டெசோவும் ஈழ அரசியலும் – ஒரு பேட்டி

‘வெகுஜன ஊடகங்களால் மக்களுக்குச் சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட செய்திகளைத் தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்’ என்று அறிவிக்கும் கலையரசன் ஓர் ஈழ அகதி. தற்போது நெதர்லாந்தில் வசித்து வருகிறார். சர்வதேச அரசியல், வரலாறு, சமூகவியல், ஈழம் என்று இணையத்தில் விரிவாக எழுதிவருகிறார். முகவிரி : http://kalaiy.blogspot.in/ டெசோ குறித்தும் ஈழ அரசியல் குறித்தும் தன் கருத்துகளை மருதனுடன்  இங்கே  சுருக்கமாகப் பகிர்ந்துகொள்கிறார்.

டெசோ மாநாட்டை நடத்துவதற்கு, ஈழத் தமிழர்கள் பாதுகாப்பு பற்றி பேசுவதற்கு, தீர்மானங்கள் நிறைவேற்றுவதற்கு திமுகவுக்கு தகுதி இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?

கலையரசன் : தமிழகத்தில் ஒவ்வொரு கட்சியும் தமது எல்லைக்குட்பட்ட ஈழ அரசியலை செய்து கொண்டிருக்கின்றன. எல்லாக் கட்சிகளும், தமது அரசியல் இலாபத்திற்காக ஈழம் பற்றி பேசுவது வாடிக்கை. தற்பொழுது பதவியிழந்த திமுக வும், ஈழத்தைக் கையில் எடுப்பதால் எதையும் இழக்கப் போவதில்லை. திமுக மட்டுமல்ல, தமிழகத்தில் எந்தக் கட்சிக்கும் தகுதி இருப்பதாக கூற முடியாது. இந்திய மத்திய அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளை மீறி எந்தக் கட்சியும் செயற்படப் போவதில்லை.

ஈழம் என்னும் வார்த்தையைப் பயன்படுத்தக்கூடாது என்று மத்திய அரசு இந்த நிமிடம் வரை திமுகவுக்கு நெருக்கடி கொடுத்துக்கொண்டிருக்கிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இலங்கைத் தமிழர்கள், ஈழத் தமிழர்கள் இரண்டில் எது சரியான பதம்?

கலையரசன்: போர் தொடங்குவதற்கு முன்னர் இலங்கைத் தமிழர் என்ற பதம் பயன்பாட்டில் இருந்தது. இன்றைக்கும் அதுவே உத்தியோகபூர்வமாக பயன்படுத்தப்படுகின்றது. போர் நடந்த முப்பதாண்டு காலத்தில் ஈழத்தமிழர் என்ற பதம் செல்வாக்குப் பெற்றது. தமிழகத்தில் இருந்துதான் அத்தகைய அடையாளப்படுத்தல் தோன்றியது.

ஈழத் தமிழர் என்பது பிரிவினை என்ற அர்த்தம் கொண்டுள்ளதாக, இலங்கை அரசும் இந்திய அரசும் நம்புகின்றன. அதனால்தான் மத்திய அரசு அதற்கு தடை விதித்தது. இதிலே வேடிக்கை என்னவென்றால், இருபதாண்டுகளுக்கு முன்னர் இந்திய, மத்திய அரசு அந்தப் பதத்தை பயன்படுத்தி வந்தது. ஈழத் தமிழர், இலங்கைத் தமிழர் இரண்டுமே தற்பொழுது ஒரே அர்த்தத்தில்தான் பயன்படுத்தப்படுகின்றது. என்னைப் பொறுத்த வரையில், இரண்டுமே ஒன்று தான்.

இலங்கைத் தமிழ் தேசியம், ஈழத் தமிழ் தேசியம் என்று எப்படி அழைத்தாலும், இலங்கையில் வாழும் தமிழ் மொழி பேசும் மக்களின் தேசிய அடையாளமாகப் பார்க்கப்படுவதில் தவறில்லை. தேசிய இனப்பிரச்சினை இருப்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால், தமிழ் தேசியவாதிகள் ஈழத் தமிழர் என்பதை, ஈழம் என்ற தனி நாட்டைச் சேர்ந்தவர்களாக கருதுகின்றனர். அதே எண்ணத்தில்தான் மத்திய அரசும் எதிர்க்கின்றது. தமிழ்த் தேசியவாதிகள், ஈழத் தமிழர் என்பதை ஒரு பிரிவினைக் குறியீடாக காட்டிக் கொள்ளும் வரையில், மத்திய அரசின் எதிர்ப்பும் தொடரவே செய்யும். ஏனெனில், இலங்கை இரண்டாகப் பிரிந்தால், அது இந்தியாவிலும் எதிரொலிக்கும்.

முள்ளிவாய்க்கால் யுத்தத்தை தமிழகத்தால் தடுத்திருக்கமுடியுமா?

கலையரசன் : தமிழக மாநில அரசுக்கு அதிக அதிகாரம் இல்லா விட்டாலும், அரசியல் தலைவர்கள் தமது பதவிகளை ராஜினாமா செய்து அழுத்தம் கொடுத்திருக்க முடியும். இதனால், திமுக மக்கள் ஆதரவையும் பெருக்கி இருக்கலாம். இந்த விடயத்தில், மத்திய அரசை பகைத்துக் கொள்ள திமுக தயாராக இருக்கவில்லை. அதே நேரம், கடந்த காலங்களில் புலிகளின் தொடர்பால் ஏற்பட்ட மனக்கசப்பும் அவர்களை எதிர்நிலையில் தள்ளி இருந்தது. புலிகளை ஆதரித்தவர்களை விட எதிர்த்தவர்களின் அணி பலமாக இருந்தது. அதே நேரம், எதிர்க் கட்சிகள், வெகுஜன அமைப்புகள், பொது வேலைநிறுத்தங்களையும் ஒழுங்கு படுத்தி இருக்க முடியும். அது நடக்காமல் தடுப்பதில், மத்திய அரசு அதிக கவனம் எடுத்து செயற்பட்டது. அதி தீவிர புலி ஆதரவு கட்சிகளும், ஒரு எல்லைக்கப்பால் செல்ல விடாது பார்த்துக் கொள்ளப்பட்டது. தமிழகத்தில் இருந்து யாரும் கடல் தாண்டி வர மாட்டார்கள் என்ற நம்பிக்கை இலங்கை அரசுக்கும் இருந்துள்ளது. ஏற்கனவே இந்திய மத்திய அரசு, தமிழகத்து நிலைமையை ஆய்வு செய்து அறிவித்துக் கொண்டிருந்தது.

இப்போதிருக்கும் நிலை. தனி நாடாகப் பிரிதல். கூடுதல் அதிகாரம். இந்த மூன்றில் எது ஈழத் தமிழர்களுக்கு நல்லது? அல்லது, வேறு மாற்று உள்ளதா?

கலையரசன் : உண்மையில் ஈழத் தமிழ் அரசியல் தலைவர்கள், தமிழீழம் என்ற பிரிவினையை அதிகபட்ச கோரிக்கையாக வைத்துக் கொண்டே, நடைமுறையில் சமஷ்டி அதிகாரம் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். மிதவாத தமிழர் விடுதலைக் கூட்டணி, ‘பாராளுமன்ற பாதையில் தமிழீழம்’ காணும் அரசியல் நடத்திக் கொண்டிருந்த காலத்தில் இது வெளிப்படையாக தெரிந்தது. புலிகள் ஆயுதப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த காலத்தில், சமாதானப் பேச்சுவார்த்தைகளிலும் அது பற்றித் தான் பேசப்பட்டது. அதாவது. தமிழீழப் பிரிவினையை இலங்கை அரசு ஏற்றுக் கொள்ள முன்வராது என்பது பிரபாகரன் உட்பட பல தலைவர்களுக்கு தெரிந்திருந்தது. ஆனால், ஆயுதப் போராட்டத்தின் மூலம் தமிழீழம் அடையாளம் என்பது பிரபாகரனின் தளராத நம்பிக்கையாக இருந்தது.

