறோம் என்று ஆவேசப்பட்ட கெஜ்ரிவால், காங்கிரஸ், பாஜக கட்சிகளில் அதிருப்தி எண்ணத்துடன் இருப்பவர்களையும் இளைஞர்களையும் தங்களுடைய புதிய கட்சிக்கு வருமாறு அழைப்புவிடுத்தார். ஊழல் நிரம்பிய அரசுக்கு எதிரான மக்கள் யுத்தம் தொடங்கிவிட்டது. நாட்டில் முழுப்புரட்சிக்கான அவசியம் உருவாகிவிட்டது என்றார் கெஜ்ரிவால்.

அன்னா ஹஸாரே குழுவினரின் பத்துநாள் உண்ணாவிரதத்தை முடித்துவைத்தவர் சமீபத்தில் ஓய்வுபெற்ற ராணுவத் தளபதி ஜெனரல் வி.கே. சிங். மத்திய அரசுடன் ஏற்கெனவே மோதியவர் என்பதால் அவருக்கு மேடையில் கூடுதல் முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது. ‘நாட்டில் தற்போது நடந்துகொண்டிருப்பது ஊழலுக்கு எதிரான புரட்சி. அன்னா ஹஸாரே ஒரு புரட்சியை நோக்கி மக்களை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். தற்போதைய அரசின் கொள்கைகள் அனைத்தும் சட்டவிரோதமானவை. ஜனநாயகத்தைப் புனரமைக்கும் புனிதப்பணியை அன்னா ஹஸாரேவின் வழிகாட்டுதலுடன் தொடங்கப்படவிருக்கும் புதிய கட்சி செய்யும்’ என்று சொன்ன வி.கே. சிங், ‘நாடு திசை தெரியாமல் சென்று கொண்டிருக்கிறது. அதிகாரத்தில் இருப்பவர்களை எதிர்த்தால், கேள்வி எழுப்பினால் அவர்கள் நம்மைப் பழிவாங்குவார்கள். ஆகவே, எதற்கும் நாம் தயாராக இருக்கவேண்டும்’ என்று எச்சரித்தார். இப்படி முடித்துக்கொண்டார். ‘மக்கள் வருகிறார்கள். ஆட்சியாளர்களே, நாற்காலிகளைக் காலிசெய்யுங்கள்!’

உண்மையில் அன்னா ஹஸாரேவை அரசியல் களத்துக்கு அழைத்துவந்தவர்கள் அரவிந்த் கெஜ்ரிவாலோ கிரன்பேடியோ அல்ல; காங்கிரஸ் தலைவர்கள்தாம். மக்களை அரசுக்கு எதிராகத் தூண்டிவிடாதீர்கள்; துணிச்சல் இருந்தால் அரசியல் கட்சி தொடங்குங்கள்; மக்களைச் சந்தியுங்கள்; தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு வாருங்கள். அதன்பிறகு கேள்வி கேளுங்கள் என்று அன்னா குழுவினரை உசுப்பேற்றி
விட்டவர்களும் அவர்கள்தாம்.

இப்போது அன்னா ஹஸாரே குழுவினருக்கு இரண்டே வாய்ப்புகள்தாம் இருக்கின்றன. ஒன்று, ‘ஊழலுக்கு எதிராக’ என்ற கோஷத்தை முன்வைத்து தனித்துப் போட்டியிடுவது. மற்றொன்று, ஆர்.எஸ்.எஸ் ஆசியுடன் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது. இரண்டில் எதைத் தேர்வுசெய்தாலும் அது காங்கிரஸ் கட்சிக்குத்தான் சாதகமாக அமையும். தனித்துப் போட்டியிட்டால் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான வாக்குகள் சிதறிப்போகும். பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதையே அன்னா குழுவினருக்கு எதிரான ஆயுதமாகப் பிரயோகம் செய்துவிடலாம்.

இப்போது அன்னா ஹஸாரே ஆதரவாளர்கள் புதிய கட்சியைத் தொடங்கும் நிலையில் சில முக்கியமான கேள்விகள் எழுகின்றன. சமூக செயல்பாட்டாளராக அன்னா ஹஸாரேவைப் பார்ப்பவர்கள் அவரை ஒரு அரசியல் கட்சியின் வழிகாட்டியாக ஏற்றுக் கொள்வார்களா? ஏனென்றால், அன்னா ஹஸாரேவின் முக்கிய ஆதரவாளர்களாக இருந்த, இருக்கின்ற பாபா ராம்தேவ், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், மேதா பட்கர், சுவாமி அக்னிவேஷ் போன்றவர்கள் அன்னா ஹஸாரேவின் அரசியல் பிரவேசத்தை ஆதரிக்கவில்லை.

அன்னா ஹஸாரேவின் அரசியல் பிரவேசம் குறித்து எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்கவிரும்பவில்லை என்கிறார் பாபா ராம்தேவ். ஹஸாரேவின் முடிவு ஆச்சரியத்தை அளிப்பதாகக் கூறியுள்ளஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், ‘நான் அரசியலிலிருந்து விலகியிருக்கவே விரும்புகிறேன்’ என்று கூறியிருக்கிறார். அன்னா ஹஸாரேவுக்கு அரசியல் வேண்டாம் என்ற கருத்தையே பிரபல சமூக சேவகர் மேதா பட்கரும் முன்வைத்திருக்கிறார். எல்லோரையும்விட ஒருபடி மேலே சென்றுவிட்டார் சுவாமி அக்னிவேஷ். உண்ணாவிரதம் என்ற புனிதமான அகிம்சைப் போராட்டமுறையின் கற்பை சூறையாடிவிட்டார் அன்னா ஹசாரே என்பதுதான் அக்னிவேஷின் எதிர்வினை.

