நான் மோடியை ஆதரிக்கிறேன் (கண்டிஷன்ஸ் அப்ளை)
செவ்வாய்க்கிரகத்தில் இருந்து இறங்கி வரும் ஒருவர் ஏதாவது ஒரு அரசியல்வாதியின் பேச்சைக் கேட்டாலோ ஊடகங்களில் வரும் செய்திகளைப் படித்தாலோ அறிவுஜீவிகளின் உரைகளைக் கேட்டாலோ மதக்கலவரங்கள் பற்றி ஒரே ஒரு முடிவுக்குத்தான் வருவார். அதாவது சுதந்தர இந்தியாவில் குஜராத்தில் மட்டுமே மதக்கலவரம் வெடித்துள்ளது. அதிலும் நரேந்திர மோடியே அந்தக் கலவரத்துக்கு முழுக்காரணம்!
இதுதான் எங்கு திரும்பினாலும் கேட்கும் கோஷமாக இருக்கிறது. ஆனால், பகுத்தறிந்து பார்க்கும் ஒருவரின் மனசாட்சியோ, உண்மை அது அல்ல என்பதைச் சொல்லும். மத்தியில் இனி கூட்டணி அரசே சாத்தியம் என்று ஆகிவிட்ட நிலையில் பிஜேபி ஆட்சியைப் பிடிக்கப் பெரும் தடையாக இன்றும் இருந்துவருவது மோடிபற்றி ஊடகங்களும் அறிவுஜீவிவர்க்கமும் உருவாக்கியிருக்கும் அந்தப் பிழையான கோஷமே.
இப்போது 2014 நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. பிஜேபி தரப்பில் மோடியே பிரதமராக நிறுத்தப்படப்போகிறார். மோடியின் சாதனைகள் பற்றி எவ்வளவுதான் பிஜேபி முன்வைத்தாலும் குஜராத் கலவரங்களே பிற கட்சிகளின் பிரதான ஆயுதமாக இருக்கப்போகிறது. இந்தநிலையில் சுதந்தர இந்தியாவில் இதுவரை நடந்திருக்கும் கலவரங்கள் குறித்து விரிவாகப் பார்ப்பது மிகவும் அவசியம்.
1967க்குப் பிறகு 47 இடங்களில் 58 மிகப் பெரிய வகுப்புவாத மோதல்கள் நடைபெற்றிருக்கின்றன. இந்தியாவின் தென் பகுதியில் 10, கிழக்குப் பகுதியில் 12, மேற்குப் பகுதியில் 16, வடக்கில் 20. 1964க்குப் பிறகு அகமதாபாத்தில் ஐந்து மிகப் பெரிய கவலரங்கள் வெடித்துள்ளன. ஹைதராபாத்தில் 4. கடந்த ஐம்பது ஆண்டுகளில் நடைபெற்ற கலவரங்களிலே 1990களில்தான் மிக அதிக வன்முறைச் சம்பவங்கள் அதாவது 23 கலவரங்கள் நடைபெற்றுள்ளன. 1970களில் ஏழு, 1980களில் 14, 2000 களில்13. இறந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 12,828 (தெற்கில் 597, மேற்கில் 3426, கிழக்கில் 3581, வடக்கில் 5224).
ஐந்து நபர்களுக்குக் குறைவாகக் கொல்லப்பட்ட சம்பவங்கள் கணக்கில் சேர்க்கப்படவில்லை. வகுப்புவாதம் சார்ந்த குண்டுவெடிப்புகளும் இதில் சேர்க்கப்படவில்லை.
100க்கு அதிகமாவர்கள் இறந்த வன்முறைச் சம்பவங்களில் எந்தெந்த கட்சி ஆட்சியில் இருந்ததிருக்கிறது. யார் முதலமைச்சராக இருந்திருக்கிறார் என்பதை முதலில் பார்ப்போம்.
1967க்குப் பிறகு நூற்றுக்கும் அதிகமான உயிரிழப்பு ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களும் அப்போது ஆட்சியில் இருந்த கட்சியும்.
| எண் | வருடம் | இடம் | உயிரிழப்பு | ஆண்ட கட்சி | முதலமைச்சர் |
| 1 | 1967 | ஹாதியா ராஞ்சி | 183 | ஜன கிராந்தி தளம் | எம்.பி.சின்ஹா |
| 2 | 1969 | அகமதாபாத் | 512 | காங்கிரஸ் | ஹிதேந்திர கே தேசாய் |
| 3 | 1970 | ஜல் காவ் | 100 | காங்கிரஸ் | வசந்தராவ் நாயக் |
| 4 | 1979 | ஜம்ஷேட்பூர் | 120 | ஜனதா கட்சி | கர்பூரி தாகூர் |
| 5 | 1980 | மொராதாபாத் | 1500 | காங்கிரஸ் | வி.பி.சிங். |
| 6 | 1983 | நெலே, அஸ்ஸாம் | 1819 | ஜனாதிபதி ஆட்சி | |
| 7 | 1984 | பிவந்தி | 146 | காங்கிரஸ் | வசந்ததா பட்டில் |
| 8 | 1984 | டில்லி | 2733 | காங்கிரஸ் (யூனியன் பிரதேசம்) | - |
| 9 | 1985 | அகமதாபாத் | 300 | காங்கிரஸ் | எம்.எஸ்.சோலன்கி |
| 10 | 1989 | பகல்பூர் | 1161 | காங்கிரஸ் | எஸ்.என்.சிங் |
| 11 | 1990 | டில்லி | 100 | யூனியன் பிரதேசம் | |
| 12 | 1990 | ஹைதராபாத் | 365 | காங்கிரஸ் | சென்னா ரெட்டி |
| 13 | 1990 | அலிகர் | 150 | ஜனதாதளம் | முலாயம் சிங் |
| 14 | 1992 | சூரத் | 152 | காங் + ஜனதா தளம் | சிமன்பாய் படேல் |
| 15 | 1992 | கான்பூர் | 254 | ஜனாதிபதி ஆட்சி | |
| 16 | 1992 | போபால் | 143 | ஜனாதிபதி ஆட்சி | |
| 17 | 1993 | மும்பை | 872 | காங்கிரஸ் | சுதாகர் ராவ் நாயக் |
| 18 | 2002 | குஜராத் | 1267 | பி.ஜே.பி. | நரேந்திர மோடி |
மேலே இடம்பெற்றிருக்கும் 18 கலவரங்களில் 10 காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது நடந்திருக்கின்றன. மூன்று ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்தபோதும் நான்கு பிற கட்சிகள் ஆட்சியில் இருந்தபோதும் நடந்திருக்கின்றன. பி.ஜே.பி. ஆட்சியில் இருந்தபோது ஒன்று.
இன்னொரு முக்கியமான புள்ளிவிவரம் நேரு குடும்பத்தின் ஆட்சி காலம் பற்றியது. 1950-1964-ல் நேரு இறப்பதுவரையிலான காலகட்டத்தில் சிறிதும் பெரிதுமாக 243 கலவரங்கள், 16 மாநிலங்களில் நடைபெற்றுள்ளன. இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் 15 மாநிலங்களில் 337 கலவரங்கள் நடைபெற்றுள்ளன.
ராஜீவ் காந்தியின் ஆட்சி காலத்தில் 16 மாநிலங்களில் 291 கலவரங்கள் நடைபெற்றுள்ளன. அதிலும் 1984-ல் தன் அம்மாவின் படுகொலைக்குப் பழிவாங்கும் நோக்கில் சீக்கியர்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட வன்முறைக்கு இணையாக இந்தியாவில் நடந்த எந்தவொரு வன்முறையையும் சொல்ல முடியாது. ஏனென்றால் அது இரு சமூகங்களுக்கு இடையில் நடந்த வன்முறை அல்ல. ஒரு கட்சியின் ரவுடிகள் ஒரு சமூகத்தின் அப்பாவிப் பொதுமக்கள் மீது நடத்திய கொலைவெறித் தாக்குதல் அது.
1950லிருந்து 1995 வரை 1194 வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அதில் 871 அதாவது 72.95 சதவிகிதம் காங்கிரஸின் காலத்தில் நடந்தவை.
இதுமட்டுமல்லாமல் 1990 முதல் 1995 வரை குஜராத்தில் மட்டும் 245 கலவரங்கள் நடைபெற்றுள்ளன. அதாவது நரேந்திர மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பே குஜராத்தின் மத மோதல் வரலாறு இது. மோடியின் ஆட்சி காலத்தில் 2002க்குப் பிறகான பத்து வருடங்களில் எந்த பெரிய மத மோதலும் நடந்திருக்கவும் இல்லை. இத்தனைக்கும் மோடி பெரும் வில்லனாகச் சித்திரிக்கப்படும் அந்த வன்முறைச் சம்பவங்களில் கொல்லப்பட்டவர்களில் 30%த்தினர் இந்துக்கள்.
இவையெல்லாம் மோடி செய்தது சரிதான் என்று சொல்வதற்காகப் பட்டியலிடப்பட்டவை அல்ல. உண்மையில் மோடியும் பி.ஜே.பி.யினரும் எந்த அளவுக்கு விமர்சிக்கப்படுகிறார்களோ அதைவிட பல மடங்கு கூடுதலாக காங்கிரஸும் அதன் தலைவர்களும் விமர்சிக்கப்படவேண்டும். ஆனால், ஊடகங்களையும் அறிவுஜீவிகளையும் பொறுத்தவரை மோடி மட்டுமே இந்தியாவின் ஒரே வில்லன்.
இந்தியாவில் நடைபெற்ற கலவரங்களில் சுதந்தரத்துக்கு முந்தைய காலகட்டத்தை எடுத்துக்கொண்டு பார்த்தால் அப்போதும் இந்துக்களே அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். இத்தனைக்கும் காந்தியடிகள் இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக முயற்சிகள் எடுத்த நேரம் அது. 1920-1940கள் வரையிலான காலகட்டத்தில் நடந்த கலவரங்கள் பற்றி அம்பேத்கர் தனது தாட்ஸ் ஆன் பாகிஸ்தான் நூலில் சில புள்ளிவிவரங்கள் சொல்லியிருக்கிறார். இந்துக்களும் முஸ்லீம்களும் சேர்ந்து ஒரு தேசமாக வாழ முடியுமா என்று சந்தேகப்படும் அளவுக்கு அந்த 20 ஆண்டுகளில் கிட்டத்தட்ட உள்நாட்டுப் போர் என்னும் அளவுக்கு கலவரங்கள் வெடித்துக் கிளம்பியிருக்கின்றன.
இந்தியாவில் மதக் கலவரங்கள் ஏற்படுவது சகஜம்தான். இதில் அலட்டிக்கொள்ள என்ன இருக்கிறது என்ற கோணத்தில் இவற்றைச் சொல்லவில்லை. ஆனால், 2002க்கு முன்பாகவும் மத மோதல்கள் நடந்துள்ளன. அதன் பிறகும் நடந்துவருகின்றன என்பதை ஒருவர் கவனத்தில் கொள்ளத்தானேவேண்டும்.
மதக் கலவரங்கள் எதனால், எப்படியெல்லாம் நடக்கின்றன?
இரு சமூகங்களுக்கு இடையே இருக்கும் அதிருப்தியும் கோபமும் மெள்ள மெள்ள வெடி குண்டு ஒன்றில் கெட்டிப்படுத்தப்படும் வெடி மருந்துபோல் இறுகிக்கொண்டே வரும். அரசாங்கம் உரிய தீர்வுகளைத் தராமல் இருக்கும்போது ஏதாவது அரசியல் கட்சி சிறு தீப்பொறியைப் பற்ற வைத்தால் போதும் வன்முறை வெடித்துக் கிளம்பும். பொதுவாக இரண்டு பக்கத்து அடிப்படைவாத சக்திகள்தான் இந்த கலவரத்தில் ஈடுபடும். இரு தரப்பிலும் இருக்கும் பெரும்பான்மை மக்கள் அமைதியாகத்தான் இருப்பார்கள். ஆனால், அவர்கள்தான் பெரும் அழிவுக்கு ஆளாகவும் செய்வார்கள்.
சமூகத் தளத்தில் : தனிமைபடுத்தப்பட்டது போன்ற உணர்வு. பொதுவாக, மைய நீரோட்ட நிகழ்வுகள், கொண்டாட்டங்களில் இருந்து விலகி நிற்கும் சிறுபான்மையினரிடம் இந்த தனிமைப்படுத்தல் நிகழும்.
பொருளாதாரம் : கைவிடப்பட்டதுபோன்ற உணர்வு. மோசமான கல்வி, வேலையின்மை போன்றவை பின்தங்க வைக்கும். நுகர்வுகலாசாரத்தின் கண்ணைக் கவரும் ஆடம்பரங்கள் பெரும் இழப்பின் வலியை ஏற்படுத்தும்.
அரசியல் : வோட்டு வங்கியைக் குறிவைத்துச் செயல்படும் அரசியல்வாதிகள் தமது சமூகம் பெரும் இழப்பை சந்தித்துவருவதாக தூண்டிவிடுவார்கள்.
நிர்வாகம் : காவல்துறை, குடிமை அரசு யந்திரம் போன்றவற்றால் குறிவைத்துத் தாக்கப்படுவதாக உணர்தல். தமது சமூகத்துக்கு அநீதி இழைக்கப்படுவதாக கருதுதல்.
மதம் : ‘அபாயம்’ நிறைந்த பகுதியில் நடக்கும் சிறு ஊர்வலம், சத்தமாகச் செய்யப்படும் ஒரு பிரார்த்தனை, புனித இடங்கள் இழிவுபடுத்தப்படுதல் என சிறு நெருப்பு போதும்.
வர்த்தகம் : பாரம்பரியமாக ஒரு சமூகம் வெற்றிகரமாக இயங்கிவரும் துறையில் இன்னொரு சமூகம் நுழைவதால் ஏற்படும் போட்டி, பொறாமை.
ஆவேசப் பேச்சுகள் : எதிர் தரப்பைச் சீண்டும் வகையிலான பேச்சுகள், ஒரு பிரிவுக்கு மட்டும் அதிக சலுகைகள் தருவதாக தூண்டிவிடுதல்.
வகுப்பு மோதல்களைப் போன்றதுதான் வெடி குண்டு சம்பவங்களும். ஏதாவது ஒரு பிரிவின் அடிப்படைவாத சக்திகள் தமது ஆத்திரத்தை அப்பாவி மக்களைப் பொது இடங்களில் வெடிகுண்டு வைத்துக் கொல்வதன் மூலம் வெளிப்படுத்துவதுண்டு. இதில் குற்றம் இழைத்தவர்களை கலவரங்களில் ஈடுபடுபவர்களைப்போல் எளிதில் அடையாளம் காண முடியாது. அவர்கள் வெளிநாடுகளில் இருந்து வந்து வன்கொடுமையை நிகழ்த்திவிட்டுத் தப்பித்துப் போகிறவர்களாகவும் இருக்கக்கூடும். இதனால் எங்கு வெடி குண்டு வெடித்தாலும் பகை தேசத்தின் மீது பழியைப் போடுவது வாடிக்கை. ஆனால், எந்தவொரு வெடி குண்டு வெடிப்பும் உள்ளூர் ஆதரவு இல்லாமல் நடக்க வாய்ப்பு மிகவும் குறைவுதான்.
1993 மும்பை வெடி குண்டு வெடிப்பில் இருந்து இந்தியாவில் வெடி குண்டு தாக்குதல்களின் அணிவரிசை ஆரம்பித்தன. 1993-ல் இருந்து 2013 மார்ச் மாதம் வரை நடந்த வெடிகுண்டு தாக்குதல்களில் 1446 இந்தியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 4333 பேர் காயமடைந்திருக்கிறார்கள். காஷ்மீரிலும் அஸாமிலும் நடந்துவரும் வெடிகுண்டு தாக்குதல்களை இதில் சேர்க்கவில்லை.
எங்கெங்கு வெடிகுண்டுகள் வெடித்துள்ளன. அப்போது எந்தக் கட்சி ஆட்சியில் இருந்திருக்கிறது?
எண் வருடம் இடம் உயிரிழப்பு ஆண்ட கட்சி
1 1993 மும்பை 257 காங்கிரஸ்
2 2003 மும்பை கேட்வே 52 காங்கிரஸ் – தேசியகாங்கிரஸ்
3 2006 மும்பை ரயில் 209 காங்கிரஸ் – தேசியகாங்கிரஸ்
4 2008 26/11 186 காங்கிரஸ் – தேசியகாங்கிரஸ்
5 2002 காந்தி நகர் 25 பி.ஜே.பி.
6 2005 டெல்லி, பரன்ஜி 63 காங்கிரஸ்
7 2006 வாரணாசி 28 சமாஜ்வாதி கட்சி
8 2006 மாலேகாவ் 28 காங்கிரஸ் – தேசியகாங்கிரஸ்
9 2007 சம்ஜோதா எக்ஸ்பிரஸ் 66 காங்கிரஸ்
10 2007 பானிப்பட் 66 காங்கிரஸ்
11 2007 ஹைதராபாத் 42 காங்கிரஸ்
12 2008 ஜெய்பூர் 63 பி.ஜே.பி.
13 2008 அகமதாபாத் 50 பி.ஜே.பி.
14 2008 குவஹாத்தி 84 காங்கிரஸ்
மேலே கூறப்பட்டுள்ள 14 வெடி குண்டு தாக்குதல்களில் 10 காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது நடந்துள்ளன.
பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை நிபுணரான பி.ராமன் 2009-ல் குறிப்பிட்ட ஒரு விஷயத்தை இங்கு சொல்வது பொருத்தமாக இருக்கும். 1981க்குப் பிறகு நான்கு மிகப் பெரிய வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்துள்ளன. நான்கிலுமே ஆட்சியில் இருந்தது காங்கிரஸ்தான். 1991க்குப் பிறகு அயல் நாட்டினர் மூன்று முறை குறி வைத்துத் தாக்கப்பட்டுள்ளார்கள். இரண்டு ஜம்மு காஷ்மீரில். ஒன்று மும்பையில். மூன்று சம்பவங்களின்போதும் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ்தான். 1971க்குப் பிறகு ஐ.எஸ்.ஐ. தூண்டுதலின்பேரில் ஏழு விமானக் கடத்தல்கள் நடைபெற்றுள்ளன. அதில் ஆறு காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது. ஒன்று பி.ஜே.பி. ஆட்சியில் இருந்தபோது. ஏர் இந்திய விமானம் ஒரு முறை வானில் வெடி வைத்து தகர்க்கப்பட்டு 250க்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். அப்போது ஆட்சியில் இருந்தது காங்கிரஸே.
வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட 1446 பேர்களில் 52% பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள். காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த முதல்வர்களோ தலைவர்களோ மும்பையை வெடி குண்டுதாக்குதல்களில் இருந்து காப்பாற்ற என்ன நடவடிக்கைகள் எடுத்திருக்கிறார்கள். இந்த தாக்குதல்களுக்கு அவர்களைக் குற்றம்சாட்டி யார் கேள்வி கேட்டிருக்கிறார்கள்?
வன்முறைக் கலவரங்களைத் தடுக்கத்தான் முடியவில்லை. அது நடந்த பிறகாவது நீதித்துறையும் காவல்துறையும் சரியாக நடந்துகொள்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. இந்த விஷயத்திலும் காங்கிரஸின் ஆட்சிக் காலமே பிஜேபியைவிட பல மடங்கு படு மோசமாக இருந்துவருகிறது.
இடதுசாரி மற்றும் ”நடுநிலை’ அறிவுஜீவிகள் இந்த விஷயங்களை ஒருபோதும் கவனத்தில் கொண்டதே கிடையாது. பி.ஜே.பி. குறிப்பாக நரேந்திர மோடி மட்டுமே அவர்களுடைய செல்ல இலக்காக இருந்துவருகிறார். இன்னும் தெளிவாகச் சொல்வதானால், இந்து அடிப்படைவாத சக்திகள் மட்டுமே எல்லா பிரச்னைகளுக்கும் காரணம் என்ற அணுகுமுறையே அவர்களிடம் இருக்கிறது. மோடியைப் பார்க்கும்போது பூதக்கண்ணாடியை அணிந்துகொள்பவர்கள், காங்கிரஸைப் பார்க்கும்போது கண்களையே கழட்டிவைத்துவிடுகிறார்கள்.
இந்த உலகில் எல்லா நாடுகளிலும் மதக் கலவரங்களும் வெடிகுண்டு விபத்துகளும் நடந்த வண்ணமே இருக்கின்றன. ஆனால், இந்தியாவுக்கும் பிற பகுதிகளுக்கும் இடையில் பெரியதொரு வேறுபாடு உண்டு. உலகின் பிற பகுதிகளில் எல்லாம் பெரும்பான்மை மதத்தைச் சார்ந்த அடிப்படைவாத சக்திகளே அதிக தாக்குதல்களை நிகழ்த்தியிருக்கும். இந்தியாவில் மட்டுமே சிறுபான்மை மதம் அதிக தாக்குதல்களை நிகழ்த்துவதாக இருக்கிறது. ஆனால், பெரும்பான்மை மதத்தின் அடிப்படைவாத சக்திகள் மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த பெரும்பான்மை மதமே எல்லாவற்றுக்கும் காரணம் என்று கட்டம் கட்டப்பட்டுவருகிறது. இது இரட்டை அநியாயம்.
மேலே சொல்லப்பட்டிருப்பவை நவீன கால உதாரணங்கள் மட்டுமே. சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டால் இந்த சித்திரத்தின் முழு பரிணாமம் புரியவரும். ஆனால், ஊடகங்களும் அறீவுஜீவி வர்க்கமும் ஒருதலைப்பட்சமான நிலைபாட்டையே எடுத்துவருகின்றன.
பிரிவினை காலகட்டத்தில்கூட இந்தியாவும் (இந்து, சீக்கியர்களும்) பாகிஸ்தானுக்கு (முஸ்லீம்களுக்கு) இணையாக வன்முறையில் ஈடுபட்டது என்று சொல்வதில்தான் அவர்களுக்கு மிகுந்த உற்சாகம். பாகிஸ்தானில் 90 சதவிகித முஸ்லீம்களுக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட பத்து சதவிகித இந்துக்கள் அனைவருமே தாக்கப்பட்டனர். இந்தியாவிலோ பஞ்சாபை ஒட்டிய எல்லைப் பகுதி நீங்கலாக பிற 20க்கு மேற்பட்ட மாநிலங்களில் சுமார் 85% இந்துக்களுக்கு மத்தியில் இருந்த பத்து சதவிகித முஸ்லீம்கள் மேல் ஒரு கீறல்கூட விழுந்திருக்கவில்லை. இந்த உண்மை ஒரு எளிய விஷயத்தை நம் முன் அழுத்தமாகச் சொல்கிறது: எல்லைப் பகுதியில் நடந்த எதிர் தாக்குதல்கூட மத துவேஷத்தால் நடந்திருக்கவில்லை. சொத்து சுகங்களையும் பூர்விக மண்ணையும் விட்டு அநாதையாகத் துரத்தப்பட்ட சோகமும் ஆத்திரமுமே இந்தியத் தரப்பு தாக்குதலுக்குக் காரணமாக இருந்திருக்கிறது. இந்து மத அடிப்படைவாதத்துக்கு இந்துப் பெரும்பான்மையின் ஆதரவு துளிகூடக் கிடையாது என்பதை உணர்த்தும் எளிய உண்மை இது. இதை நீங்கள் எந்த அறிவுஜீவியின் மயிர்பிளக்கும் வாதத்திலும் கேட்கவே முடியாது. இன்னும் சொல்லப்போனால், இந்தியாவின் அஹிம்சை வழியிலான சுதந்தரப் போராட்டத்தை எள்ளி நகையாட இந்த பிரிவினைக் கால வன்முறையை முன்வைக்கும் அபத்தத்தைக்கூட நீங்கள் கேட்க முடியும்.
இந்த அரசியல் சரி (?) தன்மையின் இன்னொரு வடிவம்தான் மோடிமட்டுமே மத கலவரத்தின் அடையாளமாகச் சித்திரிக்கப்படுவதும். இதையெல்லாம் எதற்காக அவர்கள் செய்கிறார்கள். ஒருவேளை உலக வரலாற்றில் மத ரீதியான வெறுப்பு மிக மிகக் குறைவாக இருந்துவந்திருக்கும் இந்தியாவில், அனைத்து மத அகதிகளுக்கும் அடைக்கலம் தந்த இந்தியாவில், உலகில் எந்த நாட்டையும் மத ரீதியாக வன்முறைமூலமோ ஆசை காட்டியோ அடக்கி ஒடுக்க ஒருபோதும் முன்வந்திருக்காத பெரும் பாரம்பரியத்தைக் கொண்ட இந்தியாவில் இப்படி ஒரு மதம் சார்ந்த மாநில அரசு அமைந்தது குறித்த வேதனை அவர்களை ஆழ்மனத்தில் இருந்து வாட்டுகிறதா? அதனால்தான் வள்ளல் பரம்பரையில் பிறந்த கருமியைக் கரித்துக் கொட்டுவதுபோல் மோடியை சுற்றி வளைத்துத் தாக்குகிறார்களா?
கிறிஸ்தவ, இஸ்லாமிய அடிப்படை சக்திகள் சரித்திரத்தின் பக்கங்களில் பெருக்கெடுத்தோடச் செய்திருக்கும் ரத்த ஆறுகள் பற்றி அவர்களுக்குத் தெரிந்துதான் இருக்கும். அதனால்தான் அது குறித்து பெரிதும் எதுவும் சொல்வதில்லையா..? ஓநாய் 10 பேரைக் கடித்துக் கொன்றது என்று சொன்னால் அதில் எந்த அதிர்ச்சியும் ஒருவர் அடையப்போவதில்லை. பசு ஒருவரைத் தன் கொம்புகளால் தூக்கி எறிந்தது என்றால் அது அதிர்ச்சி தரும் விஷயம் மட்டுமல்ல. அபாயமானதும்தானே. அந்தவகையில் அவர்களின் ஆதங்கம் புரிந்துகொள்ள முடிந்த ஒன்றுதான். மோடி இப்படி நடந்துகொண்டிருக்கக்கூடாது. அதுவும் எந்த ஆன்மிகப் பாரம்பரியம் உலகுக்கு எல்லா நதிகளும் கடலை நோக்கியே என்ற பெரும் உண்மையை உரத்துச் சொன்னதோ அந்த வழியில் பிறந்த பிறகும் மத அடையாளத்தை மையமாக வைத்து வெறுப்பை வெளிப்படுத்தியது மிக மிகத் தவறான செயலே.
உயிரிழப்பு என்பது எப்போதுமே வேதனைக்குரிய விஷயமே. அது இந்துவாக இருந்தாலும் முஸ்லீமாக இருந்தாலும். எல்லா அடிப்படைவாத சக்திகளும் விமர்சிக்கப்படவேண்டியவையே. ஆனால், கொலைகாரனையும் கொள்ளைக்காரனையும் தப்பித்துப் போகவிட்டுவிட்டு ஜேப்படி திருடனை மரத்தில் கட்டிவைத்து அடிப்பது என்பது நல்ல காவலனுக்கு அழகல்ல. உண்மையைப் பேசுவது பெரும்பான்மை அடிப்படைவாத சக்திகளுக்கு சாதகமாகிவிடுமோ என்ற பயத்தினால் அறிவுஜீவிகள் இப்படியான விசித்திரமான நிலைப்பாடை எடுத்திருக்கிறார்கள் என்றால் அது, மிகவும் தவறான, வீணான பயமே.
அந்தவகையில் ஊடகங்களும் அரசியல்வாதிகளும் அறீவுஜீவி வர்க்கமும் குஜராத் பற்றியும் மோடி பற்றியும் பேசிவருவதை ஒருவர் பொருட்படுத்தத் தேவையே இல்லை. அதில் உண்மையும் இல்லை. நேர்மையும் இல்லை. சமூக அக்கறையும் இல்லை. இருப்பதெல்லாம் இந்துத்துவ துவேஷம் மட்டுமே.
ஆனால், இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இன்னொருவர் செய்யும் தவறு நம் தவறை ஒருபோதும் நியாயப்படுத்திவிடமுடியாது. மோடி மட்டுமே தவறு செய்தார் என்று சொல்வது எப்படித் தவறாகுமோ அதுபோலவேதான் மோடி தவறே செய்யவில்லை என்று சொல்வதும். இரண்டு எதிர்நிலைகளுமே மிகவும் அபாயகரமானவையே.
குஜராத்தில் இந்து-முஸ்லீம் கலவரங்கள் நீண்டகாலமாகவே நடந்துவருவது உண்மைதான். என்றாலும் அந்த மண்ணுக்கு இன்னொரு மகத்துவமும் உண்டு. அது காந்தி பிறந்த மண். உலகுக்கு அஹிம்சையையும் மத நல்லிணக்கத்தையும் போதித்தவர் பிறந்த மண். பிரிவினைக்கால கலவரத்தில் தன் மகன் கொல்லப்பட்டதற்கு என்ன பதில் என்று ஆவேசத்துடன் கேட்ட இந்துவைப் பார்த்து, இதே போல் கலவரத்தில் கொல்லப்பட்ட ஒரு முஸ்லீம் குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்துவா… அதுவும் அந்தக் குழந்தையை ஒரு முஸ்லீமாகவே வளர்த்து வா என்று சொன்னவர் பிறந்த மண். அங்கு இப்படியான வன்முறை நடந்தது என்பது ஜீரணிக்கவே முடியாத விஷயமே.
கோத்ராவில் கர சேவகர்களின் படுகொலை நடந்தபோது காந்தி இருந்திருந்தால் இப்படி நரகத்தின் கதவுகளைத் திறந்துவிட்டிருக்க முடியுமா? சில அடிப்படைவாத சக்திகள் செய்த செயலுக்காக ஒட்டுமொத்த சமூகத்தைப் பழிவாங்கும் வெறிச்செயலை எப்படி ஒரு உண்மையான இந்துவால் பொறுத்துக்கொள்ள முடியும்? இந்துத்துவவாதிகளுக்குப் புரியும் மொழியில் கேட்பதானால், மோடியின் அரசு முஸ்லீம்களையா கொன்றது? சக இந்தியர்களை அல்லவா கொன்று குவித்திருக்கிறது. இந்தியர்களைக் கொன்று குவித்துப் பெறும் வெற்றியை உண்மையான இந்துவோ இந்தியனோ எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
காங்கிரஸ் அரசு இந்தியாவின் அழிவுக்காக அயராது பாடுபடுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. தலைவி எவ்வழி… தொண்டர்கள் அவ்வழி. ஆனால், வலுவான பாரதத்தை உருவாக்குவதாகச் சொல்லும் ஒருவர் ஒரு சமூகத்தைத் தனிமைப்படுத்தித் தாக்குவது எந்தவகையிலும் தேச நலன் சார்ந்த செயலாக இருக்கமுடியாதே.
அமெரிக்காவின் மீது ஆயிரம் விமர்சனங்கள் வைக்க முடியும் என்றாலும் ஒரு விஷயத்தில் மட்டும் அவர்களைப் பாராட்டித்தான் ஆகவேண்டும். உலகில் எங்கு வேண்டுமானாலும் சென்று போராடுவார்கள். அதில் எவ்வளவு ரத்த ஆறு பெருக்கெடுத்தாலும் பரவாயில்லை… ஆனால், தங்கள் பூமியில் ஒரு சொட்டு ரத்தம்கூடச் சிந்தக்கூடாது என்பதில் தெளிவாக இருப்பார்கள். அதனால்தான் 9/11 தாக்குதலில் ஈடுபட்டது முஸ்லீம்கள்தான் என்பது தெரிந்த பிறகும் கண்ணில் தென்பட்ட முஸ்லீம்களை எல்லாம் வெட்டிக் குவிக்கவில்லை. தங்கள் வீட்டை சுத்தமாக வைத்துக்கொண்டு, ஆப்கானிஸ்தானையும் இராக்கையும் குறிவைத்தார்கள். பக்கத்தில் இருப்பவர்களுடனான நட்பை முறித்துக் கொள்ளவில்லை. தொலைதூர எதிரிகளைத் தங்கள் இலக்காகத் தேர்ந்தெடுத்துக்கொண்டார்கள். அம்பைத் தாக்கவில்லை. அம்பை எய்த கரங்களை வெட்டி எறிந்தார்கள்.
அவர்கள் ஆப்கானிஸ்தானிலும் இராக்கிலும் செய்துவரும் அராஜகத்தை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. ஆனால், ஒரு அமெரிக்கராக இருந்து பார்த்தால் புஷ்ஷும் ஒபாமாவும் அவர்களுடைய ரட்சகரே. மோடியோ இந்துத்துவம் பேசி இந்தியர்களைக் கொல்லும் தவறை அல்லவா செய்துவிட்டிருக்கிறார். அமெரிக்க ரட்சகர் போல் வெண்ணிற அங்கிக்குள் குறுவாளை மறைத்து வைத்திருக்கும் தந்திரம் நமக்குத் தேவை இல்லை. ஆனால், சொந்த மண்ணில் ஒரு சொட்டு ரத்தம்கூடச் சிந்தக்கூடாது என்ற விஷயத்தை மட்டும் அமெரிக்கர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளவேண்டும்.
கோத்ராவில் கரசேவகர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்ற செய்தி தெரிய வந்ததும் என்ன செய்திருக்கவேண்டும்? உண்மையில் இந்தியாவின் மத நல்லிணக்கத்தைக் குலைக்க விரும்பிய சதிகாரர்கள் செய்த நாசகாரச் செயல் அது. ஒரு திட்டமிட்ட பொறி. புத்தியுள்ள ஒருவர் அதில் விழாமல் தப்பிக்கத்தானே பார்த்திருக்கவேண்டும். இந்து முஸ்லீம் இடைவெளியை பெரிதாக்கச் செய்யப்பட்ட அந்த செயலைக் கொண்டே இந்து – முஸ்லீம் ஒற்றுமையை அல்லவா பலப்படுத்தி இருக்கவேண்டும். கொல்லப்பட்ட கரசேவகர்களின் அஸ்தியை தேசம் முழுவதும் ஊர்வலமாக எடுத்துச்சென்று 56 சமஸ்தானங்களிலும் ஒரு பிரமாண்ட இராமர் கோவிலை இஸ்லாமிய சமூகத்தின் ஆதரவுடன் கட்டி எழுப்பி இருக்கவேண்டும். சில அடிப்படைவாத சக்திகள் நீங்கலாக, ஒட்டு மொத்த இஸ்லாமிய சமூகமும் இதற்கு நிச்சயம் கல்லெடுத்துக் கொடுத்திருக்கும். அப்துல்கலாம் போன்ற எத்தனையோ மத நல்லிணக்க சிந்தனைகொண்ட முஸ்லீம் தலைவர்களை முன்வைத்து அதை எளிதில் நிகழ்த்தியிருக்க முடியும்.
அப்படியாக பழி வாங்குதலின், வெறுப்பின் அடையாளமாக இன்று இருக்கும் கோத்ராவை தியாகத்தின் சின்னமாக மத நல்லிணக்கத்தின் அடையாளமாக ஆக்கியிருக்கவேண்டும். மனதில் இருக்கவேண்டிய மத நல்லிணக்க தெய்வத்தை விரட்டி அடித்துவிட்டு வெளியில் கருங்கல்லால் ஆன கோவிலைக் கட்டிவைத்தால் அது கோவிலாக இருக்காது. மிகப் பெரிய சமாதியாகத்தான் இருக்கும்.
இன்றைக்கு இஸ்லமியர்களைக் கட்டி அணைத்து அன்பை வெளிப்படுத்துவதுபோல் அன்றே ஆத்மார்த்தமாக நட்பின் கரங்களை நீட்டிருக்கவேண்டும். அன்றும் மோடி ஒரு கரத்தை நீட்டினார். ஆனால் அந்தக் கரத்தில் ரத்தம் தோய்ந்த கொலை வாளல்லவா மின்னியது. காந்தியின் மண்ணில் பிறந்த அவரால் எப்படி அதைச் செய்ய முடிந்தது. காந்திய வழியில் நின்று மது விலக்கைப் பெருமளவுக்கு வெற்றிகரமாக அமல்படுத்திவந்திருக்கும் மோடி காந்தியிடமிருந்து மத நல்லிணக்கத்தையும் அல்லவா கற்றுக் கொண்டிருக்கவேண்டும்.
இப்போதும் எதுவும் கெட்டுப் போகவில்லை. மோடிக்கு இந்தியாவை வழி நடத்தும் தலைமைப் பதவி வரவிருக்கிறது. பதவி உயர்வுகளுடன் சில பொறுப்புகளும் சேர்ந்து வரும். அனைவரையும் அரவணைத்துச் செல்லும் வளர்ச்சியே தன்னுடைய இலக்கு என்பதை மோடி வெளிப்படையாக அறிவிக்கவேண்டும். கோத்ரா கலவரங்கள் தன் ஆட்சியின் முதல் கலவரம் மட்டுமல்ல… அதுவே கடைசி கலவரமும்கூட என்ற வாக்குறுதியைத் தரவேண்டும். நடந்த துர்நிகழ்வுகளுக்கு மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்கவேண்டும்.
அறிவிஜீவிகளுக்கும் ஊடகங்களுக்கும் பிஜேபியும் மோடியும் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஆனால், ஓர் எளிய இந்தியனுக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும். வேறென்ன… அவர்களின் அனுமதியைக் கேட்டுத்தானே வீதி வீதியாக வலம் வரப்போகிறார்கள்.
(ஆழம் ஜூன் 2013 இதழில் வெளியான, ‘மோடி மட்டும்தான் வில்லனா?’ கட்டுரையின் முழுமையான வடிவம்).















