‘வந்துவிட்டது, தமிழிலும்!’

அருள்செல்வன்

தொலைக்காட்சி இந்தியாவுக்கே வந்திருக்கவில்லை. வானொலியில் கோவை நிலையம் வாரத்துக்கு அரைமணி நேரம் குழந்தைகள் நிகழ்ச்சியும் அரைமணி நேரம் சினிமாப்  பாட்டும் போடும். தினமும் பஜனைப் பாட்டு தவறாமல் போடுவார்கள். டேப் ரெகார்டர் சந்தைக்கு வரவே இன்னும் ஐந்து வருடம் போகவேண்டும்.

‘கிராமத்தில் குழந்தைகள் அப்போது எப்படித்தான் வளர்ந்தீர்களோ… ’,  அரைமணி நேர பவர்கட்டில் ஐந்துமுறை வந்து ‘அப்பா போர் அடிக்கிறது, என்ன செய்யலாம்’ என்று கேட்கும் மகன் வியக்கிறான்.  என்னதான் செய்தோம் நாம் அந்த இருண்டகாலத்தில்?

‘வீடு மட்டும் இல்லைடா, ஊரே எங்களுக்கு ஆடுகளம்’ என்றால் அவனுக்கு நான் என்ன சொல்லவருகிறேன் என்பதே புரிவதில்லை. தீபாவளி என்றால் நாம் மட்டும் வெடிப்பதில்லை, துப்பாக்கியை இடுப்பில் செருகிக்கொண்டு ரோல் கேப் போட்டுக்கொண்டு கிராமத்து சந்துபொந்துகளிலும், குட்டிச்சுவர்களைத் தாண்டிக்குதித்தும், களர்மேடுகளிலும் பன்றி, கழுதை, எருமை,  நாய் என்று விரட்டி விரட்டி சுட்டுத் தீர்ப்போம்.  பன்னாட்டு மால்களில் ஷாப்பிங், அகில இந்திய இனிப்புப் பொட்டலங்கள், தொலைக்காட்சிப் பெட்டியில் நடிகர் பேட்டி என்பது இன்றைய குழந்தைகளின் தீபாவளி.  கொண்டாட்டம் என்றால் பங்குபெறல் என்பது மாறிப்போய், மற்றவர்கள் கொண்டாடுவதாக பாவனை செய்வதைப் பார்ப்பதே கொண்டாட்டம் என்பது நவீன முறை.

கற்கால கிராமக்குழந்தையாக வளர்ந்ததால் வீட்டுப்பாடங்கள், தினமும் படிப்பு என்றெல்லாம் இல்லாமல் நாள்முழுவதும் வெட்டித்தனமாக ஊர்சுற்ற, விளையாட நேரமோநேரம்.    குழந்தைகளுக்கு எழுதக் கற்றுக்கொடுக்கிறார்கள். குழந்தைகள் எழுத்துக்கள் சரியாக வராமல் முட்டைமுட்டையாகப்  போடுகின்றன, பிறகு கிறுக்கத் தொடங்குகின்றன. இந்தக்கட்டத்தில் அவர்களுக்கு அழுத்தம் கொடுத்து எழுத்துக்களைக் கற்றுக்கொடுத்துவிடுகிறோம். கிறுக்கல்களையே தொடரவிட்டால் என்ன ஆகும்? உண்மையில் குழந்தைகளின் கற்பனைத் திறன் வளரத்தான் செய்யும்.

நான் என்றுமே ஒரு கிறுக்கன்தான். சிறுவயதுகளில் சிலேட்டில் எத்தனை எழுதி இருப்பேனோ அத்தனை கிறுக்கியும் இருப்பேன். மூன்றாம் நான்காம் வகுப்பு படிக்கும்போது நோட்டுப் புத்தகங்கள் ஒன்றோ இரண்டோதான். பென்சில் மட்டும்தான். வெறும் சிலேட்டுதான். வீட்டுப்பாடம் எதுவானாலும் சிலேட்டில்தான் செய்யவேண்டும். ஐந்தாம் வகுப்பில் இருந்துதான் முழுவதும் நோட்டுப் புத்தகம் மற்றும் இங்க் பேனா.

சிலேட்டிலேயே நிறைய படங்கள் போட்டு பக்கத்தில் இருக்கும் நண்பர்களுக்குக் கதை சொல்லிச் சொல்லியே ஆசிரியரிடம் திட்டு வாங்குவேன். எல்லாம் மிருகங்கள் நிறைந்த கதைகள். போலீஸ் திருடன் கதைகள். ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது தேவி பாகவதம் இரண்டு தொகுதிகளில் இருந்த கதைகளைப் படித்துவிட்டேன். அதனால் என்னுடைய கதைகளில் ராட்சதர்கள்  வரத் தொடங்கிவிட்டனர். நண்பர்களை ராட்சசப் படங்களைப் போட்டு பயமுறுத்துவது எனக்கு பிடித்தமான பொழுதுபோக்கு. பெரிய கண்கள், நீண்ட பற்கள் இதெல்லாம் போட்டால் பயங்கரம் என்று வரைதலின் குறியீடுகள் மெல்ல மெல்லப் புலப்பட்டன.

அப்பா எப்போதும் எதையாவது வரைந்துகொண்டே இருப்பதைப்  பார்த்ததாலோ என்னவோ, எழுதுவது, வரைவது இரண்டும் சிறுவனாக இருக்கும்போதே எனக்கு இயல்பாக வந்துவிட்டது. அது தவிர, வீட்டில் அப்பா பைண்ட் செய்து வைத்திருந்த பழைய ‘ஸ்போர்ட்ஸ் அண்ட்  பாஸ்டைம்’ இதழ்களில் மிக்கி மவுஸ், டோனால்ட் டக் கார்ட்டூன்கள் ஒரு புது உலகத்தையே காட்டின. அதில்லாமல் ஆனந்தவிகடன் சிறுவர் வண்ண மலர் தொகுப்பு ஒன்று கிடைத்தது. அதிலிருந்த வண்ணப் படங்களைப் பார்த்து  கண்டபடி எல்லாவற்றையும் வரைந்து தள்ள ஆரம்பித்தேன். அதன்பிறகு அடித்தது காமிக்ஸ் அலை. இந்திரஜால்,முத்து காமிக்ஸ்.  இவை குழந்தைகளை முழுதுமாக ஆக்கிரமித்துக்கொண்டன.

நமக்கு எதிராக எப்போதும் சதி செய்துகொண்டிருக்கும் தம்பிகளையும் நண்பர்களையும் கைக்குள் கொண்டுவர ஒரு கையெழுத்துப் பத்திரிக்கை போடலாம் என்று ஆரம்பித்தேன். பழைய நோட்டுப்பேப்பர், கோடு போட்டது, போடாதது, நண்பர்கள் கொடுத்த பல ஆண்டு வரலாறு கொண்ட பழுப்பில் ஆயிரம் வண்ணம் கொண்ட பலாளவு காகிதங்கள் எல்லாம் சேர்ந்து சிலபல இதழ்கள் வந்தது ‘பூம்புனல்’.

அதில் ‘பறக்கும் தட்டு மர்மம்’ எனும் முழுநீளச் சித்திரக்கதை எல்லோரையும் கவிழ்த்துவிட்டது. என்னுடைய கடைசித் தம்பி பார்த்தான். தானும் ஒரு பத்திரிகை நடத்துவேன் என்று சொல்லி ஒரு தாளில் ‘வந்துவிட்டது தமிழிலும்’ என்று போட்டு ஒரு பத்திரிக்கை ஆரம்பித்துவிட்டான். ‘என்னடா, பெங்காலி, தெலுங்கு, ஆங்கிலம் என்று பலமொழிகளில் வந்து சக்கைப்போடு போட்ட பத்திரிகையா இது, இப்போ தமிழிலும் வருது…’  என்று பல வருடங்கள் கிண்டல் அடித்தோம். ‘வந்துவிட்டது தமிழிலும்’ – இது அந்தக் கால கிராமச் சிறார்களின் தன்னம்பிக்கையின் எல்லை என்று இப்போது எனக்கு உறைக்கிறது.

கோவையில் பிஎஸ்ஜி டெக்கில் படிக்கும்போது வெள்ளிவிழா கொண்டாட்டங்கள் நடந்தன.  பதினைந்து இருபது அறிவியல் நகைச்சுவை கார்ட்டூன்களை பெரிய ஏ1 தாளில் வரைந்து காட்சியாகவே அமைத்தோம். இது நல்லதா கெட்டதா என்று சந்தேகத்துடன் காட்சிக்கு வந்த ‘பெரியவர்கள்’ குழம்பியது தெரிந்தது. அவற்றை வைத்து நண்பர்கள் நன்றாக ரகளை செய்தார்கள்.

