டெசோவும் ஈழ அரசியலும் – ஒரு பேட்டி
‘வெகுஜன ஊடகங்களால் மக்களுக்குச் சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட செய்திகளைத் தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்’ என்று அறிவிக்கும் கலையரசன் ஓர் ஈழ அகதி. தற்போது நெதர்லாந்தில் வசித்து வருகிறார். சர்வதேச அரசியல், வரலாறு, சமூகவியல், ஈழம் என்று இணையத்தில் விரிவாக எழுதிவருகிறார். முகவிரி : http://kalaiy.blogspot.in/ டெசோ குறித்தும் ஈழ அரசியல் குறித்தும் தன் கருத்துகளை மருதனுடன் இங்கே சுருக்கமாகப் பகிர்ந்துகொள்கிறார்.
டெசோ மாநாட்டை நடத்துவதற்கு, ஈழத் தமிழர்கள் பாதுகாப்பு பற்றி பேசுவதற்கு, தீர்மானங்கள் நிறைவேற்றுவதற்கு திமுகவுக்கு தகுதி இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?
கலையரசன் : தமிழகத்தில் ஒவ்வொரு கட்சியும் தமது எல்லைக்குட்பட்ட ஈழ அரசியலை செய்து கொண்டிருக்கின்றன. எல்லாக் கட்சிகளும், தமது அரசியல் இலாபத்திற்காக ஈழம் பற்றி பேசுவது வாடிக்கை. தற்பொழுது பதவியிழந்த திமுக வும், ஈழத்தைக் கையில் எடுப்பதால் எதையும் இழக்கப் போவதில்லை. திமுக மட்டுமல்ல, தமிழகத்தில் எந்தக் கட்சிக்கும் தகுதி இருப்பதாக கூற முடியாது. இந்திய மத்திய அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளை மீறி எந்தக் கட்சியும் செயற்படப் போவதில்லை.
ஈழம் என்னும் வார்த்தையைப் பயன்படுத்தக்கூடாது என்று மத்திய அரசு இந்த நிமிடம் வரை திமுகவுக்கு நெருக்கடி கொடுத்துக்கொண்டிருக்கிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இலங்கைத் தமிழர்கள், ஈழத் தமிழர்கள் இரண்டில் எது சரியான பதம்?
கலையரசன்: போர் தொடங்குவதற்கு முன்னர் இலங்கைத் தமிழர் என்ற பதம் பயன்பாட்டில் இருந்தது. இன்றைக்கும் அதுவே உத்தியோகபூர்வமாக பயன்படுத்தப்படுகின்றது. போர் நடந்த முப்பதாண்டு காலத்தில் ஈழத்தமிழர் என்ற பதம் செல்வாக்குப் பெற்றது. தமிழகத்தில் இருந்துதான் அத்தகைய அடையாளப்படுத்தல் தோன்றியது.
ஈழத் தமிழர் என்பது பிரிவினை என்ற அர்த்தம் கொண்டுள்ளதாக, இலங்கை அரசும் இந்திய அரசும் நம்புகின்றன. அதனால்தான் மத்திய அரசு அதற்கு தடை விதித்தது. இதிலே வேடிக்கை என்னவென்றால், இருபதாண்டுகளுக்கு முன்னர் இந்திய, மத்திய அரசு அந்தப் பதத்தை பயன்படுத்தி வந்தது. ஈழத் தமிழர், இலங்கைத் தமிழர் இரண்டுமே தற்பொழுது ஒரே அர்த்தத்தில்தான் பயன்படுத்தப்படுகின்றது. என்னைப் பொறுத்த வரையில், இரண்டுமே ஒன்று தான்.
