ஆழி பெரிது

46. விளிம்பு நிலை துறவிகள்

1913ல் பிரிட்டிஷ் அரசாங்கம் காவல்துறைக்காக உருது கையேடு ஒன்றை வெளியிட்டது. அந்த கையேட்டில் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு சன்னியாசி சம்பிரதாயம் குறித்தும் விளக்கப்படங்கள் இருந்தன. எப்படிப்பட்ட நாமங்கள் இடுகிறார்கள்? அவர்களுடைய நெற்றியில், தோளில் இருக்கும் மத அடையாளங்கள் என்ன?

இவர்கள்தான் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிராக கிளர்ச்சியை ஏற்படுத்துபவர்கள். கலகக்காரர்கள். அரச விரோதிகள். 20ம் நூற்றாண்டில் அல்ல 19ம் நூற்றாண்டிலேயே இந்த சாது சன்னியாசிகளை பிரிட்டிஷ் அரசாங்கமும் அதற்கு முன்னால் கும்பெனி என்கிற கிழக்கிந்திய கம்பெனியும் தங்கள் எதிரிகளாக அடையாளம் கண்டுவிட்டனர்.

1824ல் வில்லியம் ஸ்லீமான் (William Sleemann 1788-1856) என்கிற கிழக்கிந்திய கம்பெனி அதிகாரி, கம்பெனி அதிகாரத்துக்கு உட்பட்ட இடங்களில் ஊர் ஊராக செல்லும் சாதுக்கள் கூட்டமாக செல்வதை வலுக்கட்டாயமாக தடுக்கும் Vagrant Act என்பதை உருவாக்கி அமுல்படுத்தினான்.  சாதுக்கள் மீது தான் கண்ட குறைகளை அவன் பதிவு செய்தான். இந்துக்களில் எல்லா சாதியினரும் பைராகிகளாகவும் கோஸ்வாமிகளாகவும் ஆக முடிகிறதாம். அத்துடன் இந்த சன்னியாசிகள் பிரிட்டிஷாருக்கு எதிரான கருத்துக்களை பரப்புகிறார்கள். எனவே இத்தகைய சன்னியாசிகள் காவல் நிலையங்களில் கட்டாயமாக ரிஜிஸ்டர் செய்யப்பட வேண்டுமென சட்டமியற்றினான்.

1857 எழுச்சிக்கு இத்தகைய சாதுக்களின் பங்களிப்பு இருந்திருக்கவேண்டுமென்பதை அப்புரட்சி நெருப்பைப் பரப்ப பயன்படுத்தப்பட்ட மதக்குறியீடுகள் சுட்டிக்காட்டின என்னும் அடிப்படையில் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் பெஞ்சமின் டிஸரேலி போன்றவர்கள் விவாதித்தனர். (புரட்சியில் ஈடுபட ஒத்துக்கொண்ட சிப்பாய்கள் தங்களுக்குள் தாமரை மலர்களை பரிமாறிக்கொண்டார்கள்).

பிரிட்டிஷாரின் அச்சம் பொருளற்றது என கூற முடியாது. 1920ன் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு நாகபுரியில் நடந்தது. அப்போது அந்த மாநாடு குறித்த ரகசிய காவல்துறை அறிக்கை ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகிறது. ‘மிகவும் சக்தி வாய்ந்த நாக சாதுக்கள் என்னும் போர்வீர சாதுக்கள் நூறுபேர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு ஒத்துழையாமை இயக்கத்தை மக்களிடையே கொண்டு செல்ல முடிவு செய்துள்ளனர்.’

சரி இதற்கும் வேதத்துக்கும் என்ன தொடர்பு?

சித்தர்கள், கலகக்கார துறவிகள். துறவறத்தையும் போர் பயிற்சியையும் ஒருங்கிணைத்து சமூகத்தின் விளிம்பு நிலைகளில் வாழ்ந்தவர்கள். சமுதாயத்துக்கும் அந்த சமுதாயம் பேணிய ஆழ்ந்த அறத்துக்கும் ஆபத்து வந்த போது அதை காப்பாற்ற சமுதாயத்துக்குள் வந்து மையமாக பணியாற்றி பின் மீண்டும் ஒதுங்கி தவ வாழ்க்கை வாழ்பவர்கள். இவர்கள் குறித்த ஒரு விவரணையை முதன் முதலாக நாம் வேதத்தில் காண்கிறோம்.  பொதுவாக வேத ரிஷிகள் இல்லற வாழ்க்கை வாழ்ந்தவர்கள். சமுதாயத்திலிருந்து விலகிச் சென்ற துறவிகள் அல்ல. ஆனால் வேத சமுதாயத்தில் அத்தகைய துறவிகள் வாழ்ந்தனர். அவர்கள் மதிக்கப்பட்டனர். பின்னர் நாக சாதுக்கள், நாத சித்தர்கள், சங்கரரின் பாரம்பரியத்தில் உருவாக்கப்பட்ட தசநாமிகள், பைராகிகள் – இவ்வகையிலான அனைத்து விளிம்புநிலை சமுதாயத்தின் ஆன்மிக குரலாக வாழ்ந்த சன்னியாசி மரபுகள் அனைத்தும் இந்த வேத பாரம்பரியத்தில் மதித்து போற்றப்பட்ட துறவி-ஞானிகள் எனும் சமூகத்திலிருந்து விருட்சங்களானவை ஆகும்.

