உலகம் எதனால் ஆனது?
மேட்டர் / அத்தியாயம் 1
ஹிக்ஸ் போஸான் ‘கிட்டத்தட்ட’ கண்டுபிடிக்கப்பட்டு, கடவுளைக் கண்டுபிடித்துவிட்டதாகப் பொது ஊடகங்களும் கடவுள் தூள் தூளாக ஆனதாக திராவிடர் கழகத்தின் ‘உண்மை’ ஏடும் தலைப்புச் செய்திகளை வெளியிட்டு, அனைத்துப் பத்திரிகைகளிலும் கட்டுரைகள் வெளியாகி, அடுத்த செய்திகளுக்கு அனைவரும் போனபிறகு ஆரம்பிக்கும் தொடர் இது.
இந்த உலகம் எதனால் ஆனது?
உலகம் என்றால், அச்சொல் எதனைக் குறிக்கும்? பூமியையா? பிரபஞ்சம் முழுமையுமா? கம்பனின் ‘உலகம் யாவையும் தாமுள ஆக்கலும்’ என்பதை எடுத்துக்கொண்டால் அவர் சொல்லும் உலகம் என்பது இந்தப் பிரபஞ்சம் முழுமையும் சேர்த்துத்தான். எனவே அதே பொருளிலேயே பயன்படுத்துகிறேன்.
இந்த உலகம் எதனால் ஆனது? இதனை மெதுவாக, மிக மெதுவாகப் புரிந்துகொள்ள முற்படும் முயற்சிதான் இந்தத் தொடர்.
உலகத்தை உலோகத்திலிருந்து ஆரம்பிப்போம்.
உலோகம்
ஆதி மனிதன் இயற்கையாகக் கிடைத்த பொருள்களைத் தன் வசதிக்காகப் பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்தான். பழைய கற்காலம் என்று சொல்லப்படும் காலம் சற்றேறக்குறைய இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. அந்தக் காலத்திலேயே அதி அற்புதமான கற்கருவிகளை அவன் உருவாக்கியிருக்கிறான்.
இந்தக் கருவிகள் பலவும் சென்னையின் புறநகரான பல்லாவரத்தில் எக்கச்சக்கமாகக் கிடைத்துள்ளன. தமிழகத்தின் பல இடங்களிலும் இந்தியாவின் பல இடங்களிலும் பழைய கற்காலம், இடைக் கற்காலம், புதிய கற்காலம் என்று சொல்லப்படும் காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த பல்வேறு கருவிகள் பெருமளவில் கிடைத்துள்ளன.
கல், மண், மரம் – இயற்கையாகக் கிடைக்கும் பொருள்கள். மரம் என்றால் தாவரத்தின் பல்வேறு விளைபொருள்கள் என்று வைத்துக்கொள்ளலாம். மண் என்றால் களிமண், மண்கட்டி, துகள் மண் என்று அனைத்தும். களிமண்ணைச் சுட்டால் வரும் மண் பாண்டம், செங்கல், ஓடுகள் ஆகியவையும் அடங்கும் என்று வைத்துக்கொள்வோம். கல் என்றால் வகைவகையான கற்கள். கடுமையான கற்கள், மென்மையான கற்கள், மாக்கல், சுண்ணாம்புக்கல், சுரண்ட எளிதான கல், அடித்தாலும் உடையாத கல என்று இயற்கையில் கிடைக்கும் எல்லாவிதமான கற்களும்.
ஆதிமனிதன் நிகழ்த்திய பெரும் பாய்ச்சல், நெருப்பு. சிக்கி முக்கிக் கல் உரசும்போதோ, மரத்தைக் கடையும்போதோ தீப்பொறி பறக்கிறது. எளிதில் பற்றிக்கொள்ளும் பஞ்சோ, வைக்கோலோ அருகில் இருந்தால் தீ பரவும். பின் காய்ந்த சுள்ளிகள், நெருப்பை அதிகமாக்கும். அதில் பசு நெய்யை அல்லது மிருகக் கொழுப்பை அல்லது தாவர எண்ணெயை வார்த்தால் தீ கொழுந்துவிட்டு எரியும்.
எரியும் மரக்கட்டைகள் கரியாக ஆவதை அவன் பார்த்திருப்பான். அந்தக் கரித்துண்டுகளும்கூட நன்கு எரிபவைதான்.
மரத்தைக் கரித்துண்டுகளாக ஆக்கும்போதுதான் அவன் மிக முக்கியமான தனிமம் ஒன்றை உருவாக்கியிருப்பான். ஆனால் நாம் தாண்டிச் செல்கிறோம். உண்மையில் நமக்குத் தனிமம் என்றாலே என்னவென்று இன்னும் தெரியாது.
கல்லால் ஆன கருவிகளுக்கு அடுத்து மனிதன் மேற்கொண்ட மிகப்பெரும் பாய்ச்சல்தான் உலோகங்கள்.
பளிச் பளிச் என்று மின்னி மினுக்கும் உலோகங்கள் என்று இன்று நாம் அறிந்திருப்பவை பல. ஆனால் ஆதிமனிதனுக்குத் தெரிந்திருந்தவை ஏழே ஏழு உலோகங்கள்தாம்.
தங்கம், வெள்ளி, செப்பு, வெள்ளீயம், காரீயம், இரும்பு, பாதரசம்.
ஆதிகால இலக்கியங்களிலேயே இந்த உலோகங்களைப் பற்றி நாம் பார்க்கிறோம். பல்வேறு அகழ்வாராய்ச்சிகளில் நமக்குக் கிடைத்துள்ள அரும்பொருட்களிலும் இந்த உலோகங்களையே, அல்லது இவற்றின் பயன்பாடுகளையே நம்மால் காணமுடிகிறது.
இந்த ஏழு உலோகங்களில் எதை மனிதன் முதலில் கண்டுபிடித்திருப்பான்?
இதற்கான விடையைத் தேடிச் சென்றபோது, எனக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. நான் செப்பு என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், தங்கம்தான் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவேண்டு
காரணம் எளிது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஏழு உலோகங்களில் தங்கம்தான் அப்படியே அதன் நேரடி வடிவில் கிடைக்கக்கூடியது. வெள்ளியும் செப்பும் ஓரளவு நேரடியாகக் கிடைக்கக்கூடியவை. ஆனால் தங்கம்தான் மிக அதிகமாக, நேரடியாகக் கிடைக்கக்கூடியது.
நேரடியாக என்றால்?
இக்கட்டத்தில் தனிமம், சேர்மம், தாது ஆகியவை பற்றி சுருக்கமாகவாவது பார்ப்போம். கவனியுங்கள். இவையெல்லாம் ஆதிமனிதனுக்குத் தெரியாத தகவல்கள். பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டவை.
தனிமம் என்றால் தனித்து இருப்பது. ஆங்கிலத்தில் எலிமெண்ட் என்ற பெயரில் வழங்கப்படுவது. அடிப்படையானது என்று பொருள் தரக்கூடியது. தமிழில் நேரடியாக அந்தப் பொருள் வருவதில்லை. தனிமம் என்றால், வேறு ஏதோ சில ஒன்று சேர்ந்து இது உருவாகவில்லை.
இதற்கு நேர்மாறுதான் சேர்மம். ஒன்றுக்கு மேற்பட்ட தனிமங்கள் ஒன்றுசேர்ந்து வேதிவினை புரிந்தால் கிடைப்பது சேர்மம்.
பாருங்கள், மேலும் சில புதிய சொற்களை விளக்கவேண்டியிருக்கிறது. வேதிவினை என்றால்? பின்னர் பார்க்கப்போகிறோம்.
ஆதிமனிதன் இது எதைப் பற்றியும் அறியாமலேயே தங்கத்தோடு விளையாடியிருப்பான். சுத்தத் தங்கம் மிகவும் மென்மையானது. அதனைக் கையாலேயே தட்டிக் கொட்டி, கற்கருவிகளைக் கொண்டு நகைகளாக ஆக்கியிருக்கலாம். காசுகளாக ஆக்கியிருக்கலாம். ஆனால் சிறு குழந்தை பல்லால் கடித்தாலேயே பிய்ந்து போய்விடக்கூடியதாக இருந்திருக்கும்.
இப்படியே வெள்ளிகூட சில இடங்களில் கிடைத்திருக்கும்.
ஆனால் செப்பும் வெள்ளீயமும் கிடைத்தவுடன்தான் மனித நாகரிகம் சட்டென மாறுகிறது.
இவற்றைக் கண்டுபிடிப்பது எளிதல்ல. செப்பு பெரும்பாலும் தனிமமாகக் கிடைக்காது. வெள்ளீயம் கட்டாயமாகத் தனிமமாகக் கிடைக்காது. இவையெல்லாம் ஏதோ உலோகச் சேர்மமாகத்தான் கிடைக்கும். அப்படிப்பட்ட சேர்மத்தைத்தான் தாது என்ற பெயரில் நாம் அழைக்கிறோம்.
இப்படித் தாதுவாகக் கிடைத்த பொருள்களிலிருந்து வெள்ளி, செப்பு, வெள்ளீயம் ஆகியவற்றை எப்படி உருவியெடுத்தனர் நம் முன்னோர்கள்?
இந்தக் கதையைத் தெரிந்துகொள்ள அடுத்த வாரம் வரை பொறுத்திருங்கள்.
(தொடரும்)