புலிகளைப் பொறுத்த வரையில், சமாதானப் பேச்சுவார்த்தைகள் தீர்வுக்கான வெளிப்பாடல்ல. அது ஒரு யுத்த நிறுத்தம், மீண்டும் போருக்கான தயார்படுத்தல் மட்டுமே. இறுதியில், அதையும் இலங்கை அரசு தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. அதாவது, சர்வதேச சமூகம் (மேற்கத்திய நாடுகள்) பிரிவினைக்கு எதிராக இருந்ததை சரியாகக் கணக்குப் போட்டிருந்தது. 90 % மேற்கத்திய சார்பு வலதுசாரிகளைக் கொண்ட ஈழத் தமிழரின் தலைமை அதனை புரிந்து கொள்ளாதது வியப்புக்குரியது. அமெரிக்கா மட்டுமல்ல, ஐ.நா. வரை சென்று முறையிட்டாலும், இலங்கை அரசுடன் பேசி தீர்வைக் காணுமாறு கூறுகின்றனர். அதன் அர்த்தம், தனி நாடாக பிரிவதென்பது சாத்தியமல்ல. ஆனால், முடிந்தளவு அதிகளவு அதிகாரங்களை பெறுவதற்கு முயலலாம். அந்த முடிவுக்கு வருவது துரோகம் என்று சொல்பவர்களுக்கு, தமிழ் மக்கள் மீது அக்கறை இருப்பதாக நினைக்கவில்லை. தனிநாடு கோரிக்கையை பிரச்சாரம் செய்வதன் மூலம் ஆதாயம் பெறுவதே அவர்களது குறிக்கோளாக உள்ளது.

ஒப்பீட்டளவில் இலங்கை ஆசியாவில் பலம் குறைந்த ஒரு சிறிய தீவு. எப்படி அவர்களால் துணிச்சலாக தமிழர்களை ஒடுக்கவும் அவர்கள்மீது போர் தொடுக்கவும் விளைவுகள் குறித்து அச்சமில்லாமல் இருக்கவும் முடிகிறது?

கலையரசன் : ஆசியாவில் சிறிய நாடாக இருந்த போதிலும், மாறி மாறி பலமான வல்லரசுகளுடன் நல்லுறவைப் பேணும் இராஜதந்திரத்தை இலங்கை தெரிந்து வைத்திருக்கிறது. சுதந்திரமடைந்த காலத்தில் பிரிட்டன், பின்னர் இந்தியா, சோவியத் யூனியன், இப்பொழுது அமெரிக்கா, சீனா என்று எதிரும் புதிருமான வல்லரசுகளுடன் இலங்கையின் சிங்கள ஆளும் வர்க்கம் உறவுகளைப் பேணி வந்துள்ளது. எந்த வல்லரசும் அரசைக் கவிழ்ப்பதற்கு முன்னர், அரசே அவர்களுடன் சமரசம் செய்து கொள்ளும். காலனிய காலத்துக்கு முன்னர், இலங்கையில் சிங்களவர், தமிழர் பிரச்சினை இருக்கவில்லை. பிரிட்டிஷ்காரர்கள் அந்தப் பிரிவினையை திட்டமிட்டு உருவாக்கினார்கள். அதனை வளர்ப்பதிலும் அக்கறை காட்டுகின்றனர். ஜனநாயகம், பாராளுமன்றம், தேர்தல் போன்ற அரசியல் விளையாட்டுகளைச் சரியாக நடத்திக் கொண்டிருக்கும் வரையில், மேற்கத்திய நாடுகள் தலையிடப் போவதில்லை. இதெல்லாம் இலங்கை அரசுக்கும் தெரியும். அதற்கேற்றவாறு நடந்து கொள்கிறார்கள்.

***

பௌத்தத்தில் கடவுள் உண்டா?

போதி தர்மர் / அத்தியாயம் 3

போதிதர்மர் தனது பிற்கால வாழ்க்கையை பௌத்தத்துக்கே அர்ப்பணித்தவர் என்பதால் நாம் அதைப் பற்றி அறிந்துகொள்வதும் கொஞ்சம் அவசியமாகிறது. ஒரு மதத்தை அறிய அதன் கடவுள் கோட்பாட்டை முதலில் அறிய வேண்டும். ஏனென்றால் மதங்கள் அனைத்தும் கடவுளில் இருந்துதான் தங்கள் கொள்கைகளை விரிக்கின்றன. ‘புத்த மதத்தில் யார் கடவுள்? கௌதம புத்தரா? இல்லை வேறு யாருமா?’

அதர்மம் மலிந்திருக்கும்போது, அறத்தை நிலைநாட்ட ஒரு விழிப்படைந்த மனிதர் அவ்வப்போது வரலாற்றில் தோன்றுவது வழக்கம். அவ்வாறு தோன்றுபவர் தன் சமூகத்தாரை நேர்வழியில் கொண்டு செல்வார். புத்தர் அவர்களில் ஒருவர். கௌதமருக்கு முன்னும் பின்னும் பல்வேறு நாடுகளில் பல்வேறு சமூகத்தில் பல புத்தர்கள் தோன்றியுள்ளனர். கௌதமருக்கு பின் ‘மைத்ரேயர்’ எனும் புத்தர் தோன்றுவார் என்றும் அவர் தன் சமூகத்தினரை மட்டுமின்றி உலகமக்கள் அனைவரையும் செம்மைப்படுத்தி உலகத்துக்கே ஒரு வரமாவார் என்றும் புத்தர் முன்னறிவிப்பு செய்தது இங்கே குறிப்பிடத்தக்கது. இதுவே புத்த மதத்தின் புத்தர்கள் பற்றிய நம்பிக்கை. அப்படியென்றால் கடவுள்?

எதா எதாஹி தர்மஸ்ய கிலானிர் பவதி பாரத; அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ர்ஜான்ம் அஹம் (பொருள்: பாரத நாட்டில் எப்பொழுதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்குகிறதோ; அப்பொழுதெல்லாம் தர்மத்தை நிலைநாட்ட நான் (கிருஷ்ணன்) அவதரிப்பேன்.

மேற்படி பகவத் கீதை உபதேசத்தை எடுத்துக்கொண்டு ஹிந்துக்கள் இன்று புத்தரை கிருஷ்ணரின் அவதாரமாகக் கொண்டாடுகின்றனர். புத்தரைக் கடவுளாக பாவிக்கின்றனர்.

பௌத்த மதத்தில், புத்தர் கடவுளின் அவதாரம் எனும் கருத்துக்கு மட்டுமல்ல புத்தர் கடவுள் எனும் கருத்துக்கே இடமில்லை. புத்தர் கடவுளுமில்லை, கடவுளின் அவதாரமும் இல்லை. ஜஸ்ட் நம்மைப்போல் ஒரு மனிதர் அவ்வளவே. நமக்கும் அவருக்கும் ஒரே ஒரு வேறுபாடு. நாம் தூங்கிக் கொண்டிருக்கிறோம்; அவர் விழிப்படைந்துவிட்டார். அவ்வளவே. விழிப்படைந்தால் நாமும் புத்தரே.

அப்படியானால் புத்த மதத்தில் கடவுள் நம்பிக்கை இல்லையா?

