நீலச்சட்டை, கூலிங் கிளாஸ்
ஜென் துறவி ஒருவர் சொற்பொழிவாற்றிக்கொண்டிருந்தார். ‘நீங்கள் உங்கள் மனத்தை உணரவேண்டும். அதுதான் உண்மையான ஜென் நிலை!’
முதல் வரிசையில் உட்கார்ந்திருந்த ஒருவர் எழுந்து நின்றார். ‘நீங்க சொல்றது பொய்’ என்றார்.
துறவி கோபப்படவில்லை. ‘ஏன் அப்படிச் சொல்றீங்க?’ என்று கேட்டார்.
‘மனம்-ன்னு ஒண்ணு நிஜமாவே இருக்கா?’
‘ஆமா, அதில் என்ன சந்தேகம்?’
‘அப்படி ஒரு விஷயம் உண்மையில இருந்தா, நம்மால அதைப் பார்க்கமுடியணுமில்லையா? அதைப் பார்க்காதவரைக்கும் அப்படி ஒண்ணு இருக்குன்னு நான் ஒத்துக்கமாட்டேன்’ என்றார் அந்த நபர். ‘மனம் இருக்கு-ன்னு எனக்கு நிரூபிச்சுக் காட்டவேண்டியது உங்க பொறுப்பு. இல்லாட்டி நீங்க சொல்றது பொய்ன்னுதான் நான் நம்புவேன்!’
துறவி சிரித்தார். ‘தம்பி, இப்போ இந்தக் கூட்டத்தில நீலக் கலர் சட்டை போட்டுக் கூலிங்க்ளாஸ் மாட்டின மீசைக்காரர் ஒருத்தர் இருக்கார், தெரியுமா?’ என்றார்.
அந்த நபர் சுற்றிலும் பார்த்தார். ‘எனக்குத் தெரியலையே!’ என்றார்.
‘உங்கமேல தப்பில்லை. ஏன்னா, நீங்க கீழே உட்கார்ந்திருக்கீங்க, நான் மேலே மேடையில இருக்கேன். அதனால, என்னால முழுக் கூட்டத்தையும், பார்வையாளர்களையும் கவனிக்கமுடியுது, நீலச் சட்டை, கூலிங்க்ளாஸ் மீசைக்காரரும் என் பார்வைக்குத் தெரியறார்!’ என்றார் துறவி. ‘அவர் உங்க பார்வைக்குத் தெரியலைங்கறதால, அப்படி ஒருத்தர் இல்லவே இல்லை-ன்னு சொல்லமுடியுமா?’
‘இல்லைங்க. அது முடியாது!’ அவர் ஒப்புக்கொண்டார்.
’நம்ம மனசும் அப்படிதான். வெளியே நிக்கறவங்களுக்குத் தெரியாது, உள்ளே போய்ப் பார்த்தவங்களுக்குத் தெரியும். அவங்க எவ்வளவுதான் சத்தம் போட்டாலும் ஆதாரங்களைக் காட்டினாலும் வெளியே நிக்கற ஒருத்தருக்கு அது புரியாது. உள்ளே வந்து பாருங்க, நான் எதையும் நிரூபிக்கவேண்டிய அவசியமே இல்லை, உங்க மனசு உங்களுக்குப் புரிஞ்சுடும்.’







