எங்கே என் மனம்?
போதிதர்மா ஆறாம் நூற்றாண்டில் இந்தியாவில் வாழ்ந்த மகான். புத்தரின் முக்கியமான சீடர்களில் ஒருவர்.
இந்த போதிதர்மா புத்தமதத்தைப் பரப்புவதற்காக இந்தியாவிலிருந்து சீனா சென்றார். பல இடங்களில் சுற்றித்திரிந்தார். ஆனால் அவர் யாரையும் தனது சீடராக ஏற்றுக்கொள்ளவில்லை.
கடைசியாக அவர் ஒரு மலைப்பகுதிக்கு வந்துசேர்ந்தார். அங்கே ஒரு குகையில் பல வருடங்கள் தங்கித் தியானம் செய்தார்.
அப்போது ஹுய்கெ என்ற இளம்துறவி அவரைத் தேடி வந்தார். ’என்னை உங்களுடைய சீடனாக ஏற்றுக்கொள்ளவேண்டும்’ என்று வேண்டினார்.
போதிதர்மா அவரை நம்பவில்லை. ’தயவுசெஞ்சு இங்கிருந்து போய்விடு’ என்று ஹுய்கெவை அனுப்பிவிடப் பார்த்தார்.
ஹுய்கெ அசையவில்லை. ’நீங்கதான் எனக்கு உதவணும்’ என்றார்.
’ஏன்? இப்போ உனக்கு என்ன பிரச்னை?’
’என் மனசுல அமைதியே இல்லை’ என்றார் ஹுய்கெ. ’நீங்கதான் எப்படியாவது அதைச் சாந்தப்படுத்தணும்.’
போதிதர்மா கேட்டார். ’முதல்ல உன்னோட மனசு எங்கே இருக்கு? அதை எனக்குக் காட்டு. அப்புறமா அதை அமைதிப்படுத்தறதைப்பத்திப் பார்க்கலாம்.’
ஹுய்கெ யோசித்தார். எவ்வளவுதான் சிந்தித்தபோதும் அவரால் தன் மனத்தைக் கண்டுபிடிக்கமுடியவில்லை.
நெடுநேரத்துக்குப்பிறகு அவர் வாய்திறந்தார். ’என்னால என் மனசைக் கண்டுபிடிக்கமுடியலை’
’நல்லது!’ என்றார் போதிதர்மா. ’அப்படீன்னா நான் ஏற்கெனவே உன் மனசை அமைதிப்படுத்திட்டேன்னு அர்த்தம்.’
அந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் ஹுய்கெவுக்கு ஞானம் பிறந்துவிட்டது. அவர் அதற்குமேலும் போதிதர்மாவை எதிர்பார்த்திருக்காமல் தன் வழியில் நடந்தார்.
போதிதர்மா அவருக்கு மருந்து எதையும் வரவழைத்துத் தரவில்லை. அவருக்குள் இருந்த தெளிந்த மனதை அவருக்கே அடையாளம் காட்டினார். அவ்வளவுதான்!