புத்தர் ஒருபோதும் கடவுளைப் பற்றி நேரடியாக விவாதித்ததில்லை. தன் சீடர்களுடனும் அதுபற்றிக் கலந்துகொண்டதாகக் குறிப்புமில்லை. இறைவன் இருக்கிறார் என்றும் அவர் கூறியதில்லை. இல்லை என்றும் சொன்னதில்லை. கடவுள் விஷயத்தில் புத்தர் நடுநிலைமை காத்துள்ளார் என்பது மட்டும் புலனாகிறது. ஆக மொத்தத்தில் நமக்கு தெரியவருவது என்னவென்றால் ‘புத்த மதம் கடவுள் விமரிசனமற்ற மதம்’ . ‘இருந்தால் நல்லா இருக்கும்’ என்று கூறும் அக்னாஸ்டிக் வகையறா.

ஓஷோ ரஜ்னீஷ் போன்ற பல பௌத்தர்கள் மறைமுகமாகக் கடவுளை ஏற்றுக்கொண்டாலும் சிலர் இல்லவே இல்லை என்று ஆணித்தரமாகச் சொல்கிறார்கள். ஆக, இன்றுவரை புத்தமதத்தில் ‘கடவுள் இருக்கிறாரா?’ என்கிற கேள்விக்கு தெளிவான பதில் மட்டும் இல்லை.

சித்தார்தர் புத்தராகி விழிப்பு நிலை அடைந்த பிறகு (புத்தர் என்பதற்கு ‘விழிப்படைந்தவர்’ என்று பொருள்.) தேடலின் முடிவில் தான் கண்டடைந்த உண்மைகளை ஒரு சூத்திர வடிவில் அறிவித்தார்.

1. இது இருந்தால் அதுவும் இருக்கும்.
2. இதனுடைய எழுச்சியினால் அதுவும் எழும்.
3. இது இல்லை என்றால் அதுவும் இல்லை.
4. எனவே, இதை நிறுத்தினால் அதுவும் தானாக நின்றுவிடும்.

அது எது? இது எது?

இது=ஆசை; அது=துன்பம்.

புத்தர் சொல்ல வருவது என்னவென்றால்,

1. துன்பம் இருக்கும் இடத்தில் ஆசையும் இருக்கும்.
2. ஏனென்றால் துன்பம் எழக் காரணம் ஆசை.
3. ஆகவே, ஆசை இல்லையேல் துன்பம் இல்லை.
4. எனவே, ஆசைப்படுவதை நிறுத்திக்கொண்டால் துன்பமும் நின்றுவிடும்.

இவையே புத்தர் கண்ட நான்கு பேருண்மைகள்.

இவற்றை அடைய புத்தர் ஒரு நிபந்தனையும் முன்வைக்கிறார். நிபந்தனை என்னவென்றால், இவற்றை அடைய ஒருவர் ‘உலகம் ஒரு மாயை’ என்று முதலில் உணர்ந்திருக்க வேண்டுமாம்.

ஆம், நேற்றிருந்தது இன்றில்லை. இன்றிருப்பது நாளை இல்லை. எனவே இந்த மாய உலக வாழ்வில் வெற்றி பெறுவது ஒரு மனிதனின் பிறவி நோக்கம் அன்று என்று மொழிந்தார் புத்தர்.

ஆசைப்படுவதை அடக்கி ஒழுக்க நெறியில் செல்ல, தனது தொண்டர்களுக்கு சில வழிமுறைகளையும் நெறிமுறைகளையும் வகுத்தளித்தார் புத்தர்.

ஆசைப்படுவதை நிறுத்த அவர் மூன்று வழிகளைப் போதித்தார். இதனை எட்டு மடிவழிகள் என்றும் கூறுவர்

1. ஒழுக்கம்
2. ஞானம்
3. தியானம்

ஒழுக்கம்

நன்மொழி: உண்மை, பிறர் மனம் புண்படாதபடி பேசுதல், தேவையற்ற வீண்பேச்சைத் தவிர்த்தல், மௌனம் காத்தல்.

நற்செய்கை: செய்கையால் பிறரை புண்படுத்தாதிருத்தல், அஹிம்சையான செயல்களை மட்டும் செய்தல்.

நல்வாழ்க்கை: பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யா வாழ்க்கை. (அஹிம்சை)

ஞானம்

நற்காட்சி: காணும் காட்சியை அது தோன்றும் விதத்தை வைத்து அணுகாமல், அதனுடைய உண்மை நிலையை மதிப்பிடுவது.

