கண்றாவி பவுலிங்கும் கசுமால ஃபீல்டிங்கும்
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் குறித்து சதீஷ் கிருஷ்ணமூர்த்தி எழுதும் பத்தி இன்று ஆரம்பம். மார்க்கெடிங் மாயாஜாலம், விளம்பர மாயாஜாலம் நூல்களின் ஆசிரியரான சதீஷ், ஒரு கிரிக்கெட்டரும்கூட. உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாறு என்னும் இவருடைய புத்தகம் இப்போது ரிலீஸ் ஆகிறது.
உலகக் கோப்பை ஒரு வழியாக ஆரம்பித்துவிட்டது. நமக்குத் தான் கை கால் கொள்ளவில்லை. இருக்காதா பின்னே? இந்திய மண்ணிலேயே உலகக் கோப்பை என்றால் சும்மாவா? நாள்தோறும் திருவிழா தான். பொழுதெல்லாம் கோலாகலம் தான். காணாததைக் கண்டது போல் குதிக்கிறோம். கண் மண் தெரியாமல் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
இந்த முறை இந்தியா கண்டிப்பாய், கட் அண்டு ரைட்டாய் வெற்றி பெற்றுவிடும் என்று நம்மில் பலரும் முடிவே கட்டிவிட்டோம். வெற்றி பெற்று கப்பை எங்கு வைப்பது என்று முடிவு செய்வது தான் பாக்கி. ம்ம்ம்ம்ம்ம்… ஆசை இருக்கு தாசில் பண்ண!
இது வரை ஐந்து மா
ட்சுகள் முடிவடைந்து விட்டன. இந்த மாட்சுகள் நடந்த லட்சணத்தை வைத்துப் பார்த்தால் ஒன்று நன்றாகப் புரிகிறது. மாட்சுகள் நடக்கும் பிட்சுகள் அநியாயத்துக்கு வெத்து வேட்டுகள். பிட்சில் லவலேசம் பவுன்ஸ் இல்லை. மருந்துக்குக் கூட ஸ்விங் இல்லை. ஸ்னானப் ப்ராப்த்திக்குக் கூட பிட்சில் புல்லோ, ஈரமோ இல்லாத கட்டாந்தரைகளை பிட்ச் என்று போர்டு போட்டு மாட்சுகளை நடத்திக் கொண்டிருக்கிறோம். பவுலர்களுக்கு வேலையே இல்லை. வந்து எப்படிப் போட்டாலும் ஒரு எழவும் ஆகப் போவதில்லை. பேசாமல் விக்கெட் கீப்பரையே போடச் சொல்லலாம். அது கூட வேண்டாம். சும்மா கையை கட்டிக் கொண்டிருக்கும் அம்பயரையே பந்து போடச் சொல்லலாம். தரித்திரம் பிடித்த பிட்சுகளில் யார் போட்டு என்ன ஆகிவிடப் போகிறது!
பாட்டிங் ப்ராப்ளமே இல்லை. எவன் வேண்டுமானாலும் வந்து ஆடலாம். காசி பட கண்ணில்லாத ‘சீயான் விக்ரம்’ வந்து ஆடினாலும் அரை சதம் காரண்டி. அப்பேற்பட்ட ஒரு பிட்சில் ஒரு சோப்ளாங்கி அணியான பங்களாதேஷுடன் 370 ரன்கள் அடித்து விட்டோமாம். ஊரெல்லாம் ஒரே பேச்சு. சேவாக் அடித்தார். கோலி அடித்தார் என்று ஏகத்துக்கும் இறுமாப்பு. என்னவோ போங்கள். எனக்குத் தான் ஒன்றும் புரிய மாட்டேன் என்கிறது.
இல்லை தெரியாமல் தான் கேட்கிறேன். 370 அடித்தோம், இல்லை என்று சொல்லவில்லை. பங்களாதேஷ் என்ன அப்படி ஒரு பெரிய கொம்பா? சொல்லப் போனால் அது டீமே இல்லை! கார்ட்டூன் நெட்வொர்க், போகோ, டிஸ்னி சேனல் பார்க்கும் பாலகர்களின் தொகுப்பு. அந்த டீமுடன் 370 அடிக்கவில்லை என்றால்தான் அசிங்கம். சரி எதோ தெய்வ கடாட்சத்தில் அடித்துத் தொலைத்து விட்டோம். அதற்குப் பிற்கு ஒரு பவுலிங் போட்டோம் பாருங்கள். ஆஹா…ஆஹா….அதி அற்புதம். போட்ட பாதி பந்துகளுக்கும் மேல் பிட்சிலேயே படாமல் கிட்டத்தட்ட ஸ்கொயர் லெக் அம்பயர் காலின் அருகில் போய் பிட்ச் ஆகும் அளவுக்கு வைட் பந்துகள். ஓரிரு பந்துகள் அவர் காலை பதம் பார்த்ததாகக் கூடக் கேள்வி! ஸ்ரீசாந்த் போடும் அழகுக்கு நான்கு விக்கெட் கீப்பர்கள் வைத்தாலும் அவர்களையும் தாண்டி வைடாய் பவுண்ட்ரிக்கு போகும். எதோ பிட்சில் ஸ்பின் எடுப்பதால் கொஞ்சத்துக்கு கொஞ்சம் விக்கெட்டும் எடுத்துத் தொலைத்தோம். இல்லையேல் 370 பங்களாதேஷிற்கு முக்காமலேயே கிடைத்திருக்கும்.
அதோடு நம்மவர்களின் பீல்டிங்கைப் பார்த்தீர்களா? பீல்டிங் செய்ய வருவதற்கு முன் நம்மவர்கள் நாலு நெய் ரோஸ்டை வெண்ணெயை தொட்டுக் கொண்டு வெறும் கையில் சாப்பிட்டு கை அலம்பாமல் வந்ததைப் போல் அப்படி ஒரு தேவல். கையில் வரும் காட்சை கோட்டை விடுகிறோம். ரன் அவுட்டைத் தொலைக்கிறோம். கையில் பந்தைப் பிடிக்க முடிந்தால் தானேய்யா. அது சரி, பிடிக்க முடியவில்லை என்றால் நம்மவர்கள் தான் என்ன செய்வார்கள் பாவம்.
இந்த டீமை வைத்துக் கொண்டு ஜெயிப்போமா? பாட்டிங் ஏதோ தேறினாலும் தேறும். ஆனாலும் சொல்வதற்கில்லை. அடித்தால் அனைவரும் அடிப்பது. அவுட் ஆனால் அனைவரும் கோஷ்டி கானமாய் எதிர்க்கட்சி வெளிநடப்பு மாதிரி சேர்ந்து போவது என்று ஒரு வழக்கத்தை வைத்துத் தொலைத்திருக்கிறோம். அதையாவது விட்டுத் தள்ளுங்கள். நம்மவர்களின் பவுலிங்கை வைத்துக் கொண்டு நாக்கைக் கூட வழிக்க முடியாது. மகா தண்டம். வேண்டுமானால் நாங்கள் ஐம்பது ஓவர்கள் பாட்டிங் செய்கிறோம், ஆனால் பவுலிங் போடும் போது முப்பது ஓவர்கள் தான் போடுவோம். நாங்கள் ஐம்பது ஓவர்களில் அடித்ததை எதிர் அணியினர் 30 ஓவர்களில் அடிக்க சொல்லுங்கள் என்று ஐசிசியிடம் கேட்டுப் பார்கலாம். இந்த தண்ட பவுலிங்கை வைத்துக் கொண்டு இது கூட கொஞ்சம் ரிஸ்கான சமாசாரம் தான்.
இல்லை, இன்னொன்று செய்யலாம். பீல்டிங் செய்யும் போது 14 பேர் பீல்டிங் செய்வோம் என்று கோரலாம். ஆனால் அதிலும் ஒரு ஆபத்து இருக்கிறது. நாம் தான் பாலை விட்டுவிட்டு புல்லை தேவும் ‘தேவாதி தேவர்’களை வைத்துக் கொண்டிருக்கிறோமே. என்னத்தை பீல்ட் செய்து என்னத்தை கிழிப்பது.
இந்த கன்றாவி பவுலிங்கையும் கேனத்தனமான பீல்டிங்கையும் வைத்துக் கொண்டு ஜெயிக்க வேண்டுமானால் நாம் முதலில் ஆடி ஒரு 400, 500 அடிக்க வேண்டும். ஒரு சான்ஸ் இருக்கலாம் வெற்றி பெற!
இப்பேர்ப்பட்ட சரித்திர தரித்திரங்களை வைத்துக் கொண்டு மாரடிக்க வேண்டிய தலையெழுத்து நமக்கு. பேசமால் தலையில் அடித்துக் கொண்டு தலை ஸ்நானம் செய்து கை கழுவி வேறு வேலை பார்க்கப் போகலாம். ஆனால் என்ன, இந்த பாழாய்ப் போன மனசு தான் கேட்டுத் தொலைக்க மாட்டேன் என்கிறது. மதியம் 2.30 மணி ஆனால் புத்தி தானாய் டீவி முன் தான் போவேன் என்று அழிச்சாட்டியம் செய்கிறது. அந்த மாட்சு முடியும் வரை ஏதோ நேர்த்திக் கடன் போல் எண்சாண் உடம்பும் தொலைக்காட்சியே சரணம் என்று விழுந்து தோப்புக் கரணம் போடுகிறது.
இதற்காகவாவது நம்மவர்கள் கோப்பையை வென்று தொலைத்தால் தேவலை…
[ஒரு மாதம் தொடரும்]








February 22nd, 2011 at 8:47 am
Absolutely Correct
February 22nd, 2011 at 10:11 am
உலக கோப்பை பெற யாகம் வளர்த்தால் போதும் என வீரர்களும் நினைத்துவிட்டனரோ
February 22nd, 2011 at 10:13 am
mostly like the line ” பீல்டிங் செய்ய வருவதற்கு முன் நம்மவர்கள் நாலு நெய் ரோஸ்டை வெண்ணெயை தொட்டுக் கொண்டு வெறும் கையில் சாப்பிட்டு கை அலம்பாமல் வந்ததைப் போல் அப்படி ஒரு தேவல்”
and “ஸ்ரீசாந்த் போடும் அழகுக்கு நான்கு விக்கெட் கீப்பர்கள் வைத்தாலும் அவர்களையும் தாண்டி வைடாய் பவுண்ட்ரிக்கு போகும். “
February 22nd, 2011 at 12:32 pm
பிசிசிஐ அணியை இந்திய அணி என்று அழைப்பதை தயவு செய்து நிறுத்தி கொள்ளவும்.இங்கு மட்டுமல்ல,எல்லா பத்திரிகைகளும்,இதே தவறை,தெரிந்தோ தெரியாமலோ செய்கிறார்கள்
இதனால்,மக்கள் ஏமாற்ற படுகிறார்கள் .
இந்திய நாட்டு கிரிக்கெட் அணி என்று ஒன்றை இனிமேல் தான் தொடங்க வேண்டும். அதற்கு நாமெல்லாம் அரசை வற்புறுத்த வேண்டும்.
பிசிசிஐ என்பது ஒரு தனியார்,மன மகிழ் மன்றம்.அவ்வளவே. மாநில அளவில் உள்ள கிரிக்கெட் மன்றங்களும்,தனியார் க்ளப் தான் . டெல்லி(DDCA) போன்றவை,தனியார் கம்பெனியாக பதிவு செய்ய பட்டுள்ளன. பிசிசிஐ,மற்றும் பல மாநில மன்றங்கள் ஒரு registered Society முறைகளை கூட பின்பற்றுவதில்லை.எனவே,அவற்றை, zonal -registraars இன்னும் ஏன்,கலைக்காமல் வைத்திருக்கிறார்கள் என்றே,தெரியவில்ல.
ICC -யும் பிசிசிஐ-யை எப்படி,இந்திய நாட்டு அணியாக ஏற்று கொண்டது எனவும் புரியவில்லை.நாமும்,எல்டாம்ஸ் ரோடு-11 என ஒரு அணியை ICC -இடம் இந்திய நாட்டு அணியாக பதிவு செய்து கொள்ள முடியுமென நினைக்கிறேன்.
February 22nd, 2011 at 2:26 pm
That why im not interested in that game.
February 22nd, 2011 at 3:44 pm
Absolutely Correct
February 22nd, 2011 at 11:11 pm
திரைப்படங்களில் ஹீரோ/இயக்குனர் ரசிகர்களை முட்டாளாக நினைத்துக்கொண்டு படம் எடுத்தால் எப்படி படம் தோல்வியடைகிறதோ, அதே போலதான் விமர்சனமும்.
இந்த விமர்சனம் அந்த வகையறா. அடுத்த விமர்சனம் எழுதும் முன் முந்தைய மேட்சுகளை பற்றி தெரிந்துக்கொண்டு எழுதினால் கட்டுரையாளருக்கு நல்லது.
February 23rd, 2011 at 11:39 am
சமீப காலங்களில் இது போன்ற ஒரு வாந்தி எடுத்த வைத்தது போன்ற கட்டுரையை படித்ததில்லை.
March 4th, 2011 at 6:14 pm
batting matum onnum perusa kilichudala… south africa vin steyn, west indies in kemar roach over la india aduradha pakuradhuku avala iruken.. maximum india semi final pogum.adhuku apuuram makkal kalavarathula idu paduvanga adhanala indian team players london, usa nu poi rest eduthu tu ipl matchuku correcta ajar ayiduvanga………… auatralia team konjam mokkaya irundhalum all round performancce super.. indha murayum cup avangaluku dhan..
March 5th, 2011 at 9:35 am
Really superb sir.. Sonna ovvoru varthaium unmai sir.. ungaloda next article eppo sir??
May 31st, 2011 at 5:43 pm
what a sick posting?
Please give respect to other person before posting this kind of news!