சிறிது சிறிதாக கார்ட்டூன் வெறியேற, கோவை டவுன்ஹால் பக்கத்தில் ஒரு பழைய புத்தகக் கடையில் ‘Mad’ இதழ்களைப் பொறுக்கினேன். அதற்குப்பிறகு ஒரு (உலக) சினிமாவைக்கூட  ‘இதை எப்படி  ‘மேட்’-ல் திரிப்பார்கள்’ என்று யோசிக்காமல் பார்க்கமுடிவதில்லை. கார்ட்டூன் போட்டால் கூடவே வளர்ந்துவிடும் இந்த காக்காய்ப் பார்வை படு சிக்கலானது. எந்தக் கணத்திலும் வந்து தாக்கும் வாழ்வின் மேம்பட்ட உண்மைத் தரிசனங்களிடமிருந்து நம்மைக் காக்கும் அரண் போன்றது.

மூன்றாம் வருடம் படிக்கும்போது கல்லூரி அறிவியல் சங்கத்துக்கு நான்தான் தலைவன். கார்ட்டூன் போடுவது எப்படி என்று அறிவியல் சங்கத்தில் வகுப்புகள் எடுத்து, ‘பால்பாயிண்ட் பேனா பயன்படுத்தாதே’, ‘கோபமாக இருக்கும் குடும்ப உறுப்பினர்கள்தான் நல்ல மாடல்கள்’ போன்ற அறிவுரைகள் உள்ளடங்கிய ‘டெக்னிக்ஸ்’ புத்தகம் ஒன்றை உருவாக்கி  சிறு புத்தகமாக மாணவர்களுக்குக் கொடுத்தேன்.  எல்லா இடத்திலும் வேண்டாத வேலையை செய்து, பேரும் வாங்குவது எப்படி என்று முறையாகக் கற்றுக்கொண்டேன்.

மின்னணுவியல் பாடங்கள் நிறைந்த இயல்பியல் பேப்பர் 5-ல் எனது பல்கலைத்தேர்வு மதிப்பெண் முழுசாக 100 என்றால் இப்போது நண்பர்கள் நம்பாமல் கேவலமாகப் பார்கிறார்கள். விடைகளுக்கு நடுவில் விளக்கப் படங்களாகப் போடுபவற்றில் சில கார்ட்டூன் அம்சங்களான லைட்டிங், ஷேடிங் போன்றவற்றைப் பயன்படுத்தி பேப்பர் திருத்தும் ஆசிரியரிடமிருந்து அவரே அறியாமல் ‘உருவிய’ மதிப்பெண்கள் இவை என்பது எனக்குத்தான் தெரியும். இப்படி கார்ட்டூன் போடும் பொழுதுபோக்கு என்பது மாணவனாக ‘தொழில்’ முறையில் சாதகமாக இருந்தது.

‘என்னடா எப்பவும் படம் போடுகிறாய், பாட்டுப் பாடுகிறாய், உடம்பை உடம்பை அசைத்து ஆடிக்கொண்டே இருக்கிறாய், இதனால் பைசா புண்ணியம் உண்டா?’ என்று படிக்கும் பசங்களுக்கு அப்பா அம்மா புத்தி சொல்லுமுன் இனியாவது தயக்கத்துடன் யோசியுங்கள். ஒரு இளைஞனின் எந்தத் திறமை அவனுக்கு மதிப்பெண் பெற்றுத்தரும் என்பது யாருக்கும் தெரியாது. ஆசிரியர்களுக்கும் அப்பா அம்மாவுக்கும் நிச்சயம் தெரியாது.

பிறகு படிக்க ஒரு ஆகஸ்ட்டில் பெங்களூர் வந்தபிறகு குளிர் பழக ஒரு மாதம் ஆனது. ராகிங் எல்லாம் முடிந்தபிறகு குளிர் விட்டுப்போயிற்று. அப்போதுதான் இந்தியா செயற்கைக் கோள்களை ஏவுவதற்காக  எஸ்.எல்.வி என்ற ராக்கெட்டைப் பறக்கவிட்டுச் சோதனை செய்தது. வங்காள விரிகுடாவில் விழுந்த அந்த ராக்கெட்டினால் மாணவர்களுக்கெல்லாம் பெரும் ஏமாற்றம்தான்.

எங்கள்  மாணவர்கள் நடத்தும் பத்திரிகையாக ‘drag’ என்ற இதழ் மாதாமாதம் வரும். அதன் அட்டையில் ஒரு கார்ட்டூன் போடலாம் என்று கை பரபரத்தது. எங்கள் இன்ஸ்டிட்யூட்டின் குறியீடாக நிற்கும் அந்த நடு மைய வளாகக் கட்டடத்தின் கடிகார கோபுரம் ஒரு ராக்கெட் போலத்தான் இருக்கும். அதுமட்டும் அப்படியே பெயர்ந்து பிய்த்துக்கொண்டு வ.விரிகுடாவுக்கு போவதாக ஒரு கார்ட்டூன் போட்டுத் தர, அதை அச்சும் செய்து வெளியிட்டும் விட்டர்கள். நிறைய பேராசிரியர்களிடமிருந்து ஆமோதிப்பும் சிலரிடமிருந்து ‘என்ன இருந்தாலும் இப்படி ஒரு கொடுமையான எண்ணம் ஒரு முதல் வருட மாணவனுக்கு ஆகாது’ என்ற முணுமுணுப்பும் வந்ததாகச் சொன்னார்கள். ஆனால் அந்த கார்ட்டூன் போட்டதால் பொதுவாக பொறியியல் மாணவர்கள்தவிர அறிவியல் ஆராய்ச்சி மாணவர்களும், ‘ஓ அவனா!’ என்று  என்னை அறிந்திருந்தார்கள்.

ஒரு சீனியர் ஆராய்ச்சி மாணவி ஒருநாள் மெஸ்ஸில் என்னைப் பார்த்து ‘நீதானே அருள்? ஒரு உதவி செய்வாயா?’ என்று கேட்டார். அவர்கள் டிபார்ட்மென்டில் (மெஷர் ஜீரோ டிபார்ட்மென்ட்ஸ் என ஒரு கணிதக் கோட்பாட்டை வைத்து  எங்கள் குழு கிண்டல் செய்யும்  உயிரியல் துறையைச் சார்ந்தவர்) ஒரு சிறு பிரசுரம் கொண்டுவருகிறார்களாம். அதற்கு சில அறிவியல் கார்ட்டூன்கள் தரமுடியுமா என்று கேட்டார். தான் ஐடியா கொடுப்பதாகவும் தனக்கு வரையத் தெரியாது என்றும் கூறினார். எனக்கு இது படு கிண்டலாகப்  பட்டது. எனக்கு மற்றவர் ஐடியாவுக்குப் படம் வரையத்தெரியாது என்று சொல்லிவிட்டு  நானே இரவெல்லாம் உட்கார்ந்து நாலைந்து  கார்ட்டூன்கள் போட்டுக்கொடுத்தேன். இரண்டு வாரங்கள் கழித்து அந்தத் துறையிலிருந்த சில சீனியர் மாணவிகள் என்னைப்பார்த்து ஒரு மாதிரி சிரித்தார்கள். என்ன விஷயம் எனறு கேட்டால், நான் கொடுத்த கார்ட்டூன்களை மாணவி தன் பெயரில் போட்டு வெளியிட்டுவிட்டார் என்று தெரிந்தது. நான் பொதுவாக கையெழுத்தே போடாமல்தான் வரைவேன்.  அதனால் என்ன பரவாயில்லை என்று வழிந்துகொண்டே சொல்லிவிட்டேன். அதனால் பின்னால் சிலபல சாதகங்கள் இருந்தன என்பது வேறு கதை.

சரி, நமக்குத்தான் அறிவியல் கார்ட்டூன் போட ஆண்டவன் அருள் கொடுத்திருக்கிறானே என்று ஏதோ ஒரு வேகத்தில் அப்போது டைம்ஸ் ஆப் இந்தியா நடத்திவந்த சயன்ஸ் டுடே என்ற பத்திரிகைக்கு சில கார்ட்டூன்களை அனுப்பினேன். அப்போது முகுல் ஷர்மா அதன் எடிட்டராக இருந்தார். அடுத்த மாத இதழிலிலேயே அவை பிரசுரமாயின. ஸ்வாஹிலி மொழியில் மொகல்வானே எனும் சொல்லைச் சேர்த்து சும்மா விளையாட்டாக அருள் மொகொல்வானே என்ற பெயரில் அனுப்ப அவை வெளிவந்தன. ஒரு கார்ட்டூனுக்கு நூறு ரூபாய் என்று பணம் வேறு!

