பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம், பாலா!

balaபரதேசி படம் குறித்து இணையத்தில் பலவிதமான விமரிசனங்கள், விவாதங்கள் வலுத்துவருகின்றன. குறிப்பாக எழுத்தாளர்கள் இப்படம் பற்றிய தனது நிலைப்பாட்டை சொல்லி வருகிறார்கள். படம் எப்படியுள்ளது என்று பேசுவதற்கு முன் விமரிசனங்கள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம். பரதேசி படத்துக்கான விமரிசனம் பெரும்பாலும் இரண்டு வகைகளாக இருக்கின்றன.

ஒன்று: இந்தப் படத்தையும் அதன் மூலப் பொருளாகச் சொல்லப்படும் ’எரியும் பனிக்காடு’ புத்தகத்தையும்  ஒப்பிட்டு படத்தின் பலவீனங்களைக் குறிப்பிடுவது.

இரண்டு : இந்தப் படம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வேதனைகளை உணர்த்துகிறது என்ற ஒற்றை வரிக்காக படத்தை ஆஹா ஓஹோ என்று புகழ்வது.

இவ்விரண்டு குறிப்புகளையும் மறந்து ஒரு படமாக, ஒரு கலைப் படைப்பாக  பரதேசி படம் எப்படி இருக்கிறது என்று யாரும் சொல்வதில்லை.

முதல் விஷயத்துக்கு வருவோம். படத்தைவிட நாவல் உண்மைக்கு அருகிலும் உணர்வுகளை வெளிப்படுத்துவதிலும் சிறப்பாக உள்ளது என்பது முற்றிலும் உண்மை. ஆனால் நாவல் படமாகும்போது நாவலை ஒரு அளவுகோளாக (பென்ச்மார்க்) எடுத்துக்கொண்டு இரண்டையும் ஒப்பிட்டுக் குறை கூறுவது சரியான பார்வையாக இருக்காது. நாவலைப் படமாக்கிய எத்தனைப் படங்கள் கதையை, கதை நடையை   மாற்றாமல் அமைக்கப்பட்டன? நாவலைப் படமாக்கி வெற்றி பெற்ற எத்தனைப் படங்கள் நாவல் தரும் முழு உணர்வுகளைத் தந்தன? எண்ணிப் பார்த்தால் படத்துக்கு இணையாக நாவலுக்கும் விமரிசனங்கள் இருக்கக் கூடும்.

படத்தை ஒப்பிட்டுப் பார்த்து நாவலைப் புகழ்ந்து பேசும் வழக்கம் இங்கு அதிகமிருக்கிறது. சொல்லப்போனால் படத்தின் குறைகளை மற்றும் லாஜிக்கல் பிழைகளைக் குறிப்பிட்டு நாவலைப் புகழ்பவர்கள் அனைவரும் இந்நாவலை படம் வெளியான பின்னர் தான் படித்திருக்கிறார்கள். இப்படம் வெளியான பின்னர் தான் நாவல் பற்றிய விமரிசனங்கள் பரவலாகப் பேசப்படுகின்றன. நம் சூழலில் புத்தகங்கள் எவ்வளவு கவனிக்கப்படுகின்றன, பேசப்படுகின்றன என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். நாவல் வேறு, படம் வேறு. படத்தில் உள்ள கதைப் பிழைகள், தர்க்கரீதியான பிழைகள் அனைத்தும் சரியாக இருந்தாலும் இதனை நாவலோடு ஒப்பிட்டுக் குறை கூறுபவர்களின் பார்வை மாறாது, மாறியிருக்காது என்பதே உண்மை.

அடுத்தது படத்தைப் புகழ்பவர்கள் பக்கம் வருவோம். உண்மையில், படத்துக்கு மக்களிடையில் கிடைத்த வரவேற்பு ஆச்சர்யம் அளிக்கிறது.  மக்களுக்கு இவ்வளவு பொறுமை எப்போது வந்தது? பிறகுதான் காரணம் புரிந்தது. மக்களின் விமர்சனம் சில template க்குள் நுழைந்துவிட்டது.  ‘இந்தப் படம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் துன்பங்கள் நிறைந்த வாழ்வைச் சொல்லும் உண்மைக் கதை’. இந்த ஒற்றை வாக்கியம் மட்டும்தான் அதைப் புகழ்வதற்குக் காரணம். அதாவது இப்படியொரு வரலாற்றுச் சம்பவமே நடக்கவில்லை என்றாலோ அல்லது தேயிலை தொழிலாளர்கள் யாரும் வேதனைப் படுவதில்லை என்றாலோ இந்தப் படம் படு தோல்வி என்பதில் சந்தேகமில்லை. அதுமட்டுமல்லாமல், ஒரு சராசரி தமிழ் சினிமா ரசிகன் இந்தப் படத்தை கன்னாபின்னா என்று திட்டியிருப்பான்.

இன்னும் சிலர் படத்தை விமரிசிக்க பயப்படுகிறார்கள். துயரப்படுபவர்களின் வாழ்க்கையைச் சொல்லும் படத்தை நல்லாயில்லை என்று சொல்லலாமா?

பரதேசிக்குக் கிடைத்திருக்கும் வரவேற்புக்கு இன்னொரு முக்கியக் காரணமும் உள்ளது. மக்களின் ரசனை fact-க்கு அடிமையாகிக் கிடக்கிறது. இரண்டு கதைகளை சொல்லும் படம், அகோரிகளைப் பற்றிச் சொல்லும் ஒரே படம், மலைவாழ் மக்களின் வாழ்வைச் சொல்லும் ஒரே படம், முதன் முதலில் இந்த இசைக் கருவியை உபயோகித்த இசை. முதன் முதலில் இந்த நாட்டில் அமைக்கப்பட்ட இசை. இது போன்ற கவர்ச்சிகரமான வாக்கியங்கள் அவர்களை ஈர்க்க போதுமானதாக இருக்கின்றன. படைப்பைப் பற்றிய கருத்துகளை இவையே முடிவு செய்துவிடுகின்றன.

என்னைப் பொருத்தவரை, உலக அளவில் சிறந்த படங்களாகப் பேசப்படும் Life is Beautiful மற்றும் The Motorcycle Diaries ஆகியவையே இவ்வளவு பாராட்டுகளுக்குத் தகுதியற்றவை. இவை இரண்டுமே சாதாரணப் படங்கள்தான். ஆனால் உலக அளவில் இவ்வளவு புகழ்ந்து பேசப்படுவதற்கான ஒரே காரணம் இப்படங்களின் கதை வரலாற்று உண்மைகளைச் சார்ந்து உள்ளன. உலகளவில்  ரசிகர்களுக்கு இப்படியொரு பார்வை இருக்கையில் தமிழ் சினிமா ரசிகர்கள் இப்படி இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

உண்மைக் குறிப்புகளைப் பற்றியும் தர்க்கப் பிழைகள் பற்றியும் அனைவரும் பேசிவிட்டதால் நான் அவற்றைப் பேசப் போவதில்லை. இது போன்ற குறிப்புகளை விடுத்து ஒரு படமாக பரதேசி எப்படியுள்ளது என்று பார்ப்போம். படத்தின் ஆரம்பத்தில் காட்டப்படும் மகிழ்ச்சியான கிராமத்துக் காட்சிகள் அனைத்தும் மற்ற எந்த படங்களிலும் வரும் சாதாரண நகைச்சுவைக் காட்சிகளை ஒத்தவைதான். அவை தனித்துவம் மிகுந்தவை என்று நினைக்க வைப்பதற்கு தமிழ் சினிமாவின்  monotonous போக்குதான் காரணம். மற்றபடி படத்தின் முதல் அரை மணி நேரத்தில் பாராட்டும்படியாக எதுவுமில்லை.

அதற்கு பிறகு இன்னும் மோசம்.  சோகம் நிறைந்த உண்மைக் கதையைச் சொல்லும் படம் என்பது சரி தான். அதற்காக படம் தட்டையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. சோகமோ மகிழ்ச்சியோ இல்லை வேறு எந்த வகையோ படத்தை எதாவது ஒன்று நகர்த்திச் செல்ல வேண்டும். அது பரதேசியில் இல்லை. சோகத்தைச் சொல்லும் படங்கள் எவ்வளவோ உள்ளன. அவை எல்லாம் சுவாரஸ்யமற்ற படங்கள் ஆகிவிடவில்லை. சுவாரஸ்யம் என்றால் கதைக்கு தேவையில்லாமல் தனியே திணிக்கப்படும்  கமர்ஷியல் அம்சங்கள் அல்ல.

Apocalypto, Schindler’s List போன்ற படங்கள் முழுக்க முழுக்க சோகம் மற்றும் கொடுமைப் படுத்துதல் சார்ந்த படங்கள் தான். ஆனால் அவற்றில் நம்மைக் கதைக்குள் இழுத்துச் செல்லக் கூடிய திரைக்கதை இருந்தன. பரதேசியில் அப்படி எதுவுமில்லாமல் சோகம் என்ற ஒன்று மட்டுமே தட்டையாக வெளிப்படுகிறது.

ஒரு ஆசிரியரிடம் அடி வாங்கி வேதனைப்படும் சிறுவனைப் பற்றிய ஒரு படம் பார்க்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். முதல் நாள் மாணவன் வருகிறான். ஆசிரியர் அவனை நாள் முழுவதும் அடித்துக் கொடுமைப்படுத்துகிறார். இரண்டாம் நாள் வருகிறான். அதே நடக்கிறது. மூன்றாவது நாளும் அதே. இப்படியே ஒரு மாதம் முழுவதும் நடப்பது போல் காட்டுகிறார்கள். அதோடு படம் முடிந்துவிடுகிறது. எப்படி இருக்கும்? கடைசியில் இது உண்மையில் ஒரு புகழ் பெற்ற சுதந்தரப் போராட்டத் தியாகியின் வாழ்வில் நடந்த கதை என்று  சொல்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். உடனே அது தமிழ் சினிமாவின் போக்கை மாற்றும் படம் ஆகிவிடுமா? அவ்வளவு வேண்டாம் ஒரு நல்ல படம் ஆகிவிடுமா? அப்படித் தான் இருக்கிறது பரதேசி மீது பொழியும் பாராட்டு மழைகள்.

கதைக்கரு எந்த உணர்வைக் கொண்டுள்ளதோ அவ்வுணர்வைப் பார்வையாளனுக்கு அளிக்கும் பங்கு படத்தின் திரைக்கதைக்கு உள்ளது. சோகத்தை அதுவும் இது போன்ற ஒரு வரலாற்றுச் சோகத்தை வடிவமைக்கும்போது அதில் நேர்த்தி இருக்க வேண்டும். கதைக்குள் நம்மை இழுத்துச் செல்லக்கூடிய வலிமை படைப்பில் இருக்க வேண்டும். கதையின் ஓட்டமும் படத்தின் முடிவும் மனதுக்குள் உறுதியான விளைவுகள் ஏற்படுத்த தவறிவிட்டன என்பதே யதார்த்த உண்மை .

‘அடுத்தது என்ன?’ என்கிற கேள்வி ஒவ்வொரு பார்வையாளனுக்குள்ளும் சினிமா பார்க்கும் ஒவ்வொரு நொடியும் ஓடிக்கொண்டிருக்கும். படம் இக்கேள்விக்கான பதிலை அளித்துக்கொண்டே இருக்க வேண்டும். அல்லது கேள்வியை மறக்க வைக்க வேண்டும். ‘அடுத்தது எதுவும் இல்லை’ என்கிற பதிலோடு ஒரு மணி நேரம் படம் நகர்வது தப்பே இல்லை. ஆனால் படத்தைப் பார்க்கும் ரசிகன் அந்த ஒரு மணி நேரமும் இந்தக் கேள்வியை மறந்திருக்க வைப்பது படத்தின் பொறுப்பு. பரதேசி அதில் பெரிதும் தடுமாறியது.

ஒரு கலைப் படைப்பாக இப்படத்தில் பாலா பெரிதும் தடுமாறியிருக்கிறார் அல்லது தோற்றிருக்கிறார். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் பாலா என்று தான் சொல்லத் தோன்றுகிறது. ஆனால், இப்படத்தின்மூலம் அவருக்குக் கிடைத்திருக்கும் உணர்ச்சி வசப்படக்கூடிய ரசிகர்களையும் சேர்த்தே அடுத்த படத்திலிருந்து அவர் திருப்திப்படுத்த வேண்டும் என்பதே கடினமான உண்மை.

எரியும் பனிக்காடும் பரதேசியும் : ஒரு நாவலைக் கொல்வது எப்படி?

paradesi1

ஏற்கெனவே ஏழாம் உலகம் என்ற ஜெயமோகனின் நாவலை நான்கடவுள் என்ற பெயரில் கந்தரகோலமாக்கிய பாலா, இந்தமுறை எரியும் பனிக்காட்டை வெட்டிச் சீரழித்திருக்கிறார்.

ஏழாம் உலகம் குறைப்பிறவிகளான, முடமான, பெருநோய்வாய்ப்பட்ட பிச்சைக்காரர்களையும் அவர்களைச் சுரண்டிப் பிழைப்பவர்களையும் விவரிக்கும் நாவல். நாம் நாகரிகம் என்று நம்பக்கூடிய இருபதாயிரம் வருட வளர்ச்சிப் பாதையில் பின்னோக்கிக் கதறியபடியே ஓடும் நாவல். மானுடம் என்ற சொல்லின் மகத்தான நிழல் (நன்றி: சு.வேணுகோபால்). ஆனால், அந்த நாவலை அகோரிகளுடன் பிணைத்து ஒரு கதாநாயக சாகசத்தை படு செயற்கையாக திணித்து வீணடித்திருந்தார் பாலா. இப்போது டேனியல் எழுதிய ரெட் டீ.

பாலா முழுவதுமாக ஒப்புக்கொள்ளாவிட்டாலும் டேனியலின் நாவல்தான் பரதேசியின் அஸ்திவாரம். நாவல், பொதுவெளியில் அதிகம் பேசப்பட்டிராத தேயிலைத் தோட்டத்தொழிலாளர்களின் வேதனை நிறைந்த வாழ்க்கையைக் கருப்பொருளாகக் கொண்டது. அந்த வாழ்க்கை பலருக்கும் தெரியாது என்பதால், அது தொடர்பான அனைத்து தகவல்களையும் நாவலில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் நாவலாசிரியர் கலைபீடத்தில் இருந்து கொஞ்சம் இறங்கிவந்து சில காரியங்கள் செய்திருப்பார். கதாபாத்திரங்கள் தமக்குள் மட்டும் பேசிக்கொள்ளாமல் வாசகர்களைப் பார்த்தபடி நின்று பேசுவது போன்ற குறைகள் நாவலின் கலையம்சத்தை சிறிது பாதிக்கிறது என்றாலும் அந்த வாழ்க்கையின் தகவல்கள் மிக முக்கியமானவை என்பதால், நாவலின் தரத்தை அது அவ்வளவாகப் பாதிக்கவில்லை.

danielஅப்படியாக, டேனியல் தேயிலைத் தோட்ட வாழ்க்கையின் சாற்றை வடித்து நாவல் கிண்ணத்தில் ஊற்றிக் கொடுத்திருக்க, பாலாவோ, சாறைக் கொட்டிவிட்டு சக்கையை நம் முன் கொண்டுவந்து குவித்திருக்கிறார். தங்கச் சுரங்கத்துக்குச் சென்றவர் மண்கட்டிகளை எடுத்துக்கொண்டு வந்து நம்மிடம் காட்டியிருக்கிறார். இந்த மண்கட்டிகளிலும் சில தங்கத் துகள்கள் மின்னுவதைவைத்து தமிழ் திரைச் சமூகம் புளகாங்கிதப்பட்டுக் கொள்கிறது. இதில் எளிய பார்வையாளனின் பிரமிப்பை நாம் குறை சொல்ல முடியாது. ஆனால், இலக்கிய பரிச்சயமும் உலக சினிமா பரிச்சயமும் கொண்ட கூட்டமும், எப்போது வேண்டுமானாலும் மன்னர் கூப்பிட்டு அனுப்பலாம் என்ற நப்பாசையில் காத்திருக்கும் அந்தப்புர மகளிரைப்போல், தங்களின் தயார்நிலையை அறிவிக்கக் கிடைத்த வாய்ப்பாக இதைப் பயன்படுத்திக் கொள்வதைப் பார்க்கும்போதுதான் கோபம் வருகிறது.

இந்தப் படத்தைப் பார்ப்பதற்கு முன் நாவலை நான் முழுவதுமாகப் படித்திருக்கவில்லை. எனவே, படம் குறித்த என் மனப்பதிவு படத்தின் அளவிலேயே உருவானதுதான். நாவலைப் படித்த பிறகு அந்த விமர்சனம் மேலும் வலுப்பட்டிருக்கிறது.

நாவல் வேறு… சினிமா வேறு என்பது உண்மைதான். ஆனால், நாவலை சினிமாவாக ஆக்கும்போது எதையெல்லாம் தக்கவைத்துக் கொள்கிறீர்கள்… எதையெல்லாம் புதிதாகச் சேர்க்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். அதுதான் உங்கள் செயலை நியாயப்படுத்த முடியும். வெறுமனே திரைப்படத்தில் செய்திருப்பவை எல்லாம் காட்சி ஊடகத்துக்காகச் செய்யப்பட்டவை என்று சொல்லிக்கொள்வது சரியல்ல.

நில உடமையாளர்களான நாயக்கர்களாலும் தேவர்களாலும் ஒடுக்கப்படும் தலித்கள்தான் நாவலின் பிரதான கதாபாத்திரங்கள். ஹோட்டல்களின் முன்னால் இருக்கும் இருக்கையில் தலித்களுக்கு உட்கார அனுமதி கிடையாது என்பதில் ஆரம்பித்து அன்றைய காலகட்டத்தில் இருந்த அனைத்து யதார்த்த அம்சங்களும் நாவலில் இடம்பெற்றிருக்கிறது. பாலா தேவர் என்பதால், தேவர்கள் மீதான விமர்சனத்தை முன்வைக்க அவருடைய சாதிப்பாசம் தடுத்துவிடுகிறது. மேலும் நாவலில் தலித்களைக் கொடுமைப்படுத்தும் கங்காணியாக வருவது ஒரு தலித். அதையும் தெளிவாகச் சித்திரிக்காமல் விட்டுவிடுகிறார். அப்படியாக, இது யதார்த்தப் படம்தான். ஆனால், யதார்த்தம் இருக்காது. இது ஒரு மனிதனை உடம்பில்லாமல் சித்திரிப்பதைப் போன்றது.