இவர்கள் மட்டுமல்ல; இன்றைய அரசியலை விரும்பாத, ஆனால் அன்னா ஹஸாரேவை ஆதரிக்கும் பலர் அவருடைய அரசியல் பிரவேசத்தை ஏற்றுக்கொள்வார்களா என்பது முக்கியமான கேள்வி.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அன்னா ஹஸாரே தீவிரமாக செயல்படத் தொடங்கியபோது காமன்வெல்த், ஆதர்ஷ், ஸ்பெக்ட்ரம் என்று மூன்று முக்கிய முறைகேடுகள் நாட்டை உலுக்கிக்கொண்டிருந்தன. அரசியல்வாதிகள் மீது, குறிப்பாக, ஆட்சியாளர்கள் மீது இளைஞர்களும் பொதுமக்களும் ஆவேசத்துடன் இருந்த சமயம் அது. அவர்களுடைய கோபத்துக்கு வடிகாலாக அன்னா ஹஸாரே இருந்தார். நாடு தழுவிய அளவில் அன்னா ஹஸாரேவுக்கு ஆதரவு குவிந்தது.

ஆக, ஹஸாரேவை ஒரு சமூகப் போராளியாக, சமூக ஆர்வலராக ஏற்றவர்களே அதிகம். அப்போது ஹஸாரேவின் பேச்சுகளுக்குக் கைத்தட்டி ஆதரவளித்தவர்களும், அவரைப்போல குல்லாய் அணிந்து கொண்டவர்களும் ஹஸாரே படம் பொறித்த டீஷர்ட் போட்டுக்கொண்டவர்களும் அரசியல்வாதி ஹஸாரேவுக்கும் ஆதரவளிப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஆக, இதுவரை தன்னை ஆதரித்தவர்களையும் தனக்குப் பின்னால் நின்றவர்களையும் தனக்கு ஆதரவாக இருக்கவைப்பது ஹஸாரேவின் முன்னால் இருக்கும் முதல் சவால். புதிய ஆதரவாளர்களைத் தேடுவது அடுத்த சவால்.

ஊழலுக்கு எதிராக யுத்தம் நடத்தவேண்டும், மாற்று அரசியல் கட்சியை உருவாக்கவேண்டும் என்றெல்லாம் குரல் எழுப்பும் ஹஸாரே, தான் தேர்தல் களத்தில் இறங்கப்போவதில்லை என்கிறார். எனில், அவருடைய புதிய கட்சியின் தலைமைப்பொறுப்பை நிர்வகிக்கப்போவது யார்? புதிய கட்சியின் ஆதாரப்புள்ளியே ஹஸாரே என்ற நிலையில் புதிய கட்சிக்கு யாரை நம்பி வாக்களிக்கச் சொல்கிறார்? ஒருவேளை அன்னா ஹஸாரேவின் கட்சி ஆட்சியைப் பிடித்துவிட்டால், பிரதமர் யார்?

நிதியின்றி அரசியல் கட்சி இயங்காது என்பதுதான் இன்றைய நியதி. ஊழலை எதிர்க்கும் அன்னா ஹஸாரே ஆதரவாளர்கள் தங்கள் கட்சிக்கான நிதியாதாரத்தை எங்கிருந்து பெறப்போகிறார்கள்? காங்கிரஸும் பாஜகவும் இன்னபிற கட்சிகளும் நாடுகின்ற கார்ப்பரேட் முதலாளிகளைத்தான் என்றால் அவர்களுக்கும் புதிய கட்சிக்கும் என்ன வித்தியாசம்?

ஊழலுக்கு எதிரான இயக்கம் என்னும் பெயருமேகூட அவர்களுக்குப் போதுமானதா என்பது தெரியவில்லை. ஊழல்தான் எல்லாவற்றுக்கும் அடிப்படை; அதை ஒழித்து விட்டால் எல்லாம் தீர்ந்துவிடும் என்பதை அன்னா ஹஸாரா ஆதரவாளர்கள் மட்டுமே ஏற்றுக்கொள்வார்கள். உண்மையில், ஊழலைத்தாண்டிய பல பிரச்னைகள் இருக்கின்றன. சாதி, மதச் சிக்கல்கள், பொருளாதாரப் பின்னடைவு, தீவிரவாதம், எல்லைத்தகராறுகள், நீர்ப்பங்கீட்டுச் சிக்கல் உள்ளிட்டவற்றுக்கு அன்னாவின் தீர்வு என்ன? இதுபோன்ற பிராந்திய, தேசிய பிரச்னைகளையும் கையில் எடுத்துக்கொண்டால் மட்டுமே அன்னா ஹசாரேவால் தனது கட்சிக்கான ஆதரவுத் தளத்தை விரிவாக்கிக்கொள்ளமுடியும்.

முழுப்புரட்சி என்ற பதத்தை அன்னா ஹஸாரே குழுவைச் சேர்ந்த பலரும் மேடைகளில் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். அதாவது, ஊழல் மலிந்த காங்கிரஸ் கூட்டணி அரசை அப்புறப்படுத்த முழுமையான புரட்சி அவசியம் என்கிறார்கள். இந்திய அரசியல் இப்படியொரு பதம் எழுபதுகளின் மத்தியில் பயன்படுத்தப்பட்டது. இந்திரா காந்தி ஆட்சியில் இருந்தபோது பிகார், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டங்கள் நடந்தன. குறிப்பாக, மாணவர்கள் களமிறங்கி நடத்திய போராட்டங்கள். அவர்களை வழிநடத்தியவர் ஜெயப்ரகாஷ் நாராயணன்.

இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அமல்படுத்தி, எதிர்க்கட்சிகளை ஒடுக்கி, அரசியல் அத்துமீறல்களில் ஈடுபட்டபோது, ‘நாட்டின் இன்றைய தேவை முழுப்புரட்சி மட்டுமே’ என்றார் ஜெயப்ரகாஷ் நாராயணன். அன்று அவர் விடுத்த அழைப்புக்கு தேசம் தழுவிய அளவில் ஆதரவு கிடைத்தது. அடுத்து வந்த தேர்தலில் ஆட்சி மாற்றம் நடந்தது. தற்போது அதேபோன்றதொரு ஆட்சி மாற்றம் ஏற்படவேண்டும் என்பதற்காகவே அன்னா குழுவினர் முழுப்புரட்சி தேவை என்கிறார்கள்.

இந்த இடத்தில் கவனிக்கவேண்டிய விஷயம் ஜெயப்ரகாஷ் நாராயணனின் அணுகுமுறை. அதிகார அத்துமீறலில் ஈடுபட்ட இந்திரா காந்தி அரசுக்கு எதிராக மக்களைத் திரட்டினார். மாணவர்களைத் திரட்டினார். பிரசாரம் செய்தார். ஆனால் தேர்தல் என்று வந்தபோது ஆட்சி மாற்றத்தை நிகழ்த்த மக்களையும் மாணவர்களையும் மட்டும் நம்பவில்லை. தனது தலைமையில் புதிய கட்சியைத் தொடங்கவில்லை. இந்திரா காங்கிரஸ் கட்சிக்கு எதிரான சக்திகளை, கட்சிகளை ஓரணியில் திரட்டினார். ஓரளவுக்கு ஒத்த சிந்தனை கொண்ட கட்சிகளை ஒரே கட்சியாக இணைத்தார்; இந்திரா காங்கிரஸுக்கு எதிரான வேறு சில கட்சிகளைக் கூட்டணிக்குள் கொண்டுவந்தார்; அதன்பிறகே ஆட்சிமாற்றம் நடந்தது.

இந்த இடத்தில்தான் அன்னா ஹஸாரே குழுவினரின் நடவடிக்கைகள் வேறுபடுகின்றன. எதிர்ப்பு சக்திகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் எதையும் அன்னா குழுவினர் செய்யவில்லை. நேரடியாகக் களம் காணத் தயாராகி விட்டனர். தேசிய அளவில் விரிந்துபரந்துகிடக்கும் ஒரு கட்சியை – மாநில அளவில் பலம்பொருந்திய கட்சிகளைக் கூட்டணிக்குள் வைத்திருக்கும் ஒரு கட்சியை – வீழ்த்துவதற்கு அன்னா ஹஸாரே ஆதரவாளர்கள் எடுத்துள்ள இந்த தனிக்கட்சி முயற்சி எந்த அளவுக்குப் பலன் தரும் என்பது கேள்விக்குறி. அதேசமயம், பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் முடிவை எடுப்பது எலியூருக்குப் பயந்து புலியூருக்குப் போவது போன்றது.

என்ன செய்யப்போகிறார்கள் அன்னா குழுவினர்?

0

ஆர். முத்துக்குமார்

இந்திக்கு எதிராக, இந்திக்கு ஆதரவாக

மொழிப்போர் / அத்தியாயம் 3

இந்தியாவின் பொதுமொழியாக இந்தி என்ற காந்தியின் விருப்பத்தை நிறைவேற்ற காங்கிரஸ் செய்த காரியங்களில் ஒன்று இந்தி மாநாடு நடத்துவது. ஒவ்வொரு ஆண்டும் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடக்கும்போது அகில இந்திய இந்தி மாநாட்டையும் சேர்த்து நடத்தும் நடைமுறை 1924ல் இருந்து அமலுக்கு வந்தது. இந்தியின் பெருமை, தேசிய மொழியாக இந்தி ஆகவேண்டியதன் அவசியம் உள்ளிட்டவை பற்றி இந்தி மாநாட்டில் விவாதிக்கப்பட்டன. முக்கியமாக, நாடு தழுவிய இந்திப் பிரசாரம் பற்றி.

அந்த வகையில் நான்காவது அகில இந்திய இந்தி மாநாடு 1927 ஆம் ஆண்டு சென்னையில் கூடியது. மாநாட்டுக்குத் தலைமை வகித்தவர் சரோஜினி நாயுடு. இந்திப் பிரசார இயக்கம் என்பது ஒரு கட்சியின் அல்லது ஒரு வகுப்பாரின் வேலை அல்ல; இது நாட்டிலுள்ள அனைத்து மக்களின் – கட்சிகளின் – வகுப்பாரின் ஒற்றுமை உணர்வின் அடையாளம் என்ற சரோஜினி நாயுடுவின் பேச்சுக்கு மாநாட்டில் நல்ல வரவேற்பு.

காந்தி முன்மொழிந்த இந்தியை இதர காங்கிரஸ் தலைவர்களும் வழிமொழிந்தனர். முக்கியமாக, இந்திய அரசுப்பணி தேர்வாணையத்தின் தலைவராக இருந்த சர். டி. விஜயராகவாச்சாரி. பள்ளி, கல்லூரிகளில் இந்தியை இரண்டாவது மொழிப்பாடமாக வைக்கவேண்டும். அதன்மூலம் இந்தி கற்றுக்கொடுக்கும் பணிகள் கல்வித்துறைக்கு எளிமையாகும்; மக்களுக்கும் பலன் தரும் என்றார் இவர். இந்தி என்பது மிக எளிமையான மொழி. ஆறே மாதங்களில் ஒருவர் வட இந்தியர் புரிந்துகொள்ளும் அளவுக்குக் கற்றுக்கொள்ள முடியும் என்று சொன்ன விஜயராகவாச்சாரி, இந்தித் தேர்வில் ஒருவர் வெற்றிபெற முடியவில்லை என்றால் அவரைப் படித்தவராகவே கருதமுடியாது என்றார்.

இந்தப் பின்னணியில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் இந்தியைக் கற்பிக்கவேண்டும் என்ற கருத்து எழுந்தது. இந்தியை ஐந்தாம் வகுப்பு தொடங்கி உயர்நிலைப் பள்ளிகளிலும் விருப்பப்பாடமாக வைக்கவேண்டும் என்ற தீர்மானத்தை சென்னை மாநகராட்சி மன்றத்தில் கொண்டுவந்தார் சுயராஜ்ஜியக் கட்சி உறுப்பினர் எஸ். சத்தியமூர்த்தி. இந்திக்குப் பதிலாக இந்துஸ்தானியை வைக்கவேண்டும் என்றார் இஸ்லாமிய வகுப்பைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர். இருப்பினும், சென்னை மாநகராட்சி மன்றத்தில் நீதிக்கட்சி பெரும்பான்மையுடன் இருந்ததால் சத்தியமூர்த்தியின் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.

