கஜினி முகமதுவும் ராஜராஜ சோழனும்
“ஹிட்லர் ஆறு மில்லியன் யூதர்களைக் கொல்லவில்லை தெரியுமா? உண்மையிலேயே நாஸிகள் யூதர்களைக் கொல்லவே இல்லை. அந்த வாயு அறைகளில் கொன்றிருக்கவே முடியாது. தொழில்முறை வாயு அறை அமைப்பவர்களிடமெல்லாம் கேட்டு…”
1940களில் நடந்த யூதப் படுகொலைகளையும் நாஸிகளின் வதைமுகாம்களையும் குறித்துப் பரவலாகப் பரப்பப்பட்ட / படும் சால்ஜாப்புகள் இவை. இதைச் செய்வோர் யூத வெறுப்பாளர்கள், தீவிர வலதுசாரி வெள்ளை இனமேன்மைவாதிகள், அரேபிய இஸ்லாமிய அடிப்படைவாதிகள். தெள்ளத்தெளிவாக வரலாற்றில் நடந்த கொடுஞ்செயல்களை நடக்கவே இல்லை என்றும், அவை முழுக்க முழுக்க வேறு கோணத்தில் அணுகப்பட வேண்டியவை என்றும் சொல்லும் போக்கு ஒன்று இருந்து வருகிறது. அரசியல் இலாபக் கணக்குகளில் தொடங்கி, மனவக்கிரம் வரை அத்தகைய அணுகுமுறைக்குப் பல காரணிகள் இருக்கலாம். ஆனால் ஒரு சமூக நோய்ச் சூழலில் அத்தகைய மனவக்கிரங்கள் பல தலைக் காளிங்கனெனப் படம் எடுத்து ஆடி, சூழலையே நச்சாக்கிவிடும்.
இந்த ஞாயிற்றுக் கிழமை தினமலர் வாரமலரில் திண்ணை பகுதியில் நடுத்தெரு நாராயணன் கஜினி முகமதுவின் புகழைப் பாடியிருக்கிறார். உரையாடல் பாணியில் எழுதப்பட்டிருக்கும் அப்பகுதி:
“கஜினி முகமது…ரொம்ப நல்லவன்; வல்லவன்…”
“என்னய்யா, அந்தக் கொள்ளைக்காரப் பாவி, அடிக்கடி நம்மூருக்குள்ளே கோவில் அது, இதுன்னு புகுந்து, கொள்ளையடிச்சிட்டுப் போயிருக்கான். அவனைப் போய் நல்லவன்னு சொல்றியே…’
“அப்படியல்ல, நாணா… நம்ம தமிழ்நாட்டு ராஜாக்கள் கூட, அந்தக் காலத்தில் வடநாட்டை வென்றான், இமயத்திலே புலிக் கொடி பறக்க விட்டான், கங்கை கொண்டான், கடாரம் கொண்டான், இலங்கையை வென்றான் அப்படீனெல்லாம், நாம் நம் நாட்டு அரசர்களைப் பற்றிப் பெருமை பேசுகிறோமல்லவா? அதுபோல, அவனுடைய பாலைவன நாட்டிலே, பயிர், பச்சைக்கே பஞ்சம். நம் நாட்டிலே ஐந்து நதி பாயும், பஞ்சாப் பகுதி வளமாக இருந்தது. வந்தான்; கொள்ளையடித்தான். கோவிலில் இருந்த தங்க விக்கிரகங்களை எடுத்துப் போனான். அந்தத் தங்கத்தைப் பக்கத்து நாட்டுக்கு விற்று, வேண்டிய பண்டம் வாங்கி, தன் நாட்டினரைக் காப்பாற்றினான். அவ்வளவுதானே!”
பெல்ஜியத்தைச் சேர்ந்த இந்தியவியலாளர் கொயன்ராட் எல்ஸ்ட் இந்த மனநிலையை “Negationism” என்கிறார். வரலாற்றின் யதார்த்தத்தைக் காணமறுக்கும் மனநிலை. அப்படிப் புதைகுழிக்குள் தலை மூடிக் கொள்வதை அறிவுஜீவித்தனமெனக் கருதும் மனநிலை.
மேலே சொன்ன நடுத்தெரு நாராயணனின் கஜினி முகமது குறித்த “கண்டுபிடிப்புகளும்” இந்த Negationism வகையறாவைச் சார்ந்த்துதான். இவர் கூறியிருக்கும் ஒவ்வொரு கருத்தும் எத்தனை உண்மை என்று பார்க்கலாம்:
1. சோழர்கள் கடாரம் மீதும் இலங்கை மீதும் படையெடுக்கவில்லையா? அதைப்போலத்தான் முகமது கஜினி படையெடுத்ததும்.
இலங்கை மீது சோழர்கள் படையெடுத்தது வரலாறு. நமக்கெல்லாம் தெரியும். ஜாவா, சுமத்ரா ஆகிய நாடுகளுக்கும் படையெடுத்தார்கள் சோழர்கள். இலங்கையில் அனுராதபுரத்தை அவர்கள் தாக்கினார்கள். எந்தப் படையெடுப்பையும் போலவே அதுவும் அழிவைக் கொண்டு வந்தது. உதாரணமாக, அனுராதாபுரத்தில் சோழ வீர்ர்கள் அங்கிருந்த பௌத்த ஆலயங்களைத் தாக்கினார்கள். ஆனால் படையெடுப்புக்குப் பின்னர் ராஜராஜ சோழனின் நடத்தை எப்படி இருந்தது எனப் பார்க்க வேண்டும். திரிகோணமலை கல்வெட்டுச் செய்திகள், ராஜராஜ சோழன் ஒரு பௌத்த விகாரத்தையும் / மடாலயத்தையும் சீர் செய்து அதற்கு நிலத்தையும் செல்வத்தையும் அளித்த செய்தியைக் கூறுகின்றன. தாங்கள் கடல்கடந்து வென்ற சுமத்ராவின் சைலேந்திர குல அரசர்கள், நாகப்பட்டினத்தில் பௌத்த சூடாமணி விகாரத்தை நிறுவ நிலமும் ஆதரவும் அளித்தது ராஜராஜ சோழனும் ராஜேந்திர சோழனும்தான். மேலும், அவர்களின் கடல்கடந்த சாம்ராஜ்ஜிய உருவாக்கம் வெறும் போர்களால் மட்டுமல்ல; உறுதியான வணிக – கலாசார உறவுகளால் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த உறவினை நிலைநிறுத்த கோவில்களையும் பௌத்த விகாரங்களையும் சோழர்கள் கட்டினார்கள்.
அதாவது, சோழர்கள் கடல் கடந்து மதச்சூறையாடல்களைச் செய்யவில்லை. மாறாக, அவர்கள் உருவாக்கிய பண்பாட்டு உறவுகள் இருவழிப்பாதையாக இருந்தன. ராஜராஜ சோழன் தான் பவுத்தர்களைத் தண்டித்து சைவ மதத்தைப் பரப்பியதாக எந்த க் கல்வெட்டு ஆதாரமும் சொல்லவில்லை. ராஜ ராஜ சோழனோ, ராஜேந்திர சோழனோ ஒரு நாட்டின்மீது படையெடுத்தால் அங்குள்ள மக்களைக் கொன்று, தேவாலயங்களை – புத்த விகாரங்களை உடைத்ததாகத் தங்கள் மெய் கீர்த்திகளில் தங்களைப் புகழ்ந்துகொண்டது கிடையாது. தப்பித்தவறி அவர்களுடைய வீரர்கள் இம்மாதிரிச் செயல்களில் ஈடுபட்டால் அது அரசனுக்கு இழுக்காகக் கருதப்பட்டதே ஒழிய, பெருமையாக அல்ல.
