பயணம் ஆரம்பம்

மோட்டார் சைக்கிள் டைரி / அத்தியாயம் 4

அடுத்த பயணம் குறித்து யோசிப்பதற்கு முன்பு காதல் குறுக்கிட்டுவிட்டது. சிச்சினா (முழுப்பெயர், Maria del Carmen ‘Chichina’ Ferreyra) எர்னஸ்டோவுக்கு முன்னரே அறிமுகமானவர் என்றாலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு திருமண விழாவில் பதினாறு வயது சிச்சினாவைக் கண்டபோது, எர்னஸ்டோவுக்கு விவரிக்கமுடியாத பூரிப்பும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. உண்மையில் அது இரு தரப்பு ஈர்ப்பாகவே இருந்தது. சிச்சினாவின் வளமான செல்வப் பின்னணி, சமூக மதிப்பு, எட்டமுடியாத உயரத்தில் இருக்கும் அவளுடைய குடும்ப நிலை அனைத்தையும் மீறி இருவருக்கும் இடையில் காதல் துளிர்த்தது.

பிப்ரவரி 9, 1951 அன்று இரண்டாவது பயண வாய்ப்பு எர்னஸ்டோவைத் தேடிவந்தது. கப்பலில் செவிலியராகப் பணியாற்றுவதற்காக அரசுப் பொது சுகாதார நிலையம் அவரைத் தேர்ந்தெடுத்திருந்தது. பிரேசிலை நோக்கிச் செல்லும் Anna G என்னும் டாங்கர் கப்பலில் எர்னஸ்டோ இணைந்துகொண்டார். பேடகோனியா, டிரினிடாட் அன்ட் டொபாக்கோ, பிரிட்டிஷ் கினியா, வெனிசுலா மற்றும் பிரேசிலிய துறைமுகங்களுக்கு இந்தக் கப்பல் அவரை இட்டுச் சென்றது.

எதிர்பார்த்ததைவிடவும் விரிவான, நீண்ட பயணம்தான். ஆனாலும் எர்னஸ்டோவுக்கு முழுத் திருப்தியில்லை. பல புதிய பகுதிகளில் கால் பதிக்க முடிந்தது மறக்கமுடியாத அனுபவம் என்றாலும் கால் பதிப்பதைத் தாண்டி வேறு எதுவும் செய்யமுடியவில்லை.
துறைமுகங்களில் கப்பல் ஒதுங்கும்போது, இறங்கிவந்து ஒரு சுற்று சுற்றி வருவதற்குள் அழைப்பு வந்துவிடும்.

மொத்தத்தில் நிலப்பரப்புகளில் சிறிதளவு நேரத்தையே செலவிடமுடிந்தது. ஜூன் மத்தியில் பியூனஸ் ஏர்ஸ் திரும்பிய எர்னஸ்டோ தனது கப்பல் கனவை அத்தோடு துறந்தார். திரும்பும்போது தன் தந்தைக்கு ஒரு வித்தியாசமான பரிசையும் கொண்டு வந்திருந்தார். ஒரு குறிப்பேடு. பயண அனுபவங்கள், பொன்மொழிகள், சிந்தனைகள் ஆகியவற்றால் அது நிரம்பியிருந்தது. சிறுகதை எழுதுவதற்கும்கூட முயற்சி செய்திருந்தார்.

ஜூன் இறுதியில் மீண்டும் மருத்துவப் பள்ளியில் இணைந்துகொண்டுவிட்டார். இப்போது எர்னஸ்டோவுக்கு 23 வயது நடந்துகொண்டிருந்தது. கல்லூரி போரடிக்க ஆரம்பித்துவிட்டது. முந்தைய சைக்கிள் பயணமும், அதிகம் காணமுடியாத கப்பல் பயணங்களும் அவரை இம்சித்துக்கொண்டிருந்தன. சிச்சினாவுடன் இணையமுடியுமா என்னும் கேள்விக்கும் விடை கிடைக்கவில்லை. சிச்சினாவின் வீட்டில் இருந்து சம்மதம் பெறுவது சாத்தியமில்லை என்பது இருவருக்கும் தெரிந்திருந்தது.

அக்டோபர் 17ம் தேதி கோர்டோபாவுக்குச் சென்று கிரானோடோவைச் சந்தித்தார் எர்னஸ்டோ. திராட்சைக் கொடிகளுக்குக் கீழே, இனிப்பான மேட் பானத்தை (ஒருவித தேயிலையில் இருந்து தயாரிக்கப்படும் அர்ஜென்டினாவின் தேசிய பானம்) பருகியபடி, ‘ துயரமான வாழ்வின் சமீபகால நிகழ்வுகளைப் பற்றி அவர்கள் உரையாடிக்கொண்டிருந்தனர்.’ நார்ட்டன் 500 ரக மோட்டார் சைக்கிள், லா பாடெரோஸாவை (La Poderosa II, சக்திவாய்ந்தது என்று பொருள்) பழுது பார்த்துக்கொண்டிருந்தனர்.

சென்ற முறை சந்தித்ததைவிடவும் அதிக சலிப்பு கொண்டவராக கிரானாடோ காட்சியளித்தார். தொழுநோய் மருத்துவமனையில் அவருக்குத் தரப்படும் ஊதியம் குறைவாக இருந்ததைச் சொல்லி வருத்தப்பட்டுக்கொண்டார். எர்னஸ்டோவும் தன் உள்ளத்தில் சுமந்துகொண்டிருந்த ஏக்கங்களை வெளிப்படுத்தினார். மருத்துவக் கல்லூரியும் பாடங்களும் அவரைச் சோர்வடைய வைத்திருந்தன. இவற்றிலிருந்து விடுதலை பெறவேண்டுமென்றால் செய்யவேண்டியது ஒன்றுதான். வெளியேறவேண்டும். ‘வெப்ப மண்டலக் கடல்களில் பயணம் செய்வது, ஆசியா முழுவதும் சுற்றித் திரிவது. தொலைதூரப் பிரதேசங்களுக்கு எங்களைக் கொண்டு சென்றன கனவுகள்.’

திடீரென்று அந்தக் கேள்வி எழுந்தது.

‘வட அமெரிக்காவுக்கு நாம் ஏன் போகக்கூடாது?’

‘எப்படி?’

‘லா பாடெரோஸாவில்தான்.’

தொடங்கி வைத்தவர் கிரானோடோ. எர்னஸ்டோவைக் காட்டிலும் அவருக்கே இந்தப் பயணம் அதிகம் தேவைப்பட்டது. முப்பதுகளின் தொடக்கத்தில் இருந்த கிரானாடோ, இந்த வாய்ப்பை நழுவவிட விரும்பவில்லை. எர்னஸ்டோ போன்ற ஒரு பயணத் தோழன் கிடைத்துவிட்டபிறகு யோசிப்பதற்கு என்ன இருக்கிறது? இந்த வாய்ப்பை நழுவவிட்டால் இன்னொன்று கிடைக்காமலேகூட போய்விடலாம்.

எர்னஸ்டோ உடனே ஒப்புக்கொண்டார். என்ன பிரச்னை வந்தாலும் அதை எதிர்கொண்டு வென்றுவிடுவது என்று பேசிக்கொண்டார்கள்.

உடனடியாக கனவு செயல்வடிவம் பெறத் தொடங்கியது. கடவுச் சீட்டுகள், சான்றிதழ்கள், ஆவணங்கள் ஆகியவற்றைப் பெறும் முயற்சிகளை இருவரும் தொடங்கினார்கள்.

எர்னஸ்டோ தன் விருப்பத்தைத் தந்தையிடம் தெரிவித்தார். பிறகு நடந்ததை எர்னஸ்டோ சீனியர் நினைவுகூர்ந்தார்.

‘1951ல் நடந்தது அது. அப்போது கோர்டோபாவைச் சேர்ந்த ஒரு அழகான இளம் பெண்ணிடம் எர்னஸ்டோ நட்புகொண்டிருந்தான். அவன் அப்பெண்ணைத் திருமணம் செய்துகொள்வான் என்றுதான் நானும் எனது குடும்பத்தினரும் நினைத்திருந்தோம்.

’நான் வெனிசூலாவுக்குச் செல்லப்போகிறேன் அப்பா!’ என்று எர்னஸ்டோ ஒருநாள் என்னிடம் கூறினான்.

‘எவ்வளவு நாள்களுக்கு நீ அங்கே இருக்கப் போகிறாய்?’ என்று நான் கேட்டேன். ஒரு வருடத்துக்கு என்று அவன் பதிலளித்தான். நான் அடைந்த வியப்புக்கு அளவே இல்லை.

‘அப்படியானால் சிச்சினா?’ என்று நான் கேட்டேன்.

‘அவள் என்னைக் காதலிக்கிறாள் என்றால் காத்திருப்பாள்’ என்று பதில் வந்தது.

அவன் அப்பெண்ணை மிகவும் நேசித்ததை நான் அறிந்திருத்தால், புதியனவற்றைக் கண்டறிய வேண்டும் என்ற அவனது வேட்கைக்கு அது தடையாக இருக்கும் என்று நினைத்தேன். எர்னஸ்டோவை என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை.’

முடிந்தவரை அனைத்துப் பாடங்களிலும் தேர்வுகளை எடுத்து முடிக்கவேண்டும். இது எர்னஸ்டோவின் பணி. ஆல்பர்டோவின் வேலை, மோட்டார் சைக்கிளைத் தயார் செய்து வைப்பது. பிறகு, வழித்தடத்தைத் தெரிந்துகொள்வது.

வீட்டில் அனுமதி வாங்கியாகிவிட்டது. பயண ஏற்பாடுகள் முடிந்துவிட்டன. புறப்படவேண்டியதுதான் பாக்கி. எர்னஸ்டோ கனவு காண ஆரம்பித்துவிட்டார். ‘நாங்கள் மேற்கொள்ள இருந்த பயணத்தின் முழுப் பரிமாணமும் எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. கண்களுக்குத் தெரிந்ததெல்லாம் விரிந்து கிடக்கும் புழுதி நிறைந்த சாலையும், வடக்கு நோக்கிய பயணத்தில் விரைந்து கொண்டிருந்த எங்களுடைய மோட்டார் சைக்கிளும்தான்.’

ஜனவரி 4, 1952 அன்று அட்லாண்டிக் கரையையொட்டி அவர்கள் பயணம் ஆரம்பமானது. போகும் வழியில் ஒரே ஒரு வேலை பாக்கியிருக்கிறது. சிச்சினாவிடம் இருந்து விடைபெறவேண்டும். மிராமரில் உள்ள ஒரு உல்லாச வீட்டில் சிச்சினா தன் அத்தையுடன் தங்கியிருந்தார் என்று தகவல் வந்ததும், அங்கு அவரைச் சந்திக்க முடிவு செய்தார் எர்னஸ்டோ. கிரானோடாவும் ஒப்புக்கொண்டார்.

எர்னஸ்டோவின் மாமா, காய்கறிகளும் பதப்படுத்தப்பட்ட இறைச்சியையும் கொடுத்தனுப்பியிருந்தார். வண்டியின் பின்பக்கத்தில் பாரம் அதிகமிருந்தது. சிறிது கவனம் குறைந்தாலும் சமநிலை குலைந்துவிடும் அபாயம் இருந்தது. என்றாலும் அவர்கள் எதையும் பொருட்படுத்தாமல் பறந்துகொண்டிருந்தனர்.

