விடுதலை ராஜேந்திரனுடன் ஒரு சந்திப்பு
தி சண்டே இண்டியன் பத்திரிகையின் முதன்மை ஆசிரியர் நண்பர் அசோகனின் அழைப்பின்பேரில் அவர்களுடைய அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன். திராவிட இயக்க நூற்றாண்டு கொண்டாடப்பட்டு வருகின்ற சூழ்நிலையில் திடீரென சில இயக்கங்கள் திராவிட மாயை என்றும் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்றும் பேசத் தொடங்கி இருக்கிறார்கள் அல்லவா? அதைப்பற்றிய ஒரு கருத்து யுத்தத்தில் கலந்துகொள்ள விடுதலை ராஜேந்திரனையும் மக்கள் மாநாட்டுக் கட்சியின் (?) தலைவர் க. சக்திவேலுவையும் அழைத்திருந்தனர். அவர்களுடைய கருத்து மோதலைக் கண்டுகளிக்க வாருங்கள் என்று அழைத்திருந்தார் அசோகன்.
பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை ராஜேந்திரனைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். பெரியாரைக் கொச்சைப்படுத்தும் குழப்பவாதிகள் உள்ளிட்ட சில புத்தகங்களையும் படித்திருக்கிறேன். நேரில் அறிமுகமில்லை. சக்திவேலுவை எனக்கு வழக்கறிஞராக, காங்கிரஸ்காரராகத் தெரியும். புதிதாகக் கட்சி ஆரம்பித்து, அதற்கு அவரே தலைவராகவும் இருக்கிறார் என்பதை சமீபத்தில்தான் தெரிந்துகொண்டேன்.
நான்கு மணிக்கு யுத்தம் தொடங்கும் என்று சொல்லியிருந்தார்கள். நான் கொஞ்சம் முன்கூட்டியே சென்றுவிட்டேன். முதலில் விடுதலை ராஜேந்திரன் வந்தார். என்னை அவருக்கு அறிமுகம் செய்துவைத்தார் அசோகன். நான் எழுதிய திராவிட இயக்க வரலாறு (ஒன்று | இரண்டு) புத்தகம் பற்றி அவரிடம் சொன்னார் அசோகன். பிறகு தமிழக அரசியல் வாரமிருமுறை இதழில் நான் எழுதிவரும் ஆடு.. புலி.. அரசியல் தொடர் பற்றியும் சொன்னார். தன்னுடைய மகிழ்ச்சியைத் தெரிவித்தார். பிறகு உங்கள் ஊர்க்காரர்தான் என்று சொன்னதும் ராஜேந்திரனின் முகத்தில் மகிழ்ச்சி.
மயிலாடுதுறை பற்றிப் பேசினோம். எங்கள் ஊர்.. எங்கள் ஊர்ச்சூழல்.. இன்னபிற விஷயங்கள். பிறகு திராவிட இயக்க வரலாறு பற்றி. அது தொடர்பாக இதுவரை வெளிவந்துள்ள புத்தகங்கள் பற்றி. என்னுடைய புத்தகத்தின் கால எல்லை பற்றி. நூற்றாண்டு கொண்டாடப்படுவது பற்றிப் பேசினார். உங்கள் புத்தகம் இதுவரை என்னுடைய கவனத்துக்கு வரவில்லை. நாளையே வாங்கிப் படிக்கிறேன் என்றார். நானே உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன் என்று சொல்லி முகவரி வாங்கிக்கொண்டேன். சொன்னபடியே மறுநாள் அனுப்பிவைத்தேன்.
வழக்கறிஞர் சக்திவேலு வந்ததும் கருத்து யுத்தம் தொடங்கியது. யுத்தம் என்ற பதத்தை அழுத்தமாகவும் அடிக்கடியும் பயன்படுத்தக் காரணம் இருக்கிறது. சக்திவேலுவின் குரல் தொடக்கத்தில் இருந்தே உரத்து இருந்தது. சாதாரண விஷயத்தைக்கூட உரத்த குரலில் பேசினார். வாதத்துக்கு வலுசேர்க்க உரத்த குரல் உதவும் என்பது அவருடைய நம்பிக்கையாக இருக்கலாம்.