இலங்கைத் தமிழ் தேசியம், ஈழத் தமிழ் தேசியம் என்று எப்படி அழைத்தாலும், இலங்கையில் வாழும் தமிழ் மொழி பேசும் மக்களின் தேசிய அடையாளமாகப் பார்க்கப்படுவதில் தவறில்லை. தேசிய இனப்பிரச்சினை இருப்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால், தமிழ் தேசியவாதிகள் ஈழத் தமிழர் என்பதை, ஈழம் என்ற தனி நாட்டைச் சேர்ந்தவர்களாக கருதுகின்றனர். அதே எண்ணத்தில்தான் மத்திய அரசும் எதிர்க்கின்றது. தமிழ்த் தேசியவாதிகள், ஈழத் தமிழர் என்பதை ஒரு பிரிவினைக் குறியீடாக காட்டிக் கொள்ளும் வரையில், மத்திய அரசின் எதிர்ப்பும் தொடரவே செய்யும். ஏனெனில், இலங்கை இரண்டாகப் பிரிந்தால், அது இந்தியாவிலும் எதிரொலிக்கும்.
முள்ளிவாய்க்கால் யுத்தத்தை தமிழகத்தால் தடுத்திருக்கமுடியுமா?
கலையரசன் : தமிழக மாநில அரசுக்கு அதிக அதிகாரம் இல்லா விட்டாலும், அரசியல் தலைவர்கள் தமது பதவிகளை ராஜினாமா செய்து அழுத்தம் கொடுத்திருக்க முடியும். இதனால், திமுக மக்கள் ஆதரவையும் பெருக்கி இருக்கலாம். இந்த விடயத்தில், மத்திய அரசை பகைத்துக் கொள்ள திமுக தயாராக இருக்கவில்லை. அதே நேரம், கடந்த காலங்களில் புலிகளின் தொடர்பால் ஏற்பட்ட மனக்கசப்பும் அவர்களை எதிர்நிலையில் தள்ளி இருந்தது. புலிகளை ஆதரித்தவர்களை விட எதிர்த்தவர்களின் அணி பலமாக இருந்தது. அதே நேரம், எதிர்க் கட்சிகள், வெகுஜன அமைப்புகள், பொது வேலைநிறுத்தங்களையும் ஒழுங்கு படுத்தி இருக்க முடியும். அது நடக்காமல் தடுப்பதில், மத்திய அரசு அதிக கவனம் எடுத்து செயற்பட்டது. அதி தீவிர புலி ஆதரவு கட்சிகளும், ஒரு எல்லைக்கப்பால் செல்ல விடாது பார்த்துக் கொள்ளப்பட்டது. தமிழகத்தில் இருந்து யாரும் கடல் தாண்டி வர மாட்டார்கள் என்ற நம்பிக்கை இலங்கை அரசுக்கும் இருந்துள்ளது. ஏற்கனவே இந்திய மத்திய அரசு, தமிழகத்து நிலைமையை ஆய்வு செய்து அறிவித்துக் கொண்டிருந்தது.
இப்போதிருக்கும் நிலை. தனி நாடாகப் பிரிதல். கூடுதல் அதிகாரம். இந்த மூன்றில் எது ஈழத் தமிழர்களுக்கு நல்லது? அல்லது, வேறு மாற்று உள்ளதா?
கலையரசன் : உண்மையில் ஈழத் தமிழ் அரசியல் தலைவர்கள், தமிழீழம் என்ற பிரிவினையை அதிகபட்ச கோரிக்கையாக வைத்துக் கொண்டே, நடைமுறையில் சமஷ்டி அதிகாரம் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். மிதவாத தமிழர் விடுதலைக் கூட்டணி, ‘பாராளுமன்ற பாதையில் தமிழீழம்’ காணும் அரசியல் நடத்திக் கொண்டிருந்த காலத்தில் இது வெளிப்படையாக தெரிந்தது. புலிகள் ஆயுதப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த காலத்தில், சமாதானப் பேச்சுவார்த்தைகளிலும் அது பற்றித் தான் பேசப்பட்டது. அதாவது. தமிழீழப் பிரிவினையை இலங்கை அரசு ஏற்றுக் கொள்ள முன்வராது என்பது பிரபாகரன் உட்பட பல தலைவர்களுக்கு தெரிந்திருந்தது. ஆனால், ஆயுதப் போராட்டத்தின் மூலம் தமிழீழம் அடையாளம் என்பது பிரபாகரனின் தளராத நம்பிக்கையாக இருந்தது.
புலிகளைப் பொறுத்த வரையில், சமாதானப் பேச்சுவார்த்தைகள் தீர்வுக்கான வெளிப்பாடல்ல. அது ஒரு யுத்த நிறுத்தம், மீண்டும் போருக்கான தயார்படுத்தல் மட்டுமே. இறுதியில், அதையும் இலங்கை அரசு தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. அதாவது, சர்வதேச சமூகம் (மேற்கத்திய நாடுகள்) பிரிவினைக்கு எதிராக இருந்ததை சரியாகக் கணக்குப் போட்டிருந்தது. 90 % மேற்கத்திய சார்பு வலதுசாரிகளைக் கொண்ட ஈழத் தமிழரின் தலைமை அதனை புரிந்து கொள்ளாதது வியப்புக்குரியது. அமெரிக்கா மட்டுமல்ல, ஐ.நா. வரை சென்று முறையிட்டாலும், இலங்கை அரசுடன் பேசி தீர்வைக் காணுமாறு கூறுகின்றனர். அதன் அர்த்தம், தனி நாடாக பிரிவதென்பது சாத்தியமல்ல. ஆனால், முடிந்தளவு அதிகளவு அதிகாரங்களை பெறுவதற்கு முயலலாம். அந்த முடிவுக்கு வருவது துரோகம் என்று சொல்பவர்களுக்கு, தமிழ் மக்கள் மீது அக்கறை இருப்பதாக நினைக்கவில்லை. தனிநாடு கோரிக்கையை பிரச்சாரம் செய்வதன் மூலம் ஆதாயம் பெறுவதே அவர்களது குறிக்கோளாக உள்ளது.
ஒப்பீட்டளவில் இலங்கை ஆசியாவில் பலம் குறைந்த ஒரு சிறிய தீவு. எப்படி அவர்களால் துணிச்சலாக தமிழர்களை ஒடுக்கவும் அவர்கள்மீது போர் தொடுக்கவும் விளைவுகள் குறித்து அச்சமில்லாமல் இருக்கவும் முடிகிறது?
கலையரசன் : ஆசியாவில் சிறிய நாடாக இருந்த போதிலும், மாறி மாறி பலமான வல்லரசுகளுடன் நல்லுறவைப் பேணும் இராஜதந்திரத்தை இலங்கை தெரிந்து வைத்திருக்கிறது. சுதந்திரமடைந்த காலத்தில் பிரிட்டன், பின்னர் இந்தியா, சோவியத் யூனியன், இப்பொழுது அமெரிக்கா, சீனா என்று எதிரும் புதிருமான வல்லரசுகளுடன் இலங்கையின் சிங்கள ஆளும் வர்க்கம் உறவுகளைப் பேணி வந்துள்ளது. எந்த வல்லரசும் அரசைக் கவிழ்ப்பதற்கு முன்னர், அரசே அவர்களுடன் சமரசம் செய்து கொள்ளும். காலனிய காலத்துக்கு முன்னர், இலங்கையில் சிங்களவர், தமிழர் பிரச்சினை இருக்கவில்லை. பிரிட்டிஷ்காரர்கள் அந்தப் பிரிவினையை திட்டமிட்டு உருவாக்கினார்கள். அதனை வளர்ப்பதிலும் அக்கறை காட்டுகின்றனர். ஜனநாயகம், பாராளுமன்றம், தேர்தல் போன்ற அரசியல் விளையாட்டுகளைச் சரியாக நடத்திக் கொண்டிருக்கும் வரையில், மேற்கத்திய நாடுகள் தலையிடப் போவதில்லை. இதெல்லாம் இலங்கை அரசுக்கும் தெரியும். அதற்கேற்றவாறு நடந்து கொள்கிறார்கள்.
***








