சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள்
நாவல், கட்டுரை, சிறுகதை என்று பல்வேறு வடிவங்களில் சுஜாதா எழுதி இருந்தாலும், அவரது மிக சிறந்த எழுத்துகள் வெளிப்படுவது சிறுகதையில்தான் என பலரும் கருதுவதுண்டு. சுஜாதாவின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்று ஸ்ரீரங்கத்து தேவதைகள். வாசிக்கும் ஒவ்வொரு முறையும் புன்னகைக்கமுடியும். வாசிக்கும் ஒவ்வொரு முறையும் நம் இளமை காலத்தை தரிசிக்கமுடியும்.
ொத்தம் 14 சிறுகதைகள். அதற்குள் தான் எத்தனை மனிதர்கள் உயிரோடு வலம் வருகிறார்கள் !
நம் சிறுவயதில ஊரில் தொடர்ந்து பார்த்த ஏதாவது ஒரு பைத்தியத்தை இன்று வரை நம் நினைவு இடுக்குகளில் விடாது வைத்திருக்கிறோம் தானே? அப்படி ஒரு பைத்தியத்தின் கதை தான் கடவுளுக்கு ஒரு கடிதம். கோவிந்து என்கிற மனிதர் தினம் கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதி போஸ்ட் செய்கிறார். மன நிலை பாதிக்கப்பட்ட இவருக்கு திருமணம் செய்யலாம் என பேச, (” சாந்தி முகூர்த்தம் ஆனால் எல்லாம் சரியா போயிடும்”) நல்ல வேளையாக அப்படி நடக்கவில்லை. கதையின் இறுதியில் கோவிந்துவின் தம்பியும் அதே மாதிரி ஆகி போனதாகவும், அவர் அம்மா இருவருக்காகவும் வேண்டி கொண்டு தினம் கோவிலில் விளக்கு போடுவதாகவும் முடிக்கிற போது மனம் கனத்து போகிறது.
இன்னொரு பைத்தியத்தின் கதை குண்டு ரமணி. இது தன் குழந்தையை மரணத்திடம் கொடுத்த ஒரு பெண், புத்தி பேதலித்து திரிவதை சொல்கிறது. ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் வந்து அமர்ந்து கொண்டு சாப்பாடு கொடுக்க சொல்லி வற்புறுத்துவதும், அப்படி தராவிடில் அந்த வீட்டு வாசிலிலேயே படுத்து தூங்குவதும்… இது மாதிரி பைத்தியங்களை நிச்சயம் நாம் பார்த்திருப்போம் !
சிறு வயதின் இன்னோர் வித்தியாச அனுபவம் சொல்லும் கதை “பாம்பு”. சுஜாதா வீட்டில் பாம்பு வந்து விட, அவர் தங்கையை சைட் அடிக்கும் சுஜாதாவின் நண்பர் ஹீரோ மாதிரி பாம்பு பிடிக்க பார்க்கிறார். கடைசியில் பாம்பை பிடிப்பது அவர் தங்கை தான். “அது என்ன பாவம் பண்ணுச்சு விட்டுடலாம்” என அவள் சொன்னாலும் அந்த பாம்பு அடித்து கொல்லப்படுகிறது. “என் தங்கையை நான் நன்கு உணர அது ஒரு சந்தர்ப்பம்” என்கிறார் சுஜாதா.
நம் சிறு வயதில் ஏதாவது ஒரு நண்பன் நம்மை டாமினேட் செய்து கொண்டிருந்திருப்பான். பெஞ்சில் உட்காருவது முதல், விளையாட்டு வரை இப்படி சுஜாதாவை மிக டாமினேட் செய்த ஒருவரை பற்றிய கதையை சுவாரஸ்யமாய் சொல்லி விட்டு.. இன்று அவன் “வேலை கேட்டு என் அறையின் வாசலில் அமர்ந்திருக்கிறான். வேலை கொடுக்கலாமா வேண்டாமா சொல்லுங்கள் என முடிக்கிறார் சுஜாதா!
சுஜாதா பாட்டி வீட்டில் வளர்ந்ததால், கதைகளில் பாட்டிக்கு முக்கிய இடம் இருக்கிறது. தனிமையில் சுஜாதாவை திட்டுபவராக, மற்றவர் முன் எப்போதும் விட்டுத் தராதவராக இருக்கிறார் பாட்டி. தன் வீட்டில் வேலை செய்த பெண்மணியின் சம்பள பணத்தை திருடிய கதையை சுஜாதா மறைக்காமல் பகிர்ந்தது நெகிழ்வாக உள்ளது.
போகப்போக ரங்கு கடை, ஸ்ரீரங்கத்து தெருக்கள் எல்லாமே நமக்கு பழக்கப்பட்ட இடமாகி விடுகிறது. கே. வி, ரங்குடு, அம்பி ஆகிய பாத்திரங்கள் (நண்பர்கள்) பல கதைகளில் வருகிறார்கள். அனைத்து சிறுவயது விளையாட்டுகளிலும் சுஜாதா ஒப்புக்கு சப்பாணியாக இருக்கிறார். (எல்லா எழுத்தாளர்களுக்கும் இதே நிலை தானோ?)
உள்ளூர் கிரிக்கெட் மேட்ச்கள் எப்போதும் சுவாரஸ்யம் தான். சுஜாதா தஞ்சை டீமுடன் ஆடி ஜெயித்த அனுபவத்தை மிக சுவாரஸ்யமாய் சொல்கிறார். தங்களுக்கு சாதகமான அம்பயர் வைத்து கொள்வதும், அவர் எல்.பி .டபிள்யூ வுக்கு அவுட் கொடுக்காததும் எல்லாருக்கும் நடந்திருக்கும் ! இந்த மேட்ச் முடிந்து அதன் செய்தி சில வரிகளில் பத்திரிகையில் வந்த போது கிடைத்த சந்தோஷம் அதன் பின் எத்தனையோ முறை பத்திரிக்கையில் தன் பெயர் வந்த போதும் கிடைத்ததில்லை என்கிறார் சுஜாதா!
கிராமத்து டிராமாவில் சுஜாதா (சாமரம் வீசும் ) பெண் வேடம் போட்டதை ஏறக்குறைய கண்ணீருடன் நம்மிடம் சொன்னாலும், நமக்கு சிரிப்பு பிய்த்து கொண்டு போகிறது. நாடகம் பார்ப்பவர்களுக்கு குலுக்கல் முறையில் ஒரு கறவை மாடு பரிசு என்று சொல்லி விட்டு, நாடக அரங்கத்தில் கட்டப்பட்டிருந்த மாடு ஒரு மாதிரி நெர்வசாக சுற்றி வந்து சாணி போட்டு கொண்டிருந்தது என்பது டிப்பிக்கல் சுஜாதா !
ஒவ்வொரு கதையும் வாசித்து விட்டு சற்று இடை வெளி விட்டு தான் அடுத்த கதை வாசிக்க வேண்டியிருக்கிறது.
தமிழில் வெளிவந்த மிக சிறந்த சிறுகதை தொகுப்புகளுள் ஒன்றான இந்த புத்தகத்தை வாசிக்கத் தவறாதீர்கள் !
0
மோகன் குமார்








June 22nd, 2012 at 6:10 pm
அருமை.
June 23rd, 2012 at 10:03 am
hey….i have read the book five times ….worth reading 100 times…
June 24th, 2012 at 11:30 am
“ஸ்ரீரங்கத்து தேவதைகள்” கதைகளை எப்படி எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று விளக்கும் all in all அழகுராஜ் BRM பதிவையும் போடலாமே!
July 4th, 2012 at 5:23 pm
@Ganpat: Neenga “BRM” ah vidra madhiri illa poola.. vidunga boosu.. Avaru dhaan yevvlo adichalum thanguraru illa..!!!
August 17th, 2012 at 6:25 am
அந்த புத்தகமும் இந்த விமரிசனமும் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் இதை “இலக்கியமாக” விவரிப்பதது தான் சற்று இடறுகிறது
September 29th, 2012 at 10:05 pm
rangaraja ayyangar is a legent in our tamil novelist,
avar illatha ulagil valvathu satru siramamaga ullathu