திராவிடர், திராவிடம் என்பதெல்லாம் மாயை; நீதிக்கட்சி என்பதே தெலுங்கர்களின் முன்னேற்றத்துக்கான இயக்கம்தான். அதன்மூலம் தமிழர்கள் அதிகாரமின்றி அழுத்தப்பட்டனர் என்றார் சக்திவேலு. அதை மறுக்கும் வகையில் பேசிய விடுதலை ராஜேந்திரன், ‘இங்கே பார்ப்பனர்கள்தான் ஆதிக்கம் செலுத்தினர். ஏற்றத்தாழ்வுகளை அவர்கள்தான் உருவாக்கினர். ஒடுக்குமுறைகளை அவர்கள்தான் உருவாக்கினர். அந்த ஆதிக்கத்துக்கு எதிராகவே திராவிட இயக்கம் தோன்றியது. நீங்கள் சொல்வதுபோல தெலுங்கர்களை முன்னேற்றவோ, தமிழனை அழுத்தவோ திராவிட இயக்கம் தோன்றவில்லை’ என்றார்.
தமிழர்களைத் தமிழ்நாட்டிலேயே அதிகாரமற்றவர்களாக அழுத்திவைத்திருக்கும் மூளைச் சலவையைத்தான் திராவிடம் செய்துவருகிறது என்றார் சக்திவேல். மொழி அடிப்படையில் இங்கே இருப்பவர்களை எல்லாம் துரத்தியடித்துவிட்டு, குறிப்பிட்ட சில சாதியினர் ஆதிக்கம் செலுத்தி, தமிழ்ச்சமுதாயத்தைப் பலவீனமாக்கும் முயற்சியில் நீங்கள் இறங்கியிருக்கிறீர்கள் என்று பதில் கொடுத்தார் விடுதலை ராஜேந்திரன்.
விவாதம் பல கட்டங்களில் அனல் பறந்தது. விமரிசனம் என்ற பெயரில் நிறைய ஸ்வீப்பிங் ஸ்டேட்மெண்ட்களை வெளியிட்டார் சக்திவேலு. அவற்றைத் தமக்கே உரிய நிதானத்துடன் எதிர்கொண்டார் ராஜேந்திரன். இடையிடையே நானும் விவாதத்தில் பங்கெடுத்துக்கொண்டேன். குறிப்பாக, விவாதத்தில் வெப்பம் அதிகரிக்கும் சூழலில். அந்த விவாதத்தின் முக்கியப்பகுதிகள் தற்போது வெளியாகியுள்ள சண்டே இந்தியன் இதழில் இடம்பெற்றுள்ளன.
தொடக்கத்திலேயே விவாதம் காரசாரமாகிவிட்டதால் முக்கிய விருந்தினர்களான ராஜேந்திரனும் சக்திவேலுவும் என்னைப் பார்த்தே பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் முன்வைக்கும் வாதத்துக்கு ஆதரவாகவோ, எதிராகவோ முகபாவனையை வைத்துக்கொள்ளமுடியாமல் திணறியது புதிய அனுபவம்.
விவாதங்கள் முடிந்தபிறகு விடுதலை ராஜேந்திரனுடன் பேசிக்கொண்டிருந்தேன். ஆடு.. புலி. அரசியல் தொடர் பற்றிக் கேட்டார். இதுவரை எழுபது அத்தியாயங்கள் எழுதியிருக்கிறேன் என்று சொன்னேன். என்னிடம் இருந்த தமிழக அரசியல் பத்திரிகையை அவரிடம் கொடுத்தேன். பெரியார் திராவிடர் கழகம் நடத்தும் கூட்டங்களில் கலந்துகொண்டு பேசவேண்டும் என்று அழைப்புவிடுத்தார். ஏற்றுக்கொண்டேன்.
