உறக்கமற்றவன்

அத்தியாயம் 14

இன்று பிரபலமாக இருக்கும் டைரக்டர் ஒருவரின் நண்பர் செந்தமிழன். இவரும் சிந்து நதிப்பூ, பீஷ்மர், பயமில்லை ஜெயமுண்டு என்ற சில படங்களை இயக்கியவர்தான். சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு இந்த பிரபல இயக்குனரும் இவரும் டைரக்டர் பவித்ரனிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்து வந்தார்கள். படப்பிடிப்பு இருந்தால் சாப்பாடு. இல்லையென்றால் படப்பிடிப்பு நடைபெறும் காலங்களில் வருகிற பேட்டாவை சேர்த்து வைத்து அடுத்த ஷூட்டிங் வரை அதில் வாழ்க்கை ஓடும். இந்த சேமிப்பை வைத்துக் கொண்டு மூன்று வேளை சாப்பாடு சிக்கல் என்பதால் மதியம் ஒரு வேளை மட்டும் சாப்பிடுவார்களாம்.

இவர்களை தொடர்ந்து கவனித்து வந்த பக்கத்து ரூம் நண்பருக்கு இவர்கள் மேல் பரிதாபத்தின் மேல் பரிதாபம். தனது சைக்கிளையும் கொடுத்து இரண்டு அன் லிமிட்டடு மீல்சுக்கான பணத்தையும் கொடுத்து அனுப்பி வைத்தார் சாப்பிட. வடபழனியில் இப்போது அமைந்துள்ள ஓட்டல் சரவணபவனுக்கு எதிரில் இருக்கிற குமர பிரசாத் என்ற ஓட்டல் அன்றைய தினங்களில் ரொம்ப ஃபேமஸ். வாசலில் சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே போனார்கள் இருவரும். மூக்கு முட்ட சாப்பிட்டு விட்டு திரும்பி வந்தால் சைக்கிளை காணவில்லை. அந்த காலத்தில் நூதனமான முறையில் திருடுகிற சைக்கிள் திருடர்கள் இருந்தார்கள். பூட்டப்பட்டிருந்தாலும் பின் சக்கத்திற்கு கீழே ஒரு வீல் கட்டையை வைத்து தள்ளிச் சென்று விடுவார்களாம். அந்த நூதன ஆசாமிகள்தான் இவர்களின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொண்டார்கள்.

பக்கத்து ரூம் நண்பர் சொன்ன வார்த்தை இப்போதும் ஞாபகத்திலிருக்கிறது என்கிறார் செந்தமிழன். “நீங்க தரித்திரம் புடிச்சவங்கடா. உங்களுக்கு போய் இரக்கப்பட்டேன் பாரு….”

இன்று பல கோடிகளுக்கு அதிபதியாக இருக்கும் அந்த பிரபல டைரக்டர் யார் என்று சொல்லிவிடுவதில் எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால், இன்று அவர் இருக்கிற உயரம் வேறு. அவர் விருப்பம் இல்லாமல் அவரது பெயரை சொல்வது அவ்வளவு நாகரிகம் இல்லை என்கிறார் செந்தமிழன்.

இன்னொரு பிளாஷ்பேக் இது. பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன், கவுண்டமணி ஆகியோர் வாய்ப்புக்காக அலைந்த காலங்களில் ஒன்றாகத்தான் தங்கியிருந்தார்கள். நாள் முழுக்க பட்டினி என்பதுதான் அவர்களின் சராசரி மெனு. இதில் கவுண்டர் மட்டும் கெட்டி. ஒரு ஹோட்டலில் சரக்கு மாஸ்டராக வேலைக்கு சேர்ந்துவிட்டார். நாடகமோ, சினிமாவோ கிடைத்தால் அன்றைக்கு லீவு போட்டுவிடுவாராம். வேலை பார்க்கும்போது எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம். ஆனால் பார்சல் மட்டும் கூடாது.

ரூமில் பட்டினி கிடக்கும் நண்பர்களுக்காக ஒரு காரியம் செய்வாராம் கவுண்டர். வேலை முடிந்து வீட்டுக்கு கிளம்பும்போது, தோசையை மெல்லிசாக பார்சல் செய்து வயிற்றில் கட்டிக் கொள்வாராம். அதன்மேல் வேட்டியை இறுக்கமாக கட்டிக் கொண்டு தோசை கடத்தல் செய்வாராம். எல்லாம் தன் தோழர்களுக்காக.

நாம் கூறியதுபோல இருபது ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையைத்தான் இன்னமும் அனுபவிக்கிறார்கள் அநேக உதவி இயக்குனர்கள். பெருகி வரும் விலைவாசி. வீட்டு வாடகை. இதையெல்லாம் சமாளித்து இங்கே அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதே இவர்களுக்கு ஒரு படத்தை இயக்கிய சந்தோஷத்தை கொடுக்கிறது என்பதுதான் சகித்துக் கொள்ளவேண்டிய உண்மை. முன்பு வடபழனியை சுற்றி வாடகைக்கு குடியிருந்த உதவி இயக்குனர்கள் இன்று வாடகை பிரச்சனையால் இடம் மாறிவிட்டார்கள். பல கிலோ மீட்டர்கள் தள்ளிப் போய் வாழ வேண்டிய துர்பாக்கியம். எனக்கு தெரிந்த ஒரு உதவி இயக்குனர் காஞ்சிபுரத்திலிருந்து வந்து கொண்டிருக்கிறார். இன்னொருவர் அரக்கோணத்திலிருந்து. எப்படித்தான் தினந்தோறும் அவ்வளவு தூரம் போய் வருகிறார்களோ?

தங்கர்பச்சான் சினிமாவில் வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கும் போதும் சரி, கிடைத்து பணியாற்றிக் கொண்டிருந்த போதும் சரி.  சொந்த ஊரான கடலூரில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தார். சென்னைக்கும் கடலூருக்கும் பஸ் பாஸ் வாங்கி வைத்துக் கொண்டு பேருந்துகளிலேயே பல வருடங்களை கழித்தவர் இவர். இவரை போன்றவர்கள் எல்லாம் இலக்கை மட்டுமே குறி வைக்கிற அர்ஜுனன்கள் என்பதால்தான் இந்த போக்குவரத்து போராட்டம் வெகு சுலபம் ஆனது.

யாரிடமாவது உதவி இயக்குனராக சேர வேண்டும் என்றால் அவர்கள் கேட்கிற முதல் கேள்வி, தம்பி வீடு எங்க இருக்கு? அல்லது ரூம் எங்க இருக்கு? பைக் வச்சுருக்கியா? என்ற கேள்விகள்தான். நள்ளிரவு வரை பணியாற்றிவிட்டு செல்ல வேண்டும். அதிகாலையில் வந்து நிற்க வேண்டும். இரண்டுக்கும் சவுகர்யமான தூரத்தில் இந்த உதவி இயக்குனர் இருக்க வேண்டும். இதுதான் வேலைக்கு சேர்த்துக் கொள்ள நினைப்பவர்களின் எண்ணம். அவசியம் கருதிய இந்த கேள்விகளுக்கு இந்த உதவி இயக்குனர்களால் என்ன பதில் சொல்ல முடியும்?

தமிழ் சினிமாவிலேயே ரொம்ப சபிக்கப்பட்டவர்கள் இவர்கள்தான். நள்ளிரவில் கூட ஷூட்டிங் முடிந்து எல்லாரும் சென்ற பின் கடைசி ஆளாகதான் இவர்கள் கிளம்ப வேண்டும். அதிகாலை ஷூட்டிங்காக இருந்தால் முதல் ஆளாக இவர்கள்தான் நிற்க வேண்டும். இடைப்பட்ட நேரத்தில்தான் உறக்கம், கனவு, இத்யாதி எல்லாம்!

இப்பவும் வெற்றி பெற்ற இயக்குனர்கள் கொடுக்கிற பேட்டியைக் கேட்டால் ஒரு விஷயம் புரியும் நமக்கு. அத்தனை பேரும் சிறு சிறு குழுவாகத்தான் வாழ்ந்திருக்கிறார்கள் இந்த சென்னையில். வாழ்ந்தும் வருகிறார்கள். வாடகையைச் சமாளிக்க, கதை விவாதம் செய்ய, வாய்ப்புகளை பகிர்ந்து கொள்ள என்று இந்த குழு வாழ்க்கை அவர்களுக்கு அரு மருந்தாக இருக்கிறது.

- தொடரும்

3 comments so far

  1. Srinivasan Uppili
    #1

    >>இன்று பல கோடிகளுக்கு அதிபதியாக இருக்கும் அந்த பிரபல டைரக்டர் யார் என்று சொல்லிவிடுவதில் எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால், இன்று அவர் இருக்கிற உயரம் வேறு. அவர் விருப்பம் இல்லாமல் அவரது பெயரை சொல்வது அவ்வளவு நாகரிகம் இல்லை என்கிறார் செந்தமிழன்.

    அந்த பிரபல டைரக்டர் ஷங்கர் என்று நினைக்கிறேன்.

  2. M.G.R.,
    #2

    S Mr.Uppili…..you r very correct!..I guessed same!…

  3. சத்தீஷ்
    #3

    என் எண்ணமமும் அதே

Leave a Reply





XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Facebook comments: