ஒரே அடி!
ஒரு சிஷ்யன் தியானத்தில் அமர்ந்திருந்தான். அப்போது அவனுடைய குருநாதர் அந்த வழியாக வந்தார்.
‘குருவே, ஒரு விஷயம்’ என்றான் சிஷ்யன்.
‘என்ன?’
‘நீங்கள் சொன்ன ஜென் அம்சங்களை நான் முழுவதுமாகப் புரிந்துகொண்டுவிட்டேன் என்று உணர்கிறேன்’ என்றான் அவன்.
‘எப்படிச் சொல்கிறாய்?’
‘இதோ, என்னைப் பாருங்கள், தியானத்தில் உட்கார்கிறபோது ‘நான்’ என்கிற அந்த உணர்வு கரைந்து இல்லாமல் போய்விடுகிறது. எனக்குள் முழு வெறுமைதான் நிரம்பியிருக்கிறது!’
அவன் பேசிக்கொண்டே போக, குருநாதர் பக்கத்தில் இருந்த ஒரு குச்சியை எடுத்தார். அவன் முதுகில் ஓங்கி அடித்தார்.
‘ஆ!’ என்று அலறியபடி எழுந்தான் அவன். ‘ஏன் என்னை அடித்தீர்கள்?’ என்று கோபப்பட்டான்.
‘நான் முழுவதும் வெறுமையால் நிரம்பிவிட்டேன் என்றாயே’ என்று புன்னகை செய்தார் குருநாதர். ‘அப்படியானால் இப்போது இந்தக் கோபம் எங்கிருந்து வந்தது? அந்த வெறுமையிலிருந்தா?’