0
ஆர். முத்துக்குமார்








April 17th, 2012 at 3:43 pm
Dear Muthukumar – hope your quest for positioning yourself as a strong idealist becomes successful. I have read both the volumes of your book. You have done a tremendous job in articulating the facts in an intersting way. However, my sincerest opinion is, stories like ‘King Ashoka planted trees’ will not give a successful and progressive livelihood (but for teachers, historians and people who take this as profession)in whatever way it is presented. My brotherly suggestion to you is to start diverting your gifted language and articulation skills towards progressive / developmental / current topics. These Rajendran, Sakthivel etc. are typical businessmen and their product of trade is idealism. Am happy if you get your share of profit as a tradesman, but be aware that you do not become a customer who lost in a tough bargain. Nevertheless, if you want to say this is all for your personal satisfaction – just ignore whatever i said earlier. Cheers ….Ganesh (i couldnt install tamil fonts in my office, excuse my english)
April 17th, 2012 at 5:13 pm
நண்பரே வழக்கம்போலச் சிறப்பாகவே எழுதியுள்ளீர்கள். வாழ்த்துகள்
முனைவர் ப. சரவணன்
April 17th, 2012 at 10:32 pm
திரு.சக்திவேல் அவர்களின் வாதத்திற்கு திரு.ராஜேந்திரன் அவர்களால் ஆணித்தரமான பதில்களை முன்வைக்க இயலவில்லை எனபது கண்கூடு. நாயரும்,நாயுடுவும்,ரெட்டியும் தமிழனிடம் தங்கள் சரக்கை விற்க கண்ட கொல்லைப்புற வழிதான் “தீராவிடம்” . இந்த கதையை இப்போது பெரும்பான்மை தமிழர்கள் தெரிந்துகொண்டுவிட்டதால் இவர்கள் கடையை மூட வேண்டிய தேவை வந்துவிட்டது. வெண்மணியில் திராவிடம் என்ன செய்தது? அதற்க்கு எப்போதும் சேரியை பற்றிய கவலை வந்ததே இல்லை. திராவிட வயலில் அறுவடை செய்தது எல்லாமே ஆதிக்க, பிற்படுத்தப்பட்டதாக கூறிக்கொண்ட சாதியினரே! தமிழனின் கண்ணைக்கட்ட இவர்கள் கண்ட வழி தான் பார்ப்பன பூச்சாண்டி. சுதந்திர போராட்டத்தில் வெள்ளையனின் கைக்கூலியாக சில மிதவாத காங்கிரசு பார்ப்பனர்களும், நீதிக்கட்சி கோமான்களும் , அடிமை அதிகாரத்தை ருசிப்பதற்காக குறுக்கு சால் ஓட்டிய கதை நாடறியும். சுதந்திர நாளை கறுப்பு நாளாக கொண்டாடி “குடுத்த காசுக்கு மேலாக கூவியதையும்” எல்லோரும் அறிவர்.
பார்ப்பான் சொன்னதாக கதை விட்டுக்கொண்டு, சேரியில் இருப்பவனையும் , வலிமையற்ற பெரும்பான்மயானவனையும் பிற ஆதிக்க சாதியினர் இன்று வரை தம் காலடியில் போட்டு நசுக்கத்தான் இந்த தீராவிடம் வழிகாட்டியுள்ளது. மரியாதைக்குரிய ராஜேந்திரன் அவர்களால் இதை எவ்வாறு மறுக்க முடியும்? இதையும் ராஜேந்திரனிடம் கேட்காமல் “வீரமணி ஆதீனத்திடமா” கேட்க முடியும்?
April 18th, 2012 at 8:07 am
please read dravida mayai-oru paarvai by subbu