நாவலில் கங்காணி ஒவ்வொரு ஊரிலும் ஆள் பிடிக்கும் முறை மிகவும் அழகாக விவரிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு கிராமத்தில்  இருந்தும் ஓரிரு குடும்பத்தினரை மட்டும்தான் அவன் அழைத்துச் செல்வான். அதுதான் சாத்தியம். ஏனென்றால், அப்போதுதான் அடுத்த தடவை அந்த ஊரில் வந்து வேறு யாராவது இரண்டு அப்பாவிக் குடும்பத்தை அழைத்துச் செல்லமுடியும். ஒரே கிராமத்தில் இருந்தே ஐம்பது அறுபது பேரை அழைத்துச் சென்று கொடுமைப்படுத்தினால், அடுத்தமுறை அந்த ஊர் பக்கமே தலைவைத்துப் படுக்க முடியாமல் போய்விடும்.

அதோடு,  ஒவ்வொருகிராமத்தில் இருந்தும் ஓரிரு குடும்பத்தினரை மட்டும் தனிமைப்படுத்தி அழைத்துச் செல்வதில் இன்னொரு தந்திரமும் அடங்கியிருக்கிறது. அப்படி தனியாக இருப்பவர்கள்தான் அடக்குமுறையை எதிர்த்துப் போராடப் பயப்படுவார்கள். ஒரு ஊரில் இருக்கும் அனைவரையும் அழைத்துச் சென்றால் அவர்களிடையே வலுவான ஒற்றுமை இருக்கும். எந்தவொரு அடக்குமுறையையும் அவர்கள் எளிதில் எதிர்த்துவிடுவார்கள். எனவே, கங்காணிகள் ஒவ்வொரு ஊரில் இருந்தும் ஓரிரு குடும்பங்களை மட்டுமே அழைத்துச் செல்வார்கள்.

பாலாவோ தன் படத்தில் ஒரே கிராமத்தில் இருந்து அனைவரையும் அழைத்துச் செல்வதாகக் காட்டியிருக்கிறார். அதாவது, நாவலில் இருந்து இவர் வித்தியாசமாகச் சிந்திக்கிறாராம். அப்படிச் செய்ய வேண்டுமென்றால் அதற்கு நீங்கள் பலவீனமான நாவலை எடுத்துக்கொண்டு அதை மேம்படுத்த முயற்சி செய்ய வேண்டும். அது உங்கள் திறமைக்கு அப்பாற்பட்ட விஷயம் என்றால் பலமான நாவலை எடுத்துக் கொண்டுவிட்டு பேசாமல் அதன் காலடியில் உங்களை ஒப்புக்கொடுத்துவிடவேண்டும், நடிகர்கள் இயக்குநர்களிடம் ஒப்புக்கொடுக்கிறார்களே அதுபோல். நான் ஓர் இயக்குநன். என் பங்களிப்பு தேவை என்ற பெயரில் ஏதேனும் செய்ய முற்பட்டால் இப்படித்தான் ஆகும். கல்லைச் சிலையாக்குபவனுக்குத்தான் சிற்பி என்று பெயர். சிலையைப் படிக்கல்லாகச் சிதைப்பவனுக்கு வேறு பெயர்.

அடுத்ததாக, நாவலில் நாயகனும் நாயகியும் தங்கள் சொந்த ஊரை விட்டுச் செல்வதற்கான காரணம் அருமையாக விவரிக்கப்பட்டிருக்கும். அந்த ஊரின் வறுமை வெகு நுட்பமாக, படு யதார்த்தமாக நாவலில் விவரிக்கப்பட்டிருக்கும். நாயகியின் கொலுசை அடகு வைத்து அதில் கிடைத்த பணத்தை வைத்து நாலைந்து நாட்கள் சாப்பிட்டிருப்பார்கள். அதுவும் கேப்பை மாவு கஞ்சியும் சுட்ட மிளகாய்களும்தான் உணவு. அதுகூடக் கிடைக்காமல் போகும் நிலை ஏற்படும். உள்ளூரில் வேலை எதுவும் இல்லாமல் போய்விட்டிருக்கவே, பக்கத்து டவுனுக்குப் போய் வேலை தேடுவான் நாயகன் கருப்பன்.

இன்னிக்கு வேலை இல்லை நாளைக்கு வா என்று ஒரு ஹோட்டலில் சொல்வார்கள். உங்க அடிமை சாமி… அடிமையோட பொஞ்சாதி, அம்மா யாருமே நேத்திலிருந்து எதுவுமே சாப்பிடலை. நாளைக்குச் செய்ய வேண்டிய வேலையை இன்னிக்கே செய்யறேன் என்று பிச்சை எடுக்காத குறையாக கெஞ்சுவார் நாயகன் (ஆங்கில மூலத்தில் அடிமை – ஸ்லேவ் என்ற நேரடியான வார்த்தையை டேனியல் எழுதியிருந்தாரா என்று தெரியவில்லை. முற்போக்கு மொழிபெயர்ப்பாளரின் கைவண்ணமாக இருக்கும் என்றே தோன்றுகிறது). இப்படியான நிலையில்தான் கங்காணியின் கழுகுப் பார்வையில் சிக்குவார். திரைப்படத்திலோ இது மேலோட்டமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறது.

அதோடு, வேறு ஊருக்குச் செல்லும் நாயகன் நேராக அங்கிருக்கும் ஒரு ஹோட்டலின் முன்னால் போட்டிருக்கும் பெஞ்சில் போய் ஏறி உட்கார்ந்துவிடுகிறார். உடனே அந்த ஹோட்டல்காரர் அவனைப் போட்டு அடி அடியென்று அடிக்கிறார். அதில் தலித்கள் உட்காரக்கூடாது என்பது நாயகனுக்குத் தெரியாதாம். அதாவது, அவருடைய ஊரில் அப்படியான எந்த வழக்கமும் கிடையாதாம்.

அதன் பிறகும்கூட கங்காணி சொல்லும் வார்த்தைகளைக் கேட்டு அப்படியே புறப்பட்டுவிடமாட்டான் நாவலின் நாயகன். மனைவி, அம்மா, மாமனார் என அவனுடைய குடும்பத்தினர் ஒவ்வொருவராகக் கேட்பான். எல்லாருக்குமே பயமாகத்தான் இருக்கும். கடைசியில் ஒரு பல்லி கூரையில் இருந்து கத்தும். அதை நல்ல சகுனமாகக் கருதி புறப்பட ஆயத்தமாவார்கள். நாவலை முழுவதும் படித்து முடித்த பிறகு எங்கு பல்லி சத்தம் கேட்டாலும் நமக்கு ஒருமுறை தூக்கிவாரிப்போடும். அந்த அளவுக்கு அது எளிய மக்களின் அப்பாவித்தனத்தின் மீது வலி மிகுந்த இரக்கத்தை உருவாக்கும்.

நாவலில் நாயகன் தன் அம்மாவை விட்டு விட்டுச் செல்லத் தீர்மானிப்பான். முப்பது நாற்பது வருடங்கள் கூடவே இருந்த தாயை விட்டுப் பிரியும் சோகம் ஒருபுறம்… சுற்றிச் சுற்றி வாட்டும் நிகழ்காலம் ஒரு புறம். நிச்சயமில்லாத எதிர்காலம் இன்னொருபுறம் என அவனுடைய வேதனையானது நாவலில் அணையில் சேகரமாகும் நீர்த்துளி போல் கொஞ்சம் கொஞ்சமாகக் கூடிக் கொண்டே வரும். இவற்றில் எதுவுமே படத்தில் இடம்பெறவில்லை.

முக்கியமாகப் படத்தில் காட்டப்படும் பூர்விக கிராமம் அப்படி ஒன்றும் பஞ்சம் பிழைக்க வேறு இடத்துக்குத் துரத்தும் ஒன்றாக இல்லை. ஊரில் திருமணம் தடபுடலாக நடக்கிறது. கூடை கூடையாகப் பணியாரம், அண்டா அண்டாவாக நெல்லுச் சோறு. இந்த நேரத்தில் ஊர்ப் பெரியவர் ஒருவர் (முழுநேரக் கவிஞர் அண்ணாச்சி விக்கிரமாதித்யன்) இறந்துவிடுகிறார். அந்தச் செய்தி தெரியவந்தால் என்ன செய்வார்கள். எந்தக் கிராமத்திலாவது திருமணத்தை நிறுத்தி வடித்த சோற்றையெல்லாம் வீணாக்குவார்களா? ஒருவேளை திருமணத்துக்கு ஓரிரு நாட்கள் முன்பாக இறந்திருந்தால் வேண்டுமென்றால் திருமண நாளைத் தள்ளிவைக்கலாம். திருமணத்தின் அதே நாளில் தாலி கட்டுவதற்கு சிறிது முன்பாக ஒருவர் இறந்தால் யார்தான் என்னதான் செய்யமுடியும்? இது கூட நமக்குப் பெரிய பிரச்னையில்லை. ஒரு கிராமத்தின் வறுமையைக் காட்ட இந்தக் காட்சியா கிடைத்தது.

நாவலில் பூர்விக கிராமத்தில் இருந்து தேயிலைத் தோட்டத்துக்கு மக்கள் மேற்கொள்ளும் பயணம் மிக அற்புதமாக விவரிக்கப்பட்டிருக்கும். போகும் வழியில் ஒவ்வொரு ஊரில் தங்கிக் கொள்வது, உணவுக்கு செய்திருக்கும் ஏற்பாடுகள், வழியில் தென்படும் தெளிந்த நீரோடையில் குளிப்பது இவை எல்லாவற்றையும்விட ரயிலை முதல் முறையாகப் பார்க்கும் கிராமத்தினரின் அனுபவங்கள் நாவலில் அருமையாக விவரிக்கப்பட்டிருக்கும். பெரும் சத்தத்துடன் புகையைக் கக்கியபடி நுழையும் ரயிலைப் பார்த்து மிரண்டு அதில் ஏற பயப்படும் பெண்களில் ஆரம்பித்து ஆரம்பகட்ட உற்சாகம் வடிந்து ரயில் பெட்டியின் வெம்மை தகிக்க ஆரம்பிப்பதுவரை ஒவ்வொன்றையும் துல்லியமாக விவரித்திருப்பார் நாவலாசிரியர்.

பாலா அந்தப் பயணத்தை முற்றாக வெட்டி எறிந்துவிட்டிருக்கிறார். வேறொருவர் தயாரிப்பாளராகக் கிடைத்திருந்தால் அந்தக் கால ரயில், அந்தக் கால தண்டவாளம், அந்தக் கால ரயில்வே ஸ்டேஷன், அந்தக் கால நட்டு போல்டுகள் என மஞ்சக் குளித்திருக்கலாம். சொந்தக் காசாயிற்றே… எனவே, நாவலின் ஆதார ஸ்ருதி பிசகுகிறதே என்ற கவலை சிறிதும் இல்லாமல் ரயில் போர்ஷனை படத்தில் இடம்பெறச் செய்யாமல் விட்டிருக்கிறார். அப்படியாக சாதிப் பாசத்தால் சில சமரசங்கள்… பணப்பாசத்தால் மேலும் சில சமரசங்கள் (என்ன செய்ய… இதையெல்லாம் மீறித்தானே யதார்த்தக் கலையைப் படைக்க வேண்டியிருக்கிறது!)

நாவலில் மூன்று நாட்கள் பஸ்ஸிலும் ரயிலிலும் பயணம் செய்து அடைந்த தேயிலை எஸ்டேட்டை திரைப்படத்தில் 48 நாட்கள் நடந்தே சென்றடைகிறார்கள். இந்தப் பயணத்தை ஆப்ரிக்காவில் இருந்து கறுப்பர்களை வெள்ளையர்கள் பிடித்து இழுத்துச் சென்றார்களே அதற்கு இணையான ஒன்றாகச் சித்திரிக்கிறார் இயக்குநர். போகும்வழியில் நூற்றுக்கணக்கில் இறந்தது, இறந்தவர்களைக் கடலிலும் காடுகளிலும் அப்படியே போட்டுவிட்டுப் போனது என உலகின் மிகப் பெரிய சோகத்தை சற்றே தொலைவில் உள்ள எஸ்டேட்டுக்குப் போகும் வழியில் நடப்பதாகக் காட்டுகிறார். அதிலும் ஒரே கிராமத்தில் இருந்து செல்பவர்கள், வழியில் தங்கள் கிராமத்து நபர் ஒருவர் உடல் தளர்ந்து விழுந்துவிடவே அப்படியே போட்டுவிட்டுப் போகிறார்கள். இத்தனைக்கும் தேயிலைத் தோட்டச் சிறைக்குள் அவர்கள் போய் மாட்டிக்கொள்ளவே இல்லை. இந்த நிமிடத்தில்கூட கங்காணியின் உண்மை சொரூபம் தெரிந்து பூர்விக கிராமத்துக்கே அவர்கள் திரும்பியிருக்க முடியும். நாவலில் தேயிலைத் தோட்டத்துக்குப் போய்ச் சேரும் வரை கங்காணியின் முழு கொடூர முகம் தெரியவராது.

இரண்டாம் பாகத்தின் ஆரம்ப காட்சிகளில் பெருமளவுக்கு நாவலை ஆரத் தழுவி இருப்பதால் படத்தின் அருமையான நிமிடங்களாக அவை தேறிவருகின்றன. இருந்தும் கணவனை இழந்து கைக்குழந்தையுடன் ஒருக்கும் ஒரு இளம் பெண்ணுடன் பருவ வயதினனான நாயகனை ஒரே வீட்டில் தங்க வைப்பது போன்ற பாலாவின் அசட்டுத்தனங்கள் அந்தப் பகுதியிலும் ஆங்காங்கே இடம்பெறவே செய்கின்றன.

நாவலில் நாயகனுக்கும் நாயகிக்கும் ஊர் திரும்ப வாய்ப்பு கிடைக்கும். ஆனால், உடல் நலம் குன்றியதாலும் செட்டியாரால் கூடுதல் கடன் பொய்யாக எழுதப்பட்டதாலும் எதிர்பார்த்த பணம் கையில் சேர்ந்திருக்காது. எனவே, எஸ்டேட்டிலேயே மேலும் ஓரிரு வருடங்கள் தங்கி பணம் சம்பாதித்துக் கொண்டு ஊர் திரும்பலாம் என்று தீர்மானிப்பார்கள். அந்த அத்தியாயத்தைப் படிக்கும்போது, எப்படியாவது தப்பித்துப் போய்விடுங்கள்… இங்கே தங்காதீர்கள் என்று நம் மனது கிடந்து துடிக்கும். ஆனால், அவர்களோ கூண்டைத் திறந்துவிட்டாலும் வெளியில் வந்து சீட்டை எடுத்துக் கொடுத்துவிட்டு, அமைதியாகக் கூண்டுக்குள் மீண்டும் நுழைந்து கதவை மூடிக்கொள்ளும் அப்பாவிக் கிளிகளைப் போல் அங்கேயே தங்க முடிவெடுத்துவிடுவார்கள். படத்தில் அப்படியான காட்சி இடம்பெறவில்லை.

அதோடு, ஆங்கிலேய துரைகள் வெளிப்படையாக எல்லாரும் பார்க்கும்போதும் கூலிப் பெண்களிடம் லேசாக சில்மிஷம் செய்வது உண்டு என்றாலும் படுக்கைக்கு அழைப்பது என்பது மிகவும் நுட்பமாகவே செய்யப்படும். ஏற்கெனவே துரையின் வழிக்கு வந்திருக்கும் பெண் மூலம் புதிய பெண்ணுக்கு வலைவிரிக்கப்படும். துரையின் வீட்டைப் பெருக்கி சுத்த்ம் செய்துவிட்டு வந்துவிடுவோம் என்று புதியவளை அழைத்துச் செல்வாள். அங்கு போன பிறகு, இரவு உணவையும் சமைத்துவைத்துவிட்டு வா, நான் போகிறேன் என்று சொல்வாள். இன்னொரு ஆணுக்கு சமைத்துப் போடு என்ற ஒற்றை வாக்கியம் ஆழமான பொருள் பொதிந்தது. நுட்பமான வெளிப்பாடு, நாசூக்கு என்பதெல்லாம் எளிய மக்களுக்கு அந்நியமான ஒன்றல்ல. அவர்களுடைய வாழ்க்கையிலும் அது ஏராளம் உண்டு. இப்படியானவையெல்லாம் எளிய பார்வையாளருக்குப் புரியாது என்று சொல்லும் ஒரு படைப்பாளியின் ரசனை உணர்வைத்தான் நாம் இங்கு சந்தேகிக்க வேண்டும். இவை எல்லாம் நாவலில் அற்புதமாக இடம்பெற்றிருக்க படமோ தட்டையாகத் திரையில் விரிகிறது.

வெள்ளைக்கார துரைமார் கூலிப் பெண்களைப் பாலியல் இச்சைக்குப் பயன்படுத்திக் கொள்வதுபோலவே, துரையம்மாக்களும் வாட்ட சாட்டமான சிவந்த நிற கூலித் தொழிலாளர்களை தங்கள் இச்சைக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். கணவன் உடல் நிலை மோசமாகி மருத்துவமனையில் இருக்கும்போது கணவனின் தம்பியை உடலுறவுக்கு அழைக்கிறாள் ஒருத்தி. தன் மனைவியை துரைக்கு விருந்தாக்கி சலுகைகளைப் பெற்றுக்கொள்ளும் இடைநிலைப் பணியாளர்கள் என வாழ்வின் பல்வேறு பக்கங்கள் நாவலில் போகிற போக்கில் விரிகின்றன.

தங்கள் குதிரைகளுக்கான லாயத்துக்கு சிமெண்ட் தரை போட்டு அருமையாகக் கட்டுபவர்கள் கூலித் தொழிலாளர்களை படு மோசமான சூழலில் வாழ வைக்கிறார்கள். வெள்ளைக்காரர்களுக்கு முன்பாக இந்தியர்கள் யாரும் செருப்பு போடக்கூடாது, குடை பிடிக்கக்கூடாது என்ற கெடுபிடிகள். பணி நேரத்தில் இழைக்கப்படும் கொடுமைகள்… உடல் நலம் மோசமாக இருந்தாலும் அருகில் இருந்து கவனித்துக்கொள்ள யாரும் இல்லாத அவலம், பாதி குணமான உடம்புடன் பணி செய்ய வேண்டிய கொடூரம் என நாவல் தேயிலைத் தோட்டத் தொழிலாளியின் வேதனைகளை முகத்தில் அறைந்தாற்போல் சித்திரித்திருக்கிறது.

மழைக்காலத்தில் வெள்ளம் வருகிறது. ஆற்றுக்குக் கரையோரமாக இருக்கும் லைன் வீடுகளில் இருப்பவர்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். தப்பித்தவர்கள் எல்லாம் கரையில் தவித்தபடி நின்றுகொண்டிருக்க ஒரு சிறுவனும் சிறுமியும் அடித்துச் செல்லப்படுவதும் அவருடைய அம்மா கதறி அழுவதும் மற்றவர் அவரைத் தடுத்துப் பிடிப்பதும் நாவலில் தத்ரூபமாக சித்திரிக்கப்பட்டிருக்கும். படத்தில் இவை எதுவுமே கிடையாது.

இவையெல்லாவற்றையும்விட படத்தை ஒரேயடியாகக் காலி செய்வது தலித் கிறிஸ்தவ டாக்டரும் (டாக்டர் பரிசுத்தம்) அவருடைய வெள்ளைக்கார மனைவி கதாபாத்திரமும்தான். கிறிஸ்தவ மத மாற்றச் செயல்பாடுகள் என்பது இரண்டு வடிவங்களைக் கொண்டது. ஒரு சில பாதிரியார்கள் ஆத்மார்த்தமாக சேவை மனப்பான்மையுடன் கைகளில் சிலுவையைச் சுமந்தபடி உலகெங்கும் பயணித்தார்கள். சக மனிதர்பால் அவர்கள் கொண்ட அன்பே அவர்களை அப்படிச் செயல்பட வைத்தது. அவர்களுடைய சேவை என்பது புல் நுனியில் சேகரமாகும் பனித்துளியைப் போன்றது. ஆனால், கிறிஸ்தவ நீரோடை என்பது அத்தகைய பனித்துளிகளால் மட்டுமே நிரம்பியது அல்ல. அது, பல்வேறு அரசியல், பொருளாதாரத் தந்திரங்களின் கழிவுநீரும் கலந்தது. இந்த இரண்டு அம்சங்களில் ஏதேனும் ஒன்றை மட்டுமே சித்திரிப்பது பெரும் தவறு. அந்த ஏதோ ஒன்றையும் படு கேவலமாகச் சித்திரிப்பது மிகப் பெரிய தவறு. இந்தப் படத்தில் அதைத்தான் பாலா செய்திருக்கிறார்.

மலேரியா நோயினால் தோட்டத் தொழிலாளிகள் ஒருவர் பின் ஒருவராக இறந்து விழுந்துகொண்டிருக்க, அந்த மருத்துவ தம்பதியோ மதம் மாற்றுவதற்குக் கிடைத்த நல் வாய்ப்பாக அதைக் கண்டு மகிழ்கிறார்கள். இந்தக் காட்சிகளின் செயற்கைத்தன்மை படத்தின் ஒட்டுமொத்த உணர்வை கீழிறக்கிவிடுகின்றன.

அதோடு, நிஜத்தில் இந்தப் படத்தின் உருவாக்கத்துக்கு மூல காரணமாக நாவலை எழுதிய டேனியலின் சாயலில் அந்தக் கேவலமான மருத்துவர் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. 1925-ல் மக்களுடைய வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை நாவலில் விவரித்திருந்த டேனியல் உண்மையில் 1940-ல்தான் தேயிலைத் தோட்டத்துக்குச் சென்றிருப்பார். எனவே, படத்தில் 1940-ல் வரும் மருத்துவராகக் காட்டப்பட்டிருப்பவர் டேனியலின் சாயலில் படைக்கப்பட்டவர்தான் என்று நம்பமுகாந்தரமிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், நாவலில் அந்த கதாபாத்திரம் பேசும் வசனங்களில் சிலவற்றை அப்படியே திரைப்பட மருத்துவரும் பேசுகிறார். இது கிட்டத்தட்ட டேனியல்தான் அந்த மருத்துவர் என்று உறுதிப்படுத்தும்விதமாகவே இது இடம்பெற்றிருகிறது. அதிலும் அந்த டாக்டர் பரிசுத்தத்துக்கு அம்பேத்கர் போன்ற உடை அணிவித்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

உண்மையில் டேனியல் இந்த உருக்கமான நாவலை எழுதியதோடு நிற்காமல், தோட்டத் தொழிலாளர்களுக்காகத் தென்னிந்தியத் தோட்ட உத்தியோகஸ்தர்கள் சங்கம் என்ற ஒன்றை அமைத்து நினைத்தே பார்த்திராத பல உரிமைகளை வென்றெடுத்துத் தந்திருக்கிறார். அப்படிப்பட்ட ஒருவரின் சாயலில் படைக்கப்பட்ட கதாபாத்திரம் மத மாற்றத்துக்காக நாக்கைத் தொங்கப் போட்டபடி அலைந்ததாகக் காட்டியிருப்பது மிகவும் தவறு. ஒரு கலைஞனாக இருந்திருந்தால் பாலா நிச்சயமாக இப்படிச் செய்திருக்கமாட்டார். அதனால்தான், நான் கடவுளிலும் பிதாமகனிலும் வைத்திருந்த கதாநாயக சாகச க்ளைமாக்ஸை இந்தப் படத்தில் வைக்காமல் இருந்ததற்காக பாலாவை பாராட்ட முடியாமல் போய்விட்டிருக்கிறது.

இந்த இடத்தில் பாலாவுக்கு என்ன சிக்கல் வந்திருக்கும் என்பதை கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம். நாவலில் ஒரு மருத்துவர் கதாபாத்திரம் வருகிறது. அவர் தோட்டத்தொழிலாளிகளின் வேதனையைப் பார்த்து மனம் வருந்தி சில சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்கிறார். நாவலில் வரும் டாக்டர் பெரும் புரட்சியாளராகவோ பெரும் மீட்பராகவோ எல்லாம் சித்திரிக்கப்படவில்லை. நிஜத்தில் டேனியல் அப்படியான செயலைச் செய்திருக்கிறார் என்றாலும் நாவலில் வரும் டாக்டர் சில அடிப்படை சீர்திருத்தங்களை மட்டுமே செய்கிறார். ஒருவகையில் அந்த மருத்துவர் வந்த சிறிது காலத்துக்குள்ளேயே நாவல் முடிவடைந்துவிடுகிறது. எனவே, அவர் தான் செய்த சாதனைகளை நாவலில் விரிவாக இடம்பெறவைக்கவில்லை.

படத்தைப் பொறுத்தவரையில் பாலா நாவலுக்கு இணையான வேறொரு அழுத்தமான க்ளைமாக்ஸை எழுதிவைத்திருக்கிறார். கதாநாயகன் தோட்டச் சிறையில் இருந்து தப்பிக்க பெரும்பாடுபட்டுக் கொண்டிருக்க பூர்விக கிராமத்தில் இருக்கும் நாயகி அவனைத் தேடி அங்கு வந்து சேர்வதாக கதையை முடித்திருக்கிறார். இந்தப் படத்தில் பாலா செய்த உருப்படியான ஒரே விஷயம் அதுமட்டுமே. நரகக் குழியில் வந்து விழுந்துவிட்டாயே அங்கம்மா என்ற நாயகனின் அலறல் தமிழ் சினிமா வரலாற்றில் நிச்சயம் இடம்பிடிக்கும் காட்சியே. இந்த க்ளைமாக்ஸ் இத்தனை வலுவாக இருக்கவேண்டுமென்றால், மருத்துவ கதாபாத்திரம் எந்த நன்மையையும் செய்ததாகக் காட்டமுடியாது. அப்படிக் காட்டினால், முழுவதும் இருள் நிரம்பிய வாழ்க்கை என்ற சித்திரம் இடம்பெற முடியாமல் போய்விடும். அதே நேரத்தில் அந்த மருத்துவரைக் கொடூரமானவராகவும் காட்ட முடியாது. நிஜத்தில் அவர் செய்த சாதனைகளே அதற்குச் சாட்சி. நல்லவராகவும் காட்ட முடியாது… கெட்டவராகவும் காட்டமுடியாது… இதைவிடச் சிறந்த க்ளைமாக்ஸையும் யோசிக்க முடியாது என்ற இக்கட்டில் சிக்கிய பாலா அந்த மருத்துவர் கதாபாத்திரத்தை கோமாளியாகச் சித்திரித்திருக்கிறார். இது அவருடைய கலைத் திறமையின் பலவீனத்தைக் காட்டுகிறது.

paradesi-3

உண்மையில் இந்தப் பிரச்னையை அவர் எப்படித் தீர்த்திருக்கவேண்டும்? அந்த நல்ல மருத்துவரை கங்காணியும் துரைகளும் சேர்ந்து வேறு இடத்துக்குத் துரத்திவிடுகிறார்கள் என்று காட்சி அமைத்திருக்கலாம். நாவலிலேயே அதற்கான குறிப்புகள் இருக்கின்றன. வெள்ளைத் துரைகளுக்கு நல்ல மருத்துவரை வைத்து தொழிலாளர்களுக்குச் சிகிச்சை தர ஏற்பாடு செய்வதில் உடன்பாடு இருந்திருக்கவில்லை. கங்காணியும் வேறு சில கதாபாத்திரங்களும் புதிய மருத்துவரின் வருகையால் அதிருப்தி அடைந்து அவர் மீது பொய்க் குற்றம் ஏதாவது சுமத்தி அங்கிருந்து விரட்டிவிட திட்டமிடுகிறார்கள். இதையெல்லாம் படத்தில் வலுவாகக் கொண்டுவந்து அந்த மருத்துவரை இடமாற்றம் செய்திருக்கலாம். அப்படியாக, மெள்ளக் கறுத்துக் கொண்டு வரும் மேகக்கூட்டம் கொடுங்காற்றினால் கலைந்து போய்விடுவதுபோல் ஒரு சிறிய ஆசுவாசத்தைத் தந்த மருத்துவரின் வருகை ஏமாற்றத்துடன் முடிவதாகக் காட்டியிருக்கலாம். அவர்கள் ஒரு மருத்துவரின் வருகையை பெரும் விடுதலையாக நினைத்துக் கொண்டிருக்க, அது மேலும் ஒரு படி அவர்களைக் கீழே தள்ளிவிடுவதாக அவர்களுடைய வேதனையை இன்னும் அதிகரித்துக் காட்டவே செய்யும். க்ளைமாக்ஸுக்கு கூடுதல் கனம் கிடைக்கவே செய்யும். ஆனால், பாலா அப்படி சிந்தித்திருக்கவில்லை.

அல்லது மதமாற்றத்தின் மீதான வலுவான விமர்சனத்தை முன்வைக்க விரும்பினால், அந்த மருத்துவரின் சேவை மனப்பான்மைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் குறுகிய மனோபாவத்தை கலை அழகுடன் அதாவது இயல்பாகச் சித்திரித்திருக்கவேண்டும். இந்த இரண்டும் செய்யாமல் அந்த மருத்துவரைக் கோமாளியாக்கியதன் மூலம் படத்தை மிகவும் கீழிறக்கிவிட்டிருக்கிறார்.

பரதேசி திரைப்படத்துக்கான டீஸரையும் அதற்கு முன்பாக வெளியான படத்துணுக்குகளையும் பார்த்தபோது மனிதர்களை வைத்து வேலை வாங்குவதில் பாலா கில்லாடி என்பது நன்கு வெளிப்பட்டிருந்தது. பாலாவுக்கு ஒரு நல்ல இயக்குநர் மட்டும் கிடைத்தால் ஓர் அருமையான படத்தை அவரால் தந்துவிடமுடியுமே என்ற ஆதங்கமே படத்தைப் பார்த்து முடித்ததும் ஏற்பட்டது.

0

விஷரூபம்!

HYCP27VISHWAROOPAM_1342105gகமலின் பிற படங்களைவிட இந்தப் படம் சிறப்பாகவே உருவாக்கப்பட்டிருக்கிறது என்றாலும் இந்தப் படத்தின் அரசியல் கமலின் முந்தைய படங்களை மட்டுமல்ல… பிற தமிழ், இந்தியப் படங்களைவிடப் படு மோசமாக, அபாயகரமாக இருக்கிறது. ஒருவர் தன்னை எந்த அடையாளத்துடன் பிணைத்துக்கொள்கிறார் என்பதுதான் அவருடைய கருத்துகளையும் படைப்புகளையும் தீர்மானிக்கும்.

இதன்படிப் பார்த்தால், கமல் தன்னை சர்வதேச இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு எதிராகவும் அமெரிக்க நலன் விரும்பியாகவும் இருக்கும் இந்தியன் என்று அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புவதாகவே தெரிகிறது. இப்படியான அரசியல் பார்வை ஒருவருக்கு இருப்பதில் தவறில்லை. ஆனால் அந்தப் பார்வையை வைத்துக்கொண்டு, தன்னைக் கலைஞன் என்றும் உலகளாவிய தீவிரவாதம் பற்றி மனிதாபிமான முறையில் பேசுபவன் என்றும் சொல்லிக்கொள்ளக்கூடாது.

எலும்புத் துண்டு வீசபவன் காட்டுகிற திசையில்தான் எனக்கு குரைக்கத் தெரியும் என்று தெளிவாகச் சொல்லிவிட்டு இதைச் செய்யலாம். நீங்கள் யாராக இருக்கிறீர்களோ அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளுங்கள். வேசைத்தனம் செய்துவிட்டு பத்தினி வேடம் போடக்கூடாது.

உலகத் தீவிரவாதம் என்பது அல்கொய்தா, தாலிபன்களால் மட்டுமே நிகழ்த்தப்படவில்லை. அமெரிக்கா இதைவிடக் கூடுதல் அட்டூழியங்களைச் செய்துவருகிறது. ஆஃப்கானிய பிரச்னையை எடுத்துக்கொண்டால், கொலையும் செய்துவிட்டு, சவப்பெட்டியையும் அன்பளிப்பாக அனுப்பிவைக்கும் செயலைத்தான் அமெரிக்கா செய்துவருகிறது. உலக தீவிரவாதத்தைப் பற்றிப் படமெடுப்பவர் நிச்சயம் இந்த அம்சத்தையும் படத்தில் காட்டியிருக்க வேண்டும். ஏதாவது ஒரு அமெரிக்க ராணுவ அதிகாரியிடம், நம் தாக்குதலில் நூறு ஆப்கானியர்கள் இறந்துவிட்டார்கள் என்று சொன்னதும் வெறும் நூறுதானா என்று எகத்தாளமாகக் கேட்பதையும் காட்டியிருக்கவேண்டும்.

ஒவ்வொருமுறை குண்டு வீசிவிட்டு பாவ மன்னிப்பு கேட்பதில் கொஞ்சம் சிரமமாக இருக்கிறது. பாவம் செய்வதற்கு முன்பாகவே மன்னிப்பு கேட்டுக்கொள்ள வழியுண்டா… அப்படி இருந்தால் இன்னும் உற்சாகத்தோடு தாக்க ஏதுவாக இருக்கும் என்று பாதிரியாருடன் ஒயின் அருந்தியபடியே ஒரு அமெரிக்க ராணுவ ஜெனரல் சிரித்துப் பேசி மகிழ்வதாக ஒரு காட்சி எடுத்திருக்கவேண்டும். ஏனென்றால் அந்த அராஜகத்தைத்தான் அமெரிக்கா செய்துவருகிறது.

அடுத்ததாக தன்னை இந்தியன் என்று பெருமிதத்துடன் சொல்லிக் கொள்கிறார் கமல். ஆனால், படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில் என்பதுபோல் இந்திய ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் வகையிலேயே செயல்படுகிறார். தாலிபன், அல்கொய்தா தீவிரவாதம் பற்றிப் படம் எடுத்தால் தமிழக முஸ்லீம்களுக்கு ஏன் மனம் புண்படுகிறது என்ற கேள்வி நியாயமானதுதான். ஆனால், கடந்த இருபது முப்பது வருடங்களாகத் திரைப்படங்களில் இஸ்லாமியர் சித்திரிக்கப்பட்டுவரும் விதம் குறித்து சமூக அக்கறை உள்ள ஒரு படைப்பாளி சிந்தித்தாகவேண்டும். நான் உங்கள் நண்பன்தான். உங்களை நான் தீவிரவாதியாகச் சொல்லவில்லை என்ற சால்ஜாப்புகள் எல்லாம் செல்லுபடியாகாது. இஸ்லாமியர்களைத் தனிமைப்படுத்தும் இந்தப் போக்கை இஸ்லாமியர் அல்லாதவர்களும்தான் எதிர்க்கிறார்கள். எனவே இது வெறும் மிகையான அரசியல் செயல்பாடு மட்டுமே அல்ல. நாம் சொல்வது சரியாக இருந்தால் மட்டும் போதாது. அது எப்படி எதிர்கொள்ளப்படும் என்பதையும் பார்க்கவேண்டும்.

தமிழக வஹாபிய முஸ்லீம்கள் இந்தப் படத்தை எதிர்த்துச் செய்த செயல்கள் அனைத்துமே கண்டிக்கத் தக்கவையே. ஆனால், அவர்கள் செய்த தவறுகள் கமல் செய்த அநியாயத்தை இல்லாமல் ஆக்கிவிடாதே. ஆப்கானிஸ்தானிய இஸ்லாமியர்களிடத்திலும் அல்கொய்தாவின் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் இருந்திருப்பார்களே. அதையும் காட்சிப்படுத்தியிருக்க வேண்டுமல்லவா… ஏன் தமிழக சாதிப் பிரச்னையைப் பற்றிப் பேசவில்லை… ஏன் இலங்கைத் தமிழர் வேதனையைப் பற்றிப் படம் எடுக்கவில்லை… ஏன் இந்தியாவில் மலிந்திருக்கும் ஊழல் பற்றிப் படம் எடுக்கவில்லை என்றெல்லாம் கமலைப் பார்த்துக் கேட்க முடியாது. ஏனென்றால், தேவர் மகன், தெனாலி, இந்தியன் போன்ற காவியங்கள் மூலம் இதைப் பற்றியெல்லாம் அவர் ஏற்கெனவே பேசியாகிவிட்டது. எனவேதான், புதிய களம் தேடி ஆஃப்கானிஸ்தானில் குதித்திருக்கிறார்.

அதாகப்பட்டது, கமல்ஜி ஒரு இந்திய ராணுவ/உளவு வீரர். அல்கொய்தாவுக்கு ஆயுதப் பயிற்சி தரும் போர்வையில் நிஜாம் அகமது காஷ்மீரி என்னும் பெயரில் போகிறார். அங்கு அல்கொய்தாவினர் சில அமெரிக்க வீரர்களைக் கைதியாகப் பிடித்து வைத்திருக்கிறார்கள். கமல் சார் அதி நவீன டிடெக்டர் கருவி மூலம் அமெரிக்க ராணுவத்துக்கு அல்கொய்தா தீவிரவாதிகள் இருக்கும் இடத்தைக் காட்டிக்கொடுக்கிறார் (இந்தக் கருவியை ஒரு பாகிஸ்தானிய போதை மருந்து வியாபாரியின் பைக்குள்ள ரகசியமாக ஒளித்து வைத்திருப்பார்).

அமெரிக்க ராணுவம் வந்து தீவிரவாதிகளையும் மக்களையும் மூர்க்கத்தனமாக துவம்சம் செய்யும். அந்த ஆபரேஷன் முடிந்ததும் டிடெக்டர் கருவியை செயல் இழக்கச் செய்யும்படி தன் உதவியாளரிடம் கமல் சொல்லியிருப்பார். ஆனால், அதற்கு முன்பே பாகிஸ்தானியின் பையில் அது இருப்பதை அல்கொய்தாவினர் கண்டுபிடித்து விடுவார்கள். அந்த பாகிஸ்தானியை அடித்து கொல்வார்கள். நாம் செய்த செயலுக்கு நம் சகோதரர் (?) மாட்டிக்கொள்ள வேண்டிவந்துவிட்டதே என்று கமல் பதைபதைப்பார்.

அமெரிக்க ராணுவம் குண்டு மழைபொழிந்து ஆப்கானிஸ்தானிய அப்பாவிகளைக் கொல்லும்போதும் கலங்கவே செய்வார். அமெரிக்க ராணுவத்துக்கு உளவு வேலை பார்த்தபோது அவர்கள் வந்து தீவிரவாதிகளை மயிலிறகால் வருடி, பூச்செண்டால் அடித்துத் திருத்துவார்கள் என்று நினைத்தாரோ என்னவோ… இதை உமர் என்ற அல்கொய்தா தீவிரவாதி கதாபாத்திரம் மூலம் சொல்லவும் செய்வார். அதாவது அமெரிக்க ராணுவத்தினர் பெண்களையும் குழந்தைகளையும் கொல்லமாட்டார்கள் என்று அந்தக் கதாபாத்திரம் சொல்லும்.

அந்தத் தாக்குதலில் அமெரிக்க ராணுவத்தின் பலம் அதிகரித்ததும் தன்னுடைய உளவாளி வேடத்தைக் களைந்துவிட்டு, அல்கொய்தாவில் இருக்கும் பிற தீவிரவாதிகளைக் கொன்று தள்ளிவிட்டு, அமெரிக்காவுக்குப் போகிறார். வெறுமனே போகலை… கதக் நடனக் கலைஞர் வேடத்தில் நியூயார்க்கைக் காப்பாற்றுவதற்காகப் போகிறார்.

இந்தியாவில் இருக்கும் நியூக்ளியர் ஆன்காலஜி மாணவியான நிருபமா எப்படியாவது அமெரிக்காவில் பிஹெச்.டி. படிக்கவேண்டும் என்று துடிக்கறார். கதக் நடனக் கலைஞரான கமல் சார் (இப்போது அவருக்குப் பெயர் விஸ்வம்) பெண் தன்மை மிகுந்தவர், வயதானவர் என்பது எல்லாம் தெரிந்த பிறகும் அவரைத் திருமணம் செய்துகொண்டால் அமெரிக்கா செல்ல வாய்ப்பு எளிதில் கிடைக்கும் என்பதால் அந்தத் திருமணத்துக்கு சம்மதிக்கிறார்.

ஆனால், அமெரிக்கா போன இடத்தில் தன்னுடைய எஜமானரான (?) தீபக் என்பவருடன் ஸ்நேகம் ஏற்பட்டுவிடுகிறது. விஸ்வத்தை டைவர்ஸ் செய்துவிட்டு தீபக்குடன் வாழ முடிவெடுக்கிறார். அந்தத் திருமணமே பிஹெச்.டி. படிக்க அமெரிக்கா போகவேண்டும் என்பதற்காக செய்ததுதான். போதாத குறையாக கமல் சார் பெண் தன்மை மிகுந்தவராக, வயதானவராக வேறு இருக்கிறார். இவையே அவரை விவாகரத்து செய்வதற்குப் போதுமான காரணங்கள்தான். இருந்தும் கதை அடுத்த கட்டத்துக்கு நகரவேண்டும் என்பதற்காக கணவனுக்கு வேறு கள்ளத் தொடர்பு இருக்கிறதா என்று உளவு பார்க்க பீட்டர் என்பவரை நியமிக்கிறார் நிருபமா.

அந்த பீட்டர், விஸ்வத்தைப் பின் தொடர்ந்து வந்தபடியே இஸ்லாமிய தீவிரவாதிகள் இருக்கும் இடத்துக்கு வந்துசேர்ந்துவிடுகிறார். அவர்கள் அவரைக் கொன்றுவிடுகிறார்கள். ஆனால், பீட்டரின் டைரியில் நிருபமா பற்றியும் அவர் வேலை செய்யும் நிறுவனம் பற்றியும் தகவல் இருக்கிறது. அந்த நிறுவனத்தின் தலைவரான தீபக் தீவிரவாதிகளுடன் ஏற்கெனவே தொடர்பு உடையவர். எனவே, அவர்களுக்கு சந்தேகம் வருகிறது.

தீபக் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள நிருபமாவையும் அவருடைய கணவன் விஸ்வத்தையும் தீவிரவாதிகளிடம் பிடித்துக்கொடுத்துவிட்டுத் தப்பிக்கப் பார்க்கிறார். ஆனால், தீவிரவாதிகளோ நிருபமாவையும் விஸ்வத்தையும் பிடித்துவைத்துக் கொண்டு தீபக்கைக் கொன்றுவிடுகிறார்கள். இருவரைச் சிறைப்பிடித்து வைத்திருக்கும் தகவலை தீவிரவாதிகளின் தலைவன் உமருக்குத் தெரிவிக்கிறார்கள். பிடிபட்டவனின் புகைப்படத்தை மின்னஞ்சலில் அனுப்பும்படிச் சொல்கிறார் உமர். அவர்களும் அனுப்புகிறார்கள். அதைப் பார்த்ததும் உமர் அதிர்ச்சியில் உறைகிறார்.

ஏனென்றால் பிடிபட்ட விஸ்வம் வேறு யாருமல்ல… இந்த உலகில் உயிருடன் இருப்பவர்களிலேயே அதி பயங்கரமான ரகசிய உளவாளி. அல்கொய்தாவுக்கு ஆயுதப் பயிற்சி தருவதற்காக இந்திய ரா அமைப்பினால் அனுப்பிவைக்கப்பட்டவர். உமர் தன் ஆட்களுடன் விஸ்வம் இருக்கும் இடத்துக்கு வருவதற்குள் விஸ்வம் தன்னைச் சிறைப்பிடித்தவர்களை அடித்து துவம்சம் செய்துவிட்டு தப்பித்துவிடுகிறார்.

இதை எப்படிச் செய்கிறார் என்று கேட்பவர்கள் துப்பாக்கி, அலெக்ஸ் பாண்டியன் பார்த்திருக்க மாட்டார்கள். ஏனென்றால், கதாநாயகனை வில்லன் கட்டிவைத்து அடித்தால் நாயகனோ அல்லது அவருடைய ஆதரவான ஏதாவது கதாபாத்திரமோ வில்லனைப் பார்த்து, கட்டை அவிழ்த்துவிட்டு அடிச்சுப் பாருடா என்று சவால் விடவேண்டும். வில்லனும் அப்படியே செய்வான். கட்டு அவிழ்ந்ததும் அடுத்தவிநாடியே கதாநாயகன் விஸ்வரூபம் எடுப்பார். இது தமிழ் சினிமாவின் இலக்கணம். இங்கும் அப்படியே கமல் விஸ்வரூபம் எடுக்கிறார். ஆனால். இந்த ட்விஸ்ட் இந்தப் படத்தில் முந்தைய படங்களைவிடச் சிறப்பாக இடம்பெற்றிருக்கிறது.

படத்தில் இந்த கதக் நடனக் கலைஞர் பகுதிதான் முதலில் வருகிறது. அதன் பிறகுதான் ஆஃப்கானிய காட்சிகள் ஃபிளாஷ்பேக்காக வருகின்றன. அது முடிந்ததும் கதை நிகழ்காலத்துக்கு வருகிறது. அதன்படி அல்கொய்தா தலைவன் உமர் நியூயார்க் நகரத்தை முப்பது வருடங்கள் புல்லு பூண்டு கூட முளைக்க முடியாத அளவுக்கு ஒரு அணு குண்டால் தகர்க்கத் திட்டமிடுகிறான். அது எப்படியென்றால், புறாக்களின் காலில் சீசியம் என்ற அணுக்கதிர் வீசும் தனிமத்தைக் கட்டிப் பறக்கவிடவேண்டும். அமெரிக்க ராணுவம் அந்த புறாக்களைத் தங்களுடைய கைகர் கவுண்ட் கருவியால் சோதித்துப் பார்த்துவிட்டு அல்கொய்தாவினர் வெத்துவேட்டு மிரட்டல்தான் விடுத்திருக்கிறார்கள் என்று அசால்டாக இருப்பார்கள். அந்த நேரத்தில் அதி பயங்கர அணு குண்டை வெடிக்க வைத்து நியூயார்க்கை நிர்மூலம் ஆக்கிவிடவேண்டும்.

இந்த ரகசிய திட்டத்தை அல்கொய்தாவுக்கு பயிற்சி கொடுத்த காலகட்டத்தில் கமலிடம் உமர் சொல்லியிருப்பார். அமெரிக்காவில் அதற்கான ஏற்பாடுகள் நடந்துவருவதைப் பார்த்து கமல் சுதாரித்துவிடுவார். ஏமனில் இருந்து அப்பாஸி என்பவன்தான் அந்த வெடி குண்டை வைக்கப் போகிறான் என்பதைத் தெரிந்துகொண்டு அவனுடைய இருப்பிடத்தைச் சுற்றி வளைத்து அவனைக் கொன்றும்விடுவார்கள். ஆனால், அவன் தயார்நிலையில் வைத்திருக்கும் வெடி குண்டை எப்படிச் செயல் இழக்க வைப்பது..? வெடி குண்டுக்கு மேல் பொருத்தப்பட்டிருக்கும் செல்போனுக்கு யாராவது போன் செய்தால் அது வெடித்துவிடும். பாம் ஸ்குவாட் வந்து அதைச் செயல் இழக்க வைக்க ஐந்து நிமிடமாவது ஆகுமாம். அதாவது வெடிகுண்டை கண்டுபிடித்து செயலிழக்க வைக்கத்தான் அந்த தீவிரவாதியையே சுற்றி வளைக்கிறார்கள்.

ஆனால், பாம் ஸ்குவாட் மட்டும் கடைசியில்தான் வருமாம். பச்சை ஒயரா… சிவப்பு ஒயரா… எதைக் கட் பண்ண? என்ற விஜயகாந்த படக் க்ளைமாக்ஸ் நினைவுக்கு வருகிறதா… கூல்… கமல் சார் விஜயகாந்தைவிட அறிவுஜீவி அல்லவா… க்ளைமாக்ஸில் புதுமையைப் புகுத்துகிறார். வெடிகுண்டைச் செயல் இழக்கவைக்க என்ன செய்வதென்று யாருக்கும் தெரியாமல் தவிக்கிறார்கள். க்ளைமாக்ஸ் பரபரப்பு உச்சக்கட்டத்தில் இருக்கும்போது, நாயகி நிருபமா என்ன செய்கிறார் என்றால், சுமார் ஒன்றிலிருந்து இரண்டு அடி மட்டுமே உயரம் (ஆழம்) கொண்ட மைக்ரோவேவ் ஓவனை எடுத்துவந்து சுமார் மூன்று அடிக்கு மேல் உயரமாக இருக்கும் அந்த வெடிகுண்டுக்கு மேலாக ஃபாரடே ஷீல்டுபோல் கவிழ்க்கிறார். ஸ்பிரிங் பாம் போலிருக்கிறது. அப்படியே அதற்குள் அடங்கிவிடுகிறது. பிரச்னை அதோடு தீர்ந்தது. சிரிக்காதீர்கள். நான் ஜோக் அடிக்கவில்லை. வசூலில் உலகையே புரட்டிப்போடும் படத்தின் க்ளைமாக்ஸ் இதுதான். யதார்த்தம் கரை புரண்டு ஓடுகிறதா… கால்களை ஸீட்டின் மேல் வைத்துக்கொள்ளுங்கள்.

இதைவிடப் பெரிய காமெடி என்னவென்றால், அமெரிக்காவில் அணுகுண்டு வைக்கப் போகிறார்கள் என்பது அமெரிக்க உளவுத்துறைக்கு முன்பாக இந்திய ரா ஏஜெண்டான கமல்சாருக்குத் தெரிந்த உடனேயே ஹிலாரி கிளிண்டன் இந்திய பிரதமருக்கு போன் போட்டு பாராட்டிவிடுகிறார். இந்திய பிரதமர் உடனே கமல் சாருக்கு போன்போட்டு பாராட்டிவிடுகிறார். இவையெல்லாமே அணுகுண்டைக் கண்டுபிடித்து பெரிய மொறத்தைப் போட்டு மூடிக் காப்பாற்றுவதற்கு முன்பாகவே இந்த அனைத்து பாராட்டுகளும் வந்துகுவிந்துவிடுகின்றன.

அப்படியாக நியூ யார்க் நகரம் அதாவது உலகமே காப்பாற்றப்பட்டுவிடுகிறது. இனி மேல் பாலாறும் தேனாறும் உலகில் ஓடும் என்று நாம் சந்தோஷமாக ஸீட்டை விட்டு எழுந்திருக்கும்போது, கமல் சார் இன்னொரு ட்விஸ்ட் வைக்கிறார். அதாவது தீவிரவாத உமர் அல்லது யோக்கியரான தான் என்ற இருவரில் யாராவது ஒருவர் இறந்தால்தான் இந்த போராட்டம் முடிவுக்கு வரும்; அதுவரை இந்த உலகம் நிம்மதியாக இருக்க முடியாது என்கிறார். அடுத்த விஸ்வரூபம் இந்தியாவில் என்ற எச்சரிக்கை வேறுவிடப்படுகிறது.

இந்தப் படத்தில் கெட்ட முஸ்லீம்கள் மட்டுமல்லாமல் நல்ல முஸ்லீம்களும் கோடைக்கால மேகம் போல் ஆங்காங்கே தென்படுகிறார்கள். அமெரிக்க ராணுவத்தில்கூட சில முக்கிய பதவிகளில் இருப்பது முஸ்லீம்கள்தான். அப்பறம் இந்திய ஜேம்ஸ்பாண்ட் கமல் சார் இந்த அவதாரத்தில் ஒரு முஸ்லீமாகத்தான் நடிக்கவும் செய்திருக்கிறார். உயிரைக் கையில் பிடித்தபடி ஓடும் ஒரு அப்பாவிப் பெண் மேல் அமெரிக்க வீரர் தவறுதலாகச் சுட்டுவிட்டதும் சே தப்பு பண்ணிட்டோமே என்று வருந்துகிறார். ஆஃப்கானியர்களுக்கு மருத்துவ உதவி செய்வது கிளாரா என்ற அயல்நாட்டினர்தான்.

அல்கொய்தாவினர் தொழுகை நடத்தி முடித்ததும் ஒன்று யாரையாவது தூக்கில் போடுகிறார்கள். அல்லது கழுத்தை அறுக்கிறார்கள். அப்புறம் முஸ்லீம் தீவிரவாதம் என்பது உலகம் முழுவதும் பரவியிருப்பதை விலாவாரியாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். பிராமணர்கள் சிக்கன் சாப்பிடுவதுண்டு என்பதை, பாப்பாத்தி சிக்கனை நீ டேஸ்ட் பண்ணிப் பார்த்துச் சொல்லும்மா என்ற வசனத்தின் மூலம் சுட்டிக்காட்டியிருக்கிறார். கணவனுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் பெண் பெய் என்று சொன்னால் மழை பெய்யும் என்று வள்ளுவர் சொன்னதை நக்கலடிக்கிறார். ஒரு அற்ப துணைக்கதாபாத்திரம் இறந்துபோய்விட்டிருக்கும் நிலையில் அவர் செய்த ஒரு தவறைப் பற்றிப் பேசும்போது அதுதான் அவர் செத்துட்டாரே. விட்டுவிடுங்கள் என்று நிருபமா சொல்ல, அப்படியானால், ஹிட்லர் கூட இறந்துவிட்டார். அவர் செய்த தவறுகளையெல்லாம் மன்னித்துவிடமுடியுமா என்று தன் அசட்டு அறிவுஜீவித்தனத்தை வெளிப்படுத்துகிறார் (நல்லவேளையாக இது போன்றவை இந்தப் படத்தில் குறைவு)

கமல் உலக அரசியலைப் பற்றிக் கொஞ்சமாவது படித்திருந்தார் என்றால், வெளிப்படையான இஸ்லாமிய தீவிரவாதத்தைவிட தந்திரமான சர்ச் தீவிரவாதமே (அமெரிக்க – ஐரோப்பிய) இந்த உலகுக்கு மிகப் பெரிய அபாயம் என்பதைப் புரிந்துகொண்டிருப்பார்.

காலனிய ஆதிக்க காலத்தில் ஒவ்வொரு நாட்டையும் பிடித்து அங்கு பிரிவினைவாதக் கருத்துகளை விதைத்து மக்களை சண்டையிட்டு மடிய வைத்தார்கள். இப்போது உலகமயமாக்கல் காலகட்டத்திலும் அதே திருப்பணி இன்னும் தந்திரமாக இன்னும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் பிரிவினைவாதக் குழுக்களையும் அதிருப்தி குழுக்களையும் சிறுபான்மையினரையும் கருத்தியல்ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தூண்டிவிடுவது ஒருபக்கம். இன்னொரு பக்கத்தில் ஒவ்வொரு அரசையும் இறையாண்மையைக் கட்டிக் காப்பாற்று என்ற போர்வையில் ராணுவமயமாக்க வைப்பது… இப்படியாக சதுரங்கத்தின் இரண்டு பக்கத்திலும் அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள் செயல்பட்டுவருகின்றன. அவற்றுக்கான வலுவான களத்தை சர்ச் உருவாக்கித் தருகிறது.

ஹோட்டல் ருவாண்டா என்றொரு படம். ஆப்பிரிக்க நாடுகளில் இரண்டு இனக்குழுக்களுக்கு இடையே வெறுப்பை விதைத்து பெரும் ரத்தக் களறியை ஏற்படுத்தியது அமெரிக்க ஐரோப்பிய ஐநா கூட்டமைப்புகள்தான். ஆனால், அந்தப் படத்தில் முழுக்க முழுக்க அவர்கள் ரட்சகர்களாகவே காட்சிப்படுத்தப்படுவார்கள். வியட்நாமை அடியோடு நிர்மூலமாக்கிய அமெரிக்கா, அங்கு ஏதோ ஒரு பழங்குடியினர் ஒரு பாரம்பரிய விழாவுக்கு ஒரு யானையைக் கொண்டுவரும் படி கேட்டுக் கொள்வதாகவும் அமெரிக்க வீரர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து பழங்குடிகளின் நம்பிக்கையைக் காப்பதுபோல ஆபரேஷன் டம்போ டிராப் என்றொரு படம்.

யதார்த்தத்தில் ஒவ்வொரு தேசத்தையும் அடியோடு அழித்துவிட்டு கதைகளிலும் திரைப்படங்களிலும் தங்களை ரட்சகர் போல சித்திரித்துக் கொள்வதில் அமெரிக்கர்களுக்கு நிகர் அவர்களே. இந்தப் படத்தின்மூலம் அமெரிக்கர்கள் காலால் இட்ட பணியை தலையால் செய்து முடித்திருக்கிறார் கமல்.

இந்தியாவில் இந்தப் படம் இந்து – முஸ்லீம் இடைவெளியை அதிகரிக்கும் என்பதை யூகித்திருக்கவேண்டாமா..? 100 கோடி மக்கள்தொகையைக் கொண்ட ஒரு தேசம் ஒரே அடையாளத்தின் கீழ் ஒன்று திரண்டுவிட்டால் அதை நம்மால் வெற்றிகொள்ள முடியாது என்பதற்காக இந்தியாவில் குழப்பத்தை ஏற்படுத்தத் திட்டமிட்டுக் காய் நகர்த்தும் நாசகாரக் கும்பலுக்கு கைப்பாவையாகச் செயல்படுகிறோமே என்ற புரிதல் இருக்கவேண்டாமா?

இந்து – முஸ்லீம் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதுதான் இந்தியனாக ஒருவர் செய்ய வேண்டியது என்ற தெளிவு இருக்கவேண்டாமா? இத்தனைக்கும் நமக்கு மிகப் பெரிய பாரம்பரியம் இருக்கிறது.  பிரிட்டிஷார் நம் நாட்டை அடிமைப்படுத்தியபோது இந்துக்களும் முஸ்லீம்களும் தோளோடு தோள் சேர்ந்து நின்று போராடியிருக்கிறார்கள். அதுபற்றி ஒரு படம் கூட நம்மால் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

இரண்டாம் உலகப்போர், நாஜிக் கொடுமைகள் என ஐரோப்பிய அமெரிக்க திரைப்படங்கள் தங்களுடைய வரலாற்றின் முக்கிய காலகட்டத்தை நேர்மையாக, கலைஅழகுடன் பதியவைத்திருக்கின்றன. வலிமை மிகுந்த ஒரு எதிரியை எளிய மக்கள் கூட்டம் எதிர்க்கும் போது பின்பற்ற வேண்டிய ஆக்கபூர்வமான போராட்டமுறை எது என உலகுக்கே கற்றுத் தந்தவர்கள் நாம். ஆனால், அதைப் பற்றி ஒரு படம்கூட நம்மால் இதுவரை உருப்படியாக எடுக்கப்பட்டிருக்கவில்லை. நம்முடைய கலையை, வரலாற்றைப் பதிவு செய்வதை விட்டுவிட்டு அடுத்தவரின் தாளத்துக்கு ஏன் ஆடவேண்டும்?

கலை சுதந்தரம் என்றால் என்ன..? சொந்த வாழ்க்கையை விட்டுவிட்டு அடுத்தவனுக்கு அடியாளாக இருக்கும் உரிமையா அது? சுதந்தரம் பெற்ற பிறகு நாம் நமது அதிகார – அரச வர்க்கங்களின் நிர்வாகத் திறனின்மை காரணமாக பல்வேறு அவமானங்களுக்கும் அதிருப்திகளுக்கும் ஆளாகி வருகிறோம். மதவாத, சாதிய சக்திகள் இந்த அதிருப்தியைத் தங்கள் அரசியல் சார்ந்து பெரிதுபடுத்திவருகின்றன. இன்றைய நிலையில் ஓர் இந்தியக் கலைஞன்  செய்ய வேண்டிய காரியம், ஒற்றுமையை வலியுறுத்துவதுதானே. தொழில்நுட்பத் திறமை, கலைத் திறமை இவையெல்லாமே இருந்தும் அரசியல் தெளிவு இல்லையென்றால் என்ன பயன்?

கமல் படம் எடுக்கக் கற்றுக் கொண்டுவிட்டிருக்கிறார் என்பது உண்மைதான். ஆனால், நல்ல படம் எடுக்க எப்போது கற்றுக் கொள்வார்?

ஆழமும் அலைகளும் அற்ற கடல்

1355893832_Kadal-Movie-New-Posters-3

தேவனின் பிரதிநிதியாக ஒருவன்… சாத்தானின் பிரதிநிதியாக இன்னொருவன்… சாத்தானின் பிரதிநிதி தேவனின் பிரதிநிதிக்குத் தொடர்ந்து நெருக்கடிகள் கொடுக்கிறான். ஆனால், அன்பின் பாதையில் இருந்து துளியும் பிசகாமல் தேவனின் பிரதிநிதி போராடுகிறான். கடைசியில் தேவனின் பிரதிநிதி சாத்தானின் வலையில் விழ நேருகிறது. அதாவது, சாத்தானின் பிரதிநிதியின் கொடுமை தாங்காமல் அவனைக் கொல்ல முடிவெடுக்கிறான். உன் கையால் நான் கொல்லப்பட்டால், நான் செத்தாலும் ஜெயிப்பேன். நீ வாழ்ந்தாலும் தோற்பாய்… என்று கெக்கலிக்கிறான் சாத்தான். என்னைக் கொல்லாதே.. நீயும் என் பக்கம் வந்துவிட்டால் உலகில் நன்மையே இல்லாமல் போய்விடும் என்று நைச்சியமாகப் பேசிப் பார்க்கிறான். இந்த மாபெரும் போராட்டத்தில் கடைசியில் என்ன நடக்கிறது என்பதுதான் கடல் படத்தின் மையக்கரு.

மிகவும் அருமையான கதை. ஜெயமோகன் போன்ற இலக்கியவாதியால் மட்டுமே எழுத முடிந்த கதை. பொய்யே சொல்லமாட்டேன் என்று ஒருவன் சபதம் எடுக்கிறான். உன்னைப் பொய் சொல்ல வைத்தே தீருவேன் என இன்னொருவன் கங்கணம் கட்டுகிறான். க்ளைமாக்ஸில் யார் ஜெயிக்கிறார் என்ற அரிச்சந்திர புராணக் கதையின் சாயலை மையமாகக் கொண்ட கதை.  அநேகமாக ஜெயமோகன் இந்தக் கருவை மையமாகவைத்துத்தான் தன் திரைக்கதையை எழுதியிருப்பார் என்று நினைக்கிறேன்.

ஆனால், தமிழ் திரையுலகம் தனக்கான தனி இயங்குவிதிகளைக் கொண்டது. அது எதையுமே காதல் என்ற கண்ணாடி வழியாகத்தான் பார்க்க விரும்பும். எனவே, இந்தக் கதைக்குள் ஒரு காதல் கதையை நுழைக்கும்படி இயக்குநர் மணிரத்னம் அன்புடன் கேட்டுக்கொண்டிருப்பார். அவருடைய அன்பைத் தட்டமுடியாமல் இளகிய மனம் கொண்ட ஜெயமோகன் காதல் கதையை மையக்கதைக்குள் ”கலை நய’த்துடன் திணிக்க முயற்சி செய்திருக்கிறார்.

அதாவது, தேவனின் வளர்ப்பு மகனுக்கும் சாத்தானின் மகளுக்கும் இடையிலான காதலை எழுதி, அதனை மையக்கதைக்குள் செருகியிருக்கிறார். தேவனின் வளர்ப்பு மகன் சாத்தானின் குணமுடையவனாகவும் சாத்தானின் மகள் தேவனின் அம்சம் மிகுந்தவளாகவும் ஒரு ”முரணியக்க நகை முரணை’யும் சிரமப்பட்டுக் கதைக்குள் கொண்டுவந்திருக்கிறார்.

காதல் இருந்தால்தான் தமிழ்ப் பார்வையாளர் படத்தைப் பொறுமையாக உட்கார்ந்து பார்ப்பார் என்ற இயக்குநரின் இந்த முன்முடிவின் மூலம் தரமான பார்வையாளரை நிறையவே ஏமாற்றமடையச் செய்துவிடுகிறார் திரைக்கதை ஆசிரியர். அதிலும் தேவனின் வளர்ப்புமகன் கடத்தல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவது, சாத்தானின் மகள் கிறிஸ்தவ சமூக சேவை மையத்தில் வளர்வது போன்ற காட்சிகள் எல்லாம் திரைக்கதையின் படு சினிமாத்தனமான கண்ணிகள்.

இங்கு நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம் ஒரு கதையானது காட்சி ஊடகத்துக்குக் கொண்டுசெல்லப்படும்போது செய்தாகவேண்டிய நியாயமான மாற்றங்கள் வேறு… ரசனை குறைந்த பார்வையாளர் கூட்டத்துக்காக என்று அல்லது அந்தப் போர்வையில் நீர்க்கவைப்பது என்பது வேறு என்பதைத்தான். இப்படியான சமரசத்தின் மூலம் ஜெயமோகன் எழுதும் கதை ரொம்பவும் மலினப்படவில்லை என்பதுதான் ஒரே ஆறுதல். அவருடைய இலக்கிய சாதனைகளோடு ஒப்பிடும்போது இந்தத் திரைக்கதை பலவீனமாகத் தோன்றக்கூடும். ஆனால், இப்போதும் பிற தமிழ்த் திரையுலகத்தினரின் படைப்புகளைவிட அது மேலானதுதான் (இந்த ஆறுதல் நீண்டகாலத்துக்கு இப்படியே நீடிக்கவும் கூடாது. அவருடைய இலக்கியப் படைப்புகளுக்கு நிகரான திரைக்கதைகளை எழுதுவதற்கான சூழலை அவர் உருவாக்கிக் கொண்டுவிடவேண்டும்).

மணிரத்னத்துக்கு இது மிகவும் வித்தியாசமான முயற்சி. இந்து கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட படங்களில் கண்ணில் விளக்கெண்ணை விட்டுத் தேடிப்பார்த்தாலும் இந்து அடையாளங்கள் தென்படவே செய்யாத அல்ட்ரா மாடர்ன் தனம்தான் அவர் படத்தில் இருக்கும். இந்தப் படத்துக்கான ஃபைனான்சியர்கள் என்ன சொல்லியிருப்பார்களோ தெரியவில்லை. கிறிஸ்தவப் பின்னணியை படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் வலிந்து திணித்திருக்கிறார் (அழகியலுடன்தான்). இப்படியான இந்து அடையாளங்கள் ரஜினி, விஜய் வகையறா படங்களில் டைட்டில் சாங்கில் இருந்து ஏராளம் இடம்பெறுவது உண்டென்றாலும் மணிஜி அதில் இருந்து ரொம்பவும் விலகியே இருப்பார். கதைக்களம் என்ற பேரில் கிறிஸ்தவ அடையாளத்தை திகட்டும் அளவுக்குத் திணித்திருப்பவர் இனி வரும் இந்து பின்னணிப் படங்களை எப்படி எடுப்பார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

பொருளாதார பலத்தைப் பெற ஆரம்பித்ததும் மேற்கத்திய கிறிஸ்தவ நிறுவனங்கள் எப்படியாகத் தங்கள் மத மதிப்பீடுகளை வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவதுபோல் ஏற்றுவார்கள் என்பதற்கு சமீபத்தில் வெளியாகும் படங்களே சான்று. கென்னி விக்ரம் – ஜீவா அன்கோவின் டேவிட் என்ற படமும் இதே நாளில்தான் வெளியாகியுள்ளது. விண்ணைத் தாண்டி வருவாயா, பயணம், நான் ஈ, நீர்ப்பறவை, தாண்டவம் என கிறிஸ்தவச் சார்பு படங்கள் சாரைசாரையாக வர ஆரம்பித்திருக்கின்றன. ஏற்கெனவே, பாரதிராஜாவில் ஆரம்பித்து கமலஹாசன் வரை கிறிஸ்தவ மென் சாய்வுடன் பழைய ஏற்பாட்டில் இயங்கிவந்திருக்கிறார்கள். என்றாலும் இந்தப் புதிய ஏற்பாடு நின்று விளையாடும் என்றே தோன்றுகிறது. இஸ்லாமிய வெறுப்பு, இந்து மத இழிவுபடுத்தல்கள் என மேற்கத்திய கிறிஸ்தவத்தின் இரண்டு பிரதான இசைகுறிப்புக்கு ஏற்ப தமிழ்/இந்தியக் கலையுலகம் ஆடத் தயாராகிவருகிறது. அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு பொருளாதார அதிகாரம்… அதன் பிறகு சமூக/மத அதிகாரம்தானே…

*********

திரைப்படத்துக்குப் பொருத்தமானது சிறுகதை வடிவம்தான். ஒரு குறிப்பிட்ட இலக்கு அல்லது முடிச்சு. அது எவ்வாறு அடையப்படுகிறது அல்லது அவிழ்க்கப்படுகிறது இதுதான் சினிமாவின் அடிப்படை இலக்கணம். தென்னிந்திய குக்கிராமத்தில் இருக்கும் ஒரு பெண்ணை வட இந்தியத் தீவிரவாதி கடத்தினால் என்ன ஆகும்? தத்தெடுக்கப்பட்ட குழந்தை தன் அசல் அம்மாவைத் தேடிச் செல்கிறது. அந்த அம்மாவோ ஒரு விடுதலை இயக்கத்தின் போராளி… என்ன ஆகும்? தன் தங்கையை காவல்துறையினர் மானபங்கப்படுத்துவதால் காவலரின் மனைவியை கடத்திச் சென்றுவிடுகிறான் பழங்குடித் தலைவன்… காவல்துறை அதிகாரி தன் மனைவியை எப்படி மீட்கிறார்? மணிரத்னம் இந்த சினிமா இலக்கணம் நன்கு தெரிந்தவர். ஆனால், எப்போதுமே சரியான பாதையில்தான் போகவேண்டுமா என்ன..? கொஞ்சம் தவறாகவும் செயல்பட்டுப் பார்ப்போமே என தீர்மானித்து இந்தப் படத்தில் பல கதைகளை அதாவது ஒரு நாவலைப் படமாக்க முன்வந்திருக்கிறார். இதற்கு முன் கலை ரசிகர்களையும் திருப்திப்படுத்த முடியாமல் வணிக வெற்றிகளையும் குவிக்க முடியாமல் இரண்டுங்கெட்டான் தனமான படங்களை இயக்கிய மணிரத்னம் இந்த முறை கதைக்குள்ளேயே அந்த இரண்டுங்கெட்டான் தனத்தைக் கொண்டுவந்திருக்கிறார்.

படமானது தேவன் – சாத்தான் போராட்டமாகவும் உருப்பெறவில்லை. காதல் படமாகவும் உருப்பெறவில்லை. இரண்டு படங்களை வெட்டி ஒட்டி உருவாக்கிய ஒரு படம் எப்படி இரண்டுக்கும் நேர்மையாக இருக்க முடியாதோ அதேபோல் இந்தப் படம் ஆகிவிட்டிருக்கிறது.

********

 தங்கத் தொட்டிலில் தூங்கிய சீமான் அரவிந்த்சாமியும் (சாம்) பட்டினியின் தொட்டிலில் தூங்கிய அர்ஜுனும் (பெர்க்மான்ஸ்) கிறிஸ்தவ கல்வி மையம் ஒன்றில் பாதிரியார் பணிக்காகப் படிக்கிறார்கள். அர்ஜுன் ஒரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருப்பதை அரவிந்த்சாமி பார்த்து மேலிடத்தில் சொன்னதும் பாவ மன்னிப்பு கேட்கச் சொல்கிறார்கள். அதை மறுத்து அர்ஜுன் பள்ளியை விட்டு வெளியேறிவிடுகிறார். அதன் பிறகு இடைவேளைக்கு சற்று முன்பாகத்தான் திரும்பி வருகிறார். இத்தனைக்கும் நம் இருவருக்கும் இடையிலான ஆட்டம் ஆரம்பித்துவிட்டது. தயாராக இரு என்று சவால் விட்டுவிட்டுத்தான் பள்ளியைவிட்டு வெளியேறுகிறார். ஆனால், அடுத்த 20 வருடங்களில் பெரிய கடத்தல்காரராக உருவாகிறாரே தவிர தன் பரம விரோதியான அரவிந்த்சாமியைப் பற்றி எந்த நினைவும் இல்லாமலேயே இருக்கிறார் (இதற்குக் காரணமாக எந்த நோயும் படத்தில் யோசித்துச் சொல்லப்பட்டிருக்கவில்லை).

இடைவேளைக்கு முன்பாகத் திரும்பி வருபவர் பாதிரியாரான அரவிந்த்சாமி தன்னை மிகப் பெரிய ஆபத்தில் இருந்து காப்பாற்றிய பிறகும் பழைய பகையை மனத்தில்வைத்துக்கொண்டு, அரவிந்த்சாமியை ஒரு விபச்சாரியுடன் இணைத்து கதைகட்டி ஊர் மக்களைக் கொண்டு அடித்துவிரட்ட வைக்கிறார். அரவிந்த்சாமியால் தத்துப் பையன்போல் வளர்க்கப்பட்டுவரும் தொம்மன் (கார்த்திக்கின் மகன் கவுதம்) தனக்கு ஆதரவாக இருந்த பாதிரியாரை அடித்துத் துரத்திய ஊரைத் தன் காலடியில் விழவைக்கவேண்டும் என்று கடத்தல்காரரான அர்ஜுனுடன் போய்ச்சேருகிறார். கண்ணில் தென்படுபவர்களையெல்லாம் சுட்டு வீழ்த்துகிறார். ஏராளமான கடத்தல் பணிகளை மளமளவெனச் செய்து முடிக்கிறார்.

