ஒரு கல் ஒரு கண்ணாடி

’குருவே, எங்களுக்கு ஒரு சந்தேகம்!’

தன்முன்னே வந்து நின்ற மாணவர்களைக் கனிவோடு பார்த்தார் அந்த ஜென் மாஸ்டர். ‘என்னப்பா சந்தேகம்?’ என்று விசாரித்தார்.

‘உங்களிடம் பல பேர் படிக்க வருகிறார்கள். அவர்களில் சிலருக்குச் சீக்கிரமாக ஞானம் கிடைத்துவிடுகிறது. சிலர் வருடக்கணக்கில் போராடுகிறார்கள். அது ஏன்?’ என்று கேட்டான் ஒரு மாணவன்.

‘இன்னொரு சந்தேகம், அடிமுட்டாள்களாக இங்கே வருகிறவர்கள்கூட ஞானம் பெற்றுவிடுகிறார்களே, அவர்களுக்கு ஞானம் எங்கிருந்து கிடைக்கிறது? நீங்கள்தான் அதை வாங்கி அவர்களுக்குள் பொருத்துகிறீர்களா?’

குரு மெல்லச் சிரித்தார். ‘உங்களுக்கு ஒரு கதை சொல்றேன்’ என்று ஆரம்பித்தார்:

அந்தக் காலத்தில ஒரு மல்யுத்த வீரன். அவன் நெத்தியில ஒரு பெரிய ஆபரணத்தை அணிஞ்சுகிட்டுதான் சண்டைக்குப் போவான், எப்பேர்ப்பட்ட வீரனா இருந்தாலும் எதிர்த்துப் போராடி அவங்களை ஜெயிச்சுடுவான்.

ஒருநாள், வழக்கம்போல அவன் யாரோடயோ சண்டை போட்டுகிட்டிருந்தான். அப்போ அந்த இன்னொரு மல்யுத்த வீரன் இவனோட முகத்தில ஒரு குத்து விட்டான். அந்த ஆபரணம் பிச்சுகிட்டுப் போயிடுச்சு. நெத்தியில பெரிய காயம், ரத்தம் கொடகொடன்னு கொட்டுது.

‘உடனே, எல்லாரும் அவனை மருத்துவர்கிட்ட கூட்டிகிட்டுப் போனாங்க. அவர் சிகிச்சையை ஆரம்பிச்சார்.’

அப்போ அந்த மல்யுத்த வீரன் ரொம்பக் கவலையோட இருக்கறதைப் பார்த்த மருத்துவர் விசாரிச்சார். ‘என்னப்பா? இவ்ளோ பெரிய வீரன் இந்தச் சின்ன காயத்துக்குக் கலங்கலாமா?’

’நான் காயத்தைப்பத்திக் கவலைப்படலை’ன்னு அந்த மல்யுத்த வீரன் சொன்னான். ‘நான் என் நெத்தியில அணிஞ்சுகிட்டிருந்த அந்த நகையில ஒரு பெரிய ரத்தினம் இருந்தது. அது எனக்கு ரொம்ப ராசியானது. அதைத் தொலைச்சுட்டோமே-ன்னுதான் வருத்தப்படறேன்.’

மருத்துவர் சிரித்தார். ‘கவலைப்படாதே, அந்தக் கல் உன்கிட்டதான் இருக்கு. நெத்தியில ஏற்பட்ட காயத்துக்குள்ளே ரத்தினம் புதைஞ்சு கிடக்குது. இன்னும் கொஞ்ச நேரத்தில அதை வெளியே எடுத்து உனக்கே கொடுத்துடறேன்.’

இந்தக் கதையைச் சொன்ன ஜென் குரு முத்தாய்ப்பாக இப்படிச் சொல்லி முடித்தார். ‘இங்கே வர்ற எல்லாரும் தங்களுக்குள்ளே ஒரு விலைமதிக்கமுடியாத கல் இருக்கறதைக்கூட அறியாதவங்களா இருக்காங்க. நான் அந்த ரத்தினத்தை வெளியே எடுத்து அவங்களுக்கு அறிமுகப்படுத்தறேன். அவ்வளவுதான்!’