நம்மால் இதைக்கூடச் செய்ய முடியாதா?
விதியே விதியே
என் செய நினைத்தாய்
என் இந்திய ஜாதியை..?
சமீபகாலமாகத் தமிழகத்தில் இந்திய தேசியத்தை வெறுத்து விமர்சிக்கும் போக்கு அதிகரித்துவருகிறது.
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைக்கொல்லும் காழ்த்த இடத்து
இந்த அடிப்படையில் இந்தப் பிரிவினைவாத முழக்கங்களை கொஞ்சம் அதிக பதற்றத்துடன் நாம் கவனித்தாக வேண்டியிருக்கிறது. ஒருவேளை இந்த பதற்றம் தேவையற்றதாக இருக்கக்கூடும். இது தொடர்பான யூகங்கள் பொய்த்துப்போகக்கூடும். அப்படி நடந்தால் நல்லதே. நல்லதே நடக்கும் என்று நம்புவோம். அதேநேரம், மோசமானதை எதிர்கொள்ளவும் தயாராகிக்கொள்வோம்.
சமீபத்தில் ’தன்னெழுச்சி’யாக ஆரம்பிக்கப்பட்ட மாணவர்களின் போராட்டம் இந்திய எதிர்ப்பு உணர்வை ஒரு சில கோரிக்கைகளில் வெளிப்படையாகவும் வேறு சிலவற்றில் மறைமுகமாகவும் வெளிப்படுத்தியிருந்தன. ஏற்கெனவே இலங்கைத் தமிழர் பட்ட வேதனைகளுக்கு எதுவும் செய்ய முடியவில்லையே என குற்ற உணர்ச்சியில் இருந்த தாயகத் தமிழர்களின் உணர்ச்சிக்கு வடிகாலாக அந்தப் போராட்டம் பலம் பெற்றது. ஆனால், இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்த சாதாரண மக்களுக்குப் பிரிவினை எண்ணம் துளியும் கிடையாது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பின்னின்று இயக்கும் நபர்களின் செயல் திட்டத்தை முழுவதுமாகப் புரிந்துகொள்ளாமல்தான் பலரும் தெருவில் இறங்கிப் போராடினார்கள் என்பதுதான் உண்மை.
ஆனால், விடுதலைப் புலிகள் தனி நாடு கேட்டுப் போராட ஆரம்பித்தபோது அவர்களிடம் இல்லாத நியாயமானது சிங்கள அரசின் அராஜகச் செயல்களால் வந்து சேர்ந்ததுபோல், இன்று தனித் தமிழ் நாடு கோரும் பிரிவினைக்குரலுக்கும் இந்திய தேசிய அரசு ஒரு நியாயத்தைக் கற்பித்துவிடுமோ என்ற அச்சம் தோன்றுகிறது. இறையாண்மைக்கு ஊறு வந்துவிடும் என்று சொல்லிச் சொல்லியே இறையாண்மைக்கு ஊறை விளைவித்துக்கொண்டுவிடும் அது. ஏனென்றால், இந்திய தேசம் தற்போது இந்தியர்களால் ஆளப்படவில்லை. பிறப்பால் இந்தியர்களாகவும் நடத்தையால் மேற்குலகின் விசுவாசிகளாகவும் இருக்கும் கூட்டத்தால் இந்த தேசம் ஆளப்பட்டுவருகிறது.
தமிழகத்தில் எழத் தொடங்கியிருக்கும் பிரிவினைவாதக் குரல்களை இந்தப் பின்னணியில்தான் பார்க்கவேண்டும். இன்று ஈழத் தமிழர்களுக்காகப் போராட வந்திருக்கும் மாணவச் செல்வங்கள், நாளை கூடங்குளம், முல்லைப் பெரியாறு, காவிரி போன்ற பிரச்னைகளுக்கும் வீதிக்கு வருவார்கள். பேரறிவாளன் உட்பட மூவருக்கான தூக்கு பற்றிய தீர்ப்பு வரும்போது அது தொடர்பாகவும் வீதிக்கு வருவார்கள். ஆனால், பரமக்குடி, தருமபுரி வன்முறைகளின் போதெல்லாம் இந்த மாணவச் செல்வங்கள் பொங்கி எழமாட்டார்கள் என்றே தோன்றுகிறது. சுருக்கமாகச் சொல்வதானால், மாணவச் செல்வங்களின் அரசியல் என்பது மே-17, வைகோ, சீமான், நெடுமாறன் அன்கோவின் அரசியல்தான். ஒருவேளை அவர்களுக்கு இதையும் தாண்டிய அக்கறை உண்டு என்றால், பிரபாகரனின் புகைப்படத்தையும் புலிகளின் கொடியையும் தூர தள்ளி வைத்துவிட்டு வந்திருப்பார்கள். ஆனால், அவர்களோ திலீபன்களைத் தொடர்ந்து பிரபாகரன்கள் வருவார்கள் என தெளிவான திட்டத்துடன்தான் இயங்க ஆரம்பித்திருக்கிறார்கள். கொடுக்கப்படும் சாவிக்கு ஏற்பத்தானே ஆட முடியும் பொம்மைகளால். எனவே, இந்த எழுச்சியை மாணவச் செல்வங்களின் போராட்டம் என்று வெகுளித்தனமாகப் பார்க்காமல் மறைந்திருக்கும் அம்சங்களின் அடிப்படையில் பார்ப்பது மிகவும் அவசியம்.
இந்தியா ஒரு தேசமாக இத்தனை ஆண்டுகள் (!?) நீடித்து நிற்கும் என்று உலகில் பெரும்பாலானவர்கள் நம்பியிருக்கவே இல்லை. பல்வேறு மொழிகளின் காட்சிசாலையான இந்தியா ஒரு இயல்பான கூட்டமைப்பு அல்ல. பிரிட்டிஷார்தான் அதை உருவாக்கினார்கள். அவர்கள் போனதும் இந்திய மாநிலங்கள் தமக்குள் சண்டையிட்டபடி பிரிந்துவிடுவார்கள் என்பதுதான் மேற்குலகின் நம்பிக்கையாக இருந்தது. ஆனால், அந்த நம்பிக்கை பொய்த்தது. அம்பேத்கர் தலைமையில் உருவாக்கப்பட்ட அரசியல் சாசனத்தினால் வழங்கப்பட்ட உரிமைகளையும் சலுகைகளையும் பெற்று ஒவ்வொரு பிரிவும் தமக்கான முன்னேற்றத்தை ஜனநாயக முறையில் வென்றெடுக்க ஆரம்பித்தன. எவ்வளவோ குறைகள் உண்டு என்றாலும் அவற்றை ஆக்கபூர்வமான போராட்டங்கள் மூலம் சரி செய்வதற்கான வழிகளும் இந்தியாவில் இன்றும் இருக்கவே செய்கின்றன. சூழலை வென்றெடுப்பதற்குப் பதிலாக சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்வதே நம் தேசிய குணமாக இருக்கிறது. எனவே, மேற்குலக அளவுகோல்களை வைத்து அளவிட்டு வருந்த வேண்டிய அவசியமில்லைதான். ஆனால், பாரம்பரியத்தில் இருந்து நாம் துண்டிக்கப்பட்டதால் அடைந்திருக்கும் இழப்புகள் குறித்தும் சுதேசி நலன்கள் புறக்கணிக்கப்படுவது குறித்தும் நாம் நிச்சயம் கவலைப்பட்டாகவேண்டும். அந்த வகையில் இந்தியா ஒற்றை தேசமாக இருப்பதில் பெருமைப்பட்டுக்கொள்ளப் பெரிதாக எதுவும் இல்லை என்பதுதான் உண்மையே.
அதோடு, பிரிவினைக்கான அதிருப்திகளும் இயக்கங்களும் ஆரம்பத்திலிருந்தே இருக்கத்தான் செய்கின்றன. காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்கள், காலிஸ்தான் என பிரிவினை கோஷங்கள் எழுந்தும் அடங்கியும் இருந்துவருகின்றன. தமிழகத்திலும் திராவிட நாடு கேட்டு இயக்கங்கள் வெடித்திருக்கின்றன. ஆனால், மத்தியில் கூட்டாட்சி… மாநிலத்தில் சுயாட்சி என்பது தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் நன்மையைத் தரும் என்பதைப் புரிந்துகொண்டு திராவிட முன்னேற்றக்கழகத்தினர் பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டுவிட்டனர் (விடுதலைப் புலிகள் செய்யத் தவறிய விஷயம்). காவிரிப் பிரச்னை, முல்லை பெரியாறு பிரச்னை போன்றவற்றில் அவ்வப்போது தமிழகம் வஞ்சிக்கப்பட்டதாக அதிருப்திக் குரல்கள் எழும். அவை பெரிதும் தூய தமிழ் தேசியம் பேசும் சிறு குழுக்களால் முன்னெடுக்கப்படும். மக்கள் மத்தியில் அந்தப் பிரிவினைக் குரல்களுக்கு என்றும் ஆதரவு இருந்ததில்லை.
இலங்கை பிரச்னையில்கூட ராஜீவ் காந்தி கொலைக்கு முன்புவரை இலங்கைத் தமிழர்கள் மீது இருந்த ஆதரவு அதற்குப் பின்பாக வற்றிவிட்டது. ஈழத்தின் கடைசி யுத்தம் நடந்தபோது இந்தியாவில் நடந்த தேர்தலில்கூட உள் நாட்டுப் பிரச்னைகளே தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தன. காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணிதான் கூடுதல் இடங்களைப் பெற்று ஆட்சி அமைத்தன. அந்தவகையில் அதுவரையிலும் தனி ஈழத்துக்கு (விடுதலைப்புலிகளுக்கு) இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் எந்தப் பொது மக்கள் ஆதரவும் இருந்திருக்கவில்லை.
ஆனால், இப்போது பாய்மரம் திருப்பப்பட்டிருக்கிறது. தமிழக முதல்வராக தற்போது பதவியில் இருக்கும் ஜெயலலிதா, தனி ஈழமே தீர்வு என்று சட்டசபையில் தீர்மானம் கொண்டுவந்திருக்கிறார். இலங்கை நட்பு நாடு அல்ல என்றும் முழங்கியிருக்கிறார். இந்தியா சர்வதேச விசாரணைக்கு முன்கை எடுக்க வேண்டும், இலங்கை அரசை இனப்படுகொலை செய்த அரசாக அறிவிக்கவேண்டும் என்ற கோரிக்கைகளை தி.மு.க.வும் முன்வைத்திருக்கிறது. இவை இரண்டுமே ‘மாணவர் போராட்ட’த்துக்குப் பிறகு நடந்தேறியிருக்கும் பெரிய திருப்பங்கள்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸையும் தி.மு.க.வையும் தனிமைப்படுத்த உதவும் என்ற நோக்கில் மாணவப் போராட்டத்தை தொடர அனுமதித்த ஜெயலலிதாவுக்கு இந்தப் போராட்டத்தின் பின்னால் இருக்கும் அபாயங்கள் புரிந்ததுபோல் தெரியவில்லை. ஆனால், அவர்கள் மிகவும் தெளிவாகவே இருக்கிறார்கள். காங்கிரஸைக் குறிவைத்து எதிர்ப்பதால் உருவாகப்போகும் வெற்றிடத்தை மற்றொரு தேசிய கட்சியான பிஜேபி பிடித்துவிடக்கூடாது என்பதற்காக அவர்களாலும் ஏற்றுக்கொள்ள முடியாத தனி ஈழக் கோரிக்கையை முன்வைத்தே போராட ஆரம்பித்திருக்கிறார்கள். மேலும் இலங்கை அரசு செய்த மிகப் பெரிய தவறு ஒன்றை முன்னிலைப்படுத்தியதன் மூலம் தாங்கள் (புலிகள்) செய்த அதைவிட சற்று குறைவான எல்லா தவறுகளையும் நியாயப்படுத்திவிட்டிருக்கிறார்கள். ஒரே அம்பில் பல குருவிகள்.
இன்று வெறுமனே காங்கிரஸ் எதிர்ப்பாக இருக்கும் இந்த இயக்கமானது நாளை நிதானமாக, இந்திய எதிர்ப்பாக மடைமாற்றப்படும். இப்போதே பல புரட்சிகர குழுக்கள் தாங்கள் கனவு கண்ட புரட்சி வந்தேவிட்டதோ என்று திடுக்கிட்டு எழுந்து மத்திய அரசு அலுவலகங்கள், ராணுவ மையங்கள் ஆகியவற்றை முற்றுகையிட்டதும் நடந்திருக்கிறது. விடுதலைப் புலிகளை கொம்பு சீவிவிட்டு பேரழிவுக்கு ஒருவகையில் காரணமான நபர்கள் இன்று இந்தியாதான் கொன்று குவித்தது என்று வீதிகளில் வெளிப்படையாக முழங்க ஆரம்பித்திருக்கிறார்கள். இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த கட்சிகள் தமிழர்களை ஒடுக்குவதில் போட்டி போட்டதுபோல், இந்திய தேசியத்துக்கு எதிராகச் செயல்படுவதில் யார் முந்தி என தமிழகத்திலும் கூத்துகள் நடைபெற அனைத்து சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன. ஏனென்றால், தமிழக அரசியல் கட்சிகளும் தேசியக்கட்சிகளும் அப்பட்டமான சுய நல, மக்கள் விரோத நபர்களின் கைகளில்தான் சிக்கியிருக்கின்றன.
இப்போது இந்திய எதிர்ப்பு முழக்கங்களின் தார்மிக வலுவைப் பற்றிப் பார்ப்போம். ஈழப் பிரச்னை, மீனவர் கொலைகள், கூடங்குளம், காவிரி, முல்லைப் பெரியாறு, மூவர் தூக்கு தண்டனை போன்ற விஷயங்களில் இந்தியாவுடன் தமிழகத்துக்கு மோதல் இருக்கின்றன. மின் தட்டுப்பாடு, விவசாய நசிவு, மது போன்ற உண்மையான பிரசனைகள் இருக்கும் நிலையிலும் உணர்ச்சிபூர்வமான பிரசனைகளே அரசியலுக்கு உதவும் என்பதால் இவையே முன்னிலைப்படுத்தப்படவும் செய்யும்.
முதலாவதாக, ஈழப் பிரச்னையில் இந்தியா இலங்கைக்கு செய்த ராணுவ உதவிகள் தமிழ் தேசியக் குழுக்களுக்குப் பெரும் ஆத்திரத்தைக் கிளப்பியிருக்கின்றன. முள்ளிவாய்க்கால் பகுதியில் புலிகளும் மக்களும் முற்றுகையிடப்பட்டபோது கடல் வழியாக பிரபாகரன் தப்பிவிட திட்டமிட்டிருந்ததாகவும் இந்திய கடற்படையின் உதவியால்தான் அவர் பிடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார் என்றும் உள்வட்டாரங்களில் பேசப்படுகின்றன. இன்னும் சிலர் இந்திய (சோனியா) அரசின் திட்டப்படித்தான் கடைசி போரில் பிரபாகரன் தடுப்பாட்டம் ஆடினார். இலங்கை அரசை சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்த அவர்களால் கொல்லப்படும் அப்பாவிகளின் பிணங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். கடல் வழியாகத் தப்பித்துப்போய் போராட்டத்தை வென்றெடுக்கலாம் என்று திட்டம் தீட்டிக் கொடுத்த இந்திய (சோனியா) அரசு கடைசியில் குறுக்குச் சால் ஓட்டி பிரபாகரனைப் பிடித்துக் கொடுத்துவிட்டது என்றும் சொல்கிறார்கள். (சோனியா) இந்தியாவின் அந்த துரோகத்துக்குத்தான் பழிவாங்கப் புறப்பட்டிருக்கிறார்கள் தமிழ் தேசியப் போராளிகள். சீனா, பாகிஸ்தான் கொடுத்த ஆயுதங்களில் பத்தில் ஒரு பங்குகூட கொடுத்திராத இந்தியா மீது பெரிதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதன் பின்னால் அந்த விஷயமே அடங்கியிருக்கிறது.
போரினால் அப்பாவிகள் பாதிக்கப்பட்டதுதான் இவர்களுடைய ஆவேசத்துக்குக் காரணமென்றால், ஆதி முதல் அந்தம் வரை புலிகள் செய்த அட்டூழியங்களையும் சேர்த்தே விமர்சித்திருப்பார்கள். இன்றைய போராட்டங்களில் பிரபாகரனின் படமும் புலியின் படமும் இருந்திருக்காது. இப்போதும் அந்த இரண்டையும் கீழிறக்கிவிட்டு போராட முன்வந்தால் இந்தியாவுக்கு இவர்கள் சொல்லும் விஷயத்தில் அக்கறை ஏற்படும். ஆனால், இந்திய அரசுக்கு உண்மையைப் புரியவைத்து ஈழத்தமிழர் விஷயத்தில் ஆக்கபூர்வமாகச் செயல்படவைக்க வேண்டும் என்பது அல்ல; நிறைவேற்ற முடியாத கோரிக்கையை முன்வைத்து இடைவெளியை என்றென்றைக்குமாக அதிகரிக்கவேண்டும் என்பதுதான் இப்போதைய இலக்கு. சர்வதேச விசாரணையில் விடுதலைப்புலிகளின் செயல்களும் விசாரிக்கப்படவேண்டும் என்ற வாசகத்தை என்றைக்குச் சேர்க்கிறார்களோ அன்றுதான் ஈழத் தமிழர்கள் மீதான அக்கறையில் இதைச் செய்கிறார்கள் என்று இவர்களை நம்பமுடியும்.
அடுத்ததாக, ஈழத்தில் இருக்கும் தமிழர்களே கேட்காத தனி ஈழக் கோரிக்கையை பாதுகாப்பான துரத்தில் இருந்துகொண்டு தமிழகத்தில் ஆவேசமாக எழுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள். இலங்கை அரசை விடுங்கள்… இந்திய அரசுகூட இந்த கோரிக்கையை ஏற்க முடியாது. தனி ஈழத்துக்கு ஆதரவாக ஒரு வார்த்தை இந்தியா பேசினாலும் அதைச் சாக்காக வைத்து மேலும் கிளர்ந்தெழ இந்தியாவில் ஏராளமான குழுக்கள் காத்திருக்கின்றன. எனவே, இந்தியா இந்த விஷயத்தில் தனி ஈழத்தை ஆதரிக்கவே முடியாது. அது நிச்சயமாக பிரிவினைவாதிகள் சொல்வதுபோல் தமிழர்கள்மேல் இருக்கும் வெறுப்பினால் அல்ல. ஏனென்றால், மத்திய மாநில அரசுகளின் கூட்டாட்சிதான் இந்தியாவின் கொள்கையே.
இன்று இந்த கோஷங்களை வைப்பவர்களின் நோக்கம் தனி ஈழம் கிடைக்கவேண்டும் என்பது அல்ல. அதை வைத்து இந்தியாவுக்கு நெருக்கடி தரவேண்டும் என்பதுமட்டுமே. ஏனென்றால், ஈழம் கிடைக்காது என்பது அவர்களுக்கும் நன்கு தெரியும். இந்த விஷயத்தில் இந்தியா மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் விழி பிதுங்கிக்கொண்டு நிற்கிறது. புலிகளுக்கும் தனி ஈழத்துக்கும் எதிராகப் பேசுவது என்பது வேறு; ஈழத்தமிழர்களின் நலனுக்காகப் பேசுவது என்பது வேறு. இந்தத் தெளிவை மக்களுக்கு கொண்டுசெல்லத் தவறினால் பிரிவினைவாதிகளின் கையே ஓங்கும்.
2000 ஆண்டுகளுக்கு முன்னால் மனுவாதிகள் செய்தவை என்று நீட்டி முழக்கி அரசியல் நடத்திவரும் திராவிட முன்னேற்ற கழகத்தினரும் நேற்று நாங்கள் செய்ததை மறந்துவிடுங்கள். இன்று நாங்கள் பரிசுத்தவான்கள். இந்தியா இலங்கையைக் கண்டிக்கவேண்டும் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்து ரத்தம் கூட ஆறியிருக்காத நிலையில் இலங்கைக்குச் சென்று ராஜபக்சேவுடன் பெட்டிகள் மாற்றிக்கொண்டு பொன்னாடைகள் போர்த்தி முரண்பாடுகளோடு உறவாடச் சென்றவர்கள் இந்திய தேசியத்துடன் பகைமை பாராட்டத் தொடங்கியதன் காரணம் என்ன? தமிழகக் கட்சிகளின் இப்படியான அரசியல் குட்டிகரணங்களால் நிலைமை மேலும் சிக்கலாகவே செய்யும்.
அடுத்ததாக, தமிழக மீனவர்கள் இலங்கைப் படையினரால் கொல்லப்படும் விவகாரம். இது தொடர்பாக வட இந்திய ஊடகங்களில் பேசும் தமிழகத் தலைவர்கள், ஒரு விஷயத்தை ஆவேசமாகக் கேட்கிறார்கள்: முப்பது ஆண்டுகளாக 500க்கும் மேற்பட்ட தமிழகத் தமிழர்கள் கொல்லப்பட்ட பிறகும் நீங்கள் எதிர்த்து எதுவும் சொல்லவே இல்லையே. கேரள மீனவர்கள் இரண்டு பேர் கொல்லப்பட்டதற்கு இத்தனை நடவடிக்கை எடுத்திருக்கிறீர்களே… அப்படியானால் தமிழக மீனவர்கள் இந்தியர்கள் இல்லையா..?
இந்தக் கேள்வியில் இருக்கும் நியாயம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டியதுதான். ஆனால், தமிழர்களை இந்தியர்களாக மதிக்கவைக்க என்ன செய்யவேண்டும்? என் துயரத்தை நீ பொருட்படுத்தவில்லை எனவே, நான் உன்னை விட்டுப்பிரிகிறேன் என்பது எந்த அளவுக்கு நியாயம்? இந்த முப்பது வருட காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் வலிமையுடன் இருந்த காலகட்டமும் அடங்கும். அப்போது நடந்த கொலைகள் வேறு கோணத்தில் பார்க்கப்படவேண்டியவை அல்லவா. இந்திய தேசியத்தில் இணைந்து இருந்ததால் தமிழகம் அடைந்த நன்மைகள் எல்லாமே இந்த ஒற்றை விஷயத்தினால் இல்லாமல் போய்விடுமா?
அதோடு, தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள்தான் இந்தப் படுகொலைகள் நடந்தபோதெல்லாம் மத்திய அரசில் அங்கம் வகித்திருந்தார்கள். இந்தியாவின் பிற பகுதி மக்கள் இந்தப் பிரச்னையை தமிழக அரசியல் தலைவர்கள் எப்படி அணுகினார்களோ அதன் அடிப்படையில்தான் புரிந்துகொண்டிருக்கவும் முடியும். அந்தவகையில் வட இந்திய ஊடகங்களின் அலட்சியத்துக்கு தமிழக அரசியல் தலைவர்கள் மற்றும் ஊடகங்களின் செயல்பாடும் முக்கிய காரணமே. இலங்கையில் போர் தீவிரம் அடைந்தபோது ஏன் மத்திய அரசுக்கான ஆதரவை வாபஸ் வாங்கவில்லை என்ற கேள்விக்கு திமுக ஒரு சப்பைக்கட்டு பதிலைச் சொல்கிறது. இவர்கள் ஆதரவை விலக்கிக்கொண்டிருந்தால் வேறொரு கட்சி ஆதரவு கொடுத்திருக்குமாம். அதாவது, இவர்கள் கத்தியால் குத்தியிருக்கவில்லையென்றால் வேறொருவர் குத்தியிருப்பாராம். அதனால் இவர்கள் ஈழத்தமிழர்கள் முதுகில் குத்திவிட்டார்களாம். உண்மையில் இந்த விஷயத்தில் என்ன செய்திருக்க வேண்டும். மத்திய அரசுக்கு யாரெல்லாம் ஆதரவு தரத் தயாராக இருக்கிறார்களோ அவர்களுடன் பேசி விஷயத்தை விளக்கிப் புரிய வைத்திருக்கவேண்டும். ஆனால், அதைச் செய்யவில்லை.
இப்போதும் மம்தா பானர்ஜி இந்தியாவின் அயலுறவுக் கொள்கையை பிராந்திய கட்சிகள் தீர்மானிக்கக்கூடாது என்று சொல்லும்போது பிரிவினைவாதிகள் என்ன செய்கிறார்கள்… பாண்டிச்சேரியில் இருக்கும் மேற்குவங்காள அரவிந்தரின் ஆஸ்ரமத்தை அடித்து நொறுக்குகிறார்கள். இதுவா பிரச்னையைப் பிறருக்குப் புரியவைக்கும் முறை? உண்மையில் இன்று தமிழக அரசியல் கட்சிகள் எல்லாவற்றிடமும் காட்சி ஊடகமும் அச்சு ஊடகமும் இருக்கின்றன. வட இந்திய ஊடகங்களில் தமிழக பிரச்னைகள் பேசப்படுவதில்லை என்று அங்கலாய்ப்பவர்கள், தங்களுடைய ஊடகங்களில் வட இந்திய சிந்தனையாளர்களை அழைத்து பேச வைத்து அவர்களுக்கு நிலைமையை எடுத்துச் சொல்லியிருக்கலாமே? அதிகாரவர்க்கத்தை எதிர்க்கும் அருந்ததி ராய் போன்ற நபர்களுக்கூட உங்கள் பக்க நியாயத்தைப் புரியவைக்க முடியவில்லையென்றால் யார் மீது குற்றம்? இன்று திடீரென்று சிலிர்த்துக்கொண்டு எழுந்து தமிழன் இந்தியன் இல்லையா..? என்று முழங்குவதில் என்ன நியாயம் இருக்கிறது?
பிற பகுதி தமிழர்களும் இந்தப் பிரச்னைக்காகப் பெரிதாக போராடியதும் இல்லை. அப்படியானால், தமிழக மீனவர்கள் எஞ்சிய தமிழக மக்களைப் பார்த்து நாங்கள் தமிழர்களா இல்லையா..? எங்கள் வேதனையை ஏன் நீங்கள் பொருட்படுத்தவில்லை என்று கேட்கவும் முடியும் அல்லவா? இப்போதுகூட பெரிய படகுகளில் செல்பவர்கள் தாக்குதலுக்கு ஆளாவதில்லை. சிறிய தனிப் படகுகளில் செல்பவர்கள் மட்டுமே தாக்கப்படுகிறார்கள். முதற்கட்டமாக பெரிய படகுகள் சிறிய மீனவர்களைத் தம்முடன் அழைத்துச் செல்லலாம். கூட்டமாக மீன் பிடிக்கச் செல்லலாம். இந்திய கடற்படையினர், தமிழக காவல் படையினர் பாதுகாப்புக்கு உடன் செல்லலாம். நமது கடல் பகுதிக்குள்ளாகவே படகு சவாரி, சர்ஃபிங்க், டைவிங் என கோவா, கோவளம் போல் கடல் சுற்றுலாவையும் நீர் விளையாட்டுகளையும் வளர்த்தெடுத்து மீனவர்களுக்கு புதிய வாழ்வாதாரத்தை உருவாக்கித் தரலாம். துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பது புதிய சிந்தனை ஒன்றுமல்ல. கச்சத்தீவை வென்றெடுத்தல், வாரத்தில் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் மீன் பிடித்தல், மீன் வளத்தைப் பெருக்குதல் என பிரச்னைக்குரிய பகுதியில் ஒருவித ஒழுங்கு கொண்டுவரப்படும்வரையில் உயிரிழப்பைத் தடுக்கும் வகையிலான முயற்சிகளை எடுப்பது மிகவும் அவசியம்.
இது போன்ற விஷயங்களில் இந்திய அரசியல் கட்சிகள் செய்யும் தவறுகளுக்காக இந்தியாவை வெறுத்து அறம் பாடிய பார்ட் டைம் பத்தினிகளில் யாரும் தமிழினம் அழிந்து போகட்டும் என்று சாபம் எதுவும் விடவில்லையே. இந்தியாவைத் திட்டினால் கிடைக்கும் வசதி வாய்ப்புகள் தமிழினத்தைத் திட்டினால் கிடைக்காது என்பதனாலா புதிய தலைமுறையின் கருத்து கந்தசாமிக்கள் வாய் மூடிக் கிடக்கிறார்கள்? தமிழக அரசியல் தலைவர்களையும் தமிழினத்தையும் பிரித்துப் பார்க்கும் நிதானமும் முதிர்ச்சியும் இந்திய விஷயத்தில் மட்டும் காணாமல் போவது ஏன்?
சரி அதை விடுங்கள்… தமிழகத்தில் கடந்த அதே முப்பது ஆண்டுகளில் சாதி தமிழர்களால் நூற்றுக்கணக்கான தமிழ் தலித்கள் கொல்லப்பட்டிருக்கிறார்களே… இன்றும் கிராமங்களில் தமிழ் தலித்கள் படும் வேதனை கொஞ்ச நஞ்சமா என்ன? தமிழ் தலித்களுக்கு தனி நாடுகேட்டு போராட வேண்டியதுதானே? தேவர்களும் வன்னியர்களும் வெட்டி விடுவார்கள் என்ற பயமா? தமிழ் தலித்துகளையும் சாதி தமிழர்களையும் தமிழ் என்ற அடையாளத்தின் மூலம் ஒன்றிணைக்க வேண்டும் என்ற முயற்சி எந்த அளவுக்கு நல்லதோ அதைவிட தமிழர்களை இந்தியர்களோடு ஒன்றிணைக்க எடுக்கும் முயற்சிகள் நூறு மடங்கு நல்லது அல்லவா.
இந்திய தேசியத்தில் தமிழர்கள் தங்கள் முக்கியத்துவத்தை அதிகரித்து நம் நலனை வென்றெடுக்க வேண்டும். அதுதான் மக்கள் நலனில் அக்கறைகொண்ட போராளியின் முதலும் கடைசியுமான இலக்காக இருக்கும். பிரிந்து போவேன் என்று மிரட்டுவது எந்த நன்மையும் தராது. விடுதலைப் புலிகளுக்கு இந்திய அரசு ஆதரவு தராமல் போனதற்கான காரணங்களில் ஒன்று, ஈழம் அமைந்துவிட்டால் தனித் தமிழ்நாடு கோஷம் வலுத்துவிடும் என்பதுதான். எனவே, ஈழம் அமையாமல் போன இந்த நேரத்திலும் தனித்தமிழ் நாடு கோஷத்தை ஆரம்பித்துவைத்து, இந்திய அரசு இலங்கை விஷயத்தில் செய்தது சரியே என்று சரித்திரத்தை எழுத வைத்துவிடாதீர்கள். ஏனென்றால், இந்த சரித்திரம் எளிதில் உலரும் மை கொண்டு எழுதப்படாது.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. நம்மில் ஒற்றுமை நீங்கிடின் அனைவருக்கும் தாழ்வு. உள்ளத்தில் உண்மையைக் கொண்டவனின் ஒளி நிறைந்த வாக்கு அது. கலைஞர்கள், அறிவுஜீவிகள் போன்ற படித்தவர்கள் பிரிவினை பற்றிப் பேச ஆரம்பித்தால் என்ன ஆகும் என்பதற்கும் அவனே பதில் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறான். செவியுள்ளவர்கள் கேட்டாகவேண்டும் அதை.
ஈழம் கிடைக்கவில்லை. எனவே இந்தியாவும் இருக்கக்கூடாது என்ற தனக்கு ஒரு கண் போனால் எதிரிக்கு இரண்டு கண் போகவேண்டும் என்ற அணுகுமுறை ஒருநாளும் பயன் தராது. அதிலும் தன்னுடைய கையே தன் கண்ணைக் குத்தியிருக்கும் நிலையில் இது மிக மிக அபாயமான கோபம்.
0
அடுத்ததாக, கூடங்குளம் பிரச்னை காத்திருக்கிறது. காங்கிரஸ், பிஜேபி, அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட் என அனைத்து கட்சிகளுமே அணு மின் நிலையத்தை ஆதரிக்கின்றன. சீனா போன்ற நாடுகளில் என்றால் அணு மின் நிலையத்தைச் சுற்றி நாலைந்து கிலோ மீட்டர் பகுதியில் வசிக்கும் மக்களை பெட்டி படுக்கையுடன் வேறு இடத்துக்குக் கொண்டு சென்றுவிடமுடியும். இந்தியா ஜனநாயக நாடு ஆயிற்றே. நாளை பிஜேபி ஆட்சிக்கு வந்தால் கூடங்குளம் இப்போது இருப்பதைவிட பெரிய பிரச்னையாக வெடிக்க வாய்ப்பு இருக்கிறது. பார்ப்பன / இந்து / ஆரிய / வட இந்திய கட்சி திராவிடர்களைக் கொல்ல சதி என புதிய கோஷத்துடன் தமிழக பிரிவினைவாத சக்திகள் களமிறங்குவார்கள். இந்த விஷயத்தில் அனைத்து கட்சிகளுமே கூடங்குளம் அணு மின் நிலையத்தை விரும்புகிறார்கள் என்ற விஷயம் பின்னுக்குப் போய்விடும்.
காவிரி ஒரு நிரந்தர முள்ளாக இருந்து உறுத்திக்கொண்டேதான் இருக்கும். ஜீவ நதிகள் இல்லாத தமிழகத்தில் கடந்த காலத்தில் ஏரி, கிணறு, குளம் போன்றவை மூலம் மிக அருமையான பாசன அமைப்புகள் இருந்துவந்திருக்கின்றன. இன்று அவை எல்லாம் பெருமளவுக்கு அழிக்கப்பட்டுவிட்டன. மன்னராட்சி காலத்தில் மக்கள் வசம் இருந்த அதிகாரத்திலும் பொறுப்புணர்விலும் நூற்றில் ஒரு பங்கு கூட மக்களாட்சி என்று சொல்லப்படும் இன்றைய காலகட்டத்தில் இல்லை. பிரிவினை வாதம் பேசும் குழுக்களில் எந்த ஒன்றாவது ஒரு கடப்பாரை எடுத்து ஒரு குழியை வெட்டி ஒரு சொட்டு நீராவது எடுத்துக் கொடுத்திருக்கிறதா? கர்நாடகாவுடன் சண்டை என்றால் மட்டும் சரித்திரத்தின் மூடப்பட்ட பக்கங்களில் இருந்து அவர்களுக்கான வெறுப்பின் வரிகளை உருவி எடுத்துக்கொண்டு களமிறங்கிவிடுவார்கள்.. சேரனும் சோழனும் கூட நேற்றுவரை வெட்டியும் குத்தியும் வாழ்ந்த புண்ணிய பூமிதானே இது என்ற கேள்விகளை எல்லாம் எளிதில் புறக்கணித்துவிடுவார்கள். மத்திய அரசு இந்தப் பிரச்னையில் ஆக்கபூர்வமாக எந்த நடவடிக்கையும் இதுவரை எடுத்ததில்லை. இனியும் அப்படியே இருக்கும் என்றே தோன்றுகிறது.
இந்த விஷயத்தில் பிரிவினை வாதம் பேசுபவர்களை மட்டும் குறை சொல்வதில் பயனில்லை. தேசியத்தைக் கட்டிக் காப்பதாகச் சொல்லிக் கொள்ளும் அமைப்புகளும் படு அலட்சியமாகவே செயல்படுகின்றன. குறைவான நீரை வைத்து பயிர் செய்யும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல், தமிழகத்தில் வீணாகக் கடலில் கலக்கும் நீரைச் சேமிக்க வழி செய்தல் என எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அதோடு, தமிழகத்தில் இருக்கும் நீர்நிலைகளை சீரமைத்தல் என்பது பெரிய விஷயமே இல்லை. ஒவ்வொரு கிராமத்திலும் இருக்கும் நபர்களை ஒருங்கிணைத்து அவரவர் பகுதிக்கான நீர்வளத்தைப் பெருக்குவது மிகவும் எளிய விஷயமே. நூறு நாள் வேலைத் திட்டம் போன்றவற்றை தேசியவாத வலதுசாரிகள் பயன்படுத்திக்கொண்டு ஆக்கபூர்வமான மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கமுடியும். ஆனால், அவர்களோ பிற மத வெறுப்பின் மூலம் அரசியல் செய்வதில் மட்டுமே குறியாக இருக்கிறார்கள். நாஞ்சில் நாட்டில் மண்டைக்காடு கலவரத்தைத் தொடர்ந்து உருவான இந்து முன்னணி எழுச்சி, கோவையில் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து உருவான எழுச்சி என்ற இரண்டைத் தவிர தமிழகத்தின் பிற எந்த பகுதியிலும் ஆக்கபூர்வ நடவடிக்கைகளால் துளி செல்வாக்கைப் பெறக்கூட அவர்களால் முடிந்திருக்கவில்லை. பிரிவினை சக்திகளின் செயலூக்கத்தில் நூறில் ஒரு பங்கு கூட தேசியம் பேசும் குழுக்களிடம் இல்லாமல் போனால் கொடுக்கவேண்டிய விலை மிகவும் அதிகமாகவே இருக்கும். ஆநிரைகள் களவாடப்பட்ட பின் கொட்டிலைப் பூட்டிப் பலனில்லை.
அடுத்ததாக முல்லைப் பெரியாறு பிரச்னை. இங்கும் எந்தவித மாற்றுச் செயல் திட்டமும் நம்மிடம் இல்லை. நீர் மிகுதியாகக் கிடைக்கும் இடத்தில் இருந்து பற்றாக்குறை உள்ள இடங்களுக்கு பம்ப் ஸ்டோரேஜ் சிஸ்டத்தின் மூலம் தண்ணீரைக் கொண்டுவரும் திட்டங்கள் உலகின் பல இடங்களில் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. பள்ளமான இடத்தில் இருந்து நீரை மின்சாரத்தின் மூலம் மேலே ஏற்ற வேண்டும். மறுபக்கத்தில் அந்த நீரை வேகமாக இறங்கவைக்கும்போது அதே மின்சாரத்தை உற்பத்தி செய்துகொண்டுவிட முடியும். அப்படியாக அதிக செலவில்லாமல் நீர் மறுபக்கம் வந்து சேர்ந்துவிடும். முல்லைப் பெரியாறு அணையில் தற்போது சுமார் 100க்கு அடிக்கு மேல் இருக்கும் நீர் மட்டுமே நம்மால் பயன்படுத்தப்படுகிறது. அணையின் உயரத்தை அதிகரிக்காமலேயே ஆழத்தில் இருக்கும் நீரையும் பயன்படுத்திக் கொள்ள இந்தத் திட்டம் பயன்படும். கர்நாடகாவில் மேற்குப் பகுதி மலைகளில் பெய்து அரபிக் கடலில் கலக்கும் 90% நீரைக் கிழக்குப் பக்கம் திருப்பவும் இது பயன்படும். இவற்றில் எல்லாம் எந்த சுற்றுச்சூழல் பிரச்னையும் கிடையாது. அதிக செலவும் ஆகாது. மக்கள் மீதான அக்கறை இருந்தால் போதும். உலக வங்கி ஒப்புதல் கொடுத்த திட்டமும் கூட. இருந்தும் இவை தொடர்பாக எந்த துரும்பும் இதுவரை தேசிய சக்திகளால் கிள்ளிப்போடப்படவில்லை.
மூவர் தூக்கு பிரச்னை தமிழ் மக்கள் மத்தியில் அதிக சலனத்தை உருவாக்க வல்லது. அஜ்மல் கசாப், அப்சல் குரு ஆகியோரின் தூக்கு இந்திய அளவில் ஏற்படுத்திய தாக்கத்தைவிட மூவர் தூக்கு தமிழகத்தில் பெரும் அலைகளை உருவாக்கும். பேரறிவாளனைத் தவிர மற்ற இருவருக்கு மட்டுமே மரண தண்டனையை நிறைவேற்றும் அரசியல் சாதுரியம் நம் தலைவர்களிடம் இருக்குமா என்று தெரியவில்லை.
வெறும் பேட்டரி செல் வாங்கிக் கொடுத்ததற்காக பேரறிவாளனுக்கு தூக்கா..? என்பதுதான் மக்கள் முன் வைக்கப்படும் வாதம். ராஜீவ் காந்தி கொல்லப்பட்டது குறித்து பேரறிவாளரின் கருத்து என்ன? விடுதலைப் புலிகளின் செயல்பாடுகள் குறித்து என்ன நினைக்கிறார்? ராஜீவுடன் அப்பாவி காவலர்கள் கொல்லப்பட்டார்களே அதற்கான தண்டனையை யாருக்குக் கொடுக்கவேண்டும்? அவருக்குத் தெரியாமல் இந்தச் சதியில் இணைத்து துரோகம் இழைத்துவிட்டார்கள் என்று வெளிப்படையாக ஒப்புக்கொள்வாரா? இவை பற்றி பேரறிவாளரின் பதிலைத் தெரிந்துகொண்டால்தான் அவர் எந்த அளவு அப்பாவி என்பது தெரியவரும். ஆனால், இந்த விஷயங்கள் எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு பேட்டரி செல் மட்டுமே முன்னால் நிறுத்தப்படும் (தனிப்பட்ட முறையில் எனக்கு சட்டபூர்வமான கொலையில் அரசு ஈடுபடுவதில் உடன்பாடு கிடையாது. மூவரையும் ராஜீவ் காந்தியின் சமாதிக்கு முன்பாக விழுந்து வணங்கச் சொல்லி, உடன் கொல்லப்பட்ட காவலர்களின் குடும்பத்துக்கு சேவகம் செய்யச் சொல்லி அனுப்பிவைத்துவிடுவேன்).
0
இந்திய அரசும் அதிகாரவர்க்கமும் கடுமையாக விமர்சிக்கப்படவேண்டியவையே. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், அந்த விமர்சனமானது இந்தியா தன் தவறுகளைத் திருத்திக்கொண்டு முன்னேற வேண்டும் என்ற அக்கறையில் வைக்கப்படுகிறதா… இந்தியா அழிய வேண்டும் என்ற செயல்திட்டத்தின் அங்கமாக முன்வைக்கப்படுகிறதா என்பது மிகவும் முக்கியம். அமெரிக்காவில் புஷ் அரசோ ஒபாமாவின் அரசோ ஒரு தவறு செய்தால் அங்குள்ள மக்கள் புஷ்ஷின் அரசையோ ஒபாமாவின் அரசையோதான் விமர்சிப்பார்கள். அமெரிக்க கூட்டமைப்பை வெறுத்து ஒழிக்க நினைக்கமாட்டார்கள். இதுதான் விமர்சனத்தின் அடிப்படை. இப்படியான அணுகுமுறையை நிச்சயம் வரவேற்க வேண்டும். அதைவிட்டு விட்டு பிரிவினையை முன்வைப்பது எந்தவகையிலும் யாருக்கும் பலன் தரப்போவதில்லை. இன்று இந்திய மாநிலத்தினர் எதிர்கொள்ளும் எந்தவொரு பிரச்னையும் அவர்கள் இந்தியர்களாக இருப்பதால் வந்தவை அல்ல. இந்தியராக இல்லாமல் இருப்பதால் வரும் பிரச்னையே. இந்திய தேசியம் தந்திருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி பிரச்னைகளைத் தீர்க்க முடியாத ஒரு குழு பிரிவினைவாதம் பேசி, பேரழிவைத்தவிர எதைத்தான் சாதித்துவிட முடியும்?
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பிரச்னைகளை, அடுத்து வரப்போகும் மத்திய அரசு எப்படி கையாளப் போகிறது என்பதுதான் நம் வருங்காலத்தைத் தீர்மானிக்கப் போகிறது. நம் இயற்கை வளங்கள் வளர்ந்த நாடுகளால் சூறையாடப்பட்டு வரும் பின்னணியில், அதிக மக்கள் தொகையையும் வேறுபாடுகளையும் கொண்ட நம் தேசம் ஒருமைப்பாட்டுடன் திகழ வேண்டுமானால், தொலை நோக்குப் பார்வையும் திட சித்தமும் தேச பக்தியும் கொண்ட ஒரு தலைவர் தேவை. சோனியாவின் ஆட்சியில் இந்தியா உள்நாட்டில் அடைந்த பின்னடைவில் இருந்தும் சர்வ தேச அரங்கில் பட்ட அவமானங்களில் இருந்தும் மீள நாம் நிறையச் செய்ய வேண்டியிருக்கிறது.
பிரிவினைவாதிகளை அழிக்க முற்படுவதைவிட அவர்களுடைய அதிருப்திக்குக் காரணமான பிரச்னைகளை அழிப்பதுதான் தேசத்தின் வளர்ச்சிக்கு உதவும். அவர்கள் களத்தில் இறங்கிவிட்டார்கள். தேசியவாதிகள் தூக்கத்தைக் கலைத்துக்கொண்டு எழுந்தாகவேண்டும். உலகின் மிகப் பெரிய கொடுங்கோல் சாம்ராஜ்ஜியத்தை அஹிம்சை வழியில் அடிபணியவைத்த நம்மால் இதைக்கூடச் செய்ய முடியாதா?



















