வெறும் கை

சில நாள்களுக்கு முன்பு என்னைப் பார்க்க ஒருவர் வந்தார். அவரது ஒரு கண் மட்டும் பால்வெள்ளையாய் இருந்தது. கராத்தே பயிற்சியின்போது ஏற்பட்டது என்று புன்னகைத்தார். எனக்கு சற்றுச் சந்தேகமாக இருந்தது. அதைச் செய்தவன் என்று தனுஷ் மாதிரி ஒரு பையனைக் காட்டியபோது இன்னும் சந்தேகமாக இருந்தது. குறைந்தது சத்யராஜ் மாதிரியாவது எதிர்பார்த்திருந்தேன். ஆனால் கராத்தே பயில தனுஷ் மாதிரி இருந்தால்கூட போதும்தான்.

எல்லாருக்கும் அறிமுகமானது போல் எனக்கும் கராத்தே சினிமாவில்தான் அறிமுகமானது. பாளையம்கோட்டை கலைவாணி தியேட்டரில் ஜெயபாரதி முண்டுடுத்தியும் இல்லாமலும் குளிக்கும் ரதி நிர்வேதங்களுக்கு நடுவே அவ்வப்போது வெளியிடும் சாவலின் வெர்சஸ் லாமா வகைப் படங்களில் அறிமுகமானதுதான் கராத்தே மற்றும் அதைப் போன்ற போர்க் கலைகள். நான் காலையில் ரதி நிர்வேதம் பார்த்துவிட்டு மதியம் ரோட்டோரக் கடையில் காய்ந்த புரோட்டா சாப்பிட்டுவிட்டு புரூஸ் லீயையும் பார்ப்பேன்.

புரூஸ் லீ நடித்த என்டர் ட்ராகன், பிஸ்ட் ஒப் ப்யூரி போன்ற படங்கள்தான் உலகமெங்கும் போர்க் கலைகள் பற்றிய ஆர்வத்தை ஏற்படுத்தின என்று தைரியமாகச் சொல்லலாம். ஆனால் 1930களிலேயே அதைப் பற்றி ஹாலிவுட்டில் படங்கள் வரத் துவங்கிவிட்டன என்றாலும், போர்க் கலைகள் என்று பொதுவாகச் சொன்னாலும் அவை பெரும்பாலும் சீனப் போர்க் கலைகளே. அதுவரை அவை பிரபலம் ஆகாததற்கு வேறு காரணங்களும் இருந்தன.

சீனப் போர்க் கலைகளை, ஆசியர்களைத் தவிர மற்றவர்களுக்குச் சொல்லித் தருவது தடுக்கப் பட்டிருந்தது. புரூஸ் லீக்கே அவர் அம்மா பாதி வெள்ளையர் என்பதால் சொல்லித் தரத் தயங்கினார்கள். புரூஸ் லீ அமெரிக்காவில் மற்ற வெள்ளையர்களுக்குச் சொல்லித் தந்ததையும் கடுமையாக எதிர்த்தார்கள். ஒரு சவால் போட்டியில் அவர் வென்ற பிறகே அவரை அனுமதித்தார்கள் என்பார்கள். இது தவிர சீனாவில் புரட்சியின் ஆரம்பக் கட்டத்தில் பழமையான எல்லா சீனக் கலைகளையும் அவர்கள் வெறுத்தார்கள். அதன் பிறகு மனதை மாற்றிக் கொண்டு அவற்றை வளர்க்கவும் பரப்பவும் முயற்சி எடுத்தார்கள்.

பிஸ்ட் ஒப் ப்யூரி 1971ல் வந்தது. 1972ல் அமெரிக்க ஜனாதிபதி ‘வாட்டர்கேட் புகழ்’ நிக்சன் சீனாவுக்கு விஜயம் செய்தார். அவருடன் பெரிய பத்திரிகையாளர் மற்றும் அறிஞர் கூட்டமும் சென்றது. அங்கு அவர்களுக்கு சீனத்தின் பாரம்பரியப் பெருமைகள் அணிவகுத்துக் காட்டப்பட்டன. எங்களுடன் ஒப்பிடுகையில் நீங்கள் ஒன்றுமே இல்லை, இன்னும் துவங்கக்கூட இல்லை என்பது சூசகம் செய்யப்பட்டது. மயக்க மருந்தே இல்லாமல் அக்கு பங்க்சர் மூலமாக அறுவைச் சிகிச்சை செய்து காட்டப்பட்டது. நிக்சனின் ஒற்றைத் தலைவலியைக்கூட சரி பண்ணியதாகச் சொல்லப் படுகிறது.

நிக்சன் என்றால் நமக்கு ஊழல்தான் நினைவு வருகிறது. ஆனால் இந்த நபர்தான் வியட்நாம் யுத்தத்தை நிறுத்தியவர். சோவியத்துடன் நட்புறவுக்கு முயற்சி செய்தவர். சீனத்துக்கு விஜயம் செய்த முதல் அமெரிக்க ஜனாதிபதி. ரொம்ப மோசமில்லை. ஆள் ரொம்ப இம்ப்ரெஸ் ஆகிவிட்டார். அமெரிக்காவை சீனாவிற்குத் திறந்துவைத்தார். இந்த சீனப் பயணத்தின் மூலமாக சீனாவும் ஓரளவாவது மேற்கிற்கு திறக்கப்பட்டது. ஏற்கெனவே ஜப்பானியத் தொடர்புகள் மூலமாக சீனக் கலைகள்மேல் சற்று ஆர்வம் இருந்தது தீயைப் போல் பற்றிக் கொண்டுவிட்டது. இதற்கு நல்லதொரு வாசலாக இங்கிலாந்தின் கையில் அப்போது இருந்த ஹாங்காங்கில் மேற்கும் கிழக்கும் கைக் குலுக்கிக்கொண்டன. அங்கிருந்து அமெரிக்காவிற்கு சீன உணவிலிருந்து சீனப் படங்கள், சீனக் கலைகள், சீன மருத்துவம் என எல்லாம் ஏற்றுமதியாகின. அவை பெரும் வரவேற்பையும் பெற்றன.

1973 -புரூஸ் லீயின் என்டர் தி டிராகன் வந்தது அவ்வளவுதான் அமெரிக்காவே புரூஸ் லீ ஜுரத்தில் எரிந்தது. நாடெங்கும் போர்க் கலைகளைப் பயிற்றுவிப்பவர்கள் தோன்றி அமெரிக்க மக்களை பெண்டு நிமிர்த்தினார்கள். போர்க் கலைப் படங்கள் வரிசையாக வந்து வசூலை அள்ளிக் குவித்தன. அது இன்றைக்கு அங்கு மில்லியன்கள் புழங்கும் பெரியதொரு வணிகம்.. அங்கு புரூஸ் லீ ஒரு சிறிய தேவன் போல் ஆனார். அவரைப் பற்றி நிறைய புராணங்கள் புனையப்பட்டன. அவரது மரணம்கூட ஒரு பெரிய காவியத்தின் முடிவு போலவே விவரிக்கப் படுகிறது.

இந்தியாவுக்கும் இந்தப் படங்கள் வந்தன. ஏற்கெனவே கர்லாக் கட்டை தூக்கிக் கொண்டிருந்தவர்கள் எல்லாரும் அவற்றைக் கடாசிவிட்டு பைஜாமா அணிந்து கராத்தே கற்றுக் கொல்லப் போனார்கள். எழுத்துப் பிழை இல்லை. கொல்லதான். அமெரிக்க ராணுவம்கூட இவற்றைப் பயின்றது. அமெரிக்காவில் எந்த அலை அடித்தாலும் இந்தியாவிலும் ஒரு பத்து வருடங்களுக்குப் பிறகுதான் அதே அலை அடிக்கும். இப்போது இணையம் சாட்டலைட் எல்லாம் வந்துவிட்டதால் இந்த இடைவெளி குறைந்திருக்கிறது. ஆனால் எந்த ஒரு போக்கையும் ஆரம்பிக்கிறவர்கள் அவர்கள்தான். அவர்கள் பிரான்சிலிருந்து இவற்றைக் கடன் வாங்குகிறார்கள் என்றொரு கிசுகிசுப்பு உண்டு. உண்மையா தெரியவில்லை.

இந்தியாவிலும் கராத்தே அலை புரூஸ் லீயோடு வந்தது. ஒரு தலைமுறையே கராத்தே கற்றுக் கொள்ள முயற்சித்தது – என்னையும் சேர்த்து. போர்க் கலைகளில் பல வகைகள் உண்டு. கராத்தே அதில் ஒரு வகைதான். ஆனால் எல்லாவற்றையுமே கராத்தே என்றே நாம் புரிந்துவைத்திருந்தோம். உண்மையில் ப்ரூஸ் லீ போட்டதே கராத்தே கிடையாது. அவர் அதன் பெயர் ஜி க்வண்டோ என்று சொல்லிக் கொண்டார். வூ சு, குங் பூ என்று பல வகைப் போர்க் கலைகளின் அவியல் இது.

போர்க் கலைகளில் அகிடோ, ஜூடோ, டேக் வண்டோ, குங் பூ, தை சி, சம்போ நிஞ்சா, கராத்தே கெஞ்சு, கெண்டோ எனப் பல வகைகள் உண்டு. பெரும்பாலும் ஆயுதமற்ற சண்டை முறைகள். எனினும் நிஞ்சா, களரி போன்ற ஆயுதச் சண்டை முறைகளும் உண்டு. அதேபோல் சீனக் கலைகள் மட்டுமல்லாது ஜப்பானியக் கொரிய பிரசிலிய இந்திய மரபுக் கலைகள் எனத் தனித்தனியாக உண்டு. கராத்தே ஜப்பானியர்களின் கலை. களரி நம்முடையது.

உண்மையில் மொத்த சமாச்சாரமும் இந்தியாவிலிருந்து போனது என்றொரு கதை உண்டு. அதுவும் தமிழ் நாட்டிலிருந்து போனதாகச் சொல்கிறார்கள்.

போதி தர்மர் என்ற காஞ்சிபுரத் துறவி சீனத்துக்கு மதத்தைப் பரப்பப் போனபோது, அங்கிருந்த பௌத்தத் துறவிகள் எல்லாம் உட்கார்ந்தே தியானம் செய்து செய்து, வட காற்றில் அலையும் சருகுகள் போலிருப்பதைக் கண்டு, ஒரு உடற்பயிற்சியாகவும், அப்போது சீனா முழுக்க சுற்றிக் கொண்டிருந்த கொள்ளைக்கார பிரபுக்களிடமிருந்து பாதுகாக்கும் ஒரு கலையாகவும் இந்தப் பயிற்சிகளைச் சொல்லிக் கொடுத்தார் என்கிறார்கள். இதற்கு நம் பக்கமிருந்து ஓர் ஆதாரமும் கிடையாது. எல்லாம் சீனர்கள் எழுதியதே.

தமிழ்நாட்டில் பௌத்தம் எந்த அளவில் இருந்தது என்பதையே நாம் சரியாகப் பதிவு செய்யவில்லை. தலைவன் தலைவி ஊடல், களவு கற்பு பசலை உசிலை என்றிருந்துவிட்டோம். போதிதர்மர் ஒரு பல்லவ குல இளவரசன் என்றும் போர்க் கலைப் பிராமணர் என்றும் இரு வேறு அனுமானங்கள் உலவுகின்றன. அந்தச் சமயத்தில் சேர தேசத்துப் பிராமணர்கள், களரி வர்மம் போன்ற அடிமுறைகளில் சிறந்து விளங்கினார்கள். பொன்னியின் செல்வனில் ஆதித்திய கரிகாலனைக் கொன்றதாக வரும் ரவிதாசன் கிரமவித்தன் நினைவிருக்கிறதா? அவன் ஒரு கேரள நம்பூதிரியே. காந்தளூர்ச் சாலை என்று அவர்களது படைப் பயிற்சி நிலையத்தை, ராஜ ராஜ சோழன் பின்னாளில் அழித்தான். ஆகவே போதிதர்மர் பௌத்தத்துக்கு மாறிய ஒரு பிராமணனாக இருந்ததற்கு வாய்ப்புகள் உண்டு.

இந்த போதிதர்மர் மஞ்சள் ஆற்றை ஒரு மூங்கில் கீற்று மீது நின்றுகொண்டே கடந்து ஷாவலின் என்ற இடத்துக்குப் போய் ஒரு மடத்தை நிர்ணயித்து அங்கு காந்தளூர்ச் சாலை போலவே ஒரு பெரிய போர்க் கலைப் பயிற்சி நிலையத்தை நிறுவினார். அங்கு அவருக்கு இன்னமும் ஒரு கோயில் இருக்கிறது. அங்கு இன்னமும் அவரது வழியென்று சொல்லும் சீடப் பரம்பரை இருக்கிறது. அடிமுறைகளைச் சொல்லிக் கொடுக்கிறது.

அங்கு மட்டுமல்ல, ஜப்பானிலும் போதி தர்மர் உண்டு. அங்கு போதி தர்மர் தருமா என்றழைக்கப்படுகிறார். நம்மூர் செட்டியார் பொம்மைகளைப் போல் உருண்டையான அவரது சிகப்புப் பொம்மைகள் அங்கு லட்சக்கணக்கில் விற்பனையாகின்றன. அவற்றை வைத்திருப்பதும் பரிசளிப்பதும் அதிர்ஷ்டம் என்று நினைக்கிறார்கள். வருடத்தில் ஒருநாள் இப்படி சேர்ந்த போதிதர்மர் பொம்மைகளை ஓர் இடத்தில் போகி போல் குவித்து எரித்துவிட்டு புது பொம்மைகளை வாங்கிக் கொள்கிறார்கள்.

வேறு அடிமுறைகளும் இந்தியாவில் இருந்தாலும் கராத்தேதான் இந்தியாவில் பிரபலம். அதற்கான தேசிய அளவு போட்டிகள் உண்டு. சிறு நகரங்களில்கூடப் பயிற்சி தருபவர்கள் உண்டு. சிறு வயதிலிருந்தே வருடக் கணக்கில் பயில்பவர்கள் உண்டு. வெள்ளை பெல்ட், மஞ்சள் பெல்ட் என்று ஆரம்பித்து கருப்பு பெல்ட் வரை பல நிலைகள் உண்டு. பெண்களும் பயிலும் போர்க் கலை இது. தெளிவாக வரையறுக்கப்பட்ட பயிற்சி முறைகளும் மூச்சுப் பயிற்சிகளும் உணவு வரையறைகளும் மனப் பயிற்சிகளும் உண்டு.

கராத்தே என்றால் வெறும் கை என்று அர்த்தம். வெறும்கைப்போர் அது. வெறுமனே தாக்குவது மட்டுமல்ல. தாக்கும் முன்பு அவர்கள் செய்யும் கட்டாக்கள் எனப்படும் அசைவுகள் ஒரு நடனத்தைப் போலவே இருக்கும். என் நண்பர் -அவர் ஒரு கருப்பு பெல்ட் மாஸ்டர்-அதை ஒரு வாழ்க்கை முறை என்பார்.

பொதுவாகவே இந்தக் கலைகளில் பௌத்தத்தின் செல்வாக்கு உண்டு. தத்துவ நோக்கு உண்டு. புரூஸ் லீக்கு ஜிட்டு கிருஷ்ண மூர்த்தியின் தத்துவத்தில் எல்லாம் பரிச்சயம் இருந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். என் நண்பர் ஒரு கராத்தே மாஸ்டர் எதற்கும் பதற்றப் படக் கூடாது என்பார். நான் இயல்பிலேயே அதிகம் படபடப்பவன். ஆகவே அதற்கு ஒரு சிகிச்சையாகவே அவர் என்னையும் கராத்தே கற்றுக் கொள்ளச் சொன்னார். ஆசை யாரை விட்டது? ஆனால் நான் முட்டைகூட சாப்பிட மாட்டேனே என்றேன். அது ஒரு விசயமில்லை என்றார் அவர். அவரும் ஒரு சைவ உணவாளர்தான் என்று தெரிந்ததும் எனக்குச் சற்று நம்பிக்கை வந்தது.

முதலில் ஒரு தயாரிப்பாக அவர் இரு சிறிய மணல் மூட்டைகளை என்னிடம் கொடுத்து கையில் கட்டிக் கொண்டு அலையும்படிச் சொன்னார். அது என் கைகளைப் பலப் படுத்த உதவும் என்று சொன்னார். நான் அன்று முழுவதும் அந்த மூட்டைகளோடு திரிந்தேன். அன்றிரவு அந்த மூட்டைகளோடுதான் தூங்கினேன். அன்றிரவு கனவில் சக் நாரிசை (chuck norris – புரூஸ் லீயின் சீடர், நடிகர்) மயிர்க் கூச்செறியும் அலறல்களோடு எகிறி எகிறி மிதித்தேன்.

மறுநாள் காலையில் எழுந்திருக்கும்போது எனது இரண்டு தோள்பட்டைகளையும் தூக்க இயலவில்லை. கடுமையான வலி. இரண்டும் வீங்கி விட்டன. டாக்டரிடம் செல்லவேண்டியதாயிற்று. அதன்பிறகு நான் ஒருபோதும் கராத்தே கற்றுக் கொள்வது பற்றிச் சிந்திக்கவே இல்லை. ஜாக்கி சானின் கராத்தே கிட் படம் பார்த்தபோதுகூட.

தோழர்

அத்தியாயம் 45

பிரான்ஸைச் சேர்ந்த புகழ்பெற்ற பயண நூல் ஆசிரியரான பிரான்கோ பெர்னியர் இந்தியா பற்றிய எழுதிய நூல்களை மார்க்ஸ் வாசித்தார். பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் இந்தியாவைப் பற்றியும் பிற காலனி நாடுகளைப் பற்றியும் நடைபெற்ற விவாதங்களின் மூலம் பல விஷயங்களைத் தெரிந்துகொண்டார். அந்தச் சமயத்தில் மார்க்ஸிடம் ஐரோப்பிய மையவாதக் கண்ணோட்டம் தென்பட்டதாக பல ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். மேற்கு ஐரோப்பிய நாடுகளில் மக்கள் புரட்சி ஏற்படும் என்றும் அதற்கு காலனி நாடுகள் பங்களிக்கும் என்றும் மார்க்ஸ் அப்போது நினைத்திருந்தார். ஆனால், இந்த எண்ணம் சிறிது சிறிதாக மாற்றம் கண்டது.

மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸின் வாழ்க்கையை, புலம்பெயர்ந்த வாழ்க்கை என்றுதான் இன்றைய சூழலில் நாம் புரிந்துகொள்ளவேண்டும். அயர்லாந்து, இந்தியா போன்ற பிரிட்டனுக்கு உட்பட்டிருந்த நாடுகளைப் பற்றி மார்க்ஸும் எங்கெல்ஸும் தெரிந்துகொண்டது பிரிட்டனில் இருந்தபோதுதான். ஒரு முதலாளித்துவ நாடு எப்படி வளம் பெற்று, பலம் பெற்று உருபெருகிறது என்பதையும் அதற்கு காலனி நாடுகளின் பங்களிப்பு என்ன என்பதையும் பிரிட்டனிடம் இருந்தே அவர்கள் கற்றுக்கொண்டனர்.

இந்தியாவின் பண்டைய வரலாற்று, சமூக நிலைகளை, ‘இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி’, ‘இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் எதிர்கால விளைவுகள்’ ‘கிழக்கிந்திய கம்பெனி : வரலாறும் விளைவுகளும்’ஆகிய கட்டுரைகளில் மார்க்ஸ் ஆழமாக அலசினார். பிரிட்டிஷ் ஆட்சியின் விளைவாக இந்தியாவில் ஏற்பட்ட சமூக, அரசியல், பொருளாதார மாற்றங்களை மார்க்ஸ் ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டு விவாதித்தார். மார்க்ஸுக்கு முன்பு, ஹெகல் போன்றவர்கள் இந்தியாவைப் பற்றி எழுதும்போது, இந்தியாவின் சமயங்கள் பற்றியே எழுதினர். மத இலக்கியங்கள் மூலமே அவர்கள் இந்தியாவையும் அதன் சிக்கல்களையும் புரிந்துகொண்டனர். நேர் எதிராக, மார்க்ஸின் சிந்தனைப் போக்கு, இந்தியாவின் கிராமப்புறங்களில் இருந்து தொடங்குகிறது. இந்தியாவைப் புரிந்துகொள்ளவேண்டுமானால் முதலில் அதன் கிராமங்களைப் புரிந்துகொள்ளவேண்டும் என்றார் மார்க்ஸ்.

ஒரு கட்டுரையில், இந்தியாவின் புவியியல் பரப்பை இத்தாலியோடு ஒப்பிடுகிறார் கார்ல் மார்க்ஸ். இத்தாலிக்கு ஆல்ப்ஸ் இருப்பது போல் இந்தியாவுக்கு இமயமலை. இத்தாலிக்கு சிஸிலித் தீவு போல் இந்தியாவுக்கு இலங்கை. இத்தாலிக்கு அப்பினைன்கள் போல் இந்தியாவுக்கு தக்காணம். ‘இத்தாலியைப் போல் இந்தியாவின் பூமியும் பலவகைப்பட்ட பொருள்களை அளிக்கிறது. இத்தாலியைப் போல் இந்தியாவும் அரசியல் ரீதியில் துண்டாடப்பட்டிருக்கிறது.’

அரசியல் ரீதியில் இத்தாலியைப் போலவே இந்தியாவும், ‘முகலாயர் அல்லது பிரிட்டிஷார் நிர்பந்தத்துககு உட்பட்டிராத பொழுது, பலப்பல சுயேச்சையான ராஜ்யங்காளச் சிதறிக் கிடந்தது. எத்தனை நகரங்கள் உள்ளனவோ அத்தனை ராஜ்யங்களாக உடைந்தது. அல்லது எத்தனை கிராமங்கள் உள்ளனவோ அத்தனை ராஜ்யங்களாகக் கூடக் கரைந்தது. அவை சுயேச்சையாக இருந்தன. ஒன்றோடொன்று மோதிக்கொண்டும் நின்றன. எனினும் சமுதாயக் கோணத்தில் இருந்து பார்த்தால், இந்துஸ்தான் கீழ்த் திசையின் இத்தாலியல்ல. கீழ்த்திசையின் அயர்லாந்து ஆகும்.’

முகலாயர்கள் உள்பட பலர் இந்தியாவை ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்றாலும் ‘இதற்கு முன்னால் இந்துஸ்தானம் பட்ட துன்பத்திலிருந்து சாராம்சத்தில் மாறுபட்டதும், அதைவிட மிகமிக உக்கிரமானதுமான துன்பம் பிரிட்டிஷாரால் இந்துஸ்தானத்துக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதில் எத்தகைய சந்தேகமும் இருக்கமுடியாது.’

இந்தியாவை பிரிட்டன் இரண்டு வழிகளில் ஆக்கிரமிக்கிறது என்றார் எங்கெல்ஸ். நிதியைக் கொள்ளையடிப்பது வாயிலாக. போர் மூலமாக. ‘இந்தியாவில் வேளாண்மை நலிந்துவிட்டது. விவசாயம் சீரழிந்துவிட்டது.’ ஆனால், பிரிட்டன் எதுபற்றியும் கவலைப்படாமல், கொள்ளையடிப்பதில் மட்டுமே ஈடுபட்டு வந்தது என்றும் பொதுப் பணிகளிலும் முன்னேற்றத்திலும் அது கவனம் செலுத்தவில்லை என்றும் எங்கெல்ஸ் குறிப்பிட்டார். இந்தியா பற்றிய தன் எண்ணத்தை எங்கெல்ஸ் மார்க்ஸுக்கு கடிதம் வாயிலாகத் தெரிவித்தார். மார்க்ஸ் தன் கட்டுரைகளில் எங்கெல்ஸின் கருத்துகளை உபயோகித்துக்கொண்டார்.

1702ம் ஆண்டு தொடங்கி 1813 வரை, கிழக்கிந்திய கம்பெனி நேரடியாக இந்தியாவின் வளங்களை உறிஞ்சிகொண்டது. லட்சக்கணக்கான பவுண்டுளை இந்நிறுவனம் பிரிட்டனுக்குக் கொண்டு சென்று சேர்த்தது. மாபெரும் சந்தையாகவும் இந்தியாவைப் பாவித்து, தம் பண்டங்களைக் கொண்டு வந்து கடை பரப்பியது பிரிட்டன். எங்கெல்ஸ் குறிப்பிட்டது போல் விவசாயமும் கைத்தொழிலும் பாதிக்கப்பட்டதைக் கண்டு கிழக்கிந்திய கம்பெனியும் பிரிட்டனும் கவலைப்படவில்லை. இங்கிலாந்தின் இயந்திரமயமாக்கலால் இந்தியா அடைந்த துன்பத்துக்கு இணையாக வரலாற்றில் இன்னொன்றைக் காண்பது அரிது என்றார் மார்க்ஸ்.

விக் கட்சி மூலம் இங்கிலாந்தில் முதலாளித்துவம் பதவிக்கு வந்தது. 1813 தொடங்கி முதலாளிகள் இந்தியாவைப் படையெடுக்க ஆரம்பித்தனர். இந்தியா சீரழிய ஆரம்பித்தது அதற்குப் பிறகுதான். இந்தியப் பொருளாதாரத்தின் அடித்தளமாக விளங்கிய அதன் கிராமங்கள் சீரழிய ஆரம்பித்தன. 1850ல் இங்கிலாந்தின் ஏற்றுமதியில் எட்டில் ஒரு பங்கு இந்தியாவுக்குச் சென்றது. துணி ஏற்றுமதியில் நான்கில் ஒரு பங்கு இந்தியாவுக்கு அனுப்பப்பட்டது.

நவீன இந்தியாவை இரண்டு காலகட்டமாகப் பிரித்துக்கொண்டார் மார்க்ஸ். கிழக்கிந்திய கம்பெனியின் கீழ் இந்தியா. பிரிட்டனின் நேரடி ஆட்சியின் கீழ் இந்தியா. இந்த இரு காலகட்டங்களிலும் இந்தியா எத்தகைய மாற்றங்களைச் சந்தித்தது என்பதை மார்க்ஸ் விவரித்தார். தொடர்ந்து ஒடுக்குமுறைக்கு உள்ளாகிவரும் இந்தியச் சமூகம் நிச்சயம் ஒருநாள் கிளர்ந்து எழும் என்று மார்க்ஸ் நம்பினார்.

1857ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற புரட்சி, மார்க்ஸையும் எங்கெல்ஸையும் புதிய வழித்தடத்தில் சிந்திக்கவைத்தது. ‘புரட்சியில் ஈடுபட்ட சிப்பாய்களின் செயல் திகைக்க வைக்கிறது, சொல்லொணா மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது’ என்று பூரித்துப்போனார் மார்க்ஸ். சிப்பாய் புரட்சி ‘மிக இயல்பான ஒரு நிகழ்வு’ என்றும் குறிப்பிட்டார். பிரிட்டன் இந்தியாவுக்கு என்ன செய்ததோ அதற்கு பதிலடிதான் இது என்றார். பிரெஞ்சு முடியரசுக்கு எதிராக அன்று பிரபுக்கள் கிளர்ந்தெழுந்தார்கள். இன்று பிரிட்டனுக்கு எதிராக இந்தியப் பிரபுக்கள் அல்ல ராணுவத்தினரே திரண்டுள்ளனர். ‘பிரிட்டனால் பாராட்டி, சீராட்டி, கவனிக்கப்பட்டு வந்த அதே ராணுவம் இன்று புரட்சி மூலம் கிழக்கிந்திய நிறுவனத்தைத் தூக்கி அடித்துள்ளது’. மேலும், ‘ஐரோப்பியர்கள் அவர்களது வரலாற்றில் செய்யாத கொடூரங்கள், சித்திரவதைகள், அழிமானங்கள் எதையும் இந்தியச் சிப்பாய்கள் செய்துவிட்டார்களா, என்ன?’

நவம்பர் 1857 தொடங்கி செப்டெம்பர் 1858 வரை, இந்தியாவின் ராணுவப் போக்குகள் குறித்தும் செயல்திட்டங்கள் குறித்தும் ‘கைப்பற்றப்பட்ட டெல்லி’, ‘இந்தியாவில் புரட்சி’ உள்ளிட்ட தலைப்புகளில் பல கட்டுரைகள் எழுதினார் எங்கெல்ஸ். அடக்குமுறைக்கு எதிராக சிப்பாய்கள் திரண்டு நின்று எதிர்த்ததை எங்கெல்ஸ் உளப்பூர்வமாக ஆதரித்தார். மார்க்ஸுக்கு எழுதிய கடிதங்களிலும் தொடர்ந்து இந்தியாவைப் பற்றி எழுதினார் எங்கெல்ஸ். எங்கெல்ஸின் ஆர்வத்தையும், துடிப்பான பார்வையையும், எழுத்து நடையையும் மார்க்ஸ் வெகுவாக சிலாகித்தார்.

சிப்பாய் புரட்சி அடக்கப்பட்டது பற்றி எங்கெல்ஸ் தெரிவித்த கருத்து முக்கியமானது. ‘இது இரண்டாவது ஆக்கிரமிப்பு. இதன்மூலம் இந்தியாமீதான தன் பிடியை இறுக்கிக்கொண்டதாக இங்கிலாந்து கருதமுடியாது. இந்தியர்களின் உள்ளத்தை இங்கிலாந்தால் ஆக்கிரமிக்கமுடியாது.’ பிரிட்டனின் காலனியாதிக்கத்தின் மீதான ‘இந்தியர்களின் வெறுப்பு இந்த இரண்டாவது ஆக்கிரமிப்பின்மூலம் இரட்டிப்பாகுமே ஒழிய குறையாது.’ பிரிட்டனின் ஆட்சி தீவிர விளைவுகளைச் சந்திக்கப்போகும் நேரம் நெருங்கிவிட்டது என்று எச்சரித்தார் எங்கெல்ஸ்.

இந்தியாவைப் போலவே சீனாவும் மார்க்ஸின் சிந்தனையில் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியது. 1850ல் இருந்தே சீனாவை கவனிக்க ஆரம்பித்துவிட்டார் மார்க்ஸ். காரணம், தைபிங் புரட்சி. 1850 தொடங்கி 1864 வரை நீடித்த தைபிங் புரட்சி, சீனாவை உலுக்கியெடுத்தது. தெற்கு சீனாவில் தொடங்கிய விவசாயிகளின் எழுச்சி, 10 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளைத் திரட்டியதோடு மட்டுமல்லாமல் அவர்களை ஆயுதபாணியாக்கவும் செய்தது. அதன் விளைவாக உள்நாட்டு யுத்தம் மூண்டது. நிலத்தைப் பங்கீடு செய்யவேண்டும் என்னும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. முடியாட்சிக்கு எதிரான நிலமற்ற விவசாயிகளின் போராட்டமாக இதனை சிலர் கண்டனர். தைபிங் போராட்டத்தில் கம்யூனிசக் கூறுகள் தென்பட்டதாகவும் சொல்லப்பட்டது. பிரான்ஸ் மற்றும் பிரிட்டிஷ் ராணுவத்தின் உதவியுடன் சீனா இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தபோது, கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

மீண்டும் பிரெஞ்சுப் புரட்சியோடு இதனை ஒப்பிட்டார் மார்க்ஸ். இதோ கிழக்கில் ஒரு பிரான்ஸ் என்று ஆச்சரியக் குரல் எழுப்பினார். ‘ஐரோப்பாவின் புரட்சிகரப் போராட்டங்களுக்குப் பயந்து கிழக்கு நோக்கித் தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடும் ஐரோப்பியப் பிற்போக்குவாதிகள், கிழக்கில் சீனப் பெருஞ்சுவரைச் சென்று சேரும்போது அச்சுவரில் சீனக் குடியரசு: சுதந்திரம், சமத்துவம், சகோதரத் துவம் எனப் பொறிக்கப்பட்டிருப்பதைக் காண் பார்கள்!’ என்று எழுதினார் மார்க்ஸ். தைபிங் புரட்சியை, தேசிய யுத்தம் என்றும் அவர் வருணித்தார்.

இந்தியா, சீனா இரண்டும் மார்க்ஸுக்கும் எங்கெல்ஸுக்கும் உணர்த்திய பாடம் இதுவே. காலனிகளாக்கப்பட்டு அவமதிக்கப்பட்ட மக்கள் எதிர்த்துப் போராடும்போது, அப்போராட்டங்களில் வெளிப்படும் வன்முறையில் வரலாற்றுரீதியான நியாயம் உள்ளது.  1858 ஜனவரி 16 அன்று மார்க்ஸ் எங்கெல்சுக்கு எழுதிய கடிதத்தில் இடம்பெரும் ஒரு வரி இது. ‘இப்போது இந்தியாவே நமது மிகச் சிறந்த கூட்டாளி!’

(தொடரும்)

0

மருதன்