ரிக் வேதத்தில் முனிகள் மற்றும் யதிகள் ஆகிய துறவிகளை நாம் காண்கிறோம். யதிகள் சித்த மரபினராக இருக்க வேண்டும். அவர்கள் படைப்பாக்கச் சக்தி கொண்டவர்கள். தெய்வங்களைப் போல் இவர்கள் படைப்பவர்களா என்றால் வேதம் தெய்வங்கள் யதிகளைப் போல் படைப்பாற்றல் கொண்டவர்கள் என கூறுகிறது (ரிக் 10.72.7). பாம்பாட்டிச் சித்தர் சித்தர்களின் முக்கியத்தன்மையாக இந்தப் படைப்பாற்றல் சித்தியைப் பாடுகிறார்: ‘இந்திரனார் உலகத்தை இங்கே காட்டுவோம்’ இந்திரனைத் துதித்தவர்கள். (ரிக் 8.6.18). சாமவேதத்தில் இந்த யதிகள் போரிடுபவர்கள் என்னும் குறிப்பும் வருகிறது. (சாமம் 2:314)

முனிகள் குறித்த வேத சித்திரம் சித்தர்களுக்கான இலக்கணமாகவே அமைகிறது. ககன மார்க்கமாக செல்பவர்கள், தவத்தால் சிக்தி பெற்றவர்கள்; தம்முள் அண்டத்தையே அடக்கும் வல்லமை கொண்டவர்கள். சூரியனின் தகதகப்பையும் பூமியின் நிறத்தையும் ஒத்த காவி-மஞ்சள் ஆடை அணிந்தவர்கள். நீண்ட கேசம் உடையவர்கள். ருத்ரனுடன் அமர்ந்து விஷத்தை அருந்தும் ஆற்றல் உடையவர்கள். அனைத்து இறை சக்திகளுக்கும் தோழர்கள். இதுதான் முனிகள் குறித்து வேதம் அளிக்கும் சித்திரம் (ரிக். 10:136: 1-7). சித்தர் வல்லபம் என்கிற தலைப்பில் பாம்பாட்டிச் சித்தர் அளிக்கும் சித்திரமும் இந்த வேத சித்திரத்தின் அனுபவ எதிரொலியாக அமைகிறது:

கட்டுக்கடங்காத பாம்பைக் கட்டிவிடுவோம்

கடுவிஷந்தன்னைக் கக்கி ஆடு பாம்பே … [பாடல் 25]

…எட்டுமலைகளைப் பந்தா யெடுத்தெறிவோம்

ஏழு கடலையுங் குடித்தேப்பமிடுவோம் …[பாடல் 28]

மற்றொரு முக்கியமான வேத சமுதாய துறவிகள் குழு ஒன்று இருந்தது. அவர்களே பின்னாட்களில் ஆயுதம் ஏந்திய துறவிகளாகப் பரிணமித்தனர். அலெக்ஸாண்டர் முதல் அவுரங்கசீப் வரை அன்னிய ஆதிக்கங்களை எதிர்த்து போராடிய அந்த வீர துறவிகளின் வேத வேர்களையும் வரலாற்றுப் பரிமாணங்களையும் அடுத்து நாம் காணலாம்.

(தொடரும்)

மேலதிக தகவல்களுக்கு:

  • William R. Pinch, Peasants and Monks in British India, Oxford India Paperbacks, 1999
  • பேரா. டி.என்.கணபதி, தமிழ்ச்சித்தர் மரபு, ரவி பப்ளிகேஷன்ஸ் 2004

0

அரவிந்தன் நீலகண்டன்

2 comments so far

  1. V. Srinivasan
    #1

    miga arumai.
    nandri.
    anbudan,
    srinivasan.

  2. balakrishnan
    #2

    balakrishnan
    #14

    October 11th, 2011 at 6:06 pm

    இன்றும் ஈரானியர்கள் தாங்கள் தான் ஆரியர்கள் என்றும், இந்தியர்கள் தங்களுடையதும் திராவிடர்களினதும் கலப்பினால் வந்தவர்கள் என்றும் வாதாடுகிறார்கள்.
    ஈரானிய சரித்திர ஆராய்ச்சியாளர்களையும், அவர்களின் சரித்திரத்தையும் பொய் என்று நிருபிக்கப் படவேண்டிய பொறுப்பு

    http://www.iranchamber.com/history/article…ple_origins.php

    ஈரான் என்று இன்று அழைக்கப்படும் Persia. PErsia என்ற சொல்லிற்கு Persian அல்லது Farsi மொழியில் Land of Aryans என்று அர்த்தம்.Hindi, Urudu, Farsi Persian போன்ற மொழிக்கிடையிலான ஒற்றுமைகள் தொடர்புகளை விவாதிக்க வேண்டிய தேவையிருக்காது என்று நம்புகிறேன்.

Leave a Reply





XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Facebook comments: