ராமராஜன் : ‘ எனக்கு இன்னொரு ரவுண்டு இருக்கு சார்!’

ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும் திரும்பிப் பார்க்கிறேன் நிகழ்ச்சியில் இந்த வாரம் ராமராஜன் இடம்பெறுகிறார். திங்கள் முலம் வெள்ளிவரை இரவு பத்து மணிக்கு. முதல் நாள் நிகழ்ச்சி பார்த்தேன். கல்கி பத்திரிகையில் இருந்தபோது
சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன்னால் ராமராஜனைச் சந்தித்துப் பேசியது நினைவுக்கு வந்தது.
கிராமிய சிறப்பிதழ் செய்யலாம் என்று முடிவுசெய்துவிட்டோம். யார்,யாரையெல்லாம் பேட்டி எடுக்கலாம், எதைப் பற்றியெல்லாம் கட்டுரை எழுதலாம் என்று பட்டியல் போட்டபோது ராமராஜனின் பேட்டி அவசியம் இடம்பெறவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அவரை எப்படிப் பிடிப்பது? எங்கே தேடுவது? யாரைக் கேட்டால் விவரம் தெரியும்? படங்கள் வந்து எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டன.. செல் வைத்திருப்பார். ஆனால் யாரிடம் கிடைக்கும்?சில நாள்கள் கழித்து தினந்தந்தி படித்துக்கொண்டிருந்தேன். ஏதோவொரு கோவில் திருவிழாவில் நடக்க உள்ள கலைநிகழ்ச்சியில் ராமராஜன் கலந்து கொள்வதாக விளம்பரம் வந்திருந்தது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் என்று கடையம் ராஜுவின் பெயர். பக்கத்தில் அவருடைய மொபைல் எண். சட்டென்று அந்த எண்ணைத் தொடர்புகொண்டேன். என்னிடம் நம்பர் இல்ல.. விஜயமுரளி நம்பர் தரேன்.. அவர்கிட்ட இருக்கும்.. என்றார்.ராமராஜனின் பி.ஆர்.ஓவாக இருந்தவர் விஜயமுரளி. அவர் மூலம் ராமராஜனின் எண் கிடைத்தது. பேசினேன். டெல்லியில் இருப்பதாகச் சொன்னார். அவர் அப்போது எம்.பியாகவும் இல்லை. ஆனாலும் டெல்லியில் இருப்பதாகச் சொல்கிறார். நம்பித்தானே ஆகவேண்டும். சென்னை வந்ததும் பேசுவதாகச் சொன்னார். சொன்னபடியே பேசினார்.

பேட்டி வேண்டும் என்றேன். என்னை எதுக்கு சார் பேட்டியெடுக்கறீங்க? நான் நல்லாத்தான் இருக்கேன்.. ஒண்ணும் கஷ்டப்படல சார்.. வேண்டாம் சார்.. விடாப்பிடியாக மறுத்தார். தொடர்ச்சியான வற்புறுத்தலுக்குப் பிறகு சம்மதித்தார். கே.கே.நகர் பாண்டிச்சேரி கெஸ்ட் அவுஸ் பக்கத்தில் தங்கியிருப்பதாகச் சொனனர். ஃபோட்டோகிராபர் ராஜன் சகிதம் வீட்டுக்குச் சென்றேன்.

உள்ளே நுழைந்ததும் வரவேற்பறை. வாசலுக்கு இடதுபக்கம் ஒரு அறை. அங்கே முகம் பார்க்கும் கண்ணாடி தெரிந்தது. ஒருவர் அவசரம் அவசரமாக முகத்துக்குப் பவுடர் போட்டுக்கொண்டிருந்தார். ஊதிப்போன முகம். பெரிய சைஸ் கண்கள். வகிடு எடுத்து சீவிய தலை. வேட்டி கட்டிய முதியவர் ஒருவர் எங்களை வரவேற்று, உட்காரச் சொன்னார். அமர்ந்தோம்.

வந்துட்டாங்களா.. வந்துட்டாங்களா… என்ற குரல் அவ்வப்போது கேட்டது. சில நிமிடங்களில் அறையில் இருந்து வெளியே வந்தார் ராமராஜன். ட்ரேட்மார்க் சிவப்பு, பச்சை கலந்த சட்டை. வெள்ளை பேண்ட். நெற்றியில் சந்தனப்பொட்டு. கொஞ்சம் கீழே குங்குமம். கோல்ட் வாட்ச். குண்டு சைஸ் மோதிரம். வித்தியாசமான பர்ஃப்யூம்.
பரஸ்பர அறிமுகங்கள் முடிந்ததும் பேட்டி தொடங்கியது. உண்மையில் பேட்டி கொடுப்பதில் அவருக்கு விருப்பமில்லை. என்ன சார்… என்னைய எதுக்கு சார் பேட்டி.. என்றார். கிராமிய சிறப்பிதழ்.. நீங்கள் இல்லாமல் எப்படி? என்றேன். கிராமம்னா நானா சார்… கிராமம்னா பாரதிராஜா சாரை எடுங்க.. இசைஞானியை எடுங்க.. என்னைய போயி எதுக்கு சார்.. தயக்கம் அகலவில்லை. பிறகு பேசத் தொடங்கினார்.மேலூரில் வளர்ந்த கதையைச் சொன்னார். மூன்று ஷோவும் சினிமா பார்ப்பதற்காகவே தியேட்டரில் டிக்கெட் கிழிக்கும் வேலையில் சேர்ந்ததாகச் சொன்னார். பிறகு மானேஜர் வேலைக்கு வந்தபிறகும் சினிமா பார்ப்பதை நிறுத்தவில்லை என்றார். சிரித்துக்கொண்டேன்.பிணமாக நடிச்சாலும் சரி, சினிமாவுல ஒரு சீன்ல வந்துடணும் என்றார். எம்.ஜி.ஆர் வெறியனாகத் திரிந்த நினைவுகளை விவரித்தபோது அவர் முகத்தில் பரவசம். சினிமாவில் நடிப்பதற்காக சென்னைக்கு வந்ததையும் உறவினர்கள் உதவிய கதையையும் விவரிக்கும்போது ராமராஜனின் கண்களில் நீர் முட்டியது. பல விஷயங்கள் பேசினார். பேச்சுக்குப் பேச்சு சினிமா.. சினிமா.. சினிமா.

இடையிடையே ஒரு விஷயத்தை அழுத்திச் சொன்னார். சார்… நான் சோத்துக்குக் கஷ்டப்படல… நல்லா இருக்கேன்… கொஞ்ச வருஷத்துக்கு முன்னால பத்திரிகைகள்ல அப்படி எழுதிட்டாங்க.. நீங்களும் அப்படி பண்ணிடாதீங்க சார் என்றார்.

திடீரென வீட்டில் இருந்த பெரியவரை அழைத்தார். அண்ணே… கொண்டாங்க… என்றார். கூல்டிரிங்ஸ் சகிதம் அறைக்குள் நுழைந்தார் அந்தப் பெரியவர். ஃபேண்டா. ஒரு பாட்டில். அதைத் திறந்து இரண்டு தம்ளர்களில் ஊற்றினார். நானும் ஃபோட்டோகிராபரும் சாப்பிட்டோம். எனக்கு ஜலதோஷம் சார் என்றார்.

அறையில் இருந்த எம்.ஜி.ஆர் சிலையைப் பார்ததும் ஏனோ விஜயகாந்த் ஞாபகம் வந்தது. கேட்டேன். அவரு முதல்ல நடிகர் சங்கத்தலைவர் பதவியை ராஜினாமா பண்ணனும்.. கட்சி ஆரம்பிச்ச பிறகு எப்படி நேர்மையா சங்கத்து வேலைகளைச் செய்யமுடியும்.. இப்படிக் கேக்குறதுக்கு எனக்கு உரிமை இருக்கு… நானும் ஒரு நடிகர் சங்க உறுப்பினர்தான் என்றார்.

திருமண வாழ்க்கை பற்றிக் கேட்டேன். நாங்க என்ன சார்.. அடிச்சுகிட்டா பிரிஞ்சோம்.. மனசு ஒத்துப்போகல.. பிரிஞ்சுட்டோம்.. என்றவர், சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கப்போறேன் சார். சொந்தத்துல பொண்ணு இருக்கு… என்றார். வாழ்த்து சொன்னேன். அதிமுக சார்பாக எம்.பியானது நான் செய்த பாக்கியம் என்றார். அம்மா சொன்னா எப்போ வேணும்னாலும் கட்சிக்குப் பிரசாரம் பண்ணுவேன் என்றார்.