நான்கு வருடங்களில் அரவிந்த்சாமி ஜெயிலில் இருந்து வெளியே வந்துவிடுகிறார். தன்னை அடித்து விரட்டிய அதே ஊருக்குத் திரும்புகிறார். அங்கிருப்பவர்கள் அவரை மறுபடியும் அடித்து விரட்ட முயற்சி செய்கிறார்கள். அரவிந்த்சாமியோ என்னைக் கொன்றாலும் பரவாயில்லை நான் ஆரம்பித்த பணியை முடிக்காமல் போகமாட்டேன் என்று சூளுரைத்து அங்கேயே தங்குகிறார். தொம்மனைச் சந்தித்து தேவனின் பாதைக்குத் திரும்பும்படிக் கேட்டுக் கொள்கிறார். அவனோ மறுத்துவிடுகிறான்.

இதனிடையில் அவன் கிறிஸ்தவ அநாதை விடுதியில் இருக்கும் ஒரு செவிலிப் பெண்ணை (பியாட்ரஸ்) சந்தித்துக் காதல்வயப்படுகிறான். அந்தப் பெண் அவனை நல்வழிக்குத் திரும்பச் சொல்கிறாள். அடுக்கடுக்காகத் தான் செய்த பாவங்களையெல்லாம் சொல்லி நான் கெட்டவன் எனக்கு பாவ மன்னிப்பே கிடையாது என்று கதறுகிறான். அந்தப் பெண்ணோ ”இதுவரை தப்பு செய்திருந்தா என்ன… இனிமே செய்யாத’ என்று குழந்தைபோல் சொல்லி அவனை மனம் மாற வைத்து விடுகிறாள். பாதிரியாரும் அந்த இளம் சிட்டுகளை ஒன்று சேர்க்க முன்வருகிறார். அந்தப் பெண்ணின் அப்பா அம்மாவிடம் அனுமதி கேட்டுவரச் சொல்லி அனுப்புகிறார். இந்த இடத்தில்தான் ஒரு அதி பயங்கர திருப்பம் வருகிறது. அதாவது அந்தப் பெண்ணின் தந்தை வேறு யாருமில்லை நம்ம சாத்தான் அர்ஜுன்தான்.

நேராக அந்தப் பெண்ணை அர்ஜுனின் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறான் தொம்மன். அவளைப் பார்த்ததும் அர்ஜுன் கோபத்தின் உச்சத்துக்குப் போகிறான். உண்மையில் அர்ஜுனின் மகள் அவனுடைய வன்முறைச் செயல்களை (அம்மாவை மாடியில் இருந்து தள்ளிக் கொன்றது, எதிரிகளை துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது போன்றவற்றைப்) பார்த்து சிறு வயதில் சித்தம் கலங்கிப் போயிருப்பாள். அதாவது மூளை இரண்டு மூன்று வயதுக்கு மேல் வளராமல் அப்படியே இருந்துவிடுகிறது. இந்த நோயுடைய அந்தப் பெண் தன் அப்பாவை பத்து பன்னிரண்டு வருடங்களுக்குப் பிறகு பார்த்ததும் பழைய நினைவுகள் வந்து சித்தம் கலங்கிவிடுவாள்.

அர்ஜுனுக்கும் தன் மகளை மீண்டும் சந்தித்தது பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தும். தன்னுடைய பழைய விரோதியான அரவிந்த சாமி, அவருடைய வளர்ப்பு மகனான தொம்மன், தன் மகள் மூவரையும் கொல்லத் தீர்மானிப்பான். பைக்கில் வரும் தொம்மனை டாடா சுமோவை விட்டு மோதி ஆற்றில் தூக்கி எறிந்துவிட்டு, அரவிந்த்சாமியையும் தன் மகளையும் அடித்துக் கட்டிப்போட்டு, கடலில் சுறா மீன்களுக்கு உணவாக எறியப் போவான். அது நாள் வரை அமைதியாக இருந்த கடல், க்ளைமாக்ஸ் நெருங்கியது தெரிந்ததும் பேயாட்டம் ஆட ஆரம்பித்துவிடும். அந்தப் புயலில் அர்ஜுன் தன் மகளை தாறுமாறாக அடித்து அவளைக் கடலில் தள்ளிக் கொல்லபோவார். அதாவது, இரண்டு காலையும் பிடித்து தலைகீழாக அவளை போட்டுக்கு வெளியே வீசி எறியப் போவார். இந்த இடத்தில் அவர் தன் மகளைக் கொன்றாரா இல்லையா என்பது சஸ்பென்ஸாக இருக்க காட்சி சட்டென்று தொம்மன் பக்கம் திரும்பும். தன் காதலியை அவளுடைய அப்பா போட்டில் ஏற்றிக்கொண்டு கொல்வதற்காகப் போயிருக்கிறார் என்பது தெரிந்ததும் கட்டுமரத்தில் ஏறி அந்த போட்டைச் சென்று சேர்ந்துவிடுவான். அங்குதான் அரவிந்த்சாமியையும் கட்டிப் போட்டிருகிறார் என்பது தெரிந்ததும் அவரை விடுவிப்பான். இருவருமாகச் சேர்ந்து அர்ஜுனைப் பந்தாடுவார்கள். ஆனால், சாத்தானின் பிரதிநிதியான அர்ஜுனோ சளைக்காமல் இருவரையும் துவைத்து எடுப்பான்.

கடைசியில் சினிமா இலக்கணத்தின்படி வில்லன் தோற்றுவிடுவான். அரவிந்த்சாமி அவனுடைய காலை ஒரு பெரிய கயிற்றில் கட்டி கடலுக்குள் முக்கி எடுத்துக் கொல்லுவார். அர்ஜுனோ தயவு செய்து என்னைக் கொல்லாதே… நீ நல்லவன். உன் கைகளைக் கறையாக்கிக் கொள்ளாதே என்று கெஞ்சுவான். நீ என்னைக் கொன்றால் நீயும் என்னைப் போல் சாத்தானாக ஆனதுபோல் ஆகிவிடும். அது எனக்கு வெற்றிதான் என்று எகத்தாளம் செய்வான். ஆனால், அரவிந்த்சாமியோ எதையும் கேட்காமல் அவனை கடலுக்குள் மூழ்கடித்துவிடுவார். இதனிடையில் தொம்மன், அர்ஜுனைக் கட்டிய கயிற்றை மேலே இழுத்து அவனைக் காப்பாற்றிவிடுவான். அரவிந்த்சாமி நல்லவனாகவே இருக்க வேண்டும். ஒரு கொலையை செய்யக்கூடாது என்று சொல்லி அவரை அழைத்துக் கொண்டு தங்களுடைய கட்டுமரத்தை நோக்கிப் போவான். அப்போது இன்னொரு திருப்பம் நடக்கும் அதாவது, அர்ஜுன் தன்னுடைய மகளைக் கொல்லவில்லை. உயிருடன்தான் இருக்கிறாள் என்று சொல்வார். ஆனால் அவள் பயத்தில் மன நிலை பிறழ்ந்துபோயிருப்பாள். மருத்துவமனையில் அவளை தொம்மன் போய்ப் பார்ப்பான். மன நிலை பிறழ்ந்த நிலையிலும் அவள் அவனுடைய கை விரல்களைத் தன் விரல்களால் பற்றிக் கொண்டு தன் அன்பைத் தெரிவிப்பாள். அப்படியாக காதலர்களும் ஒன்று சேர்ந்துவிடுவார்கள்.

********

கார்த்திக் கவுதம் மிகவும் அழகாக இருக்கிறார். நன்றாக நடிக்கவும் செய்கிறார். ஓரளவுக்கு நல்ல தொடக்கம்தான். ஆனால், சுப்பிரமணியபுரம், பருத்திவீரன் போன்ற படங்களில் அறிமுகமாகியிருந்தாலோ தந்தையைப் போலவே பாரதிராஜாவின் படத்தில் அறிமுகமாகியிருந்தாலோ ஒரு பெரும் கொண்டாட்டம் சாத்தியப்பட்டிருக்கும் (அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் நாயகன் இளவயதினன் இல்லையா… எப்படி கோட்டைவிட்டார்கள் தெரியவில்லை). ஓகே. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

இந்தப் படத்தின் அடுத்த அட்ராக்‌ஷன் ராதாவின் மகள் (பியாட்ரஸ்). தேவதை தேவதை என்று படத்தில் அவரைச் சொல்கிறார்கள். கழுத்தில் இருந்து கால்வரை தேவதைதான். ஆனால், முத்திப்போன முகம் ரொம்பவே படுத்துகிறது. அதிலும் அவருடைய கதாபாத்திர வார்ப்பு படு சினிமாத்தனமாக இருக்கிறது.

காதல் காட்சிகளைப் பொறுத்தவரை திரைக்கதையும் பலவீனம். பின்னணி இசையும் படு சுமார். நடன அசைவுகள் வழக்கம்போலவே பி.சி. செண்டர்களின் ரசனைக்குச் சற்றும் பொருந்தாத தளத்திலேயே இருக்கின்றன. பிற மணிரத்னத்தின் மேட்டுக்குடிப் படங்களில் இது நெருடலாகத் தெரிந்திருக்கவில்லை. ஆனால், கிராமப்புற மீனவப் பின்னணிப் படத்தில் இவை எண்ணெய் கசிந்த கடலில் மிதக்கும் இறந்த மீன்களைப் போல் ஒட்டாமல் மிதக்கின்றன. நெஞ்சுக்குள்ளே போன்ற அழகான பாடல்களையும்கூட எவ்வளவு முடியுமோ அவ்வளவு வீணடித்திருக்கிறார் இயக்குநர். இப்படியான ஒரு நிலையில் நாயகியின் அழகின்மை காதல் காட்சிகளை சராசரி பார்வையாளரிடமிருந்து மேலும் அந்நியப்படுத்திவிடுகின்றன. அதிலும் குழந்தைத்தனமான பெண் என்ற பெயரில் செவிலிப் பணியில் இருப்பவள் ஸ்லீவ் லெஸ் உடை உடுத்துவது, பிரசவம் பார்க்கும்போது ஊரே கூடியிருக்கையில் ஓர் ஆண்மகனை உதவிக்கு அழைத்துக் கொள்வதெல்லாம் கொஞ்சம் அதிகப்படியானதாகவேபடுகிறது.

கார்த்திக்கின் மகனையும் ராதாவின் மகளையும் தேர்ந்தெடுத்தது என்ன வணிக ஆதாயத்தைத் தந்திருக்குமோ அதில் பத்தில் ஒரு பங்கு சந்தோஷத்தைக்கூடப் படம் பார்வையாளர்களுக்குத் தரவில்லை.

இசையையும் பாடல் வரிகளையும் பற்றிச் சொல்வதானால், ஏ.ஆர்.ரஹ்மான் தன் அயல் நாட்டு விமானப் பயணங்களின் போது (அல்லது சரியாகச் சொல்வதானால் இந்திய வருகையின்போது) ஜன்னலோர சீட் கிடைத்த நாட்களில், அதிலும் தூக்கம் வராத நேரங்களில் எட்டிப் பார்த்து, கீழே நீலமா அலை அலையா இருக்கே அது என்ன என்று கேட்டிருக்கக்கூடும். ஏர்ஹோஸ்டஸ் சிரித்தபடியே அதுதான் சார் கடல் என்று சொல்லியிருக்கக்கூடும். ஏ.ஆர்.ரகுமானுக்காவது கடலுடன் அப்படியான ஒரு பரிச்சயம் இருந்திருப்பது படத்தைப் பார்க்கும்போது தெரியவருகிறது.

கவிப்பேரரசுவோ கடல்ன்னா உசிலம்பட்டிக்கு தெக்கேயோ ஆண்டிப்பட்டிக்கு வடக்கயோ இருக்கற கம்மாய்தான் என்று நினைத்துவிட்டார் போலிருக்கிறது. இச்சி இலையையும், ஆட்டுக்குட்டியையும் தாண்டி கவிதைக் குதிரை நகரவே இல்லை. வடிவேலு ஒரு படத்தில் ஆனியன் ஊத்தப்பம் எப்படிப் போடவேண்டும் என்று இன்ஸ்ட்ரக்‌ஷன் தருவார். அரைக்கரண்டி நெய்யை விட்டு, ரெண்டு கரண்டி மாவை பொத்தினாப்புல ஊத்தி, பொடி பொடியா வெங்காயத்தை நறுக்கி, கொஞ்சம் காரட்டையும் நறுக்கி போட்டு, பொன்னிறத்துல பதமா திருப்பிப் போட்டு நல்ல கம கமன்னு கொண்டுவான்னு சொல்வார். சர்வரோ சரக்கு மாஸ்டரைப் பார்த்து ஒரு ஆனியன் ஊத்தப்பம் என்று ஒற்றை வரியில் முடித்துவிடுவார். நாம் என்னதான் குறிப்புகள் கொடுத்தாலும் சரக்கு மாஸ்டர் அவருக்குத் தெரிந்ததைத்தானே செய்ய முடியும். கடல்புரத்தைப் பின்னணியாகக் கொண்ட படம் என்றாலும் விவசாயப் பின்புலம் கொண்ட வைரமுத்துவுக்கு ஆடும், வயலும், ஒத்தையடிப்பாதையும் இச்சி மர இலையும் மட்டும்தானே தெரியும். இதே வைரமுத்து அன்கோதான் அந்நியன் படத்தில் ஐயங்கார் ஆத்துப் பொண்ணைப் பார்த்து ஐயங்கார் ஆத்து அம்பி, இசக்கி கடை இனிப்பு மிட்டாயே என்று உருகிப் பாடுவதாக எழுதியிருந்தது. சட்டியில் உள்ளதுதானே அகப்பையில் வரும்.

பிற கலைஞர்கள் எல்லாம் இவ்வளவு அலட்சியமாக ஒரு படத்தை அணுகியிருக்கும் நிலையில் கதை-திரைக்கதை-வசனத்தின் மூலம் ஒற்றை ஆளாக ஜெயமோகன் கடல்புரத்தை முடிந்தவரையில் நம் முன் கொண்டுநிறுத்துவதை கைதட்டி வரவேற்கத்தான் வேண்டும். இடைவேளை வரையிலான படம் மிகவும் அருமை. ஆனால், இரண்டு படத்தின் கதையை தனித்தனியான இரண்டு படமாகவே எழுதியிருந்தால், அதாவது, ”மணிஜி, உங்களுக்காக காதல் படத்தை மூழ்வதுமாக எழுதித் தருகிறேன். அந்த வணிக வெற்றியை வைத்து தேவன் – சாத்தான் போராட்டம் என்ற கொஞ்சம் கனமான இன்னொரு படத்தை எடுங்கள்’ என்று பேசி ஒப்புக்கொள்ளவைத்திருந்தால் தமிழுக்கு இரண்டு அருமையான படங்கள் கிடைத்திருக்கும். என்ன செய்ய… பாகனின் திசையில் அல்லவா பயணிக்க வேண்டியிருக்கிறது, அங்குசத்துக்குக் கட்டுப்படும் யானைக்கு.

********

அமெரிக்கக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே…

kamal_1324716gபுன்னகை மன்னன் படத்தில் கதாநாயகி ரேவதி சிங்களப் பெண்ணாக வருவார். விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சில்லறை வில்லனாக வருவார்கள். அவர்கள் சிங்களப் பெண்ணைக் கடத்துவதாகவும், கமல்சார் அவர்களை அடித்து விரட்டுவதாகவும்கூட காட்சி உண்டு. சிங்களப் பெண்ணின் தந்தைதான் க்ளைமாக்ஸில் வெடிகுண்டு வைத்துக் கொல்வார் என்றாலும் அதற்கு உதவுவது இலங்கைத் தமிழ் கதாபாத்திரங்கள்தான். இது இலங்கையில் இன அழித்தொழிப்பு படு மும்மரமாக நடந்த காலகட்டத்தில் வந்த படம்.

வேட்டையாடு விளையாடு படத்தில் ஹோமோசெக்ஸ்காரர்களாகச் சித்திரிக்கப்படும் வில்லன்களுக்குத் தூய தமிழ்ப்பெயர். தெனாலி படத்தில் யாழ்ப்பாணத் தமிழ் பேசும் கதாபாத்திரம் ஒரு கோமாளியாகச் சித்திரிக்கப்பட்டிருக்கும்.

சிட்ஃபண்ட் நடத்துபவர்கள் ஏழை எளிய மக்களின் பணத்தையெல்லாம் கொள்ளையடித்துக் கொண்டு ஓடியபோதுதான் சிட்ஃபண்ட் நடத்தி ஏமாற்றப்பட்டு சின்னாபின்னமாகும் நல்லவர் ஒருவரைப் பற்றி படம் எடுத்தார்.

தென் மாவட்டங்களின் சாதி கலவரங்களுக்கு தேவர் ஜாதி அடிப்படைவாதிகளே காரணமாயிருக்க, கமலோ தொடர்ந்து தேவர் ஜாதிப் பெருமிதத்தையே தன் படங்களில் இடம்பெறச் செய்துவந்திருக்கிறார்.

இப்படியெல்லாம் செயல்பட்டும் கமலுக்குத் தமிழகத்தில் ஒருவகையான முற்போக்கு பிம்பம் உருவானதற்கான முக்கியக் காரணம் அவர் இந்து மதத்தை நேரம் கிடைக்கும்போதெல்லாம் விமர்சிப்பதுதான். அதையும் கூர்ந்து கவனித்தால் அவர் சைவ இந்து மதத்தை மட்டுமே எள்ளி நகையாடுவது தெரிந்திருக்கும்.

இதுதான் அவருடைய அரசியல் செயல்பாடுகள். இவற்றாலெல்லாம் பெரிய அபாயம் எழுந்ததில்லை. ஆனால், மாறுபட்டுச் சிந்திக்கிறேன் என்ற போர்வையில், இப்போது சர்வதேச ரவுடி அமெரிக்காவின் தரப்பு நியாயத்தை எடுத்தியம்பக் கிளம்பியிருக்கிறார். இது மிகவும் தவறானது; கேவலமானது. ஹிட்லரைப் பற்றிப் படமெடுப்பதாக இருந்தால் ஹிட்லர் பக்கம் இருக்கும் நியாயத்தைப் பேசுவார் என்று நினைக்கிறேன்.

பேசாப் பொருளைப் பேசுதல் என்பது வேறு. அதிகார மையத்தின் பக்கத்தில் இருக்கும் அரைகுறை நியாயங்களைப் பேசுவது என்பது வேறு. கமல் இரண்டாவதைத்தான் கால காலமாகச் செய்துவருகிறார். அந்த வகையில் அவர் ஒரு கலைஞன் என்ற மரியாதைக்கு ஒரு காலமும் உரியவர் அல்ல. அவரும் தன்னை வெளிப்படையாக ஒரு வியாபாரியாகத்தான் அடையாளப்படுத்தியும் கொள்கிறார். அப்படி இருக்கும்போது அவருடைய விஸ்வரூபம் படத்துக்குத் தடை விதிக்கப்பட்டதை ஒரு கலைப்படைப்புக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவும் கருத்து சுதந்தரத்துக்கு எதிரானதாகவும் பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை.

கமலின் இந்தச் செயலானது செருப்பு நிறுவனம் ஒன்று காலணிகளில் இந்து தெய்வங்களின் படத்தை அச்சிட்டு வியாபாரம் செய்ய முயன்றதைப் போன்ற ஒரு செயல்தான். அவர்களைப் பொறுத்தவரை சீப் பப்ளிசிட்டியில் ஆரம்பித்து விற்பனையைப் பெருக்க உதவும் ஒரு தந்திரம் அது. ஆனால், ஒரு வியாபாரிக்கு மக்கள் கூட்டத்தில் ஒரு பிரிவினரின் நம்பிக்கையை அவர்கள் எவ்வளவு சிறிய தரப்பாக இருந்தாலும் இழிவுபடுத்த எந்த அதிகாரமும் கிடையாது. இங்கு சுதந்தரம் என்ற பேச்சுக்கே இடமில்லை. எனவே, ஒரு கலைஞனுக்குத் தரவேண்டிய மரியாதையை ஒரு வியாபாரிக்கு வீணடிக்காமல் இருப்பதுதான் ஒரு சமூகத்துக்கு நல்லது.

விஸ்வரூபம் பட விவகாரத்தில் முதலில் டி.டி.ஹெச்சில் படத்தை வெளியிடுவதாகப் பொய் சொல்லி மக்களிடம் இருந்து பணத்தைக் கறந்தார். படத்தின் தேதியைத் தனது சொந்த வசதிக்காக மாற்றி வைத்ததாகச் சொன்னபோது கூட தனது மீடியா பார்ட்னர்களுக்கு நன்றி தெரிவித்தவர் பணம் கட்டிய பார்வையாளர்களுக்கு எந்தப் பதிலும் சொல்லவில்லை. இஸ்லாமிய கூட்டமைப்பினருக்குப் படத்தைப் போட்டுக் காட்டியவர் அவர்களுடைய உணர்வுகளுக்குத் துளியும் மரியாதை செலுத்தவில்லை. கதை நிகழும் களம் ஆஃப்கானிஸ்தான். அங்கே தீவிரவாதத்தில் ஈடுபடுபவர்களாக முஸ்லிம்களைத்தானே காட்ட முடியும் என்று இன்று நியாயம் பேசுகிறார். (முஸ்லிம்களை தீவிரவாதியாகக் காட்டத்தான் ஆஃப்கானிஸ்தானைக் களமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார் கமல் என்கிறார்கள் தமிழக முஸ்லிம் கூட்டமைப்பினர். இரண்டாம் பாகம் இந்தியாவில் நடக்கும் என்று சொல்லியிருக்கிறார். அதாவது அதில் இந்து அடிப்படைவாதிகளை கட்டம்கட்டப்போகிறார். இப்போது இஸ்லாமியர்களுக்குத் தன்மீது ஏற்பட்ட கோபத்தைச் சரிக்கட்டும் வகையிலும் தனது முற்போக்கு பிம்பத்துக்கு ஏற்பட்ட அடியை சீர் செய்யும்வகையிலும் அந்தப் படத்தை அதீதமாக எடுப்பார் என்றுதான் தோன்றுகிறது. ‘கலைஞனல்லவா’, இப்படித்தான் இருப்பார்.)

உன்னைப் போல் ஒருவன் படத்தைப் போல இந்து ஆயுத வியாபாரி உதவுவதாக ஆஃப்கானிஸ்தானை மையமாகக் கொண்ட படத்தைக் காட்ட முடியாதுதான். இந்த விஷயம் பிரச்னையை உருவாக்கும் என்பதால், கதாநாயகனை ஒரு முஸ்லிமாகக் காட்டி பேலன்ஸ் செய்யப் பார்த்திருக்கிறார். ஆனால், இஸ்லாமிய அமைப்பினர் இந்த பம்மாத்தை நன்கு புரிந்துகொண்டுவிட்டதால் கமல் சொல்லும் எந்த சமாதானத்தையும் ஏற்க முன்வரவில்லை. இஸ்லாமியர் அமைப்பினர் படத்துக்குத் தடை கோரியதில் ஓரளவு நியாயம் உண்டு என்றாலும் அதை அவர்கள் வெளிப்படுத்தியவிதமும் பேசிய பேச்சுகளும் வன்மையாகக் கண்டிக்கத் தக்கவையே.

சோவியத் ரஷ்யாவின் பின்னடைவுக்குப் பிறகு அமெரிக்கா இஸ்லாமியர்களைத் தனது எதிரியாக வளர்த்தெடுத்து வந்திருக்கிறது. இரட்டை கோபுரத் தாக்குதல் என்பது அமெரிக்கா இஸ்லாமியர்களுக்கு எதிராகச் செய்த அநியாயங்களுக்கான பதிலடியே தவிர அது முதல் தாக்குதல் அல்ல. அதைச் சாக்காக வைத்து அமெரிக்கா இஸ்லாமியர்களுக்கும் இஸ்லாமிய நாடுகளுக்கும் எதிராக நடத்தி வரும் அராஜகங்கள் எல்லாம் குறைந்தபட்ச அரசியல் வாசிப்பு உள்ள அனைவருக்கும் தெரிந்த உண்மைகளே. அப்படியிருக்க அமெரிக்கர்களை நல்லவர்களாகக் காட்டி ஒரு படம் எடுக்கப்படுகிறது என்றால் அது அடிப்படையிலேயே இஸ்லாமியருக்கு எதிராகிவிடுகிறது. அதிலும் ஆஃப்கானிஸ்தான், இஸ்லாமிய தீவிரவாதிகள் என படத்தை எடுத்துவிட்டு படத்தைப் பார்த்தால் நீங்கள் எனக்கு தலை வாழை இலை போட்டு அன்லிமிடட் பிரியாணி தருவீர்கள் என்று நம்புகிறேன் என்று சொல்ல ஒருவருக்கு எவ்வளவு தெனாவட்டு இருக்கவேண்டும்.

இந்த விஷயத்தில் தமிழக அரசு நடந்துகொள்ளும் விதம் சரியென்றேபடுகிறது. இஸ்லாமியர்கள் இந்துக்களைப் போல் மிதமாகப் போராடுபவர்கள் அல்ல. மேற்கத்திய கிறிஸ்தவர்களைப் போல் தந்திரமாக ரவுடித்தனம் செய்பவர்களும் அல்ல. இதற்கு முன்பே பம்பாய் படத்தில் ஒரு இஸ்லாமியப் பெண் இந்துவைத் திருமணம் செய்வதாகக் காட்டியதற்கே வெடி குண்டு வீசியவர்கள், அமெரிக்க தூதரகத்தை வெகு சமீபத்தில் முடக்கியவர்கள். அரசு விதித்த தடையை நீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து சில திரையரங்குகளில் படம் திரையிடப்பட்டது. கரூரில் இரண்டு திரையரங்குகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாகவும் கோவையில் வேறு பல குண்டுகள் கைப்பற்றப்பட்டதாகவும் செய்திகள் வந்திருக்கின்றன. இப்படி நடக்கும் என்பது அரசுக்கு முன்பே உளவுத்துறை மூலம் தெரியவந்திருக்கலாம். அதன் அடிப்படையில் அரசு படத்தைத் தற்காலிகமாகத் தடை செய்திருக்கக்கூடும். எனவே, இது சரியான செயல்பாடுதான். ஆந்திரம், மலேசியா, இலங்கை என பல இடங்களில் இந்தப் படத்தின் மீது தடை விதிக்கப்பட்டிருக்கிறது. எனவே, இது சொந்தப் பகை காரணமாக ஜெயலலிதா எடுத்த தவறான முடிவாகச் சொல்லவே முடியாது.

எனவே, ரஜினிகாந்தும், கலைஞர் கருணாநிதியும் சொல்லியிருப்பதுபோல் இஸ்லாமிய தரப்பினருக்கு ஏற்பில்லாத விஷயங்களை நீக்கிவிட்டு படத்தை வெளியிடவேண்டும். மக்கள் படத்தைப் பார்த்துவிட்டு நிராகரிக்க வேண்டும். ஒரு ஜனநாயக நாட்டில் இந்த அளவுக்கு சுதந்தரம் ஒரு வியாபாரிக்கு நிச்சயம் இருக்கவேண்டும்.
ஆனால், ஒரு கலைஞன் ஆஃப்கானிஸ்தான் பற்றிப் படம் எடுப்பதாக இருந்தால், இஸ்லாமிய தீவிரவாதிகளாலும் அமெரிக்க ராணுவத்தாலும் பாதிப்புக்கு உள்ளாகும் எளிய இஸ்லாமிய மக்களின் வேதனையைத்தான் படமாக்குவான். இந்து முஸ்லிம்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் படமெடுக்க வேண்டியதன் அவசியம் இருக்கும் நேரத்தில் கலை சுதந்தரம் என்ற பெயரில் இடைவெளியை அதிகப்படுத்தும்வகையில் படமெடுக்க யாருக்கும் உரிமை கிடையாது. பிற விஷயங்களில் எல்லாம் மிகையையும் கற்பனையையும் கட்டவிழ்த்துவிடும் திரைப்படைப்பாளிகள் சமூகப் பொறுப்புணர்வுடன் சென்சிட்டிவான விஷயங்களிலும் யதார்த்தத்தைக் கொஞ்சம் பின்னுக்குத் தள்ளுவது நல்லதே. பொய்மையும் வாய்மையிடத்து புரைதீர்த்த நன்மை பயக்குமெனின் அல்லவா.
அல்லது யதார்த்தத்தை சித்திரிப்பதென்றால் உண்மையை முழுவதுமாகச் சித்திரிக்கவேண்டும். தீவிரவாதிகள் குர்ரானைப் படித்துவிட்டு துப்பாக்கி தூக்குவதாகக் காட்டினால், பைபிளைப் படித்துவிட்டு குண்டு வீசுவதாகவும் காட்டத்தான் வேண்டும். அரை உண்மை எப்போதுமே அபாயமானதுதான்.
கலைஞனை அப்படியெல்லாம் கட்டுப்படுத்த முடியாது என்று சொல்பவர்கள் முதலில் கலைஞன் என்பவன் யார் என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும். கமலைப் பற்றிப் பேசும்போது இந்த விவாதம் தேவையற்றதுதான் என்றாலும் சொல்லிவைப்பது நல்லது என்று தோன்றுவதால் சொல்கிறேன்.
எம்.எஃப்.ஹுசேன் போன்றவர்கள் இந்து கடவுள்களை மையமாக வைத்து படங்கள் வரைவதுண்டு. அதை கலை சுதந்தரம் என்றும் சொல்வார்கள். ஆனால், இஸ்லாமிய உருவங்களையோ மதிப்பீடுகளையோ படமாக வரைய அவர்களுடைய தூரிகை முன்வரவே செய்யாது. அவர்களுடைய கலை ஊற்றை அப்படியாக அவர்களே சுயமாக சில கற்களைப் போட்டு அடைத்துக்கொள்ளும்போது பிற மதத்தினர் நாலைந்து கல்லைச் சேர்த்துப் போட்டால் அதையும் ஏற்றுக்கொள்வதுதான் நல்லது. அதிலும் கமலைப் போன்ற வியாபாரிகள் முழுக்க முழுக்க பணம் தரும் பினாமி எஜமானர்களுக்கு விசுவாசமாக ஒரு விஷயத்தைச் செய்யும்போது அதை அம்பலப்படுத்துவது மிகவும் அவசியமான செயல்பாடுதான்.
இந்தப் படம் வெளிவராவிட்டால் தன்னுடைய அனைத்து சொத்துகளும் கைவிட்டுப் போய்விடும் என்று செண்டிமெண்ட் கார்டை இறக்கிப் பார்க்கிறார். திரையுலக நடைமுறைகள் தெரிந்தவர்களுக்கு அவர் சொல்வதில் இருக்கும் பசப்புகள் நன்கு தெரிந்திருக்கும். அதோடு, இஸ்லாமியக் கூட்டமைப்பினரின் போராட்டத்தை கலாசார தீவிரவாதம் என்று சொல்லிவருகிறார். உண்மையில் அது மத தீவிரவாதம்தான். தமிழக அரசு சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுவிடும் என்று பயந்து படத்தை தற்காலிகமாகத் தடை செய்தால் உடனே மாநிலத்தையும் நாட்டையும் விட்டே போய்விடுவேன் என்று மிரட்டுகிறார். சாப்ளின், சல்மான் ருஷ்டி, ஹுசேன் ரேஞ்சில் தன்னைப் போலியாகக் கற்பனை செய்துகொள்வதால் வரும் உளறல் இது.

imagesசமீப காலமாக வெளியாகும் படங்களையும் மீடியாவின் பிற செயல்பாடுகளையும் பார்க்கும்போது வேறொரு சந்தேகம் பலமாக எழுகிறது. செப்டம்பர் 11க்குப் பிறகு அமெரிக்கா தெளிவான திட்டமொன்றைத் தீட்டியிருப்பதாகத் தோன்றுகிறது. தங்கள் மீது குவியும் இஸ்லாமியர்களின் எதிர்ப்பை இந்தியா மீது மடைமாற்றும் பணியில் இறங்கியிருப்பதாகத் தோன்றுகிறது. அதன் மூலம் இஸ்லாமிய பிரச்னையையும் தீர்த்துவிடலாம். இந்தியாவையும் சரிக்கட்டிவிடலாம். இதுதான் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையாக இருக்கிறது என்று தோன்றுகிறது. அப்படிப் பார்க்கும்போது கமல் மிகப் பெரிய சதித்திட்டத்தின் கைப்பாவையாக இருப்பதுபோல் தெரிகிறது. நிச்சயம் அவருக்கு அந்தக் கெட்ட எண்ணமிருக்காது என்றே நம்புகிறேன்.

தேவர் மகன், விருமாண்டி போன்ற படங்களின் மூலம் தேவர் இறுமாப்பை கொம்பு சீவிவிட்டு பல்வேறு கலவரங்களுக்கு மறைமுகமாகக் காரணமாக இருந்த கமல், இப்போது இந்து முஸ்லீம் கலவரங்களுக்கு நேரடியாக வித்திடுபவராக ஆகியிருக்கிறார் என்றே தோன்றுகிறது. ஆஸ்போர்னிடம் என்ன கதையைச் சொல்லியிருக்கிறாரோ… ஒரு வியாபாரியாக அதிக முதலீட்டைத் தேடிப் பெற்றுக் கொள்ள கமலுக்கு உரிமை உண்டு. ஆனால், அவர் ஒரு பிரிவினைவாதி அல்ல பகுத்தறிவுவாதி என்பதால் அவரிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டியிருக்கிறது: அமெரிக்கக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே… அடி வருடியாய் ஆகிவிடாதே தாண்டவக்கோனே.

0

BR. மகாதேவன்

புஸ்வரூபம்

1db48097-7eba-48b8-a2b1-6a00420b701eOtherImageஒரு சிச்சுவேஷன் சாங்குடன் ஆரம்பிப்போம்.

கொட்டும் மழைக்காலம் உப்பு விற்கப் போனேன்…
காற்றடிக்கும் நேரம் மாவு விற்கப்போனேன்…
தப்புக் கணக்கைப் போட்டுத் தவித்தேன் தங்கமே ஞானத் தங்கமே…
பட்ட பிறகே புத்தி தெளிந்தேன் தங்கமே ஞானத் தங்கமே…
நலம் புரிவாய் எனக்கு… நன்றி உரைப்பேன் உனக்கு…

புதிய படம் தொடர்பாக கமலும் ஊடகங்களும் போடும் வழக்கமான ஆட்டம் இந்தமுறை கொஞ்சம் கைமீறிப் போய்விட்டதுபோலவே தோன்றுகிறது. படத்தின் பெயருக்கு பிரச்னை வரும்போது கலைஞனுக்கே உரிய வீராவேசத்துடன் குட்டிகர்ணம் அடிப்பவர் இப்போது தொழில்நுட்பப் புரட்சியை முன்னெடுப்பவராக இன்னொரு அவதாரம் எடுத்திருக்கிறார். தியேட்டருக்கு முன்பாகவே டி.டி.ஹெச்.சில் வெளியிடுவதை ஏதோ தொழில்நுட்பப் புரட்சி போல் பேசிவருகிறார். டி.டி.எச். தொழில்நுட்பம் என்பதும் திரைப்படங்கள் தியேட்டரில் வெளியான ஒரு சில நாட்களில் சின்னத்திரையில் வெளியாவதும் பல வருடங்களாகவே நடைமுறையில் இருக்கும் ஒரு விஷயமே. திரையரங்கில் வெளியிடுவதற்கு முன்பாகவே டி.வி.யில் வெளியிடுவது எந்தவகையில் தொழில்நுட்பப் புரட்சியாகும் என்றே தெரியவில்லை. வேண்டுமானால் மார்க்கெட்டிங் புரட்சி என்று சொல்லலாம். அதுகூட முடியாது. ஏனென்றால், அது புத்திசாலித்தனமான மார்க்கெட்டிங் வழிமுறையே அல்ல.

முதலில், தொழில்நுட்பப் புரட்சி என்றால் என்ன என்பதைப் பார்ப்போம். சில பத்தாண்டுகளுக்கு முன் டி.வி.யின் கண்டுபிடிப்பும் பரவலாக்கமும் திரைப்படங்களுக்கு ஒரு சவாலாக ஆனது. மேற்கத்திய உலகம், குறிப்பாக, ஹாலிவுட் அந்த சவாலை மிகவும் நேர்மையாக நெஞ்சை நிமிர்த்தி எதிர்கொண்டது. கதைக்குப் பொருத்தமான பிரமாண்ட கிராபிக்ஸ் (அல்லது பிரமாண்டத்துக்கு ஏற்ற கதைகள்), நுட்பமான ஒலி, அதி துல்லியமான கேமராக்கள் போன்றவற்றின் மூலம் திரைப்படங்களைத் திரையரங்குகளில் மட்டுமே பார்க்கவேண்டும் என்ற அளவுக்குத் தங்களைப் பலப்படுத்திக்கொண்டது. எந்தவொரு ஹாலிவுட் படத்தையும் டி.வி.டியில் பார்ப்பதைவிட திரையரங்கில் பார்க்கும் அனுபவத்தையே பார்வையாளர்கள் அனைவரும் விரும்பும் அளவுக்கு ஆக்கிவிட்டனர். அப்படியாக, டி.வி. மூலம் வந்த நெருக்கடியை மேற்கத்தியர்கள் வெகு எளிதாகத் தாண்டினர்.

தமிழ் சமூகமோ இந்தத் தொழில்நுட்பப் போட்டியை படு நோஞ்சானாக எதிர்கொண்டது. இமயங்களும் சிகரங்களும் வாலை ஒடுக்கிக்கொண்டு டி.வி.யில் தஞ்சம் புகுந்தனர். அதுதான் அவர்களுடைய இயல்பான இடம் என்பது வேறு விஷயம். இதன் இன்னொரு பக்கத்தில் உலக அழகியை எலும்புக்கூடாகக் காட்டுவது, கயிறு கட்டி பறந்து பறந்து அடிப்பது போன்ற கிராபிக்ஸ் கலக்கல்கள் திரையை நிரப்பின.

அப்படியாக, தொழில்நுட்ப சவாலை எப்படி எதிர்கொள்வது என்பதற்கு மேற்குலகம் ஒரு வழியைக் காட்டியிருக்கிறது. எப்படி எதிர்கொள்ளக்கூடாது என்ற வழியை நம் தமிழ் கூரும் நல்லுலகம் காட்டியிருக்கிறது. இதன் அடுத்தகட்ட வளர்ச்சியாகத்தான் ஒலக நாயகனின் இப்போதைய தொழில்நுட்பப் புரட்சி வந்து குதித்திருக்கிறது.

இந்தப் புரட்சியை இவர் செய்ய நேர்ந்த கட்டாயத்தை இங்கு நினைத்துப் பார்ப்பது மிகவும் அவசியம். சுமார் 70 கோடி செலவில் விஸ்வரூபம் படத்தை எடுத்திருப்பதாகவும், தனது சம்பளத்தையும் பிற லாபங்களையும் சேர்த்து சுமார் 90-110 கோடியை அவர் எதிர்பார்த்ததாகவும் அவருடைய கடந்தகால சாதனைகளைப் பார்த்த வர்த்தக உலகம் 50 கோடிக்குப் படத்தைக் கேட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இது உண்மையாக இருக்க அதிக சாத்தியங்கள் உண்டு. இந்த இக்கட்டான நிலையில் இருந்து எப்படித் தப்பிக்க என்று கமல் சார் தன் வீட்டில் மல்லாந்து படுத்து யோசித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு ஒரு மாபெரும் ஐடியா தோன்றியிருக்கிறது. அதாவது, படத்தை நேரடியாக டி.வி.யிலேயே ரிலீஸ் செய்தால் என்ன? இது மிகவும் நியாயமான சிந்தனையே. வர்த்தகரீதியில் வெற்றிபெறாத படங்களை திரைக்கு வந்த ஒரு மாதமே ஆன நிலையில் சின்னத் திரையில் கூவிக் கூவி வெளியிடுவது என்பது நிஜத்தில் நடந்துவரும் விஷயமே. இதில் தெளிவான வர்த்தக நிர்பந்தமே இருக்கிறது. காப்பியடிப்பதை இன்ஸ்பிரேஷனாகச் சொல்லிக் கொள்ளும் கலை உலகில் வர்த்தக நெருக்கடியை சாமர்த்தியமாகச் சொல்லிக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லையே. ஆனால், அந்த முயற்சியானது கணிசமான வருவாயை ஈட்ட வழி வகுத்தது. எனவே, அதை தற்செயலாகக் கண்டுபிடித்த சாதனையாகச் சொல்லலாம்.

ஆனால், திரையரங்கில் வெளியிடுவதற்கு முன்பாகவே டி.டி.ஹெச்சில் வெளியிடுவதில் வெறும் வர்த்தக நிர்பந்தம் மட்டுமே இருக்கிறது. எந்தவித சாமர்த்தியமும் இல்லை. ஏனென்றால், இன்றைய நிலையில் மொத்தம் எத்தனை டி.டி.ஹெச். சந்தாதாரர்கள் இருக்கிறார்கள்? அவர்களில் எத்தனை பேர் தீவிர ரசிகர்களைப்போல் படத்தை முதல் நாளே பார்த்துவிடவேண்டும் என்று துடிப்பார்கள்? மின்சாரமானது வாழ்க்கையின் நிலையாமையை மணிக்கொரு தடவை நினைவுபடுத்திக் கொண்டிருக்கும் நிலையில் சென்னை தவிர பிற மாவட்டங்களில் எப்படி நம்பிக்கையுடன் படத்தைப் பார்க்க முன்வருவார்கள்? என்னதான் தமிழ் படங்களை அரங்கில் பார்த்தாலும் தியேட்டரில் பார்த்தாலும் ஒரே எஃபெக்ட்தான் என்றாலும் ஆயிரம் ரூபாய் கொடுத்து திரையரங்கில் பார்க்கத் தயாராக இருக்கும் ஒருவர் (ஒரு குடும்பம்) டி.வி.யில் வீட்டில் இருந்தே பார்க்க முன்வந்துவிடுவாரா? தான் உருவாக்கி வைத்திருக்கும் பிளே பாய் இமேஜ் குடும்பத்துடன் தன் படத்தைப் பார்க்க இடம் தருமா என்ற கேள்விகளில் ஒன்றைக்கூட கமல் கேட்டுக்கொண்டிருக்கவில்லை. அவரைப் பொறுத்தவரையில் ஒரு வாரம் கழித்து டி.டி.ஹெச்சில் போட்டால் கிடைப்பதைவிட அதிக பணத்தை செல்ஃபோன் நிறுவனங்களிடம் இருந்து பெற முடியும் என்ற ஒரே எண்ணத்தில் அந்த முயற்சியை முன்னெடுத்திருக்கிறார். இது வர்த்தக அடிப்படையே தெரியாத ஒருவர் செய்யும் செயலே.

அதோடு இந்த இடத்தில் அவர் வேறொரு அபாயமான விஷயத்தையும் செய்கிறார். திரையரங்க உரிமையாளர்கள் என்ற ஒரு பிரிவினரை ஒதுக்கிவிட்டு நேரடியாக பார்வையாளரின் பாக்கெட்டில் கைவிட்டுப் பணத்தை எடுக்க முயற்சி செய்கிறார். ஒரு திரைப்படம் வெளியாகும் முதல் மூன்று நாட்களில் அள்ளும் பணமே திரையரங்கத்தினரின் பிரதான வசூலாக இருந்துவருகிறது. ஒரு படத்தை திரையரங்கில் வெளியிடுவதற்கு முன்பாகவே டி.டி.ஹெச்சில் வெளியிட்டுவிட்டால் இந்த மூன்று நாள் கலெக்ஷன் அடிபட்டுவிடும் என்று அவர்கள் நினைப்பதில் எந்தத் தவறும் இல்லை. எனவே, அவர்கள் அதை எதிர்க்கிறார்கள். அந்தவகையில் கமலின் ஓட்டை தொழில்நுட்பப் புரட்சியை ஒன்றும் அவர்கள் எதிர்க்கவில்லை. மேலும், இந்த எதிர்ப்பு விஸ்வரூபத்துக்கு மட்டுமேயானதல்ல. இது ஒரு தவறான முன்னுதாரணம் ஆகிவிடக்கூடாது என்ற பயம்தான் எதிர்ப்பின் பின்னணி.

அதோடு, முதலில் டி.டி.ஹெச்சில் வெளியிட்டால் திரையரங்கத்தினர் அந்தப் படத்தை முன்புபோல் அதிக விலை கொடுத்து வாங்க வாய்ப்பு குறைவு. அவர்களுக்கு குறைந்த தொகைக்குத்தான் தரவேண்டியிருக்கும். அதோடு, செல் போன் நிறுவனத்துக்கும் ஒரு தயாரிப்பாளர் கணிசமான தொகையைக் கொடுக்க வேண்டியிருக்கும். இந்த இரண்டு செலவுகளை ஒப்பிடும்போது டி.டி.ஹெச். மூலம் கிடைக்கும் வரவு குறைவாகவே இருக்கும். குறிப்பாக டி.டி.ஹெச். சந்தாதாரர்கள் குறைவாக இருக்கும் இன்றைய நிலையில். வேண்டுமானால், நான்தான் ஆரம்பித்துவைத்தேன்… மற்றவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள் என்று கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோல் ஏதேனும் சொல்லிக்கொள்ளலாம். ஆனால், நிச்சயமாக, டி.டி.ஹெச்சில் படத்தை முதலிலேயே வெளியிட வர்த்தகரீதியில் இது சரியான தருணமே அல்ல.

பட வெளியீடு தொடர்பாக நேற்று கமல் கொடுத்த பேட்டியில் வின்னர் கைப்புள்ள ரேஞ்சில் எவ்வளவு அடிச்சாலும் ஓடவே மாட்டோம்… நிண்டு அடி வாங்குவோம் என்பதுபோல் வெலவெலத்தார். அது தன்னுடைய படம்தான் என்றும் அதை என்றைக்கு வெளியிடுவது என்பதைத் தான்தான் சொல்வேன் என்றும் கீறல் விழுந்த கிராம்ஃபோன் போல் பேசினார். படம் யாருடையது என்பது அல்ல பிரச்னை. தியேட்டருக்கு முன்பாக டி.டி.ஹெச்சில் வெளியாகுமா ஆகாதா? இதுதான் கேள்வி. அதற்கான பதிலை அரை மணி நேரம் பேசியும் சொல்லவில்லை. திரையரங்கிலும் டி.டி.ஹெச்சிலும் ஒரே நாளில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக இடையில் லேசாகச் சொன்னார். ஆனால், இது ஒருவகையான நம்பிக்கை மோசடி. அதாவது, திரையரங்குக்கு வருவதற்கு முன்பாகவே டி.டி.ஹெச்சில் வெளியாகும் என்று சொல்லித்தான் இப்போது பணம் வசூலித்திருக்கிறார்கள். எனவே, அந்த வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, ஒரே நாளில் வெளியிட கமல் தானாகவே முடிவு செய்வது தவறுதான்.

நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் தன்னை தைரியசாலியாகக் காட்டிக்கொள்ள ரொம்பவே சிரமப்பட்டார் கமால். பார்க்க பரிதாபமாக இருந்தது. ஒரு பிளாட்டில் இருப்பவர்கள் ஒரே கனெக் ஷனில் கூடி அமர்ந்து படத்தைப் பார்த்துவிடக்கூடுமே என்று கேட்டபோது, ஒரு கனெக் ஷனுக்கு ஒரு டி.வி.லதான் பார்க்க முடியும். ஒரு வீட்டு டிஷ்ஷுக்கு வர்ற படம் வழிஞ்சு இன்னொரு டிஷ்ஷுக்குப் போயிடாது என்று திருவாய் மலர்ந்தார்.

தனது ராஜ் கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் சொல்லபடுவதுதான் வேதம். எங்களுக்கு வேறு கிளைகள் எதுவும் கிடையாது… படத்தை எப்போது வெளியிடுவது என்பதை நான்தான் சொல்வேன் என்று கர்ஜித்தவர், அபிராமி ராமநாதனும் சன் டி.வி.யும் முன்பே சொன்னதுபோல் 25-ம் தேதியன்று 500 திரையரங்குகளில் வெளியிடப்போவதாக இன்று மீண்டும் முழங்கியிருக்கிறார். இதிலும் டி.டி.ஹெச்.சில் என்றைக்கு வெளியிடப்படும் என்பதைச் சொல்லவில்லை. 24-ம் தேதி என்று சொன்னால் தியேட்டர்காரர்கள் மறுபடியும் கொடி பிடிப்பார்கள். 25 -ம் தேதி அல்லது பிறகு என்றால் டி.டி.ஹெச். புக்கிங் பாதிக்கப்படும். ஆக முன்னால் போனால் கடிக்கும். பின்னால் போனால் உதைக்கும். ஆனால், இதுவும் வர்த்தக சாமர்த்தியமாக வரலாற்றில் இடம்பெறும் என்றே தோன்றுகிறது.

ஒரு படத்தை வெற்றிகரமானதாக்க என்ன செய்ய வேண்டுமோ அதைவிட்டுவிட்டு மற்ற அனைத்தையும் செய்வதில் நிபுணரான கமல் அடுத்து என்ன செய்வாரோ என்றுதான் பயமாக இருக்கிறது. இந்த ‘டி.டி.ஹெச். புரட்சி’ வெற்றி பெற்றாலும் தோற்றாலும் அவர் வீறு கொண்டு எழுந்து, பழகிய தடத்தில் இன்னும் வேகமாக தன் பயணத்தை ஆரம்பித்துவிடுவாரே. பம்மல் சம்பந்தம், கம்மல் கண்ணாயிரம் என யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லாத படங்களாக அவர் எடுத்துவந்தால் இகோ சிஸ்டம் இன்னும் நன்றாகவே மெயிண்டெயின் செய்யப்படும் என்ற உண்மையை அவருக்கு எப்படிப் புரியவைப்பது?

0

B.R. மகாதேவன்

தமிழ்த் திரைப்பட விருதுகள் – 2012

naan e2002 தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும் தமிழ்த் திரைப்படங்களில் சிறப்பாகப் பங்காற்றிய நபர்/ நிறுவனங்களுக்கு துறைவாரி விருதுகள் அறிவித்து வருகிறேன்.

விருதுகளுக்கான விதிமுறைகள்

  1. தமிழில் நேரடியாக உருவாக்கப்பட்ட‌‌ திரைப்படமாகவோ, தமிழில் மறுஆக்கம் செய்யப்பட்ட திரைப்படமாகவோ, தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட இந்திய மொழித் திரைப்படமாகவோ இருத்தல் வேண்டும்.
  2. திரைப்படம் ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரையிலான தேதிகளில் சென்னையில் வெளியாகி இருத்தல் வேண்டும் (மத்திய திரைப்படத் தணிக்கைத் துறை சான்றிதழ் தேதி கணக்கில் கொள்ளப்படுவதில்லை).
  3. விருதுகளுக்கு தனியாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. நடுவராகிய‌ நான் திரைப்படத்தை முழுமையாகப் பார்த்து விட்டால் அப்படம் விருதுகளின் அனைத்து பிரிவுகளுக்கும் விண்ணப்பித்ததாகப் பொருள் கொள்ளப்பட்டு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு விடும்.

பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட படங்கள்

நான் ஈ * முகமூடி * தடையறத் தாக்க‌ * துப்பாக்கி * பீட்ஸா * நான் * 3 * கழுகு * ஆரோகணம் * மதுபானக்கடை * கலகலப்பு * மாற்றான் * தாண்டவம் * பில்லா 2 * தோனி * மாலைப் பொழுதின் மயக்கத்திலே * சகுனி * சுந்தரபாண்டியன் * போடா போடி * அட்டக்கத்தி * நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம் * வழக்கு எண் 18/9 * காதலில் சொதப்புவது எப்படி? * அம்மாவின் கைப்பேசி * கும்கி * நீதானே என் பொன்வசந்தம் * நீர்ப்பறவை * மிரட்டல் * ஒரு கல் ஒரு கண்ணாடி * வேட்டை * அரவான் * நண்பன் * (மொத்தம் – 32)

2012 விருது முடிவுகள்

  1. சிறந்த திரைப்படம் – நான் ஈ
  2. சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் – துப்பாக்கி
  3. சிறந்த இயக்குநர் – ராஜமௌலி (நான் ஈ)
  4. சிறந்த திரைக்கதை – ராஜமௌலி (நான் ஈ)
  5. சிறந்த வசனம் – சுபா (மாற்றான்)
  6. சிறந்த கதை – லக்ஷ்மி ராமகிருஷ்ணன் (ஆரோகணம்)
  7. சிறந்த பின்னணி இசை – கே (முகமூடி)
  8. சிறந்த ஒளிப்பதிவு – ஆர்.டி.ராஜசேகர் (பில்லா 2)
  9. சிறந்த படத்தொகுப்பு – ஸ்ரீகர்பிரசாத் (துப்பாக்கி)
  10. சிறந்த கலை இயக்கம் – எஸ். ரவீந்தர் (நான் ஈ)
  11. சிறந்த ஆடை வடிவமைப்பு – வாசுகி பாஸ்கர் (பில்லா 2)
  12. சிறந்த ஒப்பனை – மாற்றான்
  13. சிறந்த ஒலிப்பதிவு – ஸ்டீஃபன் கோம்ஸ் (பில்லா 2)
  14. சிறந்த VFX – Makuta VFX (நான் ஈ)
  15. சிறந்த சண்டை அமைப்பு – Tony Leung Siu Hung (முகமூடி)
  16. சிறந்த நடன இயக்கம் – ஷோபி (துப்பாக்கி)
  17. சிறந்த பாடல் இசை – அநிருத் ரவிச்சந்தர் (3)
  18. சிறந்த பாடல் ஆசிரியர் – மதன் கார்க்கி (அண்டார்க்டிகா – துப்பாக்கி)
  19. சிறந்த பின்னணி பாடகர் – ப்ரதீப் (ஆசை ஒரு புல்வெளி – அட்டக்கத்தி)
  20. சிறந்த பின்னணி பாடகி – ஸ்ரேயா கோஷல் (சஹாயனே – சாட்டை)
  21. சிறந்த நடிகர் – சூர்யா (மாற்றான்)
  22. சிறந்த நடிகை – ஸ்ருதிஹாசன் (3)
  23. சிறந்த துணை நடிகர் – பசுபதி (அரவான்)
  24. சிறந்த துணை நடிகை – ராதிகா ஆப்தே (தோனி)
  25. சிறந்த குணச்சித்திர‌ நடிகர் – சத்யராஜ் (நண்பன்)
  26. சிறந்த குணச்சித்திர‌ நடிகை – நந்திதா தாஸ் (நீர்ப்பறவை)
  27. சிறந்த வில்லன் நடிகர் – சுதீப் (நான் ஈ)
  28. சிறந்த நகைச்சுவை நடிகர் – சூரி (சுந்தரபாண்டியன்)
  29. சிறந்த குழந்தை நடிகர் – மாஸ்டர் ஆகாஷ் (தோனி)
  30. சிறந்த டைட்டில் கார்ட் – துப்பாக்கி
  31. சிறந்த ட்ரெய்லர் – பில்லா 2
  32. சிறந்த திரைப் புத்தகம் – கதாநாயகனின் மரணம் (ராஜன்குறை)
  33. சிற‌ந்த திரை விமர்சகர் – கௌதம சித்தார்த்தன் (தீராநதி)

 

0

சி.சரவணகார்த்திகேயன்