நல்லெண்ணம்: வாழ்க்கைச் சுழற்சியிலிருந்து விடுபட எண்ணுவது, பிற உயிர்களுக்கு தீங்கு செய்யா எண்ணம், பிறர் நலம் விரும்புவது.

தியானம்

நன்முயற்சி: தன்னை செம்மைப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ளல்.

நற்கடைப்பிடி: உலகின் மெய்ஞானத்தை முன்னுணர்ந்த விழிப்பு நிலையைக் கடைப்பிடித்தல்.
நல்லமைதி: அமைதியை நிலைநாட்ட தியானம் மேற்கொள்ளல்.

இவையே எட்டு நல்வழிகள் எனப்படும்.

இவையே புத்த மதத்தின் அடிப்படைத் தத்துவங்கள் என்று கூறினாலும் இதனுள் வராத, புத்தரால் போதிக்கப்பட்ட பல அறநெறிகளும் ஒழுக்கநெறிகளும் உள்ளன. புத்தரின் அத்தகைய உபதேசங்களை அவர் மறைந்து சில மாதங்களுப்பின் புத்த பிக்குகள் தொகுத்து ‘திரிபிடகம்’ என்று வழங்கினர்.

திரிபிடகம் மூன்று நூல்களை உள்ளடக்கியது. ஒழுக்கத்தை போதிக்கும், ‘விநயபிடகம்’, அறநெறியைப் போதிக்கும், ‘தம்மபிடகம்’, மனத்தில் உருவேற்ற வல்ல ‘சூத்திரபிடகம்’.

திரிபிடகம் பாலி மொழி நூலாகும். புத்தர் தனது போதனைகளை பாலி மொழியிலேயே நிகழ்த்தினார். புதிய வழக்கங்களை, சடங்குகளை புத்த மதத்தில் புகுத்தும் வேலை புத்தர் மறைந்து சுமார் நூறு ஆண்டுகள் கழித்து சில பிக்குகளால் மேற்கொள்ளப்பட்டது. ஏனென்று கேட்டால் ‘பழையன கழிந்து புதியன புகுந்தால் மட்டுமே புத்தமதம் தழைக்கும்’ என்றனர். இதற்காக ‘வைசாலி’ நகரத்துக்கு அருகில் எட்டு மாதம் தங்கி பிக்குகள் ஆலோசித்தனர்.

முடிவாக, ‘புத்த மதத்தில் புதுமைகளைப் புகுத்துவதற்கு இடமில்லை’ என்று திட்டவட்டமாக அறிவித்தனர். இவர்களை எதிர்த்து புதுமையை விரும்பி வெளியேறியவர்களே இன்றைய மஹாயான அதாவது, ‘பெருஞ்சுழற் பௌத்தர்கள்’ (அவர்களாகவே வைத்துக்கொண்ட பெயர் இது).

இந்தப் புதுமை விரும்பிகள், ‘புதுமை மதத்தை பாழ்படுத்தி விடும்’ என்றவர்களை ஹினயான அதாவது சிறுஞ்சுழற் பௌத்தர்கள் என்றழைத்தனர்.

இதனை எதிர்த்து தங்களுக்கு தேரவாத (மூத்தோர் வழி) பௌத்தர்கள் என்று பெயர் சூடிக்கொண்டார்கள் மூத்தவர்கள்.

தேராவதத்துக்கும் மஹாயானத்துக்கும் வித்தியாசங்கள் அநேகமிருந்தாலும் மஹாயானம் இல்லையென்றால் பௌத்தம் இவ்வளவு தூரம் பரவி இராது; அதேபோல, தேராவதம் இல்லையென்றால் பௌத்தம் என்றால் என்னவென்றே தெரிந்திருக்காது என்பார்கள் பொது பௌத்தர்கள்.

புத்தர் புலால் உண்பதை தடை செய்ததைக்கூட அறியாமல் இருக்கும் இன்றைய சீனர்களை பார்த்தால் உங்களுக்கு மஹாயானம் நன்கு விளங்கும்.

0

போதிதர்மர் மஹாயானப் பிரிவைச் சார்ந்தவர். இவர் மஹாயான பௌத்த பிரிவின் வலது பக்கம் புகுந்து இடதுபுறம் புதிதாக ஜென் (தியான) புத்த மதத்துடன் வெளியேறியவர். இந்த பௌத்தம்தான் அவரை துறவு மேற்கொள்ள வைத்தது. சீனா செல்லத் தூண்டியது. ஜென்னைத் தோற்றுவிக்க உதவியது.

இனி தொடர்ந்து போதிதர்மர் வரலாற்றைப் பார்ப்போம். போதி தர்மர், பிறந்தார் வளர்ந்தார். தன் அரச பதவியை உதறித் துறவியானார். ப்ரஜ்னதாராவின் சீடரானார். சீனா சென்றார். இது தான் போதிதர்மரது முற்பாதி வரலாறு.

முதலில் வளர்ப்பிலிருந்து தொடங்குவோம். போதிதர்மர் ஒரு இளவரசர். ஆகையால் அவர் மற்ற அரச பரம்பரை குழந்தைகளைப் போல்தான் வளர்க்கப்பட்டிருப்பார். அதாவது வாள்வீச்சு, குதிரையேற்றம், மருத்துவம், தற்காப்புக்கலை, ராஜதந்திரம் என ஆயகலைகள் அனைத்தும் கற்றுக்கொடுக்கப்பட்டுதான் வளர்க்கப்பட்டிருப்பார். மதம் சார்ந்த கல்வி என்பது ஊறுகாயாயைப் போலத்தான் இருந்திருக்கும். தவிர அவரது கல்வி முறையும் கண்டிப்பாக அவருக்கு அரசாட்சியின்மீதும் அதிகாரத்தின்மீதும் ஆர்வம் வளர்க்கும்படியாகத்தான் அமைந்திருக்கும். அப்படி இருக்கும்போது எப்படி பௌதத்தின் மீது அவருக்கு துறவு மேற்கொள்ளும் அளவுக்கு ஆர்வம் ஏற்பட்டது? தன் வாழ்நாளின் பிற்பகுதி முழுவதையும் பௌத்தத்துக்கே அர்ப்பணிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி அவருள் எழுந்தது? அவரது துறவு முடிவுக்குப் பின்னால் வேறுசில நிகழ்வுகளும் நடந்திருக்கலாம் அல்லவா?

போதிதர்மரின் துறவறம் பற்றி படிக்கும் எவரது மனதிலும் இந்தக் கேள்விகள் பிறப்பது இயற்கை.

போதிதர்மர் ஏன் துறவறம் மேற்கொள்ள முடிவெடுத்தார்?

பௌத்த மதத்தை அறிய அறிய போதிமர்தருக்கு பௌதத்தின் மீதும் புத்தரின் மீதும் காதல் அதிகமாகிவிட்டது. அதனால் தான் துறவறம் மேற்கொண்டார். அவர் திடீரென்று மனம் மாறும் அளவிற்கு எந்த நிகழ்வும் நடக்கவில்லை. இது ஒரு சாரரின் கருத்து.

போதிதர்மருக்கு அவரைவிட வயதில் மூத்த இரண்டு சகோதரர்கள் இருந்தார்கள். ஆனால் போதிதர்மர் தன் இரு சகோதரர்களைக் காட்டிலும் திறமை வாய்ந்தவர். எனவே சகோதரர்கள் இருவரும் பயந்தனர். போதிதர்மர் தங்கள் இருவரையும் வீழ்த்திவிட்டு ஆட்சியைக் கைப்பற்றிக் கொள்வாரோ என்று கலங்கி போதிதர்மரைத் தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினர்.

(தொடரும்)

இன்றுவரை