படம் பண்ணும் திட்டம் பற்றிக் கேட்டேன். ஆமா சார்.. ரெடியாயிட்டு இருக்கேன்.. ஸ்ட்ரிக்ட் டயட்.. அநேகமா துப்பறியும் நிபுணர் வேஷம். ஸ்க்ரிப்ட் ரெடி.. ஆரம்பிச்சுடுவோம் என்றார்.

பொருளாதாரம் பற்றிக் கேட்டேன். சாதாரணமான ஆளா இருந்தேன்னா காலைல கடையில போய் டீ சாப்பிடலாம்.. நான் போக முடியுமா சார்..வெட்கமா இருக்குன்னு சொல்லல… என்னைப் பார்த்துப் பரிதாபப்படறத என்னால ஏத்துக்கமுடியல. சாதா ஹோட்டல்ல சாப்பாடு சாப்பிடலாம்.. ஆனா சினிமாக்காரனா இருந்துட்டதால அதையும் செய்யமுடியல சார்..

உதவிக்கு ஒருத்தரை வேலைக்கு வச்சிருக்கேன். அவருக்கு சம்பளம் கொடுக்கணும். விசேஷம் வச்சிருக்கேன்னு நண்பர்கள் பத்திரிகை வைக்கறாங்க… போகணும்.. ஆட்டோல போகமுடியாது.. வாடகைக்கு கார் எடுக்கணும்.. இப்படி நிறைய எக்ஸ்ட்ரா செலவுகள்… சொந்தக்காரங்க.. பெரியப்பா, சித்தப்பா பசங்க உதவி பண்றாங்க… ஒண்ணும் பிரச்னை இல்ல.. சார்.. இப்பவும் சொல்றேன்.. நான் கஷ்டப்படல! சீக்கிரமே நம்ம படம் வந்துடும்.. எனக்கு இன்னொரு ரவுண்டு இருக்கு சார்!

0

ஆர். முத்துக்குமார்

11 comments so far

  1. கிரி
    #1

    இதைப்படித்தவுடன் ரொம்ப வருத்தமாகி விட்டது. எப்படி இருந்த மனுஷன்! காலம் தான் ஒவ்வொருவரையும் எப்படி மாற்றி விடுகிறது.

    இவர் கடைசியில் கூறிய பிரச்சனைகள் அதாவது எக்ஸ்ட்ரா செலவுகள் புரிந்து கொள்ள முடிகிறது.

    நல்ல நிலையில் இருந்த ஒருவர் இது போல ஆவது மனதுக்கு வருத்தமாக உள்ளது.

    அவர் கூறிய ” சாதாரணமான ஆளா இருந்தேன்னா காலைல கடையில போய் டீ சாப்பிடலாம்.. நான் போக முடியுமா சார்..வெட்கமா இருக்குன்னு சொல்லல… என்னைப் பார்த்துப் பரிதாபப்படறத என்னால ஏத்துக்கமுடியல” ரொம்ப கொடுமை.

    இது எவ்வளவு பெரிய தர்மசங்கடம். பார்க்கிறவன் என்ன சொல்லுவான்.. டேய்! மச்சான் இங்க பார்ரா ராமராஜன் இங்க வந்து டீ குடிச்சுட்டு இருக்காரு….ஹி ஹி ஹி

    இது போல எத்தனை பேச்சுகளை அவர் சந்தித்து இருக்கலாம்.

    இன்னும் எவ்வளவோ கூற நினைக்கிறேன்..

    ராமராஜன் மீண்டும் ஒரு ரவுண்டு வர வேண்டும்.

  2. Ganpat
    #2

    ஒரு சாதாரண மனிதன்,ஏதோ ஒரு பேரருளால்,தனக்கு கிடைக்கும் ஒரு பெரும் வெற்றியை,சரிவர பயன்படுத்திக்கொள்ளாமல் அது தன் திறமையினால் கிடைத்தது எனும் தவறான முடிவெடுத்து அதன் பிறகு உள்ளதையும் பறிகொடுத்த உதாரணங்கள் பல உள்ளன.அதில் ராமராஜனும் ஒருவர்.

  3. அ. சரவணன்
    #3

    //அவர் அப்போது எம்.பியாகவும் இல்லை. ஆனாலும் டெல்லியில் இருப்பதாகச் சொல்கிறார். நம்பித்தானே ஆகவேண்டும்

    :-) இதைப் படித்ததும் சூரியன் படத்தில் கவுண்டமணி சொல்லும் காமெடி நினைவுக்கு வந்தது. “அன்னைக்கு டெல்லில…. சரி உங்களுக்காக நான் கேன்சல் பண்ணிக்கிறேன்…”

    மற்றபடி நானும் ஜெயா டிவியில் திங்களன்று நிகழ்ச்சியைப் பார்த்தேன். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பல செய்திகளை அதிலும் சொன்னார்.

    ஜே.கே ரித்தீஷ், பவர் ஸ்டார் சீனிவாசன் என்று எவ்வளவோ பேரை பார்த்துவிட்டோம், ராமராஜனை மறுபடியும் பார்க்க மாட்டோமா…!

    பண விஷயத்தை பொறுத்த வரை, ஒருமுறை எம்.பியாக இருந்தாலே இருபதாயிரம் ரூபாய் பென்ஷன் கிடைக்கும். சினிமாவில் உச்சத்தில் இருந்தபோதும், எம்.பியாக இருந்த போதும் ஓரளவிற்கு சொத்தும் சேர்த்திருப்பார். ஆக மக்கள் பரிதாபப்படுவதில் அர்த்தமில்லை என்றே தோன்றுகிறது.

  4. மோகன்
    #4

    ”ராமராஜனின் வளர்ச்சி எங்களை பொராமைப் பட வைக்கிறது”
    இது அவர் உச்சத்தில் இருக்கும் போது கமலும் ரஜினியும் சொன்னது.

    ஆனால் இப்ப அவர் மார்கெட் இல்லாமல் உதவியாளருக்கு சம்பளம் கொடுக்கணும், வாடகைக்கு கார் எடுக்கணும்னு பேசும் போது கொஞ்சம் கஸ்டமாத்தான் இருக்கு.

    அட்லீஸ்ட் அவர காமெடி பீஸா பாக்ரதயாவது நிருத்தனும்.

  5. naveen
    #5

    வெறும் பப்ளிசிட்டி மூலம் தங்களை மக்கள் நாயகனாக காட்டிக்கொள்ளும் ரித்தீஷ், டாக்டர்.சீனிவாசன் போன்றோருடன் நிஜமான ‘மக்கள் நாயகன்’ ஆன ராமராஜனை ஒப்பீடு செய்வது தவறு. ரஜினி 75-80 லட்சம் சம்பளம் வாங்கிய காலத்தில், ஒரு கோடி வாங்கியவர் ராமராஜன். ‘கரகாட்டக்காரன்’ படத்தின் வெற்றி சாதாரணமானது அல்ல. அரசியலிலும் அவர் நிஜமான வெற்றி பெற்றவர்( சரத் போல 5 முறை தோல்வி அடையவில்லை). வெற்றியின் உச்சத்தில் இருந்த போது கூட யாரையும் அவர் தரக்குறைவாக பேசியது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரே சொல்வது போல, யாரும் அவரைப்பார்த்து பரிதாபப்படாமல் இருந்தாலே, அவரால் மீண்டும் ஜெயித்துக்காட்ட முடியும்!

  6. RANGARAJAN
    #6

    ராமராஜன் என்கிற மிக நல்ல மனிதர் மீண்டும் நடிக்க வந்தால் என்னைப் போன்றோர் மிகவும் ஆனந்தபடுவர். அவர் மீண்டும் வெற்றி பெற எமது வாழ்த்துக்கள்.

  7. VIVEK KAYAMOZHI
    #7

    அவர் ஒரு காலத்தில் தமிழ் திரையுலகில் கோடி கட்டி பறந்தவர், கிராம ராஜன் என்ற பெயருக்கு சரியான உதாரணம், இன்னமும் எங்கள் கிராமத்தில் அவர் நடித்த எங்க ஊரு பாட்டுக்காரன் படம் பயங்கர கூட்ட நெரிசலில் பார்த்து ரசித்த நினைவு பசுமையாக இருக்கிறது.கொளா ரேடியாவில் விசேசங்களுக்கு கிராமப்புறங்களில் அவர் நடித்த படங்களின் பாடல்களே ஒலிக்கும். சிறு வயது நினைவுகளில் ராமராஜன் தவிர்க்கமுடியாத ஒரு யதார்த்த ஹீரோ. நகர்ப்புறங்களில் வளர்ந்தவர்களுக்கு எப்படி ரஜினி கமலோ, அதுபோல் கிராமங்களில் வளர்ந்தோருக்கு ரோல் மாடல் ராமராஜன் தான். சராசரி மனிதனைப்போல் தோற்ற்றம், யதார்த்தமான பேச்சு, தீய பழக்கங்கள் இல்லாத மனிதனாக நடித்தது,குடும்ப செண்டிமெண்ட் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். அவர் என்றேன்டும் எங்கள் ஆதர்ஷ ஹீரோ தான்…
    அந்த இடத்தில் வைத்து பார்க்க இதுவரை வேறு ஒரு நடிகரும் வரவில்லை.

  8. truth
    #8

    “ஒரு சாதாரண மனிதன்,ஏதோ ஒரு பேரருளால்,தனக்கு கிடைக்கும் ஒரு பெரும் வெற்றியை,சரிவர பயன்படுத்திக்கொள்ளாமல் அது தன் திறமையினால் கிடைத்தது எனும் தவறான முடிவெடுத்து அதன் பிறகு உள்ளதையும் பறிகொடுத்த உதாரணங்கள் பல உள்ளன.அதில் ராமராஜனும் ஒருவர்.”

    I completely agree

    “பண விஷயத்தை பொறுத்த வரை, ஒருமுறை எம்.பியாக இருந்தாலே இருபதாயிரம் ரூபாய் பென்ஷன் கிடைக்கும். சினிமாவில் உச்சத்தில் இருந்தபோதும், எம்.பியாக இருந்த போதும் ஓரளவிற்கு சொத்தும் சேர்த்திருப்பார். ஆக மக்கள் பரிதாபப்படுவதில் அர்த்தமில்லை என்றே தோன்றுகிறது.”

    Very true

    சினிமாகாரர்கள் யாரும் யோக்கியர்கள் அல்ல
    வீணாக இவர்களுக்காக பரிதாபப்படுபவர்கள்தான் அப்பாவிகள்

  9. Ram
    #9

    I heard his film is releasing this pongal. It should rock…

  10. MS
    #10

    //சாதாரணமான ஆளா இருந்தேன்னா காலைல கடையில போய் டீ சாப்பிடலாம்.. நான் போக முடியுமா சார்..வெட்கமா இருக்குன்னு சொல்லல… என்னைப் பார்த்துப் பரிதாபப்படறத என்னால ஏத்துக்கமுடியல. சாதா ஹோட்டல்ல சாப்பாடு சாப்பிடலாம்.. ஆனா சினிமாக்காரனா இருந்துட்டதால அதையும் செய்யமுடியல சார்..

    உதவிக்கு ஒருத்தரை வேலைக்கு வச்சிருக்கேன். அவருக்கு சம்பளம் கொடுக்கணும். விசேஷம் வச்சிருக்கேன்னு நண்பர்கள் பத்திரிகை வைக்கறாங்க… போகணும்.. ஆட்டோல போகமுடியாது.. வாடகைக்கு கார் எடுக்கணும்.. இப்படி நிறைய எக்ஸ்ட்ரா செலவுகள்… சொந்தக்காரங்க.. பெரியப்பா, சித்தப்பா பசங்க உதவி பண்றாங்க… ஒண்ணும் பிரச்னை இல்ல..//

    உள்ளதை உள்ளபடி சொன்ன அந்த மனப்பான்மை பாரட்டகூடியது.

  11. Kris
    #11

    கட்சி,திரையுலகம் அவருக்கு நல்ல வாய்ப்புகளை கொடுக்கத்தான் செய்தது..பிரபு போன்ற நடிகர்கள் போல அப்பா வேடத்துக்கு மாறினால் இவ்ளோ கஷ்டம் தேவையில்லை..
    அது இருக்கட்டும்,Offline இல் சொன்ன,உங்களை நம்பி அவர் சொன்ன விசயங்களை இப்போது கட்டுரை ஆக்கியதன் அவசியம் என்ன?

Leave a Reply





XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Facebook comments: