பேசாதே!

ஒரு பெரிய அறிஞர். அவருக்கு ஜென் கற்க ஆசை. ஒரு குருவைத் தேடி வந்தார். வணக்கம் போட்டார். விஷயத்தைச் சொன்னார்.

அவர் பேசுகிறவிதத்தை ஊன்றிக் கவனித்த குருநாதர் சொன்னார். ’இதோ பாரப்பா, உன் மனசு ஒரு நிலையில் இல்லை. நீ ரொம்பக் குழம்பியிருக்கிறாய். இப்போது
நான் உனக்கு ஜென் சொல்லிக்கொடுத்தால் பிரயோஜனம் இருக்காது. அநாவசியமாக நம் இருவரின் நேரமும் வீணாகும்.’

இதைக் கேட்ட அறிஞரின் முகம் சுருங்கிவிட்டது. ’குருவே, நீங்களே இப்படிச் சொன்னால் நான் எங்கே போவேன்?’ என்று அழாக்குறையாகக் கெஞ்சினார்.  ‘எப்படியாவது நீங்கதான் எனக்கு உதவி செய்யணும். என் மனசில இருக்கற
சந்தேகங்களைத் தீர்த்துவைக்கணும்.’

‘சரி. உன்னை நான் சிஷ்யனா ஏத்துக்கறேன். ஆனா ஒரு நிபந்தனை.’

‘சொல்லுங்க குருவே!’

‘இங்கே நீ ஆறு மாசம் மௌன விரதம் இருக்கணும்.’

’மௌன விரதமா?’ வந்தவர் அதிர்ந்தார். ’அப்புறம் அப்படி நான் என்னோட
சந்தேகங்களைக் கேக்கறது?’

’அதையெல்லாம் மனசுல குறிச்சுவெச்சுக்கோ. எல்லாத்துக்கும் நான் பதில் சொல்வேன். ஆனா இப்போ இல்லை. 6 மாசம் கழிச்சுதான்.’

அறிஞருக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் வேறு வழியில்லாமல் சம்மதித்தார். ஆசிரமத்தில் சேர்ந்தார். மௌன விரதத்தைத் தொடங்கினார்.

அடுத்த பல மாதங்கள் அவருடைய நேரம்முழுவதும் தியானம், பிரார்த்தனை, வாசிப்பு, குருவின் சொற்பொழிவுகளைக் கேட்பது என ஓடியது. மெல்ல அவரது மனம்
தெளிந்தது. முன்பு குழப்பியடித்த விஷயங்கள் இப்போது நிதானமாக யோசித்தபோது புரிந்தன.

ஆறு மாதங்கள் முடிந்தன. குரு அவரை அழைத்தார். ’நீ மௌன விரதம் இருந்தது போதும். இப்போது உன் கேள்விகளைக் கேட்கலாம்.’

அறிஞர் அமைதியான குரலில் சொன்னார். ’கேட்பதற்கு ஒன்றும் இல்லை குருவே!’

அல்வா

அத்தியாயம் 9

ரெனே பெட்டியை மூட பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தான். மோனிகா கம்ப்யூட்டரில் இருந்து பிரிண்ட் அவுட் எடுத்துக்கொண்டிருந்தாள்.

“ இந்தா டிக்கட்.. இவ்வளவு நாள் உன்னை கண்டுகொள்ளக்கூட இல்லை. இப்போது கூப்பிடுகிறார்கள் என்று அவசரமாக ஓடுகிறாயே..”

“சாதாரண நேரமாக இருந்தால் நானும் விளையாட்டு காட்டியிருப்பேன் மோனி. இப்போது பெரியவர்தான் முக்கியம். அலெக்குக்கு தண்ணி காட்டுவது ப்ரையாரிட்டி இல்லை. என்னுடைய விக்கை எடுத்து வைத்திருக்கிறாயா?”

“என்ன மாறுவேஷமா போடப்போகிறாய்?”

“தொழில் அப்படி. தேவைப்பட்டாலும் படும். எல்லாவற்றுக்கும் தயாராக இருக்கவேண்டும். நான் சிராக்கூஸ் போனதும் அடுத்த ஸ்டாப் எது என்று உனக்குத் தெரிவிக்கிறேன். நீ கிளம்பிவிடு”

“உன் நண்பன் இருக்கிறானாமே ஏற்கனவே” நண்பன் இல் சிறப்பு அழுத்தம் கொடுத்தாள் மோனி.

“திஸ் இஸ் மை சான்ஸ். அவனுடைய இடம் எது என்று தெரியவைக்க சரியான சந்தர்ப்பம். ஆனால்.. மைண்ட் இட்.. மீக் முட்டாள் இல்லை. நம்பர் டூ, யெஸ், ஆனால் நிச்சயமாக முட்டாள் இல்லை.”

”முட்டாள் இல்லை. முட்டாளாக இருந்தால் சாமர்த்தியமாக உன்னை அழுத்திவிட்டு மேலேறி இருக்க மாட்டான்”

“தப்பு என்னுடையது. அவனை ரொம்ப நம்பிவிட்டேன்.”

ரெனேவுக்கு நினைக்கையிலேயே அடிவயிற்றில் கோபம் சுரந்தது. எட்டு ஆண்டுகள் ஆனாலும் ஆறாத வடு.  மீக் அணிந்திருந்த க்ரே கலர் சூட் கூட நினைவிருந்தது.

“ஹாய் ரெனே.. நீ என்னைச் சொன்னதெல்லாம் செஞ்சுட்டேன். அந்த டெக்னிகல் மேனேஜர் நல்ல ஆளாத்தான் தெரியறான். ஹீ இஸ் நாட் அ மோல்.”

“ஃபார் ஃப்ரம் இட்! அவன் ஒரு திருடன். நல்லவனா தெரியறான்னா அதுக்கு ஒரே காரணம் இன்னும் சான்ஸ் கிடைக்காததுதான். அவனுக்கு ட்ரேட் சீக்ரட் அக்சஸ் கிடைச்சுதுன்னா முதல் வேலையா வித்துடுவான்” இவன் ஏன் இவ்வளவு அவசரமாக முடிவெடுக்கிறான்? என்னிடமே நடிக்கிறானா?

”எப்படி சொல்றே?”

“எம் டி ஓ.. மிஸ்ட்ரஸ்ட் த ஆப்வியஸ்.. வெளிப்படையா தெரியறதை நம்பாதே மீக். நீ அந்த ஆளை ஃபாலோ பண்ணே, அவனோட பழைய எம்ப்ளாய்மெண்ட் ரெக்கார்ட் எல்லாத்தையும் செக் பண்ணே.. ஆனா நான் எடுத்துகிட்டது அவனோட ஃபைனான்ஷியல் நிலவரத்தை”

“அதுல என்ன தெரிஞ்சுது?”

“தலைவருக்கு தலைக்கு மேலே கடன். உடனடியா பணம் தேவைப்படுது. லோன் ஷார்க் கிட்ட மாட்டி இருக்கான். ரேஸா, நம்பர் கேமா தெரியலை. பணத்தை கச்சாமுச்சான்னு விட்டிருக்கான். எல்லாம் ரீசண்டா நடந்தது”

மீக் விசிலடித்தான். “நீ சொல்றது சரியா இருக்கலாம் ரெனே.. இருக்கலாம் என்ன.. இருக்கும்! ஆனா எப்படி கன்ஃபார்ம் பண்றது?”

“எனக்கு இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு. இவனோட காம்படிஷன் கம்பெனி காண்டாக்ட் பாரிஸ்லே இருக்கான். அவனைப் பத்தி கொஞ்சம் விவரம் கலெக்ட் பண்ணனும். ரெண்டு நாள். திரும்பி வந்து முடிவெடுக்கலாம்”  இவனைக் கொஞ்சம் கவனிக்க வேண்டும். சப்பை மேட்டருக்கும் என்னைக் கேட்கிறான். எதற்கெடுத்தாலும் என்னுடன் சண்டை போடுபவன் இவ்வளவு நல்லவனாக ஆனது எப்போதிருந்து?

இரண்டு நாட்களில் ரெனே திரும்பி வந்தபோது அவன் சந்தேகம் ஊர்ஜிதமானது.  க்ளையண்ட் வாயெல்லாம் பல்லாக வரவேற்றார். “உங்க கம்பெனி ஒரு ஜீனியஸ் கம்பெனி. அதுவும் பர்டிகுலரா மிஸ்டர் மீக் ரிப்பர்!”

ரெனே புரியாமல் விழித்தான்.