ஆனாலும் தன்னுடைய முயற்சிகளை எஸ். சத்தியமூர்த்தி கைவிடவில்லை. இந்தியைக் கற்றுக்கொள்ளுங்கள் என்று பிரசாரம் செய்வது மட்டும் போதாது. இந்தியைக் கற்குமாறு அவர்களைக் கட்டாயப்படுத்தவேண்டும். ஆறாம் வகுப்பில் இருந்து ஒன்பதாம் வகுப்பு வரை இந்தியைக் கட்டாய மொழிப்பாடமாக ஆக்கவேண்டும். அதைச் செய்தால் இன்னும் பதினைந்தே ஆண்டுகளில் இந்தியா இந்தி நாடாகிவிடும் என்று பேசினார்.
இந்தப்பேச்சு 12 ஜூலை 1934 தேதியிட்ட மெட்ரால் மெயில் ஏட்டில் வெளியானது.

காந்தி, சத்தியமூர்த்தியைத் தொடர்ந்து ராஜாஜியும் இந்திப் பிரசாரப் பணியில் ஈடுபடத் தொடங்கினார். இந்தியப் பள்ளிகளில் பிரிட்டிஷாரின் வரலாறு ஆங்கில மொழியில் சொல்லித்தரப்படவேண்டும்; இந்திய வரலாறு இந்தியில் சொல்லித்தரப்படவேண்டும் என்ற கருத்தை திருநெல்வேலியில் நடந்த பள்ளிவிழா ஒன்றில் முன்வைத்த அவர், தென்னிந்தியர்களுக்கு இந்தி அறிவைப் புகட்டுவதன்மூலம் அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் பெற வழிவகுக்கும் என்றார்.

காந்தி, சத்தியமூர்த்தி, ராஜாஜி உள்ளிட்ட தலைவர்கள் இந்திப் பிரசாரப் பணிகளில் தீவிரமாக இயங்கியபோது இந்திக்கான எதிர்க்குரல்களும் எழுந்துகொண்டிருந்தன. முக்கியமாக, காங்கிரஸ் கட்சியின் அலுவல் மொழியாக இந்தி ஆகவேண்டும் என்ற கருத்து எதிர்க்கப்பட்டது.

‘இந்திக்கு முதலிடம் அளிப்பது நமது அடிமைத்தனத்தை வேறொரு உருவத்தில் நிலைநாட்டுவதாகவே முடியும். ஆங்கிலத்தின் இடத்தை இந்தி பெற்றால் தென்னாட்டவருக்குத்தான் மிகுந்த கேடு உண்டாகும். தாய்மொழியே மக்களின் உயிர்நிலை. வேற்றுமொழி ஒன்றைப் படிக்கவும் அதுவழியாக நமது கருத்துகளைத் தெரிவிக்கவும் நாம் கட்டாயப்படுத்தப்பட்டால் நமது உண்மையான முன்னேற்றத்துக்குத் தடை ஏற்படுவதுடன், நமது மனநிலையும் வளர்ச்சி அடையாது தேய்ந்துவிடும். ஆகவே, இந்தியைப் பொதுமொழி ஆக்குவது பற்றி மிகமிக விழிப்பாக இருக்கவேண்டும் என்று நமது அரசியல்வாதிகளை எச்சரிக்கவேண்டிய காலம் வந்துவிட்டது!’ என்று 1923 ஆம் ஆண்டிலேயே காங்கிரஸ் கட்சியின் செயலாளர்களுள் ஒருவராக இருந்த கோபால கிருஷ்ணமய்யா பேசினார்.

கிருஷ்ணமய்யா எதிர்ப்பு தெரிவித்த இரண்டு ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியின் அலுவல் மொழியாக இந்தி அங்கீகரிக்கப்பட்டது. அப்போது பெரியார் ஈ.வெ.ராவின் குடி அரசு ஏடு கண்டனம் தெரிவித்தது. 1926 மார்ச் மாதம் குடி அரசு இதழில் வெளியான கட்டுரையில், ‘பழையன கழிந்து, புதியன புகுவதாக இருந்தால் நமக்குக் கவலை இல்லை. ஆனால் புதியவைகள் வந்து பலாத்காரமாகப் புகுந்துகொண்டு, பழையவைகளைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளுவதானால் அதையும் சகித்துக்கொண்டு அதற்கு வக்காலத்து பேசுவது என்பது பாஷைத் துரோகம்; சமூகத்துரோகம்’ என்று எழுதப்பட்டிருந்தது.

தாய்மொழி தவிர்த்த பொதுமொழி என்றால் அது ஆங்கிலமாகத்தான் இருக்கவேண்டும் என்று குடி அரசின் எழுதினார் பெரியார். ‘இன்றைய தினம் மக்களுக்கு அவரவர்கள் சொந்த பாஷை தவிர வேறு பாஷை தெரியவேண்டுமானால் அது ஆங்கில பாஷை என்றே நாம் தைரியாமாகச் சொல்லுவோம். உலகமே தங்கள் கிராமந்தான் என்று எண்ணிக் கொண்டிருந்த காலம் மலையேறி, இப்போது நிலப்பரப்பு, நீர்ப்பரப்பு முழுவதும் தெரிந்து, இருநூறு கோடி மக்களையும் சகோதரர்களாகப் பாவித்து வாழவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்போது உலகச் செலாவணி பாஷை எதுவோ அதை மனிதன் அறியாமல், கபீர்தாஸ் ராமாயணத்தைப் படிக்கவேண்டிய இந்தி பாஷையை எதற்குப் படிக்க வேண்டும் என்று கேட்கின்றோம்.’

காங்கிரஸ் கட்சியின் இந்தி ஆதரவு நடவடிக்கைக்கு பதில் தரும் வகையில் 1931 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தின் மாகாண மாநாடு கூடியது. பழைய புராணக் கதைகளைச் சொல்வதைத்தவிர வேறு அறிவு வளர்ச்சிக்குப் பயன்படாத இந்தி மொழியை நமது மக்கள் படிக்கும்படி செய்வது பார்ப்பனீயத்துக்கு மறைமுகமாக ஆக்கத்தேடும் முயற்சி என்று அறிவித்த சுயமரியாதை மாநாடு (1931), தற்கால விஞ்ஞான அறிவை நமது மக்களிடையே பரப்பவும் புத்தம் புதிய தொழில் முறைகளை நமது நாட்டில் ஏற்படுத்தவும் மற்ற நாடுகளில் எழுந்திருக்கும் சீர்திருத்த உணர்ச்சியை நமது மக்களிடையே தோற்றுவிக்கவும் உலகமொழியாக விளங்கும் ஆங்கிலத்தையே தாய்மொழிக்கு அடுத்தபடியாக நமது இளைஞர்கள் கற்கவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது.

பெரியாரும் சுயமரியாதை இயக்கமும் மட்டும் இந்தித் திணிப்பு முயற்சிகளை எதிர்க்கவில்லை. சுத்தானந்த பாரதியார், மறைமலை அடிகள் உள்ளிட்ட தமிழறிஞர்களும் எதிர்த்தனர். இந்தி மொழியை நாட்டின் முதன்மையான மொழியாக ஆக்க சிலர் முயல்வது போல தமிழ்நாட்டின் முதன்மை மொழியாக தமிழைக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்பது சுத்தானந்த பாரதியாரின் விருப்பம்.

‘பிறமொழிகளின் முன்னேற்றத்துக்குத் தக்கவாறு தமிழ் முன்னேறியாகவேண்டும். அதற்கு மாறாக, நமது பள்ளிச்சிறார் தமிழைப் புறக்கணித்து, வேறொரு மொழிக்கு ஆக்கம் தேடும்படியான எத்தகையை முயற்சியும் தமிழுக்கு ஆக்கம் தராது. முதலில் ஒவ்வொருவரும் தமது தாய்மொழியை நன்கு கற்கவேண்டும். பிறகு தொழில் நடத்துவதற்கும் உலகுடன் பழகுவதற்கும் உலகெங்கும் நன்கறிந்த ஒரு மொழியைக் கற்றறியவேண்டும். அத்தகையை மொழி இப்போது ஆங்கிலமே.. இந்தியை நாம் வெறுக்கவில்லை. கற்பவர் கற்கட்டும்; கட்டாயம் கற்றே தீரவேண்டும். இன்றேல், வாழமுடியாது என்று தடபுடல் செய்யவேண்டாம்’ என்று எழுதினார் சுத்தானந்த பாரதியார்.

பெரியார் ஆங்கிலத்துக்கு ஆதரவாகவும் சுத்தானந்த பாரதியார் தமிழுக்கு ஆதரவாகவும் நிலைப்பாடு எடுத்தபோது, இந்தியாவின் பொதுமொழியாக இருப்பதற்கு இந்திக்குத் தகுதியில்லை என்ற கருத்தை முன்வைத்தார் மறைமலையடிகள்.

‘பொதுமொழி என்பது மக்களால் பேசப்படுகிறது. வாழும் மொழியாக இருந்தால் மட்டும் போதாது. அம்மொழி பண்டைய மொழியாக இருக்கவேண்டும். தொடர்ச்சியாக நெடுங்காலம் பேசப்பட்டு, இப்போதும் பேசும்மொழியாக இருக்கவேண்டும். அந்த மொழி உயரிய இலக்கிய வளம் நிரம்பியதாக இருக்கவேண்டும். அந்த மொழியைப் பேசுகின்ற மக்களின் அரசியல் கொள்கைகள், சிந்தனை சார்ந்த சமயக் கொள்கைகள், சமூக நெறிகள் போன்ற
மக்கள் மனமுவந்து ஏற்கத்தக்க பல்துறை அறிவுசார்ந்த இலக்கியங்கள் சொந்தப் படைப்பிலக்கியங்கள் கொண்டதாக இருக்கவேண்டும். அந்த வகையில் இந்தி மொழிக்கு பழமைச் சிறப்பும் இல்லை; இலக்கிய வளமும் இல்லை. வட இந்தியாவில் இந்தி பேசப்படுவதிலேயே பலவித வேறுபாடுகள் உள்ளபோது தமிழர்களை இந்தியைக் கற்றுக் கொள் என்று வற்புறுத்துவது சக்தியையும் முழு நேரத்தையும் வீணாக்குவதாகும்’ என்றார் மறைமலை அடிகள்.

ஆக, இந்திக்கு ஆதரவாக காந்தி, காங்கிரஸ், சுயராஜ்ஜியக் கட்சியினர் ஆகியோர் ஒருபக்கமும் இந்தித்திணிப்புக்கு எதிராக பெரியார், மறைமலை அடிகள், சுத்தானந்த பாரதியார் உள்ளிட்டோர் இன்னொரு பக்கமும் வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட்டிருந்த சமயத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியானது. அந்தத் தேர்தலின் முடிவு மொழிப்போராட்ட வரலாற்றில் ஒரு புதிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

(தொடரும்)

இதுவரை

லோகாயுக்தாவும் மாநிலங்கள் உரிமையும்

லோக் ஆயுக்தாவைக் கொண்டு வருவதில் கட்சிகளின் சாயம் வெளுத்தது என்ற தலைப்பில் தினமலரில் சில தினங்களுக்கு முன் செய்தி வெளிவந்தது. அரசியல் கட்சிகளுக்கு எதிரான செய்திகள் எப்போதும் மக்களை உடனே கவர்ந்துவிடுகின்றன. எந்தெந்த கட்சிகள் லோகாயுக்தாவை எதிர்த்தன, ஏன் எதிர்த்தன என்று விளக்காமல்,  லோகாயுக்தா வந்தால் ஆபத்து என்று அவை அஞ்சியதாகவும் ஆகவே அதை வரவிடாமல் தடுத்துவிட்டதாகவும் இவர்கள் கதைக்கிறார்கள். ஒருவிதத்தில் அது சரிதான் என்றாலும், குறைந்தபட்சம் மாநிலக் கட்சிகள் எதிர்ப்பதில் உள்ள உள் அர்த்தங்களை அறியவேண்டியது அவசியமாகிறது.

உண்மையில், லோக்பால், லோகாயுக்தா ஆகியவற்றால் பெரிய அளவில் சமூகத்தில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. இந்த நாட்டில் தேர்தல் ஆணையமும் நீதி மன்றங்களும் சில நேரங்களில் மட்டுமே விழிப்புடன் உள்ளன. அண்ணா ஹசாரேவின் போராட்டத்திலும் ஜனநாயக மறுப்புத்தன்மை உள்ளது. மேலும் அவர்கள் கோருகிற லோக்பால் அதிகார மையத்துக்கு வழி வகுக்கும். ஊழல் என்பதே எங்கு அதிகாரம் உள்ளதோ அங்கிருந்து ஆரம்பிக்கிறது. அப்படி இருக்கையில், லோக்பாலுக்கு ஹசாரே அணியினர் சொல்லும் வழிவகைகள் அதிகாரத்தை ஓரிடத்தில் குவிக்கச் செய்யும் முயற்சியே. அது மேலும் மேலும் ஊழலை வளர்க்கும். ஒழிக்க உதவாது.

இட ஒதுக்கீடு உள்பட பல விடயங்களில் ஹசாரே குழுவினர் ஒதுங்கி வேடிக்கை பார்த்ததை நாடறியும். ஹசாரே குழுவினர் கோருகிற லோகாயுக்தாவுக்கும், மத்திய அரசு கொண்டு வர முயற்சி செய்யும் லோகாயுக்தாவுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இந்த நிலையில் எங்களுடைய லோக்பாலை மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்கிற ஹசாரே குழுவினரின் கருத்து விமர்சனத்துக்கு உரியது.

லோக் ஆயுக்தா என்ற விவகாரத்தை வைத்தே திரிணமூல் காங்கிரஸ், அதிமுக, திமுக மற்றும் இன்ன பிற மாநிலக் கட்சிகள், ஏன் பாஜக உட்பட பல கட்சிகள் ராஜ்ய சபாவில், லோக்பால் தீர்மானத்தை தோற்கடிக்கச் செய்தது நினைவிருக்கலாம். இரு தினங்களுக்கு முன்பு அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப் பட்டது. அதில் மாநிலக் கட்சிகள் தங்கள் எதிர்ப்பை தீவிரமாகவே காட்டியது.அது வரவேற்கப் படவேண்டியதே!.

லோகாயுக்தா என்பது மாநில அரசின் நிர்வாகத்தில் லஞ்சத்தைத் தடுப்பதற்கான விதிமுறைகளைக் கொண்டது. ஆனால் அதை அமல்படுத்தினால் மாநில அரசுகளின் உரிமைகளில் மத்திய அரசு தலையிடுவதாக மாறிவிடும் என்று மாநிலக் கட்சிகள் கூச்சலிடுகின்றன. ஆனால், அரசியல் சட்டப் பிரிவு 253 விதிப்படி, அவ்வாறு செய்வதற்கு தனக்கு அதிகாரம் இருப்பதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால் சட்டப் பிரிவு 252 விதிப்படி, லோகாயுக்தாவை நிறைவேற்றலாம் என்று பாஜக உள்ளிட்ட சில எதிர்கட்சிகள் கோரிக்கை வைக்கின்றன.

சட்டப் பிரிவு 253 ன் கீழ், சர்வதேச சட்டங்களை நாடு முழுவதும் நிறைவேற்றலாம் என்கிறது மத்திய அரசு. அதற்கு மத்திய அரசு சொல்கிற காரணம் என்னவென்றால், லஞ்சத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு வேண்டிய சட்டத்தை, ஐ. நா. வில் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்ததத்தின் அடிப்படையில் கொண்டுவரலாம் என்பதே. ஆனால், ஐ. நாவில் போடப்பட்ட ஒப்பந்தத்திற்கும் லோக் ஆயுக்தாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

சட்டப் பிரிவு 252 விதிப்படி, இரண்டுக்கும் மேற்பட்ட மாநில அரசுகளின் வேண்டுகோளுக்கு இணங்க, மத்திய அரசு சில பொதுவான சட்டங்களை மாநில அரசுகளுக்காக நிறைவேற்றலாம் என்கிறது. அவ்வாறு உருவாக்கப்படுகிற சட்டங்களை, அம்மாநில அரசுகள் சட்டமன்றத்தில் வாக்கெடுப்பில் வெற்றி பெற்று நிறைவேற்றிக் கொள்ளலாம் என்கிறது.

சட்ட விதி 253 உடன் ஒப்பிடும் போது 252 பரவாயில்லை. சட்ட விதி 253 மற்றும் 252 இரண்டையுமே எந்த மாநிலக் கட்சிகளும் ஏற்றுக் கொள்ளக் கூடாது. சட்ட விதி 253 ஐ நாம் இப்போது அனுமதித்தால், இன்னும் பல சட்டங்களை மத்திய அரசு கையாள முற்படும். யார் சட்டத்தைக் கொண்டு வந்தால் என்ன என்ற கேள்வியே பெரும்பாலும் எல்லோராலும் முன்வைக்கப்படும். அதை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ளலாகாது. ஏனெனில், 356 சட்டப்பிரிவின் கீழ் மாநில அரசுகளைக் கலைப்பது, பஞ்சாயத்து ராஜ் என பல விடயங்களை தன் கைக்குள் வைத்திருந்த மத்திய அரசு இன்னும் பல சட்டங்களை நிறைவேற்ற முயற்சிக்கும். அது மாநிலக் கல்வி திட்டத்தில் இருக்கலாம். ஒவ்வொரு மாநிலத்திலும் தொழில் நுட்பக் கல்லூரிகள் மத்திய அரசு ஒப்புதலோடு திறக்க வேண்டும் என்று சட்டத் திருத்தம் கொண்டுவரப்படலாம். காவல் துறை, மத்திய அரசு கட்டுப்பாட்டுக்குள் வரவேண்டும் என்று புதுப்புது சட்டங்களை உருவாக்கலாம்.

