சொந்த செலவில் சூயிங்கம்
அது ஓர் ஏற்றுமதி நிறுவனம். மேனேஜர் பயங்கரமான கோபக்காரர். தனக்குக் கீழே வேலை செய்கிறவர்களைக் கடித்துத் துப்பிவிடுவார்.
அந்த கம்பெனியில் இருக்கிற யாருக்கும் அந்த மேனேஜரைப் பிடிக்காது. ஆனால் அதை வெளிப்படையாகச் சொன்னால் சீட்டு கிழிந்துவிடுமே. வெறுப்பை உள்ளே மறைத்துக்கொண்டு வெளியே சிரித்தபடி சுற்றிவந்தார்கள்.
பல வருடங்கள் கழிந்தன. அன்றைக்கு அந்த மேனேஜருக்கும் 58-வது பிறந்தநாள். கம்பெனி விதிமுறைகளின்படி அதேநாளில் அவர் ஓய்வு பெறுகிறார்.
இதைக் கேள்விப்பட்ட ஊழியர்கள் எல்லோருக்கும் சந்தோஷம் தாங்கவில்லை. ‘ஒழிந்தான் கயவன்’ என்று கொக்கரிக்காத குறையாகக் கொண்டாடினார்கள்.
அன்று மாலை. கோபக்கார மேனேஜருக்குப் பிரிவுபசார விழா. அதற்கு ஊழியர்கள் எல்லோரும் கூட்டம் கூட்டமாக வந்தார்கள். ‘நாளைலேர்ந்து இந்தத் தடியனோட தொல்லை இருக்காதுடா சாமி. ரொம்ப நிம்மதி!’ என்று உள்ளுக்குள் மகிழ்ந்தார்கள். ஆனால் வெளியே ‘உங்களைமாதிரி ஒரு மேனேஜரைப் பார்க்கவே முடியாது சார். நீங்க இல்லாம இந்தக் கம்பெனி எப்படி நடக்கப்போகுதுன்னே தெரியலை’ என்று பொய்யாக உருகினார்கள்.
இதையெல்லாம் அந்த விழாவுக்கு வந்திருந்த கம்பெனி முதலாளி பார்த்துக்கொண்டிருந்தார். கடைசியாக மேடையேறிய அவர் ‘நீங்களெல்லாம் உங்க மேனேஜர்மேலே இவ்ளோ அன்பா இருப்பீங்கன்னு நான் கனவிலகூட நினைக்கலை’ என்றார். ‘உங்களோட கருத்துக்கு மதிப்பு தரலைன்னா நான் என்ன முதலாளி? நீங்க விரும்பினபடி நான் இந்தத் திறமைசாலி மேனேஜரோட பதவிக்காலத்தை இன்னும் சில வருஷங்களுக்கு நீட்டிக்கறதா முடிவு செஞ்சிருக்கேன்!’
நீங்கள் எதைக் கேட்கிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். அது கிடைத்தாலும் கிடைத்துவிடும்!








October 15th, 2010 at 7:44 am
நன்றி ! ஜென் ஆல்வேஸ் வின் !
October 15th, 2010 at 10:26 am
மேனேஜர் என்ன நினைத்துக் கொண்டிருந்தாரோ? இதைத் தான் அவர் கேட்டிருந்தாரோ?
October 15th, 2010 at 7:56 pm
ஹாஹஹஹஹஹ்ஹாஹா!