“சிம்பிள் ஐடியா.. சில ஃபேக் டாகுமெண்ட்ஸுக்கு அந்த டெக் மேனேஜருக்கு அக்சஸ் கொடுத்தார். ஒரே நாள்லே அது வெளியே போனதை ப்ரூவ் பண்ணிட்டார். அவன் இப்போ ஜெயில்லே”

மீக் ரெனேவைப் பார்த்துப் புன்னகைத்தான். “இவருக்கும்தான் க்ரெடிட் போகணும் சார்”

வெளியே வந்ததும் மீக் சொன்னான் “ரெனே.. ஐ அம் க்விட்டிங். இந்த கம்பெனி சி ஈ ஓக்கு என் வேலை ரொம்ப பிடிச்சுருச்சாம். செக்யூரிட்டி கன்சல்டண்டா வரச் சொன்னார்”

“உன் வேலை?”

“அட் லீஸ்ட் அந்த லாஸ்ட் ஐடியா என்னுடையதுதானே?”

“கெட் லாஸ்ட் மீக்.. குட் ரிட்டன்ஸ்” ரெனேவால் கோபத்தை மறைக்க முடியவில்லை.

இப்போதும் அந்தக்கோபம் கொஞ்சமும் ஆறவில்லை. மீக்.. வருகிறேன். இதில் ப்ரூவ் செய்கிறேன் யார் நிஜமான பெஸ்ட் என்று..

***

”நிஜமான பெஸ்ட்தான் வேண்டும் என்றால் ப்ராஜக்ட் வேல்யூ அதிகரிக்கதான் செய்யும் “ ரவி சோஃபாவில் அமர்ந்திருந்தான். ஐஸ் ரிங்க்கின் நடுவே போட்டிருந்த ரெஸ்டாரண்டில் இசையின் சப்தத்துக்கு மேல் பேசவேண்டி இருந்தது.

மீக் அமைதியாக இருந்தான். லென்னிதான் ரவியிடம் விஷயம் புரியாமலே பேசிக்கொண்டு இருந்தான்.

“சினிமா எடுக்கவே இவ்வளவு செலவு ஆகாதே”

“நீங்கள் கார்ப்பொரேட் ஆசாமி. உங்களுக்கு சினிமா நிலவரம் தெரியாமல் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. அண்ட், திஸ் இஸ் நாட் சினிமா. விளம்பரமும் கிடையாது. இது ஒரு யுனிக் ஆர்ட். ப்ரமோஷனல் வீடியோக்களில் எங்கள் நிறுவனம்தான் பெஸ்ட். ஃபார்ச்சூன் 500லேயே பத்து கம்பெனிக்கு மேலே எடுத்துத் தந்திருக்கோம்.”

மீக் லென்னியைப் பார்த்த பார்வையில் மேட்டருக்கு வாடா இருந்தது.

“ஓக்கே மிஸ்டர் ராவி. ரூமுக்கு வருகிறீர்களா, எங்கள் கார்ப்போரேட் ப்ரமோஷனல் ப்ரோஷர்ஸ் தரோம்”

ஐஸ்ரிங்க் குழந்தைகள் சரேல் சரேல் என வழுக்கிக் கொண்டிருந்ததைப் பார்த்துக்கொண்டே எழுந்தார்கள். நடக்கும் வழி எல்லாம் ரவி தன் பிரதாபங்களை அளந்து கொண்டிருந்தான். “நாளைக்கு கூட ஏகே கார்ப்போரேட் ஷூட்டிங்குக்காக நடுக்கடல் ஆயில் ரிக்குக்கு போறோம். நடு டிஸர்ட், காட்டுக்கு நடுவுல.. படம் எடுக்காத இடமே பாக்கி இல்லை”

ரூமுக்குள் நுழைந்ததும் மீக் முதல் முறையாக பேசினான். “இவரை ஏற்கனவே பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன்”

ரவிக்கு பேச்சு வரவில்லை. இவன் எங்கே இங்கே? காஃபி ஷாப்பில் பார்த்தவன், எதிர் ரூமில் கேமரா சகிதம் நின்றிருந்தவன்.

“டைரக்டர் பேசமாட்டார் போல. இவ்வளவு நேரம் நிற்காமல் பேசிக்கொண்டிருந்தாரே” சிரித்தான் லென்னி.

“நீங்களெல்லாம் யார்? படம் எடுக்கறதைப் பத்தி பேச வரச் சொல்லலைன்னு மட்டும் தெரியுது”

“ஷார்ப்பாதான் இருக்கீங்க. யெஸ். நீங்க படம் எடுக்கவேண்டாம். நாங்க கொஞ்சம் எடுத்திருக்கோம், அது பத்தி உங்க எக்ஸ்பர்ட் ஒப்பினியன் தேவைப்படுது” லென்னியின் சோர்ஸ் பையில் இருந்து சில படங்களை எடுத்து டேபிள் மேல் போட்டான்.

”தெளிவாக எடுத்திருக்கிறாயே” லென்னி புகழ சோர்ஸ் கூச்சமானான்.

“இந்த ஃபோட்டோக்களுக்கு நல்ல டிமாண்ட் இருக்கும். இங்கேயே கலீல் இந்த ஃபோட்டோக்களைப் பார்த்தால் உன்னைக் கொலையே செய்வான். தேடிப்பிடித்து கல்யாணம் செய்துகொண்டான் பார் ஒரு நடிகையை. ஆனால் முக்கியமாக மும்பையில் உன் மனைவிக்கு இந்த ஃபோட்டோக்களில் ரொம்பவே இண்டரஸ்ட் இருக்கும். டைவர்ஸ் பேப்பர்ஸோடு இதையும் சேர்த்தால் உன்னை நடுத்தெருவுக்குக் கொண்டுவந்து விடலாம். அந்த ஆசையில்தானே டிடெக்டிவ் ஏஜென்ஸியே உள்ள நுழைஞ்சுது..”

ரவி யோசித்தான். மும்பை மனைவியின்மீது கட்டுக்கடங்காத கோபம் வந்தது. என்ன குறை வைத்தேன் உனக்கு. டைவர்ஸ் ஆகும்போது ஒழுங்காக செட்டில் செய்திருப்பேனே.. ஏன் என்னை பிச்சைக்காரனாக்க வெறி.

”அடுத்து என்ன?” என்றான் லென்னி.

மீக் கனைத்தான். “சார் யோசிப்பார். நீ ஏன் கவலைப்படறே?”

ரவிக்கு பேச்சு வரவில்லை. என் மனைவி டிடெக்டிவ் ஏஜன்சி வைத்தாள் என்றால் ரிப்போர்ட் அங்கே போகவேண்டியதுதானே? இவர்கள் ஏன் என்னுடன் பேசவேண்டும்? திக்கியது. இருந்தாலும் கேட்டான். “இதை ஏன் என் மனைவியிடம் சொல்லாமல்..”

“என்னவோ நினைத்தேன் உங்களை. ரொம்பவே ஷார்ப். ஐ லைக் டீலிங் வித் ஸ்மார்ட் மென். யெஸ். காரணம் இருக்கிறது”

“என்ன காரணம்?”

மீக் சட்டையில் இருந்து இன்னொரு ஃபோட்டோவை எடுத்தான். “இவர் பெயர் டெர்ரி. அமெரிக்காக்காரர். இப்போது காணவில்லை. எங்கே இருப்பார் என்று தெரிந்த ஒரே ஆள் கலீல். அவரை எங்களால் நேரடியாக அணுக முடியாது. அங்கேதான் உன் உதவி வேண்டும்”

ரவி குழப்பமானான். “புரியவில்லை”

***

“புரியவில்லை” என்றான் அமீர்.

“இதில் புரிவதற்கு என்ன இருக்கிறது? நீ, உன்னை வேலைக்கு அமர்த்திய உன் பாஸ் எல்லாரும் முட்டாள்கள் என்றேன்” டெர்ரி கட்டிலில் எழுந்து அமர்ந்திருந்தார். கொஞ்சம் களைப்பாகத் தெரிந்தாலும் சௌகர்யமாகத்தான் இருந்தார்.

“நான் ஒரு விஞ்ஞானி, ஓக்கே. சாலிஸ்க்காக வேலை செய்கிறேன், ஓக்கே. ஆனால் என் ஆராய்ச்சியின் காபிரைட் எனக்குதான். சாலிஸுடன் என் காண்ட்ராக்ட் ரொம்ப சிம்பிள். என் ரிசர்ச்சுக்காக அவர்கள் செலவிடும் தொகையை என் கண்டுபிடிப்பின் மூலமோ, அல்லது கேஷாகவோ செட்டில் செய்யவேண்டும் – அஃப் கோர்ஸ் வித் அ பெனால்டி.. என்னை ஏன் கடத்திக் கொண்டு வர வேண்டும்? எனக்கு நல்ல காம்பன்சேஷன் செய்வதாகச் சொல்லி இருந்தால் நானே பேகை எடுத்துக்கொண்டு வந்திருப்பேனே..ஏன் அனாவசிய ரிஸ்க்?”

”அதானே பாஸ்! இவ்வளவு சிம்பிளான வழியை ஏன் ஏகே தேர்ந்தெடுக்கவில்லை?” டேனிக்கும் குழப்பம்.