அப்போதுதான் நாகார்ஜுனன் அறிமுகமானார். சென்னையில் இருந்து பின் பெங்களூருக்கு வந்து  டெக்கான் ஹெரால்டு நாளிதழில் பணி செய்துகொண்டிருந்தார். அவர் மூலம் ‘படிகள்’ குழுவினரான தமிழவன், காவ்யா சண்முகசுந்தரம், கிருஷ்ணசுவாமி போன்றோரும் அறிமுகமாயினர். படிகள் இதழ் வெளியிடுவதைப் பற்றிய கூட்டங்கள் நடக்கும்போது ஏழெட்டு பேர் தொடர்ந்து கூடி விவாதிப்பது நடக்கும். தமிழவனின் ஸ்டரக்சுரலிசம் புத்தகத்தை முன்பே படித்திருந்தேன். சமகால மேலைக் கலை இலக்கியக் கோட்பாடுகளை படிகள்தான் முதன்முதலில் தமிழில் தொடர்ச்சியாக வெளிக்கொண்டுவந்தது. குழுவில் அனைவரும் உயர்கல்வி கற்றவர்களாக இருந்ததால் ஒரு அகடமிக் ஸ்லாண்ட் படிகளில் இருந்தது.  ‘இலக்கியவாதிகள்’ கூட்டம்போல அது இல்லை.

மட்டுமல்லாமல் மக்கள் கலை சார்ந்த கோட்பாட்டு விவாதங்களும் நிறைய  நடந்தன. அதற்குமுன் சிறு பத்திரிகை வட்டத்தில் யாரும் கண்டுகொள்ளாமல் இருந்த சுஜாதாவை நீண்ட பேட்டியின் மூலம் அவரது ஆர்வங்களையும் பரிமாணத்தையும் முதல்முறையாக படிகள் வெளிக்கொணர்ந்தது. சுஜாதாவே தனது சிறந்த பேட்டி அதுதான் என்று  பின்னால் சொன்னார்.

கூடவே எங்கள் இன்ஸ்டிட்யூட்டின் அறிவியல் விவாதக் குழுக்களில் பங்குபெற்றுக் கொண்டிருந்ததால் கோட்பாட்டு வகையில் அறிவியல்-கலை இவற்றின் இணைத்தன்மை என்ன என்பது ஒரு முக்கியமான கேள்வியாகப் பட்டது. ஒரு படம் வரைவதற்கும் ஒரு அறிவியல் கோட்பாட்டை வடிப்பதற்கும் அவை மனிதனின் சிந்தனையில் நடைபெறும் நிகழ்வுகள் என்ற அளவில் என்ன இணை அல்லது வெட்டுச் செயல்படிகள் உள்ளன? இதன் பதில் இச்செயல்களுக்குள் வேறுபாடு உள்ளதா என்பதை உட்கொண்டுள்ளது. இதை மெய்யியல் சட்டகத்தில் வைத்துப் பார்த்தால், ஒரு ப்ரிமெச்சூர்  முயற்சியாக  ஆகக்கூடிய எல்லாச்  சாத்தியங்களும் உள்ளன. வடிவியல் எனும் ஃபார்மலிஸம் கலைகளை அணுக முதல்படி.

அதாவது வகைப்படுத்துதல் (classification) என்பது ஒரு புது அறிவியல் துறையின் தர்க்கரீதியான முதல் படி என்பதுபோல கலைகளை கறாராக அணுக வடிவஇயல் கோட்பாடுகள் ஒரு தொடக்கப் படியாக உள்ளன. மேலைக் கோட்பாடுகளின் துறைகடந்த கோட்பாட்டுத் தளங்கள் இப்புள்ளியிலிருந்தே தொடங்குகின்றன. இதுவே அறிவியல்-கலை இருமையை நோக்கிய ஒரு ஒருமைப்பட்ட பார்வையின் தொடக்கமாக இருக்கவேண்டும். இதற்கே இன்னும் நிறைய வேலை செய்யவேண்டும்.

இந்தவகையில் ஓவியர்கள் தங்கள் துறை பற்றிய வடிவஇயல் கருத்துகளை கவனத்தோடு எதை மீறுகிறோம், எதை உடைக்கிறோம் என்ற பிரக்ஞையுடன், பிரகடனங்களுடன் செயல்பட்டார்கள். எனவே ஓவிய/சிற்ப நவ படைப்புகளை கோட்பாட்டுரீதியாக அணுகுவது, பிற கலைகளைவிட சற்றே எளிது. அறிவியலையும் இந்தச் சட்டகத்தூடே பார்க்கலாம். அதைப்பற்றி விரிவாக எழுத சில முயற்சிகள் தேவை.

இதன் முன்னெடுப்பாக 1983/1984-ல் பெங்களூரில் நடந்த ஒரு அகில இந்திய ஓவியக்  கண்காட்சியின் விமரிசனமாக ஒரு கட்டுரையை படிகளில் எழுதினேன். இதன் பிரதி இப்போது என்னிடம் இல்லை. பிகாஷ் பட்டாச்சார்ய முதற்கொண்டு தோட்டா தரணி வரை  அப்போதைய சமகால ஓவியர்கள் பங்கு பெற்ற காட்சி அது. (தோட்டா தரணியின் இரு ஓவியங்களை அவற்றின் சோம்பேறித்தனத்துக்காக விமரிசனம் செய்தது நினைவிருக்கிறது.) அக்கட்டுரையில் இந்தக் கோட்பாட்டுத்  தொடக்கப்புள்ளிகளை கவனமாக்க முயற்சித்தேன். ஆனால் அதைத் தொடரவில்லை.  இன்று முப்பதாண்டுகள் கழித்து, மாறியுள்ள சூழலில், அறிவுத்துறைகளின் வளர்ச்சியில்  பல முனைப்புகளைச் செய்ய சாத்தியம் இருக்கிறது.  அப்போதுதான் தமிழவன் தன்னுடைய முதல்  நாவலான ‘ஏற்கெனவே சொல்லப்பட்ட மனிதர்கள்’-ஐ எழுதிமுடித்திருந்தார்.

நான் ஒரு கிறுக்குப் பையன் என்று தெரிந்து, இந்த நாவலுக்கு இல்லஸ்டிரேட்  செய் என்று கத்தை பேப்பர்களைக் கொடுத்தார். தமிழின் அன்றைய கட்டத்துக்கு புதுமுயற்சியாகவே அந்த நாவல் இருந்தது. எனக்குப் பிடித்ததாகவும் இருந்தது.  எனக்கு வடிவியல் சார்ந்த ஒரு வாசிப்பும் அந்த நாவலைப்பற்றித் தோன்றியது. அதைப் படங்களாக வரைந்தேன். கூர்ந்து பார்த்தால் தொடக்கத்திலிருந்து முடிவுவரை மெல்லமெல்லச் சிதைவுறும் நாவலின் வடிவத்தை பிரதிபலிக்க சித்திரங்களிலும் நீண்ட அழுத்தக் கோடுகளிலிருந்து உடைந்து சிதறும் சிறுசிறு கோடுகளால் ஆனதுவரை படிப்படியாகக் கோடுகளையும் உருவத்தையும் சிதைத்தே அந்தப் படங்களை வரைந்தேன். யாருக்கும் இதை இதுவரை சொன்னதில்லை.

திராவிட வெற்றுக் கோஷங்களைக் குறிக்க ஒன்றுமில்லாத வெறும் பேச்சு பலூன் முதற்கொண்டு காமிக்ஸ்களின் மொழியும் அந்தச் சித்திரங்களில் உண்டு. அப்போது படித்துக்கொண்டிருந்த ஃபங்ஷனல் அனாலிஸிஸ் கணிதப் புத்தகம் கிழிந்து போய்விட்டது. அதன் துண்டும் ஒரு கொலாஜாக ஒரு சித்திரத்தில் உண்டு.  பெரிய போஸ்டர்களாக நான் வரைந்த சித்திரங்களை நண்பர்கள் ஆட்டையைப் போட்டுவிடுவார்கள். அப்படி ஒன்றை ஒரு நண்பன் எடுத்துக்கொண்டுபோய் அறையில் ஒட்டிவைத்திருந்தான். பார்த்தவர்கள் பதற்றமுற்று, ‘ஈஸ் திஸ் கை ஸ்டில் ஸேன்?’ (படம் வரைந்த ஆசாமி இன்னும் புத்தி சுவாதீனத்துடன் இருக்கிறானா?) என்று கேட்க அவர்களுக்கு, ‘இல்லை, இவன் ஆராய்சி செய்யப்போய்விட்டான்’ என்று கூறியதாக என்னைப் பார்த்தபோது சிரித்தபடி சொன்னான். அதன்பிறகு ஆராய்ச்சியில் புகுந்து, நேரம் அந்தப் பைத்தியக்காரத்தனத்திலேயே போய்விட்டது.

