ஆழி பெரிது
பாபா சாகேப் அம்பேத்கர் வேத சமுதாயம் காட்டும் வர்ணம் குல தர்மம் அல்ல என்பதை மிகவும் ஆணித்தரமாக மீண்டும் கூறுகிறார். அவரது சாதி ஒழிப்பு குறித்த புகழ் பெற்ற கட்டுரைக்கு பின்னால் மகாத்மா காந்தியுடன் அவர் நிகழ்த்திய உரையாடலின் போது மீண்டும் இதை தெளிவுபடுத்துகிறார். பாபா சாகேப்புடன் உரையாடும் போது காந்திக்கே வர்ணம் என்பது குலதர்மத்தை அடிப்படையாக கொண்டது எனும் எண்ணம் இருக்கிறது. இதனை அம்பேத்கர் மறுக்கிறார். காந்தியின் இந்த எண்ணம் வேத நெறிக்கு புறம்பானது என அவர் கருதுகிறார்: ‘வேதம் காட்டும் வர்ண கோட்பாடென்பது ஒருவருடைய இயல்பான குணத்துக்கு ஏற்ப அமைந்ததே. மகாத்மா காந்தியின் வர்ண கோட்பாடோ ஒருவரது இயற்கையான இயல்பை கணக்கில் எடுக்காமல் குலத்தின் அடிப்படையில் அமைந்ததாகும்.’
இதைத் தொடர்ந்து இன்றைய காலகட்டத்தில் வேத சமுதாயத்தின் வர்ணப் பிரிவுகள் குறித்தும் கூட கவலைப்பட வேண்டியதில்லை என்பதால் வர்ணவியவஸ்தா என்பதையே தாம் தேவையற்றதென கருதுவதாக அம்பேத்கர் கூறுகிறார். தொடர்ந்து அவர் கூறும் மற்றொன்று மிகவும் முக்கியமான கருத்தாகும்: ‘சாதியும் வர்ணமும் ஒரே பொருளைக் குறிக்கும் இருவார்த்தைகள் என்று கொண்டு பின்னர் வர்ணம் என்பது ஹிந்து மதத்தை வரையறை செய்யும் சாஸ்திரங்களின் இன்றியமையாத விஷயம் என கொண்டால் பின்னர் சாதியை மறுதலிக்கும் எவரும் எப்படி ஹிந்துவாக இருக்க முடியும்?’
தான் இந்துவாக இறக்க மாட்டேன் என அம்பேத்கர் கூறிய ஹிந்து மதம் வர்ணத்தையும் சாதியையும் ஒன்றாக காணும் இந்து மனப்பாங்கைதான். அவரது காலகட்டத்தில் ஏன் இன்றைக்கும் கூட பெரும்பான்மையான இந்துக்களின் மனநிலை இதுவாகவே இருக்கிறது என்பது வருத்தத்துக்குரிய உண்மையாகும். ஆனால் அம்பேத்கர் சுட்டிகாட்டியுள்ளது போல வேத சமுதாயம் உண்மையிலேயே பிறப்படிப்படையில் அமையாத ஒரு சமூக அமைப்பையே ஆதர்சமாக கட்டமைத்தது. எனவேதான் அம்பேத்கரின் குரலை வேத சமூகநீதியின் குரலாக கருதவேண்டும்.
சிலர் இது அதீதமான கற்பனையோ என எண்ணலாம். ஆனால் நவீன இந்தியாவில் சமூகநீதிக்கான குரலும் ஒடுக்கப்பட்டவர்களுக்கான குரலும் வேத தருமத்தின் புத்தெழுச்சியுடன் இணைந்தே எழுந்தன என்பதை நினைவில் கொண்டால் அண்ணல் அம்பேத்கரின் குரல் இப்பெரும் கால வெள்ளத்தில் உருவான மகத்தான பெரும் பேரலை என்பதை உணர முடியும்.
ஆரிய சமாஜம் இந்திய விடுதலை போராட்டத்திலும் சரி இந்திய சமூகநீதி போராட்டத்திலும் சரி மிகப் பெரிய போராளிகளை உருவாக்கியது. பெருந்தலைவர் எம்.சி.ராஜா தலித் மக்களுக்காக போராடிய மிக முக்கிய தலைவராக ஆரிய சமாஜ தேசியவாதியான லாலா லஜ்பத்ராயை குறிப்பிடுகிறார். வேத புத்தெழுச்சி இவ்விதமாக தேசிய விடுதலையையும் சமூகநீதியையும் நோக்கி பயணித்ததை பிரிட்டிஷார் மிகவும் அச்சத்துடன் நோக்கினார்கள். வட இந்தியாவின் அவுத் மற்றும் வட மேற்கு பகுதிகளின் லெப்டினண்ட் கவர்னராக இருந்த சர் ஹெர்கோர்ட் பட்லர் லக்னோவிலிருந்து சர் டன்லப் ஸ்மித் என்பவருக்கு எழுதிய ரகசிய கடிதத்தில் (1-டிசம்பர்-1907) குறிப்பிடுகிறார்:
ஆரிய சமாஜத்தின் நோக்கம்தான் என்ன? இவர்களால் பெண் கல்வி ஏற்படும் தாக்கம் என்ன? அரசாங்கம் விரைவாக செயல்படவில்லை என்றால் ஆரிய சமாஜம்தான் பெண்கல்வியை பெரிய அளவில் கொண்டு செல்லும். பெண்கள் நமக்கு எதிராக திருப்பப்பட்டால் நம் நிலை இந்த நாட்டில் கதியற்றதாகிவிடும். தாழ்த்தப்பட்ட மக்களை சமூகத்தில் மேலே கொண்டு வரும் போக்கும் தேசிய உணர்ச்சிக்கு உரமளிக்கும் போக்கும் இணைந்த ஆபத்தான இயக்கம் ஆரிய சமாஜம்.
வேத புத்தெழுச்சியை முன்வைத்த தயானந்த சரஸ்வதியின் ஆரிய சமாஜமே இன்று ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைப் பதமாக இருக்கக்கூடிய ‘தலித்’ எனும் பதத்தை சமூகநீதிக்கான போராட்டத்தில் முதன்முதலாகப் பயன்படுத்திய இயக்கம் என்பது தற்செயலானதல்ல. 1880களிலேயே தலித் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படும் பாடசாலையை ஆரிய சமாஜம் உருவாக்கியது. 1921 இல் தலித்தோத்பன் சபை எனும் தலித் மேம்பாட்டு அமைப்பை சுவாமி சிரத்தானந்தர் டெல்லியிலேயே உருவாக்கினார். அண்ணல் அம்பேத்கர் சுவாமி சிரத்தானந்தரை குறித்து இப்படி கூறுகிறார்: ‘சுவாமி சிரத்தானந்தரே ஒடுக்கப்பட்ட மக்களின் மிகப் பெரிய, மிக சிறந்த தலைவர் ஆவார்’ (the greatest and the most sincere champion of the Untouchables). சுவாமி சிரத்தானந்தர் வேத நெறியால் செதுக்கப்பட்டவர் ஆவார்.இந்த தேசம் தாழ்வுற்று அல்லலுற்று அன்னிய ஆதிக்கத்திலும் மூட பழக்கவழக்கங்களிலும் சமூக தேக்கநிலையிலும் இருந்த போது இந்த தேசத்தை மேலெழுப்பியது வேத புத்தெழுச்சியே.
பெண்விடுதலைக்கு அடிப்படை அஸ்திவாரத்தை நவீன இந்தியாவில் அழுத்தமாக அமைத்ததும் வேத புத்தெழுச்சியே.
(தொடரும்)
0
அரவிந்தன் நீலகண்டன்








