நம்மால் இதைக்கூடச் செய்ய முடியாதா?

Uni-Protest_CI

விதியே விதியே

என் செய நினைத்தாய்

என் இந்திய ஜாதியை..?

சமீபகாலமாகத் தமிழகத்தில் இந்திய தேசியத்தை வெறுத்து விமர்சிக்கும் போக்கு அதிகரித்துவருகிறது.

இளைதாக முள்மரம் கொல்க களையுநர்

கைக்கொல்லும் காழ்த்த இடத்து

இந்த அடிப்படையில் இந்தப் பிரிவினைவாத முழக்கங்களை கொஞ்சம் அதிக பதற்றத்துடன் நாம் கவனித்தாக வேண்டியிருக்கிறது. ஒருவேளை இந்த பதற்றம் தேவையற்றதாக இருக்கக்கூடும். இது தொடர்பான யூகங்கள் பொய்த்துப்போகக்கூடும். அப்படி நடந்தால் நல்லதே. நல்லதே நடக்கும் என்று நம்புவோம். அதேநேரம், மோசமானதை எதிர்கொள்ளவும் தயாராகிக்கொள்வோம்.

சமீபத்தில் ’தன்னெழுச்சி’யாக ஆரம்பிக்கப்பட்ட மாணவர்களின் போராட்டம் இந்திய எதிர்ப்பு உணர்வை ஒரு சில கோரிக்கைகளில் வெளிப்படையாகவும் வேறு சிலவற்றில் மறைமுகமாகவும் வெளிப்படுத்தியிருந்தன. ஏற்கெனவே இலங்கைத் தமிழர் பட்ட வேதனைகளுக்கு எதுவும் செய்ய முடியவில்லையே என குற்ற உணர்ச்சியில் இருந்த தாயகத் தமிழர்களின் உணர்ச்சிக்கு வடிகாலாக அந்தப் போராட்டம் பலம் பெற்றது. ஆனால், இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்த சாதாரண மக்களுக்குப் பிரிவினை எண்ணம் துளியும் கிடையாது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பின்னின்று இயக்கும் நபர்களின் செயல் திட்டத்தை முழுவதுமாகப் புரிந்துகொள்ளாமல்தான் பலரும் தெருவில் இறங்கிப் போராடினார்கள் என்பதுதான் உண்மை.

ஆனால், விடுதலைப் புலிகள் தனி நாடு கேட்டுப் போராட ஆரம்பித்தபோது அவர்களிடம் இல்லாத நியாயமானது சிங்கள அரசின் அராஜகச் செயல்களால் வந்து சேர்ந்ததுபோல், இன்று தனித் தமிழ் நாடு கோரும் பிரிவினைக்குரலுக்கும் இந்திய தேசிய அரசு ஒரு நியாயத்தைக் கற்பித்துவிடுமோ என்ற அச்சம் தோன்றுகிறது. இறையாண்மைக்கு ஊறு வந்துவிடும் என்று சொல்லிச் சொல்லியே இறையாண்மைக்கு ஊறை விளைவித்துக்கொண்டுவிடும் அது. ஏனென்றால், இந்திய தேசம் தற்போது இந்தியர்களால் ஆளப்படவில்லை. பிறப்பால் இந்தியர்களாகவும் நடத்தையால் மேற்குலகின் விசுவாசிகளாகவும் இருக்கும் கூட்டத்தால் இந்த தேசம் ஆளப்பட்டுவருகிறது.

தமிழகத்தில் எழத் தொடங்கியிருக்கும் பிரிவினைவாதக் குரல்களை இந்தப் பின்னணியில்தான் பார்க்கவேண்டும். இன்று ஈழத் தமிழர்களுக்காகப் போராட வந்திருக்கும் மாணவச் செல்வங்கள், நாளை கூடங்குளம், முல்லைப் பெரியாறு, காவிரி போன்ற பிரச்னைகளுக்கும் வீதிக்கு வருவார்கள். பேரறிவாளன் உட்பட மூவருக்கான தூக்கு பற்றிய தீர்ப்பு வரும்போது அது தொடர்பாகவும் வீதிக்கு வருவார்கள். ஆனால், பரமக்குடி, தருமபுரி வன்முறைகளின் போதெல்லாம் இந்த மாணவச் செல்வங்கள் பொங்கி எழமாட்டார்கள் என்றே தோன்றுகிறது. சுருக்கமாகச் சொல்வதானால், மாணவச் செல்வங்களின் அரசியல் என்பது மே-17, வைகோ, சீமான், நெடுமாறன் அன்கோவின் அரசியல்தான். ஒருவேளை அவர்களுக்கு இதையும் தாண்டிய அக்கறை உண்டு என்றால், பிரபாகரனின் புகைப்படத்தையும் புலிகளின் கொடியையும் தூர தள்ளி வைத்துவிட்டு வந்திருப்பார்கள். ஆனால், அவர்களோ திலீபன்களைத் தொடர்ந்து பிரபாகரன்கள் வருவார்கள் என தெளிவான திட்டத்துடன்தான் இயங்க ஆரம்பித்திருக்கிறார்கள். கொடுக்கப்படும் சாவிக்கு ஏற்பத்தானே ஆட முடியும் பொம்மைகளால். எனவே, இந்த எழுச்சியை மாணவச் செல்வங்களின் போராட்டம் என்று வெகுளித்தனமாகப் பார்க்காமல் மறைந்திருக்கும் அம்சங்களின் அடிப்படையில் பார்ப்பது மிகவும் அவசியம்.

இந்தியா ஒரு தேசமாக இத்தனை ஆண்டுகள் (!?) நீடித்து நிற்கும் என்று உலகில் பெரும்பாலானவர்கள் நம்பியிருக்கவே இல்லை. பல்வேறு மொழிகளின் காட்சிசாலையான இந்தியா ஒரு இயல்பான கூட்டமைப்பு அல்ல. பிரிட்டிஷார்தான் அதை உருவாக்கினார்கள். அவர்கள் போனதும் இந்திய மாநிலங்கள் தமக்குள் சண்டையிட்டபடி பிரிந்துவிடுவார்கள் என்பதுதான் மேற்குலகின் நம்பிக்கையாக இருந்தது. ஆனால், அந்த நம்பிக்கை பொய்த்தது. அம்பேத்கர் தலைமையில் உருவாக்கப்பட்ட அரசியல் சாசனத்தினால் வழங்கப்பட்ட உரிமைகளையும் சலுகைகளையும் பெற்று ஒவ்வொரு பிரிவும் தமக்கான முன்னேற்றத்தை ஜனநாயக முறையில் வென்றெடுக்க ஆரம்பித்தன. எவ்வளவோ குறைகள் உண்டு என்றாலும் அவற்றை ஆக்கபூர்வமான போராட்டங்கள் மூலம் சரி செய்வதற்கான வழிகளும் இந்தியாவில் இன்றும் இருக்கவே செய்கின்றன. சூழலை வென்றெடுப்பதற்குப் பதிலாக சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்வதே நம் தேசிய குணமாக இருக்கிறது. எனவே, மேற்குலக அளவுகோல்களை வைத்து அளவிட்டு வருந்த வேண்டிய அவசியமில்லைதான். ஆனால், பாரம்பரியத்தில் இருந்து நாம் துண்டிக்கப்பட்டதால் அடைந்திருக்கும் இழப்புகள் குறித்தும் சுதேசி நலன்கள் புறக்கணிக்கப்படுவது குறித்தும் நாம் நிச்சயம் கவலைப்பட்டாகவேண்டும். அந்த வகையில் இந்தியா ஒற்றை தேசமாக இருப்பதில் பெருமைப்பட்டுக்கொள்ளப் பெரிதாக எதுவும் இல்லை என்பதுதான் உண்மையே.

அதோடு, பிரிவினைக்கான அதிருப்திகளும் இயக்கங்களும் ஆரம்பத்திலிருந்தே இருக்கத்தான் செய்கின்றன. காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்கள், காலிஸ்தான் என பிரிவினை கோஷங்கள் எழுந்தும் அடங்கியும் இருந்துவருகின்றன. தமிழகத்திலும் திராவிட நாடு கேட்டு இயக்கங்கள் வெடித்திருக்கின்றன. ஆனால், மத்தியில் கூட்டாட்சி… மாநிலத்தில் சுயாட்சி என்பது தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் நன்மையைத் தரும் என்பதைப் புரிந்துகொண்டு திராவிட முன்னேற்றக்கழகத்தினர் பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டுவிட்டனர் (விடுதலைப் புலிகள் செய்யத் தவறிய விஷயம்). காவிரிப் பிரச்னை, முல்லை பெரியாறு பிரச்னை போன்றவற்றில் அவ்வப்போது தமிழகம் வஞ்சிக்கப்பட்டதாக அதிருப்திக் குரல்கள் எழும். அவை பெரிதும் தூய தமிழ் தேசியம் பேசும் சிறு குழுக்களால் முன்னெடுக்கப்படும். மக்கள் மத்தியில் அந்தப் பிரிவினைக் குரல்களுக்கு என்றும் ஆதரவு இருந்ததில்லை.

இலங்கை பிரச்னையில்கூட ராஜீவ் காந்தி கொலைக்கு முன்புவரை இலங்கைத் தமிழர்கள் மீது இருந்த ஆதரவு அதற்குப் பின்பாக வற்றிவிட்டது. ஈழத்தின் கடைசி யுத்தம் நடந்தபோது இந்தியாவில் நடந்த தேர்தலில்கூட உள் நாட்டுப் பிரச்னைகளே தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தன. காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணிதான் கூடுதல் இடங்களைப் பெற்று ஆட்சி அமைத்தன. அந்தவகையில் அதுவரையிலும் தனி ஈழத்துக்கு (விடுதலைப்புலிகளுக்கு) இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் எந்தப் பொது மக்கள் ஆதரவும் இருந்திருக்கவில்லை.

ஆனால், இப்போது பாய்மரம் திருப்பப்பட்டிருக்கிறது. தமிழக முதல்வராக தற்போது பதவியில் இருக்கும் ஜெயலலிதா, தனி ஈழமே தீர்வு என்று சட்டசபையில் தீர்மானம் கொண்டுவந்திருக்கிறார். இலங்கை நட்பு நாடு அல்ல என்றும் முழங்கியிருக்கிறார். இந்தியா சர்வதேச விசாரணைக்கு முன்கை எடுக்க வேண்டும், இலங்கை அரசை இனப்படுகொலை செய்த அரசாக அறிவிக்கவேண்டும் என்ற கோரிக்கைகளை தி.மு.க.வும் முன்வைத்திருக்கிறது. இவை இரண்டுமே ‘மாணவர் போராட்ட’த்துக்குப் பிறகு நடந்தேறியிருக்கும் பெரிய திருப்பங்கள்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸையும் தி.மு.க.வையும் தனிமைப்படுத்த உதவும் என்ற நோக்கில் மாணவப் போராட்டத்தை தொடர அனுமதித்த ஜெயலலிதாவுக்கு இந்தப் போராட்டத்தின் பின்னால் இருக்கும் அபாயங்கள் புரிந்ததுபோல் தெரியவில்லை. ஆனால், அவர்கள் மிகவும் தெளிவாகவே இருக்கிறார்கள். காங்கிரஸைக் குறிவைத்து எதிர்ப்பதால் உருவாகப்போகும் வெற்றிடத்தை மற்றொரு தேசிய கட்சியான பிஜேபி பிடித்துவிடக்கூடாது என்பதற்காக அவர்களாலும் ஏற்றுக்கொள்ள முடியாத தனி ஈழக் கோரிக்கையை முன்வைத்தே போராட ஆரம்பித்திருக்கிறார்கள். மேலும் இலங்கை அரசு செய்த மிகப் பெரிய தவறு ஒன்றை முன்னிலைப்படுத்தியதன் மூலம் தாங்கள் (புலிகள்) செய்த அதைவிட சற்று குறைவான எல்லா தவறுகளையும் நியாயப்படுத்திவிட்டிருக்கிறார்கள். ஒரே அம்பில் பல குருவிகள்.

இன்று வெறுமனே காங்கிரஸ் எதிர்ப்பாக இருக்கும் இந்த இயக்கமானது நாளை நிதானமாக, இந்திய எதிர்ப்பாக மடைமாற்றப்படும். இப்போதே பல புரட்சிகர குழுக்கள் தாங்கள் கனவு கண்ட புரட்சி வந்தேவிட்டதோ என்று திடுக்கிட்டு எழுந்து மத்திய அரசு அலுவலகங்கள், ராணுவ மையங்கள் ஆகியவற்றை முற்றுகையிட்டதும் நடந்திருக்கிறது. விடுதலைப் புலிகளை கொம்பு சீவிவிட்டு பேரழிவுக்கு ஒருவகையில் காரணமான நபர்கள் இன்று இந்தியாதான் கொன்று குவித்தது என்று வீதிகளில் வெளிப்படையாக முழங்க ஆரம்பித்திருக்கிறார்கள். இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த கட்சிகள் தமிழர்களை ஒடுக்குவதில் போட்டி போட்டதுபோல், இந்திய தேசியத்துக்கு எதிராகச் செயல்படுவதில் யார் முந்தி என தமிழகத்திலும் கூத்துகள் நடைபெற அனைத்து சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன. ஏனென்றால், தமிழக அரசியல் கட்சிகளும் தேசியக்கட்சிகளும் அப்பட்டமான சுய நல, மக்கள் விரோத நபர்களின் கைகளில்தான் சிக்கியிருக்கின்றன.

இப்போது இந்திய எதிர்ப்பு முழக்கங்களின் தார்மிக வலுவைப் பற்றிப் பார்ப்போம். ஈழப் பிரச்னை, மீனவர் கொலைகள், கூடங்குளம், காவிரி, முல்லைப் பெரியாறு, மூவர் தூக்கு தண்டனை போன்ற விஷயங்களில் இந்தியாவுடன் தமிழகத்துக்கு மோதல் இருக்கின்றன. மின் தட்டுப்பாடு, விவசாய நசிவு, மது போன்ற உண்மையான பிரசனைகள் இருக்கும் நிலையிலும் உணர்ச்சிபூர்வமான பிரசனைகளே அரசியலுக்கு உதவும் என்பதால் இவையே முன்னிலைப்படுத்தப்படவும் செய்யும்.

முதலாவதாக, ஈழப் பிரச்னையில் இந்தியா இலங்கைக்கு செய்த ராணுவ உதவிகள் தமிழ் தேசியக் குழுக்களுக்குப் பெரும் ஆத்திரத்தைக் கிளப்பியிருக்கின்றன. முள்ளிவாய்க்கால் பகுதியில் புலிகளும் மக்களும் முற்றுகையிடப்பட்டபோது கடல் வழியாக பிரபாகரன் தப்பிவிட திட்டமிட்டிருந்ததாகவும் இந்திய கடற்படையின் உதவியால்தான் அவர் பிடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார் என்றும் உள்வட்டாரங்களில் பேசப்படுகின்றன. இன்னும் சிலர் இந்திய (சோனியா) அரசின் திட்டப்படித்தான் கடைசி போரில் பிரபாகரன் தடுப்பாட்டம் ஆடினார். இலங்கை அரசை சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்த அவர்களால் கொல்லப்படும் அப்பாவிகளின் பிணங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். கடல் வழியாகத் தப்பித்துப்போய் போராட்டத்தை வென்றெடுக்கலாம் என்று திட்டம் தீட்டிக் கொடுத்த இந்திய (சோனியா) அரசு கடைசியில் குறுக்குச் சால் ஓட்டி பிரபாகரனைப் பிடித்துக் கொடுத்துவிட்டது என்றும் சொல்கிறார்கள். (சோனியா) இந்தியாவின் அந்த துரோகத்துக்குத்தான் பழிவாங்கப் புறப்பட்டிருக்கிறார்கள் தமிழ் தேசியப் போராளிகள். சீனா, பாகிஸ்தான் கொடுத்த ஆயுதங்களில் பத்தில் ஒரு பங்குகூட கொடுத்திராத இந்தியா மீது பெரிதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதன் பின்னால் அந்த விஷயமே அடங்கியிருக்கிறது.

போரினால் அப்பாவிகள் பாதிக்கப்பட்டதுதான் இவர்களுடைய ஆவேசத்துக்குக் காரணமென்றால், ஆதி முதல் அந்தம் வரை புலிகள் செய்த அட்டூழியங்களையும் சேர்த்தே விமர்சித்திருப்பார்கள். இன்றைய போராட்டங்களில் பிரபாகரனின் படமும் புலியின் படமும் இருந்திருக்காது. இப்போதும் அந்த இரண்டையும் கீழிறக்கிவிட்டு போராட முன்வந்தால் இந்தியாவுக்கு இவர்கள் சொல்லும் விஷயத்தில் அக்கறை ஏற்படும். ஆனால், இந்திய அரசுக்கு உண்மையைப் புரியவைத்து ஈழத்தமிழர் விஷயத்தில் ஆக்கபூர்வமாகச் செயல்படவைக்க வேண்டும் என்பது அல்ல; நிறைவேற்ற முடியாத கோரிக்கையை முன்வைத்து இடைவெளியை என்றென்றைக்குமாக அதிகரிக்கவேண்டும் என்பதுதான் இப்போதைய இலக்கு. சர்வதேச விசாரணையில் விடுதலைப்புலிகளின் செயல்களும் விசாரிக்கப்படவேண்டும் என்ற வாசகத்தை என்றைக்குச் சேர்க்கிறார்களோ அன்றுதான் ஈழத் தமிழர்கள் மீதான அக்கறையில் இதைச் செய்கிறார்கள் என்று இவர்களை நம்பமுடியும்.

அடுத்ததாக, ஈழத்தில் இருக்கும் தமிழர்களே கேட்காத தனி ஈழக் கோரிக்கையை பாதுகாப்பான துரத்தில் இருந்துகொண்டு தமிழகத்தில் ஆவேசமாக எழுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள். இலங்கை அரசை விடுங்கள்… இந்திய அரசுகூட இந்த கோரிக்கையை ஏற்க முடியாது. தனி ஈழத்துக்கு ஆதரவாக ஒரு வார்த்தை இந்தியா பேசினாலும் அதைச் சாக்காக வைத்து மேலும் கிளர்ந்தெழ இந்தியாவில் ஏராளமான குழுக்கள் காத்திருக்கின்றன. எனவே, இந்தியா இந்த விஷயத்தில் தனி ஈழத்தை ஆதரிக்கவே முடியாது. அது நிச்சயமாக பிரிவினைவாதிகள் சொல்வதுபோல் தமிழர்கள்மேல் இருக்கும் வெறுப்பினால் அல்ல. ஏனென்றால், மத்திய மாநில அரசுகளின் கூட்டாட்சிதான் இந்தியாவின் கொள்கையே.

இன்று இந்த கோஷங்களை வைப்பவர்களின் நோக்கம் தனி ஈழம் கிடைக்கவேண்டும் என்பது அல்ல. அதை வைத்து இந்தியாவுக்கு நெருக்கடி தரவேண்டும் என்பதுமட்டுமே. ஏனென்றால், ஈழம் கிடைக்காது என்பது அவர்களுக்கும் நன்கு தெரியும். இந்த விஷயத்தில் இந்தியா மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் விழி பிதுங்கிக்கொண்டு நிற்கிறது. புலிகளுக்கும் தனி ஈழத்துக்கும் எதிராகப் பேசுவது என்பது வேறு; ஈழத்தமிழர்களின் நலனுக்காகப் பேசுவது என்பது வேறு. இந்தத் தெளிவை மக்களுக்கு கொண்டுசெல்லத் தவறினால் பிரிவினைவாதிகளின் கையே ஓங்கும்.

india2000 ஆண்டுகளுக்கு முன்னால் மனுவாதிகள் செய்தவை என்று நீட்டி முழக்கி அரசியல் நடத்திவரும் திராவிட முன்னேற்ற கழகத்தினரும் நேற்று நாங்கள் செய்ததை மறந்துவிடுங்கள். இன்று நாங்கள் பரிசுத்தவான்கள். இந்தியா இலங்கையைக் கண்டிக்கவேண்டும் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்து ரத்தம் கூட ஆறியிருக்காத நிலையில் இலங்கைக்குச் சென்று ராஜபக்சேவுடன் பெட்டிகள் மாற்றிக்கொண்டு பொன்னாடைகள் போர்த்தி முரண்பாடுகளோடு உறவாடச் சென்றவர்கள் இந்திய தேசியத்துடன் பகைமை பாராட்டத் தொடங்கியதன் காரணம் என்ன? தமிழகக் கட்சிகளின் இப்படியான அரசியல் குட்டிகரணங்களால் நிலைமை மேலும் சிக்கலாகவே செய்யும்.

அடுத்ததாக, தமிழக மீனவர்கள் இலங்கைப் படையினரால் கொல்லப்படும் விவகாரம். இது தொடர்பாக வட இந்திய ஊடகங்களில் பேசும் தமிழகத் தலைவர்கள், ஒரு விஷயத்தை ஆவேசமாகக் கேட்கிறார்கள்: முப்பது ஆண்டுகளாக 500க்கும் மேற்பட்ட தமிழகத் தமிழர்கள் கொல்லப்பட்ட பிறகும் நீங்கள் எதிர்த்து எதுவும் சொல்லவே இல்லையே. கேரள மீனவர்கள் இரண்டு பேர் கொல்லப்பட்டதற்கு இத்தனை நடவடிக்கை எடுத்திருக்கிறீர்களே… அப்படியானால் தமிழக மீனவர்கள் இந்தியர்கள் இல்லையா..?

இந்தக் கேள்வியில் இருக்கும் நியாயம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டியதுதான். ஆனால், தமிழர்களை இந்தியர்களாக மதிக்கவைக்க என்ன செய்யவேண்டும்? என் துயரத்தை நீ பொருட்படுத்தவில்லை எனவே, நான் உன்னை விட்டுப்பிரிகிறேன் என்பது எந்த அளவுக்கு நியாயம்? இந்த முப்பது வருட காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் வலிமையுடன் இருந்த காலகட்டமும் அடங்கும். அப்போது நடந்த கொலைகள் வேறு கோணத்தில் பார்க்கப்படவேண்டியவை அல்லவா. இந்திய தேசியத்தில் இணைந்து இருந்ததால் தமிழகம் அடைந்த நன்மைகள் எல்லாமே இந்த ஒற்றை விஷயத்தினால் இல்லாமல் போய்விடுமா?

அதோடு, தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள்தான் இந்தப் படுகொலைகள் நடந்தபோதெல்லாம் மத்திய அரசில் அங்கம் வகித்திருந்தார்கள். இந்தியாவின் பிற பகுதி மக்கள் இந்தப் பிரச்னையை தமிழக அரசியல் தலைவர்கள் எப்படி அணுகினார்களோ அதன் அடிப்படையில்தான் புரிந்துகொண்டிருக்கவும் முடியும். அந்தவகையில் வட இந்திய ஊடகங்களின் அலட்சியத்துக்கு தமிழக அரசியல் தலைவர்கள் மற்றும் ஊடகங்களின் செயல்பாடும் முக்கிய காரணமே. இலங்கையில் போர் தீவிரம் அடைந்தபோது ஏன் மத்திய அரசுக்கான ஆதரவை வாபஸ் வாங்கவில்லை என்ற கேள்விக்கு திமுக ஒரு சப்பைக்கட்டு பதிலைச் சொல்கிறது. இவர்கள் ஆதரவை விலக்கிக்கொண்டிருந்தால் வேறொரு கட்சி ஆதரவு கொடுத்திருக்குமாம். அதாவது, இவர்கள் கத்தியால் குத்தியிருக்கவில்லையென்றால் வேறொருவர் குத்தியிருப்பாராம். அதனால் இவர்கள் ஈழத்தமிழர்கள் முதுகில் குத்திவிட்டார்களாம். உண்மையில் இந்த விஷயத்தில் என்ன செய்திருக்க வேண்டும். மத்திய அரசுக்கு யாரெல்லாம் ஆதரவு தரத் தயாராக இருக்கிறார்களோ அவர்களுடன் பேசி விஷயத்தை விளக்கிப் புரிய வைத்திருக்கவேண்டும். ஆனால், அதைச் செய்யவில்லை.

இப்போதும் மம்தா பானர்ஜி இந்தியாவின் அயலுறவுக் கொள்கையை பிராந்திய கட்சிகள் தீர்மானிக்கக்கூடாது என்று சொல்லும்போது பிரிவினைவாதிகள் என்ன செய்கிறார்கள்… பாண்டிச்சேரியில் இருக்கும் மேற்குவங்காள அரவிந்தரின் ஆஸ்ரமத்தை அடித்து நொறுக்குகிறார்கள். இதுவா பிரச்னையைப் பிறருக்குப் புரியவைக்கும் முறை? உண்மையில் இன்று தமிழக அரசியல் கட்சிகள் எல்லாவற்றிடமும் காட்சி ஊடகமும் அச்சு ஊடகமும் இருக்கின்றன. வட இந்திய ஊடகங்களில் தமிழக பிரச்னைகள் பேசப்படுவதில்லை என்று அங்கலாய்ப்பவர்கள், தங்களுடைய ஊடகங்களில் வட இந்திய சிந்தனையாளர்களை அழைத்து பேச வைத்து அவர்களுக்கு நிலைமையை எடுத்துச் சொல்லியிருக்கலாமே? அதிகாரவர்க்கத்தை எதிர்க்கும் அருந்ததி ராய் போன்ற நபர்களுக்கூட உங்கள் பக்க நியாயத்தைப் புரியவைக்க முடியவில்லையென்றால் யார் மீது குற்றம்? இன்று திடீரென்று சிலிர்த்துக்கொண்டு எழுந்து தமிழன் இந்தியன் இல்லையா..? என்று முழங்குவதில் என்ன நியாயம் இருக்கிறது?

பிற பகுதி தமிழர்களும் இந்தப் பிரச்னைக்காகப் பெரிதாக போராடியதும் இல்லை. அப்படியானால், தமிழக மீனவர்கள் எஞ்சிய தமிழக மக்களைப் பார்த்து நாங்கள் தமிழர்களா இல்லையா..? எங்கள் வேதனையை ஏன் நீங்கள் பொருட்படுத்தவில்லை என்று கேட்கவும் முடியும் அல்லவா? இப்போதுகூட பெரிய படகுகளில் செல்பவர்கள் தாக்குதலுக்கு ஆளாவதில்லை. சிறிய தனிப் படகுகளில் செல்பவர்கள் மட்டுமே தாக்கப்படுகிறார்கள். முதற்கட்டமாக பெரிய படகுகள் சிறிய மீனவர்களைத் தம்முடன் அழைத்துச் செல்லலாம். கூட்டமாக மீன் பிடிக்கச் செல்லலாம். இந்திய கடற்படையினர், தமிழக காவல் படையினர் பாதுகாப்புக்கு உடன் செல்லலாம். நமது கடல் பகுதிக்குள்ளாகவே படகு சவாரி, சர்ஃபிங்க், டைவிங் என கோவா, கோவளம் போல் கடல் சுற்றுலாவையும் நீர் விளையாட்டுகளையும் வளர்த்தெடுத்து மீனவர்களுக்கு புதிய வாழ்வாதாரத்தை உருவாக்கித் தரலாம்.  துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பது புதிய சிந்தனை ஒன்றுமல்ல. கச்சத்தீவை வென்றெடுத்தல், வாரத்தில் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் மீன் பிடித்தல், மீன் வளத்தைப் பெருக்குதல் என பிரச்னைக்குரிய பகுதியில் ஒருவித ஒழுங்கு கொண்டுவரப்படும்வரையில் உயிரிழப்பைத் தடுக்கும் வகையிலான முயற்சிகளை எடுப்பது மிகவும் அவசியம்.

இது போன்ற விஷயங்களில் இந்திய அரசியல் கட்சிகள் செய்யும் தவறுகளுக்காக இந்தியாவை வெறுத்து அறம் பாடிய பார்ட் டைம் பத்தினிகளில் யாரும் தமிழினம் அழிந்து போகட்டும் என்று சாபம் எதுவும் விடவில்லையே. இந்தியாவைத் திட்டினால் கிடைக்கும் வசதி வாய்ப்புகள் தமிழினத்தைத் திட்டினால் கிடைக்காது என்பதனாலா புதிய தலைமுறையின் கருத்து கந்தசாமிக்கள் வாய் மூடிக் கிடக்கிறார்கள்? தமிழக அரசியல் தலைவர்களையும் தமிழினத்தையும் பிரித்துப் பார்க்கும் நிதானமும் முதிர்ச்சியும் இந்திய விஷயத்தில் மட்டும் காணாமல் போவது ஏன்?

சரி அதை விடுங்கள்… தமிழகத்தில் கடந்த அதே முப்பது ஆண்டுகளில் சாதி தமிழர்களால் நூற்றுக்கணக்கான தமிழ் தலித்கள் கொல்லப்பட்டிருக்கிறார்களே… இன்றும் கிராமங்களில் தமிழ் தலித்கள் படும் வேதனை கொஞ்ச நஞ்சமா என்ன? தமிழ் தலித்களுக்கு தனி நாடுகேட்டு போராட வேண்டியதுதானே? தேவர்களும் வன்னியர்களும் வெட்டி விடுவார்கள் என்ற பயமா? தமிழ் தலித்துகளையும் சாதி தமிழர்களையும் தமிழ் என்ற அடையாளத்தின் மூலம் ஒன்றிணைக்க வேண்டும் என்ற முயற்சி எந்த அளவுக்கு நல்லதோ அதைவிட தமிழர்களை இந்தியர்களோடு ஒன்றிணைக்க எடுக்கும் முயற்சிகள் நூறு மடங்கு நல்லது அல்லவா.

இந்திய தேசியத்தில் தமிழர்கள் தங்கள் முக்கியத்துவத்தை அதிகரித்து நம் நலனை வென்றெடுக்க வேண்டும். அதுதான் மக்கள் நலனில் அக்கறைகொண்ட போராளியின் முதலும் கடைசியுமான இலக்காக இருக்கும். பிரிந்து போவேன் என்று மிரட்டுவது எந்த நன்மையும் தராது. விடுதலைப் புலிகளுக்கு இந்திய அரசு ஆதரவு தராமல் போனதற்கான காரணங்களில் ஒன்று, ஈழம் அமைந்துவிட்டால் தனித் தமிழ்நாடு கோஷம் வலுத்துவிடும் என்பதுதான். எனவே, ஈழம் அமையாமல் போன இந்த நேரத்திலும் தனித்தமிழ் நாடு கோஷத்தை ஆரம்பித்துவைத்து, இந்திய அரசு இலங்கை விஷயத்தில் செய்தது சரியே என்று சரித்திரத்தை எழுத வைத்துவிடாதீர்கள். ஏனென்றால், இந்த சரித்திரம் எளிதில் உலரும் மை கொண்டு எழுதப்படாது.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. நம்மில் ஒற்றுமை நீங்கிடின் அனைவருக்கும் தாழ்வு. உள்ளத்தில் உண்மையைக் கொண்டவனின் ஒளி நிறைந்த வாக்கு அது. கலைஞர்கள், அறிவுஜீவிகள் போன்ற படித்தவர்கள் பிரிவினை பற்றிப் பேச ஆரம்பித்தால் என்ன ஆகும் என்பதற்கும் அவனே பதில் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறான். செவியுள்ளவர்கள் கேட்டாகவேண்டும் அதை.

ஈழம் கிடைக்கவில்லை. எனவே இந்தியாவும் இருக்கக்கூடாது என்ற தனக்கு ஒரு கண் போனால் எதிரிக்கு இரண்டு கண் போகவேண்டும் என்ற அணுகுமுறை ஒருநாளும் பயன் தராது. அதிலும் தன்னுடைய கையே தன் கண்ணைக் குத்தியிருக்கும் நிலையில் இது மிக மிக அபாயமான கோபம்.

0

அடுத்ததாக, கூடங்குளம் பிரச்னை காத்திருக்கிறது. காங்கிரஸ், பிஜேபி, அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட் என அனைத்து கட்சிகளுமே அணு மின் நிலையத்தை ஆதரிக்கின்றன. சீனா போன்ற நாடுகளில் என்றால் அணு மின் நிலையத்தைச் சுற்றி நாலைந்து கிலோ மீட்டர் பகுதியில் வசிக்கும் மக்களை பெட்டி படுக்கையுடன் வேறு இடத்துக்குக் கொண்டு சென்றுவிடமுடியும். இந்தியா ஜனநாயக நாடு ஆயிற்றே. நாளை பிஜேபி ஆட்சிக்கு வந்தால் கூடங்குளம் இப்போது இருப்பதைவிட பெரிய பிரச்னையாக வெடிக்க வாய்ப்பு இருக்கிறது. பார்ப்பன / இந்து / ஆரிய / வட இந்திய கட்சி திராவிடர்களைக் கொல்ல சதி என புதிய கோஷத்துடன் தமிழக பிரிவினைவாத சக்திகள் களமிறங்குவார்கள். இந்த விஷயத்தில் அனைத்து கட்சிகளுமே கூடங்குளம் அணு மின் நிலையத்தை விரும்புகிறார்கள் என்ற விஷயம் பின்னுக்குப் போய்விடும்.

காவிரி ஒரு நிரந்தர முள்ளாக இருந்து உறுத்திக்கொண்டேதான் இருக்கும். ஜீவ நதிகள் இல்லாத தமிழகத்தில் கடந்த காலத்தில் ஏரி, கிணறு, குளம் போன்றவை மூலம் மிக அருமையான பாசன அமைப்புகள் இருந்துவந்திருக்கின்றன. இன்று அவை எல்லாம் பெருமளவுக்கு அழிக்கப்பட்டுவிட்டன. மன்னராட்சி காலத்தில் மக்கள் வசம் இருந்த அதிகாரத்திலும் பொறுப்புணர்விலும் நூற்றில் ஒரு பங்கு கூட மக்களாட்சி என்று சொல்லப்படும் இன்றைய காலகட்டத்தில் இல்லை. பிரிவினை வாதம் பேசும் குழுக்களில் எந்த ஒன்றாவது ஒரு கடப்பாரை எடுத்து ஒரு குழியை வெட்டி ஒரு சொட்டு நீராவது எடுத்துக் கொடுத்திருக்கிறதா? கர்நாடகாவுடன் சண்டை என்றால் மட்டும் சரித்திரத்தின் மூடப்பட்ட பக்கங்களில் இருந்து அவர்களுக்கான வெறுப்பின் வரிகளை உருவி எடுத்துக்கொண்டு களமிறங்கிவிடுவார்கள்.. சேரனும் சோழனும் கூட நேற்றுவரை வெட்டியும் குத்தியும் வாழ்ந்த புண்ணிய பூமிதானே இது என்ற கேள்விகளை எல்லாம் எளிதில் புறக்கணித்துவிடுவார்கள். மத்திய அரசு இந்தப் பிரச்னையில் ஆக்கபூர்வமாக எந்த நடவடிக்கையும் இதுவரை எடுத்ததில்லை. இனியும் அப்படியே இருக்கும் என்றே தோன்றுகிறது.

இந்த விஷயத்தில் பிரிவினை வாதம் பேசுபவர்களை மட்டும் குறை சொல்வதில் பயனில்லை. தேசியத்தைக் கட்டிக் காப்பதாகச் சொல்லிக் கொள்ளும் அமைப்புகளும் படு அலட்சியமாகவே செயல்படுகின்றன. குறைவான நீரை வைத்து பயிர் செய்யும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல், தமிழகத்தில் வீணாகக் கடலில் கலக்கும் நீரைச் சேமிக்க வழி செய்தல் என எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அதோடு, தமிழகத்தில் இருக்கும் நீர்நிலைகளை சீரமைத்தல் என்பது பெரிய விஷயமே இல்லை. ஒவ்வொரு கிராமத்திலும் இருக்கும் நபர்களை ஒருங்கிணைத்து அவரவர் பகுதிக்கான நீர்வளத்தைப் பெருக்குவது மிகவும் எளிய விஷயமே. நூறு நாள் வேலைத் திட்டம் போன்றவற்றை தேசியவாத வலதுசாரிகள் பயன்படுத்திக்கொண்டு ஆக்கபூர்வமான மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கமுடியும். ஆனால், அவர்களோ பிற மத வெறுப்பின் மூலம் அரசியல் செய்வதில் மட்டுமே குறியாக இருக்கிறார்கள். நாஞ்சில் நாட்டில் மண்டைக்காடு கலவரத்தைத் தொடர்ந்து உருவான இந்து முன்னணி எழுச்சி, கோவையில் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து உருவான எழுச்சி என்ற இரண்டைத் தவிர தமிழகத்தின் பிற எந்த பகுதியிலும் ஆக்கபூர்வ நடவடிக்கைகளால் துளி செல்வாக்கைப் பெறக்கூட அவர்களால் முடிந்திருக்கவில்லை. பிரிவினை சக்திகளின் செயலூக்கத்தில் நூறில் ஒரு பங்கு கூட தேசியம் பேசும் குழுக்களிடம் இல்லாமல் போனால் கொடுக்கவேண்டிய விலை மிகவும் அதிகமாகவே இருக்கும். ஆநிரைகள் களவாடப்பட்ட பின் கொட்டிலைப் பூட்டிப் பலனில்லை.

அடுத்ததாக முல்லைப் பெரியாறு பிரச்னை. இங்கும் எந்தவித மாற்றுச் செயல் திட்டமும் நம்மிடம் இல்லை. நீர் மிகுதியாகக் கிடைக்கும் இடத்தில் இருந்து பற்றாக்குறை உள்ள இடங்களுக்கு பம்ப் ஸ்டோரேஜ் சிஸ்டத்தின் மூலம் தண்ணீரைக் கொண்டுவரும் திட்டங்கள் உலகின் பல இடங்களில் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. பள்ளமான இடத்தில் இருந்து நீரை மின்சாரத்தின் மூலம் மேலே ஏற்ற வேண்டும். மறுபக்கத்தில் அந்த நீரை வேகமாக இறங்கவைக்கும்போது அதே மின்சாரத்தை உற்பத்தி செய்துகொண்டுவிட முடியும். அப்படியாக அதிக செலவில்லாமல் நீர் மறுபக்கம் வந்து சேர்ந்துவிடும். முல்லைப் பெரியாறு அணையில் தற்போது சுமார் 100க்கு அடிக்கு மேல் இருக்கும் நீர் மட்டுமே நம்மால் பயன்படுத்தப்படுகிறது. அணையின் உயரத்தை அதிகரிக்காமலேயே ஆழத்தில் இருக்கும் நீரையும் பயன்படுத்திக் கொள்ள இந்தத் திட்டம் பயன்படும். கர்நாடகாவில் மேற்குப் பகுதி மலைகளில் பெய்து அரபிக் கடலில் கலக்கும் 90% நீரைக் கிழக்குப் பக்கம் திருப்பவும் இது பயன்படும். இவற்றில் எல்லாம் எந்த சுற்றுச்சூழல் பிரச்னையும் கிடையாது. அதிக செலவும் ஆகாது. மக்கள் மீதான அக்கறை இருந்தால் போதும். உலக வங்கி ஒப்புதல் கொடுத்த திட்டமும் கூட. இருந்தும் இவை தொடர்பாக எந்த துரும்பும் இதுவரை தேசிய சக்திகளால் கிள்ளிப்போடப்படவில்லை.

மூவர் தூக்கு பிரச்னை தமிழ் மக்கள் மத்தியில் அதிக சலனத்தை உருவாக்க வல்லது. அஜ்மல் கசாப், அப்சல் குரு ஆகியோரின் தூக்கு இந்திய அளவில் ஏற்படுத்திய தாக்கத்தைவிட மூவர் தூக்கு தமிழகத்தில் பெரும் அலைகளை உருவாக்கும். பேரறிவாளனைத் தவிர மற்ற இருவருக்கு மட்டுமே மரண தண்டனையை நிறைவேற்றும் அரசியல் சாதுரியம் நம் தலைவர்களிடம் இருக்குமா என்று தெரியவில்லை.

வெறும் பேட்டரி செல் வாங்கிக் கொடுத்ததற்காக பேரறிவாளனுக்கு தூக்கா..? என்பதுதான் மக்கள் முன் வைக்கப்படும் வாதம். ராஜீவ் காந்தி கொல்லப்பட்டது குறித்து பேரறிவாளரின் கருத்து என்ன? விடுதலைப் புலிகளின் செயல்பாடுகள் குறித்து என்ன நினைக்கிறார்? ராஜீவுடன் அப்பாவி காவலர்கள் கொல்லப்பட்டார்களே அதற்கான தண்டனையை யாருக்குக் கொடுக்கவேண்டும்? அவருக்குத் தெரியாமல் இந்தச் சதியில் இணைத்து துரோகம் இழைத்துவிட்டார்கள் என்று வெளிப்படையாக ஒப்புக்கொள்வாரா? இவை பற்றி பேரறிவாளரின் பதிலைத் தெரிந்துகொண்டால்தான் அவர் எந்த அளவு அப்பாவி என்பது தெரியவரும். ஆனால், இந்த விஷயங்கள் எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு பேட்டரி செல் மட்டுமே முன்னால் நிறுத்தப்படும் (தனிப்பட்ட முறையில் எனக்கு சட்டபூர்வமான கொலையில் அரசு ஈடுபடுவதில் உடன்பாடு கிடையாது. மூவரையும் ராஜீவ் காந்தியின் சமாதிக்கு முன்பாக விழுந்து வணங்கச் சொல்லி, உடன் கொல்லப்பட்ட காவலர்களின் குடும்பத்துக்கு சேவகம் செய்யச் சொல்லி அனுப்பிவைத்துவிடுவேன்).

0

இந்திய அரசும் அதிகாரவர்க்கமும் கடுமையாக விமர்சிக்கப்படவேண்டியவையே. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், அந்த விமர்சனமானது இந்தியா தன் தவறுகளைத் திருத்திக்கொண்டு முன்னேற வேண்டும் என்ற அக்கறையில் வைக்கப்படுகிறதா… இந்தியா அழிய வேண்டும் என்ற செயல்திட்டத்தின் அங்கமாக முன்வைக்கப்படுகிறதா என்பது மிகவும் முக்கியம். அமெரிக்காவில் புஷ் அரசோ ஒபாமாவின் அரசோ ஒரு தவறு செய்தால் அங்குள்ள மக்கள் புஷ்ஷின் அரசையோ ஒபாமாவின் அரசையோதான் விமர்சிப்பார்கள். அமெரிக்க கூட்டமைப்பை வெறுத்து ஒழிக்க நினைக்கமாட்டார்கள். இதுதான் விமர்சனத்தின் அடிப்படை. இப்படியான அணுகுமுறையை நிச்சயம் வரவேற்க வேண்டும். அதைவிட்டு விட்டு பிரிவினையை முன்வைப்பது எந்தவகையிலும் யாருக்கும் பலன் தரப்போவதில்லை. இன்று இந்திய மாநிலத்தினர் எதிர்கொள்ளும் எந்தவொரு பிரச்னையும் அவர்கள் இந்தியர்களாக இருப்பதால் வந்தவை அல்ல. இந்தியராக இல்லாமல் இருப்பதால் வரும் பிரச்னையே. இந்திய தேசியம் தந்திருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி பிரச்னைகளைத் தீர்க்க முடியாத ஒரு குழு பிரிவினைவாதம் பேசி, பேரழிவைத்தவிர எதைத்தான் சாதித்துவிட முடியும்?

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பிரச்னைகளை, அடுத்து வரப்போகும் மத்திய அரசு எப்படி கையாளப் போகிறது என்பதுதான் நம் வருங்காலத்தைத் தீர்மானிக்கப் போகிறது. நம் இயற்கை வளங்கள் வளர்ந்த நாடுகளால் சூறையாடப்பட்டு வரும் பின்னணியில், அதிக மக்கள் தொகையையும் வேறுபாடுகளையும் கொண்ட நம் தேசம் ஒருமைப்பாட்டுடன் திகழ வேண்டுமானால், தொலை நோக்குப் பார்வையும் திட சித்தமும் தேச பக்தியும் கொண்ட ஒரு தலைவர் தேவை. சோனியாவின் ஆட்சியில் இந்தியா உள்நாட்டில் அடைந்த பின்னடைவில் இருந்தும் சர்வ தேச அரங்கில் பட்ட அவமானங்களில் இருந்தும் மீள நாம் நிறையச் செய்ய வேண்டியிருக்கிறது.

பிரிவினைவாதிகளை அழிக்க முற்படுவதைவிட அவர்களுடைய அதிருப்திக்குக் காரணமான பிரச்னைகளை அழிப்பதுதான் தேசத்தின் வளர்ச்சிக்கு உதவும். அவர்கள் களத்தில் இறங்கிவிட்டார்கள். தேசியவாதிகள் தூக்கத்தைக் கலைத்துக்கொண்டு எழுந்தாகவேண்டும். உலகின் மிகப் பெரிய கொடுங்கோல் சாம்ராஜ்ஜியத்தை அஹிம்சை வழியில் அடிபணியவைத்த நம்மால் இதைக்கூடச் செய்ய முடியாதா?

இலங்கையில் நீதி கோருவோம் – ஆம்னெஸ்டி இண்டெர்நேஷனல்

 

ஆம்னெஸ்டி இண்டெர்நேஷனல் கையெழுத்து இயக்கப் பிரசுரத்தின் தமிழாக்கம்

ஆம்னெஸ்டியின் பிரசாரத்துக்கு ஆதரவு தாருங்கள். இலங்கையில் நீதி கோருங்கள். 080670-06666 என்ற செல்பேசி எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் தாருங்கள். அல்லது இந்த இணையத்தளத்துக்குச் சென்று கையெழுத்திடுங்கள்.

இலங்கையில் தற்போது நடந்துவரும் மனித உரிமை மீறல்களை நிறுத்துவதாகவும் உள்நாட்டுப் போரின்போது நடைபெற்ற போர்க்குற்றங்களை விசாரணை செய்வதாகவும் இலங்கை அரசு உறுதிகூறியிருந்தது. இலங்கை சொன்னபடி நடக்குமாறு அதனை வற்புறுத்தவேண்டும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைக் கேட்டுகொண்டு ஆம்னெஸ்டி இண்டெர்நேஷனல் இந்தியா ஒரு இணையக் கோரிக்கைப் பிரசாரம் ஒன்றை நடத்தியது. ஆகஸ்ட் மாதம் அதில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் கையெழுத்திட்டிருந்தனர்.

ஆண்டுமுழுதும் நடக்கப்போகும் இந்தப் பிரசாரத்தின் இரண்டாம் கட்டத்தை ஆம்னெஸ்டி இண்டெர்நேஷனல் இப்போது செயல்படுத்த உள்ளது. இந்தியக் குடிமக்களின் கையெழுத்துடன் ஓர் இணையக் கோரிக்கை, ஐ.நாவின் மனித உரிமை மீதான யுனிவர்சல் பீரியாடிக் ரிவ்யூ (யூ.பி.ஆர்) நடக்கப்போவதற்கு முன்பாக, நவம்பர் 1-ம் தேதி அன்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அளிக்கப்படும்.

‘இலங்கையில் நீதி கோருவோம்’ பிரசாரம், ஆகஸ்ட் மாதத்தில் வெறும் ஏழே நாள்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோரின் பங்களிப்பைப் பெற்றது. அதில் பெரும்பாலானோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். ஆம்னெஸ்டி இண்டெர்நேஷனலின் இரண்டாம் கட்டப் பிரசாரம் இந்தியா முழுமையிலிருந்தும் ஐந்து லட்சம் பேரின் பங்களிப்பைப் பெற விழைகிறது.

ஐ.நாவின் யூ.பி.ஆரில் தொடங்கி அக்டோபர் 2013-ல் இலங்கையில் நடக்க உள்ள காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்வுவரை, இலங்கை சர்வதேச கவனத்தை ஈர்க்கப்போகிறது.

சர்வதேச அளவிலும் பிராந்தியத்திலும், இந்தியா மனித உரிமையில் தலைமை வகிக்கவும் ஓர் ‘உண்மையான குடியாட்சி’யாக நடந்துகொள்ளவும் செய்யும் ஓர் இயக்கத்தில் ஆம்னெஸ்டி இண்டெர்நேஷனல் சேர்ந்துகொண்டுள்ளது என்றார் ஆம்னெஸ்டி இந்தியாவின் தலைமை நிர்வாகி ஜி. அனந்தபத்மநாபன்.

‘இந்தியா தன் தென் அண்டை நாட்டின்மீது கட்டாயம் அழுத்தம் செலுத்தவேண்டும். உலகளாவிய தலைமை நாடு, உண்மையான குடியாட்சி என்று கருதப்படவேண்டும் என்று இந்தியா நினைத்தால், ஐ.நா பாதுகாப்புச் சபையில் பெரும் பங்கு வகிக்கவேண்டும் என்று இந்தியா கருதினால், உள்நாட்டிலும் சரி, பிராந்தியத்திலும் சரி, மனித உரிமை சார்பாக வலுவான தலைமைத்துவத்தைக் காண்பிக்கவேண்டும்’ என்றார் அவர்.

நவம்பரில், இந்தியாவின் தலையீட்டில் இலங்கையின் மனித உரிமை நிலை, யு.பி.ஆரால் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். ராஜபக்‌ஷே அரசின் கடந்த நான்கரை ஆண்டுகால மனித உரிமைச் செயல்பாடுகள் கேள்விக்கு உள்ளாக்கப்படும். ஐ.நாவால் தரப்படும் பரிந்துரைகளுக்கு இலங்கை பதில் சொல்லவேண்டிவரும். 2008-ல் இலங்கை, பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது ஐ.நா அளித்த பரிந்துரைகளைச் செயல்படுத்த அந்த நாடு தவறிவிட்டது. இந்த ஆண்டு, இலங்கையை வற்புறுத்தி நிஜமான மாற்றத்தைக் கொண்டுவர இந்தியாவுக்கு ஒரு பெரும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

‘இலங்கையுடன் தான் நெருங்கிய உறவு கொண்டுள்ளதாக இந்தியா சொல்கிறது. அப்படியானால், இலங்கை அரசிடம் அல்ல, இலங்கை மக்களிடம்தான் அதன் உண்மையான கடப்பாடு உள்ளது என்பதை இந்தியா புரிந்துகொள்ளவேண்டும்’ என்கிறார் அனந்தபத்மநாபன்.

இந்தியப் பிரதமர் இலங்கை அரசுக்குக் கீழ்க்கண்ட வகையில் அழுத்தம் தரவேண்டும் என்கிறது இந்தக் கோரிக்கை:

  • சித்திரவதை, காணாமல்போதல், கொலைகள் ஆகியவை தொடர்பான வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவேண்டும்.
  • ஐ.நாவின் தனி விசாரணையை அனுமதிக்கவேண்டும். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தன் வேலையைத் திறம்படச் செய்ய அனுமதிக்கவேண்டும்.
  •  வழக்கே போடாமல் கைது செய்தவர்களையும் சர்வதேச மனித உரிமை எதிர்பார்க்கும் தரத்துக்கு அருகில் வராத ‘நெருக்கடி நிலை’ அல்லது ‘தீவிரவாத எதிர்ப்பு’ சட்டத்தின்கீழ் கைது செய்தவர்களையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும்.

2008-ல் இலங்கை மேலே குறிப்பிட்டவற்றை ஏற்றுக்கொள்வதாகச் சொன்னது. ஆனால் சில மாதங்களுக்குள்ளாகத் தான் கொடுத்த வாக்கைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டது. வலுவான அண்டை நாடாக உள்ள இந்தியா தன் செல்வாக்கைப் பயன்படுத்தி சாதாரண இலங்கை மக்களின் மனித உரிமை காக்கப்படுவதில் தனக்குள்ள உறுதியை நிலைநாட்டவேண்டும்.

இந்தப் பிரசாரத்துக்கான உங்கள் ஆதரவைக் காண்பிக்கவும் இலங்கையில் நீதியைக் கோரவும் 080670-06666 என்ற செல்பேசி எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் தரவும் அல்லது கீழ்வரும் தளத்துக்குச் சென்று கையெழுத்திடவும்.

 0

பாபா ப்ளாக் ஷீப்

வீட்டைவிட்டு ஓடிப்போவது என்று ராமகிருஷ்ணன் முடிவெடுத்தபோது அவனுக்கு வயது பதினைந்து. ஹரியானா மாவட்டத்தில் இருக்கும் அலிப்பூர் கிராமம். புழுதிபடிந்த பஞ்சபூமி அது. அவனுடைய தந்தைக்கு கைவசம் வேலை மட்டும்தான் இருந்தது.  சம்பளம் என்று சொல்லிக்கொள்ளும்படி எதுவும் கிடைக்கவில்லை. வறுமை. ராமகிருஷ்ணனுக்கோ படிப்பு ஏறவில்லை. வீட்டில் இருக்கவும் பிடிக்கவில்லை. கிளம்பிவிட்டான். எங்கே போவது?

ஓடிப்போகும் சிறுவர்கள் எல்லாம் ஒன்று ராணுவத்தில் சேர்வார்கள் அல்லது பிச்சை எடுப்பார்கள். ஆனால் ராமகிருஷ்ணன் தேர்வு செய்தது ஆசிரமத்தை. இலவசமாக சோறுபோடும் அனாதை ஆசிரமத்தை அல்ல; யோகா போன்ற ஆரோக்கியக் கலைகளைக் கற்றுத்தருகின்ற குருகுல ஆசிரமத்தை.

கிராமத்தில் இருக்கும்போதே உடற்பயிற்சியில் ஆர்வம் செலுத்தியது இப்போது வசதியாக இருந்தது. ஆச்சார்ய பிரதம் என்ற யோகா குருவிடம் மெல்ல மெல்ல ஆசனங்களைக் கற்றுக்கொண்டான். அது தொடர்பான புத்தகங்களையும் படித்து தன்னை மேம்படுத்திக் கொண்டான்.

யோகக்  கலையைக் கற்றது போக எஞ்சியிருந்த நேரத்தில் சமஸ்கிருத மொழியைக் கற்பதிலும் கவனம் செலுத்தினான். அதற்கு அந்த ஆசிரமத்தில் வாய்ப்பு இருந்தது. பக்குவமாகப் பயன்படுத்திக் கொண்டான். அடித்தளம் அமைவது முக்கியமில்லை; ஆழமாக இருக்கவேண்டும்; வலுவாக அமைய வேண்டும் என்பதில் அந்தச் சிறுவன் காட்டிய ஆர்வம் ஆசிரம நிர்வாகிகளை ஆச்சரியம் கொள்ளச் செய்தது.

கலையில் கணிசமான தேர்ச்சியைப் பெற்றபோதும் ராமகிருஷ்ணனுடைய தேடல் நின்றுவிடவில்லை. ஆச்சார்ய பல்தேவ்ஜி என்ற சாமியாரைச் சந்தித்தான். பேசினான். பல புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டான். பல்தேவ்ஜியின் வழிகாட்டுதலில் தனது பெயரை மாற்றிக்கொள்ளவும் முடிவுசெய்தான். சுவாமி ராம்தேவ். ஆம். இன்று யோகக்கலை வித்தகராக, சமூக ஆர்வலராக, மத்திய அரசுக்கு சிம்ம சொப்பனமாக, நடுத்தர மக்களின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக, ஏழை மக்களின் ஆபத்பாந்தவராக ஊடகங்கள் முன்னிறுத்தும் பாபா ராம்தேவ்தான் இந்த சுவாமி ராம்தேவ்.

புதிய பெயரை வைத்துக்கொண்ட ராம்தேவ், தான் கற்றுக்கொண்ட ஆசனங்களையும் படித்த விஷயங்களையும் மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுக்க முடிவுசெய்தார். சின்னதும் பெரியதுமாக அவர் நடத்திய யோகா முகாம்களுக்கு நல்ல பலன் கிடைத்தது. உடல்பிரச்னைகளைத் தீர்க்க மருத்துவ உதவிகளை நாடி, அதுவும் பலிக்காதபோது மக்களின் ஒரே வடிகாலாக இருந்தது யோகா மட்டுமே. அதைத்தான் ராம்தேவ் குறிவைத்தார்.

நடுத்தர, வசதி நிறைந்த மக்கள் பலரும் அவருடைய முகாம்களுக்கு வரத்தொடங்கினர். மெல்ல மெல்ல பிரபலம் அடையத் தொடங்கினார். பெரிய மனிதர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. பணமும் சேரத் தொடங்கியது. கிடைத்த பணத்தைக் கொண்டு ஹரியானாவின் ஜிந்த் மாவட்டத்தில் குருகுலம் ஒன்றை உருவாக்கினார் ராம்தேவ். அங்கு வைத்து இலவச யோகா முகாம்களை நடத்தினார். இதன்மூலம் வசதியற்ற ஏழை மக்களையும் அவருடைய குருகுலத்துக்கு அழைத்துவர முடிந்தது. இலவச முகாம்களுக்கு வந்தவர்கள் செய்த வாய்வழி பிரசாரம் ராம்தேவுக்கு மேன்மேலும் பிரபலத்தைப் பெற்றுக் கொடுத்தது.

அப்போது ராம்தேவுக்கு புதிய யோசனை ஒன்று உதித்தது. நாம் ஏன் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கக்கூடாது? அப்போது உதவிக்கு வந்தவர் ஆச்சார்ய பாலகிருஷ்ணா. அவருடன் இணைந்து திவ்ய யோக மந்திர் டிரஸ்ட் என்ற அறக்கட்டளையைத் தொடங்கினார் ராம்தேவ். யோகக்கலையை பெரிய வர்த்தக நிறுவனமாக மாற்ற விரும்பிய ராம்தேவ் எடுத்துவைத்த முதல் அடி இது.

நாளுக்கு நாள் ஆதரவு பெருகியது. போதாக்குறைக்கு ஆஸ்தா என்ற டிவி சேனல் ஒன்று ராம்தேவை அணுகியது. காலை நேரத்தில் யோகா கலையைக் கற்றுத்தரும் நிகழ்ச்சி ஒன்றை எங்கள் சேனலில் நடத்த இருக்கிறோம். நீங்களே அதைச் செய்துகொடுத்தால் நல்லது.  ஒப்புக்கொண்டார் ராம்தேவ். 2003ஆம் ஆண்டில் ஒப்பந்தம் கையெழுத்தானது. விளைவு, வீட்டின் வரவேற்பறைக்கே வந்து யோகா கற்றுத்தரத் தொடங்கினார் ராம்தேவ்.

அடுத்தடுத்து காட்சிகள் மாறத் தொடங்கின. பத்தும் இருபதுமாக உயர்ந்துகொண்டிருந்த சீடர்களின் (ஆம், சுவாமி ராம்தேவ் குரு என்றால் அவரிடம் கற்றுக்கொள்பவர் சீடர்கள்தானே!) எண்ணிக்கை ஆயிரங்களில் பெருகத் தொடங்கியது. செய்தித்தாள்கள். பத்திரிகைகள். தொலைக்காட்சிகள். எல்லாவற்றிலும் ராம்தேவின் பெயர்தான். தொலைக்காட்சியில் கிடைத்த பிரபலத்தை மேலும் அதிகப்படுத்தும் வகையில் அடிக்கடி முகாம்கள் நடத்தினார்.

அடுத்து பதஞ்சலி யோக பீடம் என்ற புதிய அறக்கட்டளையைத் தொடங்கினார் ராம்தேவ். இதைத் தொடங்கிவைத்தவர் பைரோன்சிங் ஷெகாவத். புகழ்பெற்ற ஆர்.எஸ்.எஸ்காரர். முன்னாள் குடியரசுத் துணைத்தலைவர். வெறுமனே யோகக்கலைக் கற்றுத்தருவது என்பதைத் தாண்டி நோய் தீர்க்கும் காரியங்களில் ராம்தேவ் ஈடுபடத் தொடங்கியது இதன்பிறகுதான். நீரிழிவு, மன அழுத்தம், உடல்பருமன் போன்ற பிரச்னைகளுக்கு யோகாவின் மூலன் பலன் கிடைக்கும் என்ற ராம்தேவின் பிரசாரத்துக்கு நல்ல பலன். கூடுதல் சீடர்கள்.

விளைவு, ராம்தேவின் அறக்கட்டளை அகலவாக்கில் வளரத் தொடங்கியது. பதஞ்சலி ஆயுர்வேதக் கல்லூரி, பதஞ்சலி மூலிகைத் தோட்டம், ஆர்கானிக் விவசாயப் பண்ணை, பதஞ்சலி உணவு மற்றும் மூலிகைப் பூங்கா என்பன போன்ற ஏராளமான நிறுவனங்களை உருவாக்கி, நடத்தத் தொடங்கினார் ராம்தேவ். அனைத்தையும் நேர்த்தியாக நிர்வகிக்கும் பொறுப்பு ஆச்சார்ய பாலகிருஷ்ணாவுடையது. அவரை நிர்வகிப்பவர் பாபா ராம்தேவ். ஆம். சுவாமி ராம்தேவ் இனிமே பாபா ராம்தேவ்.

திவ்ய பிரகாஷன் என்ற நிறுவனத்தின் மூலம் யோகக்கலை தொடர்பான புத்தகங்கள் சிலவற்றைக் கொண்டுவந்தார் ராம்தேவ். யோக சந்தேஷ் என்ற பத்திரிகையையும் ஆரம்பித்தார். இந்தப் பத்திரிகை இந்தி, ஆங்கிலம், மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி உள்ளிட்ட 11 மொழிகளில் வெளியாகிறது. நேபாள மொழியிலும் ஒரு பதிப்பு வருகிறது.

பத்திரிகை. தொலைக்காட்சி. புத்தகங்கள். இலவச முகாம்கள். எல்லாமே இருந்ததால் ராம்தேவின் பதஞ்சலி யோக பீடம் பணம் காய்ச்சி மரமாக மாறியது. கிடைத்த பணத்தைக் கொண்டு நிறுவனங்களை மேன்மேலும் விரிவுபடுத்தினார். வெளிநாடுகளில் அவருடைய யோகா மையங்களுக்குக் கிளைகள் தொடங்கப்பட்டன. அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்த ராம்தேவுக்கு உலகின் பல நாடுகளில் சீடர்கள் உருவாகினர்.

பணம் இருக்கிறது. மக்கள் ஆதரவு இருக்கிறது. அடுத்தது என்ன? அரசியல். அதுதான் உண்மையான இலக்கு. ஒவ்வொரு அடியையும் பார்த்துப் பார்த்து எடுத்துவைத்தார். யோகா முகாம்களில் யோகக்கலை பற்றியும் வாழ்க்கைக்கலை பற்றியும் பேசிய ராம்தேவ், சமூக சீர்திருத்த விஷயங்கள் பற்றிப் பேசினார். இந்தியாவின் அதிமுக்கியப் பிரச்னைகள் குறித்துப் பேசினார். அரசியலை ஆன்மிகம் கலந்துபேசினார்.

ஆன்மிகத்தையும் அரசியலையும் பேசிய ராம்தேவ், திடீரென பாரத் சுவாபிமான் அந்தோலன் என்ற அமைப்பைத் தொடங்கினார். அந்த அமைப்பில் இலக்குகள் ஐந்து. நூறு சதவீத வாக்குப்பதிவு. நூறு சதவீத தேசிய உணர்வு. நூறு சதவீத அயல்நாட்டு நிறுவன புறக்கணிப்பு. நூறு சதவீத ஒற்றுமை. நூறு சதவீத யோகா மயமாக்கப்பட்ட தேசம்.

வெறுமனே இயக்கம் ஆரம்பித்துவிட்டால் போதாது. இயக்கம் மக்களைக் கவர வேண்டும். எனில், மக்களைக் கவரக்கூடிய விஷயங்களில் கருத்து சொல்லத் தொடங்கினார் பாபா ராம்தேவ். அடைக்கப்பட்ட உணவுகளை உண்ணாதீர்கள் என்றார். குளிர்பானங்கள் அனைத்தும் கழிவறையைச் சுத்தம் செய்ய மட்டுமே லாயக்கு என்றார். கேன்சர், எய்ட்ஸ் போன்ற குணப்படுத்த முடியாத நோய்களுக்கு யோகாவில் தீர்வு உண்டு என்றார். பள்ளிகளில் பாலியல் கல்வியை அகற்றிவிட்டு யோகாவை அறிமுகம் செய்யவேண்டும் என்றார்.

கருத்து தெரிவித்த அனைத்து விஷயங்களும் கவன ஈர்ப்பை ஏற்படுத்தக்கூடியவை. ஏற்படுத்தவும் செய்தன. ஆதரவும் கண்டனமும் மாறிமாறி வந்தன. பத்திரிகைகள் அவருடைய கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தன. அவருடைய முகாம்கள் பற்றிய கட்டுரைகளை வெளியிட்டன. பக்கம் பக்கமாக அவருடைய பேட்டிகள் பிரசுரமாகின. பாபா ராம்தேவுக்குச் சொந்தமான நிறுவனம் தயாரிக்கும் மருந்துகளில் மனித மற்றும் மிருக எலும்புத் துகள்கள் கலக்கப்படுவதாக ஒரு சர்ச்சை வெடித்தது. ஆனால் அது மெல்ல மெல்ல அடங்கிவிட்டது.

உள்ளுக்குள் அடங்கிக்கிடந்த அரசியல் ஆர்வம் ஒருநாள் அப்பட்டமாக வெளியில் வந்தது. நான் தொடங்கிய பாரத் சுவாபிமான் அந்தோலன் இயக்கம் தேர்தல் அரசியலில் இறங்கப்போகிறது. அதன் சார்பில் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் 543 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள். சாது ராம்தேவின் மனத்துக்குள் சக்கரவர்த்தியாகும் எண்ணம் உருவாகிவிட்டது என்பது அன்றைய தினம் அம்பலமானது.

கிட்டத்தட்ட இந்தச்சமயத்தில்தான் பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட சில அமைப்புகள் வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டிருக்கும் கறுப்புப்பணம் பற்றிப் பேசத் தொடங்கின. 2009 மக்களவைத் தேர்தலின்போது தனது தேர்தல் அறிக்கையில் கறுப்புப்பண மீட்பு பற்றிப் பேசியது பாஜக. பிறகு ஸ்பெக்ட்ரம் விவகாரம் வெளியாகி, ஊழலுக்கு எதிரான கருத்துகள் வெளிவந்தன. ஊழல் ஒழிப்பும் கறுப்புப்பண மீட்பும் தேசிய அளவில் விவாதங்களைக் கிளப்பின. எல்லாவற்றையும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தார் பாபா ராம்தேவ்.

களத்தில் இறங்கத் தருணம் பார்த்துக்கொண்டிருந்த ராம்தேவுக்கு வசதியாக வந்து சேர்ந்தது லோக்பால் மசோதா விவகாரம். சமூக ஆர்வலர் அன்னா ஹஸாரே உண்ணாவிரதம் தொடங்க, அதற்கு நாடு தழுவிய அளவில் பேராதரவு கிடைத்தது.

ராம்தேவாகப்பட்டவர் ஆன்மிகத்தில் இருந்து அரசியலுக்குள் குதித்த வரலாற்றின் சாராம்சம் இதுவே.

0

ஆர். முத்துக்குமார்

தேவை இன்னொரு பசுமைப் புரட்சி!

1

எத்தனை பேர் இந்தச் செய்தியைக் கவனித்தீர்களோ தெரியவில்லை. கவனித்தும், சிலருக்கு மனதில் பதியாமல் போயிருக்கலாம். காரணம், விலைவாசி உயர்வு என்பது நமக்கு ஒன்றும் புதிய செய்தி அல்லவே? தென்னை மரத்துல தேள் கொட்டினா பனை மரத்தில் நெறி கட்டும் கதையாக, ஏதேனும் ஒர் காரணத்தைச் சொல்லி, நித்தம் ஒரு விலை உயர்வு நடந்துகொண்டுதானே இருக்கிறது. ஆனால், இம்முறை ‘புலி வருது’ கதை இல்லை!! நிஜமாகவே புலி வந்தே விட்டது. அரிசி, கோதுமை போன்ற தானியப் பொருட்களின் தட்டுப்பாடும், தொடர்ந்து விலையேற்றமும் வருகிறது, பராக், பராக்!

சர்வதேச உணவு மற்றும் விவசாயக் கழகம், கடந்த ஜூலை மாதம் “உணவுக் குறியீடு” 213-ஆக உயர்ந்திருப்பதாகக் கூறியுள்ளது. இந்த உணவுக் குறியீடு என்பது, குறிப்பிட்ட அத்தியாவசிய உணவுப் பண்டங்கள் நிறைந்த ஒரு உணவுக் கூடையின் விலை. தற்போது ஒரே மாதத்தில் 6% அதிகரித்துள்ளதுதான் கவலைக்குரியது.

கடந்த 2008-ம் ஆண்டு இதேபோல உணவுத் தட்டுப்பாடும், தொடர்ச்சியாக விலைவாசி உயர்வும் இருந்தது நினைவிருக்கிறதா? அது மறந்திருக்கலாம், ஆனால் அந்தச் சமயத்தில் திருவாளர் ஜார்ஜ் புஷ், உலகில் உணவுப் பஞ்சம் ஏற்பட இந்தியர்களின் அதீத உண்ணும் பழக்கம்தான் காரணம் என்று திருவாய் மலர்ந்தாரே, அது மறந்திருக்காது!

ஆனால், இந்த மற்றும் அடுத்த வருடம் அதைவிட மோசமான நிலை ஏற்படலாம் என்று ஐ.நா. எச்சரிக்கிறது.

2

கடந்த 56 வருடங்களாக இல்லாத அளவிலான அமெரிக்காவின் வறட்சி இதற்கு ஒரு முக்கியக் காரணம். ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டிருக்கும் வெள்ளப் பெருக்கும்கூட. இந்தியாவிலும், ஆப்பிரிக்க நாடுகளிலும் பெய்யாமல் பொய்த்துக் கெடுத்திருக்கும் பருவ மழை, ஐரோப்பாவில், சீனாவில், ஃபிலிப்பைன்ஸில் பெய்து கெடுக்கிறது. அங்கே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

உணவுப் பயிர்களான சோளம் மற்றும் சோயாவை, இயற்கை எரிபொருளான ethenol தயாரிப்புக்காகத் திருப்பிவிட்டதும் பஞ்சத்துக்குக் கட்டியம் கூறிய இன்னொரு காரணம். சரி, இனி அந்தப் பயிர்களை உணவாக்கிக் கொள்ளலாமே என்றால், தற்போது விளைவிக்கப்படும் பெரும்பான்மையான பயிர் ரகங்கள் உண்ணத் தகுதியில்லாத, எரிபொருள் எடுக்க மட்டுமே லாயக்கான வகையிலானது. இவ்வகைப் பயிர்களை விளைவிப்பதற்காக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசுகள் விவசாயிகளுக்கு அதிக மானியம் மற்றும் வரிவிலக்கு கொடுத்து ஊக்குவித்ததால், கடந்த மூன்று ஆண்டுகளாகவே உணவுக்கான சோளத்தின் உற்பத்தி 50% குறைந்துவிட்டது.

போகட்டும், இனியேனும் உணவுப் பயிர்களை விளைவிப்போமே என்றால், விளைநிலத்துக்கு எங்கே போவது? இருந்த விளைநிலங்கள் எல்லாமே ரியல் எஸ்டேட்டுகளால் பட்டா போடப்பட்டு, வீடுகளாக, பங்களாக்களாக, அடுக்கு மாடிகளாக, வணிக வளாகங்களாக உருமாறி விட்டதே!

அப்படியொன்றுமில்லை, கொஞ்சமாவது விவசாய நிலங்கள் இருக்கத்தான் செய்கின்றன, அதிலெல்லாம் விவசாயம் நடக்கத்தான் செய்கிறது என்று சொன்னால், உலகம் உருண்டை – மறுபடியும் ஆரம்பித்த இடத்திற்கே வருகிறோம். மழை இல்லாமல் வறட்சியால் தவிக்கும்போது எங்கே விவசாயம் செய்ய? அப்படியே செய்தாலும், யானைப்பசிக்குச் சோளப்பொறிதான் அது! மட்டுமல்ல, அரிசி, கோதுமை போன்ற உணவுப் பயிர்களுக்கு தண்ணீர் அதிகம் தேவைப்படுமென்பதால், தண்ணீர் குறைவாகத் தேவைப்படும் பணப்பயிர்களைத்தான் விவசாயிகள் தேர்வு செய்வார்கள்.

செவ்வாய் கிரகத்தில் கால் பதிக்கிறோம்; நிலவில் நீரைக் கண்டுபிடிக்கிறோம். ஆனால், இல்லாத மண்ணில் பொல்லாத உணவை விளையவைக்கத்தான் வழி தெரியவில்லை. சமீபகால ‘அரேபிய வசந்தம்’ புரட்சிகளின் தொடக்கப் புள்ளியான துனிஷியா புரட்சிக்கு வித்திட்டது அடிப்படையில் வயிற்றுப் பசியே. எனில், இன்னும் வருங்காலங்களில் எத்தனைப் புரட்சிகளைச் சந்திக்க இருக்கிறோமோ?

க்ளோபல் வார்மிங்கின் விளைவுகளைப் பற்றி இத்தனை நாட்கள் பேசிக்கொண்டு மட்டுமே இருந்தோம். காலம் தப்பிய மழை, பொய்த்த மழை, அதீத வெயில் என்று காலநிலை மாற்றங்களை பார்த்தும் நாம் திருந்தவில்லை. நாம் அன்றாடம் வீடுகளிலும், விருந்துகளிலும், உணவகங்களிலும் வீணாக்கிய உணவுகள் மனக்கண்ணில் வந்துபோகுதா?

3

சரி இறக்குமதி செய்துகொள்ளலாமே என்றால் அதுவும் முடியாது. காரணம், உலகமெங்கும் தட்டுப்பாடு பரவுகிறது. 2008-ல் நடந்ததுபோலவே, எல்லா நாடுகளும் உணவு ஏற்றுமதியைத் தடை செய்யும் சாத்தியங்கள் அதிகம். ரஷ்யா இவ்வருட இறுதிவரை மட்டுமே கோதுமை ஏற்றுமதி என்று இப்போதே அறிவித்துவிட்டது.

இதே போன்ற பிரச்னைகளைச் சந்தித்துவரும் சீனா  போன்ற பல நாடுகள், செழிப்பான விளைநிலங்கள் அபரிமிதமாக உள்ள ஆப்பிரிக்க நாடுகளில் விவசாயத்தில் பெரும் முதலீடு செய்துள்ளன. இதில் கிடைக்கும் மிகுதியான விளைச்சலைத் தம்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துகொள்வதுதான் நோக்கம்.

கடந்த ஜூன் மாதம் நடந்த ரியோ +20 ‘வளங்குன்றா வளர்ச்சி’ (Sustainable Development) உச்சி மாநாட்டில், ஐ.நா. செயலர் பான் கீ மூன், வறுமைப்பசியை ஒழிப்பதற்காக ‘Zero Hunger Challenge’ என்ற உலகளாவிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். ஐந்து அம்ச திட்டமான இதில், சிறு-குறு விவசாயிகளை ஊக்குவிப்பது முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. உலகின் உணவு உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கும் இவர்களைச் சரியான முறையில் ஆதரித்து, அவர்களின் வருமானம் மற்றும் உற்பத்தியை இருமடங்காகப் பெருகச் செய்வது மிக அத்தியாவசியமானது என்று வலியுறுத்துகிறார்.

அதன் இன்னொரு அம்சம், உணவுப் பண்டங்களை வீணாக்குதலைத் தடுத்தல் மற்றும் முறையான உணவு நுகர்வு. விளைநிலங்கள் தொடங்கி, வீட்டு டைனிங் டேபிள் வரை நடக்கும் பெரும் விரயத்தைத் தவிர்த்தாலே பஞ்சம், பசியைப் போக்குவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணலாம். அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வீணாக்கப்படும் உணவுப் பொருட்களின் அளவு, சஹாராவை மையப்படுத்திய ஆப்பிரிக்காவின் மொத்த உணவு உற்பத்திக்குச் சமம் என்றால் எந்தளவு விரயம் நடக்கிறது என்று புரிந்துகொள்ளலாம்.

இந்தியாவில் வழக்கமாக ஆகஸ்ட் மாதத்தில் மழை கொட்டோ கொட்டென்று கொட்டித்தள்ள ஆரம்பித்திருக்கும். சென்னை, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களும் அந்த வெள்ளத்தில் வருடாவருடம் மிதக்கும். ஆனால், இந்த வருடம்? வெள்ளத்திலிருந்து தப்பிவிட்டோமே என்று சந்தோஷப்பட முடியாதபடி, வறட்சி நம்மை விரட்டிக் கொண்டுவருகிறது.

தமிழ்நாட்டிலும், வருட ஆரம்ப குறுவை சாகுபடி அப்போது நிலவிவந்த கடும் மின்சாரத் தடை காரணமாகக் கைவிடப்பட்டது. இப்போது செய்திருக்க வேண்டிய சம்பா சாகுபடிகள், மழை இல்லாததால் செய்யவில்லை.

மழை பொய்த்ததன் விளைவுகளில் ஒன்றாகத்தான், கடந்த ஆடிப்பெருக்கின்போது காவிரியில் தண்ணீர் இல்லாமல் போனது. சென்னையின் நீராதாரமான வீராணம் ஏரி, இவ்வருடம் ஜூலை மாதத்திலேயே காய்ந்து விட்டது.

தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தராமல் போக்கு காட்டிய காவிரி கொண்ட கர்நாடகாவின் பி.ஜே.பி. அரசு மழைக்காக சிறப்புப் பூஜைகள் நடத்தியுள்ளது. கேரளாவும் தன் தலைநகரில் குழாய்த் தண்ணீர் விநியோகத்துக்கு ரேஷன் முறை கொண்டுவரலாமா என்று ஆலோசிக்கும் அளவுக்கு, அங்கும் பருவமழை பொய்த்துவிட்டது. தமிழ்நாட்டில் எந்த முன்னேற்பாடுகளும் இல்லை. ஆனால், மழை இல்லாததால், விதைக்கும் பருவமும் தாண்டிப் போய்விட்ட பின்னர் முதல்வர் ஜெயலலிதா குறுவை சாகுபடி முறையாக நடக்கும் என்று கூறுகிறார். மந்திரக்கோல் எதுவும் வைத்திருக்கிறாரோ என்னவோ!

உணவுப் பஞ்சம் வந்துகொண்டிருக்கிறது என்று தெரிந்தும் மத்திய, மாநில அரசுகள் வழக்கம்போல, மெத்தனமாக இருக்கின்றன. அவர்களுக்கென்ன, திட்டக் கமிஷனே, மக்களின் அன்றாடச் செலவுக்கு இருபத்தைந்து ரூபாய் போதும் என்று சொல்லிவிட்டதே.

பஞ்சம் அடித்தட்டு மக்களுக்குத்தானே தவிர, பணம் படைத்தவர்களுக்கல்ல என்கிற அலட்சியம். அவர்களுக்குப் புரியவில்லை, பணம் இருக்கும், ஆனால் வாங்க அரிசி இருக்காது – இதுதான் பஞ்சம் என்று. அப்போது பணத்தையா தின்னமுடியும்?

இந்தியாவில் இரண்டாவது பசுமைப் புரட்சிக்கான அவசியம் இப்போது வந்திருக்கிறது. அதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். இப்போதே தொடங்கினால்தான், சுற்றுப்புறச் சூழல் சீர்கேடு காரணமாக வருங்காலங்களில் அடிக்கடி வர சாத்தியமுள்ள இதுபோன்ற நிலைமைகளை எதிர்கொள்ள முடியும்.

தற்போதைக்கு, அரசு உணவுக் கிடங்குகளில் தேவைக்கு மேலேயே இருக்கும் கோதுமையையும் நெல்லையும் பத்திரமாக வைத்திருந்தாலே, விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தி, எதிர்வரும் தட்டுப்பாட்டையும் ஓரளவுக்குச் சமாளித்துவிடலாம்.

பண்டைய காலத்தில் எகிப்தில் கடும்பஞ்சம் வரப்போகிறதென்றுஅந்நாட்டு அரசருக்குக் கனவில் அறிவிப்பு வந்ததும், முறையாகப் பயிரிடுதல், சேமிப்பு, சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலம், தன் நாட்டுக்கு மட்டுமல்லாமல், அண்டை நாடுகளுக்கும்கூட, ஏழு ஆண்டு கடும் பஞ்சத்தின்போது உணவளிக்க முடிந்தது.

தனது சுதந்தர தின உரையில், விரைவில் செவ்வாய்க் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பப்போவதாகப் பிரதமர் அறிவித்துள்ளார். அரசு உணவுக் கிடங்குகளில் சேமிக்கப்படும் பயிர்களின் பாதுகாப்புக்கான நவீன வசதிகள், எலிகளிடமிருந்து பாதுகாத்தல், கிடங்குகளின் கொள்முதல் மற்றும் கொள்ளளவைப் பெருக்குதல், நாட்டின் சேமிப்புக் கிடங்குகளை ஒருங்கிணைத்தல், மழைக்காலங்களில் மழையில் நனைந்து அழுகிவிடாதபடிக்கு முறையாகச் சேமித்து வைத்தல் போன்ற ஏற்பாடுகளுக்கு ராக்கெட் டெக்னாலஜி தேவையில்லை என்பதையும் யாராவது ‘லேட்டஸ்ட் டெக்னாலஜி’ மூலம் அரசாள்பவர்களின் கனவில் வர வையுங்களேன்!

0

ஹுஸைனம்மா

வந்துவிட்டது இந்தி!

மொழிப்போர் / அத்தியாயம் 4

புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி 1937 பிப்ரவரி மாதம் இந்தியாவில் தேர்தல் நடந்தது. சென்னை மாகாணத்தில் நடந்த தேர்தலில் நீதிக்கட்சியைத் தோற்கடித்து காங்கிரஸ் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியது. மொத்தமுள்ள 215 இடங்களில் 152 இடங்களைப் பெற்றது காங்கிரஸ்.  15 ஜூலை 1937 அன்று காங்கிரஸ் கட்சியின் சார்பாக சி. ராஜகோபாலாச்சாரி என்கிற ராஜாஜி சென்னை மாகாண முதல்வராகத் (பிரிமியர்) தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வட இந்தியர்களை அறிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் தென்னிந்தியர்களுக்கு இந்தி மொழி பற்றிய அறிவு அவசியம். குறிப்பாக, இந்தியாவின் அரசியல் மற்றும் வாணிகத்தை நடத்திச் செல்வதற்கு இந்தி அத்தியாவசியம் என்பது ராஜாஜியின் கருத்து. அதன் காரணமாகவே இந்தி மொழியைப் பள்ளிகளில் கட்டாயப் பாடமொழியாக ஆக்கவேண்டும் என்ற கருத்தை முதலமைச்சர் பொறுப்பை ஏற்பதற்கு முன்பிருந்தே தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தார்.

முதல்வர் பதவியை ஏற்றபிறகு 10 ஆகஸ்டு 1937 அன்று சென்னை ராமகிருஷ்ண மடம் மாணவர் இல்ல விழாவில் கலந்துகொண்டார் ராஜாஜி. இந்தியில் பாடநூல்கள் விரைவில் எழுதப்படவேண்டும். புதிய இந்தி எழுத்துகளைத் தமிழக மாணவர்கள் கற்றுக்கொள்ளத் தொடங்கிவிடுவார்களேயானால் பிறகு இந்தி, சமஸ்கிருதத்தை அவர்கள் எளிதில் பயில வாய்ப்பு ஏற்பட்டுவிடும் என்று அந்த விழாவில் பேசினார்.

பள்ளிகளில் இந்தியைக் கொண்டுவரப்போகிறார் என்பதுதான் அதன் அர்த்தம் என்பது எல்லோருக்கும் புரிந்தது. அப்போது இரண்டு முக்கியப்பத்திரிகைகள் கருத்து வெளியிட்டன. ஒன்று, ஆனந்த விகடன். இந்திப் பாடத்துக்கு வரவேற்பு தெரிவித்த ஆனந்தவிகடன், மேல் வகுப்புகளுக்கும் இந்தியைப் பாடமாக வைக்கவேண்டும் என்றது. இரண்டாவது, மெயில் பத்திரிகை. பதற்றத்தோடு செய்யவேண்டாம் என்ற தலைப்பில் வெளியான கட்டுரை ஒன்றில், ‘பின்விளைவுகளை முழுமையாக ஆராயாமல் புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டாம்’ என்று எச்சரிக்கை செய்தது மெயில் பத்திரிகை.

பத்திரிகைகளைத் தொடர்ந்து தமிழ் உணர்வாளர்கள் எதிர்ப்புக்குரல் எழுப்பத் தொடங்கிவிட்டனர். பல இடங்களில் இந்தித் திணிப்புக்கு எதிரான பொதுக்கூட்டங்களும் ஊர்வலங்களும் நடந்தன. இத்தகைய பணிகளில் ஆங்காங்கே உள்ள தமிழ்ச்சங்கங்கள் ஈடுபட்டன. அந்தக் கூட்டங்களில் தமிழறிஞர்களான த.வே. உமாமகேஸ்வரன் பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார், மறைமலை அடிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு ராஜாஜியின் இந்தித் திணிப்பு முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

எதிர்ப்பு தெரிவிப்பதன் ஒருபகுதியாக 26 டிசம்பர் 1937 அன்று சென்னை மாகாணத் தமிழர் மாநாடு  ஒன்று திருச்சி தேவர் மண்டபத்தில் கூடியது. சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த கி.ஆ.பெ. விசுவநாதம், தி.பொ. வேதாச்சலம், பட்டுக்கோட்டை அழகிரிசாமி உள்ளிட்டோரின் முயற்சியால் கூட்டப்பட்ட மாநாடு அது. கட்சி வேறுபாடுகளை மறந்து, தமிழுக்கு ஆதரவாக – இந்தித்திணிப்புக்கு எதிராகச் செயல்பட விரும்பிய அனைத்து தரப்பினரும் அந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

மாநாட்டுக்குத் தலைமை வகித்த நாவலர் சோமசுந்தர பாரதியார், ‘பல மொழி இனங்களை உள்ளடக்கிய மிகப்பெரிய நாடான சோவியத் ரஷ்யாவில்கூட பொதுமொழி என்று தனியே இல்லை. ஆனாலும் ஆட்சி நடத்துவதில் அங்கே எந்தச் சிக்கலும் இல்லை என்றபோது இங்கே மட்டும் ஏன் இந்த ஒற்றைமொழித் திணிப்பு?’ என்று கேள்வி எழுப்பினார். இந்த மாநாட்டில்தான் கட்டாய இந்தியைக் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்ற தீர்மானத்தையும் தமிழ்நாடு தனிநாடாகப் பிரியவேண்டும் என்ற தீர்மானத்தையும் கொண்டுவந்தார் பெரியார்.

இந்தித் திணிப்பை எதிர்த்து மாநாடுகளும் ஊர்வலங்களும் கூட்டங்களும் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, இன்னொரு பக்கம் தனது பணியில் தீவிரம் காட்டிக்கொண்டிருந்தார் முதலமைச்சர் ராஜாஜி. 1938 – 39 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் சென்னை மாகாணத்தில் மொத்தம் 125 உயர்நிலைப் பள்ளிகள் இந்தி கட்டாயப் பாடமொழியாகப் பயிற்றுவிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. அதாவது, சென்னை மாகாணத்தின் தமிழ்மொழி வழங்கும் பகுதிகளில் 60, தெலுங்கு மொழி வழங்கும் பகுதிகளில் 54, கன்னடம் வழங்கும் பகுதிகளில் 4, மலையாளம் வழங்கும் பகுதிகளில் 7 என்று மொத்தம் 125 இடங்களில் இந்தி மொழி கட்டாய மொழிப்பாடமாக ஆக்கப்பட்டது.

அறிவிப்பு வெளியான உடனேயே எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. நீதிக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான எம்.ஏ. முத்தையா செட்டியார் எதிர்ப்பு தெரிவித்தார். அரசின் திட்டமாக இந்தியைக் கட்டாயம் என்று அறிவிப்பதற்குப் பதிலாக விருப்பப் பாடம் என்று அறிவிப்பது நல்ல முடிவாக இருக்கும் என்றார் முத்தையா செட்டியார்.

எதிர்ப்புகளுக்குப் பதிலளித்த முதலமைச்சர் ராஜாஜி, ‘ஆரியத்தை எதிர்ப்பவர்களும் காங்கிரஸைப் பிடிக்காதவர்களும்தான் இந்தியை எதிர்க்கிறார்கள்’ என்று சொன்னதோடு, இந்தி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக நிதிநிலை அறிக்கையில் இருபதாயிரம் ரூபாய் ஒதுக்கியுள்ளேன் என்றார்.

அறிவிப்பு வெளியாவதற்கு முன்னரே எதிர்ப்புக்குரல்கள் எழுப்பியவர்கள், அரசின் அறிவிப்புக்குப் பிறகு எதிர்ப்பைத் தீவிரப்படுத்தினர். கட்டாய இந்திக்கு எதிராக ஊர்வலங்கள், கண்டனக் கூட்டங்கள் எல்லாம் தொடர்ச்சியாக நடத்தப்பட்டன.

இந்தி கட்டாயப் பாடமாகும் பட்சத்தில் கண்டிப்பாக பிராமணர் அல்லாத பிள்ளைகள் தொண்ணூறு சதவீதத்துக்கு மேல் தோல்வி அடைந்து விடுவார்கள். மாறாக, பிராமணப் பிள்ளைகள் நூறு சதவீதம் தேர்ச்சி அடைந்துவிடுவார்கள். ஆக, பிராமணர் அல்லாத பிள்ளைகளை மேல் படிப்பு இல்லாமல் அழுத்தத்தான் இந்தி ஒரு சாதனமே தவிர மனித வாழ்க்கைக்கோ அறிவுக்கோ தமிழர்களுக்கு எந்த விதத்திலும் இந்தி இன்றியமையாததாகாது என்று குடி அரசு பத்திரிகையில் தலையங்கம் எழுதினார் பெரியார்.

27 பிப்ரவரி 1938 அன்று காஞ்சிபுரத்தில் இந்தி எதிர்ப்பு மாநாடு கூடியது. மாநாட்டுக்குத் தலைமை வகித்தவர் கே. வேங்கட்ட ரெட்டி நாயுடு. மேலும், கான் பகதூர் கலிபுல்லா சாகிப், சோமசுந்தர பாரதியார், கவிஞர் பாரதிதாசன், த.வே. உமா மகேஸ்வரன் பிள்ளை, சிதம்பரம் என். தண்டபாணி பிள்ளை உள்ளிட்ட பலரும் அந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

‘திராவிடர்களாகிய நமக்கு ஆங்கிலத்தைப் போலவே இந்தியும் அந்நிய மொழியே. ஆனால் இந்தியின் இழிந்த நிலை என்பது அது பழம்பெரும் மொழி என்று உரிமை கொண்டாட முடியாது. வளம் நிறைந்த மொழியும் அல்ல. அந்த மொழியின் பழைமையான இலக்கியமே பதிமூன்றாம் நூற்றாண்டில் உருவானது தான். ஆனால் தமிழின் தொல்காப்பியம் இருபது நூற்றாண்டுகளுக்கு முன்னரே இயற்றப்பட்டு விட்டது’ என்று பேசினார் கே. வேங்கட்ட ரெட்டி நாயுடு.

இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தைத் தீவிரப்படுத்த விரும்பிய பெரியார், ‘எச்சரிக்கை கலந்த கோரிக்கை அறிவிப்பு’ என்ற தலைப்பில் 15 மே 1938 அன்று குடி அரசு பத்திரிகையில் எழுதினார்.

தமிழா என்ன செய்யப்போகிறாய்?
இந்தி வந்துவிட்டது!

பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநிறுத்த – தமிழனின் தன்மானத்தை அழித்து தமிழனை ஆரியர்க்கு என்றென்றும் நிலையான அடிமையாக்க, இந்தி தமிழ் மக்களுக்குக் கட்டாயப் படிப்பாக ஏற்படுத்தப்பட்டாய்விட்டது.

யாரால்? ஆரியரால்.
எப்படி? தமிழ் மக்களின் ஒன்றுபட்ட கூக்குரலைச் சிறிதும் மதியாமல்

தமிழா இனி என்ன செய்யப்போகிறாய்?

தலைவணங்கி வரவேற்கப் போகிறாயா?
எதிர்த்துநின்று விரட்டியடிக்கப் போகிறாயா?

இதில்தான் தமிழன் இருப்பதா, இறப்பதா என்கின்ற முடிவு இருக்கிறது.

தலை வணங்குவதானால் காங்கிரஸில் இரு. எதிர்த்து நிற்பதானால் உன் பெயரை எதிர்ப்புக் கமிட்டிக்குக் கொடு!

இந்தித்திணிப்புப் போராட்டங்களை எப்படி நடத்துவது என்பது தொடர்பாக ஆலோசனை செய்யும் நோக்கத்துடன் 28 மே 1938 அன்று திருச்சியில் தமிழ்ப்பாசறை அமைப்புக்கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தக் கூட்டத்தில் இந்தி எதிர்ப்பு வாரியம் என்ற பெயரில் போராட்டக்குழு ஒன்று உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக சோமசுந்தர பாரதியாரும் செயலாளராக கி.ஆ.பெ. விசுவநாதமும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பெரியார், த.வே. உமாமகேஸ்வரன் பிள்ளை, டபிள்யூ.பி.ஏ. சௌந்தர பாண்டிய நாடார், கே.எம். பாலசுப்பிரமணியம் ஆகியோர் அந்தக் குழுவின் இதர உறுப்பினர்கள்.

மாணவர்கள் இந்திப் பாடங்களைப் புறக்கணிக்கும்படி செய்தல், இந்தி மொழியைப் பயிற்றுவிக்கும் பள்ளிகளுக்கு முன்னால் மறியல் போராட்டங்களை நடத்துதல், உண்ணாவிரதம் இருந்தல், காங்கிரஸ் அமைச்சர்களுக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டுதல், முதலமைச்சர் வீட்டுக்கு முன்னால் மறியல் நடத்துதல் என்று பல்வேறு போராட்ட முறைகள் வகுக்கப்பட்டன.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடத் தயாராக இருப்பவர்கள் சிறைக்குச் செல்லுதல் என்ற நிலையோடும் நினைப்போடும் மட்டும் இருந்துவிடக்கூடாது. தேவைப்பட்டால் ரத்தம் சிந்தவும் செத்து மடியவும் தயாராக இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்ட பெரியார், 29 மே 1938 அன்று முக்கிய அறிவிப்பு ஒன்றையும் குடி அரசு பத்திரிகையில் வெளியிட்டார்.

தமிழர் போர் மூண்டுவிட்டது. எதற்காக? தமிழுக்காக!

தமிழர் தன்மானத்துக்காக, தமிழர் அறிவு, கலை, வீரம் ஆகியவற்றுக்காக!

எனவே, தமிழா உன் கடமை என்ன?

மாதம் 75 ரூபாய் காசுக்கு எதிரியின் காலை நக்குவதா? அற்ப பதவிக்காக சகலத்தையும் உதிர்த்து, தமிழை, தமிழனை, தமிழ்நாட்டைக் காட்டிக்கொடுத்துவிட்டு, வளையல் போட்டுக்கொண்டு, முக்காடிட்டு, மூலையில் குந்தி இருப்பதா? சீச்சீ. இது சிற்றினப் பிழைப்பல்லவா?

மற்றென்ன உன் கடமை?

எதிரியின் கூட்டுறவை ஒழி!
வீரத்துடன் வெளியில் வந்து மார்தட்டு!
கிளர்ச்சிப்போரில் முன்னணியில் நில்லு!
எதிரி வெட்கப்பட, அறிவு பெற, ஓடி ஒழிய,
உன் உயிர்விடத் தயாராகு!

இவை உன்னால் ஆகாவிட்டால் காசுகொடுத்து ஆதரித்து, நீ தமிழன் என்பதையாவது காட்டிக்கொள்!

3 ஜூன் 1938 அன்று முறைப்படி இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்கியது.

(தொடரும்)

இதுவரை

அலெக்ஸ் பால் மேனன் : மாவோயிஸ்டுகள் செய்தது சரியா?

1

‘நான் நலமாக இருக்கிறேன், ஒரு நாள் கழித்து மேற்கொண்டு பேசுகிறேன்!’ கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் மாவோயிஸ்டுகளால் சிறை வைக்கப்பட்டிருந்த சுக்மா மாவட்ட ஆட்சியர் பால் அலெக்ஸ் மேனன் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளார். மாவோயிஸ்டுகள் விடுவித்துவிட்டாலும், மீடியா அவரை அவ்வளவு சுலபத்தில் விட்டுவிடாது. வனத்தில் அவர் கழித்த பொழுதுகள் குறித்தும், என்ன உண்டார், எங்கு உறங்கினார், என்ன சிந்தித்தார், எப்படி நடத்தப்பட்டார் என்பது குறித்தும், கடத்தியவர்கள் அவருடன் நடத்திய உரையாடல்கள் குறித்தும், அவருடைய எதிர்கால செயல்பாடுகள் குறித்தும் பல கேள்விகள் அடுத்தடுத்து வீசப்படும். குறைந்தபட்சம் சில வாரங்களுக்கு மேனன் மீடியாவால் கடத்தப்பட்டு சிறை வைக்கப்படுவது உறுதி.

இந்தியாவின் முதன்மையான அச்சுறுத்தல் என்று மன்மோகன் சிங் நக்ஸலைட்டுகளை வர்ணித்திருந்தபோதிலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மாவோயிஸ்ட் இயக்கம் குறித்த விவாதங்கள் அதிகம் நடைபெற்றதில்லை.  முன்னதாக, ஒடிசா எம்எல்ஏ ஜினா ஹிகாகா கடத்தப்பட்டதும் விடுவிக்கப்பட்டதும் இங்கே செய்திகளாக மட்டுமே வலம் வந்தன. விவாதப்பொருளாக உருபெறவில்லை. காரணம், மாவோயிஸ்டுகளின் செயல்பாடுகள் பெரும்பாலும் மத்திய இந்தியாவில் மட்டுமே குவிந்திருக்கின்றன. அலெக்ஸ் மேனன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் இந்த முறை மாவோயிஸ்டுகள் இங்கே அதிக கவன ஈர்ப்பைச் சம்பாதித்துள்ளனர்.

2

மும்பையைச் சேர்ந்த அருண் ஃபெரைராவுக்கு வயது 38. மே 2007ல் நாக்பூர் ரயில் நிலையத்தில் வைத்து இவர் கைது செய்யப்பட்டார். அடுத்த சில மாதங்களில் அவர் மீது எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் இரண்டு, கொலை வழக்குகள். அத்தனை வழக்குகளையும் உயர் நீதிமன்றம் செப்டெம்பர் 2001ல் தள்ளுபடி செய்தது. நாக்பூர் மத்திய சிறையில் இருந்து அவர் வெளியே வரும்போது, மீண்டும் கைது செய்யப்பட்டார். இந்த முறை மேலும் இரு வழக்குகள். ஒன்று தள்ளுபடி செய்யப்பட்டது. இன்னொன்றில் இப்போது பெயில் கிடைத்துள்ளது.

38 வயதான அருண், கல்லூரியில் படித்துகொண்டிருந்தபோத, அரசியல் ஈடுபாடு கொண்டவராகவும் சமூக சேவையில் ஈடுபடுபவராகவும் இருந்தார். பஸ்திக்கள் என்று அழைக்கப்படும் சேரிக்களை இடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்போதெல்லாம் பகுதி மக்களுடன் இணைந்து எதிர்த்திருக்கிறார். சேரிக்களைச் சீரமைக்கவேண்டும் என்பது இவர் ஆசை. இளைஞர்கள், ஆதிவாசிகள், தலித் மக்கள் ஆகியோருடன் இணைந்து மகாராஷ்டிராவில் பணியாற்றினார். கயர்லாஞ்சி படுகொலைகளுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று போராடி வருகிறார்.

மாவோயிஸ்டுகளின் செயல்பாடுகள் மிகுந்திருக்கும் கிழக்கு மகாராஷ்டிராவில்தான் அருணும் இயங்கிவந்தார் என்னும் ஒரு காரணம் போதாதா, அவரையும் ஒரு மாவோயிஸ்ட் என்று முத்திரை குத்துவதற்கு?

தன் சிறை அனுபவங்களை அருண் ஃபெரைரா ஃபவுண்டன் இங்க் இதழுடன் பகிர்ந்துகொண்டார்.

சிறையில் முதல் சில நாள்களுக்கு உங்களை அடித்துக்கொண்டே இருப்பார்கள். உடைகளைக் களையச் சொல்வார்கள். கைகளில், கால்களில், வயிற்றில் எட்டி உதைப்பார்கள், அடிப்பார்கள். நீங்கள் அவர்களுக்கு முற்றிலும் அடிபணிந்துபோகும்படி செய்வார்கள். எந்தக் கேள்வியும் கேட்கமாட்டார்கள். அடிப்பது மட்டுமே நோக்கமாக இருக்கும்.

நக்ஸல் இயக்கத்துடன் உனக்கு என்ன தொடர்பு என்று கேட்டுக்கொண்டே இருந்தார்கள். அவர்களைப் பற்றி எதுவும் தெரியாது என்று சொன்னபிறகும் கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் சித்திரவதைகள் தொடர்ந்தன.

முதலில் பத்து நாள்கள் போலிஸ் கஸ்டடியில் வைத்திருப்பதற்கான அனுமதியை மட்டுமே நீதிமன்றத்தில் இருந்து பெற்றுக்கொண்டார்கள். பிறகு நார்கோ-அனலிஸ் (உண்மை அறிவதற்கான மருத்துவ, மனோதத்துவ முறை) செய்வதற்கான அனுமதி பெற்று மும்மை அழைத்துச் சென்றார்கள். அவர்கள் எதிர்பார்த்த உண்மைகள் என்னிடம் இருந்து கிடைக்காததால், மேலும் பல வழக்குகள் பதிவு செய்து, சிறைத் தண்டனையை நீட்டித்தார்கள்… மீண்டும் மீண்டும் அடித்தார்கள், துன்புறுத்தினார்கள்… என்னுடன் இருந்தவர்கள் மேலும் கொடூரமான முறையில் துன்புறுத்தப்பட்டார்கள். அவர்கள் சிறையில் இருந்த ஒவ்வொரு மணித் துளியையும் போலிஸ் கச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்டது. இரண்டு நாள்களுக்கு ஒருமுறை மருத்துவர்களை வரவழைத்து, பரிசோதித்து வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லாதபடி பார்த்துக்கொண்டார்கள். நீதிமன்றத்தில் அவர்களை நிறுத்தும்போது சித்திரவதை தழும்புகள் தெரியக்கூடாது அல்லவா?

மிகவும் அடிப்படையான சித்திரவதை, தூங்க விடாமல் செய்வது. பிறகு, உங்களுடைய பலவீனத்தைக் கண்டறிந்து தாக்குவது. உதாரணத்துக்கு, நான் மத்திய வர்க்கத்தைச் சேர்ந்தவன் என்பதைத் தெரிந்துகொண்டு, நீ இப்போது எப்படி இருக்கிறாய் பார்த்தாயா என்று சொல்லிச் சொல்லி என்னை மனம் தளரச் செய்ய முயற்சி செய்தார்கள்… உன் மனைவியைப் பலாத்காரம் செய்வேன், உன் குடும்பத்தைச் சீரழிப்பேன் என்றெல்லாம் மிரட்டுவார்கள்.

அவர்களுக்குத் தேவைப்படும் உண்மைகளை எப்படியாவது பெற்றுவிடவேண்டும் என்னும் நோக்கத்துடன்தான் ஒவ்வொருமுறையும் அவர்கள் கைதிகளைச் சந்திக்கிறார்கள். கேட்டது கிடைக்காதபோது, வெறுப்பும் கோபமும் அதிகமாகிறது. சித்திரவதையின் தீவிரமும் அதிகரிக்கிறது.

அருண் ஃபெரைராவின் சிறை அனுபவங்கள் முழுவதுமாக இங்கே கிடைக்கின்றன.

3

பஸ்தாரில் மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டாகப் பணியாற்றிய B.D. ஷர்மா என்பவரின் கருத்து இது. ‘மாவோயிஸ்டுகள் பொதுவாக தங்கள் கைதிகளை நன்றாகவே நடத்துவார்கள்.’ (அவுட்லுக், மே 7, 2012). இது உண்மைதானா என்பதை கூடிய விரைவில் பால் மேனனே உறுதி செய்துவிடுவார். மேற்படி அவுட்லுக் இதழில் காணப்படும் ஒரு தகவலின்படி கிட்டத்தட்ட 20,000 ‘மாவோயிஸ்டுகள்’ 9 மாநிலங்களில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சத்தீஸ்கரில் மட்டும் கிட்டத்தட்ட 1,700 பேர் சிறையில் இருக்கிறார்கள். இவர்களில் எத்தனை பேர் அருண் ஃபெரைராவைப் போன்றவர்கள் என்பது ஒருவருக்கும் தெரியாது. ‘தங்கள் இருப்பிடத்தை விட்டு அகல மறுக்கும் அல்லது தங்கள் வளம் கொள்ளை போவதைத் தடுக்க முயலும் ஒவ்வொருவரும் மாவோயிஸ்டுகளாகவே பார்க்கப்படுகிறார்கள்’ என்கிறார் B.D. ஷர்மா. இதனால்தான் அலெக்ஸ் மேனன் மாவோயிஸ்டுகளால் சிறை வைக்கப்பட்டதையும், அருண் ஃபெரைரா அரசு காவல் துறையால் சிறை வைக்கப்பட்டதையும் ஒப்பிடவேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

மேற்கொண்டு விவாதத்தைத் தொடர்வதற்கு முன்னால் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திவிட விரும்புகிறேன். மாவோயிஸ்டுகளின் ஆள்கடத்தல்களையும் தனிநபர் படுகொலைகளையும் சாகசவாதமாகவே நான் பார்க்கிறேன். சாகசவாதம் புரட்சி ஆகாது என்பதாலேயே அவற்றை நான் எதிர்க்கவும் செய்கிறேன். இப்படிப்பட்ட நடவடிக்கைகள் மாவோயிஸ்டுகளுக்குக் குறுகிய லாபங்களை மட்டுமே அளிக்கும். மக்களிடம் இருந்து அவர்களை அந்நியப்படுத்தவும் செய்யும். அரசியல் ரீதியில் மக்களை அணி திரட்டாமல், அரசியல் ரீதியில் அவர்களைத் தயார்படுத்தாமல், அவர்களுடைய நம்பிக்கையை வென்றெடுத்து போராட்டத்தில் இணைத்துக்கொள்ளாமல், வெறும் சாகசங்களை மட்டுமே நம்பி ஒரு குழு எந்தவொரு புரட்சியையும் நடத்திவிடமுடியாது. ரஷ்யப் புரட்சியும் சீனப் புரட்சியும் அவ்வாறு நிகழவில்லை. அந்த வகையில், அலெக்ஸ் மேனனைச் சிறைபடுத்திய மாவோயிஸ்டுகளின் செயல்பாடுகள் ஏற்கத்தக்கதல்ல.

நம்மில் பெரும்பாலானோர் இந்தக் கருத்தை ஏற்பார்கள். ஆனால், மாவோயிஸ்டுகளைக் கண்டிக்கும் எத்தனை பேரால்,  ஆயிரக்கணக்கான அருண் ஃபெரைராக்களைச் சிறைபிடித்து சென்று சித்திரவதை செய்யும் அரசின் செயல்பாடுகளைக் கண்டிக்கமுடியும்? மாவோயிஸ்டுகள் புரிவது தீவிரவாதம் என்றால் அரசின் செயல்பாடுகளை எப்படி அழைப்பது?  வன்முறை பாதையை மாவோயிஸ்டுகள் கைவிடவேண்டும் என்று நீட்டி முழக்கும் எத்தனை பேரால் அரசு வன்முறை குறித்து உரையாடமுடியும்?

காந்தியின் அகிம்சை தோற்ற இடம் மிகச் சரியாக இதுவே. காந்தி மேற்கொண்ட உண்ணாவிரதங்கள் அனைத்துமே இந்தியர்களின் வன்முறை நடவடிக்கைகளுக்கு எதிராகத்தான். பிரிட்டனை அவர் தீவிரமாக எந்தவோரிடத்திலும் எதிர்த்ததில்லை. அகிம்சை, மனித உரிமை, அமைதி பற்றி அக்கறை கொண்டுள்ள பலரும் இன்று அவர் வழியில் ஒருதலைபட்சமாக மாவோயிஸ்டுகளின் வன்முறையை மட்டுமே எதிர்க்கிறார்கள். இந்த மனநிலையை எப்படி அழைப்பது? சந்தர்ப்பவாதம் என்றா அல்லது அறியாமை என்றா?

4

ஒரே செயலை ஓர் அரசாங்கம் செய்தால் ஒரு மாதிரியாகவும், ஆயுதம் தாங்கிய போராட்டக் குழுவினர் செய்தால் இன்னொரு மாதிரியாகவும் அணுகும் போக்கு உலகம் தழுவியது. இந்தியாவிலேயே காந்திய வழி சிறந்தது என்றும் பகத் சிங்கின் வழி தீங்கானது என்றும் சொல்லப்பட்டது, இப்போதும் சொல்லப்பட்டு வருகிறது. பொதுப் புத்தியில் ஆழமாகப் பதிந்துள்ள சில பிம்பங்கள்தான் இப்படிப்பட்ட புரிதல்களை ஏற்படுத்துகின்றன.

உண்மையில் புரட்சியாளர்கள் வன்முறை மீது நம்பிக்கை கொண்டவர்களா? ரத்த வெறி கொண்டவர்களா? உயிரின் மதிப்பை உணராதவர்களா?  பகத் சிங் பதிலளிக்கிறார். ‘மனித உயிர்களை வார்த்தைகளால் வடிக்க முடியாத அளவுக்கு புனிதமானதாகக் கருதுபவர்கள் நாங்கள். அது மட்டுமல்ல, மனிதகுல விடுதலைக்காக வெகுவிரைவில் எங்கள் உயிர்களையே நாங்கள் அர்ப்பணிக்க இருக்கிறோம். மனச்சாட்சியின் உறுத்தல் கொஞ்சமும் இன்றி கொலை செய்வதற்கென்றே பயிற்றுவிக்கப்பட்ட ஏகாதிபத்திய ராணுவத்தின் கூலிப் படைகள் போன்றவர்கள் அல்ல நாங்கள். மனித உயிர்களை நாங்கள் உயர்வாக மதிக்கிறோம். ‘

பாராளுமன்ற வெடிகுண்டு வழக்கில் கைதான பகத்சிங், பி.கே. தத் இருவரும் அளித்த வாக்குமூலத்தில் இந்த முழக்கம் இடம்பெறுகிறது. இந்த வாக்குமூலம் 1929 ஜூன் 6 அன்று இந்த இருவர் சார்பாக அசாப் அலி என்பவரால் படிக்கப்பட்டது. (விடுதலைப் பாதையில் பகத்சிங், தொகுப்பு : சிவவர்மா, பாரதி புத்தகாலயம்).

ஏப்ரல் 8, 1929 அன்று பாராளுமன்றத்தில் பகத் சிங்கும் பி.கே. தத்தும் இரு வெடிகுண்டுகளை வீசியபோது, பிரதான எதிரியான சர் ஜான் சைமன் அங்குதான் இருந்தார். அவர்மீதே அந்தக் குண்டுகளை அவர்கள் வீசியிருக்கலாம். செய்யவில்லை. ஏன்? ‘எங்களை அழிப்பதன் மூலம் இத்தேசத்தை அழிக்கமுடியாது. நாங்கள் செய்த செயலுக்குரிய தண்டனையை ஏற்றுக்கொள்ளவும், தனிநபர்களை அழிப்பதன்மூலம் கருத்துகளைக் கொல்லமுடியாது என்பதை ஏகாதிபத்திய சுரண்டல்காரர்கள் அறியச் செய்வதற்கும் நாங்களாகவே வலிய முன்வந்து கைதானோம். ஒரு தேசத்தின் முக்கியத்துவமற்ற இரண்டு நபர்களை அழிப்பதன்மூலம் அத்தேசத்தையே நசுக்கிட முடியாது. நாங்கள் வலியுறுத்திக் கூற விரும்பும் வரலாற்றுப் படிப்பினை இதுதான்.’

புரட்சி என்ற வார்த்தையின் பொருள் என்ன என்று கேட்கப்பட்டபோது பகத் சிங் அளித்த விடை இது.

புரட்சி என்பது ரத்த வெறிகொண்ட மோதலாகத்தான் இருக்கவேண்டுமென்ற கட்டாயமில்லை. தனிமனிதர்கள் வஞ்சம் தீர்த்துக்கொள்வதற்கு அதில் இடமில்லை. அது வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் மீதான வழிபாடல்ல. புரட்சி என்பதன் மூலம், வெளிப்படையான அநீதியை அடிப்படையாகக் கொண்ட இந்த சமூக அமைப்பு மாற்றியமைக்கப்படவேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம்.’

சரியான நேரத்தில் காப்பாற்றவில்லையெனில், இந்த நாகரிகத்தின் முழுக் கட்டமைப்பும் நொறுங்கி விழுந்துவிடும். எனவே இந்த நாட்டில் அடிப்படையான மாற்றம் தேவைப்படுகிறது. இதனை உணர்ந்தவர்களின் கடமை, சமுதாயத்தை சோஷலிசத்தின் அடிப்படையில் புதிதாக மாற்றியமைக்கவேண்டியதே ஆகும்.

புரட்சி என்பதன் மூலம், இவ்விதம் நிலைகுலையக்கூடிய அபாயம் இல்லாததும் பாட்டாளி வர்க்கத்தின் தலைமைப் பாத்திரம் அங்கீகரிக்கப்பட்டிருப்பதுமான ஒரு சமூக அமைப்பை முதலாளித்துவத்தின் அடிமைத்தனத்தில் இருந்தும் ஏகாதிபத்தியப் போர்களின் கொடுமைகளில் இருந்தும் மனிதகுலத்தை விடுவிக்கவல்ல உலகக் கூட்டரசு ஒன்றை இறுதியாக ஏற்படுத்துவதையே நாங்கள் அர்த்தப்படுத்துகிறோம்.

புரட்சி என்பது மனிதகுலத்தின் பிரிக்க முடியாத உரிமை. சுதந்தரம் என்பது அனைவரின் அழிக்க முடியாத பிறப்புரிமை. தொழிலாளர்களே சமுதாயத்தை உண்மையில் தாங்கிப் பிடித்துக்கொண்டிருப்பவர்கள். மக்கள் அதிகாரமே தொழிலாளர்களின் இறுதி இலக்கு.

இக்கொள்கைகளுக்காகவும் இந்த நம்பிக்கைகளுக்காகவும் எங்களுக்கு வழங்கக்கூடிய தண்டனையின் மூலம் ஏற்படும் எத்தகைய துன்பத்தையும் நாங்கள் வரவேற்கவே செய்கிறோம். புரட்சியின் பலிபீடத்தில் எங்களது இளமையை காணிக்கையாக்குகிறோம். எங்களது மகத்தான லட்சியத்தோடு ஒப்பிடுகையில் நாங்கள் செய்யும் எந்த தியாகமும் பெரிதல்ல. நாங்கள் மனநிறைவுற்றுள்ளோம். புரட்சியின் வருகைக்காக நாங்கள் காத்திருக்கின்றோம்.

1931 மார்ச் 22 அன்று பகத்சிங் எழுதிய கடைசி கடிதத்தில் காணப்படும் வரிகள் கீழே.

‘வாழ வேண்டும் என்ற ஆசை இயற்கையானதே. அது என்னிடமும் உள்ளது. அதை நான் மறுக்க விரும்பவில்லை. ஆனால், அந்த ஆசை நிபந்தனைக்கு உட்பட்டது. ஒரு சிறைக் கைதியாகவோ நிபந்தனை வரம்புகளுக்கு உட்பட்டவனாகவோ வாழ எனக்கு விருப்பமில்லை… துணிச்சலோடும் புன்னகையோடும் நான் தூக்குமேடை ஏறினால், அது இந்தியத் தாய்மார்களின் உணர்வுகளைத் தூண்டும். தங்களது பிள்ளைகளும் பகத்சிங்கைப் போல் ஆக வேண்டுமென்று அவர்கள் விரும்புவார்கள். இதன் மூலம் நாட்டின் விடுதலைக்காக தஙுகளது உயிர்களையும் தியாகம் செய்யச் சித்தமாயிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதன் பிறகு, புரட்சிப் பேரலையை எதிர்கொள்வதற்கு ஏகாதிபத்தியத்தால் முடியாமல் போகும்.’

நம்மோடு சேர்ந்து மாவோயிஸ்டுகளும் பகத் சிங்கிடம் இருந்து சில பாடங்களைப் படித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

0

மருதன்

சமூகவியல் : ஜெயமோகனும் மக்கள் பங்கேற்பு முறைகளும்

‘ஆற்றிலும் குளத்திலும் சேறுபடிந்த கரையோரமாகவும் பூச்சி, புழுக்களை இரையாக உண்டுவாழும் பொத்தை என்ற நன்னீர்மீன் பறவைகளாலோ பிற ஜீவராசிகளாலோ தனக்கான இரை பறிபோய்விடும் என்று தெரிந்தால், அந்நீரைக் கணநேரத்தில் கலக்கிவிட்டு எதையும் பார்க்கவியலாமல் செய்துவிடுமாம். குழப்பிப்பேசும் சாமர்த்தியசாலிகளை ‘பொத்தைக்கலக்கி’ என்ற செல்லப்பெயரால் கூப்பிடுவதையும், கலக்குவது என்பது சிலருக்கு, குறிப்பாக அரசதிகார வர்க்கத்திற்கு ராஜதந்திர உத்தியெனவும், கலங்கலிலேயே வாழும் உயிரினங்கள் அக்கலங்கிய சூழலில் எப்படி நிலைத்திருக்க கற்றுக்கொண்டிருக்கின்றன…’ என்ற முன்னுரையுடன், கிருஷ்ணன் எழுதிய கலங்கிய நதி நாவலைப் பற்றிய தனது மதிப்புரையைத் தொடங்குகிறார்  ஜெயமோகன்.

தமிழ் மற்றும் இந்திய இலக்கியங்களில், அதிகார வர்க்கத்தின்  மனோபாவம் எப்படியெல்லாம் எடுத்தாளப்பட்டுள்ளது என்ற சுருக்கமான இலக்கிய  வரலாற்றுடன் நின்றுவிடாமல், அதிகாரவர்க்கத்தைப் பற்றி இதுவரை எழுதப்படாமல் விட்டதையெல்லாம் ஈடுகட்டியும், இனிமேல் எழுதப்படுபவற்றை புரிந்து கொள்ளும்படியும், அதிகாரவர்க்கத்தின் ஆளுமை, ஆணவம், அசட்டுத்தனத்தையெல்லாம் ‘பொத்தைக்கலக்கி’ என்ற ஒரே வார்த்தையில் உள்ளடக்கியிருந்தார் ஜெயமோகன். அதிகாரவர்க்கதைப் பற்றி எழுதப்பட்ட நூல்கள் என்று அவர் சுட்டிக்காட்டியிருக்கும் எதையும் நான் படித்திருக்கவில்லையெனினும், ஜெயமோகனின் எழுத்திலிருந்த யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள முடிந்தமைக்கு  என்னுடைய கள அனுபவமே கைகொடுத்தது.

பொத்தைக்கலக்கி என்ற ஒரு வார்த்தை, என்னுடைய வாசிப்பனுபவங்களையும் களப்பணி அனுபவங்களையும் ஒரு புதிய கண்ணோட்டத்தில் மீண்டும் கண்டடைய  உதவியது. பொத்தைக்கலக்கிகளின் கலக்கல் விதிமுறைகளை, அதன் விளைவுகளை என் மனம் தன்னிச்சையாகத் தொகுக்க ஆரம்பித்தது. களப்பணியில் நாங்கள் கையாண்ட பங்கேற்புத் திறனாய்வு (Participatory Appraisals) முறைகளெல்லாம், பொத்தைக் கலக்கிகளுக்கெதிரான எதிர்வினையாக்கமே என்றுகூடப் பட்டது.

‘சென்ற இருபதாண்டு காலத்தில் தான் சார்ந்த துறையின், அத்துறை ஆளும் மக்களின் அடித்தளம் பற்றிய புரிதல்கொண்ட ஓர் உயரதிகாரியைக்கூட நான் சந்தித்ததில்லை’ என்ற ஜெயமோகனின் அதிர்ச்சியே நம்மனைவரின் அதிர்ச்சியுமாகும். ‘உயரதிகாரிகள் அனைவருமே ஒரே வார்ப்புதான். தாங்கள் கொண்டுள்ள அதிகாரம் பற்றிய உள்ளார்ந்த குதூகலமும், தனக்கு மேலே உள்ள அதிகாரம் பற்றிய பதற்றமும் ஒரேசமயம் கொண்டவர்கள். தான் ஏறி அமர்ந்துள்ள யானை என்பது பெருங்காட்டைத் தன்னுள் கொண்டுள்ள மிருகராஜன் என அறியாமல் தன் துரட்டிக்கம்பிலும் கட்டளையிலும் இயங்கும் இயந்திரம் எனக் கற்பனை செய்துகொள்ளும் அசட்டுப் பாகன்களைப் போன்றவர்கள் அவர்கள்’ என்று ஜெயமோகன் சொல்லும்போது, நம்முடைய அனுபவங்களையெல்லாம் அவர் வார்த்தை வடிவில் கட்டமைக்கும்போது, நமக்கான வார்த்தைகளைத் தந்தமைக்காக, அவரை நன்றியுடன் பார்க்கப், படிக்கத் தோன்றுகிறது.

பெரும்பாலும் நம் உயரதிகாரிகள் முற்றிலும் செவியற்றவர்களாகவோ, கேட்கும் திறன் குறைந்தவர்களாகவோ, Selective Amnesia என்பதுமாதிரி Selective Hearing Loss என்ற நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதால், ‘ஒரு எளிய நிதர்சனத்தைக்கூட அவர்களிடம் புரியச்செய்துவிட முடியாது. ஆனால் நம்பவேமுடியாத அளவுக்குத் தன்னம்பிக்கை கொண்டவர்கள். தங்களை அறிவுஜீவிகள் என்றும் ராஜதந்திரிகள் என்றும் கற்பனை செய்துகொண்டிருப்பவர்கள்’ என்று ஜெயமோகன் தொடரும்போது, அது ஜெயமோகனின் வார்த்தைகளாக  நின்றுவிடாமல், ஒட்டுமொத்த சமூக அனுபவத்தையும் பிரதிபலிப்பதாக அமைந்து விடுகிறது.

‘அதிகார அமைப்பில் உள்ள எவருக்கும் பிரச்னையின் விளைநிலம் பற்றியோ, அதன் உள்ளோட்டங்கள் பற்றியோ எதுவுமே தெரியாவிட்டாலும், கலக்குவதை மட்டும் தொடர்ந்து செய்கின்றார்கள். எந்த நிபுணராலும் ஊகித்துவிட முடியாத அவர்களின் கலக்கல் முறைகள் சிக்கலானவை. ஒன்றில் இருந்து ஒன்றாக பிரிந்து பெரிய வலையாகி நம்மைச் சூழ்ந்துகொண்டு முற்றிலும் செயலற்றதாக ஆக்கிவிடக்கூடியவை’ என்று ஜெயமோகன் இரண்டே வரிகளில் நம்மில் பலரின் பல்லாண்டு அனுபவங்களை வடித்தெடுத்து விடுகின்றார்.

செயலற்றதாக ஆகிவிட்ட குடிமைச் சமூகத்தை, செயலூக்கம் பெற்றதாக ஆக்க, அதிகாரிகளின் கண்ணோட்டத்தில் அல்ல, இரையின் கண்ணோட்டத்தில் பார்க்க எத்தனையோ முறைகள் உருவாகி வடிவெடுத்துள்ளன. எப்படித்தான் கலக்கியெடுத்தாலும், அந்தக் கலங்கலிலும் தெளிவாகப் பார்க்க அம்முறைகள் (பங்கேற்பு ஊரகத் திறனாய்வு, மற்றும் அதைச் சார்ந்த பலப்பல நுண் உத்திகள்) நடைமுறையில் உதவினாலும், இன்னும் வேகமாகக் கலக்கி எல்லோரையும் மூச்சுத் திணற வைப்பதில் அதிகார வர்க்கத்துக்கு இருக்கும் திறமையே அலாதியானதுதான்.

அவர்கள் விதவிதமாகக் கலக்குகிறார்கள். அவர்கள் செய்வதெல்லாம் ‘ராஜகலக்கல்’. இருந்தாலும் அவர்கள் ஒரு வகையில் பாவம்தான். யாராலும் புரிந்து கொள்ளப்படாது என்று நினைத்து அவர்கள் கலக்கும்போது, அந்தக் கலங்கல்களில் அவர்களே மறைந்தும், கரைந்தும், மூச்சுத்திணறிப் போவதும் மிகப்பெரிய  துரதிருஷ்டம்தானே!

பங்கேற்பு ஊரகத் திறனாய்வில், சப்பாத்தி வரைபடம் (Venn Diagram) என்று ஒரு முறையுள்ளது. ஓர் ஊரோடு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அவை செய்யும் பணிகள், அதன் முக்கியத்துவம் பற்றி, மக்களின் மதிப்பீடுகளை அவர்கள் புரிந்து கொண்டதன் அடிப்படையில் அறிய உதவும் ஓர் உத்தி. தங்கள் ஊர் சம்பந்தப்பட்டதென அவர்கள் பல அரசு நிறுவனங்களை அடையாளப்படுத்தினாலும், 90 சதவீத கிராமங்களில், ‘கவர்ன்மெண்ட் மசுரு எங்க ஊருக்கு என்ன செஞ்சிருக்கு: ஒன்னுங் கிடையாது’ என்றுதான் ஆரம்பிப்பார்கள். அவர்களிடம் மேலும் மேலும் உரையாடும் போதுதான் தெரியவரும் ‘கவர்ன்மெண்ட் மசுரு’ அவர்களுக்கு என்னென்னமோ செய்திருந்தாலும், அதிகாரவர்க்கம்  கலக்கிய கலக்கலில், அரசே கரைந்தும், மறைந்தும் போய்விட்டதென்பதை. ஓர் அரசு கரைவதும், மறைவதும் தவறுகளை, திறமையின்மையை மறைக்க வேண்டுமானால் உதவியாயிருக்கலாம். ஆனால் அது ஆரோக்கியமான சமூக மாற்றுருவாக்கத்திற்கு உதவாது.

ஒரு சின்ன உதாரணத்திலிருந்து ஆரம்பிப்போம். 200 வீடுகளைக் கொண்ட ஒரு சிறிய கிராமம். ஐம்பத்தைந்து மாணவர்களைக்கொண்ட ஈராசிரியர் பள்ளி. ஆசிரியர்களுக்கு மாதச் சம்பளம் 45-50 ஆயிரம் ரூபாய் வரை, வருடத்துக்கு ஐந்து லட்சத்திலிருந்து ஆறு லட்சம் வரை ஆகலாம். அப்பள்ளிகளை கண்காணிக்க ஒன்றிய, மாவட்ட, மாநில அளவில் அதிகார அடுக்குகள். அதற்காக ஒரு பள்ளிக்கு குறைந்தபட்சம் ஒரு லட்சத்துக்கு மேல் ஆகலாம். பள்ளிக் கட்டடங்கள், அதன் பராமரிப்பு, இலவச பாடப் புத்தகங்கள் என்று ஆகும் செலவுகள். ஈராசிரியர் பள்ளி நடத்தவே எட்டு லட்சத்துக்கு மேலாகலாம். இது தவிர, மதிய உணவு, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள், இலவச பஸ் பாஸ், விதவிதமான கல்வி உதவித்தொகை…. என்று நீள்கிறது பட்டியல். இவ்வளவு செய்தும் உள்ளூர்ப் பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பாமல் கடன் வாங்கி, நன்கொடை அழுது,  வேன் ஏற்றி வெளியூர் பள்ளிக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்புகிறார்கள் என்றால், அது பெற்றோர்களின் அறியமையா, அல்லது கலங்கலின் அடையாளமாக அவர்கள் காணும் ஆரம்பப் பள்ளியில் தங்கள் பிள்ளைகளை மூச்சுத்திணற வைத்து விடுவார்களென்ற எச்சரிக்கை உணர்வா? பயமா?

அதே ஊரில் 30 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்து, இன்று வரை பல்வேறு பெயர்களில் கட்டப்பட்டு வரும் காலனி மற்றும் பிற வீட்டுவசதித் திட்டங்கள், இலவச மின்சாரம் – வீடுகளுக்கும், விவசாயத்துக்கும் வகை வகையான மானியங்கள், நலத் திட்டங்கள். ஊருக்கு மாதம் நான்கு லட்சத்துக்கு மேல், வருடத்துக்கு 50 லட்சம் வரை வரும் முதியோர் உதவித்தொகை, பொது வினியோகம், கூட்டுக்குடிநீர் திட்டம், பஞ்சாயத்து, தாலுகா, வேளாண்மை, தோட்டக் கலைத்துறை, ஆரம்ப சுகாதாரம்,  கால்நடைத்துறை பொதுப்பணித்துறை, காவல் என்று உள்ளடக்கிய 23 க்கும் மேற்பட்ட அரசுத்துறைகள் – ஒவ்வொரு கிராமத்துக்கும் தனித்தனியாக இல்லாவிட்டாலும், பகுதி/வட்டார அளவில் செய்யப்படும் செலவில் அக்கிராமத்துக்கான பங்கு – உத்தேசமாகக் கணக்கிட்டாலும் ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒவ்வொரு வருடமும் கோடிகளைத் தாண்டும். இவ்வளவு செலவு செய்தும், ‘கவர்ன்மெண்ட் மசுரு’ எங்க ஊருக்கு என்ன செஞ்சிருக்கு என்று அவர்கள் கேட்டால், அரசாங்கம், அதிகார வர்க்கம் அவர்கள் கண்ணுக்குத் தெரியவில்லை என்றுதானே அர்த்தம்? இதை எப்படி எடுத்துக் கொள்வது? வலது கையினால் கொடுப்பது இடது கைக்குக் தெரியலாகாது என்ற அதிகார வர்க்கத்தின் பெருந்தன்மை என்று எடுத்துக்கொள்வதா? இல்லை, அவர்கள் கலக்கிய கலக்கலில் அவர்களே கரைந்து போய்விட்டார்கள் என்று எடுத்துக்கொள்வதா?

3000-5000 ரூபாய் சம்பளத்தில், நான்கைந்து கிராமங்களுக்குப் பொதுவாக ஓர் ஊழியரை மட்டும் பணியிலமர்த்தி, சில சில்லறைப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் ஓர் உப்புமா தொண்டுநிறுவனத்தைக் குறிப்பிட்டு, “அவர்கள் தாம் எங்களுக்கு எல்லாமும்” என்று சொல்லும்போது, பேரதிகாரமும், பெரும்பொருளுமிக்க அரசையே மக்கள் பார்வையிலிருந்து மறைக்கும் அதிகார வர்க்கத்தின் கலக்கல் சாமர்த்தியத்தை யாரிடம் சொல்லி முட்டிக்கொள்ள?

மாதம் நூறிலிருந்து நூற்றைம்பது வரை சளைக்காமல் கேபிள்காரனுக்கு தரும் சாதாரண பொதுஜனங்கள், வீட்டு வரி தண்ணீர் வரியைக்கூட கட்டுவதற்கு சலிப்படைவது எதனால்? அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களை எடுத்துக்கொள்வோம். எம்எஸ், எம்டி போன்ற உயர்கல்வி படித்த மருத்துவர்களும் முறையாகப் பயிற்சி பெற்ற செவிலியர்களும் அங்கே இருக்கிறார்கள். எல்லாம் இருந்தும் சட்டென்று மக்களின் கவனத்துக்கு அவர்களால் வரமுடியவில்லை. “உடம்புக்கு முடியலேன்னா, மருந்துக் கடையில் போய் மருந்து வாங்கிச் சாப்பிடுவோம். ஒருக்க வாங்கிச் சாப்பிட்டாலே சரியாயிடும்”  என்று சொல்லும்போது, முறையாகப் படிக்காமலே மருந்துகளைக் கையாளும் ஒரு மருந்துக் கடைக்காரனின் செல்வாக்குக்கு முன்னால், அதிகார வர்க்கம் மட்டுமல்ல நாமனைவரும் மண்டியிடத்தான் வேண்டியுள்ளது.

இதையெல்லாம் அதிகார வர்க்கம் தனது அறியாமையால் செய்கிறதா என்றால் இல்லை. ஜெயமோகன்  சொல்வது மாதிரி அவர்கள் செவியற்றவர்களாகிவிட்டார்கள். கேட்கும் திறனை முற்றிலும் இழந்துவிட்டார்கள்.  அவர்கள் மட்டுமல்ல, நம் எல்லோருடைய கேட்கும் திறனையும் சற்று அதிகப்படுத்த உருவான செவுட்டு மிஷன்தான் பங்கேற்பு முறைகள். அதன் வலிமையே எந்த முன் அனுமானமும் இன்றி மக்கள் சொல்வதைக் கேட்பதுதான். பிரச்னைகளையும், தீர்வுகளையும் அவ்வாறுதான் கண்டறியமுடியும். மக்களைப் பேசவைக்கவேண்டும். அவர்கள் பேசுவதை அவர்களை வைத்தே தொகுக்க வைக்கவும் வேண்டும். அதற்கு சுவாரஸ்யமான முறைகளைக் கையாளவேண்டும்.

மக்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்டிருந்தால், பல பிரச்னைகளுக்கு எளிமையான, சிக்கனமான தீர்வுகளைக் கையாண்டிருக்கமுடியும். பங்கேற்பு முறைகள் வலியுறுத்துவதும் அதைத்தான். பங்கேற்பு முறைகள் ஆய்வு முறைகள் மட்டுமல்ல. சிக்கல்களைப் புரிந்து கொள்ள உதவும் ஞானத் திறவுகோலும்கூட.

0

பேரா. எஸ்.ரெங்கசாமி