தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சைகள் : வானியலும் ஜோதிடமும்
தமிழ்ப் புத்தாண்டு தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகளையும் விவாதங்களையும் அரசியல் சண்டைகளையும் காணும்போது மலைப்பாக இருக்கிறது. இந்த விவாதங்களை எப்படி அணுகுவது? உண்மையில், தமிழ்ப் புத்தாண்டாக எந்த நாளை எடுத்துக்கொள்வது?
முதலில் தமிழ் மாதக் கணக்கீடு எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதைப் பார்ப்போம். சூரியன் ஒரு ராசியில் இருக்கும் நாள்கள் எல்லாம் ஒரு மாதம் என்று கொள்ளப்படுகிறது. ஒரு ராசியைக் கடந்த பிறகே மறு மாதம் தொடங்கும். இதனால்தான் பொங்கல் அன்று மாதம் எப்போது பிறக்கிறது என்ற கேள்வி எழும். சில சமயம், மாலை 5 மணிக்குக் கூட மாதம் பிறக்கலாம். அன்று பொங்கல் பானை 5 மணிக்குதான் ஏற்றுவார்கள்.
இந்தியாவில் பல விதமான மாதக் கணக்கீடுகள் இருக்கின்றன. சௌரமான மாதம். இது சூரியன், ஒரு ராசியில் இருக்கும் காலத்தை, ஒரு மாதமாகக் கொள்வது. தமிழ்நாடு, இலங்கை, ஒரிசா, கேரளா, வங்காளம், அஸ்ஸாம் ஆகிய பகுதிகளில் இது கடைபிடிக்கப்படுகிறது. சாந்த்ரமான மாதம்: இதிலும் இரு முறைகள் உள்ளன. அமாவாசையின் மறுநாள் முதல் மாதம் தொடங்கும். ஆந்திரா, கர்னாடகா உள்பட பெரும்பான்மையான இந்திய மாநிலங்களில் இது பின்பற்றப்படுகிறது. பௌர்ணமியில் இருந்து தொடங்கும் மாதம் சில பகுதிகளில் பின்பற்றப்படுகிறது.
இப்போது பலரும் கூறும் குற்றச்சாட்டுகளைக் காண்போம்.
1. வடநாட்டு @ ஆரிய @ பார்ப்பனப் பண்பாட்டுத் திணிப்பு:
வடநாட்டவர்கள், வைதீகர்கள் சௌரவமான மாதங்களைப் பயன்படுத்துவதே இல்லை. அவர்கள் சந்திர மாதங்களையே பயன்படுத்துகிறார்கள். பண்டிகைகள் ஆஷாட, ஸ்ராவனம், பாத்ரபத,ஆஸ்வின மாதங்களில் வருவது. நவராத்திரி பாத்ரபத மாதத்திலும் தீபாவளி ஆச்வினத்திலும் வருகிறது. சில நேரங்களில் சூரிய மாதத்துக்கும் சந்திர மாதத்துக்கும் ஒரு மாத வித்தியாசம் வரும். அப்போது தீபாவளி புரட்டாசியிலும், ஆயுத பூஜை ஆவணியிலும் வரும். நாம்தான் இந்த வருஷம் எல்லா பண்டிகையும் சீக்கிரம் வருது என்று சொல்லிக்கொண்டிருப்போம். ஆக இந்த குறிப்பிட்ட வைதீகர்களுக்கும் சூரிய மாதத்துக்கும் தொடர்பே இல்லை
2. மாதம்
தமிழில் மாதம் என்பதற்கு கூறப்படும் சொல் திங்கள்.ஆனால் ஆச்சரியகரமாக சூரியனின் மாதமே பயன்படுத்தப்படுகிறது. ஆந்திர, கர்நாடகத்திலும் வட பாரதத்திலும் சந்திர மாதக் கணக்கு வழக்கில் உள்ளது.
3. வடமொழிப் பெயர் ஆண்டுகள்
இந்த பிரபவ, விபவ வருடங்களெல்லாம் வடமொழி, ஆகவே நீக்க வேண்டும் என்று சொல்பவர்கள் ஒன்று தெரிந்து கொள்ளவேண்டும். நம் சித்திரை, வைகாசி எல்லாம் கூட வடமொழிதான். என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா?
ஒரு மாதத்தின் பெயர், அந்த மாதத்தில் பௌர்ணமியுடன் சேரும் நட்சத்திரத்தின் பெயரால் வழங்கப்படும்.
சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தின் பெயர். வைகாசி விசாக நட்சத்திரத்தின் பெயரால் வருகிறது. ஆனி – அனுஷம் – வடமொழியில் அனுஷி – ஆனி. ஆடி – பூராடம் அல்லது உத்திராடம் – வடமொழியில் பூர்வ ஆஷாடம் மற்றும் உத்திர ஆஷாடம் – ஆஷாடிதான் ஆடி. ஆவணி – திருவோணம் – வடமொழியில் ஸ்ராவனம் – ஸ்ராவணி தான் ஆவணி.
புரட்டாசி – பூரட்டாதி அல்லது உத்திரட்டாதி – வடமொழியில் பூர்வ ப்ரோஷ்டபடம் அல்லது உத்திர ப்ரோஷ்டபடம்- ப்ரோஷ்டபடி தான் புரட்டாசி.
ஐப்பசி – அஸ்வினி – வடமொழியில் ஆச்யுவஜி – ஐப்பசி.
கார்த்திகை – கார்த்திகை. மார்கழி – மிருகசீரிடம் – வடமொழியில் மிருகசீர்ஷம் – மிருகசீர்ஷிதான் மார்கழி. தை -புனர்பூசம்/ பூசம் – வடமொழியில் புஷ்யம் என்றும் திஷ்யம் என்றும் வரும். – திஷ்யதில் இருந்து தை. மாசி – மகம் – வடமொழியில் மாக் – மாகிதான் மாசி.
பங்குனி – பூரம் அல்லது உத்திரம் – வட மொழியில் பூர்வ பல்குனி அல்லது உத்திர பல்குனி – பல்குனியில் இருந்து பங்குனி. (1)
சிலர் கேட்கலாம். இந்த முறை மார்கழிப் பௌர்ணமி புனர்பூசத்திலும், பங்குனி பௌர்ணமி சித்திரையிலும் வந்ததே என்று. தற்போது சந்திரமான மாதம் சூரிய மாதத்தைவிட 30 நாட்கள் முன்பு செல்கிறது. .நம் மார்கழியில் சந்திரமான தை. நம் பங்குனியில் சந்திரமான சித்திரை. இதற்குக் காரணம் சந்திர ஆண்டு 360 நாட்களும், சூரிய ஆண்டு துல்லியமாக 365 /366 நாட்களும் கொண்டிருப்பதுதான்.
இந்த வித்தியாசம் தகுந்த இடைவெளியில் அதிக மாதம் என்று ஒரு மாதத்தை சந்திரமான மாதத்தில் சேர்த்து சரி செய்யப்படும்.
நாம் சூரிய மாதங்களுக்கும், சந்திர மாதப் பெயரையே வைத்துள்ளதால் இந்தக் குழப்பம். தை,பங்குனி,கார்த்திகை மாதங்களின் பெயர் எல்லாம் சங்க இலக்கியங்களிலேயே வருகிறது. அவற்றையெல்லாம் இடைச் செருகல் என்று கூற முடியாது.
பிங்கள நிகண்டு அஸ்வினியின் பெயர் ஐப்பசி , பூசத்தின் பெயர் புணர்தை, மகத்தின் பெயர் மாசி, உத்திரத்தின் பெயர் பங்குனி, விசாகத்தின் பெயர் வைகாசி, உதிராடத்தின் பெயர் ஆடி, அவிட்டத்தின் பெயர் ஆவணி ( இங்கேதான் சிறு வேறுபாடு), பூரட்டாதியின் பெயர் புரட்டாசி என்றே குறிப்பிடுகிறது. பிங்கள நிகண்டு 10 ஆம் நூற்றாண்டில் சமண முனிவரால் இயற்றப்பட்டது.
கேரளாவில் சூரிய மாதப் பெயர்களை மேடம், இடபம் என்றே வைத்துவிட்டார்கள்.எனவே குழப்பம் இல்லை.
4. சித்திரை முதல் நாளை வைதீகர்கள்தான் கொண்டு வந்து விட்டார்கள். என்று கூறுபவர்களுக்கும்
4a. ஆங்கிலேயர்களின் ஜனவரி 1 க்கு நெருக்கமாக தமிழ்ப் புத்தாண்டை தை 1 க்கு கொண்டுவரும் ஐரோப்பிய சதி என்று கூறுபவர்களுக்கும்…
இதுவும் சரி இல்லை. தினமும் தீ வழிபாடு செய்யும் அந்தணர்கள் மார்கழி மாதம் பௌர்ணமி அன்று ஆக்ராஹயணி என்று ஒரு சடங்கு செய்வார்கள். அக்ரா என்றால் முதல் என்று அர்த்தம். ஹயணம் என்றால் ஆண்டு என்று அர்த்தம். இதன் பொருள் முதல் மாதம். அதாவது மார்கழிப் பௌர்ணமி கிட்டத்தட்ட ஜனவரி ஒன்றுக்கு அருகில் வரும். கிட்டத் தட்ட வேதத்து வருடப் பிறப்புதான் ஜனவரி ஒன்று. (முத்தீ வழிபாடு சங்க காலத்திலும் இருந்தது).
காஞ்சி மஹா சுவாமி இதை விளக்கமாகக் கூறி நம் புத்தாண்டுதான் அங்கே சென்றுவிட்டது என்று கூறுகிறார் (2)
5. அறுபது வருடங்கள் என்ன கணக்கு?
இந்த 60 ஆண்டுக் கணக்கு தனி மனிதர்கள் வாழ்வில் நிகழும் நிகழ்வுகளைக் கணக்கிடும் ஜ்யோதிட முறைக்குத்தான். சூரியன் 12 ராசிகளைச் சுற்ற 1 ஆண்டும், சந்திரன் 1 மாதமும், செவ்வாய் ஒன்னறை ஆண்டும், குரு 12 ஆண்டும், சனி 30 ஆண்டும் எடுத்துக்கொள்கின்றன. ஒரு மனிதன் பிறந்த 60 ஆண்டுகள் கழித்து அவன் பிறந்த அதே மாதம் (அதாவது சூரியன் அதே ராசியில்), அதே நட்சத்திரத்தில் (அதாவது சந்திரன் அதே ராசியில்) இருக்கும்போது செவ்வாய், சனி,குரு ஆகியவையும் அதே ராசியில் இருக்கும். (வக்கிர அதிச்சர நிலை இல்லாவிடில். வக்கிரம் என்றால் பின்னோக்கிச் செல்வது, அதிச்சாரம் முன்னோக்கிச் செல்வது ).
பெரும்பாலும் புதனும், சுக்கிரனும் கூட சூரியனை ஒட்டியே செல்வார்கள். ஆகவே சரியாக உங்கள் அறுபதாவது பிறந்த நாளில், ராஹு, கேது தவிர்த்த மற்ற ஏழு கிரகங்களும் பெரும்பாலும் அதே ராசியில் இருப்பார்கள். இதுதான் தனி மனிதனின் அறுபது ஆண்டுக் கணக்கு.
இது முக்கியமாக ஜாதகக் கணக்குகளுக்குதான். அதுவும் திருமணங்கள் பல்வேறு அரச குடும்பக்களுக்கு இடையில் நடக்கையில், அல்லது ஒரு அரசன் பெரும் நிலப்பகுதியை ஆளும்போது இந்தப் பொதுக்கணக்கு தேவையாய் இருந்தது.
6. இந்த வருடங்கள் எல்லாம் அறுபது வருடக் கணக்கு.தொடர் ஆண்டு வேண்டும் என்று கூறுபவர்களுக்கு… தொடர் ஆண்டுகள் எத்தனை உள்ளன தெரியுமா?
சக ஆண்டு (78 AD) , கலியுக ஆண்டு ( 3101 BC, அதாவது கலியுகம் தொடங்கிய முதல்), கேரளத்தில் கொல்லம் ஆண்டு (825 AD) போன்ற கணக்குகளும் பின்பற்றப்படுகின்றன.
தமிழ் நாட்டிலே என்ன கணக்கு என்று கேட்பவர்களுக்கு…
பூலாங்குறிச்சிக் கல்வெட்டு. சக ஆண்டு முறையில் கிபி 270 ஆம் ஆண்டுக் கல்வெட்டு. ஆக சங்ககாலத்தின் இறுதியிலேயே சக ஆண்டு முறை இருந்திருக்கிறது. (3)
மதுரை ஆனைமலைக் கல்வெட்டு கலியுக ஆண்டிலும், அய்யம்பாளையம் கல்வெட்டு சக ஆண்டிலும் குறிக்கப்பட்டுள்ளது. ஆகத் தமிழ் நாடு இந்த இரண்டு தொடர் ஆண்டுகளையும் பின்பற்றி வந்துள்ளது. (4)
ஆகக் கூடி இந்த வைதீகர்கள் சந்திரமான மாதத்தையும், மார்கழிப் புது வருடத்தையும் பின்பற்றுகிறார்கள். தமிழ் மாதங்களின் பெயரும் வடமொழிதான். தமிழர்கள் சக ஆண்டுக் கணக்கையும் சங்க கால இறுதிக் கட்டத்திலேயே பின்பற்றி இருக்கிறார்கள்.
7. மற்றுமொரு கேள்வி: ஆண்டுப் பிறப்புக்கும் ஜோதிடத்துக்கும் என்ன தொடர்பு? அதை ஏன் சோதிடத்துடன் தொடர்புப்படுத்த வேண்டும்?
இதை ஜோதிடக் கணக்கு என்பதை விட வானியல் கணக்கு என்று சொல்வதே சரியாகும். இந்தக் கணக்கை ஜோதிடத்திலும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். உலகம் எங்கும் வானியலும், ஜ்யோதிடமும் பிண்ணிப் பிணைந்தே உள்ளன. உலகெங்கிலும் – இந்திய, அராபிய, பாரசீக, ஐரோப்பிய – நாடுகளில் எல்லாமே பல ஜ்யோதிட அறிஞர்களே வானியல் கண்டுபிடிப்புகளைத் தந்திருக்கிறார்கள்.
8. சரி, ஆனால் ஏன் மேஷத்தைக் கொண்டு தொடங்க வேண்டும்? ஜோதிடர்களே வானியல் அறிஞர்களாகவும் இருந்ததால் இரண்டும் பிணைந்தே உள்ளன.எத்தனை மணிக்கு க்ரஹனம் என்பதை பல ஆண்டுகளுக்கு முன்பே கணக்கிடும் அளவுக்கு திறமை படைத்த நம் அறிஞர்கள் இந்த ஆண்டுக் கணக்கையும் ராசி மண்டலத்தோடு பிணைத்தே வைத்து விட்டார்கள்.
9. அப்ப இந்த தை நீராடல் என்றெல்லாம் வருகிறதே? அப்ப தை முக்கியம் இல்லையா?
இந்த தை நீராடல் வரும் பரிபாடல்தான் ஒரு முக்கியமான தகவலை நமக்கு தருகிறது. அதாவது திருவாதிரையில் சிவனுக்கு விழா எடுக்கையில், சூரியன் பூராட நட்சத்திரத்தில் இருக்கும்போது (அதாவது சூரியன் தனுர் ராசியில் இருக்கும்போது) பெண்கள் அம்பா ஆடல் என்னும் அம்பிகையை வழிபாட்டு தை நீராடல் ஆடுவார்கள். சூரியன் தனுர் ராசியில் இருப்பது சூரிய மாதத்தில் மார்கழி. திருவாதிரை விழா நடப்பதும் மார்கழி. ஆனால் சொல்லப்படுவதோ தை நீராடல். இது மறைமுகமாகக் உணர்த்துவது அப்போது வழக்கத்தில் இருந்தது சந்திரமான மாதம். பரிபாடலின் காலம் ஐந்தாம் நூற்றாண்டு. (5)
அம்பிகையை பாவையர் நீராடி வணங்கும் இதே வழிபாடு ஆண்டாள் காலத்தில் ” மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளாம் – நீராடப் போதுவீர் – ஆக இந்த மாதம் இப்போது மார்கழி ஆகி விட்டது. அதாவது சூரிய மாதம். ஆண்டாள் காலம் ஒன்பதாம் ஆம் நூற்றாண்டு (6)
ஆக இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழ் நாட்டில் சந்திர மாதம் சூரிய மாதமாகி இருக்கிறது.
அப்ப வருட ஆரம்பம் தையா? இல்லை சித்திரையா?
தமிழ் மாதக் கணக்கீட்டு முறை மிகத் துல்லியமாக சூரியனின் சுழற்சியைக் கணக்கிடும் முறை. 12 ராசிகள் மேஷத்தில் இருந்து தொடங்குகிறது. எனவே மேஷமே இந்தக் கணக்கீட்டின் துவக்கம்.
மேஷம்தான் சூரியனின் ராசித் தொடக்கம் என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால்? நக்கீரரின் நெடுநல்வாடை (7)
திண்ணிலை மருப்பின் ஆடுதலை யாக
விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து
முரண்மிகு சிறப்பிற் செல்வனொடு நிலைஇய
உரோகிணி நினைவனள் நோக்கி
திண்ணிய நிலையினையுடைய கொம்பினையுடைய மேடராசிமுதலாக ஏனை இராசிகளிற் சென்று திரியும்,மிக்க செலவினையுடைய ஞாயிற்றோடே மாறுபாடு மிகுந்த தலைமையினையுடைய திங்களோடு2திரியாமனின்ற,உரோகிணியைப் போல யாமும் பிரிவின்றி யிருத்தலைப் பெற்றிலேமேயென்று நினைத்து அவற்றைப் பார்த்து (8)
பிங்கள நிகண்டு ராசியின் பெயர்களை மேடமு மிடபமு மிதுனமுங் கடகமும் சிங்கமும் கன்னியுன் துலாமு தேளும் தனுவும் மகரமும் கும்பமும் மீனும் என்றே வரிசைப்படுத்துகிறது.
கல்வெட்டுகள் நான்கு சூரிய சம்பந்தமான விழாக்களைச் சொல்கின்றன. அயன சங்கராந்தி இரண்டு, சித்திரை – ஐப்பசி விஷு இரண்டு.
ஆக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை விழா. ஆடியும் தையும் முறையே தக்ஷிணாயன – உத்தராயண சங்கராந்திகள். சூரியன் உச்சம் அடைவது மேஷத்தில், அதாவது சித்திரையில். சூரியன் நீச்சம் அடைவது துலாத்தில் – அதாவது ஐப்பசியில். ஆக இந்த நான்கு மாதத் தொடக்கத்திலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எனவே இந்தச் சூரியனைக் கொண்டு கணக்கிடப்படும் மாதக் கணக்கானது தமிழ் நாட்டுக்கே உள்ள ஒரு தனிப்பட்ட கணக்கு என்பதும், சூரியனின் மேஷ ராசிப் பிரவேசமே இதன் தொடக்கம் என்பதும் தெளிவு.
ஆதாரம் :
(1) http://www.kamakoti.org/tamil/Kurall89.htm
(2) http://www.kamakoti.org/tamil/2dk59.htm
(3) http://www.tamilartsacademy.com/articles/article24.xml
(4) http://www.whatisindia.com/inscriptions/south_indian_inscriptions/volume_14/introduction.html
(5) http://www.tamilvu.org/slet/l1250/l1250pag.jsp?bookid=25&auth_pub_id=104&page=127
(6) http://www.tamilartsacademy.com/articles/article08.xml
(7) http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0070.html
(8) http://www.tamilvu.org/library/libindex.htm
0
சங்கரநாராயணன்








April 15th, 2012 at 1:05 am
என்னுடைய கருத்து: தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக ஏற்றுக்கொள்வதில் ஒரு தயக்கம் இருக்கிறது. ஏனெனில் தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்தி எழுதி இருப்பவர்கள் பெரும்பாலும் ஹிந்து மதத்திற்கு எதிரானவர்களாகவும் பெரியாரின் பகுத்தறிவு கொள்கையை
பின்பற்றுவர்களாகவும் இருக்கிறார்கள். அதற்கு அவர்கள் தமிழ் அறிஞர் மாநாட்டை கையாள்கிறார்கள். இல்லையேல் பெரும் சமூகமான இந்து மத மக்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மேலும் தமிழ் புத்தாண்டு கொண்டாடுபவர்கள் இன்றும் கூட இந்து மக்களாகத்தான் இருக்கிறார்கள் என்பது என் அபிப்ராயம். தமிழ் புத்தாண்டு குறித்த கட்டுரையைக் கடந்த ஒரு மாதம் முன்பாக எழுதிள்ளேன். பின்வரும் பிணையை அழுத்தினால், பல தகவல்களைத் தந்துள்ளேன்.
http://lakshmanaperumal.com/2012/02/07/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/
April 15th, 2012 at 11:28 am
கும்பகோணம் மூவர் முதலி முற்றம் என்ற அமைப்பின் சார்பில் சென்னை தி.நகரில் உள்ள சர் பி.டிதியகராய ர் மன்றத்தில் சித்திரை 9 ஆம் நாள் (21 .4 .12 ) காலை 10 .30 மணிக்கு நடைபெறவுள்ள நிகழ்ச்சிக்கு வந்தால் நமது புத்தாண்டு சம்பந்தமான விஷயங்களுக்கு தெளிவு கிடைக்கும்.
April 15th, 2012 at 11:59 am
http://tamil.oneindia.in/news/2012/04/15/tamilnadu-what-about-tiruvalluvar-year-asks-karunanidhi-aid0091.html
மேற்கண்ட உளறலுக்கு ஆதாரபூர்வமான, விளக்கமான பதிலுரை. என்ன செய்யப் போகிறார்கள் பிழைப்புக்காகத் தமிழைக் கையிலெடுக்கும் இவர்கள்?
April 15th, 2012 at 8:13 pm
இதுல திராவிட மாய அறிஞர்கள் செய்யும் இன்னொரு டகால்ட்டியையும் சொல்லணும் ….. தை மாதம் தான் புத்தாண்டுன்னு 5, 6 செய்யுள்ள தை மாதம் பற்றிக் கையாண்டுள்ளதை எடுத்துச்சொல்லி கட்டுரை எல்லாம் எழுதுறாங்க ,,,, என்ன மேட்டருனா … இவிங்க மேற்கோள் காட்டும் (எனக்குத் தெரிஞ்ச )ஒரு குறுந்தொகை செய்யுள்ள தை மாதம்னு வரும் … ஆனா தை மாத குளிர்ந்த தண்ணீரைப்பற்றி எடுத்தாளப்பட்டது … தை புத்தாண்டு என்னும் கருத்தை சொல்லும் செய்யுள் அல்ல … …. இப்பிடி சும்மா பிலாக்கா பண்ணி பாமரத்தமிழனை ஏமாத்துதுங்க இந்த போலிக்கூட்டம் .. அந்த செய்யுள் வரி:
தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட கழக இலக்கியங்களில் காணப் பெறும் சான்றுகள் பின்வருமாறு.
1. “தைஇத் திங்கள் தண்கயம் படியும்” (நற்றிணை)
2. “தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” (குறுந்தொகை)
3. “தைஇத் திங்கள் தண்கயம் போல்” (புறநானூறு)
4. “தைஇத் திங்கள் தண்கயம் போல” (அய்ங்குறுநூறு)
இதுல “தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்னும் பாடலைப் பார்ப்போம்.
196. மருதம் – தோழி கூற்று
வேம்பின் பைங்காயென் தோழி தரினே
தேம்பூங் கட்டி என்றனிர் இனியே
பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்
வெய்ய உவர்க்கும் என்றனிர்
ஐய அற்றால் அன்பின் பாலே.
-மிளைக் கந்தனார்.
இதோட விளக்கம் என்னன்னா …. காதலியைப் பிரிந்த தலைவனுக்கு தோழி இனிமையா, ஜில்லுன்னு தண்ணி தராங்க … அவனோ குடிச்சிட்டு … சூடா சப்புன்னு இருக்குன்னான் … உடனே தோழி சொல்றா … என்னோட தோழி, அதாவது உன்னோட லவ்வர் வேப்பங்காயக் குடுத்தா கூட வெல்லக்கட்டியா இனிக்குதுன்னு சொல்லுவ …. இன்னைக்கு பாரி மன்னனின் பறம்புமலையில், அதுவும் குளிரடிக்கற தை மாசம், பனியாய் சில்லுன்னு டேஸ்ட்டா இருக்குற சுனை நீரைக் குடுத்தா … சுடுது, சப்புனு இருக்குங்கற …. ங்கொய்யால …காதலியின் அன்பும் பிரிவினாலும்தானேன்னு கேக்கறா …….
திராவிடமாயை வெளக்கெண்னைகளா …. இதுல தை மாதம்தான் புத்தாண்டுன்னு எங்கிட்டுடா வருது ???
April 15th, 2012 at 10:37 pm
வணக்கம் திரு சங்கரநாராயணன்:)
இக்கட்டுரையை நீங்கள் அணுகிய விதமே சற்றுப் பிழைபட உள்ளது! மன்னிக்கவும்:)
கருணாநிதி கொண்டு வந்தார் தை-01 என்பதே தவறு!
அவர், தன் சுய லாபத்துக்கு எதையும் செய்ய வல்லவர்!
பல ஆண்டுகளாக இருந்த தமிழறிஞர்களின் கருத்தை, அவர் திடீரென்று சட்டமாக்கினார்! அவ்ளோ தான்!
சட்டமாக்கி விட்டதாலேயே, மக்கள் மாற்றிக் கொண்டாடிவிடப் போவதில்லை! இதற்கு மக்களின் புரிதலை மேம்படுத்த வேண்டும்! ஒரு நல்ல தலைவர் அதையே செய்வார்!
இதை அரசியல் வாயிலாக அணுகுவதால் தான் இத்தனை புரிதற் பிழைகள்!
அரசியல் கடந்து, தமிழ் வழியாக மட்டும் நோக்கினால்….சில தெளிவுகள் கிடைக்கும்!
இதோ: http://madhavipanthal.blogspot.com/2012/04/tamilnewyear.html
April 15th, 2012 at 11:14 pm
உங்கள் கட்டுரையில் உள்ள முரண்களை மட்டும் சுட்டிக் காட்ட விழைகிறேன்! தவறாகக் கொள்ள வேண்டாம்! கருத்துப் பரிமாற்றம் மட்டுமே!
1. முதற்கண்…..இந்த விஷயத்தில் உங்கள் “சோதிட/ சாஸ்திர ரீதியான” அணுகுமுறை:
//சில சமயம், மாலை 5 மணிக்குக் கூட மாதம் பிறக்கலாம். அன்று பொங்கல் பானை 5 மணிக்குதான் ஏற்றுவார்கள்//
இப்படி சோதிடக் காலம், பஞ்சாங்கம், மாசப் பிறப்பு ஆயிடுத்தா? -ன்னு பார்த்து எல்லாம் கிராம மக்கள் பொங்கல் பானை ஏற்றுவதில்லை!
இதெல்லாம் ஒரு குறிப்பிட்ட சமூகம் (அ) பட்டினத்தில் வாழும் சில வகுப்பினர் மட்டுமே!
2. //முதலில் தமிழ் மாதக் கணக்கீடு எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதைப் பார்ப்போம். சூரியன் ஒரு ராசியில் இருக்கும் நாள்கள் எல்லாம் ஒரு மாதம் என்று கொள்ளப்படுகிறது//
இதற்கான ஆதாரம் என்ன?
தமிழ் நூல்களைக் காட்டுங்கள்! பஞ்சாங்கத்தையோ, சாத்திர நூல்களையோ அல்ல!
“தமிழ்” மாதம் என்றால் என்ன? அடைமொழியான “தமிழ்” இங்கே எதைக் குறிக்கிறது?
பண்டைத் தமிழ் வாழ்வியலையா? அல்லது….தமிழ் நாட்டில் வாழும் இந்து மக்கள் இன்று பஞ்சாங்கம் என்று கொள்வதைக் குறிக்கிறதா?
3. //தமிழில் மாதம் என்பதற்கு கூறப்படும் சொல் திங்கள்.ஆனால் ஆச்சரியகரமாக சூரியனின் மாதமே பயன்படுத்தப்படுகிறது//
ஏன் இந்த “ஆச்சரியம்” என்று ஆய்வு செய்தீர்களா?
ஏன் கதிரவன் அடிப்படையில் வானியலை ஆய்ந்தவர்கள், “திங்கள்” என்று மட்டும் பெயர் சூட்டினார்கள்? விடை உண்டா?
4. //நம் சித்திரை, வைகாசி எல்லாம் கூட வடமொழிதான். என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா?//
மார்கழி என்று வருகிறது! “ழ” இருக்கு! மார்கழி வடமொழியா?? (மிருகக்ஷீரிசம் தான் அப்படித் திரிந்தது ன்னு கப்சா அடிக்கக் கூடாது, சொல்லிட்டேன்:))
புறத்தோயை மாதம் = புரட்டாசி என்று உருமாறி விட்டால், அது வடமொழி ஆகி விடுமா?
நிலவு ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு தோற்றத்தில் திகழ்கிறது! = திகழி! திகழி -> திகதி என்று ஆகியது!
இன்றும் ஈழ மக்கள் திகதி என்றே குறிப்பிடுகிறார்கள்!
இந்தத் திகழி/திகதி -> வடமொழியில் திதி!
சில நேரங்களில், தமிழ்ப் பெயரும், வடமொழிப் பெயரும் ஒரே சாயல் கொண்டிருக்கும்! உடனே அந்தப் பெயரெல்லாம் “சம்ஸ்கிருதப் பெயர்கள்” என்று மேம்போக்காக முடிவு கட்டி விடாதீர்கள்!
—————————
தமிழ்க் கணித வானியலின் படியும், திங்கள் – கதிரவன் என இரண்டு வகைக் காலக் கணிப்புகளும் உண்டு!
அதன்படி…..
கதிர் வழி மாதங்கள்
= மேழம், விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை, சுறவம், கும்பம், மீனம்
மதி வழி மாதங்கள்
= தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி (வைகும் ஆசி=வைகாசி), ஆனி, ஆடி, ஆவணி(ஆகும் அணி=ஆவணி), புரட்டாசி (புறத்தோயை), ஐப்பசி, கார்த்திகை, மார்கழி
சும்மா….
பால்குனி தான் பங்குனி ஆச்சு
உத்திராடம் தான் ஆடி ஆச்சு…..
ன்னு சம்பந்தமே இல்லாத ஒலிப்புகளை, வலிந்து திணிக்காதீர்கள்!
ஆகஸ்ட் தான் ஆடி ஆச்சு-ன்னு கூடச் சொல்லலாம் போல இருக்கே!:))) அடக் கொடுமையே! இதுவா ஆய்வு?:(
April 15th, 2012 at 11:22 pm
//அந்தணர்கள் ஆக்ராஹயணி என்று ஒரு சடங்கு செய்வார்கள்.
ஜனவரி ஒன்றுக்கு அருகில் வரும்
காஞ்சி மஹா சுவாமி இதை விளக்கமாகக் கூறி நம் புத்தாண்டுதான் அங்கே சென்றுவிட்டது என்று கூறுகிறார்//
சூப்பர்!
இது ஒன்றே போதும்…..நீங்கள் “எங்கிருந்து” இந்தக் கட்டுரையை அணுகி இருக்கிறீர்கள் என்று அறிய!
தவறில்லை!
ஆனால், அதை வேதப் புத்தாண்டு-ன்னு சொல்லுங்கள்!
“தமிழ்” என்று ஒட்ட வைத்து, ஒட்டுமொத்தமாக, “தமிழ்ப்” புத்தாண்டு என்று திணிக்காதீர்கள்….என்றே வேண்டுவது!
மதம் மதமாக இருக்கட்டும்!
மொழி மொழியாக இருக்கட்டும்!
பொதுவான மொழியின் மேல், ஒரு மதத்தின் குறியீட்டை ஏற்றிட வேண்டாம்!
வேதப் புத்தாண்டு வாழ்த்துக்கள்:) (அ) நந்தன வருஷ வாழ்த்துக்கள்!:))
April 15th, 2012 at 11:45 pm
//பூலாங்குறிச்சிக் கல்வெட்டு. சங்ககாலத்தின் இறுதியிலேயே சக ஆண்டு முறை இருந்திருக்கிறது//
பூலாங்குறிச்சி, பூலான்தேவி ன்னு பயமுறுத்தாதீக:))
அந்தக் கல்வெட்டில் என்ன வாசகம் இருக்கோ, அதை அப்படியே இங்கே தர முடியுமா?
சும்மா, கல்வெட்டு இருக்கு, கல்வெட்டு இருக்கு ன்னு பயமுறுத்துவதே இப்பல்லாம் பேஷனாகப் போய்விட்டது:))
பூலாங்குறிச்சிக் கல்வெட்டு = புதுக்கோட்டை பொன்னமராவதி பக்கம்! approx 442 CE!
கோச்சேந்தன் கூற்றன் என்ற மன்னன் வெட்டிக் கொண்டது! அந்தக் காலம் காரைக்கால் அம்மையார், முதலாழ்வார்கள் காலமும் கூட!
So, அப்போது பண்பாட்டுக் கலப்புகள் எல்லாம் நடைபெற்று விட்டன!
“ஸ்ரீ”மாறன் “ஸ்ரீ”வல்லபன் ன்னு கூடத் தான் கல்வெட்டு இருக்கு! உடனே அது பண்டைத் தமிழ்ச் சாசனம் ஆகி விடுமா?
சங்கப் பாடல்களிலேயே, பிற்சங்கம், கடைச் சங்கப் பாடல்களில், பரிபாடலில்….வடமொழிக் கலப்பு சற்றே உள்ளது! அதனால், அதுவே அசைக்க முடியாத தரவு என்று ஆகி விடுமா?
உங்களால் கலித்தொகை, நற்றிணையில் இருந்து காட்ட முடியுமா? அல்லது தொல்காப்பியத்தில் இருந்து????
//தமிழ் மாதங்களின் பெயரும் வடமொழிதான்.//
மிகவும் தவறான, ஒரு தலைப் பட்சமான தகவல்!
ஸ்ரீ காஞ்சி ஆசார்யர் சொன்ன தகவல் என்று வேண்டுமானால் சொல்லுங்கள்!
April 16th, 2012 at 12:45 am
//தை நீராடல் வரும் பரிபாடல்தான் ஒரு முக்கியமான தகவலை நமக்கு தருகிறது.
அதாவது திருவாதிரையில் சிவனுக்கு விழா எடுக்கையில், சூரியன் பூராட நட்சத்திரத்தில் இருக்கும்போது//
உம்ம்ம்ம்ம்ம்….
அப்புறம்???
பூராட நட்சத்திரம், வேறு என்னென்ன நட்சத்திரம் எல்லாம் சொல்லப் போறீக?:)
இது நல்லந்துவனார் எழுதிய பரிபாடல் – 11 ஆம் பாடல்!
இதுக்கு பரிமேலழகர் என்ன உரை செய்து இருக்கார்-ன்னு படிக்கறீங்களா?
//(பரிமே.) 76. திருவாதிரை நிறைமதி நாளாங்கால் ஆதித்தன்
*பூத்தடத்தின்கண் (பூத்தடம்-புனர்பூசம்) நிற்குமாதலின் அதனையுடைய
மார்கழிமாதம் குளம் எனப்பட்டது.
//
இப்போ சொல்லுங்க…
))
புனர்பூசமா?
பூராடமா??
மார்கழி மாசத்தை = “குளம்” ன்னு பேரிட்டுக் குறிப்பாச் சொன்னாங்களாம்!
அடப் பாவிங்களா! ஒரு சாதாரண பூத்தடம் நிரம்பிய குளம்!
* பூத்தடம் = புனர்பூசம்
* குளம் = மார்கழி
ன்னு டைப் டைப்பாக் கதை கட்டி….பரிமேலழகர் என்னும் உரையாசிரியர், எப்படியெல்லாம் பாட்டில் திணிக்கிறார் என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம்!
பரிமேலழகர் நல்ல உரை ஆசிரியர் தான்!
ஆனால் அவர் வலிந்து ஏற்றும் bias தான், பலரைத் திருக்குறளுக்கு அவர் உரையைத் தொடாமல் செய்கிறது!
படிச்சவன் பாட்டைக் கெடுத்தான், எழுதனவன் ஏட்டைக் கெடுத்தான் என்ற பழமொழிக்கு இது ஒரு சரியான எடுத்துக்காட்டு:(((
—————
//அதாவது சூரிய மாதம். ஆண்டாள் காலம் ஒன்பதாம் ஆம் நூற்றாண்டு (6)
ஆக இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழ் நாட்டில் சந்திர மாதம் சூரிய மாதமாகி இருக்கிறது//
சூப்பர் கண்டு பிடிப்பு!:)
ஆனா, இன்னொன்னை மறந்துட்டீங்களே!
இதே ஆண்டாள், மார்கழி மாசம் = மார்கழி நீராடலைப் பாடியவள்…..
அடுத்து தைந் நீராடலையும் பாடுறாளே!
தையொரு திங்களும் தரை விளக்கி என்பது நாச்சியார் திருமொழி! திருப்பாவைக்கு அடுத்து வருவது!
மார்கழி நீராடல், தைந் நீராடல் = இரண்டுமே சங்கத் தமிழில் உண்டு தான்!
முன்பனிக் காலத்தின் இரண்டு மாதங்களிலும், புது வெள்ளத்தில் நீராடும் பழக்கம்!
————–
April 16th, 2012 at 12:54 am
அம்பா ஆடல்
“அம்பா” ன்னா “அம்பாள்” ன்னு பொருள் எடுத்துக்கிட்டு…இஷ்டத்துக்கும் சொல்லும் வழக்கம் என்று தான் ஒழியுமோ?:(
“அம்பா” என்பது ஒரு சாரார் வழக்கு! அதைச் சங்கத் தமிழில் வச்சி….இப்படியா அடிப்பது?
இறைவியை = அம்பா ன்னு சங்க இலக்கியம் வேறு எங்காவது குறிக்கிறதா? இல்லையே!
)
கொற்றவை ன்னு வேணும் ன்னாச் சொல்லுங்க! ஆனா இலக்கியத்தில் “அம்பா” வந்தாளா?
அதே போல் அம்பா என்னும் சொல் வேற எங்காச்சும் வந்தாக் கூட பரவாயில்லை! அதுவும் இல்லை! எப்படி அம்பா வந்தா?:)
இறைவியைப் (காத்யாயினி) பாவையாகச் செய்து வழிபடும் வழக்கம் = பின்னாள் வழக்கம்!
ஆனால் அம்+பா+ஆடல் = அழகிய பரப்பில் ஆடுதல்!
பா = பாவுதல் = பரவுதல்!
நீரில் பரவுதல் = அம் பா ஆடல்!
http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.8:1:4314.tamillex
பா = தூய்மை/அழகு!
http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.8:1:4316.tamillex
புதுப் புனலில், தூய்மையாக வரும் வெள்ளத்தில், நீர்ப் பரப்பில் படிவது = அம் பா ஆடல்!
நீங்க சொல்லும் பரிபாடலே, அப்படித் தான் காட்டுது! வைகை என்னும் ஆற்றை!
//வையையே இங்ஙனம் காரிற் கலங்கி
வேனிலிற் றெளிந்து நின்நிலைமை எப்பொழுதும்
ஒருபடித்தாயிருப்பதில்லை.’
இப்பொழுது அங்ஙனம் நிமிர்ந்து வராமல் தைந்நீரே யாம்
ஆடத்தகுந்த அளவின் தெளிந்து வருகின்றனை//
—————–
ஒரு பாடலை உங்க இஷ்டத்துக்கு வளைக்கக் கூடாது-ங்க!
இந்தப் பரிபாடல், சமயக் கலப்புகள் நிகழ்ந்த காலகட்டத்தில் எழுந்த பாடல் தான்! மறுக்கவில்லை! அதனால் தான், அந்தணர் செய்யும் வேள்வித் தீக்கு அருகே சென்று, சில பெண்கள், தங்கள் குளித்த குளிரைப் போக்கிக் கொள்கிறார்கள்-ன்னு எல்லாம் வருது!
ஆனா, அதை மட்டும் காட்டாமல், வைகை ஆற்றங் கரையில் எல்லாத் தரப்பு மக்களும் எப்படி ஆடினார்கள் என்பதையும் படம் பிடித்துக் காட்டுகிறது!
நீங்க என்னமோ, ஒரு பகுதியை மட்டும் வெட்டி, இதோ பூராடம் நட்சத்திரம் பாருங்கோ ன்னு சொல்றீங்க! ஆனா பரிமேலழகர் புனர்பூசம் ங்கிறாரு! எது சரி???
————–
இவ்வளவு விளக்கம் நான் சொல்ல வேண்டி இருக்கு!
)))
ஆனா, ஏதுமறியா அப்பாவி வாசகர்கள்….நீங்க ஏதோ பரிபாடல் வரிகள் ன்னு சொன்ன உடனேயே….ஏதோ பெரிய மேட்டர் சொல்றாரு-ப்பா, உண்மையாத் தான் இருக்கணும் ன்னு நினைச்சிப் போயிருவாங்க
இது தவறான போக்கு!
இனி, மூலப் பாடலையும், அதற்குண்டான உரையாசிரியரின் மூல விளக்கத்தையும் வைத்தே உரையாடுங்கள்!
April 16th, 2012 at 12:59 am
//நக்கீரரின் நெடுநல்வாடை (7)
திண்ணிலை மருப்பின் ஆடுதலை யாக//
நக்கீரர் = ஆடு தலை = மேஷமே முதல் ன்னு தான் சொல்றாரு! ஒத்துக்கறேன்!
ஆனா எதுக்கு முதல்?
ஆண்டுக்கு முதல் ன்னா சொல்றாரு?
இல்லை!
ராசி மண்டலத்துக்கு முதல் ன்னு சொல்றாரு!
அடங் கொப்புரானே! இது எனக்கே தெரியுமே! பல வாசகர்களுக்கும் தெரியுமே!
எந்தப் பத்திரிகையைப் புரட்டினாலும், ராசி பலன், ஆடு-மேஷம் தான் முதல் படம்:)))
ஆடுதலை யாக…..வீங்குசெலல் மண்டிலத்து….
= ராசி மண்டலத்துக்கு தான் முதல்
= ஆண்டுக்கு முதல்-ன்னு சொல்லல!
மேற்கோள்களை உங்க இஷ்டத்துக்கு வளைக்காதீர்கள்! மன்னிக்க:)
April 16th, 2012 at 1:07 am
// சூரியனின் மேஷ ராசிப் பிரவேசமே இதன் தொடக்கம் என்பதும் தெளிவு//
ஒரு தெளிவும் இல்ல!
மேஷ ராசிப் பிரவேசம் தான் “ஆண்டின் துவக்கம்” என்பதற்கு நேரடியா ஒரு வரியைக் காட்டுங்க பார்ப்போம்!
————–
கருணாநிதி சம்பாதிச்சி வச்சிருக்கும் வெறுப்பின் மேல் கப்பல் ஓட்டப் பாக்குறாங்க சில பேரு!
ஆனா தை-01 கருணாநிதிக்கும் முன்பே, ஈழத்தில் நடைமுறைக்கு வந்து விட்டது!
(யாழ்ப்பாணத்தில் புலிகள் கோலோச்சிய காலத்தில்)
இதுக்கும், கருணாநிதிக்கும், புலிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை!
இது தமிழறிஞர்கள் செய்து வைத்த ஒரு முறைமை – ஒழுங்கு!
—————–
1. தமிழ்ப் புத்தாண்டு நாள் = பண்டை இலக்கியங்களில் கிடையாது! Itz a latter day practice!
2. சித்திரை / ருத்ரோத்காரி வருஷம் etc = மதம் மூலமாகத் “தமிழ்ப்” புத்தாண்டு எனப் புகுத்திப் பரவியது!
3. தமிழறிஞர்கள் சொல்வது என்ன-ன்னா: தமிழின் அடையாளம் தமிழ் மூலமா இருக்கட்டும், மதம் மூலமா வேணாம்! – (தமிழ் = அனைத்து சமயங்களுக்கும் பொதுவானது!)
Tamizh aRignars devised a Notation for Tamizh, in this context…
* Year = Use ‘வள்ளுவர் ஆண்டு’ as Tamizh Numbering Sequence!
* Month = Use ‘தை’, which is the most famous month in tamizh literature!
This is only for tamizh related standards; For General life = Common Era (CE) applies for all, world over!
You can still celebrate ருத்ரோத்காரி வருஷம் etc & do poojas at home!
But pl DONT brand it as a “Tamizh” Year!
You are free to call it Hindu Year, Nandana or whatever! Dot!
April 16th, 2012 at 9:48 am
Why this Kolavery.I am 64 years old and celebrating last 64 years the Tamil new year on chithirai Ist and also celebrating pongal on Ist Thai madham.The main purpose is we are worshiping the almighty on both the days.The politician always play the game to divert the attention of the Public
to hide their mistakes.I am having good respect to my elders and as per their directions I am celebrating Chithirai as Tamil new year.If the politicians and their followers celebrate any day as they like as Tamil new year,who is bothered about it.Hence I request you all don’t waste your time in this matter
sukumar.k
April 16th, 2012 at 1:34 pm
திரு.கண்ணபிரான் அவர்களே……
// பொதுவான மொழியின் மேல், ஒரு மதத்தின் குறியீட்டை ஏற்றிட வேண்டாம்!//
இதெல்லாம் கேக்கறதுக்கு நல்லாத்தான் இருக்கும்….ஆனால் உண்மையில் நடப்பது என்ன? தமிழ்ப்பண்பாட்டை அனுசரிப்பதும், பின்பற்றுவதும் ஹிந்துக்கள் மட்டுமே…..கிறித்தவர்கள் பின்பற்றுவது ஐரோப்பியப்பண்பாடு……இஸ்லாமியர்கள் பின்பற்றுவது அராபிய பண்பாடு…..
தமிழ் புத்தாண்டை கொண்டாடுபவர்கள் ஹிந்துக்கள் மட்டுமே…… தமிழர்களாகவே இருந்தாலும் இஸ்லாமியர்களோ, கிறித்தவர்களோ தமிழ்ப்புத்தாண்டை கொண்டாடுவதில்லை….ஒரு மத பழக்க வழக்கத்தை மொழியோடு போட்டு குழப்பிக்கொள்பவர்கள் நாத்திகர்கள்தான்….[அதுவும் ஹிந்துக்கள் விஷயத்தில் மட்டும்தான்.....]
ஒருவரது மத நம்பிக்கையில் தலையிடுவதோ , இழிவு செய்வதோ , இந்திய அரசியல் சட்டப்படி குற்றம்….. நம்மை அடிமைப்படுத்திய வெள்ளையன் கூட செய்ய துணியாத விஷயத்தை ,அவன் காலை கழுவிக்குடித்தவர்கள் இன்று செய்யத்துணிகிறார்கள்…..அதையும் நியாயப்படுத்த [ஒரு]சில பேர்…… கடவுள்தான் நம்மை காப்பாற்ற வேண்டும்……..
April 16th, 2012 at 2:33 pm
திரு.சங்கர நாராணயன் அவர்களே வணக்கம். தமிழர்கள் பாரம்பரியத்தையும் மரபையும் மறந்து (மறக்கடிக்கப்பட்டு)வெகுஆண்டுகளாகிவிட்டன. ஆதலால் எல்லாமாதமுமே தமிழ்ப்புத்தாண்டின் தொடக்கங்கள்தான். நான் ஐப்பசியில் பிறந்தேன் என்பதற்காக நான் ஐப்பசியில் தமிழ்ப்புத்தாண்டினைக் கொண்டாட முடியாது. அம்மா ஆட்சியில் தை முதல்நாளைத் தமிழ்ப்புத்தாண்டாகக் கொண்டாடிய, கொண்டாட வற்புறுத்திய பல தி.மு.க.வினர் கைதுசெய்யப்பட்டனர். அம்மா ஆட்சியில் சித்திரையிலும் அய்யா ஆட்சியில் தையிலும் கேப்டன் ஆட்சிவந்தால் ஆனியிலோ ஆடியிலோ அல்லது இனி வேறு எக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அக்கட்சியின் தலைவர், தலைவியின் பிறந்த மாதம் எதுவோ அதையே தமிழ்ப்புத்தாண்டாகக் கொண்டாட வேண்டிய நிலையில்தான் தமிழகத் தமிழ்மக்கள் உள்ளனர். ஆதலால் ஆராய்ச்சியை விட்டுவிட்டு ஆகவேண்டியதைப் பார்ப்போம்.
முனைவர் ப. சரவணன்
April 16th, 2012 at 4:08 pm
i fully agree with what my elders have preached and i want to practice the same “chitharai is beginning of hindu tamil new year”
April 16th, 2012 at 11:55 pm
தமிழறிஞர்கள் தைதான் புத்தாண்டு என்று முடிவு செய்தது எப்போது? அதை ”களைஞர்” நடைமுறைப்படுத்தியது எப்போது? ஏன் இத்தனை ஆண்டு கால இடைவெளி? தை தான் புத்தாண்டு என அத்தனை ஆண்டுகாலம் (ஆட்சியில் இருந்தும்) ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார்களா?
சரி, வள்ளுவர் கிமு. 31ல் தான் பிறந்தார்/வாழ்ந்தார் என்பதற்கு என்ன ஆதாரம்? சங்கம் மருவிய காலத்து இலக்கிய நூல் என்றல்லவா அதே வள்ளுவத்தைத் தமிழறிஞர்கள் சொல்கிறார்கள்!! அது சங்க காலத்துக்கும் வெகுவாகப் பிற்பட்டதாயிற்றே!
இந்துப் புத்தாண்டு என்றால் இதனை இந்தியா முழுதும் அதே தேதியில் கொண்டாட வேண்டுமே? கொண்டாடுகிறார்களா?
// மேழம், விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை, சுறவம், கும்பம், மீனம்//
எந்த இலக்கியத்தில் மேற்கண்டவை சித்திரை, வைகாசிக்கு பதிலாகக் குறிப்பிடப்பட்டுள்ளன? எந்தத் தமிழன் நடைமுறை வாழ்க்கையில் இதனைச் சொல்கிறான்? பேச்சு மொழியில் பயன்படுத்துகிறான். எத்தனை பேருக்கு இது பற்றித் தெரியும்?
//மேஷ ராசிப் பிரவேசம் தான் “ஆண்டின் துவக்கம்” என்பதற்கு நேரடியா ஒரு வரியைக் காட்டுங்க பார்ப்போம்!//
மேஷ ராசிப் பிரவேசம் “ஆண்டின் துவக்கம்” இல்லை என்பதற்கு நேரடியா ஒரு வரியைக் காட்டுங்களேன் பார்ப்போம்!
நீங்க அப்படிச் சொன்னா, நாங்க இப்படிக் கேட்க முடியும் சார். ரொம்பத் தொங்காதீங்க…
இந்தியாவில் பிறந்து வாழும் தமிழன் இந்து இல்லையா?
”இந்து” என்றால் ”பார்ப்பனன்” என்று எந்த மடையன் சொன்னது?
தமிழில் பெயர் இல்லை என்றால் அது தமிழ் ஆண்டு கிடையாதாமா?
சம்ஸ்கிருதம், தமிழ் இரண்டுமே பிராகிருதத்திலிருந்து வந்தவையாயிற்றே!! அப்படியிருக்க ஏன் இந்தக் கூப்பாடு?
//தமிழ் = அனைத்து சமயங்களுக்கும் பொதுவானது//
அப்படிங்களா? எப்படி சார் சொல்றீங்க. சிங்களத்துக்கு, சீனத்துக்கு, சீக்கியத்துக்கெல்லாம் தமிழ் பொதுவானதா?
உங்க வீட்டுல சின்னப் பசங்க இருந்தா கேளுங்க தமிழ் மாதங்கள் பெயரை. சித்திரை, வைகாசின்னு தான் சொல்லுமே தவிர தை, மாசி, பங்குனின்னோ, இல்லை, மேழம், விடை, ஆடவை, கடகம்னோ சொல்லாது.
தையில் தான் புத்தாண்டு கொண்டாட வேண்டும் என்று கூற சிலருக்கு கருத்துரிமை இருப்பது போலவே(அவர்கள்தான் கொண்டாட வேண்டும், பாவம்) சித்திரைதான் தமிழ்ப் புத்தாண்டு என்று கூறவும் ஒருவருக்கு உரிமை இருக்கிறது. பாட்டன், முப்பாட்டன் காலம் முதல் சித்திரையில்தான் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.அதை மாற்ற யாருக்கும் உரிமையில்லை. மாற்றவும் முடியாது.
//தமிழ்ப் புத்தாண்டு நாள் = பண்டை இலக்கியங்களில் கிடையாது!//
பண்டைய இலக்கியங்கள் முழுமையும் நமக்குக் கிடைத்து விட்டனவா என்ன? அல்லது அப்படிக் கிடைத்தவை முழுமையும் ”ஐயா” அவர்கள் படித்து முடித்து விட்டாரா? எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாக ”கண்ணபிரான் இரவிசங்கர்” பேசுகிறார். பாவம்
April 17th, 2012 at 11:57 am
ரவி,
அருமையான விளக்கங்கள்…
சங்கர் மாமாவுக்கு நல்ல பதில்கள் அளித்திருக்கிறீர்கள்..
சுரேஷ் மாமா,
தமிழும் சமத்கிருதமும் பிராகிருத மொழியில் இருந்து வந்ததா? பேஷ் பேஷ் ரொம்ப் நன்னாயிருக்கு போங்கோ..
ரவி எழுதியிருக்கும் பல பதிவுகளைப் படிச்சுட்டு வந்து இந்த புத்திக்கும்மிகளை அடிங்கோ..
April 17th, 2012 at 12:26 pm
——-
கருணாநிதி கொண்டு வந்தார் தை-01 என்பதே தவறு!
அவர், தன் சுய லாபத்துக்கு எதையும் செய்ய வல்லவர்!
பல ஆண்டுகளாக இருந்த தமிழறிஞர்களின் கருத்தை, அவர் திடீரென்று சட்டமாக்கினார்! அவ்ளோ தான்!
—–
திரு ரவிசங்கர், தைப்புத்தாண்டு என்பது தமிழறிஞர்களின் குழு நிறைவேற்றிய தீர்மானப்படி என்றெல்லாம் பலமுறை பலபேர் புருடா விட்டுள்ளனர். ஆனால் தீர்மானம் எப்போது நிறைவேற்றப்பட்டது அதன் நகல் அது பற்றியெல்லாம் கேட்டால் பதிலே கிடையாது. வரலாறு இணையதளம் கூட அத்தீர்மானத்தை தற்சமயம் வரை அகழ்வாராய்ச்சியே செய்து வருவதாகத்தான் தெரிகிறது.
———
பரிமேலழகர் நல்ல உரை ஆசிரியர் தான்!
ஆனால் அவர் வலிந்து ஏற்றும் bias தான், பலரைத் திருக்குறளுக்கு அவர் உரையைத் தொடாமல் செய்கிறது!
படிச்சவன் பாட்டைக் கெடுத்தான், எழுதனவன் ஏட்டைக் கெடுத்தான் என்ற பழமொழிக்கு இது ஒரு சரியான எடுத்துக்காட்டு:((
—-
திரு கண்ணபிரான் ரவிசங்கர், தங்கள் எழுத்துக்களை மிக விரும்பிப்படிப்பவன் நான். தங்களளவு எமக்கு தமிழறிவு இல்லாவிடினும் பரிமேலழகர் தங்களை விட அதிகம் தமிழ் தெரிந்தவர் என்பது என் தாழ்வான கருத்து. உரையெழுதிய பரிமேலழகர் ஏட்டைகெடுத்தவர் என்று சொல்லும் அளவுக்கு அவரை விட தங்கள் தமிழறிவு மேம்பட்டது போலும். சபாஷ். பரிமேலழகர் தற்குறிப்பேற்றுபவர் என்றால் தங்கள் கருத்துப்படி மலே மலே மறமலே தான் மெய்யறிஞர் இல்லையா? புரிகிறது.
—–
—-
பண்டைத் தமிழ் வாழ்வியலையா? அல்லது….தமிழ் நாட்டில் வாழும் இந்து மக்கள் இன்று பஞ்சாங்கம் என்று கொள்வதைக் குறிக்கிறதா?
—–
சுத்தம். தமிழகத்தில் சங்க காலத்தில் இசுலாமியர் கிறித்தவர் என்றெல்லாம் இருந்தத்திலை என்பது ரவிசங்கர் அறியாததா. நாட்கள் மாதம் கணிக்கும் முறை உலகம் முழுதும் உண்டு. இசுலாமியர் உட்பட. பஞ்சாங்கம் என்று தற்குறிப்பேற்றி அதை இந்துக்களுடையது என்று திணித்து மிக சாதுரியத்துடன் அது தமிழன் சம்பந்தப்படாதது என்ற கருத்தை தாங்கள் வலிந்து சொருகுவது சிரிப்புத் தான் வருகிறது. ஏன் இந்தக் கொலவெறி.
பண்டைத்தமிழன் வாழ்வியலில் கணக்கு வழக்கின்றித் தான் மாதங்கள் கணிக்கப்பட்டதா. பஞ்சாங்கம் என்ற சொல் வேண்டாமே. பண்டைத் தமிழன் என்ன வானவியல் அறியாத டுபுக்கா? ஞாயிறையோ திங்களையோ அடிப்படையாக வைத்து மாதங்களை கணித்துத் தானே இருப்பார்கள். தமிழன் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் இந்துவாக இருக்கக்கூடாது அவ்வளவு தானே தங்கள் ஆதங்கம்.
// சூரியனின் மேஷ ராசிப் பிரவேசமே இதன் தொடக்கம் என்பதும் தெளிவு//
ஒரு தெளிவும் இல்ல!
மேஷ ராசிப் பிரவேசம் தான் “ஆண்டின் துவக்கம்” என்பதற்கு நேரடியா ஒரு வரியைக் காட்டுங்க பார்ப்போம்!
——-
ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்பது போல் இங்கு உதார் விட்டுக்கொண்டு இருக்கிறீர்கள் என்றே தோன்றுகிறது.
தாங்கள் மெய்யாலுமே அறிவு சார்ந்த விவாதத்திற்கு இசைபவர் என்பது என் புரிதல். தாங்கள் தமிழை ஆதாரமாக வைத்து சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு பற்றி விவாதிக்க வேண்டிய களம்
http://thamizhan-thiravidana.blogspot.in/2012/04/blog-post.html
தாங்கள் மேற்கண்ட தளத்தில் விவாதித்தால் எங்களைப்போன்று சொற்பத்தமிழறிவு உடையவர்களும் பலன் பெறுவோம். விவாதமும் சரிநிகர் சமானமாய் இருக்கும். திருமதி ஜெயஸ்ரீ அவர்கள் வரலாறு இணையதளத்திற்கு அத்தளத்தினரின் பின்னூட்டங்களுக்கு எதிர்வினையளித்தும் அவற்றை அவர்கள் பதிவு செய்யவில்லை. மேற்கண்ட தளத்தில் விரிவான பதில்கள் உள.
April 17th, 2012 at 12:50 pm
இந்தப் பதிவிற்கு பல கேள்விகள் வந்துள்ளன. நான் பதில்களை ஒவ்வொன்றாக அளிக்கிறேன்.
“கேள்வி 1: தமிழ்” மாதம் என்றால் என்ன? அடைமொழியான “தமிழ்” இங்கே எதைக் குறிக்கிறது?
பண்டைத் தமிழ் வாழ்வியலையா? அல்லது….தமிழ் நாட்டில் வாழும் இந்து மக்கள் இன்று பஞ்சாங்கம் என்று கொள்வதைக் குறிக்கிறதா?
பதில் 1: சரி – நீங்கள் சொல்லும் தமிழ்ப் புத்தாண்டு தையில் எப்படித் தொடங்கப் போகிறது? பஞ்சாங்கத்தில் சூரியன் மகரத்தில் புகும், நாம் பொங்கல் கொண்டாடும் இப்போதைய தை ஒன்றா ? அல்லது ஏதாவது ஜனவரி 14 முதல் என்று புது காலேண்டர் உருவாகப் போகிறதா? அல்லது தைக்கு மட்டும் பஞ்சாங்கம். சித்திரைக்கு இல்லையா?
April 17th, 2012 at 12:53 pm
கேள்வி: 2. சூரியன் ஒரு ராசியில் இருக்கும் நாள்கள் எல்லாம் ஒரு மாதம் என்று கொள்ளப்படுகிறது//
இதற்கான ஆதாரம் என்ன?
தமிழ் நூல்களைக் காட்டுங்கள்! பஞ்சாங்கத்தையோ, சாத்திர நூல்களையோ அல்ல!
பதில் 2 : நீங்களே கூறி விட்டீர்களே :
அதன்படி…..கதிர் வழி மாதங்கள்
= மேழம், விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை, சுறவம், கும்பம், மீனம் – மேஷம்தான் மேழம் – ரிஷபம் தான் விடை அதாவது காளை and so on.
April 17th, 2012 at 12:55 pm
கேள்வி:3 ஏன் இந்த “ஆச்சரியம்” என்று ஆய்வு செய்தீர்களா?
ஏன் கதிரவன் அடிப்படையில் வானியலை ஆய்ந்தவர்கள், “திங்கள்” என்று மட்டும் பெயர் சூட்டினார்கள்? விடை உண்டா?
பதில் 3 :அதற்கும்தான் விடை கூறியுள்ளேனே – ஆக இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழ் நாட்டில் சந்திர மாதம் சூரிய மாதமாகி இருக்கிறது.
April 17th, 2012 at 12:59 pm
கேள்வி:4. மிருகக்ஷீரிசம் தான் அப்படித் திரிந்தது ன்னு கப்சா அடிக்கக் கூடாது, சொல்லிட்டேன்.
பதில் 4 சரி – நீங்கள்தான் சொல்லுங்களேன். எப்படி வந்தது? மார்கழி என்ற சொல்லின் மூலம் என்ன? தையின் மூலம் என்ன? வைகும் ஆசி, ஆகும் அணி போல எதாவது ஒன்று சொல்லுங்களேன்.
April 17th, 2012 at 1:01 pm
கேள்வி 5. ஆனால், அதை வேதப் புத்தாண்டு-ன்னு சொல்லுங்கள்!
“தமிழ்” என்று ஒட்ட வைத்து, ஒட்டுமொத்தமாக, “தமிழ்ப்” புத்தாண்டு என்று திணிக்காதீர்கள்….என்றே வேண்டுவது!
பதில் 5 : நான் எங்கே அதை தமிழ்ப் புத்தாண்டு என்று சொன்னேன்? ஜனவரி ஒன்றுக்கு அருகில் வருவது – அதாவது சூரிய மார்கழியில் வரும் பௌர்ணமியைத்தான் சொன்னேன். அதுவும் எதற்கு? அடுத்த பதிலைப் பாருங்கள்.
April 17th, 2012 at 1:03 pm
கேள்வி 6:. மதம் மதமாக இருக்கட்டும்!
பதில் 6: நான் வேதப் புத்தாண்டு என்று கூறுவது,ஆங்கிலேயர்களின் ஜனவரி 1 க்கு நெருக்கமாக தமிழ்ப் புத்தாண்டை தை 1 க்கு கொண்டுவரும் ஐரோப்பிய சதி என்று கூறுபவர்களுக்குத்தான். தயவு செய்து பிற மதத்தினரை வையாதீர்கள் என்று.
மொழியின் மீது மதத்தை நான் ஏற்றவேயில்லை. இந்தக் காலக் கணக்கீடு ஆண்டாள் காலத்துக்கு முன்பாகவே – சொல்லப் போனால் மார்கழி ஆதிரை என்று பாடிய திருஞான சம்பந்தர் காலத்துக்கு முன்பாகவே – வந்துவிட்டது என்று சொன்னேன்.
இதில் எல்லாம் மதத்தைக் கொண்டு வந்தால் அப்புறம் – மாயோன் மேவிய காடுறை உலகமும் என்று தமிழ் நாட்டை ஐந்து கடவுள்களுக்கு உரியதாகச் சொன்ன தொல்காப்பியமும் தமிழ் இந்து இலக்கணம் என்று ஆகிவிடும்.
April 17th, 2012 at 1:05 pm
கேள்வி 7. பொதுவான மொழியின் மேல், ஒரு மதத்தின் குறியீட்டை ஏற்றிட வேண்டாம்!
பதில் :நான் எங்கே சமயத்தை அங்கே கொண்டுவந்தேன்? தலைப்பே வானியலும் சோதிடமுமதானே?
April 17th, 2012 at 1:07 pm
கேள்வி 8: சும்மா, கல்வெட்டு இருக்கு, கல்வெட்டு இருக்கு ன்னு பயமுறுத்துவதே இப்பல்லாம் பேஷனாகப் போய்விட்டது:
பதில்: நீங்கள் உங்கள் பதிவில் கீழ்க்கண்டவாறு தெரிவித்து இருக்கிறீர்கள். அதற்குதான் இந்த பதில்.
நல்ல தொல்லியல் அறிஞர்கள், ஆய்ந்து சொல்வதே கல்வெட்டு முடிவுகள்! அதுவும் விவாதத்துக்கு உட்பட்டு!
கல்வெட்டில் இருந்தாலும்…..அவை = “பிற்காலம்” தான்!
இப்ப ஆதாரம் கொடுத்தவுடன் அப்படியே உல்டாவாகி – அந்தக் காலம் காரைக்கால் அம்மையார், முதலாழ்வார்கள் காலமும் கூட!
So, அப்போது பண்பாட்டுக் கலப்புகள் எல்லாம் நடைபெற்று விட்டன!
April 17th, 2012 at 1:11 pm
கேள்வி 9:. ஸ்ரீ காஞ்சி ஆசார்யர் சொன்ன தகவல் என்று வேண்டுமானால் சொல்லுங்கள்!
பதில்: நான் பிங்கல முனிவரின் ஆதாரமும் கொடுத்து இருக்கிறேன்
April 17th, 2012 at 1:15 pm
கேள்வி10:. தையொரு திங்களும் தரை விளக்கி என்பது நாச்சியார் திருமொழி!மார்கழி நீராடல், தைந் நீராடல் = இரண்டுமே சங்கத் தமிழில் உண்டு தான்!முன்பனிக் காலத்தின் இரண்டு மாதங்களிலும், புது வெள்ளத்தில் நீராடும் பழக்கம்!
தரை விளக்கி என்றால் தை நீராடுதல் – என்று இப்போது சொல்கிறீர்கள். இது புதுமையாய் இருக்கிறது. அப்போ தண்மண்டலம் இட்டு என்றால்?
இந்தப் பாடலுக்கு விளக்கம் இந்த லிங்கில் பாருங்கள்.
http://madhavipanthal.blogspot.in/search/label/paavai_book
April 17th, 2012 at 1:17 pm
கேள்வி11: நீங்க ஏதோ பரிபாடல் வரிகள் ன்னு சொன்ன உடனேயே….ஏதோ பெரிய மேட்டர் சொல்றாரு-ப்பா, உண்மையாத் தான் இருக்கணும் ன்னு நினைச்சிப் போயிருவாங்க
)))இனி, மூலப் பாடலையும், அதற்குண்டான உரையாசிரியரின் மூல விளக்கத்தையும் வைத்தே உரையாடுங்கள்!
பதில்: கீழே கொடுத்திருக்கிறேனே- நீங்கள் பார்கவில்லையா? அங்கே முழுப் பாடலும் அதற்கு விளக்கமும் இருக்கிறதே. (5 ),.நான் எல்லாருமே முழுப் பாடலையும், அதற்க்கு உரையையும் படித்து நீங்களே முடிவு செய்யுங்கள் என்று கீழே ஆதாரம் கொடுத்திருக்கிறேன்.
April 17th, 2012 at 1:19 pm
கேள்வி11:. அடப் பாவிங்களா! ஒரு சாதாரண பூத்தடம் நிரம்பிய குளம்!
பதில்: சூரியன் எதற்கு பூ நிரம்பிய குளத்துக்கு வந்தது? குளிக்கவா?
April 17th, 2012 at 1:21 pm
கேள்வி12.
// சூரியனின் மேஷ ராசிப் பிரவேசமே இதன் தொடக்கம் என்பதும் தெளிவு//
ஒரு தெளிவும் இல்ல!
பதில்: எனக்கு நீங்கள் சொல்வதுதான் விளங்கவில்லை. பஞ்சாங்கத்தில் வரும் சித்திரை கூடாது. ஆனால் அந்த தை மட்டும் வேண்டும். மாதங்களின் தமிழ்க் கணித வானியலின் படி..கதிர் வழி மாதங்கள்= மேழம், விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை, சுறவம், கும்பம், மீனம். ஆனால் சூரியன் அந்த ராசிகளில் இருப்பது என்று சொன்னால் அது பஞ்சாங்கம், மேழம் என்றால் சரி. ஆனால் மேழத்தில் இருந்து தொடங்கக் கூடாது.
தல சுத்துது.
April 17th, 2012 at 4:58 pm
நவகோள்களை வைத்துப்பலன் சொல்வது என்பது சோதிடத்தில் ஒரு பகுதியே அன்றி அது மட்டுமே சோதிடம் அன்று. மாதங்கள் அவற்றின் துவக்கம் என்பது சோதிடத்தின் படி கணக்கிடப்பட்டே அறியப்படுவது.(சோதிடம் என்ற சொல் கசப்பவர் குமுக்கமாக வானவியல் என நாகரிகமாக ஜல்லியடிப்பர்) கணியன் பூங்குன்றனார் இப்படிப்பட்ட ஒரு திறம் வாய்ந்த சோதிடரே. தமிழன் வாழ்வியல் படி மாதங்கள் கணக்கிடப்படின் அஃது வாழ்வியல் கூறு ஆனால் வடபுலத்தார் அது போன்று கணக்கிட்டு அந்தத் தொகுப்பைப் பஞ்சாங்கம் என்றிடில் அது பழம் பஞ்சாங்கம் அல்லது மூடநம்பிக்கை என்று சொல்வது பகுத்தறிவா? பண்டைத்தமிழர் வாழ்வியலில் சோதிடம் ஒரு அங்கம் என்பதைப் புறந்தள்ளி செய்யும் எந்த ஒரு ஆய்வும் நாணயமான ஆய்வாகாது. குறிப்பாக மாதங்கள் வருடத்துவக்கம் என்பது போன்ற கருதுகோள்களை சோதிடத்தை ஒதுக்கி அறியமுயல்வது என்பது சர்க்கரைக்குப் பதிலாக பாவக்காய் போட்டு பால் பாயாசம் செய்து அதில் தித்திப்பு எவ்வளவு எனப் பார்ப்பதைப்போன்றது.
April 17th, 2012 at 5:18 pm
—–
பொதுவான மொழியின் மேல், ஒரு மதத்தின் குறியீட்டை ஏற்றிட வேண்டாம்!
இதில் எல்லாம் மதத்தைக் கொண்டு வந்தால் அப்புறம் – மாயோன் மேவிய காடுறை உலகமும் என்று தமிழ் நாட்டை ஐந்து கடவுள்களுக்கு உரியதாகச் சொன்ன தொல்காப்பியமும் தமிழ் இந்து இலக்கணம் என்று ஆகிவிடும்.
—-
இன்றைக்கு கிடைக்கும் தமிழ் நூற்களில் மிகத்தொன்மையானவை பரிபாடல்களும் தொல்காப்பியமும் என்பதில் தமிழ் கூறும் நல்லுலகில் மாற்றுக் கருத்து இருக்கவியலாது. இன்றைக்கு இந்து சமயத்தெய்வங்கள் என்று கூறப்படும் தெய்வங்களைப்பற்றி இந்நூற்களில் இருப்பதை புறந்தள்ளுபவரே தமிழ் இந்து மதத்திலிருந்து வேறு பட்டது எனக்கூறவியலும்.
தமிழ் என்ற உடலுக்கு இந்து சமயம் என்பது உயிர். இந்து சமயத்தை விலக்கிய தமிழ் உயிரற்ற உடல்.
April 17th, 2012 at 8:23 pm
//சுரேஷ் மாமா,
தமிழும் சமத்கிருதமும் பிராகிருத மொழியில் இருந்து வந்ததா? பேஷ் பேஷ் ரொம்ப் நன்னாயிருக்கு போங்கோ..//
அறிவன் ஆ மாமா
உங்கள் கேள்விக்கு பதில் இங்கே.
http://www.tamilonline.com/thendral/morecontent.aspx?id=100&cid=4&aid=5480
சொன்னவர் கலைஞரின் மிக நெருங்கிய நண்பர்
அது சரி, தமிழ்ப் புத்தாண்டை ஆதரித்து எழுதினால் அவர்கள் பிராமணர்கள்தான் என்று எப்படி ஐயா (தவறான) முடிவிற்கு வருகிறீர்கள்? நான் பார்ப்பனன் இல்லை சாமி
April 18th, 2012 at 4:58 am
@சான்றோன்
//ஒருவரது மத நம்பிக்கையில் தலையிடுவதோ , இழிவு செய்வதோ , இந்திய அரசியல் சட்டப்படி குற்றம்//
- ஆமாங்க! அதையே தான் நானும் சொல்கிறேன்! இந்துக்களின் விழாவைக் கேவலப்படுத்திப் பேசினால் அது குற்றமே!
அதே போல், ஒரு சாராரின் விழாவை, அனைவருக்கும் பொதுமைப்படுத்தினால், தமிழ் என்று முன்னொட்டு குடுத்து, அனைத்து தமிழரின் புத்தாண்டு என்று பொதுமைப்படுத்தினால் அதுவும் குற்றமே அல்லவா! சற்று சிந்தித்துப் பாருங்கள்! நன்றி!
//இதெல்லாம் கேக்கறதுக்கு நல்லாத்தான் இருக்கும்//
- atleast u have the heart to accept that theoretically, this is correct – thanks:)
——————–
@சுரேஷ்
வணக்கம்!
நான் “எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்” அல்ல!
“எல்லாம் தெரிந்தவர்” = ஏகாம்பரம் ஒருவரே! இருப்பினும் அவரே வந்து பாட்டுரைத்த போதும், குற்றம் குற்றமே என்றது தான் பண்பாடும் மரபும்!
அதையொட்டியே பேசும் உங்கள் பண்பட்ட சொற்களுக்கு வந்தனங்கள்:)
April 18th, 2012 at 5:20 am
@அறிவன் ஐயா
நன்றி!
கருத்துக்கு – கருத்து என்ற அளவில் மட்டுமே உரையாடுவோம்! “மாமா” போன்ற அடைமொழிகள் வேண்டாமே! Please!
அவர்கள் தரும் தரவு சரியாக இருக்கும் பட்சத்தில், ஏற்றுக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை!
———
@தமிழன்
நிச்சயமாக பரிமேலழகர் என்னை விட மிக அதிகமாகத் தமிழ் அறிந்த அறிஞர் தான்!
அவர் செய்த உரை வளம்-நயம் பற்றி நானே பல இடங்களில் குறிப்பிட்டுள்ளேன்! அவரை இகழ்ச்சியாக இங்கு ஒன்றும் சொல்லவில்லை! அப்படித் தொனித்திருந்தால் என்னை மன்னியுங்கள்!
அவர், “சார்பு நிலையில்”, வலிந்து சிலவற்றுக்கு உரை செய்யும் போக்கு பற்றி மட்டுமே குறிப்பிட்டது!
இதை நான் மட்டும் சொல்லவில்லை! அவருக்குப் பின்னால் வந்தே உரையாசிரியர்களும், பெருங்கவிஞர்களுமே சொல்கிறார்கள்!
கருணாநிதியின் உரையிலும் இத்தகைய “bias” காணப்படும்! பிறவிப் பெருங்கடல் நீந்தார் இறைவனடி சேராதார் ன்னு வள்ளுவன் எழுத, இறைவன்=தலைமைக் குணம் கொண்டவர்கள் ன்னு மாற்றி எழுதுவார் கருணாநிதி!
அப்படீன்னா ஓபாமா அடி சேராதவர்கள், அட்லான்டிக் கடல், பிறவிக் கடல் நீந்த முடியாதா என்ன?:))
இதனால் தான் எத்தகைய தனிப்பட்ட “bias” இல்லாத முவ உரை இன்றைய உரைகளில் தலைசிறந்து விளங்குகிறது!
அந்த “bias” பற்றி மட்டுமே குறிப்பிட்டேனே தவிர, பரிமேலழகரின் பெரும் புலமையைத் தாழ்த்தும் எண்ணம் எனக்கு கிஞ்சித்தும் இல்லை! மன்னிக்க!
April 18th, 2012 at 5:30 am
@சங்கரநாராயணன்
என் உரையாடல்கள் அனைத்தும், உங்களோடு மட்டுமே!
அதுவும் பதிவில் சொல்லியுள்ள கருத்துக்கு – எதிர்த் தரவினை வைத்து உரையாடும் கருத்து!
மற்றபடி, எள்ளல்களோ, ஏகாம்பரமோ, இலுப்பைப் பூவோ…. இங்கு முக்கியம் அல்ல!
இது கருணாநிதி, கட்சி, திராவிட மாயை, ஆரிய மாயை-ன்னு பயனற்ற பேச்சினை நீக்கி….
தமிழைத் தமிழாகவே அணுகிப் பார்த்து, வைக்கும் ஆய்வு-சார் உரையாடல்கள்!
ஆனால், எல்லாருக்கும் ஆய்வு தேவை இருப்பதில்லை!
அவர்களுக்கு என்ன பிடிச்சி இருக்கோ, அந்த நிலையே உண்மை நிலை ன்னு நிற்பவர்களும் உள்ளனர்!
எனவே, என் உரையாடலில், நன்-நோக்கு இல்லை என்று நீங்கள் கருதினால், சொல்லி விடுங்கள்! இத்தோடு அமைந்து விடுகிறேன்!
தனிப்பட்ட எள்ளலில்லா, பொருள் சார் உரையாடல்களுக்கு நன்றி!
April 18th, 2012 at 6:12 am
“ரொம்பத் தொங்க வேணாம் ஏகாம்பரமே” என்று எனக்கு அறிவுறுத்திய திரு. சுரேஷ் கேட்ட சில கேள்விகள் நியாயம் உள்ளவை!
அதனால் அதற்கு விடை காண இயன்ற வரை முயல்கிறேன்!
1. வள்ளுவர் கிமு 31 என்று 100% அறுதியிட முடியாது! அது ஒரு ஆய்வு நிலைத் தொடக்கப் புள்ளி மட்டுமே!
இது இயேசு பிரான் உட்பட, அவ்வளவு ஏன், வள்ளுவருக்குப் பின்னால் வந்த ஆழ்வார்-நாயன்மார்கள் பலருக்கும் பொருந்தும்!
இருப்பினும், there are 3sigma acceptable levels in such hypotheses! even though the object of reference may not be absolutely marked, it is relatively measured!
Again, the intent is not to define vaLLuvar day, but to define a continuous numbering scheme based on a relative measurement!
2. //ஏன் இத்தனை ஆண்டு கால இடைவெளி?//
- இது அவரவர் முன்னெடுப்பைப் பொறுத்தது!
* தேவாரப் பாடல்கள் திரட்ட ஏன் இத்தனை இடைவெளி? ப்ராந்தகன் முதல் கண்டராதித்தர் வரை என்ன செய்து கொண்டு இருந்தார்கள்? எதற்கு ஒரு இராஜராஜன் வரும் வரை காக்க வேண்டும் என்று கேட்போமா?
* எதற்கு ஒரு உவேசா வரும் வரை காத்திருப்பு? வீரமாமுனிவர் காலத்திலேயே செய்ய வேண்டியது தானே? என்று கேட்போமா?
அதே போல், மறைமலை அடிகளார் தலைமையில் குழு சேரும் வரை, இந்த முன்னெடுப்பு இல்லை! அவ்வளவே!
3. //இந்துப் புத்தாண்டு என்றால் இதனை இந்தியா முழுதும் அதே தேதியில் கொண்டாட வேண்டுமே? கொண்டாடுகிறார்களா?//
கிருஷ்ண அவதார தினமே, ஒரே மாநிலத்தில் இரண்டு நாட்களில் கொண்டாடப் படுகிறது = கோகுலாஷ்டமி, ஸ்ரீஜெயந்தி!
ஆனால் இரண்டுமே கிருஷ்ண அவதார தினங்கள் தான்!
அதே போல், பல வேளைகளில் கொண்டாடினாலும், இந்துப் புததாண்டு, இந்துப் புத்தாண்டு தான்! அவரவர் இடம்-பொருள்-ஏவல், சமூக அமைப்பு பொறுத்து…
—————
//இந்தியாவில் பிறந்து வாழும் தமிழன் இந்து இல்லையா?
”இந்து” என்றால் ”பார்ப்பனன்” என்று எந்த மடையன் சொன்னது?//
நான் அப்படி ஏதும் சொல்லவில்லை! எதற்கும் இன்னொரு முறை சரி பார்த்துக் கொள்ளுங்கள்!:)
* தமிழைத் தாய்மொழியாகவும், பேசும்மொழியாகவும் கொண்டுள்ள அனைத்து இந்துக்களும் = தமிழரே!
* அதே போல், பிற சமயத்தவரும் = தமிழரே!
அதனால் தான் தமிழ்-ஆண்டு என்பது அனைவருக்கும் பொது!
இவ்வாறு நான் சொன்னதில் அரசியல் ஏதுமில்லை!
ஈஸ்டர் திருநாள் = தமிழர் திருநாள் என்று அவர்கள் சொன்னால்…அதுவும் சரியன்று தான்!
————–
//சம்ஸ்கிருதம், தமிழ் இரண்டுமே பிராகிருதத்திலிருந்து வந்தவையாயிற்றே!! அப்படியிருக்க ஏன் இந்தக் கூப்பாடு?//
இதை, ஒரு நல்ல சம்ஸ்கிருத + தமிழ் அறிஞரிடமே உறுதி செய்து கொள்ளுங்கள்:)
—————–
//எப்படி சார் சொல்றீங்க. சிங்களத்துக்கு, சீனத்துக்கு, சீக்கியத்துக்கெல்லாம் தமிழ் பொதுவானதா?//
எப்படி ஒரு பொதுவான கல்விக் கூடம்….அனைத்து தரப்பினருக்கும் பொதுவோ, அது போல, தமிழ் = அனைத்து சமயக் குழுக்களுக்கும் பொது! இங்கு ஒரு சீனர் வந்தும் ஆய்வு நிகழ்த்தலாம்! ஆனால் Year of the Rat-ஐ அவர் மூஷிகம் ஆக்கி, தமிழ்ப் புத்தாண்து என்று சொன்னால், அதுவும் தவறே!
மொழி
= அது சம்ஸ்கிருதமோ, தமிழோ….பல கொள்கையினருக்கும் பொதுவான ஒன்று!
சம்ஸ்கிருதத்தில் ஒரு பெளத்த சமயச் சொல்லகராதி செய்து விட்டு…அதற்கு சம்ஸ்கிருதப் பேரகராதி ன்னு பேரு வைத்தால்…அதுவும் தவறே!
————
//பண்டைய இலக்கியங்கள் முழுமையும் நமக்குக் கிடைத்து விட்டனவா என்ன? அல்லது அப்படிக் கிடைத்தவை முழுமையும் ”ஐயா” அவர்கள் படித்து முடித்து விட்டாரா? எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாக ”கண்ணபிரான் இரவிசங்கர்” பேசுகிறார். பாவம்//
மிக்க நன்றி சுரேஷ்!
இந்தப் பின்னூட்டத்திலும் நான் மேற்கூறியவற்றில் தங்களையோ, (அ) வேறேதோ தவறாகச் சொல்லியிருப்பின் மன்னிக்கவும்!
April 18th, 2012 at 6:35 am
@தமிழன்
நீங்கள் கேட்டுள்ள சில கேள்விகளும் நியாயமானவையே!
1. //தமிழறிஞர்கள் அறிக்கை என்ற “புருடா”//
சில பகுத்தறிவுவாதிகளும், அந்த அறிக்கையைப் படிக்காமலேயே, ஏதோ பேசுகின்றனர் என்பதும் உண்மையே!
ஆனால் அந்த அறிக்கை, அதன் மேலோட்டமான முடிவுகள் (ஆய்வுக் குறிப்புகள் இல்லாது, முடிவுகள் மட்டும்)…..செந்தமிழ்ச் செல்வியின் பழைய ஏடுகளில் கிடைக்கிறது! வாசித்துப் பார்க்கவும்!
2. //தமிழகத்தில் சங்க காலத்தில் இசுலாமியர் கிறித்தவர் என்றெல்லாம் இருந்தத்திலை என்பது ரவிசங்கர் அறியாததா//
சங்க காலத்தில் (அதுவும் தொல்காப்பிய, முதற் சங்க காலங்களில்…இஸ்லாம், கிறித்துவம் இல்லை தான்!
அதே போல் “இந்து” என்பதும் இல்லை!!
தொல்காப்பியர் காட்டிய மாயோன், சேயோன் எல்லாம் இனக்குழு, இயற்கை வழிபாடுகளே அன்றி, அதனொடு கிளைத்த புராணக் கதைகள் சற்று பிற்பட்டனவையே! பரிபாடல் காலத்தையவை! – மா. இராசமாணிக்கனார், இராகவ ஐயங்கார், பரிதிமாற் கலைஞர் (சூர்ய நாராயண சாஸ்திரிகள்), முவ குறிப்புகளையும் காணவும்!
“இந்து” என்ற ஒரு பெயர் பின்னாளில் வழங்கினாலும், அதன் மூலக் கூறுகள் தமிழ் இலக்கியத்தில் நிறையவே உள்ளன! மறுக்கவில்லை!
அதே போல் சமணம், ஆசீவகம், பெளத்தம் போன்ற சமயக் கூறும் உள்ளன! அதையும் மறுக்கவில்லை!
ஆனால் இவ்வகையான பெருஞ்சமயக் கூறுகளுக்கும் முன்பே, இனக்குழு வழிபாட்டுக் கூறுகளும் முதல்-இடைச் சங்கத் தமிழில் மிகுத்து உள என்பதையும் மறுப்பதற்கில்லை!
————–
//ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்பது போல் இங்கு உதார் விட்டுக்கொண்டு இருக்கிறீர்கள் என்றே தோன்றுகிறது//
நான் இலுப்பைப் பூ கூட இல்லை!
என் தமிழறிவு மிகவும் குறைவானதே!
என் பட்டப் படிப்பும் அதுவன்று!
ஆயினும், தமிழ் சார்ந்த உரையாடல்களில், வேறெதுவும் சாராது, தமிழைத் தமிழாகவே இயன்றவரை அணுக முயல்கிறேன்!
மற்றபடி என் பல பதிவுகளும் ஆழ்வார்-நாயன்மார் என்ற தளத்தில் நிற்பவை தான்!
கருத்துகளுக்காக “இலுப்பைப் பூவை” மன்னித்து விடுங்கள்:)
April 18th, 2012 at 6:39 am
@சங்கரநாராயணன்
உங்களின் பதிலுறுதியைக் கண்டே இனி இங்கு தொடர்வேன்…
If you feel that there is no value addition in my dialogue, I will stop right here!
Thanks for a subject oriented discussion, apart from the side track of some other principle oriented readers!
April 18th, 2012 at 11:34 am
////சம்ஸ்கிருதம், தமிழ் இரண்டுமே பிராகிருதத்திலிருந்து வந்தவையாயிற்றே!! அப்படியிருக்க ஏன் இந்தக் கூப்பாடு?//
இதை, ஒரு நல்ல சம்ஸ்கிருத + தமிழ் அறிஞரிடமே உறுதி செய்து கொள்ளுங்கள்:)//
கண்ணபிரான் இரவிசங்கர்…
http://www.tamilonline.com/thendral/morecontent.aspx?id=100&cid=4&aid=5480
இந்தத் தளத்தில் படித்ததை வைத்தே மறுமொழியிட்டேன். சமீபத்தில் மறைந்த கணபதி ஸ்தபதி தமிழ், வடமொழி என்று சார்புகள் ஏதும் அற்றவர். கல்வெட்டாராய்ச்சிகள் பல செய்தவர். பிராகிருதம், கிரந்தம் என பல மொழிகளில் தேர்ந்தவர். அவர் சொன்னது உண்மையாக இருக்கும் என்று நம்பியே அதைக் குறிப்பிட்டேன்.
இது தவறு என்றால் அந்தத் தளத்தில் நின்று ஆராய்ச்சியாளர்கள்/ நீங்கள் சொன்ன மாதிரி “நல்ல” சம்ஸ்கிருத + தமிழ் அறிஞர்கள்தான் மறுக்க வேண்டும்.
உங்களது மறுமொழிகளுக்கு நன்றி
April 18th, 2012 at 12:59 pm
அன்பார்ந்த க.ர அவர்கள் பன்னூற்றாண்டு முற்பட்ட பழம்பெருமை வாய்ந்த உரையாசிரியரான பரிமேலழகரை ஏட்டைக்கெடுத்தவர் என்ற தொனியில் எழுதியமை நெஞ்சில் தைத்த முள் போல் இருந்தமையால் சிறியேன் நிதானமிழந்து விட்டேன். “இலுப்பைப்பூ” என்ற தவறான சொல்லாடலுக்கு மன்னிக்கவும்.
தெளிவான கருத்துச்செறிவுள்ள கட்டுரை தந்து கூர்மையாக எதிர்வினையாற்றிய திரு சங்கரநாராயணன் அவர்களுடன் தங்களது தமிழ் சார்ந்த மற்றும் மிகவும் பயனுள்ள விவாதத்தை தயை கூர்ந்து தொடரவும். இடையூறுகளுக்கு மன்னிக்கவும்.
அமையுமுன் இரு கருத்துகள்.
உலகின் எப்பகுதியாயினும் மாதம் மற்றும் வருடங்கள் ஒரு முறைப்படி கணிக்கப்படுகின்றன. இந்தியா மற்றும் தமிழகத்தில் கணிக்கப்படும் முறைமைகள் சோதிடம்/வானவியல்/பஞ்சாங்கம் சார்ந்தவை. தமிழ்ப்புத்தாண்டு என்ற படிக்கு தமிழர் தம் சோதிடம் / வானவியல் நூற்களில் பேசப்படும் கருதுகோள்களைத் தவிர்த்து முன்னகர்ந்து எடுக்கப்படும் முடிபுகள் சாரமுள்ளவையா என்ற ஐயப்பாடு எழுகிறது.
தங்களுக்கு நேரமிருக்குமா அறியேன். இருக்குமாயின் திருமதி ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்கள் பதிவு செய்த சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டுக் கருதுகோள்களை ஆராயுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
April 18th, 2012 at 1:58 pm
———
சில பகுத்தறிவுவாதிகளும், அந்த அறிக்கையைப் படிக்காமலேயே, ஏதோ பேசுகின்றனர் என்பதும் உண்மையே!
ஆனால் அந்த அறிக்கை, அதன் மேலோட்டமான முடிவுகள் (ஆய்வுக் குறிப்புகள் இல்லாது, முடிவுகள் மட்டும்)…..செந்தமிழ்ச் செல்வியின் பழைய ஏடுகளில் கிடைக்கிறது! வாசித்துப் பார்க்கவும்!
—–
மன்னிக்கவும். மிகப்பல தமிழ்ச்சான்றோர்கள் ஒன்றுகூடி தமிழ்ப்புத்தாண்டு சம்பந்தமாக தமிழ் மக்கள் ஆண்டாண்டு காலமாக பின்பற்றி வரும் மரபிலிருந்து விலகி பிறிதொரு முடிபுக்கு வருகிறார்கள் எனில் அது மிக முக்கியமான நிகழ்வு. அத்துணை முக்கியம் வாய்ந்த ஒரு நிகழ்வினை அச்சான்றோர் கைச்சாத்திட்ட அறிக்கையே அறுதிப்படுத்த இயலும். அவ்வாறு அவர்கள் கைச்சாத்திட்ட அறிக்கையின் original இன்று கிடைக்கப்பெறின் அதில் கைச்சாத்திட்ட சான்றோர்கள் அக்கருத்தினை ஒப்புக்கொள்கிறார்கள் என ஐயந்திரிபற ஆதாரமாக ஏற்கவியலும்.
அவ்வாறன்றி அம்முடிபுகள் மற்றும் அவ்வறிக்கை பற்றி பேசும் / முழக்கமிடும் ஏடுகளை குறிப்பிட்ட கருதுகோள்களை உயர்த்திப்பிடிப்போரின் பிரச்சார சாதனமாக ஏற்கவியலுமேயன்றி ஆதாரமாக ஏற்கவொண்ணாது. தங்கள் கருதுகோள்களை உரத்துச்சொல்ல சான்றோர்களின் பெயர்களை வலிந்து முழக்குகிறார்கள் என்றே கொள்ளவியலும்.
ஏனவே அறிக்கையின் originalஐ உலகிற்கு காட்ட இயலாவிடின் தமிழறிஞர்களின் கருத்துப்படி “தை” தமிழ்ப்புத்தாண்டு என்று சொல்வதைத் தவிர்ப்பது நேர்மையான போக்கு. அஃது தமிழறிஞர்களின் கருத்தன்று; மாறாக அவ்வாறு சொல்பவரின் சொந்தக்கருத்து என்றே ஏற்கப்படும்.
April 18th, 2012 at 10:33 pm
அன்புள்ள திரு ரவிசங்கர் அவர்களே! என் கட்டுரை வானியலையும் ஜோதிடத்தையும் அடிப்படையாகக் கொண்டது. நீங்கள் தான் அதிலே அரசியலையும், மதத்தையும் கொண்டு வந்தீர்கள். நான் எங்குமே அரசியலையும் மதத்தையும் சொல்லவேயில்லை. உலகில் உள்ள அனைத்து காலேண்டர்களும், அனைத்து மதத்தினரின் காலேண்டர்களும் சூரியன் அல்லது சந்திரனை மையமாகக் கொண்டே உள்ளன. சூரியனும், சந்திரனும் உலகத்திற்குப் பொது. தமிழ் நாட்டில், சேர நாடாகிய கேரளத்திலும் மட்டுமே இந்தக் கணக்கீடு பின்பற்றப் படுகிறது. அஸ்ஸாம், ஒரிசா, வங்கம் மற்றும் பஞ்சாப் இந்தக் காலேண்டரோடு சந்திரமான காலேண்டரையும் சேர்த்தே பயன்படுத்துகிறார்கள். தமிழ் நாட்டில் மட்டுமே பயன்படுத்துவதால் இது தமிழ் ஆண்டு.
April 18th, 2012 at 10:36 pm
திரு ரவிசங்கர் அவர்களே – நீங்கள் இப்போது சொல்கிறீர்கள் -
உங்கள் பண்பட்ட சொற்களுக்கு வந்தனங்கள்:)
மாமா” போன்ற அடைமொழிகள் வேண்டாமே! Please!
மற்றபடி, எள்ளல்களோ, ஏகாம்பரமோ, இலுப்பைப் பூவோ…. இங்கு முக்கியம் அல்ல!
என்றெல்லாம் – ஆனால் உங்கள் பின்னூட்டத்தில் எழுதியது
சூப்பர்! இது ஒன்றே போதும்…..நீங்கள் “எங்கிருந்து” இந்தக் கட்டுரையை அணுகி இருக்கிறீர்கள் என்று அறிய
அது மட்டும் சரியா?
April 18th, 2012 at 10:37 pm
திரு ரவிசங்கர் அவர்களே -யாரோ எழுதிக் கொடுப்பதைப் படிப்பவர் என்று எழுதுகிறீர்களே – உங்களிடம் ஒன்று கேட்கிறேன். நீங்கள் உங்கள் பின்னூட்டத்தில் -மார்கழி நீராடல், தைந் நீராடல் = இரண்டுமே சங்கத் தமிழில் உண்டு தான்! முன்பனிக் காலத்தின் இரண்டு மாதங்களிலும், புது வெள்ளத்தில் நீராடும் பழக்கம்!என்று கூறியுள்ளீர்கள்.
உங்கள் பதிவில் இதே பாடலுக்கு
தையொரு திங்களும் தரை விளக்கித்
தண்மண் டலமிட்டு மாசி முன்னாள்,
தை மாசமான இன்று, தரையை விளக்கி, தண்-மண்டலம் என்னும் குளிர்ச்சியான கோலம் இட்டோம்!
http://madhavipanthal.blogspot.in/search/label/paavai_book
என்று விளக்கம் கூறியுள்ளீர்களே. ஏன் இந்த வேறுபாடு?
இந்தப் பதிவை எழுதியது நீங்கள்தானே? இல்ல மண்டபத்துல வேற யாராவது எழுதிக் கொடுத்ததா?
April 18th, 2012 at 10:39 pm
அன்புள்ள திரு ரவிசங்கர் அவர்களே – நீங்கள் உங்கள் பின்னுட்டத்தில என்று கூறியுள்ளீர்கள்
)))
ஆனா, ஏதுமறியா அப்பாவி வாசகர்கள்….நீங்க ஏதோ பரிபாடல் வரிகள் ன்னு சொன்ன உடனேயே….ஏதோ பெரிய மேட்டர் சொல்றாரு-ப்பா, உண்மையாத் தான் இருக்கணும் ன்னு நினைச்சிப் போயிருவாங்க
நீங்கள் உங்களின் கீழ்க் கண்ட பதிவில் சொல்லியிருக்கிறீர்கள்
கல்வெட்டில் இருந்தாலும்…..அவை = “பிற்காலம்” தான்!
http://madhavipanthal.blogspot.in/search?updated-min=2012-01-01T00:00:00-05:00&updated-max=2013-01-01T00:00:00-05:00&max-results=17
இப்பொழுது நான் பூலாங்குறிச்சிக் கல்வெட்டு பற்றிக் குறிப்பிட்டதும், அது பற்றி அறிஞர் டாக்டர் நாகசாமி அவர்கள் – அதுவும் இந்த சர்ச்சைக்கெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பாக எழுதிய கல்வெட்டு லிங்கைத் தந்தவுடன்
பூலாங்குறிச்சிக் கல்வெட்டு = புதுக்கோட்டை பொன்னமராவதி
பொன்னமராவதி பக்கம் சிங்கம்புணரி என்றெல்லாம் ஏதோ அந்தக் கல்வெட்டை படி எடுத்தவர்போல் அடித்து விடுகிறீர்களே
ஏன் உங்கள் பதிவுகளைப் படிக்கும் வாசகர்கள் ஏதுமறியா அப்பாவி வாசகர்கள்….ஏதோ பெரிய மேட்டர் சொல்றாரு-ப்பா, உண்மையாத் தான் இருக்கணும் ன்னு நினைச்சிப் போயிருவாங்க என்பதாலா?
உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் நான் பதில் சொல்லிவிட்டேன் என்று நம்புகிறேன். மற்ற கேள்விகளுக்கும் தயாராய் இருக்கிறேன். நீங்கள்தான் உங்கள் தை எந்தத் தை? பஞ்சாங்கத்தில் உள்ளதா? நம் ஆண்டாள் காமதேவனை வணங்கிய தையா? அல்லது சூரிய பகவானுக்கு பொங்கல் வைக்கும் தையா? என்று கூற வேண்டும்.
April 19th, 2012 at 1:39 pm
அன்பார்ந்த க.ர அவர்கள் எள்ளல் என்பது double edged sword என்பதை உணர்தல் நன்று. அவருடைய மேற்கண்ட பதிவுகளிலும் எள்ளல்கள் பல உள. ஆனால் நான் தங்கள் பிற பதிவுகள் பல படித்து மகிழ்ந்துள்ளேன். சொல்ல வரும் விஷயங்களை எள்ளலுடன் சொல்லும் தங்கள் சொல்லாற்றலை மிகவும் ரசித்தே அவற்றை வாசித்துள்ளேன். Still I could not comprehend as to why you make it an issue per se. Rather than concentrating further on sarcasm, I feel it would be better you start deliberating on the subject.
எடுத்துக்கொண்ட விஷயம் சம்பந்தமாக தங்களிடமிருந்து சில வினாக்கள்
செந்தமிழ்ச்செல்வி ஏட்டைப் பார்க்கச்சொல்கிறீர்கள். தமிழ் அறிஞர்கள் கூடி “தை” தான் தமிழ்ப்புத்தாண்டு என முடிவு செய்ததற்கு ஆதாரமாக ஆய்வுக்கூறுகளும் இல்லையாம். அவர்கள் அப்படி முடிவு எடுத்து அறிக்கை விட்டதாகச்சொல்வது படி அவர்கள் கைச்சாத்திட்ட அறிக்கையின் original இது வரை யாருக்கும் கிட்டவில்லையாம். அப்படி இருக்கையில் அறிவுசார் விவாதம் நிகழ்த்தும் தாங்கள் “தைப் புத்தாண்டு” தமிழறிஞர்களின் கருத்து என்ற படிக்கு ஆதாரமில்லாத ஒரு கருத்தைத் திணிக்காதீர்கள் என்று சொல்ல விரும்புகிறேன்.
ஆங்கில மாதங்களை வரிசைப்படுத்திக்கூறு என்றால் ஒரு குழந்தை எப்படி ஜனவரியிலிருந்து ஆரம்பிக்குமோ அதே போல் இங்கு பிறிதொரு நண்பர் சொன்னது போல் தமிழ்மாத வரிசை என்றால் சித்திரை, வைகாசி என்றே ஒரு குழந்தை கூட சொல்லும். இதை ஆதாரமான விஷயமில்லை மரபு என்று புறந்தள்ளலாம் நீங்கள். ஆனால் தங்கள் 15-04-12 – 11.14 pm பதிவில் மதிவழி மாதங்கள் பட்டியலில் தாங்கள் “தை” யிலிருந்து துவங்குகிறீர்கள். ஆதாரமேதும் தமிழ் (தமிழைத் தமிழ் வழியே அணுகுங்கள்) நூற்களிலிருந்து….. அல்லது க.ர ஐயாவின் தனிமரபா (தமிழறிஞர்களின் விருப்பப்படி என்று தயவு செய்து சொல்லாதீர்கள்)
Your specific aversion to even consider Astrology as a factor in the dispute of new year. Why?
the sarcasm (not as an issue but a matter of fact per se) in the following statement,
——
முதற்கண்…..இந்த விஷயத்தில் உங்கள் “சோதிட/ சாஸ்திர ரீதியான” அணுகுமுறை:
//சில சமயம், மாலை 5 மணிக்குக் கூட மாதம் பிறக்கலாம். அன்று பொங்கல் பானை 5 மணிக்குதான் ஏற்றுவார்கள்//
இப்படி சோதிடக் காலம், பஞ்சாங்கம், மாசப் பிறப்பு ஆயிடுத்தா? -ன்னு பார்த்து எல்லாம் கிராம மக்கள் பொங்கல் பானை ஏற்றுவதில்லை!
இதெல்லாம் ஒரு குறிப்பிட்ட சமூகம் (அ) பட்டினத்தில் வாழும் சில வகுப்பினர் மட்டுமே!
——
without prejudice to and with lots of respects to different customs being followed by different groups of people in celebrating the new year, the start of a month at a particular time is a fact and the same is calculated by a method. And yes, it is as per astrology. Sir, you need a method to do the computation. You call it astrology. Or if you have intellectual hesitation to consider astrology as superstition, you still need a method to compute a start and end point of a month. It is one thing that you may or may not agree with foretelling aspects of astrology; but to extend that to even calculation aspects of astrology, I am sorry to say that it is nothing but intellectual snobbery.
April 19th, 2012 at 3:49 pm
திரு சங்கரநாராயணன் அவர்களே,
—-
எனவே இந்தச் சூரியனைக் கொண்டு கணக்கிடப்படும் மாதக் கணக்கானது தமிழ் நாட்டுக்கே உள்ள ஒரு தனிப்பட்ட கணக்கு என்பதும், சூரியனின் மேஷ ராசிப் பிரவேசமே இதன் தொடக்கம் என்பதும் தெளிவு.
—–
எனவே தமிழ்ப்புத்தாண்டு என்பது சித்திரை மாதத்திலிருந்து துவங்குதான ஆண்டே என்று சொல்லி முடித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமோ?
—-
நம் சித்திரை, வைகாசி எல்லாம் கூட வடமொழிதான். என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா?
—-
இது செரிமானமாகவில்லை ஐயா. திரு.க.ர அவர்கள் மூன்று தமிழ் மாதங்களுக்கு தமிழ் வழியாக விளக்கம் அளித்திருக்கிறார்கள். ஏதேனும் ஆதார நூலை வைத்தே அவர் சொல்லியிருக்க வேணும். மீதமிருக்கும் ஒன்பது தமிழ் மாதங்களுக்கும் அவர் அதே ஆதார நூலை அடிப்படையாக வைத்து விளக்கங்கள் தரவேணும் என கோருகிறேன். அவ்வாறு விளக்கமளித்தால் தமிழ் மாதப்பெயர்களின் மூலம் வடமொழி வழியே இல்லை என்பது திண்ணமாகும்.
April 19th, 2012 at 5:28 pm
திரு க.ர ஐயா, ஒரு sidetrack கொசுறுத் தகவல்
—-
சம்ஸ்கிருதத்தில் ஒரு பெளத்த சமயச் சொல்லகராதி செய்து விட்டு…அதற்கு சம்ஸ்கிருதப் பேரகராதி ன்னு பேரு வைத்தால்…அதுவும் தவறே!
—–
அமரகோசம் என்ற சம்ஸ்க்ருத சொற்களஞ்சியம் இயற்றிய அமரசிம்மன் என்ற மன்னனை ஒரு சமண சமயியாகவே கொள்வர். சிலர் இவரை பௌத்தர் என்பதும் உண்டு. அமரசிம்மனின் அமரகோசம் மிகவும் பெருமை வாய்ந்தது.
அதில் புத்தரைப் பற்றி சொல்லப்படுவது
ஸர்வஜ்ஞ: ஸுகதோ புத்தோ தர்மராஜஸ்ததாகத:|
ஸமஸ்தபத்ரோ பகவாந் மாரஜித் லோகஜித் *ஜிந:*||
அதிலே அமரசிம்மன் புத்தரை ஜினர் என்றே குறிப்பிடுகிறார்.
என்ன அமரசிம்மனை biased என்று சொல்ல எனக்கு நாவெழவில்லை.
April 19th, 2012 at 9:56 pm
தை முதல் நாளோ – ஒரு பகுதியில் சூரியனுக்கு பொங்கல் படைக்கும் திருநாள். இந்தியா முழுவதும் அன்று மகர சங்கராந்தி என்று புனித நீராடி முன்னோர்க்கு தர்ப்பணம் செய்யும் நாள். பீஷ்மர் அம்புப் படுக்கையில் உயிரைப் பிடித்துக்கொண்டு இந்தப் புனித நாளுக்காகக் காத்திருந்தார். நண்பர் சொல்வது போல் காமனையும், சோமனையும் கன்னிப் பெண்கள் வழிபடும் நாள். ( இதைத்தான் காமா சோமான்னு கோலம் போடு என்று சொல்வது ) இதில்தான் மதம் அதிகமாக உள்ளது. சித்திரையில் இப்படி எதுவுமே கிடையாது. வாழ்க்கை இனிப்பு, கசப்பு, புளிப்பு எல்லாம் கலந்தது என்பதை காட்டும் மாங்காய்- வேப்பம்பூ – வெல்லப் பச்சிடி செய்வது மட்டும்தான். இங்குதான் சடங்குகள் ஒன்றும் கிடையாது.
April 19th, 2012 at 9:58 pm
அதைப் பஞ்சாங்கம் என்றால் பஞ்சாங்கம். காலேண்டர் என்றால் காலேண்டர். சொல்லப் போனால் பஞ்சாங்கத்தில் சூரியமான, இரண்டுவிதமான சந்திர மாதங்கள், ஆங்கில மாதம், இஸ்லாமிய மாதம் எல்லாமே இருக்கும். அவர் அவர்களுக்கு தேவையான தகவல்களை பார்த்துக் கொள்ளலாம். மற்ற மதங்களின் விரத நாட்கள், பண்டிகைகள் எல்லாமே இருக்கும். இது பெரும்பாலோர்க்கு தெரியாது. அவர்களுக்கு அந்தத் தகவல்களை எடுத்துச் சொல்வதை விட்டுவிட்டு, வேறு ஒரு மாற்றுக் கருத்தை ஏன் உருவாக்க வேண்டும்?
April 20th, 2012 at 8:52 pm
கேள்வி: நம் சித்திரை, வைகாசி எல்லாம் கூட வடமொழிதான். என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா?இது செரிமானமாகவில்லை ஐயா
பதில்:முதலில் பண்டைத் தமிழ் நாட்டில் மற்ற மாநிலங்களைப் போலவே, சந்திர மாதங்களே பயன்படுத்தப்பட்டு வந்தன. அதனால்தான் மாதத்திற்கு திங்கள் என்றே பெயர். நாடு முழுவதும் ஒரே மாதிரியான கணக்கு பயன்படுத்தப்பட்டு வந்ததாலேயே பெயர்களும் ஒரே மாதிரியாக உள்ளன
இந்தியா முழுவதும் வழங்கி வரும் மாதங்களின் பெயரைப் பாருங்கள். அவை – சைத்ர, வைசாக, ஜேஷ்ட, ஆஷாட, ஸ்ராவண, பாத்ரபத (அ) ப்ரோஷ்டபத, ஆஷ்வின, கார்த்திக, ஆக்ராஹ்யான (அ) மார்கஷிர்சா, பௌஷ, மாக, பால்குன தான்.
எனவே இதே பெயர்கள்தான் நாடு முழுவதும்.
April 20th, 2012 at 8:52 pm
மற்றவர்கள் எல்லாம் பூசத்தை புஷயம் என்பதில் இருந்து பௌஷ் என்று கூற, நாம் ஏன் தை என்கிறோம் என்றால், ஏற்கனவே சொன்னதுபோல் பூசத்துக்கு மிகப் பழமையான பெயர் திஷ்யம்.( refer வால்மீகி இராமாயணம், சுந்தர காண்டம், )
sacandra kumudam ramyam saarka kaaraNDavam shubham |
tiShya shravaNa kadambam abhra shaivala shaadvalam || 5-57-1
http://www.valmikiramayan.net/sundara/sarga57/sundara_57_frame.htm
April 20th, 2012 at 8:57 pm
நாம் சூரிய மாதத்திற்கு மாறிய போதும், பழைய பெயர்களையே வைத்து வழங்குகிறோம். பரிபாடல் காலத்துக்கும், ஆண்டாள் காலத்துக்கும் இடையே சந்திர மாதம் சூரிய மாதமாக மாறியது. இன்னும் சொல்லப் போனால், சம்பந்தர் மயிலாப்பூரில் நடைபெறும் விழாக்களை வரிசைப்படுத்தும் காலம் கூட (7 ஆம் நூற்றாண்டு) சூரிய மாதமாற்றத்துக்குப் பின்தான். அதாவது பரிபாடலுக்கும், சம்பந்தருக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த மாற்றம்.
April 20th, 2012 at 10:40 pm
போன வருஷம் ஒரு வீட்டுக்கு கர ஆண்டு புத்தாண்டு வாழ்த்து சொன்ன போது, அங்க ஒரு பாட்டி சொன்னாங்க. என்னன்னா.. தை மாசம் வேப்பம்பூ பூக்கட்டும் அப்ப நான் தைமாசம் புத்தாண்டு-னு ஒத்துக்கிறேன்
April 22nd, 2012 at 5:52 am
@sankara narayanan
இங்கு சிறார் முகாமில் இணையம் அதிகம் கிடைக்காததால், உடனே வர இயலவில்லை! மன்னிக்க!
————-
//ஆனால் உங்கள் பின்னூட்டத்தில் எழுதியது
சூப்பர்! இது ஒன்றே போதும்…..நீங்கள் “எங்கிருந்து” இந்தக் கட்டுரையை அணுகி இருக்கிறீர்கள் என்று அறிய
அது மட்டும் சரியா?//
எள்ளல் என்பது, இரு முனைக் கத்தி போல!
அது கருத்தின் அடிப்படையில் இருக்கலாமே அன்றி, “தனி மனிதரின்” பேரில் இருத்தலாகாது!
உங்கள் “கருத்தை” எங்கிருந்து அணுகி இருக்கிறீர்கள்” என்று தான் சொன்னேனே தவிர,
உங்களை “எல்லாஞ் தெரிஞ்ச ஏகாம்பரம்” என்றோ, வேறு “தனிப்பட்ட அடைமொழிகளாலோ” அர்ச்சித்துச் சொன்னேனா?
இது கூடவா தங்களுக்குப் புரியவில்லை? சற்றே சிந்தித்துப் பாருங்கள்!
———–
//http://madhavipanthal.blogspot.in/search/label/paavai_book //
தை மாசமான இன்று, தரையை விளக்கி, தண்-மண்டலம் என்னும் குளிர்ச்சியான கோலம் இட்டோம்! என்று அப்பதிவில் எழுதியது நான் தான் ஐயா!
))
ஆனா. அதில் என்ன வேறுபாடு கண்டீர்கள்??
அப்பதிவில், தைந்நீராடும் பழக்கமே இல்லை ன்னு நான் எங்கும் சொல்லலையே!
அது ஆண்டாள் திருமணப் பதிவு! அதில் அவ்வளவு தான் சொல்ல முடியும்! தைந்நீராடல் முழுதும் விளக்கிக் கொண்டிருக்க இயலாது!
தரை விளக்கிக் கோலம் போட்டாங்க-ன்னு எழுதினா, அவர்கள் தைந் நீராடவில்லை ன்னு ஆயிருமா என்ன?:))
இல்லை….தரை விளக்குவது தான் புதுப்புனல் ஆடல்-ன்னு நான் சொல்வதாக நீங்களா எடுத்துக்குவீங்களா?:))
என்ன ஆச்சு ஒங்களுக்கு? இவ்வளவு சலிப்பான வாதங்கள்?:))
———-
பூலாங்குறிச்சிக் கல்வெட்டை நான் படி எடுக்கவில்லை:)
ஆனா…அந்தக் கல்வெட்டு வாசகம் என்ன சொல்லுது ன்னு தெரியும்!
அது முதலாழ்வார்கள் காலம்! சங்க காலம் அல்ல!
அக்கல்வெட்டு சங்க காலத்துக்கு “பிற்காலம்” தான்! = அது சங்க காலத் தமிழ்ப் பண்பாட்டை உறுதி செய்யும் கல்வெட்டு அல்ல! அது கலப்புகள் நிகழ்ந்து விட்ட காலம்!இதையே சொல்லி இருந்தேன்!
இப்போதாவது விளங்கிற்றா?
————–
நீங்கள் என் ஒரு கேள்விக்கும் பதில் சொல்லவில்லை!
//உங்களால் கலித்தொகை, நற்றிணையில் இருந்து காட்ட முடியுமா? அல்லது தொல்காப்பியத்தில் இருந்து????//
என்று கேட்டிருந்தேனே! என்னவாயிற்று?:))
April 22nd, 2012 at 6:14 am
@suresh
/கணபதி ஸ்தபதி – அவர் சொன்னது உண்மையாக இருக்கும் என்று நம்பியே அதைக் குறிப்பிட்டேன்//
பெருஞ்சிற்பி கணபதி ஸ்தபதி அவர்கள் மேல் எனக்குப் பெரு மதிப்புண்டு!
பிரா-கிருதம் -> செங்-கிருதம்!
ஆனா பிராகிருதம் தான் தமிழ் மொழிக்கே அடிப்படை என்பதை பலப்பல உலக மொழி அறிஞர்களும் ஏலார்!
This can be discussed in an international chair of languages and will very easily be disproved:)
————–
@தமிழன்
//திருமதி ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்கள் பதிவு செய்த//
ஜெயஸ்ரீ அம்மா என் பதிவுலக நண்பர் தான்!
அவரின் சில கட்டுரைகளை விரும்பிப் படிப்பேன்! பிழையான தகவல் என்றால், சிலவற்றில் எதிர்வினையும் ஆற்றியுள்ளேன்!
“யாருமில்லா இங்கே, இலுப்பைப் பூ சர்க்கரைப் போலே உரையாடிக் கொண்டிருப்பதை விட, அங்கு அவரிடம் சென்று எதிர்வினை ஆற்றுங்கள் பார்ப்போம்” என்ற தொனியில் நீங்கள் எழுதியது தான் தவறு!
- இது திரு. சங்கர நாராயணன் இருக்கும் இந்த இடம், “யாருமில்லா ஏதுமறியா இடம்” என்று அவரையும் சொல்வது போல் ஆகிவிடும்! இது தவறு!
ஒவ்வொரு பதிவாகத் தேடித்தேடிச் சென்று எதிர்வினை செய்து கொண்டிருக்க முடியாது!
இங்கு நான் பின்னூட்டிய காரணம், இது “தமிழ்ப் பேப்பர்” என்பதாலேயே! – இது பதிவு என்பதை விட ஒரு இதழ், பிரபலமான இதழ்….
அதனால் தான் இங்கு எதிர்வினைகளை முன்மொழிந்தேன்! சங்கர நாராயணன் சொன்ன வாதங்களுக்கான மறுப்புகளையும் வாசகர்கள் வாசித்து இருப்பார்கள் அல்லவா! அதற்காகவே!
வேண்டுமானால், ஜெயஸ்ரீ அம்மா இங்கு வந்து உரையாடினால், அவருடன் இது குறித்து மேலும் விவாதிக்க எனக்குத் தட்டேதும் இல்லை!
மற்றபடி, உங்கள் உரையாடலுக்கு நன்றி!
April 22nd, 2012 at 6:41 am
@தமிழன்
//தமிழறிஞர் கைச்சாத்திட்ட அறிக்கையே அறுதிப்படுத்த இயலும்//
தேவார முதலிகள் மூவரும் வந்து கைச்சாத்து இட்டால் தான் தேவார ஓலை தருவோம் ன்னு தீட்சிதர்கள் “கதை” போலவே இருக்கு::))
அக்காலத்தில் இன்று போல், அத்துணை Media Awareness இல்லை! எனினும், கைச்சாத்து இல்லாமல், அன்று வெளிவந்த செந்தமிழ்ச் செல்வி இதழை, அதுக்குத் தான் தேடிப் படிக்கச் சொன்னேன்!:)
————
எனக்குக் கட்சி சார்பெல்லாம் கிடையாது! தமிழைத் தமிழாக அணுகுவதோடு சரி!
அதனால் தான், கருணாநிதி சொன்ன தகவல் தவறு-ன்னு…
என் மாதவிப் பந்தல் பதிவிலும் சொன்னேன்! இதுவே:
* தமிழறிஞர்கள் பேசியது “வள்ளுவர் ஆண்டு” பற்றித் தான்!
புத்தாண்டு = தையா? சித்திரையா? ன்னு நேரடிப் பேச்சில்லை!
* புத்தாண்டு நாள் = பிற்கால “விழா”! அதுக்கு இலக்கியக் குறிப்புகள் இல்லை!
* பிற்பாடு….அடிகளாரின் மாணவர், நாவலர் சோமசுந்தர பாரதியார் தான் தை-02 ஆம் நாள் = வள்ளுவர் நாளாக வகுத்து, அது அறிஞர்களால் கொள்ளப்பட்டு…1971 இல் வள்ளுவராண்டு மட்டும் அல்லாமல், மாதமும் சேர்த்தே நடைமுறைக்கு வந்தது!
* தமிழின் புத்தாண்டு நாள் = இது மதம் கடந்ததாக இருக்க வேண்டும் என்பதே விழைவு!
(அது கருணாநிதியோ, கருணை இல்லா நிதியோ அவர்களைப் பற்றிக் கவலையில்லை)
* அதற்கு Notation வகுத்துக் குடுத்தது மட்டுமே தமிழறிஞர்கள்!
=> Year = Approx year of Valluvar (based on continuous numbering scheme)
=> Month = Thai
This is only a “Notation”! Nobody is claiming that they have வள்ளுவர் ஜாதகம் in hand or This is the Date Of Birth of vaLLuvar!
This is only a “notation” per se, that can be used for all “common tamizh”, instead of a religious oriented day & sanskrit oriented name of year! Thatz it!
———–
முனைவர் மு.இளங்கோவன் தளத்தில் செந்தமிழ்ச் செல்வி இதழ்களைக் காணுங்கள்!
http://muelangovan.blogspot.com/2012/04/blog-post_14.html
வல்லமையில் நாவலர் சோமசுந்தர பாரதியார் வள்ளுவராண்டு பற்றிச் சொன்ன பாரி நிலைய வெளியீடுகளையும் காணவும்!
http://www.vallamai.com/literature/articles/19155/
April 22nd, 2012 at 6:54 am
//வரிசைப்படுத்திக்கூறு என்றால் ஒரு குழந்தை எப்படி ஜனவரியிலிருந்து ஆரம்பிக்குமோ அதே போல்…
தமிழ்மாத வரிசை என்றால் சித்திரை, வைகாசி என்றே ஒரு குழந்தை கூட சொல்லும்//
தை, மாசி, ன்னு இன்னோரு வீட்டுக் குழந்தை சொல்லுச்சின்னா…அப்போ?
எனக்கு அது போல் சொல்லும் குழந்தைகளையும் தெரியும்! அதுக்கு என்ன சொல்வீங்க?:))
குழந்தை மட்டுமல்ல! விக்கியும் சொல்லும்:)
தமிழ் மாதங்கள் – விக்கிப்பீடியா
விக்கி சொல்வதாலேயே அது முடிந்த முடிபு ஆகி விடாது-ன்னு எனக்கும் தெரியும்!
ஆனா…ஏதோ சித்திரை, வைகாசி மட்டுமே undisputed மாத வரிசை ன்னு காட்ட வேணாம் என்றே சொல்கிறேன்! தை, மாசி என்ற வரிசையும் நிகண்டு, அகராதி, விக்கிகளில் உண்டு!
இரண்டு வெவ்வேறு வரிசைகள் இருக்கு என்பதை வாசகர்கள் அறிய வேண்டும்!
- ஏன் இப்படி இருக்கு ன்னு அவர்கள் யோசிக்கட்டும்!
April 22nd, 2012 at 7:10 am
@தமிழன்
//the sarcasm (not as an issue but a matter of fact per se) in the following statement,
——
முதற்கண்…..இந்த விஷயத்தில் உங்கள் “சோதிட/ சாஸ்திர ரீதியான” அணுகுமுறை:
//சில சமயம், மாலை 5 மணிக்குக் கூட மாதம் பிறக்கலாம். அன்று பொங்கல் பானை 5 மணிக்குதான் ஏற்றுவார்கள்//
இப்படி சோதிடக் காலம், பஞ்சாங்கம், மாசப் பிறப்பு ஆயிடுத்தா? -ன்னு பார்த்து எல்லாம் கிராம மக்கள் பொங்கல் பானை ஏற்றுவதில்லை!
இதெல்லாம் ஒரு குறிப்பிட்ட சமூகம் (அ) பட்டினத்தில் வாழும் சில வகுப்பினர் மட்டுமே!//
@தமிழரே – கருத்தில் எள்ளல் இருக்கலாம்! ஆனா தனி மனிதர்களின் மீது அல்ல!
மேற்கண்ட வாசகங்களில் கருத்தின் மீதான எள்ளல் உள்ளதே அன்றி, அவரை “எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரனே” என்று தனிமனித மொழியாகப் பேசியுள்ளேனா என்று சரி பார்த்துச் சொல்லுங்கள்!
—————
//திரு.க.ர அவர்கள் மூன்று தமிழ் மாதங்களுக்கு தமிழ் வழியாக விளக்கம் அளித்திருக்கிறார்கள்//
நன்றி!
//அமரசிம்மனை biased என்று சொல்ல எனக்கு நாவெழவில்லை//
அமரகோசம் ஒரு நிகண்டு, அவ்வளவே!
சுப்ரமணியன் = ஸ்வாமி
லக்ஷ்மி = ஜகன்மாதா
புத்தர் = ஜினன்
என்று சொல்லிச் செல்வார்!
தேவசேனாபதி; சூர; ஸ்வாமி; கஜமுகானுஜ
என்று அமரசிம்மம் சொல்வதால்….சுப்ரமணியன் மட்டுமே = ஸ்வாமி என்று ஆகி விட முடியாது அல்லவா!
அல்லது லக்ஷ்மி மட்டுமே ஜகன்மாதா என்று ஆகி விடுமா?:)
அது போலவே தான் புத்த = ஜின என்பதும்!
அமரசிம்மம் = ஒரு நிகண்டு! அவ்வளவே!
ஆனால்….பொதுவாக எல்லாச் சமயச் சொற்களையும் எடுத்துக் கொள்கிறார்!
அன்றி, சமணச் சொற்களை மட்டும் நிகண்டில் போட்டுவிட்டு, அந்த அகராதிக்கு = சமணச் சொல்லகராதி ன்னு பேரு வைக்காம, பொதுவான சம்ஸ்கிருத நிகண்டு, General Sanskrit Dictionary ன்னு அவர் பேரு வைச்சா, அப்போ அது தவறு தான்!
ஆனா அவர் அப்படிச் செய்யவில்லையே! அதையே எடுத்துக் காட்டினேன்:))
April 22nd, 2012 at 7:37 am
ஐயா சங்கரநாரயணரே…
உங்கள் கேள்விகளுக்கான….வேகமான பதில்கள் இதோ….
//1. ஜனவரி 14 முதல் என்று புது காலேண்டர் உருவாகப் போகிறதா? அல்லது தைக்கு மட்டும் பஞ்சாங்கம். சித்திரைக்கு இல்லையா?//
ஆக மொத்தம் பஞ்சாங்கம் என்ற எல்லையில் மட்டுமே சுற்றுவேன் என்று நீங்கள் எல்லை வகுத்துக் கொண்டீர்கள் போலும்!:)
ஆனா தமிழ்ப் புத்தாண்டு ன்னு தமிழறிஞர்கள் காட்டுவது பஞ்சாங்கம் சார்ந்து அல்ல!
As I said earlier, it is only a universal tamizh “notation” – free from religion, almanac, puranic stories, sanskrit names etc etc
=> Year = Approx year of Valluvar (based on continuous numbering scheme)
=> Month = Thai (NOT valluvar dob or jaathakam)
———————-
// 3 :அதற்கும்தான் விடை கூறியுள்ளேனே – ஆக இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழ் நாட்டில் சந்திர மாதம் சூரிய மாதமாகி இருக்கிறது.//
விடை கூறவில்லை!
தமிழ் நாடு சூர்யமானத்தை தழுவிக் கொண்டது என்றால்….
திங்கள் என்ற பேரை மட்டும் ஏன் அப்படியே விட்டு வைத்தார்கள்?
பால்குனம் என்ற சம்ஸ்கிருதமே பங்குனி ன்னு சொல்லும் நீங்கள்…..
எது எதற்கோ இப்படி மாற்றுப் பெயர்கள் குடுத்த போது, “திங்களை” மட்டும் அப்படியே “சூர்யமானம்” விட்டு வைத்ததன் காரணம் ஏனோ?:)
————-
//பதில் 6: நான் வேதப் புத்தாண்டு என்று கூறுவது,ஆங்கிலேயர்களின் ஜனவரி 1 க்கு//
அதைத் தான் நானும் கேட்டேன்! ஆனா வேகத்தில் “வேதப் புத்தாண்டு” ன்னு தவறுதலாகத் தட்டி விட்டேன்! “வேதப் புத்தாண்டு” = ஜனவரி ஒன்னு அல்லவா? = காஞ்சி ஆசார்யாள் சொன்னது = இங்கிருந்து தான் அங்கே போச்சு
)))
நான் சொல்ல வந்தது இதுவே:
இந்துப் புத்தாண்டு என்று சொல்லுங்கள்!
“தமிழ்” என்று ஒட்ட வைத்து, ஒட்டுமொத்தமாக, “தமிழ்ப்” புத்தாண்டு என்று திணிக்காதீர்கள்….என்றே வேண்டுவது!
-ன்னு அந்த வரிகள் இருக்கணும்! மன்னிக்க!
—————
//அப்புறம் – மாயோன் மேவிய காடுறை உலகமும் என்று தமிழ் நாட்டை ஐந்து கடவுள்களுக்கு உரியதாகச் சொன்ன தொல்காப்பியமும் தமிழ் இந்து இலக்கணம் என்று ஆகிவிடும்//
சூப்பரோ சூப்பர்!
மாயோன், சேயோன் = பூர்வ குடிகள் வணங்கிய வழக்கம்!
இந்துக் கடவுளர் அல்லர்! அவர்கள் மேல் புராணக் கதைகளும் இல்லை!
மேலும் இது தொல்காப்பிய – சங்க கால காலநிலை மட்டுமே!
இன்னிக்கி தேதியில், மாயோன் சேயோன் தான் தமிழ் நிலத்தின் தனித்த கடவுள்கள்/ அடையாளம் ன்னு தொல்காப்பியரும் சொல்லலை! தமிழ் அறிஞர்களும் சொல்லலை!
அதே போல், இன்றைய தேதியில், அறுபது ஆண்டுப் பேர்களை, சாஸ்திரப் பெயர்களைத் தமிழின் மீது திணிக்காதீர்கள்….தமிழுக்குச் சமயம் கடந்த ஒரு புதிய அடையாளம் / Notation இருக்கட்டும் என்று மட்டுமே சொல்வது! – விளங்கிற்றா?:)
April 22nd, 2012 at 8:31 am
//கேள்வி11:. அடப் பாவிங்களா! ஒரு சாதாரண பூத்தடம் நிரம்பிய குளம்!
பதில்: சூரியன் எதற்கு பூ நிரம்பிய குளத்துக்கு வந்தது? குளிக்கவா?//
ஆமாங்க! குளிக்கத் தான்!:)
சூரியன், குளத்துக்கு எதுக்குங்க வரும்?
சுத்திப் பாக்கவா? குளிக்கவா? புனர்பூச நட்சத்திரத்தைத் தொட்டுத் தாலி கட்டவா?:))
பாட்டை, நீங்களே இன்னொருகா வாசிங்க!
//பனிப் படு பைதல் விதலைப் பருவத்து,
ஞாயிறு காயா நளி மாரிப் பின் குளத்து,
மா இருந் திங்கள் மறு நிறை ஆதிரை//
* பனிப்படும் பருவத்திலே,
* ஞாயிறு அதிகம் காயாத வேளையில்,
* குளிர்ந்த மழையால் முன்பு நிரம்பிய குளத்திலே,
* மார்கழித் திங்களில், ஆதிரை நாளில்…விழாச் செய்யத் துவங்கினர்!
இவ்ளோ தாங்க பரிபாடலில் இருக்கு! ஆனா இதுக்கு ஓட்ட வச்சி, ஒட்ட வச்சி,
//திருவாதிரை நிறைமதி நாள் ஆகும் கால் ஆதித்தன் பூத்தடத்தின் கண் (பூத்தடம்-புனர்பூசம்) நிற்கும் ஆதலின் அதனை உடைய மார்கழி மாதம் குளம் எனப்பட்டது// ன்னு இவிங்களா எழுதிக்கறாங்க!!:((
குளம் ன்னு சொன்னா = அது மார்கழியாம்!
அப்போ புனர்பூச நட்சத்திரமும் சூரியனும் ஒன்னா நிக்குமாம்!
எப்படி இருக்கு கதை? அப்போ காயா ஞாயிறு, நளி மாரி = இதுக்கெல்லாம் என்ன வெளக்கம் சொல்லப் போறாங்களோ? இப்பவே பயமா இருக்கு!: முருகா! ))
————–
@சங்கரநாராயணன் என் கேள்விக்கு இன்னும் நீங்க பதில் சொல்லலை!
1. நீங்க “சூரியன் பூராட நட்சத்திரத்தில் இருக்கும்போது (தனுர் ராசியில் இருக்கும்போது)” ன்னு சொல்றீங்க!
ஆனா பரிமேலழகர் “புனர்பூசம் நட்சத்திரம் (மிதுனம்-கடகம்??) ன்னு சொல்றாரு!
எது சரி????????????????
2. அம்பா ஆடல் = அம் + பா + ஆடல் ன்னு காட்டியுள்ளேன்! நீரில் பரவி ஆடல்!
ஆனா = அம்பா ன்னு சொல்றீக! இறைவியை “அம்பா” ன்னு ஒரு சாரார் பேசுறது வழக்கம்! அப்படியான இறைவியின் பேரு சங்க இலக்கியத்தில் எங்கே இருக்கு?
இதுக்கெல்லாம் பதிலே சொல்லாம, எல்லாத்துக்கும் சொல்லிட்டேன், சொல்லிட்டேன்-ன்னா எப்படி?:)
April 22nd, 2012 at 8:46 am
சங்கரநாரயணரே…
//தை முதல் நாளோ – மகர சங்கராந்தி
பீஷ்மர் அம்புப் படுக்கையில் உயிரைப் பிடித்துக்கொண்டு இந்தப் புனித நாளுக்காகக் காத்திருந்தார்.
காமனையும், சோமனையும் கன்னிப் பெண்கள் வழிபடும் நாள்.
இதில்தான் மதம் அதிகமாக உள்ளது//
உம்….
அப்பறம் சொல்லுங்களேன்! ஏன் நிறுத்திட்டீங்க??
* தை மாசம் தான் Three Kings Day! பெத்லகேமுக்கு வந்த நாள்!
* தை மாசம் தான் Jewish Shabbat – Parashat
* சில சமயம் முகர்ரம் கூட வரும்!
அதுனால தை மாசம் தான் “மதம் புடிச்ச மாசம்”!
சித்திரை = திவ்யமான மாசம்! சடங்கே இல்லாம எல்லாரும் பச்சடி தின்னும் மாசம்!
டைப் டைப்பாச் சொல்லும் உங்க பதில்கள் ரொம்பப் பிடிச்சிருக்கு! முருகா!
)
————-
பீஷ்ம ஏகாதசி = சங்கராந்தி அன்னிக்கி கிடையாதுங்க! For your information….
————–
சித்திரையை நிறுவ இத்தனை மெனக்கெட வேணாம்!
நான் தான் சொல்லிட்டேனே, கருணாநிதி சொல்வது தவறு….தைத் திங்களே புத்தாண்டு விழா நாள் ன்னு தமிழ் இலக்கியமும் சொல்லலை! தமிழறிஞரும் சொல்லலை!
வள்ளுவராண்டு – தை என்பது ஒரு Notation ஆக வகுத்துக் குடுக்கிறார்கள், அவ்வளவே!
————-
ஒரு பின்னூட்டத்தில் மெய்க் கந்தன் சொல்வது போல…
தைஇத் திங்கள் தண்கயம் படியும் என்பதெல்லாம் தை மாதத்தின் சிறப்பே அன்றி….அது புத்தாண்டு மாதம் ன்னு சங்கத் தமிழ் எங்குமே சொல்லவில்லை! இதையே என் பதிவிலும் குறிப்பிட்டு இருந்தேன்!
தமிழைத் தமிழாகவே அணுகுவோம்…
* மதம் மூலமாகவும் அல்ல!
* போலியான பகுத்தறிவு / திராவிட மாயை மூலமாகவும் அல்ல!
April 22nd, 2012 at 9:00 am
முடிப்பாகச் சிலது சொல்லிக் கொள்ள விழைகிறேன்!
—————–
நான், தமிழ் மட்டுமல்லாமல், ஆன்மீகம் என்ற துறையிலும் நின்று பதிபவன் தான்!
என் பதிவில், ஆழ்வார்கள் – நாயன்மார்கள் தான் அதிகம் வருவார்கள்!
எப்போதாவது மரியன்னை, இயேசு (அ) நில்லு இப்ராஹிம் நில்லு என்றும் வருவார்கள்!
அதே சமயம், தியாகராஜ கீர்த்தனைகளை, மெட்டு மாறாமல் தமிழில் கொணர்ந்து கண்ணன் பாட்டிலே தருவதும் என் வழக்கம்!
http://kannansongs.blogspot.com/search/label/languages2tamil
தெலுங்கு மிகவும் பிடிக்கும்!
அதே போல் வடமொழி சுப்ரபாதமும், பொருள் தருவது வழக்கம்!
= http://verygoodmorning.blogspot.com/
ஆனால் முருகனும் திருமாலுமே அதிகம் உலாத்தல் செய்வார்கள்!:))
= இதைச் சொல்வதில் எனக்கு எந்தக் கூச்சமும் இல்லை!
ஆனா, அதே நேரத்தில், தமிழ் இலக்கியமே = இந்து மரபு தான் என்று சொல்லவே மாட்டேன்!
* தமிழின் மரபுகள் விரிவானவை!
* அதில் சமய இலக்கியங்களும் ஒரு துறை, அவ்வளவே!
* ஒரு துறையே, மொத்த ஆறும் ஆகி விடாது!
தமிழின் அடையாளங்கள் = மதம் கடந்தவை!
தமிழுக்கான புத்தாண்டும் அப்படியே!
—————
April 22nd, 2012 at 9:16 am
ஆனால், இங்கு உரையாடும் போது, சிலரின் கருத்துக்கள் “பிரமிக்க” வைக்கின்றன!
* //தமிழ் என்ற உடலுக்கு இந்து சமயம் என்பது உயிர்//
* //இந்து சமயத்தை விலக்கிய தமிழ் உயிரற்ற உடல்//
* //only those who continue to stick to Hinduism can be considered as Tamils//
* //my elders have preached and i want to practice the same “chitharai” as tamil new year//
————-
முன்னோர்கள் சொன்னதெல்லாம் அதன்படியே செய்கிறோமா என்ன? சந்தி எத்தனை பேர் அப்படியே செய்கிறார்கள்?:( – லோகக் க்ஷேமார்த்தம்!:((
முன்னோர்கள் சாதிப் பெயர்களோடு திகழ்ந்தார்கள்! இன்றும் அப்படியேவா திகழ்கிறோம்?
ஒரு சில தலைமுறை…சித்திரை ஸம்வத்சரங்களை = “தமிழ்ப்” புத்தாண்டு என்று விட்டதால், காலா காலத்துக்கும், மொத்த தமிழ்ப் பண்பாட்டுக்கும்….அதுவே தமிழ் நாள் ஆகி விடாது!
அதற்காகப் பூஜைகளை நிறுத்தச் சொல்லவில்லை! பண்டிகை கொண்டாடப்பட வேண்டியது தான்! பஞ்சாங்கம் படிச்சி, பூஜை செய்து, பச்சடி சாப்பிட வேண்டியது தான்!
ஆனா அதைப் பொதுவான “தமிழ்” அடையாளமாகச் செய்து விடல் கூடாது!
இதை, இன்றில்லையேனும், சிறிது சிறிதாக, வரும் தலைமுறைகள் உணர்ந்து கொள்ளும்!
————–
* //இந்து சமயத்தை விலக்கிய தமிழ் = உயிரற்ற உடல்//
* //only those who continue to stick to Hinduism can be considered as Tamils//
இப்படியான தளத்தில் உரையாடினால், அது சுழல்வாதமாகத் தான் போய் முடியுமே தவிர….
“மெய்ப்பொருள்” காண்பது அறிவு என்னும் ஐயன் வாக்குக்கு இணங்க, “ஆய்வு மனப்பான்மையோடு” உரையாட முடியாது!
எனவே இத்துடன் நிறைத்துக் கொண்டு, முத்தாய்ப்பாக சில சொல்லி முடிக்கிறேன்!
———————–
April 22nd, 2012 at 9:36 am
1. கருணாநிதி சொல்வது தவறு! தமிழறிஞர்கள் பச்சையப்பன் கல்லூரியில் “தையே புத்தாண்டு” என்று சொல்லவில்லை! அவர்கள் பேசியது வள்ளுவரின் காலம் மட்டுமே!
2. அதே சமயம், நாவலர் சோமசுந்தர பாரதியார், மற்றும் அறிஞர்கள், மறைமலை அடிகள் ஆராய்ச்சியின் முடிபாக, “வள்ளுவராண்டு – தை” என்று பின்பு, முன்மொழிந்தார்கள்!
http://www.vallamai.com/literature/articles/19155/
3. இது வள்ளுவர் பிறந்த நாளோ, (அ) அவரின் ஜாதகக் குறிப்பின் அடிப்படையோ அல்ல!
Itz only a “notation” for Tamizh – free from religion, almanac, and all other sectional representatations!
பொதுமையின் முடிபே அது!
4. சித்திரையில் புத்தாண்டு, இந்துப் புத்தாண்டு அல்லது இந்து மரபியல் புத்தாண்டு! அவசியம் கொண்டாடப்பட வேண்டும்!
ஆனா அதற்கு “தமிழ்” என்ற முன்னொட்டை வைத்து, “மொத்த தமிழ்ப் பண்பாட்டுக்குமான நாள்” எனச் சொல்லுதல் சான்றாண்மை அல்ல!
தமிழ் என்னும் ஆறுக்கு = சமயம் ஒரு அழகான துறை! சமய”மே” துறை அல்ல!!
5. இப்படித் தையா? சித்திரையா? என்று அடித்துக் கொள்வதில், தமிழுக்கு எந்த லாபமோ, ஆக்கமோ இல்லை!
இது “சமயம் கடந்த பொதுமை” என்ற ஒரு ஒழுங்குநிறை மட்டுமே!
இதைச் சட்டம் போட்டு எல்லாம் மக்களைக் கொண்டாடச் சொல்ல முடியாது!
இதற்கு, படிப்படியான விழிப்புணர்வும், தொடர்ந்த பேச்சும், நல்ல தலைமையுமே ஊக்கமாக அமையும்! இதைச் சிறிது சிறிதாக வரும் தலைமுறை புரிந்து கொள்ளும்!
6) http://madhavipanthal.blogspot.com/2012/04/tamilnewyear.html
———————
கிழக்கு & பத்ரி/ மருதன்-க்கு என் நன்றி!
@சங்கரநாராயணன், @தமிழன் – வெறி சார்ந்த உரையாடலாய் இல்லாமல், பொருள் சார்ந்த உரையாடலுக்கு நன்றி!
April 22nd, 2012 at 3:10 pm
கேள்வி: உங்களை “எல்லாஞ் தெரிஞ்ச ஏகாம்பரம்” என்றோ, வேறு “தனிப்பட்ட அடைமொழிகளாலோ” அர்ச்சித்துச் சொன்னேனா?
இது கூடவா தங்களுக்குப் புரியவில்லை? சற்றே சிந்தித்துப் பாருங்கள்!
பதில்: அது என் கருத்து இல்லை. அதைச் சொன்னவர்களும் அதற்கான விளக்கத்தையும் கொடுத்துவிட்டார்கள்.
1)ஆளாளுக்கு கல்வெட்டு-ங்கிறாங்க!:) 2வேற ஒருத்தர் எழுதிக் கொடுக்கப் படிப்பவர் 3)பல பேருக்கு, இவரு பேரு கூடத் தெரியாது! என்றே கருத்தை அணுக வேண்டும் என்று உங்களிடம் இருந்து கற்றுக் கொள்கிறோம்.
April 22nd, 2012 at 3:11 pm
கேள்வி: தரை விளக்கிக் கோலம் போட்டாங்க-ன்னு எழுதினா, அவர்கள் தைந் நீராடவில்லை ன்னு ஆயிருமா என்ன?:))என்ன ஆச்சு ஒங்களுக்கு? இவ்வளவு சலிப்பான வாதங்கள்?:))
பதில்: சங்க காலத்தில் தை நீராடல் – அதுவே பின் மார்கழி நீராடல் என்பது தவறு. மார்கழி, தை இரண்டு மாதங்களிலும் நீராடுவார்கள் என்று நீங்கள்தான்ஆதாரம் கொடுக்கவேண்டும்.
எனக்கு ஒன்றும் ஆகவில்லை. நீங்கள்தான் தரை விளக்கிக்கு தலை விளக்கி என்று கூறிக் கொண்டு இருக்கிறீர்கள்.
April 22nd, 2012 at 3:12 pm
கேள்வி: நீங்கள் என் ஒரு கேள்விக்கும் பதில் சொல்லவில்லை!
//உங்களால் கலித்தொகை, நற்றிணையில் இருந்து காட்ட முடியுமா? அல்லது தொல்காப்பியத்தில் இருந்து????//என்று கேட்டிருந்தேனே! என்னவாயிற்று?:))
பதில்: நண்பரே! நீங்கள் கட்டுரையைப் படித்துவிட்டுதானே பின்னூட்டம் எழுதுகிறீர்கள்? நான் பரிபாடலுக்கும், ஆண்டாளுக்கும் இடைப்பட்ட காலத்தில் சூரியமான மாதம் வந்துவிட்டது என்று சொல்கிறேன். தொல்காப்பியம், நற்றிணை, குறுந்தொகை எல்லாம் பரிபாடலுக்கு முற்பட்ட காலம் என்பது தெரியும் அல்லவா?
April 22nd, 2012 at 3:13 pm
கேள்வி: ஆனா தமிழ்ப் புத்தாண்டு ன்னு தமிழறிஞர்கள் காட்டுவது பஞ்சாங்கம் சார்ந்து அல்ல!
As I said earlier, it is only a universal tamizh “notation” – free from religion, almanac, puranic stories, sanskrit names etc etc
பதில்: அந்தத் தை எப்போ ஆரம்பிக்கும்? சூரியனையோ சந்திரனையோ சாராமல் அந்த மாதம் தொடங்குமா? எப்போது தொடங்கும்? ஆகும் அணி ஆவணி, யாருக்கு அணி? வைகும் ஆசி வைகாசி? யாருக்கு ஆசி? அப்ப மார்கழி என்ன? தை என்ன? நீங்கள் சொன்ன விளக்கம் எல்லாம் எந்த புத்தகம்?
April 22nd, 2012 at 3:14 pm
கேள்வி: தமிழ் நாடு சூர்யமானத்தை தழுவிக் கொண்டது என்றால்….
திங்கள் என்ற பேரை மட்டும் ஏன் அப்படியே விட்டு வைத்தார்கள்?
பால்குனம் என்ற சம்ஸ்கிருதமே பங்குனி ன்னு சொல்லும் நீங்கள்…..
எது எதற்கோ இப்படி மாற்றுப் பெயர்கள் குடுத்த போது, “திங்களை” மட்டும் அப்படியே “சூர்யமானம்” விட்டு வைத்ததன் காரணம் ஏனோ?
பதில்: refer 54.
April 22nd, 2012 at 3:14 pm
கேள்வி: மாயோன், சேயோன் = பூர்வ குடிகள் வணங்கிய வழக்கம்!
இந்துக் கடவுளர் அல்லர்! அவர்கள் மேல் புராணக் கதைகளும் இல்லை!
மேலும் இது தொல்காப்பிய – சங்க கால காலநிலை மட்டுமே!
பதில்: பதில்: வருணன் – அவர் யாரு?
அலைவாய்ச் செருமிகு சேஎயொடு உற்ற சூளே! என்ற அகநானூறுப் பாடலின் விளக்கம் என்ன?
நானும் சமயத்தைக் கொண்டுவந்து எல்லாவற்றிலும் ஏற்றாதீர்கள் என்றுதான் சொல்கிறேன்.
April 22nd, 2012 at 3:15 pm
கேள்வி : தமிழுக்குச் சமயம் கடந்த ஒரு புதிய அடையாளம் / Notation இருக்கட்டும் என்று மட்டுமே சொல்வது! – விளங்கிற்றா?:)
பதில்: தை எப்படி சமயம் இல்லாமல் ஆகும்? அப்ப பீஷ்மர் ஏன் அம்புப் படுக்கையில் படுத்தபடி இந்த நாளுக்காகக் காத்திருந்தார்? இது என்ன லாஜிக்? சுத்தமா விளங்கவில்லை.
April 22nd, 2012 at 9:43 pm
கேள்வி : சூரியன் ராசிகளில் இருப்பதுதான் மாதம் என்பதற்கு என்ன ஆதாரம்?
பதில்: மணிமேகலை – கீழ்கண்ட பாடலையும் அதற்கான லிங்கையும் பாருங்கள். மணிமேகலை பௌத்த நூல். அவர்களும் சூரியக் கணக்கைதான் பின்பற்றியுள்ளார்கள்.
இளவேனிலில் எரி கதிர் இடபத்து
ஒருபதின் மேலும் ஒருமூன்று சென்ற பின்
மீனத்து இடைநிலை மீனத்து அகவையின்
போதித் தலைவனொடு பொருந்தித் தோன்றும்
ஆபுத்திரன் கை அமுதசுரபி (பாத்திரம் பெற்ற காதை)
எரி கதிர் இடபத்து -ஞாயிறு இடபத்தில் உள்ள வைகாசித் திங்களில்,
http://www.tamilvu.org/library/libindex.htm
April 23rd, 2012 at 11:57 am
கேள்வி:
* பனிப்படும் பருவத்திலே,
* ஞாயிறு அதிகம் காயாத வேளையில்,
* குளிர்ந்த மழையால் முன்பு நிரம்பிய குளத்திலே,
* மார்கழித் திங்களில், ஆதிரை நாளில்…விழாச் செய்யத் துவங்கினர்!
சரி – உங்க வழிக்கே வரேன். மார்கழித் திங்களில் ஏன் தை நீராடல்?
April 23rd, 2012 at 11:58 am
கேள்வி: ஆனா = அம்பா ன்னு சொல்றீக! இறைவியை “அம்பா” ன்னு ஒரு சாரார் பேசுறது வழக்கம்! அப்படியான இறைவியின் பேரு சங்க இலக்கியத்தில் எங்கே இருக்கு? அம்பா ஆடல் = அம் + பா + ஆடல் ன்னு காட்டியுள்ளேன்! நீரில் பரவி ஆடல்!
பதில்: ஏன் அம்பாவை அம்பிகை என்று எடுத்துக் கொள்ளவேண்டும் என்பதற்கு அடுத்த வரியில் விளக்கம் இருக்கிறது.
முனித் துறை முதல்வியர் முறைமை காட்ட,- அதாவது – வயதான் பெண்கள் வழிகாட்டுதலின் படி முறையாக நீராடினார்கள் – இந்த முறையையே இது சாதாரண நீச்சல் இல்லை – வழிபாடு என்று உரை ஆசிரியர்கள் கூறுகிறார்கள். நீங்கள் இதற்க்கு அந்த வயதான பெண்கள் எல்லாம் ஸ்விம்மிங் கோச் என்று பொருள் கூற மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
April 23rd, 2012 at 11:59 am
கேள்வி: பீஷ்ம ஏகாதசி = சங்கராந்தி அன்னிக்கி கிடையாதுங்க! For your information….
)என்ன வெளக்கம் சொல்லப் போறாங்களோ? இப்பவே பயமா இருக்கு!: முருகா! ))
டைப் டைப்பாச் சொல்லும் உங்க பதில்கள் ரொம்பப் பிடிச்சிருக்கு! முருகா!
சங்கரந்திக்கு பீஷ்ம ஏகாதசி – ஆகும் அணி ஆவணி எல்லாம் எப்படிப்பட்ட விளக்கங்கள்?
April 23rd, 2012 at 11:59 am
கேள்வி: நான், தமிழ் மட்டுமல்லாமல், ஆன்மீகம் என்ற துறையிலும் நின்று பதிபவன் தான்!
பதில்:
நீங்கள் எழுதியுள்ள கீழக் கண்ட பதிவு ஏற்றுக்கொள்ளத் தக்கதே இல்லை.-இதை எழுதியது = கமலை ஞானப் பிரகாச ஸ்வாமிகள்! அதுவும் சுமார் 500 yrs முன்னாடித் தான்! பல பேருக்கு, இவரு பேரு கூடத் தெரியாது! = சைவ சித்தாந்த சந்தானாச்சாரியார், தருமபுர ஆதீனத்தின் குரு இவரு! -
April 23rd, 2012 at 12:00 pm
கேள்வி: தமிழைத் தமிழாகவே அணுகுவோம்…
* மதம் மூலமாகவும் அல்ல!
பதில்: நீங்கள்தான் அணுகுகிறீர்கள். இதில் எங்கே மதம் வந்தது?சூரியனை வைத்து ஒரு கணக்கீடு. சம்பந்தர் – ஆண்டாள் காலத்திலிருந்து இருக்கும் முறை.எல்லாத்துலயும் மதத்தைக் கொண்டுவந்தா அப்புறம் எதுவுமே செய்ய முடியாது. அப்புறம் காக்கா- நரிக் கதை கூட மதம் ஆகிவிடும். ஒரு சாரார் பண்டிகைக்கு வடை பாயசம் செய்கிறார்கள். ஒரு சாரார் சாமிக்கே வடை மாலை போடுகிறார்கள். சங்க இலக்கியங்களில் வடை இல்லை.எனவே பாட்டி வடை சுடக்கூடாது என்று ஆகிவிடும். எப்படி எல்லோரும் ஜனவரி முதல் நாளைக் கொண்டாடுகிறார்களோ – அதே போல் சித்திரை முதல் நாள். சொல்லப் போனால் இந்தப் பகுதியில் மட்டும் கொண்டாடும் நாள். இதில் எல்லாம் போய் மதம் என்று சொல்லிக்கொண்டு.
April 23rd, 2012 at 5:28 pm
——-
“யாருமில்லா இங்கே, இலுப்பைப் பூ சர்க்கரைப் போலே உரையாடிக் கொண்டிருப்பதை விட, அங்கு அவரிடம் சென்று எதிர்வினை ஆற்றுங்கள் பார்ப்போம்” என்ற தொனியில் நீங்கள் எழுதியது தான் தவறு!
- இது திரு. சங்கர நாராயணன் இருக்கும் இந்த இடம், “யாருமில்லா ஏதுமறியா இடம்” என்று அவரையும் சொல்வது போல் ஆகிவிடும்! இது தவறு!
——
ஐயா, இலுப்பைப்பூ சொல்லாடலுக்காக தங்களிடம் மன்னிப்பு கேட்ட போதே, முருகா, ஞானபண்டிதா, சொல்லாடலில் இலுப்பைப்பூவைத்தவிர ஆலையும் உள்ளதே இது மற்றவரையும் குறித்ததாக பிறர் எண்ணலாகுமே என்று நினைத்தேன். நீங்க போட்டுக்குடுத்த பிறகும் (குறையாகச் சொல்லவில்லை; முருகன் பணித்தபடியே என்றே எடுத்துக்கொள்கிறேன் – செய்வன திருந்தச்செய் என்று பணிக்கிறான் போலும்) நான் மௌனமாக இருக்கலாமா? திரு சங்கரநாராயணனோ அல்லது ஏனைய நண்பர்களோ மேற்படி சொல்லாடலுக்கு மன்னிக்க.
ஐயா, நான் ஆய்வாளன் அல்ல. மேலும் தாங்கள் பதிவு செய்த ஆய்வுக்கருத்துகளை முழு முச்சூடாக நான் மறுக்கவும் இல்லை; ஏற்கவும் இல்லை. எனக்குப் புரிந்த வரை நான் மாறுபடும் கருத்துக்களை பதிவு செய்துள்ளேன். அவ்வளவே. திருமதி ஜெயஸ்ரீ அவர்களது தளத்தில் அவரிட்ட கருதுகோள்களை தாங்கள் வாசிக்கவேணும் என்று கேட்டுக்கொண்டது ஒரு விண்ணப்பமே. அது சவால் போன்று தொனித்துள்ளது என்பது தங்கள் மறுமொழியிலிருந்து தெரிகிறது. விண்ணப்பத்திற்குக் காரணம் கருத்துக்கள் செம்மைப்பட வழிகோலுமே என்ற ஆசையால் (பேராசை!) தான். தாங்கள் விளக்கமளித்தபடிக்கு இல்லை. மற்றபடி எத்தளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யவேணும் என்பது தங்களிச்சைப்படியே இருக்கவியலும். நன்று.
——
தை, மாசி என்ற வரிசையும் நிகண்டு, அகராதி,
—–
ஆதாரமில்லாது நீங்கள் பேசமாட்டீர்கள். “தை” மாதத்தை துவக்கமாகக் கொண்டு மாதவரிசை சொல்லும் நிகண்டு, அகராதி பற்றிய குறிப்பினை தருக என விண்ணப்பிக்கிறேன். முருகா!, எள்ளலோ என எண்ணவேண்டா. ஆவல்மேலிடவே கேட்கிறேன்!
—-
கருத்தில் எள்ளல் இருக்கலாம்! ஆனா தனி மனிதர்களின் மீது அல்ல!
—-
ஏன் எள்ளலைப் பிடித்து இன்னும் தொங்கிக் கொண்டிருக்கிறீர்கள்? தங்கள் எள்ளல்கள் கருத்து சார்ந்தவை பிறருடைய எள்ளல்கள் தனிமனிதர்கள் சார்ந்தவை என நிறுவ தாங்கள் முனைவது மாமியார் உடைத்தால் மண்கலம் மருமகள் உடைத்தால் பொன்கலம் என்று சொல்வதைப்போல் தொனிக்கிறது.
—
மேற்கண்ட வாசகங்களில் கருத்தின் மீதான எள்ளல் உள்ளதே அன்றி, அவரை “எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரனே”
—-
என்ன, அந்த அவர், இவர் மற்றும் உவரில் “ஏட்டைக்கெடுத்தவர்” என பரிமேலழகருக்கு தாங்கள் கொடுத்த நற்சான்றிதழ் தனிமனிதரின் மீதான எள்ளல் இல்லை என்று கொள்ளவேணும் போலும்.
—–
//திரு.க.ர அவர்கள் மூன்று தமிழ் மாதங்களுக்கு தமிழ் வழியாக விளக்கம் அளித்திருக்கிறார்கள்//
நன்றி!
—–
அதெப்படி ஐயா கமுக்கமாக இப்படி ஒரு மறுமொழி. என் மறுமொழியில் நீங்கள் ஏதேனும் ஒரு நூலின் அடிப்படையில் இதை சொல்லியிருக்க வேணும். ஆதலால் அதே நூலின் அடிப்படையில் மற்ற மாதங்களுக்கும் விளக்கமளிக்க வேணும் என்று விண்ணப்பம் செய்திருந்தேன். நைசாக இப்படி பட்டும் படாமல் கழண்டு கொள்ளும் படி பதிலிறுப்பது நன்றன்று.
—–
ஆனா, அதே நேரத்தில், தமிழ் இலக்கியமே = இந்து மரபு தான் என்று சொல்லவே மாட்டேன்!
—-
நான் எங்கும் அவ்வாறு சொல்லவில்லை. தமிழ் என்ற உடலுக்கு இந்து சமயம் என்பது உயிர் என்ற கூற்றில் பேசப்படுவது தமிழர் தம் மரபு. இது உள்ளது உள்ள படி. இந்து சமயத்தில் சைவம், வைணவம், சாக்கியம், சமணம் இன்னபிற சமயங்கள் அடங்கும். அதே சமயம் இக்கூற்று இசுலாமிய கிறித்தவ சமயங்களை குறைத்துச் சொல்வதாக எண்ணுவதும் தகாது. இந்து ஞான மரபில் பல்வேறு சமயங்களூடே காலங்காலமாக உரையாடலும் இருந்துள்ளது. அதனால் தான் சாக்கியரோ அல்லது அமணரோ எழுதிய தமிழ்க்காப்பியங்களிலும் சைவ மற்றும் வைணவம் சார்ந்த கருத்துக்களைக் காண இயலும். ஏனென்றால் சமயக்கருத்துக்களில் வேறுபாடு இருப்பினும் இழையூடும் மரபு ஒன்றே.
இலக்கியத்திற்கு எல்லைகளைத் தகர்க்கும் ஆற்றல் உண்டு. தமிழ் இலக்கியமே = இந்து மரபு என்று நான் சொல்லவில்லை. சொல்லவும் மாட்டேன். இசுலாமிய கிறித்தவ தமிழ் அறிஞர்கள் தமிழில் சமைத்த நூற்களையும் தமிழின் சொத்தாகவே நான் நோக்குகிறேன். செந்தமிழின் கருவூலம் வேறு தொல் தமிழ் மரபு வேறு. தமிழ் மரபு சமயம் சார்ந்ததே – இந்து சமயம் சார்ந்ததே (இந்து என்ற சொல் காலத்தால் மிகப்பிந்தியது என்ற வாதம் விடுத்து சொல் சுட்டும் மரபில் கவனம் செலுத்துங்கள்) என்பது என் புரிதல்.
மரபு ரீதியாக தொல்தமிழர் தம் வாழ்வியல் இந்து ஞான மரபைச்சார்ந்தது என்றே என் புரிதல். மாயோனும் சேயோனும் இந்துக்கடவுட்களல்ல என்ற கூற்றை ஏற்க இயலவில்லை. திரு சங்கர நாராயணன் அவர்கள் சுட்டிக்காட்டிய படி வருணனும் இந்துக்கடவுள் இல்லை என இயம்பவியலுமா? இப்படியே போனால் அருணகிரி பாடிய வள்ளிக்கு வாய்த்த பெருமாளும் தேவானை மணாளனும் வேறு வேறு கடவுட்கள் என்றும் இயம்பத்தகும் போலும்.
தங்கள் தமிழ்ப்பற்றிலும் அதற்கு மேலாக பழனிப்பதிவாழ் பாலகுமாரனைப்போற்றும் திருப்புகழ் மேல் தங்களுடைய பற்றிலும் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. கருத்துக்களில் வேற்றுமை தனை பொறுப்பீர்களாக.
உருகியு மாடிப் பாடியு மிருகழல் நாடிச் சூடியு
முணர்வினோ டூடிக் கூடியும் …… வழிபாடுற்
றுலகினொ ராசைப் பாடற நிலைபெறு ஞானத் தாலினி
யுனதடி யாரைச் சேர்வது …… மொருநாளே
என சுவாசிப்பவனுக்கு முருகனடியார்தம் பாததூளி என் சென்னியதே என அவாவுள்ளவனுக்கு தங்களையென்ன எவரையும் குறைவாகப் பேசல் தகாது. பின்னும் எம் சொல்லாடல்களில் தாங்கள் சொல்வது போலத் தனிநபர் எள்ளல் என்று ஏதும் இருக்குமாயின் மன்னிக்க.
April 24th, 2012 at 9:00 pm
//@suresh
/கணபதி ஸ்தபதி – அவர் சொன்னது உண்மையாக இருக்கும் என்று நம்பியே அதைக் குறிப்பிட்டேன்//
பெருஞ்சிற்பி கணபதி ஸ்தபதி அவர்கள் மேல் எனக்குப் பெரு மதிப்புண்டு!
பிரா-கிருதம் -> செங்-கிருதம்!
ஆனா பிராகிருதம் தான் தமிழ் மொழிக்கே அடிப்படை என்பதை பலப்பல உலக மொழி அறிஞர்களும் ஏலார்!
This can be discussed in an international chair of languages and will very easily be disproved:)//
அப்படிங்களா? அப்போ பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகக் கருதப்படும் குறளை, சங்கம் மருவிய காலத்துத் தோன்றிய இலக்கியமான திருக்குறளை, சங்க காலத்துக்குப் பிற்பட்டது என்று இலக்கிய வரலாற்று ஆசிரியர்களால் கருதப்பட்டு, ”தமிழ் இலக்கிய வரலாறு”களில் ஆவணப்படுத்தப்பட்ட குறளை எழுதிய திருவள்ளுவர் எப்படி கி.மு. நூற்றாண்டில் பிறந்தவராகக் கருதப்படுகிறார்? தமிழறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறார்? அடிப்படையே தவறாக இருக்கிறதே! அப்போ This is also can be discussed in an international chair of literature and will very easily be disproved இல்லீங்களா
April 24th, 2012 at 10:12 pm
சில நண்பர்கள் இன்னும் இரண்டு சந்தேகங்களுக்கு நான் விளக்கம் அளிக்கவில்லை என்று கூறியுள்ளார்கள். அவற்றிற்கும் விளக்கம்:
கேள்வி:1) இறைவியை சங்க இலக்கியங்கள் கொற்றவை என்றே அழைக்கும். – அம்பா என்பது ஒரு சாராரின் சொல்லாடல்.
பதில்:முதலில் அம்பா என்பது ஏன் அம்பிகையைக் குறிக்கிறது என்பதற்கு அதன் அடுத்த வரியான முனித்துறை முதல்வியர் முறைமை காட்டி என்பதன் மூலமாக, இது வயதான பெண்களின் வழிகாட்டுதலின்படி நடந்த தை நீராடல். எனவே இங்கு அம்பா என்பது இறைவியாக பொருள் கொள்ளப்படுகிறது.
சிலப்பதிகாரம் இறைவியைப் பற்றிக் கூறும் வரிகள்: சிலப்பதிகாரம் – மதுரைக் காண்டம்-வேட்டுவ வரி
கொற்றவை
இரண்டுவே றுருவில் திரண்டதோள் அவுணன் 65
தலைமிசை நின்ற தையல் பலர்தொழும்
அமரி குமரி கவுரி சமரி
சூலி நீலி மாலவற் கிளங்கிளை
ஐயை செய்யவள்
வரிவளைக்கை வாளேந்தி மாமயிடற் செற்றுக் 8
கரியதிரி கோட்டுக் கலைமிசைமேல் நின்றாயால்
அரியரன்பூ மேலோன் அகமலர்மேல் மன்னும்
விரிகதிரஞ் சோதி விளக்காகி யேநிற்பாய்;
சங்கமும் சக்கரமும் தாமரைக் கையேந்திச் 9
செங்கண் அரிமால் சினவிடைமேல் நின்றாயால்
கங்கை முடிக்கணிந்த கண்ணுதலோன் பாகத்து
மங்கை உருவாய் மறையேத்த வேநிற்பாய்;
( காண்க -இணைப்பு
http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0111_01.html )
அம்பிகையின் பல பெயர்கள் பரிபாடல் காலத்தில் வழக்கில் இருந்தன.
April 24th, 2012 at 10:14 pm
கேள்வி: பூராடமா? புனர்ப்பூசமா?
பதில்: இரண்டும்தான். விளக்குகிறேன். உரை ஆசிரியர் பூத்தடம் என்று மட்டுமே குறிப்பிடுகிறார்.
முதலில் இன்றைய நட்சத்திரம் என்றால் என்ன என்று காண்போம். இன்று கார்த்திகை என்றால் அதன் பொருள் சந்திரன் நிற்கும் நட்சத்திரம். கார்த்திகை எல்லா மாதமும் வரும். ஆனால் அதோடு சேரும் நிலவு பல்வேறு பிறைகளாக- அதாவது மூன்றாம் பிறை, நான்காம் பிறை,அம்மாவாசை என்று பலவிதமாக இருக்கும். ஒரு மாதம் மட்டும் முழுநிலவாக – அதாவது பௌர்ணமியாக இருக்கும். அந்த மாதம் கார்த்திகை என்று வழங்கப்படும். இப்படி ஒவ்வொரு மாதமும் முழுநிலவு நிற்கும் நட்சரத்தின் பெயரால் அந்த மாதம் பெயர் சூட்டப் பட்டுள்ளது. இப்படி முழு நிலவு புனர்ப்பூசம் அல்லது பூசத்தில் இருக்கும் மாதம் தை எனப்படும்.
இந்தப் பாடலில் ஒரு அதிகாலை – திருவாதிரை நட்சத்திரம் – பெண்கள் தை நீராடல் தொடங்குகிறார்கள் என்ற குறிப்பு உள்ளது. காலையில் திருவாதிரை என்றால் மாலையில் புனர்ப்புசம். மாதமோ தை எனக் குறிப்பிடப்படுகிறது. எனவே மாலையில் புனர்ப்பூசம் என்பது குறிப்பால் உணரப்படுகிறது. இது சந்திரன் நிலை.
அடுத்தது சூரியன் நிலை. சூரியமான மாதம் என்பது சூரியன் ஒரு ராசியில் நிற்கும் காலம். சூரியன் ஒரு ராசி என்றால் அந்த ராசிக்கு உட்பட்ட நட்சத்திரங்களில் நிற்கும். சூரியன் 27 நட்சத்திரங்களையும் – அஸ்வினி முதல் பாதம் தொடங்கி – ரேவதி கடைசி பாதம் வரை நிற்க ஆகும் காலம் ஒரு ஆண்டு. அதுவே சூரிய ஆண்டு. குளம் என்பது பூராட நட்சத்திரம். இந்தப் பாடலில் சூரியன் இருப்பது பூராட நட்சத்திரம். பூராடம் தனுர் ராசி. எனவே சூரிய நிலையில் அது மார்கழி மாதம்.
எனவே சூரியன் தனுசில் இருக்கும்போது தை மாதம் என்று இந்த மாதம் குறிப்பிடப்பட்டதால் பரிபாடல் காலத்தில் இருந்த கணக்கு சந்திர மாதம் என்பது தெளிவு. ஆகவே சூரியன் பூராடம், சந்திரன் மாலையில் புனர்ப்பூசம்.
நண்பர் வேறு உரைகள் மூலமாக நேரடியாகவே அது மார்கழித் திருவாதிரை என்று குறிப்பிட்டிருந்தார். எனவேதான் நான் மார்கழியில் ஏன் தை நீராடுகிறார்கள் என்று கேட்டேன்? ஏன் என்றால் இப்போதைய மார்கழி அப்போது தை. அதாவது இப்போ சூரிய மாதம். அப்போ சந்திர மாதம்.
April 24th, 2012 at 10:17 pm
கேள்வி::கல்வெட்டு கல்வெட்டுங்கறதே பாஷனா போச்சு.
பதில்:ஐயா – கல்வெட்டு படி எடுக்கறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? மலை முகடுகளில் – சிதறிக் கிடக்கும் பானை ஓடுகளில் இருந்தெல்லாம் தேடித் தேடி படி எடுத்து நம் மரபை பதிவு செய்கிறார்கள் தெரியுமா? கடந்த வாரம் கேட்ட உரையில் ஒருவர் ஏரி, கண்மாய் அடியில் இருந்தெல்லாம் கல்வெட்டுகளைத் தேடித் படி எடுத்து நம் நீர்ப்பாசன மரபுகளை பதிவு செய்துள்ளதைக் கேட்டு அசந்துபோனேன். தமிழ் மொழி எவ்வளவு பழமையானது என்பதற்கு அசோகர் கல்வெட்டும், பானை ஓட்டு பிராமி எழுத்தும்தான் சாட்சி. எந்த ஆதரவும் இல்லாமல், ஊர் ஊராக சொந்தக்காசில் சென்று படிஎடுப்பது FASHION இல்லை அய்யா, பலபேரின் PASSION.
வேறு ஏதாவது சந்தேகம் இருந்தாலும் கேளுங்கள். எனக்கு தெரிந்தால் உடனே சொல்கிறேன். தெரியவில்லை என்றால் தெரிந்தவர்களிடம் இருந்து கேட்டுச் சொல்கிறேன்.
April 25th, 2012 at 11:41 am
தமிழ்நாடு என்று பெயர் முன்பு இருந்ததா.அறுபது,எழுவது ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட தமிழையும் இப்போது எழுதப்படும் தமிழையும் பார்த்தால் (இன்றும் கோவில்களில் எழுதப்படும் தமிழ் வாக்கியங்களில் பல வடமொழி எழுத்துகளும் ,சொற்களும் மிகுதியாக காணப்படும்)ஏற்பட்டு வரும் மாற்றம் புரியும்.விடாபிடியாக பழைய லை போட்டு கொண்டிருந்த சோ கூட மாறி விட்டார்.தமிழ் மாதங்களின் பெயர்கள் வடமொழி கலந்தவை என்றால் அவையும் மாறும்
மாற்றம் எனபது நடந்து கொண்டே தான் இருக்கும்.எல்லாவற்றிற்கும் ஒரு expiry date உண்டு.
சேர சோழ பாண்டியர் மற்றும் பல குறு நில மன்னர்களும் வேறு வேறு புத்தாண்டு கொண்டாடியிருக்கலாம்.ஆவணியில் புத்தாண்டு கொண்டாடப்பட்டதாக கூட தான் சான்றுகள் உள்ளன.கலைஞர் ஒரு போராட்டத்தை ஆரம்பித்து விட்டார்.அது மெட்ராஸ் மாகாணம் தமிழ்நாடு ஆனது போல் புது லை வந்தது போல நடைபெறும் காலம் வெகு தொலைவில் இல்லை.
இன்று முக்கியமான மூன்று தேசிய விடுமுறை நாட்கள் குடியரசு தினம்,விடுதலை நாள் மற்றும் காந்தி ஜெயந்தி தான்.மூன்றும் மதங்கள் கடந்த தினங்கள்.இவை மூன்றை தவிர மற்ற அனைத்து பண்டிகை விடுமுறைகளை ,தலைவர்களின் பிறந்த தினங்களோடு சேர்த்து யாருக்கு எப்போது வேண்டுமா அப்போது எடுத்து கொள்ளலாம் என்று ஒவ்வொரு ஊதிய குழுவும் பரிந்துரைத்து வந்துள்ளது.அவை நடைமுறை படுத்தப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.புத்தாண்டு தினங்களும் மதங்களை தாண்டி அனைவருக்கும் பொதுவாக மாறும் நாளும் வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.இவற்றோடு இப்போது அம்பேத்கர் பிறந்த நாளான apr 14 தேசிய விடுமுறை நாளாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடபடுகிறது.திருவள்ளுவர் ஆண்டு போல அம்பேத்கர் ஆண்டு என்பதும் வரலாம்.அதுவே கூட இந்தியாவின் புத்தாண்டாகலாம்.
பல நூற்றாண்டுகளாக எச்சில் இலையில் உருண்டால் தோல் வியாதிகள் குணமாகும் என்று நடந்து வருவதால் அதை மாற்றக்கூடாது,அனைவரும் அதை பின்பற்ற வேண்டும் எனபது ஞாயமா.மொழியிலோ,வருடத்திலோ,மாதத்திலோ கலந்த வடமொழி எச்சிலை விலக்கும் முயற்சிகள் வலுவடைந்து தான் வருகின்றன .வெற்றியும் பெறும்
April 25th, 2012 at 6:17 pm
//மாயோன், சேயோன் = பூர்வ குடிகள் வணங்கிய வழக்கம்!
இந்துக் கடவுளர் அல்லர்! அவர்கள் மேல் புராணக் கதைகளும் இல்லை!
மேலும் இது தொல்காப்பிய – சங்க கால காலநிலை மட்டுமே!//
அப்படியானால் தொல்காப்பியரால் குறிக்கப்பெறும் வருணன், வேந்தன் (இந்திரன்) போன்றோர் தமிழ்க் கடவுளர்களா, இந்துக் கடவுளர்களா? ஏனென்றால் அவர்கள் மீது நிறைய புராணக் கதைகள் இந்து மரபில் இருக்கின்றதே!
”ஆல் அமர் கடவுள்” என்று சங்க கால நூலான புறநானூற்றில் (198,199)வருகிறதே. அவர் தமிழ்க் கடவுளா இந்துக் கடவுளா? ஏனென்றால் அவரை மையமாக வைத்தும் நிறைய புராணக் கதைகள் இந்து மரபில் இருக்கின்றதே!
இல்லை புறநானூறு சங்க இலக்கியத்தில் சேராதா? ஒருவேளை மேற்கண்ட பாடல் ”கடவுள் வாழ்த்துப் பாடல்கள் இட்டுக்கட்டிப் பாடப்பட்டன” என்று சொல்லப்படுவது போல இடைச்செருகலாக இருக்குமோ?
”நெட்டிருங் கூந்தற் கடவுளர் ” என்று (கலித்தொகை-93)குறிப்பிடப்படுபவர் யார், சிவபெருமான் தானே! சிவன் தமிழ்க் கடவுளா, இல்லை இந்து மதக் கடவுளா? இல்லை; தமிழ், இந்து என இரண்டு பேரும் வழிபடும் சிவன் என்பது வேறு வேறா?
”பால்நிற உருவின் பனைக்கொடி யோனும்,
நீல்நிற உருவின், நேமியோனும், என்று
இருபெருந் தெய்வமும் உடன் நின் றாஅங்கு” (புறம் : 58)
- இவர்கள் யார்? தமிழர்களுக்கு மட்டுமே உரித்தான கடவுளர்களா? இவர்கள் மீது புராணக் கதைகள் ஏதும் இல்லையா?
”காரி உண்டிக் கடவுளதியற்கையும்” என மலைபடுகடாம் குறிக்கிறதே? சிவபெருமான் நஞ்சுண்டது புராணக் கதையா இல்லையா? இல்லை, அந்தச் சிவபெருமான் வேறு; தமிழர்கள் சிவன் என்று வழிபட்டவர் வேறா? அல்லது மலைபடுகடாம் ஆரியக் கலப்பிறகு பின் ஏற்பட்ட இலக்கியமா? ஒருவேளை இந்தப் பாடலும் வழமை போல் இடைச்செருகலாக இருக்குமோ?
இப்படி நிறைய கேட்டுக் கொண்டே போகலாம். ஆனால் இந்த் திரிக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லாமல் போய் விடும் என்பதால் இத்தோடு நிறுத்தி அமைகிறேன்.
மேலும் ஆரியம் வந்ததற்குப் பின்தான் மேற்கண்ட பாடல்கள் கொண்ட நூல்கள் இயற்றப்பட்டன என்று கொண்டால் சங்க காலப் பாடல்களான எட்டுத் தொகையும், பத்துப் பாட்டும் ஆரியர் வருகைக்குப் பின், இனக் கலப்பிற்குப் பின் தோன்றியவை என்றாகி விடும்.
தொல் தமிழ் மரபில் “இந்து மதக் கடவுள்கள்” என்று கருதப்படும் கடவுளர்களது வழிபாடும், அவர்கள் பற்றிய புராணக் கதைகளும் இருந்திருக்கவே செய்திருக்கின்றன. சங்க இலக்கியங்களில் நிறையவே அவை பற்றிய செய்திகள் காணக் கிடைக்கின்றன என்பதே உண்மை. (உடனே விநாயகர், ஆஞ்சநேயர், ஐயப்பன் என்று ஆரம்பித்து விடாதீர்கள். நான் தமிழர்/இந்து என நீங்கள் பிரித்துக் கூறும் இருவருக்கும் பொதுவான தெய்வங்களைப் பற்றியே பேசுகிறேன்)
நீங்கள் தமிழ் மரபு வேறு ; இந்து மரபு வேறு என்று நிலைப்படுத்த நினைக்கிறீர்கள். அப்படி இல்லை இரண்டும் ஒருகாலத்தில் ஒன்றாக இயைந்திருந்தன என்று காட்டுவதற்காகவே இவ்வளவு விளக்கமும்.
நன்றி.
April 27th, 2012 at 6:30 pm
//திருவள்ளுவர் ஆண்டு போல அம்பேத்கர் ஆண்டு என்பதும் வரலாம்.அதுவே கூட இந்தியாவின் புத்தாண்டாகலாம்.//
பேசாம பெரியார் பிறந்த ஆண்டை.. ஓ திராவிடர் கழகத்தினரும் உரிமை கொண்டாடுவார்கள். வேண்டாம் அண்ணா பிறந்த ஆண்டை ஓ அதிமுககாரனும் வருவான். வேண்டாம். இனி தமிழினத் தலைவர் கலைஞர் பிறந்த ஆண்டே தமிழர்களின் புத்தாண்டாய் அமைவதாக. இதை அனைவரும் பின்பற்றியே ஆக வேண்டும். ஆமா சொல்லிட்டேன்.அடுத்த ஆட்சி நம்மளுதுதான். அப்போ இது நடைமுறக்கு வரும். எச்சிலை விலக்கும் முயற்சிகள் எல்லாம் வேண்டாம். சொல்லிப்புட்டேன். சொல்லிப்புட்டேன்.
April 27th, 2012 at 9:47 pm
புத்தாண்டை மதத்தின் வாயிலாக அல்லாமல், மொழியின் வாயிலாக அணுக வேண்டும் என்றால், தமிழை தாய்மொழியாக கொண்டுள்ள கிறித்துவ, இஸ்லாமியர்களுக்கும் இது பொருந்துமா? அவர்கள் அப்படியா நடந்து கொள்கிறார்கள்? தமிழ் புத்தாண்டை சாக்காக வைத்துக் கொண்டு அன்று மதமாற்ற வியாபார ஆராதனை அல்லவா நடக்கிறது. அது அமாவாசை, பெளர்ணமிகளையும் விட்டு வைக்கவில்லை. தனது தாய்மொழி சம்பந்தப்பட்ட புத்தாண்டை கொண்டாடாத அவர்களை தமிழர்கள் கூறுவது எங்கனம்?
April 28th, 2012 at 5:06 am
@சங்கரநாராயணன்
உங்களிடம் இனிப் பேசிப் பயனில்லை! ஏன்-ன்னா பொய் சொல்லத் துவங்கி விட்டீர்கள்!:((
//நீங்கள்தான் தரை விளக்கிக்கு தலை விளக்கி என்று கூறிக் கொண்டு இருக்கிறீர்கள்.//
“தலை” விளக்கி ன்னு நான் எழுதிய ஓர் இடத்தைக் காட்டுங்கள் பார்ப்போம்!
அந்த ஆண்டாள் பாட்டு = தரை விளக்கித் தான்! தலை விளக்கி அல்ல!
—————-
April 28th, 2012 at 5:14 am
// நீங்கள் கட்டுரையைப் படித்துவிட்டுதானே பின்னூட்டம் எழுதுகிறீர்கள்?//
ஆமாங்கோ! அதான் கேக்குறேன், நற்றிணையில் இருந்து எடுத்துக் காட்ட முடியுமா?-ன்னு!
பரிபாடல் = பிற்காலம்! கடைச் சங்கம்! கலப்புகள் நிகழ்ந்து விட்ட காலம்! பல் யாகசாலை முது குடுமிப் பெருவழுதி எல்லாம் வந்து விட்ட காலம்!
அதுக்குத் தான் தொல் மரபான, முதற்சங்க காலத்தில் இருந்து தரவு கேக்குறேன்! குடுங்க பார்ப்போம்:)
————-
//வருணன் – அவர் யாரு?//
வருணம் = நீர், காற்று, கடல்! வருணவில் ன்னா என்னா ன்னும் தேடிப் பாருங்க!
அப்படியே வருணம் = மறைப்பு என்பதையும் அகராதியில் பாத்துக்கோங்க!
காற்றும் நீரும் மாறி மாறி மறைந்து ஊழி ஆடும் நிலம் = வருண நிலம்! அவனுக்கு இரங்கற் பறை!
))
கண்டிப்பா இந்த வருணன் = உங்க அஷ்ட திக் பாலகர்-ல்ல ஒருத்தன் அல்லன்!
//அலைவாய்ச் செருமிகு சேஎயொடு உற்ற சூளே! என்ற அகநானூறுப் பாடலின் விளக்கம் என்ன?//
உக்கும்….
* திருமணி விளக்கின் அலைவாய் = அழகிய மணிவிளக்கு ஒளிரும் திருச்சீர் அலைவாய் என்னும் செந்தூரில் அமர்ந்த
* செருமிகு சேஎயொடு உற்ற சூள்-போர்வன்மை மிக்க முருகனொடு உற்ற சூள் (சத்தியம்) துன்பம் தருவதாகும்!
இது ஒரு சாதாரண பாட்டு தான்! இதுல ஒங்க புராணம் எல்லாம் ஒன்னுமில்ல!
பரத்தையிடம் போய் வந்த தலைவனுக்கு, தோழி சொல்லுவது!
= ஊரில் கவ்வை (rumor) அதிகம் ஆயிருச்சி! இனி அஃது அவலம் அன்று எமக்கே! முன்பு முருகவேள் முன்பு நீ செய்த சூள் (சத்தியம்) தான் அவலம் ஆகி விட்டது ன்னு சொல்லுறா!
இதுல நீங்க புதுசா என்ன கதை, என்ன புனர்பூசம்/ பூராடத்தை ஒட்டக் கிளம்பி இருக்கீங்களோ?:))
நீங்க சொன்ன பூராடம் – புனர்பூச விளக்கத்துக்கு நன்றி!
அது உரையாசிரியர் கூற்று மட்டுமே! மூலப் பாடலில் இல்லை!
மூலப் பாடலில், கதிரவன் சாதாரணமாக ஒரு குளத்தில் ஒளி வீசுகிறான் அவ்வளவே!
குளம் = மார்கழி ன்னு எடுத்துக் கொள்வதெல்லாம் அவரவர் மனோரதங்களே! அதீத கற்பனையே!
—————-
April 28th, 2012 at 5:20 am
//தை எப்படி சமயம் இல்லாமல் ஆகும்? அப்ப பீஷ்மர் ஏன் அம்புப் படுக்கையில் படுத்தபடி இந்த நாளுக்காகக் காத்திருந்தார்?//
அடேங்கப்பா!
உங்க பீஷ்மர் அதே மாசத்துல தான் படுத்துக் கிடந்தார்-ன்னா
அவங்க Jewish Shabbat, Three Kings Day எல்லாம் அதே மாசத்துல தான் தரிசனம் பண்ண வந்தாங்க!
தை மாசத்தில், ஒவ்வொரு பிராந்தியத்தில், ஒவ்வொரு சம்பவம் நடக்கத் தான் செய்யும்!
ஆனா அதுக்காக, எங்கோ நடந்த சம்பவத்துக்கு எல்லாம், தமிழ் நிலத்தில் = தை மாசமே பீஷ்மர் மத விழா ன்னு கட்டுற கட்டு, தாங்க முடியலீங்க-ண்ணா!:))
தை மாசம் பொங்கல் வைக்குற எந்த விவசாயியும், பீஷ்மர் படுத்துக் கிடந்த மாசம்-ங்கிறத்துக்காகப் பொங்கல் வைக்கலீங்கோவ்!:))
———–
fyi…பீஷ்ம ஏகாதசி = சங்கராந்தி (தை-01) அன்று வருவது அன்று! அதற்கும் பிந்தியே!
விட்டால் தை-01 எனும் அதே நாளுக்கு க்கு, வடக்கில் “சங்கராந்தி” என்று பெயர் குடுப்பதால்….”சங்கர” ன்னு மதம் வருது பாத்தீங்களா, எனவே தமிழகத்தில் தை-01=மதமே ன்னு சொன்னாலும் சொல்வீங்க போல:))
April 28th, 2012 at 5:22 am
அதே மணிமேகலை உரை = வராஹமிஹிரர் தான் இப்படி மாத்தி வச்சாரு ன்னு தெள்ளத் தெளிவாச் சொல்லுதே! அதுக்கு என்ன சொல்லப் போறீங்க??
)
வராஹ மிஹிரர் = தொல்காப்பியர், இருவரும் ஒருவரே ன்னு சொல்லாம இருந்தாச் சரி
மணிமேகலை:
//பகலும் இரவும் முப்பது முப்பது நாழிகையாகச் சமனுற்ற இரண்டு விழுவ நாட்களுள் சித்திரை விழுவில் ஞாயிற்றுக்கு எந்த நாண்மீனிற் புகுதி ஏற்படுகின்றதோ அதனை நான்மீன்களுள் முதலாக வைத்துக் கூறுவது சோதிடநூற் றுணிபாகலின், முன்னொருகாலத்தில் ஞாயிற்றுக்குக் கார்த்திகையிற் புகுதியிருந்தபொழுது அதனை முதலாகக்கொண்டு எண்ணி வந்தனர். பின்பு, வராகமிகிரர் எனப் பெயர் பெற்ற சோதிட வாசிரியர் தமது காலத்தில் சித்திரை விழுநாளில் ஞாயிற்றுக்கு அச்சுவினியிற் புகுதியுண்டாயிருத்தலை அறிந்து, அச்சு வினி முதலாக எண்ணும் வழக்கத்தை யுண்டாக்கின ரென்பர்//
இதுலயும்….நட்சத்திரம், ராசி முதல் பற்றித் தான் பேச்சே ஒழிய, “ஆண்டு முதல்” பற்றி அல்ல!
அப்படி இருக்க…..
சும்மா மேம்போக்கா ரெண்டு எலக்கிய வரியைக் காட்டி….
சாதாரணமா ஒரு குளத்தில் விழும் ஞாயிற்றின் ஒளியை
= புனர்பூசம், குளம் என்பது மிருகசீரிஷ மாசத்தைக் குறிக்கும், பொறிக்கும்….ன்னு கதை கட்டி…
தமிழ் இலக்கியத்தை, வசதிக்கு ஏற்றாற் போல், திரித்துத் திரித்து….அதனுள் மதத்தைப் புகுத்திப் புகுத்தி…..
(((((
April 28th, 2012 at 5:30 am
//நீங்கள் எழுதியுள்ள கீழக் கண்ட பதிவு ஏற்றுக்கொள்ளத் தக்கதே இல்லை.-இதை எழுதியது = கமலை ஞானப் பிரகாச ஸ்வாமிகள்! அதுவும் சுமார் 500 yrs முன்னாடித் தான்! பல பேருக்கு, இவரு பேரு கூடத் தெரியாது! = சைவ சித்தாந்த சந்தானாச்சாரியார், தருமபுர ஆதீனத்தின் குரு இவரு!//
ஐயா சங்கரநாராஆஆஆஆயணரே…
கமலை ஞானப்பிரகாச சுவாமிகள் பத்தி, அவன்/இவன் என்ற ஏகவசனமோ, இல்ல தனிநபர் அர்ச்சனையோ சொல்லி இருந்தால் காட்டுங்க!
அவரைப் பொதுமக்கள் அதிகம் அறிய மாட்டார்கள்
ஆதிசங்கரரை அறிவார்கள், ஆனா கமலை கமலை ஞானப்பிரகாச சுவாமிகள் ன்னு சொன்னா, யாரு-ன்னு தான் பலரும் கேப்பாங்க!
“பல பேருக்கு இவரு யாரு-ன்னு தெரியாது” ன்னு எழுதியதை…..அதுவும் இப்பதிவில் சொல்லலை…என் பதிவில் சொன்னதையெல்லாம்…….
தப்பா எடுத்துக்கிட்டு….”Not Acceptable, ஏற்றுக் கொள்ளவே முடியாது” ன்னு நீங்க பாய்ந்தால்….
சரி, ஏற்றுக் கொள்ள வேணாம், போங்க!
April 28th, 2012 at 5:46 am
@Suresh
முதற்கண் சங்கப் பாடல்களை இங்கு தந்தமைக்கு என் இனிய நன்றி!
வாதங்களை வைக்கவேணும், தமிழை நாடித் தருதல் மிகவும் பிடித்துள்ளது!:) வாழ்க!
//அப்போ பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகக் கருதப்படும் குறளை, சங்கம் மருவிய காலத்துத் தோன்றிய இலக்கியமான திருக்குறளை//
திருவள்ளுவர் காலத்தைக் கணக்கிடுதல் ஒரு தோராயமே! மறைமலை அடிகள் செய்த ஆய்வு கிமு 31! இன்னும் பல அறிஞர்கள் பலப்பல காலங்களைச் சொல்லியுள்ளார்கள்!
ஆனால், வள்ளுவராண்டு என்பது ஒரு Standard மட்டுமே!
ஏதேனும் ஒரு புள்ளியில் துவங்க வேண்டுமல்லவா?
மற்றபடி வள்ளுவராண்டு என்று சொல்லி விட்டதாலேயே, அது வள்ளுவரின் ஜாதகமோ, Date Of Birthஓ அல்ல! அந்தப் புரிதலுக்கு வாருங்கள்!
———–
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் அனைத்தும் களப்பிரர் காலம் அல்ல! பெரும்பான்மை சங்கம் மருவிய காலம் (அ) களப்பிரர் காலம்….
ஒரு நூலை பதினெண் கீழ்க் கணக்கில் வைத்து விட்டதாலேயே…அது களப்பிரர் காலம் ஆகி விடாது!
அதே போல் பரிபாடலும், முதற் சங்க நூல் ஆகி விடாது!
“பொதுவாக” கொள்வது 100 CE – 600 CE = சங்கம் மருவிய காலம்!
ஆனால், இதனையொட்டிய எல்லைக் காலங்களில் எழுந்த நூல்களும் உள என்பதை….தேவநேயப் பாவாணர் ஆய்வு – தமிழ் இலக்கிய வரலாற்றில் காண்க!
April 28th, 2012 at 6:14 am
@Suresh
//தொல்காப்பியரால் குறிக்கப்பெறும் வருணன், வேந்தன் (இந்திரன்)//
வேந்தன் = இந்திரன் அல்லன்!
காட்டை, மருத நிலமாகச் சமைத்த மன்னன்/ மன்னர்கள்
வேந்தன் தான் இந்திரன் என்பதற்கான நேரடி ஆதாரங்கள், தொல்காப்பியத்தில் இருந்து மட்டும் உங்களால் தர முடியுமா?
வருணனுக்குச் சொன்ன விளக்கமும் காண்க!
————–
//ஏனென்றால் அவர்கள் மீது நிறைய புராணக் கதைகள் இந்து மரபில் இருக்கின்றதே!//
இருக்கும் தான்!
பூர்வ குடிகளின் தெய்வங்கள் மீது, “புராணக் கதைகளை” ஏற்றியது பிற்கால நிகழ்வு! தொல்காப்பிய கால நிகழ்வு அல்ல!
புராணக் கதைகளை, தொல்காப்பியம் (அ) முதற் சங்க நூல்களில் உங்களால் காட்ட முடியாது!
//”ஆல் அமர் கடவுள்” என்று சங்க கால நூலான புறநானூற்றில் (198,199)வருகிறதே//
ஆல் – அமர் – கடவுள், புறநானூற்றில் வருகிறது!
நுதல் விழியானும் தான் வருகிறது! அதை நான் மறுக்கவும் மாட்டேன், என் வசதிக்கு ஏற்றாற் போல் திரிக்கவும் மாட்டேன்!
புறநானூற்றுப் பாடல்கள் அனைத்தும் முதற் சங்க காலம் கிடையாது!
பின்னாள் தொகுப்பில் சேர்ந்த பாடல்களும் உண்டு!
சதி என்னும் கணவன் சிதையில் மனைவி தீப்பாய்தல் கூடத் தான் இருக்கு! பூதப்பாண்டியன் மனைவி! உடனே சதி=பண்டைத் தமிழ்ப் பண்பாடு ன்னு சொல்லிடுவீங்களா என்ன?:))
உங்கள் நிலை எனக்குப் புரிகிறது!
புறநானூறு ன்னாலே…..அது “பண்டைத் தமிழ்” என்பது உங்கள் புரிதல்!
ஆனா….அந்தப் பண்டைத் தமிழ்க்கும் பண்டைத் தமிழ் உள்ளது என்பதை உணர மறுக்கிறீர்கள்!
சங்க காலம்-ன்னாலே கலப்பில்லாக் காலம் ன்னு யாருமே சொல்ல முடியாது!
அப்போது கலந்தும் விட்டது! சங்கப் பாடல்களில், பல்யாக சாலை முது குடுமிப் பெருவழுதி பத்தி நானே சொல்லி இருக்கேன் பாருங்க!
//மலைபடுகடாம் குறிக்கிறதே? சிவபெருமான் நஞ்சுண்டது புராணக் கதையா இல்லையா?//
மலைபடுகடாம் குறிப்பது உண்மையே!
ஆனா சிவபெருமான் பற்றித் தொல்காப்பியம், முதற் சங்க நூல்கள் குறிப்பதைக் காட்டுங்களேன் பார்ப்போம்! முடியாது!
மலைபடுகடாம் எழுதியது = பெருங்குன்றூர்ப் பெருங் கௌசிகனார்!
பேரே காட்டவில்லை, “கெளசிகன்” என்று?????
நீங்க சொல்லும் வாதங்கள் எப்படி இருக்குன்னா….கம்ப இராமாயணத்தைக் காட்டி, பாருங்க 1000 ஆண்டுக்கு முன்னமேயே இராமன், தமிழ்க் கடவுள்-ன்னு சொல்லுறாப் போல:)))))
என்ன, நீங்க, கம்பனைக் காட்டாம, இன்னும் கொஞ்சம் முன்னாடிக் காட்டுறீங்க, அவ்ளோ தான்!
))
Fyi, இராமன் பற்றி புறநானூற்றிலேயே வருகிறது!:)) ஆனா அதுக்காக, இராமச் சந்திர மூர்த்தி = தொல் தமிழ்த் தெய்வம் ஆகி விட மாட்டான்!
//இப்படி நிறைய கேட்டுக் கொண்டே போகலாம்//
இப்படி நானும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்!:)
தொல் மரபுத் தமிழ்த் தெய்வங்கள் = மாயோன்/ சேயோன்
இவர்கள் பின்னாளில் விஷ்ணு/ ஸ்கந்தன் என்று ஆகி விட்டதால்…ஒரே ஆளின் மேலேயே புதிய கதைகளும் ஏறி விட்டதால், புதிய கதையே = பழைய கதை என்று சொல்வது போல் ஆகி விடும்:))
கடைச் சங்க நூல்களில் சிறிதளவு சமணமும் உள்ளது!
அதே போல் தான் இந்து ஞான மரபும்! = இரண்டும் பிற்பாடு கலந்தவையே!
ஆனால் தொல்காப்பிய கால, முதற் சங்க கால மரபு = இனக்குழு/ பூர்வ குடி/ இயற்கை வழிபாடே!
இதில் நுதல் விழியும் இல்லை, ஆலமர் கதையும் இல்லை! இராம கதையும் இல்லை!
//நீங்கள் தமிழ் மரபு வேறு ; இந்து மரபு வேறு என்று நிலைப்படுத்த நினைக்கிறீர்கள். அப்படி இல்லை இரண்டும் ஒருகாலத்தில் ஒன்றாக இயைந்திருந்தன என்று காட்டுவதற்காகவே இவ்வளவு விளக்கமும்//
நீங்கள் பழையதன் மேல் ஏற்றப்பட்ட புதியதைக் காட்டி….இதுவே பழையது, இயைந்து இருக்கு ன்னு சாதிப்பதாலேயே இத்தனை விளக்கங்களும்!:))))
—————–
நன்றி சுரேஷ், ஆர்வமுடன் தமிழ்ப் பாடல்களைத் தேடி இட்டமைக்கு!
சங்கப் பாடல்கள் = புறநானூறு எல்லாம் ஒரு தொகுப்பே!
ஆனா, அந்தத் தொகுப்புக்கு கடவுள் வாழ்த்து ன்னு சிவபெருமான் மேல் ஒரு வாழ்த்தை எழுதிச் சேர்த்தார், பின்னாளில் பாரதம் பாடிய பெருந்தேவனார்…..
இப்படியான தொகுப்புகள் அனைத்தும் முதற்சங்க காலம் என்று சொல்லிவிட முடியாது என்பதற்காகவே சொன்னேன்!
மற்றபடி, இந்து ஞான மரபு உயர்ந்த மரபு!
பின்னாள் சேர்ந்தது தான்! ஆனால் அது தள்ளத்தக்கது அன்று!
ஆனால் அதையே தொன்மமாக ஒட்ட வேண்டாம்!
* தொன்மம் தொன்மமாக இருக்கட்டும்!
* இன்று இன்றாக இருக்கட்டும்!
April 28th, 2012 at 6:17 am
@பூவண்ணன்
//புத்தாண்டு தினங்களும் மதங்களை தாண்டி அனைவருக்கும் பொதுவாக மாறும் நாளும் வரும் நாள் வெகு தொலைவில் இல்லை//
அருமை! அருமையாகப் புரிந்து கொண்டீர்கள்!
//பல நூற்றாண்டுகளாக எச்சில் இலையில் உருண்டால் தோல் வியாதிகள் குணமாகும் என்று நடந்து வருவதால் அதை மாற்றக்கூடாது,அனைவரும் அதை பின்பற்ற வேண்டும் எனபது ஞாயமா.மொழியிலோ,வருடத்திலோ,மாதத்திலோ கலந்த வடமொழி எச்சிலை விலக்கும் முயற்சிகள் வலுவடைந்து தான் வருகின்றன .வெற்றியும் பெறும்//
April 28th, 2012 at 6:50 am
@தமிழன்
உங்களுக்கு என் முருகார்ந்த நன்றி!
அடியவர் இச்சையில், எவை எவை உற்றன, அவை தருவித்தருள் பெருமாளே!
வேலும் மயிலும் துணை இருக்கக் கடவது!
————-
பரிமேலழகரைப் பற்றி “நல்ல உரை ஆசிரியர்” என்றே தான் குறிப்பிட்டு உள்ளேன்! அவரை நேரடியாக “ஏட்டைக் கெடுத்தவன்” என்று நான் சொல்லவில்லை!
இப்படி மூலநூலில் ஏற்றும் Bias விளக்கங்களின் போக்கு – அதுக்கு மட்டுமே ஏட்டைக் கெடுத்தல் என்ற பழமொழியை உதாரணம் காட்டினேன்! Sad Smiley உம் போட்டேன்! அவ்வளவே! அவரைத் தனிநபர் தாக்குதல் செய்ய என் மனம் துணியாது! “போக்கு” பற்றி மட்டுமே பேச்சு!
Always Process, Not Person! = I wish to adhere myself to this, as much as I can! MuruganaruL munniRkka!
கீழே இன்னொரு முறை பார்த்து, இதை இத்தோடு விட்டுவிடுவோம்! த்வறாகத் தொனித்திருந்தால் என்னை மன்னியுங்கள்!!
//பரிமேலழகர் நல்ல உரை ஆசிரியர் தான்!
ஆனால் அவர் வலிந்து ஏற்றும் bias தான், பலரைத் திருக்குறளுக்கு அவர் உரையைத் தொடாமல் செய்கிறது!
படிச்சவன் பாட்டைக் கெடுத்தான், எழுதனவன் ஏட்டைக் கெடுத்தான் என்ற பழமொழிக்கு இது ஒரு சரியான எடுத்துக்காட்டு:(((/ //
———————-
உங்கள் நயமான இதர கருத்துக்களுக்கு வருவோம்!
//இந்து சமயத்தில் சைவம், வைணவம், சாக்கியம், சமணம் இன்னபிற சமயங்கள் அடங்கும்//
சமணர்கள், சாக்கியர்கள், பெளத்தர்கள் இதை ஒப்புவார்களா?:) மாட்டார்கள்!
ஆனால், சமய மரபுகள் ஒன்றோடொன்று பேசிக் கொண்டிருந்தன என்பதையும் நான் மறுக்கவில்லை!
நாஸ்திக வாதம், பூர்வ மீமாம்சை எல்லாம் வேதங்களில் உள்ளது என்பதையும் அறிவேன்!
= பூஜ்ய விஷயஹே மீமாம்சா
—————
//இந்து என்ற சொல் காலத்தால் மிகப்பிந்தியது என்ற வாதம் விடுத்து சொல் சுட்டும் மரபில் கவனம் செலுத்துங்கள்) என்பது என் புரிதல்//
என் புரிதலும் அஃதே!
இந்து என்னும் சொல் பிந்தையது ஆகிலும், இந்து ஞான மரபு முந்தையதே!
ஆனால் நான் சொல்ல விழைவதெல்லாம், தொல்காப்பியர் காட்டும் நடுகல், சேயோன்/ மாயோன் பூர்வகுடி வழிபாடு = இந்து ஞான மரபு அல்ல…..என்பதே!
இதை மட்டும் புரிந்து கொள்ளுங்கள்!
————–
//வருணனும் இந்துக்கடவுள் இல்லை என இயம்பவியலுமா?//
இயலும்! மேலே சொல்லியுள்ளேன் பாருங்கள்!
வேந்தன் இந்திரன் அல்லன்!
//இப்படியே போனால் அருணகிரி பாடிய வள்ளிக்கு வாய்த்த பெருமாளும் தேவானை மணாளனும் வேறு வேறு கடவுட்கள் என்றும் இயம்பத்தகும் போலும்//
ஆம்!
நான் அன்றாடும் கொஞ்சி வழிபடும் என் முருகன் & வள்ளி/தேவானை அம்மையரை வணங்கியே இதைச் சொல்கிறேன்!
தேவானை பற்றிய பரிபாடல்கள் உண்டு! அவள் இந்திரன் மகளாக….
ஆனால்,
தொல்காப்பிய காலத்திலும், முதற் சங்க மூத்த தமிழ் மரபிலும்….முருகன் = கந்து எனும் நடுகல்லும், வள்ளிக் கொடியும், பின்பு ஆவியும், பின்பு இயற்கை வடிவினனே ஆவான்!
அவனுக்குப் பன்னிரு கரம், பதினெட்டு கண் எல்லாம் பிற்சேர்க்கையே! சூர் = துன்பம், தொல்தமிழ் அகராதிப்படி!
ஆனால் சூரனை அழித்ததும் இல்லாமல், ஏதுமறியா அப்பாவி மக்களையும், ஒரு மொத்த நாட்டையுமே கடலுக்குள் முருகன் மூழ்கடித்தான் என்ற கந்தபுராணச் செய்திகள் எல்லாம் பிற்காலத்தவையே! இன்றைய இலங்கை போல
((
அப்பாவிப் பொது மக்களை வாட்டுபவனா என் முருகன்?
அசுரர் குடி கெடுத்த ஐயா வருக என்று வரும் கவசத்தை, வாயால் சொல்லாது முழுங்கி விடுவேன்….ஏன் னா என் முருகனுக்கு யார் குடியும் கெடுக்கத் தெரியாது!:((
————-
முருகன் எனக்குப் பிடித்தமானவன் என்பதால்…
பிடித்தமானதே வரலாறு என்று ஆகி விடாது அல்லவா?
தொல்காப்பியத் தொல் தமிழ் மரபு வேறு! = அது இந்து ஞான மரபு அல்ல!
* தொன்மம் தொன்மமாக இருக்கட்டுமே!
* இன்று இன்றாக இருக்கட்டுமே!
நமக்குப் பிடித்தவைகளைத் தொன்மத்தில் ஏற்றிட வேண்டாம் என்பதே என் விழைவும்!
மற்றபடி இந்து ஞான மரபு வாழி!!
//தங்கள் தமிழ்ப்பற்றிலும் அதற்கு மேலாக பழனிப்பதிவாழ் பாலகுமாரனைப்போற்றும் திருப்புகழ் மேல் தங்களுடைய பற்றிலும் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. கருத்துக்களில் வேற்றுமை தனை பொறுப்பீர்களாக//
இது என்ன, என் கிட்ட போயி மன்னிப்பெல்லாம் கேட்டுக்கிட்டு? இது ஒரு உரையாடல் அவ்வளவே! உண்மை அறியும் விழைவு!
நான் எப்போதும் சொல்வது போல: “கருத்து வேற, மனிதம் வேற”
உங்கள் ஊக்கத்துக்கும், உரையாடலுக்கும், முருகச் சொற்களுக்கும் என் இதயம் சேர்ந்த நன்றி!
April 28th, 2012 at 7:04 am
@சங்கர நாராயணன்
//அம்பா ஆடல்//
சிலப்பதிகார காலத்தில் இறைவிக்குப் பல பெயர்கள் வந்து விட்டன!
அவை கலப்புக்குப் பின்னுள்ள காலம்!
ஆனால் இளங்கோ சொல்லும் பேர்களிலும் “அம்பா” இல்லை!
நீங்க வரிசையா வேறேதோ குடுத்து, அவற்றை “அம்பா ஆடலில்” ஒட்ட வைக்க முயல்கிறீர்கள்!
அம்பா ஆடலில் பாவையை வைத்து வழிபடுவது வழக்கம் தான்! ஆனால் அந்தப் பாவை = உங்க “அம்பா” அல்ல!
அம் + பா + ஆடல் என்பதே அது!
————-
இதே சிலப்பதிகாரத்தில்….கண்ணகி சோம குண்டம், சூர்ய குண்டத்தில் பரிகாரம் செஞ்சா, புருஷன் கிடைப்பான் ன்னு சொல்லுவாள் அவள் பார்ப்பனத் தோழி!
ஆனா….கண்ணகி அதைச் செய்ய மாட்டா! அது எங்கள் மரபு அல்ல ன்னு உறுதியா மறுப்பா!
இதுக்கு என்ன சொல்வீங்க???????
ஆக, கலப்புகள் ஏற்பட்ட பின்னும், ஒரு சாரார்-மக்கள், அதனை முழுக்க ஏற்காதும் இருந்தனர் என்பதை இளங்கோவும் காட்டியே செல்கிறார்!
—————–
புகார்க் காண்டம் – கனாத்திறம் உரைத்த காதை:
சோம குண்டம், சூரிய குண்டம், துறை மூழ்கி,
காமவேள் கோட்டம் தொழுதார், கணவரொடு
தாம் இன்புறுவர் உலகத்து, தையலார்;
போகம் செய் பூமியினும் போய்ப் பிறப்பர்; யாம் ஒரு நாள்
ஆடுதும்’ என்ற அணி-இழைக்கு-அவ் ஆய்-இழையாள்,
“கண்ணகியின் மறுமொழி”
‘பீடு அன்று’ என இருந்தபின்னரே-
—————–
ஆகா!
எம்பெருமானே! முருகா! இது தான்டா கண்ணகி!!
யம்மா கண்ணகி – நீ வாழி!
(நீயே “அம்பா” ஆக்கப்பட்டு விட்டாய் – அது வேற கதை:))))))
————-
@சங்கர நாராயணன்
* இளங்கோ சொல்லாத “அம்பா”-வை
* இளங்கோ சொல்லும் வேறு பெயர்களைச் சும்மாப் பட்டியல் போட்டு…
* அம்பா ஆடல் = எங்க “அம்பா”!
இன்னொரு பழம் எங்கே-ன்னா, அதான்பா இது ங்கிற கதையா….நாட்ட முனைகிறீர்கள்! தவறு!
இலக்கியத்தில் உங்களுக்குப் பிடித்த பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு
முழுப் பார்வையை மறைத்தல் = தவறு, தவறு, தவறு!
April 28th, 2012 at 7:35 am
@தமிழன்
தை என ஆண்டு தொடங்குவதற்கு என்ன அத்தாட்சி?
நேரடி வரிகள் குடுக்க முடியுமா ன்னு கேட்டீருக்கீக! என் பதிவை வாசித்திருப்பீங்க ங்கிற எண்ணத்தில் உங்களுக்குப் பதில் சொல்ல மறந்து விட்டேன், மன்னிக்க!
தை முதலே = புத்தாண்டு நாள் என்பதற்கு தொல் தமிழ்த் தரவுகள் ஏதும் இல்லை!
என் பதிவில் இதை நானே சொல்லியுள்ளேன்! தைஇத் திங்கள் வரிகள் எல்லாம் தை மாதச் சிறப்பு, தண் என்ற நீரில் நீராடல் என்பதே காட்டுகின்றன தவிர, அவை “புத்தாண்டு நாள்” என்பதற்கான தரவு இல்லை!
அதே சமயம் சித்திரை என்று சொல்வதற்கும் தரவில்லை! இந்த “வருஷப் பிறப்பு நாள்” பின்னாளைய வழக்கமே!
மேஷம், ஆடு தலை எல்லாம் ராசி மண்டலத்துக்குத் தான் தலையே ஒழிய….ஆண்டுக்கு தலை அல்ல!
ஆனால்….
ஆண்டின் முதல் மாதம் என்பதை = கார் காலம் துவங்கும் மாதம் என்று நச்சினார்க்கினியர் குறித்துச் செல்கிறார்!
இது தொல்காப்பியர் காட்டும் திணை=கார் காலத் துவக்கத்துக்கு ஒத்துப் போகிறது!
இதோ அவர் உரை:
—— ஞாயிற்றுக்கு உரிய சிங்க ஓரை முதலாக (ஆவணி) தண்மதிக்கு உரிய கற்கடக ஓரை (ஆடி) ஈறாக வந்து முடியுந்துணை ஓர் யா(ஆ)ண்டாம் —–
சிங்க ஓரை முதலாக ஓர் ஆண்டாம் என்று “ஆண்டு” பற்றிய Direct Reference!
ஆனா, சித்திரை ன்னு சொல்பவர்கள் எல்லாம் ராசி மண்டலத்தைத் தான் காட்டுறாங்களே ஒழிய, ஆண்டு=சித்திரை ன்னு Direct Reference காட்ட முடியுமா???
இப்படிக் கார் காலத் துவக்கம் ன்னு சொன்னாலும், அது நச்சினார்க்கினியர் உரையே! நான் என் வசதிக்கு ஏத்தாப் போலப் பேச மாட்டேன்! பரிமேலழகருக்குச் சொன்ன அதே கருத்தே இங்கும்!
ஒரு உரை நூலை வைத்து, இதனை முடிவு செய்ய முடியாது! தொல்காப்பியர் நேரடியாகச் சுட்டவில்லை!
————–
@சங்கர நாராயணன்
ஆனா…
* atleast we have a direct reference for ஆண்டு here and not nakshathira mandalam/ raasi mandalam!
* do we have any such reference directly quoting ஆண்டு as சித்திரை???
————-
//மணிமேகலை பௌத்த நூல். அவர்களும் சூரியக் கணக்கைதான் பின்பற்றியுள்ளார்கள்//
திருப்பித் திருப்பி, அதே பல்லவியைத் தான் சொல்லுறீக! யாரு இல்லை-ன்னா?
மணிமேகலை சொல்வது = புத்தரின் விசாக நாள்!
ஆனா…அது இதான் புத்தாண்டு நாள்-ன்னு சொல்லுதா? இதான் ஆண்டின் முதல் நாள்-ன்னு சொல்லுதா?
= இல்லை!
= அப்படியொரு வரியைக் காட்டுங்க பார்ப்போம்!
சும்மா இராசி மண்டலத்தின் முதல் பகுதியைக் குறிப்பிட்டதைக் காட்டிக் காட்டி,
பாத்த்துக்கோ, இதான் ஆண்டு முதல் ன்னு சொல்லுது-ன்னா எப்படி? அது இராசி முதல்? ஆண்டு முதல் எங்கே??????
——————-
“திராவிட” ஆட்கள் “தைஇத் திங்கள்” ன்னு சம்பந்தமில்லா reference காட்டுவது போலத் தான் நீங்களும் காட்டுறீக!
அவர்கட்கும் உங்கட்கும் என்ன வேறுபாடு?:(
April 28th, 2012 at 7:43 am
@சங்கர நாராயணன்
//நீங்கள்தான் தரை விளக்கிக்கு தலை விளக்கி என்று கூறிக் கொண்டு இருக்கிறீர்கள்.//
—- என்று நான் சொல்லாததைச் சொன்னதாகச் சொன்னதால்…..
– இப்படிப் பொய்யாக உரைக்கும் உங்களிடம்….இனி இது குறித்துப் பேசப் போவதில்லை!
கடுமைக்கு மன்னிக்க!
இனி இந்த உரையாடல், என்னளவில் முடிவுற்றது! நன்றி!!!