அமீர் குழம்பவில்லை. “டேனி, அமைதியா இரு. இந்த ஆள் நம்மை ஏமாத்தப் பாக்கறான். ஏகே அப்படி ஒரு டெசிஷன் எடுத்ததுக்கு சாலிடா காரணம் இருக்கு. உனக்கு அப்புறம் சொல்றேன்”

-தொடரும்

தோழர்

அத்தியாயம் 4

எங்கெல்ஸால் நம்ப முடியவில்லை. எப்படி வாழ்கிறார்கள் இவர்கள்? சுவாசித்துக்கொண்டும், நடமாடிக்கொண்டும், வேலை செய்துகொண்டும் இருக்கிறார்கள் என்பதற்காக இவர்களை உயிருள்ளவர்கள் என்று அழைக்கமுடியுமா? எங்கெல்ஸ் அவர்களை ஊன்றி கவனித்தார். இடுங்கிய கண்கள். மெலிந்த தேகம். உரையாடும்போது, ஒவ்வொரு வார்த்தைக்கு இடையிலும் இருமல் சத்தம். நிமிர்ந்து நேராக நிற்க முடியவில்லை. நடுங்கினார்கள். தடுமாறினார்கள். சராசரியாக, ஒரு நாளைக்குக் பதினான்கு மணி நேரம் அவர்கள் வேலை செய்தார்கள். பல சமயங்களில், பதினெட்டு மணி நேரம் ஆகிவிடுவது இயல்பானதே. நன்றாக இருட்ட ஆரம்பிக்கும்போது  சோர்ந்து களைத்து, வீட்டுக்குச் செல்வார்கள். அதிகாலை இருள் விலகும் முன்பே ஆலை மணி அடித்துவிடும். உறக்கத்தை விட்டொழித்துவிட்டு, விரைந்து வந்துவிடவேண்டும்.

நாளடைவில், இயந்திரத்தின் ஓர் அங்கமாகவும், மற்றொரு இயந்திரமாகவும் அவர்கள் மாறிவிடுகிறார்கள். இந்த மாற்றத்தை எங்கெல்ஸ் கண்கூடாகக் கண்டு அதிர்ந்து போனார்.  தன் தந்தையின் அலுவலகத்துக்குச் செல்ல ஆரம்பித்தபோதே, தொழிலார்களின் பரிச்சயமும் ஏற்பட்டுவிட்டது. தன் மகன் தொழிற்சாலையில் நேரம் செலவிடுவது, தொழில் கற்றுக்கொள்வதற்காக என்று பிரெட்ரிக் நினைத்திருந்தார். எங்கெல்ஸ் படித்துக்கொண்டிருந்தது தொழிலாளர்களின் வாழ்நிலையை.

தன் தந்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தும்  புத்திமதிகளை யோசித்துப் பார்த்தபோது எங்கெல்ஸுக்குக் கோபமும் சிரிப்பும் ஒரு சேர வந்தது.  கடவுளை வணங்கு. எப்போதும் கடவுளின் நினைவாக இரு. நீ செய்யும் பாவங்களுக்குக் கடவுளிடம் மன்னிப்பு கேள். இதைவிட பெரிய முரண்பாடு வேறு ஏதாவது இருக்கமுடியுமா என்று யோசித்துப் பார்த்தார் எங்கெல்ஸ். பொழுது முழுக்கக் கடவுளையே நினைத்துக்கொண்டிருந்ததால்தான், மனிதர்களைப் பற்றி நினைக்க முடியவில்லையா தந்தையால்? தன் தொழிற்சாலையில் கிடந்து அவதியுறும் தொழிலாளர்களைப் புறக்கணித்துவிட்டு, கடவுளை நினைத்து மனமுருகி பிரார்த்தனை செய்வதன் மூலம், அவருக்குப் புண்ணியம் கைகூடிவிடுமா?

எல்லையில்லா அன்பை போதித்தது கிறிஸ்தவம். ஆனால், தொழிலாளர்கள் விலங்குகளைப் போலவே நடத்தப்பட்டு வந்தனர். எங்கெல்ஸ் அவர்கள் குடியிருப்புகளுக்குச் சென்றார். குடும்பத்தினரைக் கண்டார். குழந்தைகள் பலர் தொழுநோயால் பீடிக்கப்பட்டதைக் கண்டு அதிர்ந்து போனார். அசுத்தமான அந்தக் குடியிருப்புப் பகுதிகளில், சுவாசிப்பதற்கு நல்ல காற்றுகூட கிடைக்கவில்லை. தொழிற்சாலைகள் வெளியேற்றும் புகையைத்தான் அவர்கள் சுவாசித்துக்கொண்டிருந்தார்கள். பசியைப் போலவே நோய்களையும் அவர்கள் அசட்டை செய்ய கற்றுக்கொண்டிருந்தனர். எந்த வியாதியும் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல.  அதே சமயம், பிராந்தியிடம் தஞ்சம் புகுந்திருந்த தொழிலாளர்களையும் எங்கெல்ஸ் கண்டார். வலி மிகுந்த உழைப்பின் முடிவில் கிடைத்த கூலியை அவர்கள் வலியை மறக்கடிக்கும் மதுவில் செலவிட்டு வந்தனர்.

பார்மெனில் எங்கெல்ஸ் சந்தித்த தொழிலாளர்களின் நிலை இன்னமும்கூட மோசமாக இருந்தது. செல்வச் செழிப்பான ஒரு துறைமுக நகரத்திலும்கூட இவர்கள் மோசமான வாழ்வைதான் நடத்தவேண்டுமா? செல்வமும் ஏழைமையும் அருகருகில் இருக்கும் விசித்திரம்தான் என்ன? புத்தகங்களில் விடை தேடினார் எங்கெல்ஸ். இலக்கியம், வரலாறு, தத்துவம் என்று விரிந்த அவர் தேடலில் பல வெளிச்சங்கள் கிடைத்தன. தொழிலாளர்களின் வாழ்நிலை ஏன் இவ்வாறு அமைந்திருக்கிறது என்பதற்கு அவர்கள் வாழ்வையோ அல்லது அவர்கள் பணியாற்றும் தொழிற்சாலையின் அணுகுமுறையையோ ஆரய்ந்தால் போதாது. இது ஒரு சமூகப் பிரச்னை. அரசியல் பிரச்னை. மிக முக்கியமாக, பொருளாதாரப் பிரச்னை.  இந்தப் புரிதல் எங்கெல்ஸின் பார்வையை விசாலப்படுத்தியது. கிட்டத்தட்ட அதே சமயம், ஜெர்மனின் அரசியல் சூழல் மாறிக்கொண்டிருந்தது.

1840களில், ஜெர்மனி அரசியல் ரீதியில் பிளவுண்டிருந்தது. ஒரு நாடாக அல்ல, முப்பத்தொன்பது தனி சுதந்தர மாநிலங்களைக் கொண்ட ஒரு கூட்டமைப்பாகவே ஜெர்மனி நீடித்து வந்தது. நூற்றாண்டுகளாக இதுதான் நிலைமை. ஜெர்மனியின் எல்லைகள் கிழக்கில் விஸ்டுலா நதியில் இருந்து மேற்கே ரைன் நதி வரை: தெற்கே டான்யூப் நதியிலிருந்து வடக்கே பால்டிக் கடல் வரை பரவி படர்ந்திருந்தது.  பெரிய நிலப்பரப்புதான்.  ஆனாலும், வளம் போதாத காரணத்தால் மக்கள் தெற்கு, மேற்கு என்று குடிபெயர்ந்து அங்கேயே வாழவும் ஆரம்பித்தனர்.  தெற்கில் குடியேறியவர்கள் ரோமானியர்களுடன் பழகி, அவர்கள் நாகரிகத்தைக் கற்றுக்கொண்டனர்.  ரோம சாம்ராஜ்ஜியம் கொடி கட்டிப் பறந்துகொண்டிருந்த காலகட்டம் அது.  ஜெர்மனியும் நாளடைவில் ரோமானியர்களின் ஆட்சிக்கு உட்பட வேண்டியிருந்தது.

பிரடரிக் உருவம் பொறித்த நாணயம்

பொதுவான மொழிதான் என்றாலும் ஜெர்மானியர்கள் பல நூற்றாண்டுகளாகத் தனித்தனியே சிதறிக்கிடந்தனர்.  17ம் நூற்றாண்டு ஜெர்மனியில் மட்டும் சுமார் 300 அரசாங்கங்கள் உதிரியாக இயங்கி வந்தன.  இவற்றுக்கு இடையே தொடர்ந்து விரோதமும் போட்டியும் மூண்டு கொண்டிருந்தன.  சிறியதும் பெரியதுமாக சிதறிக்கிடந்த ஜெர்மன் அரசாங்கங்களுள், பிரஷ்யா முன்னணியில் இருந்தது.  பிறகு, ஆஸ்திரியா.  ஜெர்மனியை யார் ஆள்வது என்பது குறித்து இந்த இரண்டுக்கும் இடையில் அதிகாரப் போட்டி நிலவியது.

பிரஷ்யாவின் பலமும் அதிகாரமும் பிற ஜெர்மானிய அரசாங்கங்களிடையே பொறாமையை ஏற்படுத்தியது. மூன்றாம் பிரெட்ரிக் வில்லியம் என்னும் அரசர், பிற ஜெர்மானிய நாடுகளைத் திரட்டி ஒரு கூட்டமைப்பை உருவாக்கினார்.  ரைன்லாந்து ஐக்கியம் என்று அது அழைக்கப்பட்டது. பிரஷ்யாவுக்கு மாற்று சக்தியாக இந்த  ஐக்கியத்தை வளர்த்தெடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

18ம் நூற்றாண்டின் இறுதியில், நெப்போலியன் போனபர்ட் (1769-1821) தலைமையில் பிரான்ஸ் ஒரு வலிமையான ஐரோப்பிய சக்தியாக எழுந்து நின்றபோது, பிரஷ்யா நெப்போலியனை எதிர்க்க ஆரம்பித்தது. பிரிட்டன் உள்ளிட்ட பிற ஐரோப்பிய நாடுகளுக்கும்  நெப்போலியனின் எழுச்சி பீதியூட்டிய காரணத்தால் அவை பிரஷ்யாவுக்கு உதவ முன்வந்தன.  பிரஷ்யாவோடு சேர்ந்து பிற ஜெர்மானிய அரசாங்கங்களும் ஒன்றிணைந்து நெப்போலியனுக்கு எதிராகப் போரிட்டன.  1815ம் ஆண்டு, வாட்டர்லூ யுத்தத்தில் நெப்போலியன் வீழ்த்தப்பட்டார்.

நெப்போலியன் ஜெர்மனியின் சிந்தனைப் போக்கை வெகுவாகப் பாதித்தார்.  சுதந்தரம் குறித்து மக்கள் யோசிக்க ஆரம்பித்தார்கள்.  நாடு, தேசம், தேசபக்தி போன்ற கருத்தாக்கங்கள் உருபெற்றன. பிளவுபட்டிருந்த சிறிய அரசாங்கங்கள் சில அடிப்படைகளை உணர்ந்துகொண்டன.  நமக்குள் சண்டையிட்டுக்கொண்டு பிரிந்து கிடந்தால், நெப்போலியன் போன்றவர்கள் முறியடித்துவிடுவார்கள் என்பது புரிந்தது.  வேறு எதற்காக இல்லாவிட்டாலும், தற்காப்புக்காகவாவது அரசாங்கங்கள் ஒன்றுபட்டு திகழவேண்டும் என்பதையும் புரிந்துகெண்டார்கள்.  1789ம் ஆண்டு 300 நாடுகளுடன் பிளவுப்பட்டிருந்த ஜெர்மனி 1815ல் 39 நாடுகளாக சுருங்கிப்போனது.

இவற்றையும் ஒன்று சேர்த்து, ஒன்றுபட்ட ஜெர்மனியை கட்டமைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அவை வெற்றிபெறவில்லை.  பிரஷ்யாவும், ஆஸ்திரியாவும் வழக்கம் போல் அதிகாரத்தைக் கைப்பற்ற போட்டிப்போட்டுக்கொண்டிருந்தது.  மற்ற சிறு நகரங்களால் இந்த இரு பெரும் சக்திகளை மீறி எதுவும் செய்யமுடியவில்லை. ஆஸ்திரியா, க்ளெமென்ஸ் மெட்டர்னிச் (Klemens Wenzel von Metternich) என்பவரால் ஆளப்பட்டு வந்தது. பிரஷ்யா, நான்காம் பிரெட்ரிக் வில்லியமின் கட்டுப்பாட்டில் இருந்தது. 1840ல் ஆட்சிக்கு வந்த பிரெட்ரிக், அளவற்ற அதிகாரத்தை விரும்புபவராக இருந்தார். மக்கள் என்றென்றும் தன் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கவேண்டும் என்று விரும்பிய பிரெட்ரிக், கடுமையான ஒடுக்குமுறையைக் கையாண்டு வந்தார்.

பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் அப்போது முடியாட்சிதான் நடைபெற்று வந்தது. ஆனால், ஜெர்மனியைப் போல் அங்கே முழுமையான அடக்குமுறை சாத்தியப்படவில்லை. அந்நாட்டு முதலாளிகளும் செல்வந்தர்களும் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அரசாங்கத்தின் தலையீடு அதிகரிப்பது முதலாளிகளுக்கு உகந்ததல்ல என்பது ஒரு காரணம். தொழில் வளர்ச்சிக்கு அரசாங்கத்தின் ஆதரவு இன்றியமையாதது என்பதால் தொழிலதிபர்கள் ஆட்சியாளர்களின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கவனித்து வந்தனர். ஆட்சியாளர்கள் தொழில் முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்தபோது அல்லது, அதற்கு தடையாக இருந்தபோது, முதலாளிகள் அரசை வெளிப்படையாக எதிர்த்தனர்.  பிரிட்டனிலும் பிரான்ஸிலும் தொழிற்சாலைகள் அதிகம் பெருகியதற்கும், அந்நாடுகளில் உள்ள தொழிலதிபர்கள் பெரும் செல்வந்தர்களாகத் திகழ்ந்ததற்கும் காரணம், முதலாளிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இருந்த நல்லுறவு.

பிரிட்டன், பிரான்ஸைத் தொடர்ந்து, மெதுவாக ஜெர்மனியிலும் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்தன. குறிப்பாக,  சட்டதிட்டங்கள் கடுமையாக இருந்த பிரஷ்ய ஆட்சியாளர்களின் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்த ரைன்லாந்து மாகாணத்தில். பிரஷ்யாவும் ஏன் பிரிட்டனையும் பிரான்ஸையும் போல்முதலாளிகளுக்கு அனுகூலமாக இருக்கக்கூடாது? எதற்காக ஜெர்மனி ஐரோப்பாவைச் சார்ந்திருக்கவேண்டும்? நம்மிடம் உள்ள திறமையை முழு அளவில் பயன்படுத்தினால், நம்மால் இங்கே பல தொழிற்சாலைகளை உருவாக்கமுடியாதா? உற்பத்தியைப் பெருக்கமுடியாதா? செல்வம் சேர்க்கமுடியாதா?

ஜெர்மானிய பூர்ஷ்வா குழுவினரின் நோக்கங்கள் தெளிவானவை. முடியாட்சியைக் கவிழ்க்கவேண்டும். தொழில் வளர்ச்சிக்குச் சாதகமான அணுகுமுறையை அமல்படுத்தவேண்டும். அரசு தலையீடு இல்லாத சாதகமான தளம் உருவாகவேண்டும். எனவே, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றவேண்டும். நமக்குத் தேவையான அரசாங்கத்தை நாமே அமைத்துக்கொள்ளவேண்டும். நமக்குத் தேவைப்படும் கொள்கைகளை நாமே வகுத்துக்கொள்ளவேண்டும்.

எங்கெல்ஸ் வாசித்த செய்தித்தாள்களிலும் புத்தகங்களிலும் இந்த எதிர்ப்புணர்வே பிரதானமாகவும் தீவிரமாகவும் தலைகாட்டியது. அரசியல் சுதந்தரம் மறுக்கப்பட்டு வந்த காரணத்தால், போராட்டக்காரர்கள் எழுத்தையே தங்கள் ஆயுதமாக வரித்துக்கொண்டிருந்தனர். கடிதங்கள் வாயிலாக அவர்கள் தங்கள் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டனர். போராட்டங்களைத் திட்டமிட்டனர். கதைகளிலும் கவிதைகளிலும் முடியாட்சிக்கு எதிரான கருத்துகளைப் பரப்பினர்.  சுதந்தரத்தை நேசிக்கும், ஜனநாயகத்தை நேசிக்கும் குழுவினரும் இந்தப் போராட்டத்தில் தங்களைப் படிப்படியாக இணைத்துக்கொண்டனர்.  முடியாட்சிக்கு எதிரான கலகக்குரல் ஒன்று ஒலிக்க ஆரம்பித்தது.

தொழிலாளர்களின் இழிநிலைக்கும் இப்போது எழுந்துள்ள கலகக்குரலுக்கும் உள்ள தொடர்பைப் புரிந்துகொள்ள முயன்றார் எங்கெல்ஸ். முடியாட்சி தூக்கியெறியப்பட்டால், அது தொழிலாளர்களுக்குச் சாதகமாக சூழலை உருவாக்குமா? அவர்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படுமா? கலகக்காரர்களின் வழியில், எங்கெல்ஸும் எழுத்தைத் தன் ஆயுதமாக வரித்துக்கொண்டார். விரைவில், அந்த ஆயுதத்தைப் பயன்படுத்தவும் ஆரம்பித்தார்.

(தொடரும்)