இதற்கு நேர் மாறானது கஜினி முகமது நடத்திய தாக்குதல்கள். எப்படி?
2. கஜினி இந்தியாவின்மீது படையெடுத்தது, கொள்ளையடிக்க மட்டுமே. அந்த நோக்கத்தை ஒவ்வொரு முறையும் வெற்றிகரமாக நிறைவேற்றினான்.
முகமது கஜினி, பொருளுக்காக இந்தியா மீது படையெடுத்தான் என்று சொல்வது சரியல்ல. இந்தியாவில் ஓர் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தை நிறுவுவதே அவனது நோக்கம். அவனது தாக்குதல்கள் “உருவ வழிபாடு செய்பவர்களை தண்டிக்கவே”. ஆனால் அவனது படையெடுப்புகள், சாம்ராஜ்ஜியம் நிறுவும் நோக்கத்தில் தோல்வி அடைந்தன. பல நேரங்களில் படையெடுப்பு என்பதே நிலை மாறி, சூறையாடிவிட்டு ஓடும் கொள்ளைக்காரச் செயலாக மட்டுமே முடிந்தது. சில நேரங்களில் அதுவும் இல்லாமல் திரும்ப வேண்டிவந்தது. அவனது அவைப் புலவர்களின் மிகையான புகழ்பாடல்களுக்குள் கொஞ்சம் கூர்ந்து பார்த்தாலும் இந்த உண்மைகளைத் தெரிந்து கொள்ளலாம்.
உதாரணமாக, கிபி 1015இல் முகமது கஜினி இந்தியாவின்மீது நிகழ்த்திய படையெடுப்பு தோல்வியில் முடிந்தது. இதைக் குறித்து அவனது புகழ் சரிதம் பாடும் அவனது அரசவைக் கவிஞன் உத்பி எதுவுமே சொல்லவில்லை. ஆனால் ஃபெரிஷ்தா இந்தப் படையெடுப்புத் தோல்வி குறித்துக் குறிப்பிடுகிறார். இதைக் குறித்து எழுதும் வரலாற்றாசிரியர்கள், உத்பியின் மௌனம் தோல்வி அடைந்த படையெடுப்புகள் நடக்கவே இல்லை என்பதாகக் காட்ட வேண்டிய கட்டாயம் நிலவியதைக் குறிப்பதாகச் சொல்கின்றனர். முகமதுவின் அவைப் புலவர்களின் துதிகளைப் பெரும்பாலும் அப்படியே வரலாறாக ஏற்ற இஸ்லாமிய வரலாற்றாசிரியர் முகமது சையது கூட, கிபி 1021-22 இந்தியப் படையெடுப்பு அவனது வரலாற்றாசிரியர்களால் பூசி மெழுகப்பட்ட தோல்வி எனச் சொல்கிறார். முகமதுவின் புகழ்பெற்ற சோம்நாத் சூறையாடலின் பின்னரும் அவன் தப்பிதோம் பிழைத்தோம் என்றுதான் ஓடி, தன் தாய்நாடு சேர வேண்டியிருந்தது. போகும் வழியில் ஜாட் இனத்தவரின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளான அவன், பின்னர் திரும்பப் படகுகளில் வந்து ஜாட்களை தண்டித்ததாக எழுதியிருப்பது தாடியில் மண் ஒட்டவில்லை என்பதற்காக உருவாக்கப்பட்ட புகழ்ச்சிக் கதையே என்கின்றனர் வரலாற்றறிஞர்கள்.
ஆனால் முகமதுவை ஒரு கதாநாயகனாகக் காட்ட வேண்டிய அவசியம் அன்றைக்கு கலீபாவுக்கு இருந்தது. அன்று கஜினி இஸ்லாமிய கலீபாவின் ஆளுகைக்கு உட்பட்டதுதான். இந்தியாவின் மீதான அவனது படையெடுப்புகளுக்கும் கலீபாவின் மத அங்கீகாரம் இருந்தது. இந்தச் சூழ்நிலையில்தான் முகமது கொண்டு வந்த தங்கமும் வைரமும் குறித்து அதீத விவரணைகள் உருவாக்கப்பட்டன. அவன் விக்கிரக ஆராதனையாளர்களான ஹிந்துக்களைத் தண்டித்தது குறித்தும் இஸ்லாமினை நிலை நிறுத்தியது குறித்தும் புகழ்மாலைகள் புனையப்பட்டன. முகமது கஜினி இஸ்லாமிய விரிவாதிக்கத்தின் மத்தியகால ஆதர்சமாக்கப்பட்டான். இவனது படையெடுப்பு விவரணங்கள் கஜினி பிரதேசத்தில் புழங்கி வந்த அலெக்ஸாண்டரின் இந்தியப் படையெடுப்புக் கதைகளைப் பிரதி எடுப்பதாகக் காட்டும் வரலாற்றாசிரியர் அலி அனூஷார் கூறுகிறார்: “(இந்தக் கதைகளெல்லாம்) எந்த ஆதாரத்தில் உருவாக்கப்பட்டவை? கஜினி அரசவை உத்வேக உரைகளின் பொம்மலாட்டக்காரர்களால்.”
3. முகமது கஜினி கொள்ளையடித்துக் கொண்டு சென்ற செல்வத்தைக் கொண்டு பல நல்ல காரியங்கள் செய்தான். கலை – அறிவியலை வளர்த்தான். அல்-பரூனியை ஆதரித்தான்.
அல்-பரூனியை கஜினி முகமது ‘ஆதரித்த’ விதம் விசித்திரமானது. வரலாற்றாசிரியரும் வானவியலாளருமான அல்-பரூனியின் சேவைகளை கஜினி முகமது பயன்படுத்திக் கொண்டாலும் அவர் ஒரு கைதியாகவே முகமதுவால் கைப்பற்றப்பட்டு இந்தியாவுக்குள் கொண்டு வரப்பட்டார். பின்னர் சரித்திர ஆசிரியராக மாறியபோதும் கைதி அந்தஸ்து போய்விடாமலே கடைசி வரை இருந்தார். இஸ்லாமியராக இருந்தபோதிலும் அன்னியர்களான ஹிந்துக்களிடம் இயல்பான ஒரு வெறுப்பு அல்லது பாரபட்சப் பார்வை அவருக்கு இருந்தபோதிலும், எது சரி எது தவறு என்பதை அவர் ஆழமாக உணர்ந்திருந்தார். உதாரணமாக முகமது கஜினியின் தாக்குதலுக்கு ஆளாகி அவனை மிகக் கடுமையாக எதிர்த்த எல்லைப்புற ஹிந்து அரச வம்சமான ஸாஹாஹியர்களைக் குறித்து அல்-பரூனி சொல்கிறார்: “அவர்கள் நல்லதைச் செய்வதில் எப்போதும் பின்வாங்கியதில்லை. அவர்கள் நன்னடத்தையும் திண்மையான மனமும் கொண்டவர்கள்”
பல தடவை முகமது கஜினி அல்-பரூனியின்மீது சினம் கொண்டு அவரை மாதக்கணக்கில் தனிமைச் சிறைகளில் அடைத்த விவரணங்களும் கிடைக்கின்றன. முகமது கஜினியின் கொடூரமான நடவடிக்கையால் ஹிந்து அறிஞர்களுடனும் அறிவியலாளர்களுடனும் பழகி அறிவைப் பெறும் வாய்ப்பை இஸ்லாமிய உலகம் இழக்கிறது என்பதையும் அல்-பரூனி பதிவு செய்கிறார்.
முகமது கஜினியின் அரசவை வரலாற்றாசிரியரான உத்பி, எப்படி முகமது இஸ்லாமிய மையக் கருத்தாக்கத்துக்கு எதிரான கருத்துகள் பரவுவதைத் தடுத்தான் என்பதையும், எந்தவிதப் புதிய எண்ணவோட்டத்தையும் ஏற்பட்டுவிடாமல் தடுப்பதில் எத்தனை தீவிரமாகவும் கவனமாகவும் இருந்தான் என்பதையும் விவரிக்கிறார். இஸ்லாமிய கலீப்பேத்திலிருந்து தப்பி கிழக்கத்திய நாடுகளுக்கு நூல்களின் ஓலைச்சுருள்களுடன் தப்பி ஓடிவந்த ஓர் எகிப்திய அறிஞரை முகமது கைப்பற்றி தூக்குமேடைக்கு அனுப்பினான் என்பதை உத்பி பெருமையுடன் விவரிக்கிறார்.
ஆக, கலைகளை, அறிவியலை, கல்வியை முகமது கஜினி வளர்த்தான் என்பது நிச்சயமாகத் தவறான விஷயமே ஆகும்.
4. அப்படியானால் முகமது கஜினி எப்படிப்பட்ட மன்னன்? அவனது முக்கியத்துவம்தான் என்ன?
முகமது கஜினி ஒரு சிறந்த போர்வீரன். காட்டுமிராண்டியோ, பண்பாடற்றவனோ அல்ல. போருக்காகப் போர் என்று போரிடுபவனும் அல்ல. அவனது முதன்மை நோக்கமாக, அவனது காலகட்டத்திலும், பின்னர் அடுத்த 1000 ஆண்டுகளுக்கும் அவன் இஸ்லாமிய விரிவாதிக்கத்தின் சின்னமாகவே இருந்திருக்கிறான். உதாரணமாக, இந்த வாசகங்களைப் படியுங்கள்:
‘இஸ்லாம், விக்கிர ஆராதனையின்மீது கொண்ட வெற்றியின் மணிமகுடமாக சோமநாத் கோவில் சூறையாடல் கருதப்பட்டது. இஸ்லாமிய உலகமே முகமது கஜினியைப் பெரும் வீரனாகப் பாராட்டியது. அரசவைக் கவிஞர்கள் போட்டி போட்டுக்கொண்டு அவனைப் பாராட்டினார்கள்.’
தலைசிறந்த இஸ்லாமிய வரலாற்றாசிரியர் முகமது நஸீம் 1930இல் எழுதிய வாசகங்கள் இவை. ராஜராஜ சோழனின் அத்தனை மெய் கீர்த்திகளிலும் ஒரு வரியாவது அவன் (அல்லது அவனது வீர்ர்கள்) புத்த விகாரங்களை இடித்ததைப் பாராட்டி இருப்பதைக் காட்டமுடியுமா? இத்தனைக்கும் தன்னை சிவபாதசேகரன் என்று சொல்லிக் கொண்ட மன்னன்தான் அவன். ஆனால் நிச்சயமாக பல புத்த விகாரங்களுக்கும் பள்ளிகளுக்கும் நிலம் கொடுத்த செப்பேடுகளில் அவன் பெயரை காணமுடியும்.
முகமது கஜினிக்கு ஒரு மதச்சார்பற்ற காரணத்தைக் கண்டுபிடித்து அவனை “வல்லவன் நல்லவன்” ஆக்குவதன் மூலம் ஊக்குவிக்கும் சக்திகள் எத்தகையவை என்பதை நாம் அறியவில்லை என்பதால்தான், ஒவ்வொரு பாகிஸ்தானிய ஆக்கிரமிப்பின் போதும் பாகிஸ்தானிய வானொலி முகமது கஜினியின் பெயரை முழங்குகிறது. இன்று இந்தியாவை மிரட்டும் அணு முனையுடன் கூடிய ஏவுகணைகளுக்குப் பெயரும் கஜினிதான்.
ஆனால் இத்தகைய போலி சால்ஜாப்புக்கள் எதுவும் இல்லாமல் வரலாற்றை எதிர்நோக்கி நம்மால் கடந்து செல்ல முடியாதா? முடியும் என்கிறது அண்மையில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி. முகமதுவின் தலைநகரமான கஜினி இன்று ஆப்கனிஸ்தானில் ஒரு நகரம். அங்கிருந்து வருகிறது ஒரு குழு. எந்த சோமநாதபுரக் கோவிலை கஜினி உடைத்தானோ, அதே குஜராத்துக்கு. இன்று சோமநாதபுரத்தில் கம்பீரமாக நிற்கிறது சோமநாதர் ஆலயம். கஜினியில் இருந்து வந்த குழுவினர் வைக்கும் கோரிக்கை “போர் எங்கள் நகரத்தை அடியோடு அழித்துவிட்டது. அதை மீண்டும் கட்டி எழுப்ப நீங்கள் உதவவேண்டும்.”
கோரிக்கையை ஏற்று உதவுகிறது குஜராத் அரசு.
இதுதான் இந்தியா. இலங்கையில் பௌத்த விகாரத்தைப் புதுப்பித்த சிவபாத சேகரனான இராஜராஜனின் சூடாமணி விகாரத்தை நாகப்பட்டினத்தில் அமைப்பதில் பெருமைப்பட்ட சோழர்களின் பண்பாடு மிளிரும் இந்தியா.
ஜெர்மனிக்கும் இஸ்ரேலுக்குமான நல்லுறவு தழைக்க, யூதர்களை ஹிட்லர் கொன்றது யூத வெறுப்பினால் என்பதை மாற்றி, அன்று ஜெர்மனியில் நிலவிய சமுதாய – பொருளாதாரச் சூழல்தான் காரணம் என எவரும் சொல்வதில்லை. எவனோ ஒரு வெறிபிடித்த கொள்ளைக்காரன் மதத்தினால் செய்த செயலை நியாயப்படுத்துவதன் மூலம்தான் ஹிந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் உள்ள நல்லுறவை உருவாக்க முடியும் என நினைப்பது இரு சமுதாயத்தினருக்கும் செய்யும் மோசடி. குறிப்பாக, முஸ்லீம் சமுதாயத்தினருக்குச் செய்யப்படும் அவமானம். ஏனெனில், இந்திய முஸ்லீம்கள் முகமது கஜினியின் வாரிசுகளும் இல்லை. அவனது மனநிலையைக் கொண்டவர்களும் இல்லை – நம் போலி மதச்சார்பின்மைவாதிகளின் பொய்ப் பரப்பல்கள் எடுபடாதவரை.
மேலதிக விவரங்களுக்கு:
* டேவிட் டெமிங், Science and Technology in World History, Volume 1: The Ancient World and Classical Civilization, McFarland, 2010
* அலி அனூஷார், The Ghazi Sultans and the Frontiers of Islam, Volume 9 of Routledge studies in Middle Eastern history, Taylor & Francis, 2008
* முகமது ஹெச் சையது, History of Delhi sultanate, Anmol Publications PVT. LTD., 2004
* ஜான் ஹட்சின்ஸன், ஜீன் பிலிப்பே வோகல், History of the Panjab hill states, Volume 1 Asian Educational Services, 1994
* முகமது நஸீம், The Life and Times of Sultan Mahmud of Ghazna, காம்ப்ரிட்ஜ் யூனிவர்ஸிட்டி பிரஸ், 1930
* ராம் கோபால் மிஸ்ரா, Indian Resistance to Early Muslim Invaders Upto 1206 A.D., Anu Books, Shivaji Road, Meerut city, 1983. மறுபதிவு 1992.









October 6th, 2010 at 6:42 am
இது மட்டும் அல்ல முகமது கஜினியின் படையெடுப்பின் பொழுது கொண்டு செல்லப்பட அடிமைகளின் வம்சாவளிகள் இன்றும் ஜிப்சிகள் ,ரோமாக்கள் என்று ஐரோப்பாவில் இரண்டாம் கட்ட குடிமக்களாக உள்ளார்கள்
October 6th, 2010 at 7:08 am
Brilliant.
October 6th, 2010 at 7:46 am
அருமையான பதிவு. ஆழ்ந்த ஆராய்ச்சி , அதனுடன் முதிர்ச்சி பெற்ற சிந்தனை நன்றாக தெரிகிறது. ரசித்து படித்தேன்.
வாழ்த்துக்கள்
விஜய்
October 6th, 2010 at 7:59 am
அரவிந்தன் நீலகண்டனின் எல்லா கட்டுரைகளையும் ஏற்கனவே படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். இப்பொழுதெல்லாம் அரவிந்தன் நீலகண்டனின் கட்டுரைக்கு பின்தான் எனது காலை ஆரம்பம். ஆழ்ந்த படிப்பும் கருத்துக்களை வெளிப்படுத்தும் பாங்கும் மிகுந்த பெருமைக்குரியது.
குமரி எஸ். நீலகண்டன்
October 6th, 2010 at 8:21 am
மிகவும் வித்தியாசமான,தேவையான அணுகுமுறை.ராஜ ராஜனையும்,கஜினியையும் ஒப்பிட்டிருப்பது நன்று.சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் “விதி” பற்றிய உரை நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அரவிந்தன் நீலகண்டன் தானா நீங்கள்?—காஸ்யபன்
October 6th, 2010 at 8:54 am
வேறு எதுவும் எழுத தெரியாதவர்கள் எல்லாம், எந்திரன் தான் நாட்டின் எல்லா பிரச்சினைக்கும் காரணம் என எழுதி குவிப்பதை படித்து அலுத்து போன எங்களுக்கு , இது போன்ற கட்டுரைகள் ஆறுதல் அளிக்கின்றன
October 6th, 2010 at 10:47 am
அரவிந்தன்
அற்புதமான ஆராய்ச்சி கட்டுரை. உங்களுக்கு தமிழர்கள் நன்றிக் கடன் பட்டிருக்கிறார்கள். தினமலர் போன்ற பத்திரிகைகள் அரைகுறை அறிவுடன் இப்படி எழுதுவது புதிதல்ல அது அவர்களுக்கு ஒரு முற்போக்கு இமேஜை பெற்றுத் தரும் என்று நம்புகிறார்கள். பெரும்பாலான நம் தமிழ் எழுத்தாளர்களும் இந்த வகையே. நிறைய ஆதாரங்களுடன் எளிய மொழியில் அனைவருக்கும் சென்று சேருமாறு எழுதியுள்ளீர்கள். சரஸ்வதி அருள் உங்களுக்குப் பரிபூர்ணமாக நிறைந்துள்ளது. தமிழ் பேப்பர் ஆசிரியர்கள் உங்களுக்கு இடம் அளித்திருப்பதும் மகிழ்சிக்குரிய பாராட்டுக்குரிய ஒரு செயல். அவர்களுக்கும் எனது நன்றிகள். உங்கள் கருத்துக்கள் எனக்குப் புதிதல்ல என்றாலும் பரவலான வாசகர்களை சென்றடைய வேண்டியது முக்கியம் அதை தமிழ் பேப்பர் செய்கிறது. வாழ்க்க, வளர்க. இவை தொகுத்து புத்தகமாகவும் அவசியம் வர வேண்டும். அப்புறம் தவறாமல் இந்தக் கட்டுரை தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு அனுப்பி வைக்கவும் இனிமேலாவது அவரது ஆசிரியர் குழு இவை போன்ற தவறுகளைச் செய்யாமல் இருக்கட்டும்
அன்புடன்
ச.திருமலை
October 6th, 2010 at 11:03 am
ஆசிரியர் அரவிந்தன் அவர்களே,
தினமலர் வாரமலரில் வருகின்ற ஒரு கட்டுரைக்கு இவவளவு முக்கியத்துவம் தர வேண்டுமா? தினமலர் பேப்பர் வாங்குவதால் வருகிறது என்ற ஒரு காரணத்திற்காக மட்டுமே படிக்கிற கும்பலில் நானும் ஒருவன். இது போன்ற எத்தனையோ தேவையில்லாத விஷயங்களை நாளேடுகள் தருகின்றன. கஜினியை நான் ஒரு
நாடோடி, பணத்திற்காக வந்தான் என்றும் பாபர்தான் இஸ்லாமிய விரிவாதிக்கத்தின் சின்னம் என்றும் நினைத்திருந்தேன்.
சரித்திரம் இன்னும் சற்று பின்னோக்கி செல்கிறது.உங்கள் கட்டுரை நன்றாக இருக்கிறது. இணய தளங்கள் மூலம் சரித்திரம் இன்னும் சுவையாகி வருகிறது. நன்றி உங்களுக்கா அல்லது தினமலர் வாரமலருக்கா?
October 6th, 2010 at 11:11 am
வாரமலர் படித்தவுடன் கடுப்பானேன் , மிக நல்ல ஒப்பீட்டுடன் கூடிய தெளிவான கட்டுரை .
October 6th, 2010 at 11:26 am
அருமையான கட்டுரை அரவிந்தன், வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் சிந்தனை.
October 6th, 2010 at 12:28 pm
இது போல் செப்டெம்பர் 11 தாக்குதல்கள் பற்றியும் நிறைய கதைகள் உலவுகின்றன.அது ஜப்பானியர்கள் அணுகுண்டுக்குப் பழிவாங்க செய்தது.யூதர்கள் முஸ்லீம்களை மாட்டிவிட செய்த சதி.என்றெலாம்….இவற்றை சீரியசாய் எடுத்துக் கொண்டு விவாதிப்பவர்களைக் கண்டிருக்கிறேன்.என்ன சொல்ல முடியும்…நாம் எப்போதும் நம்ப விரும்புகிறவற்றை மட்டுமே நம்புகிறோம்.
October 6th, 2010 at 1:49 pm
வாரமலர் நடுத்தெரு நாராயணன் நடுத்தெருவில் வைத்து நாரடிக்கப்படவேண்டிய நாராயணன் என்பதைத் தெளிவாக அழகாகச் சொல்லிவிட்டீர்கள்.
October 6th, 2010 at 2:17 pm
அருமையான ஒப்பீடு, அதுவும் தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரமாவது ஆண்டில், வாழ்த்துக்கள்.
October 6th, 2010 at 2:21 pm
அருமையான ஒப்பீடு அதுவும் தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டில்.வாழ்த்துக்கள்.
October 6th, 2010 at 3:18 pm
கட்டுரைக்கான என் கருத்து:
Very Good,Informative and Brilliant
October 6th, 2010 at 5:08 pm
Very Good Article and I can say well researched article with good information.
Vaazhthukkal…
Satheesh
October 6th, 2010 at 5:19 pm
சார் ரொம்ப தேங்க்ஸ். மதன் சாரின் வந்தார்கள் வென்றார்கள் புத்தகத்திலும் கஜினி பற்றி நிறைய தகவல்கள் சொல்லியிருக்கார். அதில் இல்லாத மேலும் பல புதிய தகவல்களை இந்தக்கட்டுரை மூலம் தெரிந்து கொண்டேன். அற்புதமான எழுத்துகளை அறிமுகப்படுத்தும் தமிழ்பேப்பருக்கு ஆயிரம் கோடி நன்றிகள்.
October 6th, 2010 at 7:19 pm
கஜினி பற்றி விக்கிபீடியா பார்த்தால் வேறு சித்திரமே தெரிகிறது. எதை நம்புவது என்று சற்று குழப்பமாகவே உள்ளது.
October 6th, 2010 at 7:31 pm
நல்ல அருமையான கட்டுரை . வாழ்த்துக்கள்
October 6th, 2010 at 10:09 pm
அரவிந்தன் நீலகண்டன், ஒரு பாசிச அடிவருடி என்பது, அவரின் ஒவ்வொரு கட்டுரைகளிலிருந்தும் தெரிகிறது. இவர் ஆய்வுக்கு எடுத்துகொள்ளப்படும் நூல்கள் யாவும், பொதுவுடமைவாதிகள், மற்றும் குறிப்பாக இஸ்லாமியர்களின் உண்மைக்கு மாற்றமானதாக உள்ளது. திரு.பா.ரா அவர்களின் நீண்டகால வாசகன் நான். அவர்கள் இதுபோன்ற, {தொடர்} கட்டுரைகளுக்கு மதிப்பளிக்காமல், நடுநிலயான கட்டுரைகளுக்கு மட்டும் வாய்ப்புகள் தருமாறு, மிக அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி!
October 6th, 2010 at 11:06 pm
உண்மையான வரிகள் சார்
விடா முயற்சிக்கு கஜினியை உதாரணம் கட்டுவதே தவறு
October 6th, 2010 at 11:39 pm
ஆழமான கட்டுரை. அரவிந்தன் நீலகண்டனுக்கும் தமிழ்பேப்பருக்கும் எனது நன்றிகள்.
October 6th, 2010 at 11:54 pm
நாஞ்சில் மண்ணின் அருமை மைந்தரே, உங்களின் தேச பக்தி மிகுந்த கட்டுரைகளால் பாரத்தாய் பெருமை அடைகிறாள். வாழ்க பாரதம். வெல்க பாரதம்.
October 7th, 2010 at 12:13 am
திரு அன்புக்கரசு, அரவிந்தன் தனது தரப்புத் தரவுகளை முன்வைத்தே எழுதுகிறார். அவரை மறுக்க நினைத்தால், நீங்கள் உங்களுடைய தரவுகளுடன் வரலாம். தமிழ் பேப்பர், சார்புகளற்ற ஒரு பொதுவெளி. எல்லா விதமான சிந்தனைப் போக்குகளுக்கும் இங்கு இடமுண்டு. ஆரோக்கியமான விவாதங்கள் வரவேற்கப்படுகின்றன. மாறாக, பொத்தாம்பொதுவான தனிநபர்த் தாக்குதல்களை அனுமதிக்க இயலாது. அரவிந்தன் எழுதுவதை கருத்து ரீதியில் எதிர்கொண்டு பதில் சொல்வதே உங்கள் தரப்பின் நியாயத்தைப் புலப்படுத்தும். மாறாக ஒற்றைச்சொல் பொத்தாம்பொது விமரிசனங்களால் எப்பயனும் இல்லை. – ஆசிரியர்.
October 7th, 2010 at 12:30 am
ஒரு தேர்ந்த எழுத்தாளரால் தனது எழுத்து யுக்தியால் வாசகர்களை தன் கருத்தோடு உடன்பட செய்ய முடியும். பொய்யை சரியான விகிதத்தில் கலந்து உண்மையை நீர்த்துப் போகச் செய்யமுடியும். இதை தான் நம்ம அரவிந்தன் செய்து வருகிறார். ஒரு தேர்ந்த (அகப்பயணம் கடந்த) வாசகனால் எழுத்தாளரின் பொய்யை அறிய முடியும் தொடர்ந்து அவரை வாசிப்பதால்.. “தமிழ் ஹிந்து” வின் நகலான தமிழ் பேப்பர் நன்றாக இருக்கும் இந்துத்துவவாதிகளுக்கு.. ஆசிரியர் பா.ரா. வாமே. நம்பமுடியவில்லை.
October 7th, 2010 at 2:42 am
எத்தனை காலமாக நாம் கஜினி என்ற மோசமான பேர்வழியை முன்னுதாரணமாய் காட்டிக் கொண்டு வாழ்ந்திருக்கிறோம். எதிர்காலம் சிறப்பாக அமைய நம் விழிதிறக்கும் கட்டுரைகளை எல்லாருக்கும் எடுத்து செல்வோம்
October 7th, 2010 at 3:19 am
அன்புள்ள உதயன்,
அ.நீ தமது தரப்புக்கான தெளிவான ஆதாரங்களை குறிப்பிட்டே எழுதியிருக்கிறார். அது பொய் எனில் அதே மாதிரி ஆதாரங்களின் அடிப்படையில் மறுத்து, அவை பொய் என நிரூபித்து உங்களது தரப்பை மேற்கொண்டு வரலாற்றாதாரங்களின் அடிப்படையில் நிறுவ வேண்டியதுதானே ? அப்படி செய்தால் அ.நீ அவர்களின் பொய் தோலுரிக்கப்படுவதோடு உங்கள் மீதான நம்பகத்தன்மை அதிகரிக்குமே !
அன்புடன்
முத்துக்குமார்
October 7th, 2010 at 10:17 am
ராஜராஜ சோழனையும் முகமது கஜினியையும் ஒப்பிட்டிருக்கும் பாங்கு அருமை.
மதச்சார்பற்ற பல்லவரும், சோழரும் ஆண்ட இந்த மண்ணைப் போலியான மதச்சார்புக் கோட்பாடு கொண்டு மக்களை அரசியலாளர்கள் ஏமாற்றாமல் இருக்கவேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டிகொள்வோம்.
நன்றி,
ராஜகேஸரி
October 7th, 2010 at 3:48 pm
மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது வாழ்த்துக்கள்! உங்களது இந்த மிகவும் நேர்த்தியாக எழுதப்பட்ட கட்டுரை! இந்து தர்மத்தை காக்க யாரோ ஒரு தேவபுருஷன் அவதரித்த்து தர்மத்தை காப்பான் என்று நம்து காப்பியங்கள் சொல்லுகிறது. அவைப்போலவே இருக்கிறது உங்களது ஆழ்ந்த ஆராய்ச்சியான இந்த கட்டுரை. இந்த மாதிரி கட்டுரையாளர்கள்தான் இன்றைய சூழ்நிலையில் அதிகம் தேவை. சில பொறம்போக்கு இஸ்லாமியர்கள் எழுதுகிறார்கள் அவர்கள்தான் இந்தியாவின் பூர்வகுடிமக்களாம் நாமெல்லாம் கைபர்போலன் கணவாய்வழியாக வந்தவர்களாம் என்ன ஒரு வரலாற்று குருடத்தனமான வாக்கியம் அது வென்று கூட சொன்னவனுக்கு தெரியவில்லை!
October 7th, 2010 at 8:12 pm
Brilliant article. Thanks to Aravindan for giving a flood of informations.
October 8th, 2010 at 7:26 am
EXCELLANT WRITE UP.
I READ IT ON A SARASWATHI POOJA DAY.
GODDESS HAS GIVEN YOU WISDOM TO ANALYSE WITH INTUITION.
IT OPENED ALL THE AVENUES BEYOND MIND CAN FATHOM OUT.
N.ILANKO
AUSTRALIA
October 8th, 2010 at 8:31 pm
தினமலரின் பல்நாக்கு தொழில் ரகசியம் பல வருடங்களுக்கு முன்பே , திருச்சி பகுதி செய்தித் தாளையும் சென்னை பகுதி செய்தித் தாளையும் ஒரே நாளில் படிக்கும் வாய்ப்பு கிடைத்த போது தெரிந்தது. திருச்சி பகுதி செய்தித் தாளில், கருணாநிதிக்கு கூழைக் கும்பிடும், சென்னை பகுதி செய்தித் தாளில், கருணாநிதி இகழவும் இருந்தது. பின்னர் சமீபத்தில், கருணாநிதி, தினமலரில் கூட என்னைப் புகழ்ந்து வருகின்றதே என்று நன்றி தெரிவித்தபோது, தினமலரின் சாயம் வெளுத்து, அடிமைப்பட்ட விதம் தெரிந்தது.
October 8th, 2010 at 9:28 pm
A wonderful article. aravindan neelakandan should write on secular akbar.(as projected by historians
October 9th, 2010 at 9:23 am
ஒரு தரப்பு செய்திகளே ஊடகங்களில் வரும்.உண்மைக்கு அங்கே இடம் கிடையாது என்று இருந்த நிலையை மாற்றி
நல்லதொரு முயற்சி எடுத்து வரும் இந்த தளத்திற்கும் அதன் ஆசிரியருக்கும் பாராட்டுக்கள்.
கூடிய சீக்கிரமே இத்தகைய கட்டுரைகளை வெளியிடுவதால் ஆசிரியரின் ஜாதி, பிறப்பு ஆகியவை பற்றி விவாதங்கள் கிளம்பும்.
மனதை திடப்படுத்தி கொள்ளுங்கள்.
October 9th, 2010 at 9:44 am
Whatever we have read as History are mostly deviation from actual happenings and concocted versions. THanks for a brilliant article throwing light on the facts.
October 9th, 2010 at 11:46 am
To puncture the hallow secular baloon is but service to humanity. Rather than Osamabinladen and Nazi past popes, the secularists are the most dangerous species on earth with their ill intentions and outspoken anti nationalism and anti hinduism.
October 9th, 2010 at 1:41 pm
அருமையான கட்டுரை. அரவிந்தனுக்கு நன்றி.
October 9th, 2010 at 6:29 pm
மிக நல்ல கட்டுரை…! நன்றி திரு.அரவிந்தன்..!
October 10th, 2010 at 12:03 am
திரு.அரவிந்தன் நீலகணடன்! தங்களின் இந்த அலசல் அருமை!! பெருமைக்கு எருமை மேய்க்கும் போலி மதசார்பின்மைவாதிகளின் சாயம் பக்கம் பக்கமாக அயோத்தி வழக்கில் பிரயாகை (அலகாபாத்) உயர்நீதிமன்றத் தீர்ப்பில் வெளுக்கப்பட்டு வெட்கம் கெட்டுப்போய் வெயிலில் காய்கிறது. இந்த அலங்கோலத்தில் நடுத்தெரு நாராயணன் சிந்தனையில் தரித்திர நாராயணன் ஆன கதையை வெளியிட்டுள்ளீர்கள். இது போன்ற ‘நிபுணர்கள்’ மணிக்கணக்கில் பேசுவர், பக்கம் பக்கமாக எழுதுவர், ஆனால் தாம் எழுதியதையே சான்றளிக்கச் சொன்னால் மறுப்பர். காரணம் எது பற்றியுமே ஒரு தெளிவு இல்லாது நெளிவு சுழிவுகளிலேயே வாழ்க்கை நடத்திப் பழக்கப்பட்ட செம்ம்றியாட்டுக் கூட்டம் அது. இவர்களின் பேச்சும் எழுத்தும் நெருக்கிப் பிடித்துக் கேட்டால் பரவலாகப் பேசப்பட்டது, பொதுவாக நம்பப்பட்டது, பத்திரிக்கையில் பதிக்கப்பட்டது என்று முடியுமே தவிர இதனை இதனால் தெளிந்து இது அறியும் இன்னறிவு இம்மியும் இவர்களுக்குக் கிடையாது. வேரறுக்கப் படவேண்டிய தண்டச் சிந்தனைவாதிகள் இவர்கள். Times of India பத்திரிக்கை இவர்கள் போன்ற நிபுணர்கள் பிரயாகை நீதிமன்றத்தில் ஆடையிழந்து ஓடிய அவலக்கதையைப் பிரசுரித்துள்ளது. பானைச் சோற்றில் ஒன்று இது. பதம் பாருங்கள்.
http://timesofindia.indiatimes.com/india/How-HC-exposed-experts-espousing-Masjid-cause/articleshow/6716643.cms
October 10th, 2010 at 1:46 am
நல்ல பதிவு
அண்மைக்காலமாகத்தான் அரவிந்தன் நீலகண்டன் பதிவுகளை வாசித்து வருகிறேன.
மிக நன்றாக உள்ளது.
பணி தொடரட்டும்.
October 11th, 2010 at 4:13 pm
Can I know the details about Gujarat Government’s help to rebuild the city of Gajini in Afghanistan.
Regards.
October 12th, 2010 at 4:51 pm
தினமலரில் கஜினி பற்றிய செய்தியைப் படிச்சதில் இருந்து மனம் வருந்தியவர்களில் நானும் ஒருத்தி. கஜினியின் படை எடுப்பைப் பாராட்டியே சூர்யா நடித்த “கஜினி” என்ற படமும் வந்தது நினைவில் இருக்கலாம். தினமலர் செய்தியைக் கண்டித்து எவரும் எழுதவில்லையே என நினைத்தேன். ஒரு பதிவானும் போடணும் என நினைத்தேன். தங்கள் கட்டுரை பல விஷயங்களையும் சொல்கிறது. நன்றி.
ஆனால் இத்தகைய போலி சால்ஜாப்புக்கள் எதுவும் இல்லாமல் வரலாற்றை எதிர்நோக்கி நம்மால் கடந்து செல்ல முடியாதா? முடியும் என்கிறது அண்மையில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி. முகமதுவின் தலைநகரமான கஜினி இன்று ஆப்கனிஸ்தானில் ஒரு நகரம். அங்கிருந்து வருகிறது ஒரு குழு. எந்த சோமநாதபுரக் கோவிலை கஜினி உடைத்தானோ, அதே குஜராத்துக்கு. இன்று சோமநாதபுரத்தில் கம்பீரமாக நிற்கிறது சோமநாதர் ஆலயம். கஜினியில் இருந்து வந்த குழுவினர் வைக்கும் கோரிக்கை “போர் எங்கள் நகரத்தை அடியோடு அழித்துவிட்டது. அதை மீண்டும் கட்டி எழுப்ப நீங்கள் உதவவேண்டும்.”//
உண்மை. இது தான் உண்மையான மதச்சார்பின்மையின் அடையாளமும் கூட.
October 12th, 2010 at 7:05 pm
Very good comparison. This article has given many new details. In the continuation one friend has said that some indians taken by Gajini are living as gipsys. is it true? what about other people who might have migrated during that period to other regions? can anybody or the author of the article who has very rich historical background elaborate the details in other articles? then only the our public know the effect of those atrocities committed by Gajini.
Thank you very much for your very good-interesting-informative article.
October 13th, 2010 at 1:53 pm
அய்யா அரவிந்தன் அவர்களே அப்படியே இராஜ ராஜனின் பெருமைகளை இங்கே போய் படித்து தெரிந்து
கொள்ளவும்
http://www.vinavu.com/2010/09/30/rajaraja-cholan/
October 15th, 2010 at 1:16 pm
Chola army was deemed to be as cruel and ruthless and any mugahl army in the matters of plunder and rape after winning terrtories.
தமிழ் நாவல்களில் (கல்கி,சாண்டில்யன் வகைகளில்) அவர்களை மிகவும் ரொமாண்டைஸ் செய்திருந்தனர். ஆனால் சுஜாதா எழுதிய ‘காந்தளூர் வசந்த குமாரன் கதை’ என்ற சரித்திர நாவல் யாதார்த்த்தை ஓரளவு சென்னது. அதில் தஞ்சை பெரிய கோயில் கட்ட நிகழ்த்தப்பட்ட அநீதிகள் ஒரு முக்கிய விசியம். அதனால் பாதிக்க்பட்டவர்களின் கோபம் பற்றிய விவரிப்பு உண்டு. ‘குந்தவையில் காதல்’ என்று அருமையான சிறுகதையில், ராஜேந்திர சோழனின் படை எடுப்பில் ஏற்றப்பட்ட கொடுமைகளை, கற்பழிப்புகளை, அழிவுகளை பற்றிய தகவல்கள் வருகின்றன.
இன்னும் முழு வரலாறு எழுதப்படவில்லைதான்.
October 19th, 2010 at 12:29 pm
அ.நீலகண்டனின் சமூக அக்கறையும் உழைப்பும் பாராட்டத்தக்கது. ஆனால் ஆராய்ச்சிக்கு தகுதியானது தினமணி தலையங்க பக்கமே தவிர தினமலர் அல்ல.
October 24th, 2010 at 1:38 pm
Saluta! piece of the information interested for me and my blog readers, can i quote your words in my personal blog if I place a linkback to your website?
October 27th, 2010 at 5:38 pm
WTF we have to rebuild that city? Is Modi attempting become Masthan?
பகைவனுக்கருளி ஆயிரம் ஆண்டுகள் பட்டது போதாதா? பகைவனுக்கு முக்தியை நோக்கிய பயணத்தை அருளுவதே சாலச்சிறந்த செயல். அதாகப்பட்டது தியானம், தவம், வாசியோகம் இவற்றைச் சொல்லித்தருவது யாவருக்கும் முக்தி நலம் அருளும் சிறப்பு!!
December 13th, 2010 at 4:32 pm
Thank you for your kind information about hitler….
February 2nd, 2011 at 5:33 pm
பிற மதங்களை இழிவு படுத்துவது நமக்கு தெரியாத ஒன்றாகும். . புத்த மதம் இந்து மதத்தில் இணைக்க படுவதற்கு முன்னால்(வினாயகர், முருகன் போல அல்லாமல்)தனி மதமாக பிரிந்து விட்டது. இருப்பினும் புத்த மதத்தின் சாரம் இந்து மதத்தில் முழுமையாக ஏற்று கொள்ளப் பட்டு விட்டது.
February 7th, 2011 at 9:01 pm
அரவிந்தன் நீலகண்டன்,
கஜினி முகமது ஒரு பெரிய கேடு கெட்ட கொள்ளைக்காரனென்று எல்லோருக்கும் தெரியும்.அதற்கு பல ஆதாரங்களும் உள்ளன…இஸ்லாமியர்கள்தான் இந்து ராஜாக்கள் வழிபறிகொள்ளைகள் செய்ததால்,கஜினி முகமது படையெடுத்து வந்தானென்று பகிரங்கமாக துணிந்து பொய் சொல்லுவார்கள்…நீங்களும் இப்படி சொல்லுவது வருத்தத்தையே தருகிறது..
February 16th, 2011 at 9:27 pm
ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா? எழுத்தாளர் ஜெயமோகனின் இந்தக் கட்டுரையை வாசிக்கும்போது இறுதியில் தங்களது வலைப்பக்கத்தின் சுட்டி கண்டேன்.
மிக ஆழமான, ஆராய்ந்து தெளிவாகப் பதிக்கப் பட்ட பதிவு. தாங்கள் குறிப்பிட்ட அனைத்தும் ஒத்துக்கொள்ளப் படவேண்டிய ஒன்று. மன்னராட்சி காலத்தில் இதுவே நடந்திருக்கப்பட வேண்டியது. திரு. ஜெயமோகன் குறிப்பிட்டுள்ளபடி, நிலவுடைமைச் சமூக அமைப்பின் இயல்புகளை ஆராயும்போது இவையனைத்தும் தவறானதல்ல.
//”உலகம் முழுக்க நாம் ஒன்றை கவனிக்கலாம், எந்த மன்னன் ஒற்றை அதிகாரத்தை உருவாக்கி நீடித்த அமைதியைக் கொடுக்கிறானோ அவனே அந்த சமூகத்தை அடுத்தகட்டத்துக்கு கொண்டுசென்றவனாக இருந்தான். அவ்வாறு எங்கெல்லாம் மேம்பட்ட நிலவுடைமைச்சமூகம் உருவாகி உற்பத்திஉபரி திரட்டப்பட்டு நாகரீகமும் பண்பாடும் வளர்ந்தது என்று அறிகிறோமோ அங்கெல்லாம் மிகக்கொடுமையான வன்முறை மூலமே அது நிகழ்ந்திருப்பதைக் காணலாம்.”//
ஒவ்வொரு மன்னனும் தத்தம் குடிமக்களைக் காக்கவும், தனது நாட்டின் வாணிபத்தைப் பெருக்கி, செல்வம் ஈட்ட, பிறநாட்டாரின் ஆக்கிரமிப்புகளிலிருந்து காக்க ‘போர்’ என்ற அழிவின் பாதையை கையாண்டதையும் தவறாகக் குறிப்பிட முடியாது. இக்கட்டுரையை வாசிக்கும் வாசகர்கள் தங்களை அந்தந்த காலகட்டத்துக்கு நிலைப்படுத்தி, ராஜராஜ சோழன் மற்றும் ஏனைய விமர்சிக்கப்படும் அரசர்களின் நிலைப்பாட்டில் நின்று வாசிக்க வேண்டும்.
ஒவ்வொரு சமூகத்தின் உருவாக்கமும் மற்றொரு சமூகத்தின் அழிவிலிருந்தே தொடங்கப்படுகிறது
வெளிப்படையாகப் பேசினால் வாசகர்கள் அனைவரும் தங்களுக்குத் தெரிந்த அல்லது தாங்கள் அறிந்த அல்லது தங்களுக்குக் கூறப்பட்ட கருத்தை வைத்தே கற்பனை ஓவியத்தை வரைந்துக் கொள்கின்றனர். 1000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுச் சரித்திர நிகழ்வுகளை வாசிக்கும் போது முறையான ஆராயப்பட்ட கற்பனை கொண்ட பார்வையாக இருப்பது நலம்.
February 24th, 2011 at 12:26 am
really fine but think why dinamalr published that article
March 8th, 2011 at 7:29 am
Certainly we know about Gajini as a looter. Now only we came to know that he is a propogator of islam. It is proud to know that we The Hindu people of Gujarat, is helping to build the city of Gajini. Thanks for the info.
April 22nd, 2011 at 12:30 am
இந்த கட்டுரையில் அரவிந்தன் சொல்ல விழைவது இஸ்லாமியர்கள் மோசமானவர்கள், அதற்காக புதிய கதையாக தென்னகத்தாரை சோடி சேர்க்க முயற்சித்துள்ளார். கஜினி முகமது ஒரு போராளி என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே அதுவும் முரட்டு நிலஅமைப்புடைய பகுதிகளை ஆண்டு வந்த ஒரு மன்னன் அவனால் அப்படித்தான் இயங்கி இருக்க முடியும், இயங்கி இருப்பான். அரவிந்தன் அவர்கள் கஜினி ஏதோ இந்துகளின் நாட்டில் தன் அரசை நிருவதற்கான எண்ணத்துடன்தான் வந்தார் என்று சொல்லிகின்றார் அப்படி நினைத்திருந்தால் அவனுக்கு பல சந்தர்ப்பங்கள் கிடைத்தன ஆனாலும் அவன் அப்படி பண்ணவில்லையே எ-கா சோமநாதர் கோவில் முற்றிலும் அவன் வசப்பட்டிருந்தது.
அவரை ராஜ ராஜனுடன் ஒப்பிடுவது வெரும் அவருடைய இனவாத வாததிற்காக சேர்த்துக் கொண்டதே அன்றி வேறில்லை, அவ்வளவு தெளிவானவர் “மலை எலி” என்றழைக்க பட்ட சிவாஜியுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டியதுதானே, மாட்டார் கடைசி வரை மாட்டார் ஏனென்றால் சிவாஜி ஒரு கொள்ளையன் இஸ்லாமியர்களை மட்டும்மல்லாமல் தன் இனத்தினரையும் கொள்ளையிட்ட கொள்ளைகாரன் என பெர்னியர் முதல் ஸ்டேன்லி லேன் ஃபூல் வரை தெளிவாக சொல்லி விட்டார்கள், நம்பி வந்து ஆர தழுவிய அபாசல்கானை அழுது புலம்பி ஏமாற்றி வார்நாக் என்ற ஆயுதத்தால் கொலை செய்தவன். அவன் செய்த லஞ்ச லாவன்யங்களுக்கு அளவே கிடையாது. ஆனாலும் அரவிந்தன் போன்றோருக்கு அவன்தான் ஹீரோ ஏனென்றால் தன்னை ஒரு இந்தமத மீட்பராக காட்டிக்கொன்டான், இதற்காக இவன் செய்த சித்து வேலைகள் எண்ணிலடாங்காது. சத்திரியன் என்று தன்னை தானே அழைத்து கொண்ட இவன் பிராமனனாகவும் தன்னை மாற்றி கொள்ள விரும்பினான், அதை பயண்படுத்திக் கொண்டு அவனிடம் ஒரு ஊர் அளவிற்கான ஆரிய கூட்டமே உண்டு கொழுத்தது, கைமாறாக காகை பட்டர் என்பவரின் தலைமையில் சிவாஜியை பிராமனனாக மாற்றினார்கள் இந்த ஆரிய புண்ணியவான்கள், இதை பற்றி விடுதலை ராசேந்திரன் அவர்களின் ஆர்.எஸ்.எஸ் ஒரு அபாயம் புத்தகத்தில் மிக விரிவாக எழுதியுள்ளார்.
இப்படி பட்ட ஒரு இந்து ஹீரோவுடன் ஒப்பிடுவதோடு நிறுத்தி கொள்ளுங்கள் தயவு செய்து வாழ்வில் சிறந்து விளங்கிய எம்பெருமான்களை உங்களின் மதத்துவ வாததுக்காக பயண் படுத்தாதீற்கள்.
அப்படி ஒப்பிட்டு பார்த்தால் கஜனி ஆயிரம் மடங்கு உசத்தி அந்த மலை எலியை விட. அப்புறம் இன்னோரு விஷயம் கஜினி இந்து கோவில்களை மட்டும் இடிக்கவில்லை சில பள்ளி வாசல்களையும் இடித்துள்ளான், அந்த கால கட்டத்தில் வழிபாட்டு தளங்களை உடைப்பது வெற்றியின் உச்சகட்டமாக இருந்தது என்பதை உங்களால் மறுக்க முடியுமா.
June 8th, 2011 at 7:34 am
கஜினி முகம்மதுவின் அராஜக படையெடுப்பால் அகதி ஆனவர்கள் சோமநாதபுற பகுதியை சேர்ந்தவர்கள் இந்தியாவெங்கும் சிதறி கிடக்கிறார்கள்.
July 28th, 2011 at 5:08 pm
Atleast i can see some people like u there to tel the real history.
Not only kajini, But also akbar, kori, thaimoor, sengiskhan and many invaders took indian blood as their tea. Even now a days, in school history book we see only dozens of fake history about these guys.
And they are shown as great heroes!
Does any one of our child know pooli thevan, sundaralingam, senbagaraman, krishnadevaraya and many more good warriors and saints in india? Atleast we should tel them the real history.
September 7th, 2011 at 2:26 pm
Kajini Mohamed is the ancestor of Babri Mosque demolishers!
September 28th, 2011 at 2:45 pm
As some were here very biased I agree with deepak from his another point of view.
February 24th, 2012 at 12:11 am
Very nice article. Why cant we spread or teach the real history. Why the history of India is modified to their personnel and political sake. I still feel bad for not knowing so much about my India truly. We being from the rich culture and rich heritage should know the rich values of our peoples for our present generation and future too..