தலைப்பு வயதானவர்களை இழுபடுத்துவதாக அமைந்திருந்தால் மன்னிப்பு கோருகிறேன். சொல்ல வரும் விஷயத்துக்கு அழுத்தம் கொடுக்க நடைமுறையில் உள்ள ஒரு சொல்லாடலை அந்த நோக்கத்துக்காக மட்டுமே பயன்ப்டுத்தியிருக்கிறேன். மீண்டும் மன்னிக்கவும்.
தமிழ் கூறும் நல்லுலகில் வாழும்படி நேர்ந்தோருக்கு சில அனுபவங்கள் தவிர்க்க முடியாதது.
‘அந்தக் காலத்து வால்வு ரேடியோ மாதிரி வருமா? என்ன க்லியரான சவுண்டு? ட்ரான்ஸிஸ்டர்லையெல்லாம் அப்பிடி க்லியரா வருமா?’ சமீபத்தில் கூட நண்பரொருவர் சலித்துக் கொண்டிருந்தார். ‘என்னதான் இருந்தாலும் பிலிம் கேமரா மாதிரி வருமா? ஏதோ டிஜிட்டல்ங்குறாய்ங்ய.’ இத்தனைக்கும் அவர் 20களின் இறுதியில் உள்ள ஒரு இளைஞர்.
ஒவ்வொரு புதிய தொழில்நுட்பம் வரும்போதும் வழக்கொழிந்து கொண்டிருக்கும் முந்தையது தான் சிறந்தது என்று வாதாடும் ஒரு தலைமுறை எல்லா இடங்களிலும் இருக்கலாம். நமக்கு தமிழ் பேசத்தெரியும், இந்தப் புலம்பல்களையெல்லாம் அன்றாடம் கேட்டுக் கொண்டிருக்கிறோம், இதனால் சமயங்களில் பாதிப்பு கூட அடைந்திருக்கிறோம் என்பதனால் தாள முடியாமல் இப்படி புலம்ப வேண்டியிருக்கிறது.
எண்பதுகளின் இறுதியில் பால்பாயிண்ட் பேனா தொழில்நுட்பம் செறிவடைந்து மலிவு விலைகளில் அதிகம் புழக்கத்துக்கு வர ஆரம்பித்தது (அறிவு ஜீவிகளுக்கு பால்பாயிண்ட் பேனா 1880களிலேயே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என்று எனக்கும் தெரியும்; ஆனால் எனது அனுபவத்தில் 1980களின் இறுதியில்தான், குறைந்த பட்சம் இந்தியாவில் அதன் பயன்பாடு அதிகரிக்க ஆரம்பித்ததாக உணர்கிறேன்). மேலும், எழுதுவதற்கும் அது சுலபமானது. ஆனால் 90% தலைமுறைக்கு முந்தைய, பாடபுத்தகங்களில் முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை கண்ணைமூடிக் கொண்டு ஒப்பிக்கும் திறம் கொண்ட, ஆசிரியர்கள் (அவ்வாறுதான் அழைக்கப்பட்டார்கள்) கொண்ட ஒரு பள்ளியில் அனைவரும் மை பேனா கொண்டுதான் எழுத வேண்டும் என்ற ஒரு மொக்கைச் சட்டம்.
ஏன் பால்பாயிண்ட் பேனா கொண்டு எழுதக்கூடாது என்று கேட்டுவிடவும் முடியாது. மூஞ்சியை 5 வினாடி உற்றுப் பார்த்தாலே 3 வருடம் ஒரே வகுப்பில் உட்கார வைத்துவிடும் அகந்தை கொண்ட வாத்திகளிடம் வாயைத் திறந்து கேள்வி கேட்பதென்பது சொந்தமாக செலவு செய்து சூனியம் வைத்துக் கொள்வதற்கு ஒப்பானது என்பது தமிழ்கூறும் நல்லுலகில் உள்ள பள்ளிகளில் படித்த அனைவருக்கும் தெரியும். கல்வி இந்த முறையில் கற்பிக்கப்பட்டு இவர்களும் இன்னும் 2 தலைமுறைக்கு முன்பு ஆசிரியர்களாய் பணியாற்றியிருந்தால், மைக்கூடு கொண்டு வந்து மயிலிறகால்தான் எழுத வேண்டும் என்று ஆணையிட்டிருப்பார்களாயிருக்கும். தப்பித்தோம்.
0
இவ்வாறான தமிழ்ச் சூழலில், நமது அரசியல் சூழல் எப்படியென்றால், அய்யா செஞ்சா அம்மாவுக்குக் குத்தம், அம்மா செஞ்சா அய்யாவுக்குக் குத்தம். நூலக இடமாற்றம். இது அவர்களுக்குள்ளே நடக்கும் அகந்தை யுத்தம். கடந்த அம்மா ஆட்சியில் புதிய சட்டமன்ற கட்டடத்துக்காக ஒதுக்கப்பட்ட ஒரு இடம், ஆட்சியை இழக்கப் போகிறோம் என்று தெரிந்தவுடன், அடுத்த ஆட்சியில் வேறு எதற்கும் பயன்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, அய்யாவால் அவசர அவசரமாக, குயுக்தியுடன் கட்டப்பட்டது இந்த நூலகம். இதற்கெல்லாம் அசருகின்ற ஆளா அம்மா? ‘தூக்குடா நூலகத்தை’ என்று ஆணையிட்டு விட்டார்.
ஆனாலும், இந்த ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பாக, தேவைப்படும் அளவைவிட, இருமடங்கு செலவு செய்து, அய்யா ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துக் கொண்டார். மொத்தத்தில், குழந்தைகள் படித்து, அறிவினை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற அக்கறை அய்யா(ஐயா?)வுக்கோ அல்லது சர்வதேச தரத்தில் (முதலில் இந்தப் பதத்துக்கு, தமிழகத்தில் ஒரு தடையுத்தரவு வேண்டுமைய்யா) ஒரு குழந்தைகள் மருத்துவமனை அமைத்து, தமிழ்க் குழந்தை ஒவ்வொன்றும் குஷ்பு போல (நன்றி குஷ்புவின் தேர்தல் பிரச்சாரம்) கும்மென்றிருக்க வேண்டுமென்ற அக்கறை அம்மாவுக்கோ சிஞ்சித்தும் இல்லை. இவை இரண்டில் ஒன்றை நீங்கள் மறுத்தாலும் இந்தக் கட்டுரையை இதற்கு மேற்கொண்டு படிப்பது உங்களுக்கு(ம் எனக்கும்) நேர விரயம் தான்.
இவை அன்றாடம், நமது தோல்களின் தடிமனைக் கூட்டிவிட்ட ஒரு தமிழ்நாட்டு அரசியல் நிகழ்வுதான். ஆனால், இதனைத் தொடர்ந்து, எழுத்தாளர்கள் என்று அழைக்கப்ப்டும் ஒரு குழுவினர் இதற்கு ஆற்றிய எதிர்வினைதான் மிகவும் அருவருக்கத்தக்கதாக இருந்தது. அதிலும், விகடனில் யாழ் நூலகத்தைக் கொளுத்திய நிகழ்வுடன் கூட ஒரு எழுத்தாளர் ஒப்பிட்டிருந்தார்.
இந்த சர்ச்சை ஆரம்பித்து (அநேகமாக முடிந்து) நூற்றாண்டுகளாகி விட்ட பின்பு எதற்கு இப்படி ஒரு பேத்தல் என்று யாருக்கேனும், ஐயமிருந்தால் அவர்களுக்கு ஒரு விளக்கம். அப்போதே இது போன்றதொரு கட்டுரை வந்திருந்தால், ஒன்று, இதற்கு கட்சி சாயம் பூசப்பட்டிருக்கு அல்லது பத்தோடு பதினொன்றாக இதுவும் ஒரு கோவிந்தாவாகியிருக்கும். இன்று, நூலகத்தின் எதிர்காலம் என்ன என்று எந்த சத்தமுமில்லை. ஏதாவது ஒரு சர்ச்சை வரும்போது ஆதரவாகவோ எதிர்ப்பாகவோ காட்டுக்கத்தல் கத்தி விட்டு ஓய்ந்து விடுவது தான் தமிழ் கலாச்சாரம். இது தான் என்னுடைய தன்னிலை விளக்கம்.
0
ஒரு பத்து ஆண்டுக்கு முன்பு கூட, நூலகம் என்பது சமுதாய அறிவூக்கத்துக்கு ஒரு இன்றியமையாத தேவையாயிருந்திருக்கலாம். எனது சொந்த அனுபவத்தில் 1997ல், ஒரு குறிப்பிட்ட தகவலுக்காக, அதற்கான புத்தகத்துக்காக, நானும் எனது நண்பனும், நாங்கள் பயணித்த ஊர்களில், கண்ணில்பட்ட நூல் நிலையங்கள் அனைத்துள்ளும் நுழைந்து வெகு நேரம் செலவிட்டுத் தேடியிருக்கிறோம். சென்னையில், பேருந்தில் சென்று கொண்டிருக்கும்போது, ஏதாவது நடைபாதைப் புத்தகக் கடை தென்பட்டு விட்டால் கூட, ஓடும் பேருந்தில் இருந்து குதித்துச் சென்று தேடியிருக்கிறோம் (தாகம்! அறிவுத்தாகம்!!).
மோட்டார் வாகனக் கண்டுபிடிப்புக்குப் பின்னர், நடந்து ஊர்களைக் கடந்த அனுபவத்தை நினைத்துப் பார்ப்பது போல் உள்ளது. இன்றைய நிலையில், சில விநாடிகளுக்குள், அன்று நாங்கள் ஊர்தோறும் அலைந்து தேடிய தகவல், எங்களுக்குக் கிடைத்துவிடும். சொல்லப் போனால், 2000 வரை நான் ஒரு புத்தகப்புழு (ஐயோ அதற்காக நான் ஒரு பெரும் படிப்பாளி என்ற பிம்பத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டாம்). பிறகு மெல்ல மெல்ல புத்தகம் படிக்கும் பழக்கம் அருகி, இன்று, இணையத்தில் கிடைக்கவில்லை புத்தகத்தில்தான் கிடைக்கிறது என்ற நிலை வந்தாலொழிய புத்தகம் படிப்பதில்லை.அதற்காக வாசிப்பதில்லை என்பதில்லை. சொல்லபோனால் இன்று அதிகம் வாசிக்கிறேன்.
கோட்டூர்புரத்தில் ரூ230 கோடி செலவில் ஒரு நூலகம் அதுவும் 2010-ல் தேவையா? இந்த நூலகத்தால் பயன் பெறப் போகின்றவர் யார்? இந்த நூலகத்துக்காக ஒருவர் அதிகபட்சம் எவ்வளவு தூரம் பயணிப்பார்? ஒருவருக்குத் தேவையான தகவல் அருகிலிருக்கும் (அல்லது தனது வீட்டிலிருக்கும்) இணயத்தில் கிடைக்கப் பெறும்போது, இவ்வாறு ஒரு நூலகத்தின் தேவை என்ன?
ஆனால், தமிழில், இருக்க வேண்டிய அனைத்தும் மிண்ணனு வடிவத்தில் இருக்கின்றனவா? இந்த நூலகம் மிக அதிகபட்சமாக சென்னைவாழ் மக்களுக்கும், என்றாவது சென்னைக்கு வரும் ஒருவருக்கு ஒரு சுற்றுலா தலமாக (அதுவும் கூட, இந்த நூலகம் மாற்றப்படாமல் இருந்திருந்தால், இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்கு மட்டும்தான்; அதன் பின் தான் நமது அரசாங்கப் பராமரிப்பின் வள்ளல் தெரியுமே) மட்டுமே பயன்பட்டிருந்திருக்கும். இன்று பல மின்-நூல் கருவிகள் வந்து விட்டன. ஒவ்வொன்றும் சில ஆயிரக்கணக்கான புத்தகங்களைக் கொண்டிருக்கின்றன. அண்ணா நூலகம் 12 லட்சம் புத்தகங்கள் கொண்டதாக அமைக்கப்பட்டதென்று அறிகிறேன். அதிகபட்சமாக, 2TB கொள்ளும் இந்தப் புத்தகங்களை ஒரு வழங்கியின் மூலமாக இணயத்தில் கிடைக்கச் செய்தால், சென்னை மட்டுமல்ல, தமிழ்நாடு மட்டுமல்ல, உலகத் தமிழர் அனைவருக்கும் பயன் தருமல்லவா? இந்தப் நூல்களை மிண்ணனு வடிவில் மாற்றுவதற்கு செலவும் இடமும் இப்போதுள்ளதை விட பல ஆயிரம் மடங்கு குறைவே. இதற்கு எடுக்கும் முயற்சியில் (அதாவது, நூல்களைப் மிண்ணனுவடிவில் மாற்றும்) ஒரு புதிய தொழில்நுட்பம் கூடக் கண்டுபிடிக்கப் பட்டிருக்கலாம் (தமிழ் OCR தொழில்நுட்பம் எந்த அளவில் உள்ளதென்று தெரியவில்லை).
ஆனால் அறிவு ஜீவிக் குழாம் இது பற்றியெல்லாம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அய்யாவின் அரசியலுக்கு எண்ணெய் ஊற்றும் விதமாகத் தான் பேசுகிறார்கள் – வேண்டுமென்றோ, அதுபற்றிய பிரக்ஞை இல்லாமலோ அல்லது வருங்காலத் தொழில்நுட்பம் பற்றி எந்தவிதமான அக்கறையும் இல்லாமலோ!
குழந்தைகள் சுமக்கும் புத்த மூட்டைகள் பற்றி, நாம் குழந்தைகளாக இருந்ததற்கு முன்னாலிருந்தே, பல்லாண்டுகளாக கவலை மட்டுமே பட்டுக் கொண்டிருக்கிறோமே? இப்படிப்பட்ட – பளுவையும் குறைக்கக் கூடிய, அதே நேரத்தில் குழந்தைகள் எளிமையாகப் பயன்படுத்தக்கூடிய வகையில், மலிவு விலையில் (பள்ளிக்கு ஆயிரக்கணக்கில் புத்தகக் கொள்ளளவு கொண்ட மின்-நூல் கருவி தேவையில்லையே) கிடைக்கக் கூடிய மின்-நூல் கருவிகளை பள்ளிக் குழந்தைகளுக்கு பாதுகாப்பாகப் பயன்படுத்தும் வகையில் வடிவமைத்து அறிமுகப்படுத்தக் கூடிய ஆலோசனகளுக்கும் ஆராய்ச்சிகளுக்கும் செலவிடலாமே? எல்லாவற்றிற்கும், வெள்ளைக்காரனுக்காக் காத்திருக்க வேண்டுமா? நாம் முன்னோடியாக இருக்கக் கூடாதா (அது சரி, இவர்களுக்கெல்லாம் வாக்களித்துவிட்டு நாம் சிலவற்றில் மட்டும் தான் உலகின் முன்னொடியாக உள்ளோம்).
0
பள்ளிகளில் நாம் படிக்கும் பாடங்கள் என்னென்ன? பொதுவாக, ஆங்கிலம், தமிழ், கணிதம், அறிவியல் மற்றும் வரலாறு புவியியல். ஒவ்வொன்றும் பின்னாட்களில் நாம் தேர்ந்தெடுக்கும் துறைக்கு ஏதாவதொரு வகையில் அடிப்படையாக அமையக்கூடியவை (இன்றைய நிலையில், தமிழ் மட்டுமே ஒப்புக்குச் சப்பாணி. ஏதோ மரியாதைக்காக பள்ளியில் வைத்துக் கொண்டிருக்கிறோம்). வருங்காலத்தில் கணினி (அல்லது அதற்கு இணையான அல்லது அதனை அடிப்படையாகக் கொண்ட ஏதோ ஒன்று) இல்லாத துறை என்று ஒன்று இருக்கப் போவதில்லை. மற்ற பாடங்களைப் போல் கணினியையும் ஒரு பாடமாக ஏன் சேர்க்கக் கூடாது? (எவ்வாறாகிலும் நமது கல்விமுறையில் மாற்றமென்பது தேவை; அது பற்றி தனிக் கட்டுரை தேவை). மற்ற பாடங்களைப் போல் கணினியையும் ஆரம்பப் பள்ளியிலிருந்தே போதிக்கத் தேவையான ஆராய்ச்சி பற்றி, இந்நூலக இயக்கம்/மாற்றம் பற்றி கிளர்ந்தெழும் அறிவு ஜீவிகள் கொஞ்சம் சிந்தித்திருக்கலாமே?
வெளிப்படையாகச் சொன்னால், காகித நூல்களின் உபயோகத்தைக் குறைத்துக் கொண்டு, மின் நூல்களின் உபயோகத்துக்காக நம்மை ஆயத்தப்படுத்திக்கொள்ளவேண்டும் என்றே இந்தக் கட்டுரை சொல்கிறது. உடனே ‘புத்தகத்தை ஒழிப்பதாவது?’ என்று அதே யாழ் நூலக ரேஞ்சுக்குக் கிளம்பத்தான் செய்வார்கள். அவர்கள் ஓலைச்சுவடிகளில் எழுதிக்கொண்டிருந்த எழுத்தாளர்களாக இருந்திருந்தால், காதித நூல்கள் வர ஆரம்பித்திருக்கும்போது ‘ஓலைச் சுவடிகளை ஒழிப்பதாவது?’ என்று தான் கிளம்பியிருப்பார்கள்.
எது எப்படியிருந்தாலும், அதிகபட்சம் இருபத்தைந்து ஆண்டுகளுக்குள் காகித நூல்கள் அருங்காட்சியகங்களுக்குள்ளும், வீடுகளில் உள்ள பரண்களிலும் அடைக்கலம் அடைந்துவிடும். இது தவிர்க்க முடியாதது. இன்றே எத்தனையோ பேர் பேனா கொண்டு எழுதும் முறையை கைவிட்டிருப்பார்கள் கொஞ்சம் எண்ணிப் பார்க்கலாம்.
0
இவ்வளவு கூறியும், நிகழ்காலத்தை கவனித்துப் பார்த்தால், இந்தக் கட்டுரை பேசும் பொருளுக்கு ஏதாவது பொருளுண்டா, இதற்கு செலவிட்ட நேரத்துக்கு எதுவும் மதிப்புண்டா என்ற ஆயாசமே உண்டாகின்றது.
நாம் எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சியை நமது நடைமுறைக் கல்விப் பயிற்சிக்குப் பயன்படுத்தலாம், நமது படைப்புகளை அதனைப் பயன்படுத்தி எவ்வாறு பரவலாகக் கொண்டு செல்லலாம் என்று பேசும் அதே வேளையில், நமது கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பயிற்றுவிக்கப்படும் தொழில்நுட்பம், குறிப்பாக கணினி சார்ந்த தொழில்நுட்பம், எந்த அளவுக்கு சமகால வளர்ச்சியோடு ஒட்டியுள்ளது என்று பார்க்கப் புகுவதனால் வரும் விளைவுதான் இது. திறமூலம் (ஓப்பன்சோர்ஸ்) பற்றி நானறிந்த வரையில் எந்த கல்லூரியிலும், பல்கலைக்கழகத்திலும் எதுவும் போதிக்கப்படுவதோ ஏன் அறிமுகப்படுத்துவதோ கூட இல்லை. முக்கிய காரணம், ‘பெரும்பாலான’ ஆசிரியர்களுக்கு, சமகால நிகழ்வுகள் பற்றி அறியும் ஆர்வமோ, அதனை பாட திட்டமாக கொண்டுவருவதற்கான முயற்சியில் அக்கறையோ இருப்பதில்லை. ஊதிய உயர்வு சார்ந்த போராட்டங்களுக்கு மட்டும்தான் ஒற்றுமையாகக் குரல் கொடுப்பார்கள்.
சமீபத்தில் கூட அண்ணா பல்கலை திறமூலம் சார்ந்த பட்டறைகளை நெல்லை மாவட்டத்தில் உள்ள கல்லுரிகளுக்கு மட்டும் அறிமுகப்படுத்தி, ஏனோ உடனே திரும்பப் பெற்றுக் கொண்டுவிட்டது. கணினி என்றால் விண்டோஸ் மட்டுமே என்ற அளவில் பொதுவாக போதிக்கப்படுகிறது. அதிலும் அண்மைய மென்பொருள் மொழிகளும், இயங்குதளங்களும் போதிக்கப்படுவதில்லை; பெரும்பாலும் காலாவதியான தொழில்நுட்பங்களே போதிக்கப்படுகின்றன. இதில் இன்னொரு ஆச்சரியமும் அதிர்ச்சியும் கலந்த நடைமுறை என்னவென்றால் அனேகமாக அனைத்து கல்வி நிலையங்களும் திருட்டு விண்டோஸ் பயன்பாட்டையே சார்ந்திருக்கின்றன (மைக்ரோசாப்ட், இதனை அறியாது என்பதில்லை; இதனை அறிந்தாலும் இதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காது என்பது தனி அரசியல்). திருட்டுப் பிரதி பயன்படுத்துவதை எந்த ஒரு உறுத்தலுமின்றி மேற்கொண்டு வருகின்றனர். இதுவும் மாணவர்களுக்குத் தெரிந்தே நடக்கிறது. நமது வருங்காலத் தூண்களுக்கு, பாட திட்டத்தில் இல்லாத போனஸ் பயிற்சி இது.
ஆனால் காலாவதியாகப் போகின்ற ஒரு விஷயத்துக்கு, இரு அரசியல் யோக்கியர்கள் தங்களுக்குள் அகந்தை யுத்தம் நடத்திக் கொள்ளும்போது, கட்சி கட்டிக் கொண்டு கிளம்பும் ‘படைப்பளிகள்’ மற்றும் ‘சமூக ஆர்வலர்கள்’ என்றுதான் உண்மையான சுரணை அடையப் பெறுவார்களோ? நல்ல வார்த்தைகளில் சொல்லப் போனால், இருவரும் நமது தோள்பட்டையில் ஏறியமர்ந்து நமது காதிலேயே ஓ…லமிடுகிறார்கள். இதில் இது சரி இது தவறு என்று ‘சீரியஸ்’ ஆன விவாதம் வேறு.
0
அனானிமஸ்