சட்ட விதி 252 சரி என்றால் மாநில அரசுகள் சில சட்டத்திருத்தங்கள் கொண்டுவரவோ, நிராகரிக்கவோ முடியாமல் போகலாம். சில நேரங்களில் ஒருவேளை மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இணக்கமான சூழ்நிலை இல்லாதபோது, எந்த மாற்றத்தையும் மாநில அரசால் ஏற்படுத்த முடியாது. ஏனெனில், அவ்வாறு சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டுமானால் மீண்டும் மத்திய அரசின் ஒப்புதலோடுதான் கொண்டு வர இயலும். ஒருவேளை இரு அரசுகளும் எதிரெதிர் அணியில் இருந்தால், மாநில அரசால் எதுவும் செய்ய இயலாத ஒரு சூழ்நிலை உருவாகும்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் காங்கிரஸ் மாநில அரசின் உரிமைகளைத் தன் கையில் வைத்துக் கொள்ளத் துடிக்கிறது. அவ்வாறிருந்தால் மட்டுமே, பல மாநில அரசுகள் எதிர்காலத்தில் தன் கட்டுக்குள் வரும் என்று கணக்குப் போடுகிறது. பாஜக, காங்கிரஸ் போல அரசாணையில் அமர்வதில் பல சிக்கல்கள் இருப்பதால், அது சற்று நழுவி சட்ட விதி 252 ஐ கையில் எடுக்கிறது. இவ்விடயத்தில் மாநில அரசுகள் ஒருபோதும் தங்கள் உரிமையை விட்டுக் கொடுக்கக் கூடாது. தங்களுக்குத் தேவையான சட்டங்களைத் தாங்களே உருவாக்க முயல்வதில் தவறேதும் இல்லை.

கூட்டாட்சி தத்துவம் இருப்பதால் காங்கிரஸ் இன்று சற்றேனும் அடக்கி வாசிக்கிறது. ஹசாரே அணியினர் தங்களுடைய முக்கியக் கோரிக்கையாக லோகாயுக்தாவை லோக்பால் சட்டத்தோடு கொண்டு வர வேண்டும் என்று அர்த்தமில்லாமல் கோருவது வேடிக்கையே! ஹசாரே குழுவினரும் தங்கள் பங்குக்கு மற்ற கட்சிகளை அதிகம் பழிக்காமல் எல்லாவற்றுக்கும் காரணம் காங்கிரஸ் என்று தங்கள் அரசியலை செவ்வனே நகர்த்தும்.

எது எப்படியோ, மாநிலக் கட்சிகளின் தயவில்லாமல் இன்று எந்த தேசியக் கட்சியும் ஆட்சி செய்ய இயலாது என்பதால், லோகாயுக்தாவைக் கொண்டு வருவது எளிதல்ல. மத்திய அரசு சட்டங்களின் மூலமாக அதிகாரத்தை கைப்பற்ற முற்படுமேயானால், ஒருநாள் அது இந்திய ஒற்றுமையைக் குலைக்கும் என்பதில் ஐயமில்லை. பாரதத்தின் நலனுக்கும் அது உகந்தது அல்ல.

0

லஷ்மண பெருமாள்

மூன்றாவது அணி சாத்தியமா?

மூன்றாவது அணி.. மூன்றாவது அணி.. மூன்றாவது அணி. ஊடகங்கள் முழுக்க இந்த வார்த்தைகள்தான் ஆக்கிரமித்துள்ளன. பாதல் பதவியேற்பு விழாவுக்கு மமதா அழைக்கப்பட்டால்.. ஆஹா.. மூன்றாவது அணி. அகிலேஷ் யாதவுக்கு ஜெயலலிதா வாழ்த்து அனுப்பினால்… அதோ பார் மூன்றாவது அணி. அதிலும், ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் மாநிலக் கட்சிகளுக்குச் சாதகமாக வந்துசேரவே, மூன்றாவது அணி கோஷத்தைப் கெட்டியாகப் பிடித்துக்கொண்டன ஊடகங்கள்.

நியாயமாக ஊடகங்கள் சொல்லும் மாநிலக்கட்சிகள்தான் இந்தக் கோஷத்தை எழுப்பவேண்டும். ஆனால் அவர்கள் யாரும் அதைப்பற்றி அதிகம் பேசவில்லை. இப்போதுதான் லேசுபாசாகப் பேசத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, பிஜூ ஜனதா தளத் தலைவர் நவீன் பட்நாயக் பூர்வாங்கமாகப் பேசியிருக்கிறார். மற்றபடி, பல கட்சிகளும் மூன்றாவது அணிக்குச் சாதகமாகவோ அல்லது எதிர்ப்பாகவோ எதுவும் பேசவில்லை.

சரி, மூன்றாவது அணி என்றால் என்ன? அதில் யார் யாரெல்லாம் அங்கம் வகிப்பார்கள்?

இந்தியா முழுக்க காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் விரவிக்கிடக்கின்றன. இடதுசாரிகள் ஓரிரு மாநிலங்களில் செல்வாக்குடன் இருக்கிறார்கள். மற்றபடி, பல மாநிலங்களில் மாநிலக் கட்சிகள்தான் ஆட்சியிலும் இருக்கின்றன. செல்வாக்குடனும் இருக்கின்றன. நிறைய உதாரணங்களைச் சொல்லலாம்.

உத்தர பிரதேசத்தில் காங்கிரஸும் பாஜகவும் இருந்தபோதும் அங்கு நேரடிப்போட்டி என்பது சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் என்ற இரண்டு மாநிலக் கட்சிகளுக்கு இடையில்தான் இருக்கிறது. ஆட்சி நாற்காலியும் அவர்களுக்கு இடையேதான் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டிலும் இதே நிலைதான். அதிமுகவுக்கு மாற்று திமுக. திமுகவுக்கு மாற்று அதிமுக.

பிகாரில் ஆட்சியில் இருப்பது நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் என்ற மாநிலக்கட்சி. அங்கே லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் முக்கியமான மாநிலக்கட்சி. பஞ்சாபில் ஆட்சியைப் பிடித்திருப்பது அகாலிதளம் என்ற மாநிலக்கட்சியே. ஒடிசாவில் பிஜூ ஜனதா தளம் என்ற மாநிலக் கட்சியின் ஆட்சிதான் இருக்கிறது. ஜம்மு காஷ்மீரிலும் தேசிய மாநாட்டுக்கட்சி என்ற மாநிலக் கட்சியின் ஆளுகையில்தான் இருக்கிறது. மேற்கு வங்கத்திலும் திரிணாமுல் காங்கிரஸ் என்கிற மாநிலக்கட்சியின் ஆட்சிதான். ஆக, இந்தியாவின் பல முக்கிய மாநிலங்களில் ஆட்சியில் இருப்பது மாநிலக்கட்சிகளே.

மாநில அளவில் அரசியல் செய்துகொண்டிருக்கும் இத்தகைய கட்சிகளின் தலைவர்களுக்குத்தான் மத்திய அரசில் தங்கள் கட்சி அங்கம் வகிக்கவேண்டும் என்ற ஆசை இருந்தது. இன்னமும் இருக்கிறது. அதேசமயம், அந்த ஆசை பலருக்கும் ஏறக்குறைய நிறைவேறிவிட்டது. தற்போது அவர்களுடைய இலக்கு, பிரதமர் பதவி. அதைப் பல சமயங்களில் மறைமுகமாகவும் சில சமயங்களில் நேரடியாகவும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள்தான் மூன்றாவது அணியின் உறுப்பினர்களாக ஆகமுடியும்.

கடந்த காலங்களிலும் இதுபோன்ற மூன்றாவது அணி முயற்சிகள் நடந்துள்ளன. ஆட்சியையும் பிடித்துள்ளன. ஆனால் அவையெல்லாம் அற்ப ஆயுளாகவே முடிந்துவிட்டன. மூன்றாவது அணி என்றாலே கசப்பான ஒன்று என்ற அளவுக்கு கடந்த கால அனுபவங்கள் மோசமானதாக இருந்தன. அதன் காரணமாகவே, சம்பந்தப்பட்ட மூன்றாவது அணிக் கட்சிகள் காங்கிரஸுடனோ அல்லது பாஜகவுடனோ அணி அமைத்துக்கொண்டுவிட்டன.

ஐக்கிய ஜனதா தளம், பிஜூ ஜனதா தளம் போன்ற கட்சிகள் பாஜகவுடன் அணி அமைத்துக்கொண்டிருக்கின்றன. சரத்பவாரின் தேசியவாதி காங்கிரஸ் கட்சி தாய்க்கட்சியான காங்கிரஸுடன் மட்டுமே கூட்டணி வைத்துள்ளது. மமதா பானர்ஜி இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி அமைத்துள்ளார். மாயாவதியும் அப்படியே. அதிமுகவும் அப்படியே. திமுகவும் அப்படியே.

காங்கிரஸுடனோ அல்லது பாஜகவுடனோ அணி அமைத்து ருசிகண்ட பூனைகளாக மாறியிருக்கும் கட்சிகள் மூன்றாவது அணி என்ற விஷப்பரிட்சையை மீண்டும் எழுதுவார்கள் என்பது சந்தேகம்தான். தவிரவும், வெவ்வேறு மாநிலங்களில் விரவிக் கிடக்கும் இந்தக் கட்சிகள் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் அணி அமைத்துப் போட்டியிடுவது என்பது அத்தனை சுலபமான விஷயம் இல்லை. காரணம், இந்தக் கட்சிகள் அனைத்துமே அவரவர் பகுதிகளில் மட்டுமே செல்வாக்கு கொண்டவை. ஆகவே, தேர்தலுக்கு முந்தைய மூன்றாவது அணி என்பது சாத்தியமானது அல்ல. கௌரவ விஷயமாகக் கருதி, தேர்தலுக்கு முன்பே மூன்றாவது அணி உருவாகும்பட்சத்தில் அந்த அணிக்கு அதிக லாபம் இருக்காது.

அதேசமயம், தேர்தலுக்குப் பிந்தைய மூன்றாவது அணி என்பது சாத்தியப்படக்கூடிய ஒன்று. தேர்தல் முடிவுகள் வந்தபிறகு கணக்குகள் அனைத்தும் வெகுசுலபமாகிவிடும். காங்கிரஸுக்கோ அல்லது பாஜகவுக்கோ ஆட்சி அமைக்க எத்தனை இடங்கள் குறைகிறது என்பது துல்லியமாகத் தெரிந்துவிடும். அந்தக் குறையை இட்டுநிரப்பி, மத்திய அரசில் அங்கம் வகிக்க முயற்சி செய்வதுதான் மாநிலக் கட்சிகளின் பிரதான நோக்கமாக இருக்குமே தவிர ஊசலாட்டத்துடன் கூடிய மூன்றாவது அணியைக் கட்டமைத்து, ஆட்சியைப் பிடிப்பது நோக்கமாக இருக்காது. அமையவிருக்கும் ஆட்சியில் எந்தெந்த இலாக்காக்களைப் பெறுவதில்தான் கவனம் செலுத்துவார்கள். மூன்றாவது அணிக்கு விடைகொடுத்துவிடுவார்கள்.

ஒருவேளை, காங்கிரஸ், பாஜக இரண்டுக்குமே ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை; பிற கட்சிகளின் ஆதரவைக்கூட மிகவும் சிரமப்பட்டுத்தான் திரட்டவேண்டும் என்ற சூழ்நிலை வந்தால் மட்டுமே மூன்றாவது அணி முயற்சிகள் வெற்றிபெறுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. அப்போது இரண்டு தேசியக் கட்சிகளில் யாருடைய ஆதரவைப் பெறுவது என்பதில் சிக்கல்கள் முளைக்கும். இரண்டு கட்சித் தலைவர்களும் மூன்றாவது அணித்தலைவர்களை மிரட்டத் தொடங்குவார்கள். பொதுவேலைத் திட்டம் என்பார்கள். அதைச் செய் என்பார்கள். இதைச்செய் என்பார்கள். தங்கள் இஷ்டத்துக்கு ஆட்சி நடக்கவேண்டும் என்று வற்புறுத்துவார்கள்.

அதிலும், இடதுசாரிகள் கணிசமான இடங்களைக் கைப்பற்றி, அவர்களும் மூன்றாவது அணியில் இணையும் பட்சத்தில் மீண்டும் கூட்டணி மாற்றங்கள் கடகடவென அரங்கேறும். இடதுசாரிகள் சிலரை ஒதுக்குவார்கள். இடதுசாரிகளை சிலர் ஒதுக்குவார்கள். குழப்பங்கள் அதிகரிக்கும். ஆட்சி அமைப்பதற்கே இத்தனைக் குழப்பங்கள் என்றால் ஆட்சி அமைத்தபிறகு.. அடேயப்பா.. நினைத்துப்பார்க்கவே பயமாக இருக்கிறது.

நீதி: மூன்றாவது அணி அமைவது கடினம். அமைந்தால் ஆட்சி செய்வது அதைவிட கடினம்!

0

ஆர். முத்துக்குமார்