எர்னஸ்டோ சிச்சினாவுக்காக ஒரு பரிசுப் பொருளைக் கையோடு எடுத்து வந்திருந்தார். அது ஒரு நாய்க்குட்டி. அதற்கு ஆங்கிலத்தில் ‘கம் பேக்’ என்று பெயரிட்டிருந்தார் எர்னஸ்டோ. பயணம் முடிந்ததும் மீண்டும் சிச்சினாவின் கரங்களுக்குத் திரும்பிவிடவேண்டும் என்பதால் அந்தப் பெயர். வழியில் இரண்டு முறை ‘திரும்புதல்’ கீழே விழுந்தது. ஒரு குதிரையின் காலில் சிக்கி மிதிப்பட்டது. தொடர்ச்சியாக வயிற்றுப் போக்கும் ஏற்பட்டது.

எர்னஸ்டோவின் மனம் முழுக்க சிச்சினா. பயணம் முடியும்வரை சிச்சினா காத்திருப்பாளா? அவளுடன் ஒன்றிணைவது சாத்தியமா? ஆல்பர்டோவின் கவலையோ தன் பயண நண்பனின்மீதே இருந்தது. காதல்வசப்பட்டிருக்கும் இப்படியொரு இளைஞனை அழைத்துக்கொண்டு நீண்டதொரு பயணத்தை மேற்கொள்வது சாத்தியமா? தொடங்குவதற்குள் இந்தப் பயணம் முடிந்துவிடுமா? நான் சரியான முடிவைத்தான் எடுத்திருக்கிறேனா? ஒருவேளை தனியாகக் கிளம்பியிருக்கவேண்டுமோ? சிச்சினா, காதல், நாய்க்குட்டி போன்ற விவகாரங்கள் சிக்கீரம் முடிந்துவிடவேண்டும் என்று மனத்துக்குள் சொல்லிக்கொண்டார் கிரானோடோ.

சிச்சினா தங்கியிருந்த இடத்தில் இரு தினங்கள் தங்கியிருந்து அவளது உறுதிமொழியையும் அன்பையும் பெற்றுக்கொண்டு கிளம்பலாம் என்று எர்னஸ்டோ சொல்லியிருந்தார். ஆனால், இரு தினங்கள் எட்டு தினங்களாக வளர்ந்த நின்றது. கிரானோடா அமைதியாகக் காத்திருந்தார். அவ்வப்போது சீண்டிவிட்டுக்கொண்டும் இருந்தார். என்ன, பெருங்கவிஞரே உமது காதலியிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டாகிவிட்டதா?

எர்னஸ்டோ சிச்சினாவின் விரல்களில் விரல்கள் சேர்த்து, கடல் அலைகளைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தார். ‘பிரிவின் கசப்பு என் மூச்சோடு கலந்துவிட்டது. இறுதியாக, சாகசங்களை நோக்கி வீசும் காற்றால் வேறு உலகங்களை நோக்கி நான் தூக்கிச் செல்லப்பட்டேன்.’ விடைபெறும் தருணம் வந்துவிட்டது. சிச்சினா நான் திரும்பும்வரை காத்திருப்பாயா? சிச்சினா தலையசைத்தாள்.

எர்னஸ்டோ அளித்த ஜெர்மன் ஷெப்பர்டை சிச்சினா பெற்றுக்கொண்டார். பதினைந்து அமெரிக்க டாலரை எர்னஸ்டோவுக்கு அளித்தார். அமெரிக்காவில் இருந்து தலைக்கு ஸ்கார்ஃப் வாங்கி வருவதற்காக.

‘கடற்கரை வெறிச்சோடிக் கிடந்தது. குளிர்காற்று நிலத்தை நோக்கி வீசியது. இந்தக் கரையோடு என்னைப் பிணைத்ததோர் மடியில் என் தலை சாய்ந்திருந்தது. சூழலின் அமைதியில் என்னுள்ளே ஒலித்த குரலின் அதிர்வுகளின் லயத்தில், முழுப் பிரபஞ்சமும் மிதந்துகொண்டிருந்தது.’

எர்னஸ்டோ விடைபெற்றுக்கொண்டார்.

(தொடரும்)

இதுவரை