இப்போதெல்லாம் இப்படி பொழுதுபோக்காக வெறும் கம்ப்யூட்டர் மவுஸும் விண்டோஸின் பெயின்ட் செயலியும் கொண்டே போட்ட பல கார்ட்டூன்களை என் வலைப்பூவில் பார்க்கலாம். 600-800 dpi பகுத்திறன் வாய்ந்த சாதாரண மவுஸ்களில் நடுங்காமல் கோடுகள் போடுவது கடினம். முயற்சித்துப் பாருங்கள்.

பள்ளி இறுத் தேர்வு எழுதி முடித்தபின் அப்பா கேட்டார், ‘என்னடா படிக்கப்போறே? முதல் குரூப் எடுத்து அறிவியலா, இல்லை சென்னை காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸில் ஓவியமா?’

அப்பா முறைப்படி ஓவியம் கற்றவர். அற்புதமான வாட்டர்கலர் ஓவியர். எண்ணைய் வண்ணம் தீட்டலிலும் தேர்ந்தவராக இருந்தாலும், அவருடைய வாட்டர்கலர் மேதமை உலகத்தரமானது. ஆனால் அவர் தொழில்முறை ஓவியர் ஆகவில்லை.. காரணங்கள் பல. அவை வேண்டாம்.

நான் அப்போது ஓரளவு ஓவியம் வரைவேன். அதே அளவு அறிவியலும் கற்பேன்.  எனக்கும் ஓவியத்தில் ஆசைதான். ஆனால் அதே அளவு ஆசை அறிவியலிலும் இருந்தது. அறிவியல் முறையாகத்தான் படிக்கவேண்டும், ஓவியம் எப்படியும் கூடவே வரும் என்று அறிவியலைத் தேர்ந்தெடுத்தேன்.

அந்தச் சிறுவனின் முடிவு சரியானதா? அவன் உருப்பட்டானா? இல்லை பின்னாளில் ஏமாற்றங்களைத் தந்ததா?

இந்தத் திடுக்கிடும் வாழ்க்கை வரலாறு என்னுடையது. அதனால் உங்களுக்கில்லை. வேண்டுமானால் டுவிட்டரில் DM செய்தால் 140 எழுத்துகளுக்கு மிகாமல் கதையின் நிகழ்வைத்  தெரிவிக்கிறேன்.

5 comments so far

  1. பாலா
    #1

    நல்ல சுவாரஸ்யமாக இருந்தது.

  2. பாலராஜன்கீதா
    #2

    //மெஷர் ஜீரோ//
    :-)

  3. narain
    #3

    அருள், ஒரு வழியாய் மெயின்ஸ்ட்ரிமில் வந்துவிட்டீர்கள் :) என்னை மாதிரியான ஆட்களே எழுதும்போது, உங்களை மாதிரியான ஆட்கள் எழுதாமல் இருப்பது தமிழுக்கு செய்யும் மஹா துரோஹம் ;) ஸ்ட்ரக்ட்ரலிசம் பற்றி இப்போது தான் விவா வெளீயிடாக வந்த ஒரு புத்தகத்தின் அட்டையினை மற்றும் பார்த்துவிட்டு, வைத்து விட்டேன். அடுத்தமுறை சென்னையில் இது பற்றி விரிவாக பேசலாம்.

  4. ganesh
    #4

    நைஸ் ஆர்டிகிள்.

    மன்னிக்கவும். கூகிலிள் போய் யார் என்று தேடினேன். முதல் தகவல் ஸீனியர் லெக்சரர் என்று வருகிறது. எங்களைப் போன்றவர்களுக்கு யாரிவர் ஒரு brief intro கொடுத்திருந்த்தால் நன்றாக இருந்திருக்கும்.

  5. balaji
    #5

    tamil vallka…..

Leave a Reply





XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

One Trackback/Ping

Facebook comments: