எர்னஸ்டோவின் முதல் பயணம்

மோட்டார் சைக்கிள் டைரி / அத்தியாயம் 3

ஒருமுறை பியூனஸ் அயர்ஸ் சுரங்க ரயிலில் தனது நண்பருடன் வீட்டுக்குத் திரும்பிகொண்டிருந்தார் எர்னஸ்டோ. அவர்களிடம் துண்டிக்கப்பட்ட மனித கால் ஒன்று இருந்தது. ‘பரிசோதனை’ செய்யப்போகிறோம் என்று சொல்லி மருத்துவமனை ஊழியர்களிடம் இருந்து எடுத்து வந்திருந்த ‘பொருள்’ அது. செய்தித்தாளில் இரண்டு சுற்று சுற்றி கொண்டு வந்திருந்தால், முழுவதுமாக மறைக்கமுடியவில்லை. இதைக் கவனித்த பிற பயணிகள் பயணம் நெடுக அச்சத்துடன் எர்னஸ்டோவைத் திரும்பித் திரும்பி பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்களுடைய கலக்கத்தை அமைதியாக ரசித்துக்கொண்டிருந்தார் எர்னஸ்டோ.

ஒரே மாதிரியான அலுப்பூட்டும் வாழ்க்கைமுறையில் இருந்து விலகவேண்டும் என்றால் இப்படிப்பட்ட அனுபவங்கள் தேவை. வீட்டிலிருந்து எவ்வளவு தூரம் தள்ளி போகிறோமோ அந்த அளவுக்குச் சுதந்தரத்தை அனுபவிக்க இயலும். கோர்டோபாவில் இருந்த தன் உறவினரை எர்னஸ்டோ நேசித்ததற்குக் காரணம் அவர்களுடைய வீட்டை அடைய குறைந்தது 10 மணி நேரம் காரில் செல்லவேண்டும் என்பதுதான். இதே இடத்துக்கு இன்னொரு வழியிலும் செல்லலாம். சரக்கு வண்டிகளை இடைமறித்து உதவி கேட்டு ஏறி, வழியில் ஏதாவது சிறு வேலைகள் செய்து, ஆங்காங்கு ஓய்வெடுத்துச் செல்லவேண்டும். இதற்கு சில தினங்கள் பிடிக்கும். எர்னஸ்டோவுக்கு இந்த வழிதான் பிடிக்கும்.

மருத்துவக் கல்லூரியின் மூன்றாவது ஆண்டு நிறைவில், ஜனவரி 1, 1950 அன்று தனது முதல் பயணத்தை எர்னஸ்டோ மேற்கொண்டார். அர்ஜென்டினாவின் உட்புறங்களை அலைந்து திரிந்து தரிசிக்கவேண்டும் என்பது திட்டம். ஒரு சைக்கிளை எடுத்துக்கொண்டு அதில் இத்தாலிய எஞ்சின் ஒன்றைப் பொருத்திக்கொண்டு தனியே புறப்பட்டுவிட்டார். கிளம்புவதற்கு முன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டார். தொப்பி, கண்ணாடியுடன் சைக்கிளில் அமர்ந்து, காலை நிலத்தில் பதித்தபடி படத்தில் காட்சியளிக்கிறார் எர்னஸ்டோ. கூடுதல் டயர் ஒன்றை கழுத்தில் மாலைபோல் மாட்டியிருக்கிறார். (ஜான் லீ ஆண்டெர்சனின் புத்தகத்தில் இந்தப் படம் இடம்பெற்றுள்ளது).

கோர்டோபாவை அடைந்து, அங்கிருந்து 150 கிமீ தூரத்தில் உள்ள San Francisco del Chanar பகுதியை அடையவேண்டும். எர்னஸ்டோவின் நண்பர் ஆல்பர்ட்டோ கிரானாடோ (Alberto Granado) அங்குள்ள தொழுநோய் மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டிருந்தார். அருகிலேயே ஒரு மருந்துகடையும் நடத்திக்கொண்டிருந்தார். அவருடன் இணைந்து இன்னொரு சுற்று பயணத்தைத் திட்டமிடவேண்டும்.

மாலை நேரம் வீட்டைவிட்டு வெளியேறினார் எர்னஸ்டோ. மோட்டாரை இயக்கி, பெருத்த சத்தத்துடன் உற்சாகமாக சிறிது தூரம் கடந்துவிட்டு, வேகம் கைகூடியவுடன் வண்டியை மிதிக்கத் தொடங்கினார். விரைவிலேயே இன்னொரு மிதிவண்டிக்காரரின் சிநேகம் கிடைத்தது. இருவரும் விடியும்வரை வண்டியை நிறுத்தாமல் ஓட்டிக்கொண்டிருந்தனர். பிலார் என்னும் நகரத்தை அடையும்போது எர்னஸ்டோ பெருமிதத்துடன் சிரித்துக்கொண்டார். இந்த இடத்தைத் தாண்டி உன்னால் போகமுடியாது என்று வீட்டில் இருந்து கிளம்பும்போது சொல்லியிருந்தார்கள்.

வழியில் ஒரு காரை நிறுத்தி, கைக்கிளை அத்துடன் இணைத்து மணிக்கு 60 கிமீ வேகத்தில் பறக்கமுடிந்தது. திடீரென்று டயர் வெடிக்க, சாலையோரம் ஒதுங்கி, அங்கிருந்தவர்களுடன் சிநேகம் பிடித்து மனம் விட்டு உரையாட முடிந்தது. (மேட் பானம் கொடுத்தார்கள். ஆனால் பயங்கர தித்திப்பு.) வீட்டைவிட்டு வெளியேறி, ‘41 மணி நேரம், 17 நிமிடங்களுக்குப் பிறகு’ கிரானாடோவைச் சந்தித்தார் எர்னஸ்டோ. அவருடன் சில தினங்கள் தங்கியிருந்தார். கிரானாடோவின் சகோதரர்களுடன் இணைந்து அருகிலுள்ள ஒரு நீர் வீழ்ச்சிக்குச் சென்றார். பாறைகளில் தாவி, குன்றுகளின் மீதேறி, உயரத்தில் இருந்து குதித்து, தாற்காலிக வெள்ளம் ஒன்றில் அடித்துச் செல்லப்பட்டு…பரிபூரண சுதந்தரம்!

கிரானாடோ பணியாற்றிக்கொண்டிருந்த மருத்துவமனைக்குச் சென்றார் எர்னஸ்டோ. ரக்பி, புத்தகங்கள் போக இப்போது அவர்களுக்கு மருத்துவ ஆர்வமும் பொதுவாக இருந்ததால் ‘எதிர்கால மருத்துவக் கனவு’ குறித்து ஆர்வத்துடன் விவாதித்தார்கள். ‘எங்கள் இருவருக்குமே மருத்துவம் ஒரு பொதுவான எதிர்காலத்தை அளிக்கும் என்று நம்பினோம்’ என்று அந்தக் கணத்தை நினைவுகூர்ந்தார் கிரானாடோ. கிரானாடோவுடன் இணைந்து தொழுநோய் மருத்துவமனைக்கு சென்று வந்தார் எர்னஸ்டோ.

அடுத்த கட்ட பயணத்தை இரு நண்பர்களும் சேர்ந்து தொடங்க இருந்தனர். கிரானாடோ தனது மோட்டார் பைக் மூலம் எர்னஸ்டோவின் சைக்கிளை கயிறு கட்டி இழுத்துச் செல்லவேண்டும். ஆனால், அது சரி வரவில்லை என்பது தெரிந்ததும் விடைபெற்றுக் கொண்டு கிளம்பிவிட்டார் எர்னஸ்டோ. அன்று இரவு, லொரெடோ என்னும் சிறு நகரத்தில் தங்க, காவல் துறையினர் இடம் கொடுத்தனர். எர்னஸ்டோ ஒரு மருத்துவக் கல்லூரி மாணவன் என்பதைத் தெரிந்ததும் உள்ளூர் மக்கள் அவரைச் சூழ்ந்துகொண்டனர். இன்னும் சில தினங்கள் தங்கியிருக்குமாறு கேட்டுக்கொண்டார்கள். எங்கள் நகரத்தின் ஒரே மருத்துவராக இங்கேயே இருந்துவிடுங்களேன் என்றும்கூட ஆசை காட்டினார்கள். Santiago del Estero என்னும் இடத்தில் ஓர் உள்ளூர் பத்திரிகை நிருபர் எர்னஸ்டோவைப் பேட்டி கண்டார். ‘என்னைப் பற்றி என் வாழ்நாளில் முதல் முறையாக வெளிவந்த கட்டுரை ’ அது.

ஒருமுறை தனது சைக்கிள் டயரை பஞ்சர் ஒட்டிக்கொண்டிருந்தபோது, உள்ளூர் நபர் ஒருவர் அவரிடம் பேச்சுக்கொடுத்தார். முந்தைய தினம் பத்திரிகை நிருபர் கேட்ட அதே கேள்விகள். நீ யார்? எங்கிருந்து வருகிறாய்? எங்கே சென்றுகொண்டிருக்கிறாய்? எதற்காக இந்தப் பயணம்? எர்னஸ்டோ அளித்த பதில் அவரைத் திகைக்கவைத்தது. ‘வீட்டைவிட்டு இவ்வளவு தூரம் வந்திருக்கிறாய். ஆனால் குறிப்பிட்ட நோக்கம் எதுவும் இல்லையா?’ பல முறை யோசித்தும் எர்னஸ்டோவுக்கு விடை கிடைக்கவில்லை. ஆர்வமும் துடிதுடிப்பும் போதாதா, நோக்கம் என்றொன்று இருக்கவேண்டுமா என்ன?

சால்டா என்னும் பகுதியை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தபோது ஒரு வனப்பகுதியைக் கடக்கவேண்டியிருந்தது. சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கி நடக்கத் தொடங்கினார். அடர்ந்த கானகம். நெருக்கமாக வளர்ந்திருக்கும் மரங்கள். கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை மயக்கும் இயற்கை காட்சிகள். தன்னை மறந்து அப்படியே நின்றுகொண்டிருந்தார் எர்னஸ்டோ. ‘எனக்குள் உருவாகி, வளர்ந்துகொண்டிருந்த ஏதோ ஒரு விஷயம்… பக்குவமடைந்துவிட்டதை உணரமுடிந்தது.’ நகரத்தின் பெருத்த ஒலி, கால்களில் சக்கரம் பொருத்தியது போல் ஓடும் மனிதர்கள், இயந்திரத்தனமான வாழ்க்கை அனைத்தின்மீதும் சலிப்பு ஏற்பட்டது. இதுதான் அமைதி. நகரம், ‘அமைதிக்கு நேர் எதிரான நிலைகொண்டது.’

ஹார்லே டேவிட்சன் (அமெரிக்க இரு சக்கர வாகனம்) வண்டி ஓட்டிக்கொண்டு ஒருவர் எதிரில் வந்தார். வா, கயிறு போட்டு அழைத்துச் செல்கிறேன் என்று வரவேற்பும் அளித்தார். காற்று முகத்தில் அறைய, மோட்டார் வண்டியின் பின் பறந்து செல்வது சுகம்தான் என்றாலும் டயர் பஞ்சர் ஆகி முட்டுச் சந்தில் உட்கார்வதைத் தவிர்க்கவேண்டும் அல்லவா? மறுத்துவிட்டார். இருவரும் ஒன்றாக காபி அருந்தி, கைகுலுக்கி விடைபெற்றுக்கொண்டார்கள்.

அருகிலுள்ள ஒரு நகரத்தை எர்னஸ்டோ வந்தடைந்தபோது, ஒரு பெரிய சரக்கு வண்டியில் இருந்து ஹார்லே டேவிட்சன் கீழிறக்கப்படுவதைக் கவனித்தார். சற்று முன் சந்தித்த நபரின் உடலும் அடுத்ததாக இறக்கிவைக்கப்பட்டது. அவன் ஒரு ‘தற்கொலைப் போராளி’ என்று நினைத்துக்கொண்டார் எர்னஸ்டோ. இவனுடைய பயண நோக்கம் என்னவாக இருந்திருக்கும்? ‘ஒரு சாலையின் திருப்பத்தில் மரணத்தைச் சந்தித்திருக்கும் இந்த வீரனை யார் அறிவர்களா?’

சால்டா வந்தடைந்தார். அன்றிரவு ஒரு லாரியில் அமர்ந்து உறங்கும் வாய்ப்பு கிடைத்தது. தோளில் தட்டி ஓட்டுனர் எழுப்பும்வரை நல்ல உறக்கம். இப்படியே சிறிது சிறிதாக முன்னேறி பொலிவியா வரை சென்றுவிடமுடியாதா என்ன? ஆசைதான். ஆனால் அது சாத்தியமில்லை என்பது தெரிந்தது. மேற்கொண்டு பயணத்தைத் தொடரமுடியாதது பற்றி வருத்தத்துடன் தன் தந்தைக்குக் கடிதம் எழுதினார். ‘வழியில் வெள்ளப் பெருக்குகள் ஏற்பட்டுள்ளதை அறிந்துகொண்டேன். எரிமலையொன்று விழிப்புடன் இருப்பதாகவும் சொல்கிறார்கள். நான் திரும்பிவிடுகிறேன்.’ இன்னும் சில வாரங்களில் நான்காம் ஆண்டு படிப்புத் தொடங்கவிருந்தது.

நினைவுகளை அசைபோட்டபடி திரும்பிகொண்டிருந்தார் எர்னஸ்டோ. தொழுநோயாளிகள், மருத்துவர்கள், ஏழைகள், சாலையோரவாசிகள், விவசாயிகள் என்று எத்தனை விதமான மனிதர்கள்! எத்தனை விதமான அனுபவங்கள்! பழங்குடிகளின் வாழ்க்கை முறையை எர்னஸ்டோ நேரில் கண்டது அதுவே முதல் முறை. அர்ஜென்டினாவின் நிஜமுகத்தைக்கூட முதல்முதலாக கண்டதுபோல் இருந்தது எர்னஸ்டோவுக்கு. நகரங்கள் முன்வைக்கும் தோற்றம் போலியானது. ஒரு நாட்டின் ஆன்மா வெளிப்படையாக தெரிவதில்லை. அதைத் தேடிப்போகவேண்டியிருக்கிறது. அர்ஜென்டினா மட்டுமல்ல மற்ற நாடுகளுமகூட இப்படித்தான் ‘இரட்டை வேடம்’ பூண்டிருக்கும் போலும்.

பயணம் முடிவுக்கு வந்தபோது, ஆறு வாரங்களில் 12 மாகாணங்களையும், 4000 கிமீ தூரத்தையும் எர்னஸ்டோ கடந்து சென்றிருந்தார். தனது சைக்கிளைப் பழுது பார்ப்பதற்காக மோட்டார் பொருத்தி கொடுத்த Amerimax Company-யைத் தொடர்பு கொண்டார் எர்னஸ்டோ. இவ்வளவு தூரம் மோட்டார் ஓடியிருக்கிறதா என்று வியந்த நிர்வாகம், எர்னஸ்டோவுக்குக் கடிதம் எழுதியது. இந்த விஷயத்தை எங்கள் விளம்பரத்துக்காகப் பயன்படுத்திக்கொள்ள நீங்கள் அனுமதித்தால் இலவசமாகவே வண்டியைச் சரிசெய்து தருவோம். எர்னஸ்டோ ஒப்புக்கொண்டு பதில் கடிதம் எழுதினார். ‘இந்த சைக்கிள் அபாரமான முறையில் என்னுடன் ஒத்துழைத்தது. கடைசியில்தான் கம்ப்ரெஷன் பழுதடைந்துவிட்டது என்று நினைக்கிறேன். எனவே இதனை உங்களிடம் அனுப்பிவைக்கிறேன்.’

வீட்டுக்குள் நுழையும்போதே எர்னஸ்டோ யோசிக்கத் தொடங்கிவிட்டார். அடுத்த பயணம் எப்போது?

(தொடரும்)

அசாம் : மடிந்த உயிர்களும் மறைந்த உண்மைகளும்

கலவரங்கள் இரு வகைப்படும். திட்டமிட்ட கலவரம், திடீர் கலவரம். முதல் வகை, லாப நோக்கத்தோடு அரங்கேறும். அடையவேண்டிய இலக்குகள் சரியாக நிர்ணயிக்கப்பட்டு, மிகச் சாதுரியமாக காய்கள் நகர்த்தப்பட்டு, என்ன நடந்தது என்றே தெரியாதபடி மக்கள் இதில் ஈடுபடுத்தப்படுவார்கள். கடந்த மாதம் அசாமில் நிகழ்ந்தது இந்த வகை கலவரம்தான்.

ஜூலை 19 அன்று கொக்ரஜார் (Kokrajhar) மாவட்டத்தில் சில போடோ இன மக்கள் வசிக்கும் வீடுகள்மீது, வங்கதேசத்தினர் கல்வீசித் தாக்கியுள்ளனர். இத்தாக்குதலை விசாரிக்க, சரணடைந்த நான்கு போடோ தீவிரவாதிகள் ஜூலை 20 அன்று அந்த வீடுகளுக்குச் சென்றுள்ளனர். அவர்களை வங்கதேசத்தினர் கொன்றனர். இதுதான் கலவரத்தின் ஆரம்பம். இக்கலவரம் ஜூலை 27 வரை 400 கிராமங்களுக்குப் பரவி 59 உயிர்களை குடித்துள்ளது. 4 லட்சம் மக்கள் அகதிகளாகி 270 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது செய்தி. இச்செய்தி சில கேள்விகளை எழுப்பிள்ளது.

இந்தக் கலவரத்தில் யார் லாபமடைந்தார்கள்? எப்படி லாபமடைந்தார்கள்? இதன் பின்னணி என்ன?

அந்நிய ஊடுருவல் 

வடகிழக்கில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் மாநிலம் அசாம். பிரம்மபுத்திரா மற்றும் அதன் கிளை நதிகள் பாய்ந்து வண்டல் பரப்ப, அமுதசுரபியாக விளங்கும் இம்மாநிலம், பல பழங்குடிகளின் இருப்பிடமாகும். 1901 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 84.55% அசாமியர்கள் ஹிந்து /பாரம்பரிய மலைவாழ் சமய நம்பிக்கை உடையவர்களாக இருந்துள்ளனர். 2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இவர்கள் 65.4% ஆக குறைந்து, 1901 ல் 15% ஆக இருந்த முஸ்லீம்கள் 2001 ல் 31% ஆக உயர்ந்து விட்டனர். எப்படி இந்த மாற்றம் நிகழ்ந்தது?

அசாம் மாநிலம், வங்கதேசத்தை எல்லையாகக் கொண்டுள்ளது. வங்தேசத்திலிருந்து முஸ்லிம்கள் ஊடுருவி அசாமில் குடியேறத் தொடங்கினர். தடுக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள் முஸ்லிம்களின் ஓட்டுக்காக, இந்த ஆக்கிரமிப்புக்குத் தூபம் போடுகின்றன. இந்த ஊடுருவலால் பாதிக்கப்படுபவர்களில் போடோ பழங்குடிகளும் அடங்குவர். 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, Tibeto-Burman பிரிவைச் சேர்ந்த, போடோ மொழியை தாய் மொழியாகக் கொண்ட இனத்தவர்கள் சுமார் 13 லட்சம் பேர். இவர்கள் கொக்ரஜார், பஸ்கா, சிராங், உடல்குரி மாவட்டங்களின் பூர்வகுடிகள். இந்த ஊடுருவலால் பூர்வ குடிகளின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டு, அவர்களுடைய பண்பாடு, மொழி மற்றும் பாரம்பரியம் அழியும் நிலை ஏற்பட்டு விட்டது.

தேசிய அபாயம்

வங்கதேச ஊடுருவல் கட்டுக்கடங்காமல் போவதையும் வேலை வாய்ப்புகள் உள்ளிட்டவற்றை அவர்கள் தட்டிப்பறித்துக்கொள்வதையும் கண்ட போடோ மக்கள் கோபம் கொண்டனர். சொந்த மண்ணில் இரண்டாம் தரக் குடிமகனாக மாற்றப்பட்ட நிலையில், போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைமையை அடைந்தனர்.

ஐரோப்பிய-அமெக்க ஆதரவு பெற்ற கிறிஸ்தவ மிஷினரிகள், போடோ மக்களின் போராட்டத்தைப் பாரதத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டமாகத் திருப்பும் முயற்சியில் வெற்றி பெற்றனர். இதன் விளைவாக, போடோ இனமக்கள் கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்யப்பட்டனர். 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 9.4% போடோக்கள் கிறிஸ்தவர்களாக இருந்தனர். உண்மையில் இது 15% இருக்கும் என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்த போடோ புரட்சி அமைப்பில் ஒன்று National Democratic Front of Bodoland. இது கிறிஸ்தவ ஆதிக்கம் மிகுந்த அமைப்பு.  உல்ஃபா போன்ற பிரிவினைவாத அமைப்புடன் தொடர்புடையது. இந்த அமைப்பு, போடோ பகுதிகளை பாரதத்திலிருந்து பிரித்து தனி நாடு அமைக்கவேண்டும் என்ற கோரிகையை முன்வைத்து, பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும், தடை செய்யப்பட்ட ஒரு நாசகார அமைப்பு.

2003ம் ஆண்டு, 3,082 கிராமங்களை உள்ளடக்கிய போடோ டெரிடோரியல் கவுன்சில் என்ற சுயாட்சிப் பகுதி அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டது. போடோ லிபரேஷன் டைகர்ஸ் என்ற ஆயுதம் தாங்கிய அமைப்பினர் சுமார் 2,500 பேர் அரசிடம் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு, ஜனநாயகப் பாதைக்குத் திரும்பினர். இதில் பெரும்பாலானோர் மத்திய ரிசர்வ் காவல் படையில் வேலையில் அமர்த்தப்பட்டனர். ஆனால், ஜனநாயக வழிக்கு வரமாட்டோம் என்று சொல்லி, இன்றும் நம் நாட்டுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது நேஷனல் டெமாக்ரடிக் ஃப்ரண்ட் ஆஃப் போடோலாண்ட் அமைப்பு.

ஓட்டு வங்கி அரசியல் அபாயம்

1947-ல் பாரதம் விடுதலை அடைந்த பின்னர்தான், வட கிழக்கு மாநிலங்களில் கல்வி பரவலாக்கப்பட்டது. இதன் விளைவாக, வாய்ப்பு தேடி நுழையும் வெளி மாநிலத்தவர்களை எதிர்த்து உள்ளூர் மக்கள் போராடத் தொடங்கினர்.  அசாமில் நடந்ததும் இதுதான். உள்புகுந்த வங்கதேச முஸ்லிம்களை குடியமர்த்த ஏதுவாக Illegal Migrants (Determination by Tribunal) – IMDT என்ற  சட்டத்தை 1983ல் அசாம் மாநிலத்துக்கு மட்டும் பொருந்தும்படிகொண்டு காங்கிரஸ் அரசு கொண்டுவந்தது. காரணம், அவர்களுடைய ஓட்டு வங்கி.

இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, சட்டமாக்கப்படும்போது அசாமிலிருந்து ஓர் உறுப்பனர்கூட நாடளுமன்றத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 1983 முதல் 2005 வரை பல லட்சம் வங்கதேச முஸ்லிம்கள், இந்தியக் குடிமக்களாக நம் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.  இவர்கள் அசாமின் பண்பாடு, மொழி போன்றவற்றை அழித்துவிட்டனர் என்று சுட்டிக்காட்டி இச்சட்டத்தை உச்ச நீதிமன்றம் 2005-ல் ரத்து செய்தது.

அரசியல் அமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானது என்று தெரிந்தே கொண்டுவரப்பட்ட சட்டம் இது. 2004ல் வாஜ்பாய் ஆட்சி முடிவுக்கு வந்து, 2005ல் உச்ச நீதிமன்றம் சட்டத்தை ரத்து செய்த குறுகிய ஓராண்டு காலத்துக்குள் அசாமின் வாக்காளர் எண்ணிக்கை 15.1% ஆக உயர்ந்தது.

ஆக அசாம் அரசியலின் மூன்று கதாநாயகர்கள், வெளிநாட்டு முஸ்லிம்கள், பிரிவினையைத் தூண்டி மதமாற்றம் செய்யும் கிறிஸ்தவர்கள் மற்றும் ஓட்டு அரசியல் நடத்தும் அரசியல்வாதிகள்.

குடியுரிமை கிடைக்கப்போகிறது

இந்தக் கலவரத்தில் அகதிகளாக்கப்பட்ட 4 லட்சம் பேரில் 2.5 லட்சம் பேர் முஸ்லிம்கள். இந்த 2.5 லட்சம் முஸ்லிம்களும் சட்டவிரோதமாக நம் நாட்டிற்குள் ஊடுருவியவர்கள். இவர்கள் அனைவரும் இப்போது இந்தியக் குடிமக்கள் ஆகப்போகிறார்கள். இவர்கள் யார் என்று யாரும் இப்போது கேள்வி கேட்கப்போவதில்லை. இதற்கான அடித்தளம் இப்போது அமைக்கப்பட்டுவிட்டது. ‘அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்படுகிறார்கள். அவர்களை மாநில அரசால் காப்பாற்ற முடியாது. எங்களுக்கு மாநில அரசின்மீது நம்பக்கை இல்லை’ என்று காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ரகுமான் கான் தலைமையில் பல கட்சிகளை சார்ந்த முஸ்லிம் எம்.பிக்கள் குழு, உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை சந்தித்து ஜூலை 26 அன்று வேண்டுகோள் விடுத்துள்ளது. அது மட்டுமின்றி ஒரு முஸ்லிம் குழு அசாம் செல்ல வேண்டுமாம்.

இதே ஜூலை 26 அன்று மும்பையில் முஸ்லிம்களின், அரசு சாரா நிறுவனங்களின் கூட்டம் நடத்தப்பட்டது. பல்வேறு அமைப்பின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டு, திட்டமிட்ட முறையில் அசாமில் முஸ்லிம்கள் இன அழிப்பு செய்யப்படுகிறார்கள் என்றும், வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் அதே கிராமங்களில் குடியமர்த்தப்பட வேண்டும் என்றும், பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்தக் கலவரத்தில் நவீன ரகத் துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை வங்கதேசத்திலிருந்து படகுகள் மூலம் அசாமுக்குள் எடுத்துவரப்பட்டதாக போடோ தலைவர்கள் செய்தி வெளியிட்டிருந்தனர். இதை உல்ஃபா அமைப்பைச் சேர்ந்தவர்களும் உறுதி செய்தனர். ஆனால் இந்திய உள்துறைச் செயலாளர் ஆர்.கே.சிங் ஜூலை 25 அன்று இந்தக் கலவரத்தில் எந்த அந்நியத் தலையீடும் இல்லை என்றும், சர்வதேச எல்லை சீல் வைக்கப்பட்டுள்ளதால் யாராலும் அசாமுக்குள் நுழைய முடியாது என்றும் தெரிவித்தார்.

இந்தப் பேட்டிகளும் கோரிக்கைகளும் டெல்லியிலும் மும்பையிலும் அரங்கேறும்போது, கலவர பூமியான அசாமின் மோகன்பூர் மற்றும் சோனாரிப்பூரில் பாகிஸ்தான் கொடி பறப்பதை டைம்ஸ் நௌ என்ற ஆங்கிலச் செய்தி ஊடகம் ஒளிபரப்பியது. கலவரத்தில் பாதிக்கப்பட்ட அப்பாவி இந்திய முஸ்லிம்கள் ஏன் பாகிஸ்தான் கொடியை ஏற்றவேண்டும்? பாகிஸ்தான் அந்நிய நாடு இல்லையா? இவர்கள்தான் அப்பாவி முஸ்லிம்களா?

இவர்களைக் காப்பாற்றி, இந்திய வம்சாவளி போடோக்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று இந்திய நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் கோருகிறார்கள். இவர்களுக்குக் குடியுரிமை கொடுக்கவேண்டும் என்கின்றன முஸ்லிம் அரசு சாரா அமைப்புகள். வெளிநாட்டுத் தலையீடு இல்லை என்கிறார் உள்துறைச் செயலாளர்.  ஜூலை 29 அன்று அசாம் சென்ற பிரதமர் மன்மோகன் சிங், 300 கோடி ரூபாய் நிவாரணம் அளிப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குடி அமர்த்தப்படுவார்கள் என்றும் அறிவித்துவிட்டார்.

ராணுவத்தை அவமதித்த முதல்வர்

கலவரத்தை அடக்க துரித நடவடிக்கை எடுக்க முதல்வர் தருண் கோகோய் தவறிவிட்டார் என்ற புகார் வந்ததும், ராணுவத்தின்மீது பழியைத் திருப்பிவிட்டார் முதல்வர். ராணுவம் சரியான நேரத்தில் வந்திருந்தால், கலவரத்தை அதிகம் பரவவிடாமல் கட்டுக்குக் கொண்டுவந்திருக்கலாம் என்கிறார். அவர் அழைத்து ராணுவம் வரவில்லை என்றால், வங்கதேசத்தினர் ஆபத்தானவர்கள் என்று ராணுவம் கருதுகிறதா?

எந்த இனம் அழியப் போகிறது?

வங்கதேச அந்நிய முஸ்லிம்கள், இப்போது அநாதைகள் என்ற போர்வையில் குடி அமர்த்தப்படுவார்கள். கலவரத்தால் பாதிக்கப்பட்ட போடோக்களோ அக்கிரமக்காரர்களாக இனம் காட்டப்படுவார்கள். அகதிகள் முகாமில் இருக்கும் 1.5 லட்சம் போடோக்கள் அநாதைகளாக இருப்பார்கள். அவர்கள்மீது வழக்கு தொடரப்படும். அரசியல் கட்சிகளோ ஓட்டுக்காக, மைனாரிட்டி என்ற பெயரில் முஸ்லிம்களைத் திருப்திப்படுத்துவதில் மட்டுமே குறியாக இருக்கும். பாவம் அந்த 59 ஜீவன்கள்!

0

பால. கௌதமன்