————
தமிழன், சுரேஷ், அறிவன், பூவண்ணன் மற்றும் இதர அன்பர்கள்:
உங்கள் அனைவரின் நியாயமான, அன்பான கருத்துரையாடலுக்கு இனிய நன்றி!:) மிகவும் ரசித்தேன்!
இனி, இப்பதிவில் என் கருத்துக்கள் / தரவுகள் வாராது என்று சொல்லிக் கொண்டு, விடைபெறுகிறேன்!
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!!
May 1st, 2012 at 12:29 pm
கேள்வி: “தலை” விளக்கி ன்னு நான் எழுதிய ஓர் இடத்தைக் காட்டுங்கள் பார்ப்போம்!அந்த ஆண்டாள் பாட்டு = தரை விளக்கித் தான்! தலை விளக்கி அல்ல!
பதில்: உங்கள் பின்னோட்டம் எண் 58 : – தரை விளக்கிக் கோலம் போட்டாங்க-ன்னு எழுதினா, அவர்கள் தைந் நீராடவில்லை ன்னு ஆயிருமா என்ன?:)) – அதைத்தான் தலை விளக்கி அதாவது நீராடி என்று சொன்னேன். என்னிடம் நற்றிணையில் இருந்து ஆதாரம் கேட்கும் உங்களால் – நாச்சியாரின் அதே பாட்டில் இருந்து ஆதாரம் கொடுக்க முடியவில்லை. குளிக்காமலா கோலம் போட்டாள்? என்று விதண்டாவாதம் செய்கிறீர்கள்
May 1st, 2012 at 12:30 pm
கேள்வி: ஆமாங்கோ! அதான் கேக்குறேன், நற்றிணையில் இருந்து எடுத்துக் காட்ட முடியுமா?-ன்னு!பரிபாடல் = பிற்காலம்! கடைச் சங்கம்! கலப்புகள் நிகழ்ந்து விட்ட காலம்! பல் யாகசாலை முது குடுமிப் பெருவழுதி எல்லாம் வந்து விட்ட காலம்!
அதுக்குத் தான் தொல் மரபான, முதற்சங்க காலத்தில் இருந்து தரவு கேக்குறேன்! குடுங்க பார்ப்போம்
பதில்: நான் சூரிய மாதம் வந்தது பரிபாடலுக்குப் பின் என்று சொன்னாலும் விடாமல் நற்றிணையில் இருந்து ஆதாரம் கேட்கிறீர்கள். நற்றிணை பரிபாடலுக்கு முந்தியது. இந்தியா முழுவதும் இன்றும் கூட 80 % சந்திர மாதத்தைப் பின்பற்ற, தமிழர்கள் பரிபாடல் காலத்துக்குப் பின் சூரிய மாதத்திற்கு மாறினார்கள். திரும்ப திரும்ப நற்றிணையில் காட்டு என்றால் பின் என்ன கேட்பது? மீண்டும் அதே கேள்வி.பதிவை படிச்சிட்டுதானே பின்னூட்டம் போடறீங்க.?
May 1st, 2012 at 12:32 pm
கேள்வி: திருமணி விளக்கின் அலைவாய் = அழகிய மணிவிளக்கு ஒளிரும் திருச்சீர் அலைவாய் என்னும் செந்தூரில் அமர்ந்த
* செருமிகு சேஎயொடு உற்ற சூள்-போர்வன்மை மிக்க முருகனொடு உற்ற சூள் (சத்தியம்) துன்பம் தருவதாகும்!
இது ஒரு சாதாரண பாட்டு தான்! இதுல ஒங்க புராணம் எல்லாம் ஒன்னுமில்ல!
பதில்: அய்யா – சங்க இலக்கியத்துல முருகன் சூரபத்மனை அழித்த கதைவருது. நீங்க முருகன் குறிஞ்சி நிலக் குழுத் தெய்வம்னு சொல்றீங்க. ஆனா சங்க காலத்துலயே அவர் செந்தில் – அதாவது கடற்கரை – அதாவது நெய்தல் நிலத்துக்குப் போய்ட்டார். ஆமா – இப்படி சங்கர் கத விடுவாருன்னு சொல்லிட்டா நான் சொல்றது கதையாவும், நீங்க சொல்றது ஆராய்ச்சியாவும் ஆயிடுமா? இப்படித்தான் கருத்த அணுகனும் போல இருக்கு.
May 1st, 2012 at 12:42 pm
கேள்வி: மூலப் பாடலில், கதிரவன் சாதாரணமாக ஒரு குளத்தில் ஒளி வீசுகிறான் அவ்வளவே!குளம் = மார்கழி ன்னு எடுத்துக் கொள்வதெல்லாம் அவரவர் மனோரதங்களே! அதீத கற்பனையே.
பதில்: நீங்கள் பரிபாடலும் படிக்கவில்லையா? படியுங்கள்- வரிகள் இங்கே
அம்பா ஆடலின் ஆய் தொடிக் கன்னியர்,
முனித் துறை முதல்வியர் முறைமை காட்ட,
பனிப் புலர்பு ஆடி, பரு மணல் அருவியின்
ஊதை ஊர்தர, உறை சிறை வேதியர்
85
நெறி நிமிர் நுடங்கு அழல் பேணிய சிறப்பின்,
தையல் மகளிர் ஈர் அணி புலர்த்தர, – அதாவது பனியையுடைய விடியற் காலத்தே நீராடினர்- அப்ப எங்க சூரியன் அதிகாலையில் குளத்துக்கு வருது? சூரியன் வைகைக் கரைக்கு வராம ஏன் குளத்துக்குப் போகுது? சூரியன் வந்த பின்னாடி அவுங்க ஏன் வேள்வித் தீயில குளிர் காயறாங்க?
இந்த மார்கழி நீராடல் (பரிபாடலில் வரும் தை நீராடல்) எல்லாம் சூரிய உதயத்துக்கு முன்பே – கீழ்வானம் வெள்ளென்று வரும் நேரத்தில் செய்வது. சூரியன் சாதாரண குளத்துக்கு வந்து ஓளி வீசின பின்னாடி செய்யறது இல்ல. அந்தக் குளம் பூராடமே.
May 1st, 2012 at 12:43 pm
கேள்வி: விட்டால் தை-01 எனும் அதே நாளுக்கு க்கு, வடக்கில் “சங்கராந்தி” என்று பெயர் குடுப்பதால்….”சங்கர” ன்னு மதம் வருது பாத்தீங்களா, எனவே தமிழகத்தில் தை-01=மதமே ன்னு சொன்னாலும் சொல்வீங்க போல:))
நான் உங்கள மாதிரி விதண்டா வாதம் செய்ய மாட்டேன். ஆனா அங்கயும் சூரியன் மகரத்துல வர நாளை சூரியனை முன்னிட்டு மகர சங்கராந்தினு சொல்றாங்க. நாமளும் இங்கே அதே நாள்ல பொங்கல் செஞ்சு சூரியனுக்குப் படைக்கறோம்னு சொல்லுவேன்.நாடு முழக்கக் கொண்டாடறாங்கன்னு சொல்வேன்.ஒரு மதத்தினர்தான் இப்ப சூரியனைக் கும்பிடராங்கன்னு சொல்லுவேன்
May 1st, 2012 at 12:43 pm
கேள்வி: இதுலயும்….நட்சத்திரம், ராசி முதல் பற்றித் தான் பேச்சே ஒழிய, “ஆண்டு முதல்” பற்றி அல்ல!
பதில்: நான் என்ன ஆண்டு முதல்னா சொன்னேன் மணிமேகலை சூரிய மாத வழக்கத்தை காட்டுகிறது என்று சொன்னேன்..
May 1st, 2012 at 12:45 pm
கேள்வி: ஆனால், வள்ளுவராண்டு என்பது ஒரு Standard மட்டுமே!
ஏதேனும் ஒரு புள்ளியில் துவங்க வேண்டுமல்லவா?
மற்றபடி வள்ளுவராண்டு என்று சொல்லி விட்டதாலேயே, அது வள்ளுவரின் ஜாதகமோ, Date Of Birthஓ அல்ல! அந்தப் புரிதலுக்கு வாருங்கள்!
பதில்:ஆண்டுகள் பற்றிய விளக்கமும் நான் கொடுத்திருக்கிறேன். இங்கே பிரச்சினை திருவள்ளுவர் ஆண்டு பற்றியதல்ல. அரசும் திருவள்ளுவர் ஆண்டை மாற்றவில்லையே? விவாதத்தை ஏன் திசை திருப்புகிறீர்கள்?
.
May 1st, 2012 at 12:46 pm
கேள்வி: புத்தாண்டு தினங்களும் மதங்களை தாண்டி அனைவருக்கும் பொதுவாக மாறும் நாளும் வரும் நாள் வெகு தொலைவில் இல்லை//
பதில்:இதற்குதான் நாங்கள் பயப்படுகிறோம். இதே போன்ற சூரிய மாதத்தைப் பயன்படுத்திய தாய்லாந்தில் முதலில் ஏன் வருடப் பிறப்பை சித்திரையில் வைத்துக்கொள்ளவேண்டும்? சங்கரான் ( அதாவது தை 1 ) தான் முக்கிய பண்டிகை என்று சங்கரான்னுக்கு மாற்றினார்கள். பின் சில ஆண்டுகள் கழித்து எதற்கு ஜனவரி 1 ஒரு புத்தாண்டு, ஜனவரி 14 ஒரு புத்தாண்டு – உலகத்தை மாற்ற முடியாது – நாம் மாறுவோம் என்று தாய்லாந்து புத்தாண்டையும் ஜனவரி ஒன்றுக்கே மாற்றி விட்டார்கள். நம் ஊரிலும் அதுதான் நடக்கும்.
May 1st, 2012 at 12:46 pm
கேள்வி: அம் + பா + ஆடல் என்பதே அது!
இலக்கியத்தில் உங்களுக்குப் பிடித்த பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு முழுப் பார்வையை மறைத்தல் = தவறு, தவறு, தவறு!
பதில்: நான் அடுத்த வரியையும் கொடுத்து என் விளக்கத்தைக் கொடுத்து உங்கள் விளக்கத்தை கேட்டிருந்தேனே? முனித்துறை முதல்வியர் முறை காட்டல் – எங்கே உங்கள் விளக்கம்?
May 1st, 2012 at 12:47 pm
கேள்வி: இதே சிலப்பதிகாரத்தில்….கண்ணகி சோம குண்டம், சூர்ய குண்டத்தில் பரிகாரம் செஞ்சா, புருஷன் கிடைப்பான் ன்னு சொல்லுவாள் அவள் பார்ப்பனத் தோழி!
ஆனா….கண்ணகி அதைச் செய்ய மாட்டா! அது எங்கள் மரபு அல்ல ன்னு உறுதியா மறுப்பா!
பதில்: கண்ணகி தேவை இல்லை என்றுதான் சொல்கிறாள். அவனா திருந்தி வரட்டும் என்று சொல்கிறாள். மரபு அல்ல என்றால் – மாமுது பார்ப்பான் மறை வழி காட்ட தீ வலம் – வந்திருக்க மாட்டாள். மரபு அல்ல என்று மறுத்திருப்பாள்.எம்பெருமானே! முருகா! இது தான்டா கண்ணகி- இப்ப நான் சொல்லலாமா?
இலக்கியத்தில் உங்களுக்குப் பிடித்த பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு முழுப் பார்வையை மறைத்தல் = தவறு, தவறு, தவறு!
May 1st, 2012 at 12:49 pm
கேள்வி: நீங்கள்தான் தரை விளக்கிக்கு தலை விளக்கி என்று கூறிக் கொண்டு இருக்கிறீர்கள்.//
—- என்று நான் சொல்லாததைச் சொன்னதாகச் சொன்னதால்…..
– இப்படிப் பொய்யாக உரைக்கும் உங்களிடம்….இனி இது குறித்துப் பேசப் போவதில்லை!
கடுமைக்கு மன்னிக்க!
இனி இந்த உரையாடல், என்னளவில் முடிவுற்றது! நன்றி!!!
இதுக்கு என்ன சொல்வீங்க???????
பதில்: நீங்கள் என்ன சொன்னீர்கள்.நான் என்ன சொன்னேன் என்பது எல்லாம் இங்கே அனைவரும் பார்க்கும்படியாகவே இருக்கிறது. நான் பொய் சொன்னேனா – இல்லை உங்கள் பாணியில் விளக்கம் சொன்னேனா என்பதை அனைவரும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். உங்கள் பதிவைப் பற்றிப் பேசியதன் காரணம் இரண்டு.. 1 . நீங்களே அதைப் பின்னூட்டத்தில் இட்டீர்கள்.2 . உங்கள் பதிவுகளைப் படித்துவிட்டுப் பேசச் சொன்ன ஒரு அறிவுரை. கும்ம முடியவில்லை – குமுறிவிட்டேன். நான் காத்துக் கொண்டு இருக்கிறேன்.? இன்னும் என்ன கேள்வி இருந்தாலும் கேளுங்கள்.
May 20th, 2012 at 4:28 am
திரு. சங்கரநாராயணன்
அன்பர் ஒருவர் சுட்டிக்காட்டியதால், இப்பதிவுக்கும் மீண்டும் வந்தேன்!
பொய் சொன்னதற்கு வருந்தாமல், அதை மேலும் ஒட்ட வைக்கப் பார்க்கும் குணம்:((
இங்கே வாசிப்பவர்கள் அனைவரும் பாத்துக்கிட்டுத் தான் இருக்காங்க!
என் பின்னோட்டம் எண் 58:
தையொரு திங்களும் தரை விளக்கி – இது என் பதிவில், நான் எப்போதோ இட்ட விளக்கம்
அதை இங்கே கொண்டு வந்து நுழைத்தது நீர்!
அங்கே ஏன் தைந்நீராடல் பற்றிச் சொல்லவில்லை என்று நீங்கள் கேட்டமையால்….
அது ஆண்டாள் பதிவு! அதில் அவ்வளவு தான் சொல்ல முடியும்…தரை விளக்கிக் கோலம் போட்டாங்க-ன்னு எழுதினா, அவர்கள் தைந் நீராடவே இல்லை ன்னு ஆயிருமா ன்னு கேட்டேன்!
அதை….
தரை விளக்கி = தலை விளக்கி ன்னு ஆக்கி….
ஒற்றை எழுத்தை அசைச்சி… பொருளையே மாற்றும் திருட்டு வித்தை….
இது காலங்காலமாக மதவாதிகளும், ஆரியச் சதிகாரர்களும் செய்து கொண்டே வந்துள்ளனர்! அதன் Typical Example = You are Doing!
* மரை = மான்/ மா
மரைக்காடு = அதில் ஒத்தை எழுத்தை அசைச்சி, மறைக் காடு, வேதாரண்யம் ன்னு ஆக்கினேள்…
* ஈங்கு ஓய் மலை = இங்கு ஓய்வு கொண்ட மலை
அதைச் சிவபெருமானை, ஈ தவம் செஞ்ச மலை ன்னு ஸ்தல புருடாணம் எழுதி வச்சேள்…
* அஞ்சொலாள் = அழகிய சொல் உடையவள்
அதை அஞ்சலாள் ன்னு ஒத்தை எழுத்தை அசைச்சி…அஞ்சாதே ன்னு சொல்லும் அபயாம்பிகா ன்னு ஆக்கினேள்….
அதே போல் தரை விளக்கி ன்னு சொன்னதை, ஒத்தை எழுத்தை அசைச்சி, தலை விளக்கி ன்னு ஆக்குறேள்!
பேஷ் பேஷ்! காலங் காலமாக் கை வந்த கலையாச்சே!:)))
May 20th, 2012 at 4:40 am
So obnoxious discussion
//நற்றிணையில் காட்டு என்றால் பின் என்ன கேட்பது? மீண்டும் அதே கேள்வி.பதிவை படிச்சிட்டுதானே பின்னூட்டம் போடறீங்க.?//
அட அறிவே…
பரிபாடல் காலத்துக்குப் பின் சூரிய மானத்துக்கு மாறினாங்கோ ன்னு சொல்லும் நீர்…அதுக்கு முன்னாடி தமிழாள் எல்லாம் சந்திர மானம் ன்னு சொல்லும் நீர்…..
அந்த முன்னாடியே இருந்த சந்திர மானத்துக்குத் தான் ஆதாரம் கேட்டேன் நற்றிணையில் இருந்து! காட்டுங்கோ பார்ப்போம்!!
சந்திர மானமாம்! இந்திர மானமாம்!
டைப் டைப்பாக் கிளப்புறாங்க!
குளம் ன்னா மார்கழியாம்! பூராட நக்ஷத்திரமாம்!
அதுல சூரியன் குதிச்சிச்சாம்!
அதைச் சங்கத் தமிழே சொல்லுதாம்!
அடேங்கப்பா!!!! ரீலு அந்து போச்சு சாமீ!
————
May 20th, 2012 at 4:46 am
//சூரியன் வைகைக் கரைக்கு வராம ஏன் குளத்துக்குப் போகுது?//
சூரியன் எல்லா இடத்துக்கும் தான் போவும்! குளத்துக்கும் போவும், குட்டைக்கும் போவும்! வைகைக் கரைக்கும் போவும்!
நல்லாக் கேக்குறாருப்பா டீட்டெய்லு:))))))
//நான் என்ன ஆண்டு முதல்னா சொன்னேன் மணிமேகலை சூரிய மாத வழக்கத்தை காட்டுகிறது என்று சொன்னேன்..//
அப்படி வாங்க வழிக்கு!
அப்பறம் எந்த ஆதாரத்தை வச்சிக்கிட்டு, சித்திரை 01 தான் ஆண்டின் துவக்கம் ன்னு சாதிக்கிறீங்க???
சித்திரை 01 = ஆண்டின் முதல் நாள்
ன்னு Direct இலக்கிய ஆதாரம் குடுங்க பார்ப்போம்! முடியாது!
நான் குடுத்துருக்கேன்! நச்சினார்க்கினியர் உரையில் இருந்து….
—— ஞாயிற்றுக்கு உரிய சிங்க ஓரை முதலாக (ஆவணி) தண்மதிக்கு உரிய கற்கடக ஓரை (ஆடி) ஈறாக வந்து முடியுந்துணை ஓர் யா(ஆ)ண்டாம் ——
இப்பிடிக் குடுங்கய்யா பார்ப்போம்!
May 20th, 2012 at 5:04 am
//மாமுது பார்ப்பான் மறை வழி காட்ட தீ வலம்//
தோடா….
இது தெரியாதா எங்களுக்கு!
கலப்புகள் கடைச்சங்க காலத்திலேயே நிகழ்ந்து விட்டன! “சதியே” நடந்திருக்கு! (I mean udan kattai)
பெற்றோர் நடத்தி வச்ச கல்யாணம்! அப்படித் தான் இருக்கும்!
மா முது பார்ப்பான் மறை வழி காட்டிட….
ஆனா சோதிடத்தைப் பிடிச்சுண்டு தொங்கறேளே…அதுக்குச் சொன்னேன்!
ஜோஸ்யம், பரிகாரம் ன்னுட்டு….ஒரு பொண்ணு வேணாம் ன்னு மறுதலிக்கிறா!
அவ பேரு = கண்ணகி!
இப்போ அவளே ஒரு குடும்பத் தலைவி! அம்மா-அப்பா நடத்தி வச்ச கல்யாணம் போல அல்ல! அவளே ஒரு இல்லத் தலைவி ஆகி விட்டாள்!
சோம குண்டம், சூர்ய குண்டம் பரிகாரம் பண்ண மாட்டேன்! “மரபு அன்று!” ன்னு மறுக்கிறாள்!
இலக்கியத்தில் ரெண்டு வரியை மட்டும் நைசா வெட்டி எடுத்துக்கிட்டு….
)
பாத்தேளா பாத்தேளா டெக்னீக் செல்லாதுங்கோ….
May 20th, 2012 at 5:20 am
//முனித் துறை முதல்வியர் முறைமை காட்ட – இதனால் அம்பாவை = அம்பிகை ன்னு எடுத்துக் கொள்ள வேணும்//
//முனித்துறை முதல்வியர் முறை காட்டல் – எங்கே உங்கள் விளக்கம்?//
ஹைய்யோ
சங்கரநாராயணர் அதட்டி விளக்கம் கேக்குறாரு-ங்கோ!:)
தோடா….
வயதான பெண்கள், இளம் பெண்களுக்கு நீராடும் வழியைச் சொன்னா….
அதுக்கும், அம்பிகைக்கும் என்னாங்க சம்பந்தம்???
அம் + பா + ஆடல்
குளிர்ந்த நீரில் பரவி ஆடல்
வயசுல பெரியவங்க கூட சின்னவங்க போனா, குளத்தில் இறங்கிக் குதிக்கும் போது, பாத்து பாத்து ன்னு இந்தக் காலத்துலயும் சொல்லுறதில்லையா? = முறைமை காட்ட
முனித் துறை முதல்வியர் = முனி ன்னு வருவதால் சாஸ்திரமா??
சாஸ்திரம், சங்கத் தமிழில் ஓஹோன்னு இருந்துச்சா?? என்னாங்கையா?;)))))
நானும் சங்கரநாரணன் வழிக்கே வந்து அவரை விட ஒரு படி தாண்டுகிறேன்!
** குளம் = புருடா….ச்சே பூராட நக்ஷத்திரம், அதுல சூரியன் பூந்துக்கிட்டான்! சங்கத் தமி்ழேஏஏஏஏஏஏஏ சொல்லுது!
** முனித் துறை முதல்வியர் = சப்த ரிஷிகளின் தேவி மார்கள், ஸ்வாஹா ஸ்வாஹா ன்னு நீராடும் போது சொல்ல வேண்டிய மந்திரங்களை யெல்லாம் சொல்லிக் குடுத்தாங்க!:)))
ஓம் தங்க கலச காந்தாய கிருஷ்யே நமஹ
கங்கேச யமுனேச கோதாவரீ சரஸ்வதீ…காவேரி ஜலேஸ்மின் சந்நிதம் குரும்!:))
அம்பா ஆடல் = எங்க அம்பா தான்! தாயே! அம்பா! ஜகன் மாதா! சங்கத் தமிழ் மாதா!:)) நமோஸ்துதே! நமோஸ்துதே!:))
May 20th, 2012 at 5:27 am
//சங்க இலக்கியத்துல முருகன் சூரபத்மனை அழித்த கதைவருது//
இவ்ளோ தானா ஒங்க டக்கு?
அதான் நானே சொல்லிட்டேனே!
உடன்கட்டை ஏறும் சதி கூடத் தான் வருது!
உடனே அது சங்கத் தமிழ் பண்பாடு ன்னு காட்டிருவீகளா?:)))))
அதெல்லாம் கலப்பு காலத்துக்குப் பிற்பட்டு!
சங்க காலத்திலேயே நடந்து விட்ட கலப்புகள், கதைகள், புருடாணங்கள் பத்தி தந்தை பெரியார் எடுத்துக் காட்டாததா?
தொல்காப்பிய நற்றிணைக் காலத்தில் காட்ட முடியுமாய்யா உம்மால்?
சூர் = துன்பம்
சூர் தடிந்து ன்னு வரும் வேலன் வெறியாடல்!
அதைச் சூரபத்மன், பானுகோபன், அஜமுகின்னு முக்கி முக்கி கதை வுட்டுட்டு…
அதை ஏற்கனவே இருந்த இயற்கைத் தெய்வம் முருகன் மேல் ஏத்திட்டு….
பாத்தேளா பாத்தேளா ன்னு குதிக்கிறீர்!
முருகன் குறிஞ்சி நில அடையாளம்! அதுனாலயே அவனுக்கு பிற நிலங்களில் ஆலயம் இருக்கக் கூடாது ன்னு சட்டமா?
முல்லைப்பூ முல்லை நில அடையாளம்! அதுனாலேயே மருத நிலத்தில் யாரும் முல்லைப் பூ வச்சிக்கிறதில்லையா என்ன?
எப்படிங்க டைப் டைப்பா யோசிக்கீறீங்க??:))))
—————–
//குமுறிவிட்டேன்//
கேட்கவே “ஸந்தோஷமா” இருக்கு!
))
குமுறுங்கோ!!
—————-
ஆனா குமுறுவதற்கு முன்னாடி…
சித்திரை 01 = ஆண்டின் முதல் நாள் ன்னு Direct இலக்கிய ஆதாரம் குடுத்துட்டு……
சும்மா, அங்கிருந்து ஒன்னு, இங்கிருந்து ஒன்னு…வெட்டி…ஒட்டி…புருடாணம் விடாம குடுத்துட்டு, அப்பாலிக்கா…..
—————
//நான் காத்துக் கொண்டு இருக்கிறேன்.? இன்னும் என்ன கேள்வி இருந்தாலும் கேளுங்கள்.//
பேஷ் பேஷ்!!
சர்வா அபீஷ்ட சித்திரஸ்து!
சங்கத் தமிழ் சாஸ்திர பிராப்திரஸ்து!:)))
நன்றி வணக்கம்!!!!
May 24th, 2012 at 3:22 pm
கேள்வி: அது ஆண்டாள் பதிவு! அதில் அவ்வளவு தான் சொல்ல முடியும்…தரை விளக்கிக் கோலம் போட்டாங்க-ன்னு எழுதினா, அவர்கள் தைந் நீராடவே இல்லை ன்னு ஆயிருமா ன்னு கேட்டேன்!
அதை….
தரை விளக்கி = தலை விளக்கி ன்னு ஆக்கி….
ஒற்றை எழுத்தை அசைச்சி… பொருளையே மாற்றும் திருட்டு வித்தை.
பதில்: உங்கள் பதில் எண் 9 : நீங்கள் பின் வருமாறு கூறியுள்ளீர்கள் -தையொரு திங்களும் தரை விளக்கி என்பது நாச்சியார் திருமொழி! திருப்பாவைக்கு அடுத்து வருவது!
மார்கழி நீராடல், தைந் நீராடல் = இரண்டுமே சங்கத் தமிழில் உண்டு தான்! முன்பனிக் காலத்தின் இரண்டு மாதங்களிலும், புது வெள்ளத்தில் நீராடும் பழக்கம்!
இப்போது சொல்லுங்கள் எது திருட்டு வித்தை? .
May 24th, 2012 at 3:23 pm
கேள்வி: மரை = மான்/ மா
மரைக்காடு = அதில் ஒத்தை எழுத்தை அசைச்சி, மறைக் காடு, வேதாரண்யம் ன்னு ஆக்கினேள்…
பதில்:சதுரம் மறைதான் றுதிசெய் துவணங்கும்
மதுரம் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா – இனிய பொழில்கள் சூழ்ந்த திருமறைக்காட்டில் வேதங்கள் நான்கும் துதி செய்து வணங்க வீற்றிருக்கும் வலியோனே – 2 ஆம் திருமுறை. 37 ஆவது பாடல். திருஞான சம்பந்தர் அருளியது. எனக்கு சம்பந்தர் கூறியதுதான் தெரியும். உங்களுக்கு சம்பந்தரை விட அதிகம் தெரியும் போல் இருக்கிறது. எனக்கு உங்கள் அளவுக்குத் தெரியாது.
May 24th, 2012 at 3:23 pm
கேள்வி:
சூரியன் எல்லா இடத்துக்கும் தான் போவும்! குளத்துக்கும் போவும், குட்டைக்கும் போவும்! வைகைக் கரைக்கும் போவும்!
நல்லாக் கேக்குறாருப்பா டீட்டெய்லு:)))))) –
பதில்:
திருப்பாவை 30 க்கும் உரை எழுதிய நீங்களா இப்படிச் சொல்வது? சூரியன் குளத்தில் ஒளி வீசிய பிறகா நீராடினார்கள்?. கீழ்வானம் வெள்ளென்று இருக்கும்போது நீராட மாட்டார்களா? அது அதிகாலை நீராடல் இல்லையா? மீண்டும் கேட்கிறேன். திருப்பாவை விளக்கம் நீங்கள்தானே எழுதினீர்கள்? இல்ல மணடபத்துல வேற யாராவது?
May 24th, 2012 at 3:24 pm
கேள்வி:
அப்போ அவளே ஒரு குடும்பத் தலைவி! அம்மா-அப்பா நடத்தி வச்ச கல்யாணம் போல அல்ல! அவளே ஒரு இல்லத் தலைவி ஆகி விட்டாள்!
சோம குண்டம், சூர்ய குண்டம் பரிகாரம் பண்ண மாட்டேன்! “மரபு அன்று!” ன்னு மறுக்கிறாள். இலக்கியத்தில் ரெண்டு வரியை மட்டும் நைசா வெட்டி எடுத்துக்கிட்டு….
பாத்தேளா பாத்தேளா டெக்னீக் செல்லாதுங்கோ.
பதில்:
கல்யாணமும் ஆகி, தன் கணவனும் கொலையுண்ட பிறகு கண்ணகி -பார்ப்பார் அறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர்
மூத்தோர் குழவி யெனுமிவரைக் கைவிட்டுத்
தீத்திறத்தார் பக்கமே சேர்கென்று -என்று சொல்கிறாளே. இப்ப திரும்பவும் மாறி விட்டாளா? – இலக்கியத்தில் ரெண்டு வரியை மட்டும் நைசா வெட்டி எடுத்துக்கிட்டு….
பாத்தேளா பாத்தேளா டெக்னீக் செல்லாதுங்கோ
May 24th, 2012 at 3:24 pm
கேள்வி:
தொல்காப்பிய நற்றிணைக் காலத்தில் காட்ட முடியுமாய்யா உம்மால்?
பதில்:
ஆமா – உங்க கணக்குப்படி தொல்காப்பியமும் நற்றிணையும் எந்த நூற்றாண்டு? எந்த சங்கம்?
May 24th, 2012 at 3:24 pm
கேள்வி:வயசுல பெரியவங்க கூட சின்னவங்க போனா, குளத்தில் இறங்கிக் குதிக்கும் போது, பாத்து பாத்து ன்னு இந்தக் காலத்துலயும் சொல்லுறதில்லையா? = முறைமை காட்ட
பதில்: இதுக்கு நீங்க அவங்க கோச் என்றே சொல்லியிருக்கலாம்.
May 24th, 2012 at 3:25 pm
கேள்வி
சூர் = துன்பம்
சூர் தடிந்து ன்னு வரும் வேலன் வெறியாடல்!
செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த
செங்கோ லம்பிற் செங்கோட்டி யானைக்
கழல்தொடிச் சேஎய் குன்றம் -பதில் :அக நானூறு: அவுணர் – அரக்கர். சேய் – முருகக் கடவுள்.
May 24th, 2012 at 3:41 pm
ஒரு விவாதத்தில்தான் எத்தனை விதமான டைப் டைப்பான பதில்கள். ஆகும் அணி, வைகும் ஆசி, மறைக்காடு – இப்ப வேறு விதமான புராணிகர், ஆரியர் என்பதுபோன்ற தாக்குதல்கள். இப்படித்தான் ஒரு கருத்தை அணுக வேண்டும். வாழ்க.