என் குழந்தைப்பருவத்தில் அந்த மிகச் சிறிய வீட்டில் (இன்று அந்த வீட்டில் என்னால் கால் நீட்டிப் படுக்க முடியாது) நாங்கள் நான்கு சிறார்கள், கிராமத்தில் சரியான படிப்பு வசதி இல்லையென்று நகரத்தில், ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்தோம். எங்கள் வீட்டில் 3 குண்டு விளக்குகள், ஒரு மேஜை விசிறி தவிர்த்து, மின்னிணைப்பு கொண்ட மற்றொரு இயந்திரம், வானொலி. அதில் இலங்கை வானொலி சிற்சில காலம் ஒலித்தது மிகவும் பலவீனமாக நினைவில் இருக்கிறது. பின்பு அது எப்போது நின்று போனது என்று எனக்குச் சரியாக நினைவில்லை. ஆனால் எப்போதும் திருச்சி வானொலி மட்டுமே ஒலிக்கும். வந்தேமாதரம் முடிந்து பக்திமாலையுடன் தொடங்கும் நிகழ்ச்சிகள், பிடிக்கிறதோ இல்லையோ, மின்சாரம் இருந்தால் காலை 8 மணி வரை ஒலித்துக் கொண்டே இருக்கும். 8 மணிக்கு டெல்லி நிகழ்ச்சிகள். அநேகமாக 8:40க்கு டெல்லி நிகழ்ச்சிகளும் முடிந்து, நிலையம் தூங்கி வழிந்து மறுபடியும் தமிழ் நிகழ்ச்சிகளுடன் 12க்கோ 12:10க்கோ விழிக்கும்போல. ஆனால் 8 மணிக்குப் பிறகு நாங்கள் வானொலி கேட்பது அரிது; பள்ளி சென்று விடுவோம். அப்படியே வீட்டில் இருந்து கேட்க நினைத்தாலும் ஓர் அட்சரம் கூட புரியாத இந்தியில், தமிழிலேயே நாங்கள் கேட்க விரும்பாத ‘செய்தி’களைக் கேட்பதென்பது…
பத்து வயதுக்குள்ளேயே இருந்த எங்கள் நால்வருக்கும் கிட்டத்தட்ட ஒரே ரசனைதான். நாடக வடிவிலிருந்த எதனையும் கேட்போம். நாடக வடிவிலிருந்ததால் கொட்டும் முரசையும், விஞ்ஞானம் வீராசாமியையும்கூட விடாமல் கேட்டிருக்கிறோம். ஞாயிறன்று சூரியகாந்தியை விடமாட்டோம் (நூறு ரூபாய் என்ற தொடர் நாடகம் – பெயர் மட்டும் – இன்னும் நினைவில் இருக்கிறது). ‘மண்ணையெல்லாம் பொன் கொழிக்கச் செய்திடுவோம்; அதில் பன்மடங்கு உற்பத்தியைப் பெருக்கிடுவோம்’ என்ற பாட்டு முடிவதற்குள் ஓடிச்சென்று வானொலியை அணைத்திடுவோம். நாங்கள் விவசாயத்தில் ஈடுபடாததால், எங்கள் வீட்டில் யாரும் விவசாய நிகழ்ச்சிகளைக் கேட்டதில்லை. நகரத்தில் வசித்தாலும், அனைத்து விடுமுறைகளும் கிராமத்தில்தான் கழியும். வாழ்நாளில் பாதி எங்கள் கிராமத்தில்தான் எனக்குக் கழிந்திருக்கிறது. ஆனால் விவசாயிகளால் சூழப்பட்ட எங்கள் கிராமத்தில் யாரும் எந்த விவசாய நிகழ்ச்சியையும் கேட்டதாக நான் அறியவில்லை. கிராமத்துக்குப் பொது வானொலியென்று ஒன்று இருக்கும்; ஒரு கம்பத்தில் ஒலிக் கூம்பும் கட்டப்பட்டிருக்கும்; ஆனால் அது ஒலித்ததாக எனக்கு நினைவில்லை. வாரந்தோறும் வெள்ளி ஏழு மணிக்கு காந்தியஞ்சலி – ‘காந்தி மகான் என்ற காலைக் கதிரவன், காரிருள் நீங்கிட இங்கு வந்தான்’ என்ற வழக்கமான பாடல்.
நிற்க. இவையனைத்து நிகழ்ச்சிகளையும்விட தினமும் அதிகாலை 7:30க்கு ஒலிபரப்பப்படும் திரையிசைக்கு நாங்களனைவரும் தவமே இருப்போம். ஒருநாளும் அதனைத் தவறவிடமாட்டோம். விளம்பரங்களின் எரிச்சல் துளியும் இல்லாமல்(பின்னர் எந்த வருடம் என்று நினைவில்லை – திடீரென்று, ‘கூ’வென்று சங்கூதி விளம்பரங்களுக்கிடையில் பாடல்களை ஒலிபரப்ப ஆரம்பித்து விட்டார்கள்.) 8:00 மணி வரை (மட்டும்) கிட்டத்தட்ட ஐந்து பாடல்கள் மட்டுமே ஒலிபரப்பப்படும். சனியோ ஞாயிறோ – நாள் சரியாக நினைவில்லை – ஒரு நாள் மதியம் 1:10 முதல் 2:00 மணி வரை ஐம்பது நிமிடங்கள் எங்களுக்கு பம்பர்தான். இளையராஜா, அதற்கு முன்னர் நாட்டப்பட்ட அனைத்து கொடிகளையும் வீழ்த்திவிட்டு நாளுக்கு நாள் தன் கொடியை ஸ்திரமாக்கிக் கொண்டிருந்த காலம். அதையெல்லாம் உணரத் தெரியாத பருவம் எங்களுக்கு.
திருச்சி வானொலியில் ஒவ்வொரு பாடலுக்கும் முன்னரோ பின்னரோ பாடல் இடம்பெற்ற திரைப்படம், இன்னார் இசையமைத்தது, இன்னார் பாடியது, சமயத்தில், இன்னார் இயற்றியது என்ற அனைத்து விபரங்களோடுதான் ஒலிபரப்புவார்கள். என்ன, அறிவிப்பாளர்தான் இழவு வீட்டிலிருந்து வந்தவர்கள்போல, எப்போதும் மாறாத சோகத்தோடே பேசுவார்கள். பெரும்பாலும் ஓரிரு ஆண்டுகளுக்குள் வெளியான திரைப்படங்களின் பாடல்களாக இருக்கும். இன்றைய நாள் வரை 80 முதல் 2000 வரை உள்ள திரைப்பாடல்கள் பெரும்பாலானவற்றின் படப்பெயர்களையும், வெளியான ஆண்டையும் அவற்றைப் பாடியவர்களையும் எனது நினைவிலிருந்து சொல்லும்போது வியக்காத நண்பர்கள் மிகக் குறைவு. பல ஒன்றுக்குமே தேறாத படங்களில்கூட ஒன்றோ இரண்டோ இன்றளவும் நிற்கும் பாடல்கள் அன்று வெளி வந்துள்ளதை நன்கு விபரமறிந்தபின் அறிந்து கொண்டேன். இதில் இளையராஜா மட்டுமல்ல, உலகுக்குத் தெரியாத வேறு சில இசையமைப்பாளர்கள் இசையமைத்த பாடல்களும் அடங்கும். சில பாடல்களை நான் கூறும்போது, அதுவும் அது இடம்பெற்றுள்ள திரைப்படத்துடன், இப்படி ஒரு படத்தில் இப்படி ஒரு பாடல் வந்திருக்கிறது என்று எனக்கு எப்படித் தெரியும் என்று நண்பர்கள் வியந்திருக்கிறார்கள். சிலநேரம் வெறும் பாடல் மட்டும்தான் நினைவிலிருக்கும்; உதாரணமாக ‘தேவி வந்த நேரம்’, எனக்கு மிகப் பிடித்த பாடல். அன்மையில்தான், வண்டிச் சக்கரத்தில் சங்கர்-கணேஷ் இசையில் இடம் பெற்ற பாடல் அது என்று அறிந்து கொண்டேன்.
சற்று வளர்ந்து விபரமறிய ஆரம்பித்தபோது, விபரமாகவே இளையராஜாவை ரசிக்க ஆரம்பித்து விட்டோம் (சங்கீதப் பின்னணியோ ஞானமோ எங்கள் வம்சத்திலேயே யாருக்கும் கிடையாதென்பதையும் இங்கு தெளிவுபடுத்தி விடுகிறேன்). பெற்றோரை நச்சரித்து வீட்டில் ஒரு கேசட் பிளேயர் (டேப் ரெக்கார்டர் என்றுதான் நாங்கள் சொல்வோம்) வாங்க வைத்து விட்டோம். அன்று பிலிப்ஸில் ஒரு mono player அது. கிட்டத்தட்ட அறிவிப்பாளரில்லாத, திரைப்படப்பாடல்களை மட்டுமே ஒலிக்கும் எங்களது இன்னோரு வானொலிதான் அது. கொஞ்சம் வளர வளர, செலவுக்குக் கொடுக்கும் பணத்தில் மிச்சம் பிடித்து கேஸட்டுகளை வாங்கிக் குவிக்க ஆரம்பித்தோம்.
வீட்டில், சரியான நேரத்துக்குச் செய்திகளைக் கேட்க நினைக்கும் பெரியவர்களுக்கு மிக இடைஞ்சலாக விளைந்தது எங்கள் ‘டேப் ரெக்கார்டர்’. கேசட்டுகளை யாருக்கும் இரவல் கொடுக்கக்கூடாதென்பது நாங்கள் (உடன் பிறந்தவர்கள்) அனைவரும் ஏற்றுக் கொண்ட உறுதிமொழி. கேட்டு, எங்களால் தவிர்க்க முடியாது என்று ஒருவர் எங்கள் வீட்டுக்கு வர நேர்ந்து விட்டால், எங்கள் கேஸட்டுகளை, அவர், எங்கள் வீட்டை விட்டுப் போகும் வரை, ஒளித்துவைத்து விடுவோம். வாரக்கணக்கில்கூட சில கேசட்டுகளை ஒளித்து வைத்துத் தியாகம் செய்திருக்கிறோம். அந்த கேசட்டு மலையில், கிட்டத்தட்ட எங்களனைவருக்குமே, எந்த கேசட்டில் என்ன பாடல், எந்த வரிசையில் இருக்கிறதென்பது மனப்பாடமாகத் தெரியும். ஒரே மாதிரி ஒன்றுக்கும் மேற்பட்டு இருக்கும் கேசட்டுகளில், ஓரிரு வார்த்தைகளில் ஒரு குறிப்பு மட்டுமே எழுதி வைத்திருப்போம்.
இதற்கு இடையில், எங்கள் கிராமத்தில் ஆண்டு முழுதும் ஏதாவது ஒரு திருவிழா வந்து கொண்டே இருக்கும். கிராமத்தில் இது போன்ற திருவிழாக் கொண்டாட்டங்களை ஒருங்கிணைப்பதற்கு ஓர் இளைஞர் கூட்டம் உண்டு (கவனிக்க, அப்பொழுது நான் சிறுவன்). என்ன பண்ணுவார்களோ தெரியாது, ஒவ்வொரு திருவிழாவுக்கும் கூம்புக் குழாய் கட்டி, பாடல்களை பல மைல்களுக்கும் கேட்குமாறு ஒலிக்க விடுவார்கள். இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம், எங்கள் கிராமத்துக்குப் பேருந்து கிடையாது. குறைந்தபட்சமாக 3 கி.மீ. அதிகபட்சமாக 8 கிமீ நடந்தால்தான் எங்களுக்குப் பேருந்து. எனவே அருகிலுள்ள நகரத்துக்குச் சென்றுவருபவர்களிடம் ஒலி அமைப்பாளர் எதுவரை பாடல் கேட்கிறது என்று உறுதிப்படுத்திக் கொள்வார். இவர் உத்தேசித்திருந்த தூரத்தைவிட குறைவான தூரம் பாடல் கேட்டதாக அறிந்தால் உடனே சென்று ஒலியைக் கூட்டி விடுவார். இதில் என்ன சங்கடம் என்றால், இரண்டு கூம்புகள் எங்கள் வீட்டுக்கு நேரெதிரே அரசு/வேம்பு மரங்களின் மேலே கட்டப் பட்டிருக்கும். வீட்டுக்குள்ளேயே ஒருவர் பேசுவது மற்றவருக்குக் கேட்காது. எங்களுடைய தனிப்பட்ட சங்கடம் – tape recorder-ல் எங்களால் பாட்டு கேட்கமுடியாது. ‘பாட்டுதானே கேட்க வேண்டும்? அதுதான் குழாய்கட்டி சத்தமாகவே போடுகிறார்களே?’ என்று உங்களுக்குத் தோன்றக் கூடும். அங்குதான் சிக்கல்.
ஊருக்கு ஒலி அமைக்க வருபவருக்கு எப்போதுமே தனி மரியாதை உண்டு. அதனை கிராமத்தில் பிறந்து வளர்ந்த அனைவரும் புரிந்து கொள்வார்கள். நகரவாசிகளுக்கு அதனை விளக்கவே முடியாது. இந்த ஒலிஅமைப்பு என்பது, கிராமபோன் மற்றும் இசைத்தட்டு ஆகிய இரண்டு முக்கிய ஒலியிசைக்கும் கருவிகளை உள்ளடக்கியிருக்கும். ஆதிகாலத்து பாடல்கள் கிராமபோனிலும், 60லிருந்து சமீபத்திய பாடல்கள்வரை இசைத்தட்டுகளிலும் இசைக்கப்படும். இவற்றை இயக்குவதற்கு எப்போதும் ஒருவர், இக்கருவிகளின் அருகில் அமர்ந்திருக்க வேண்டும். ஏனென்றால், கிராமபோன் என்றால் அதற்குச் சாவி கொடுக்க வேண்டும்; இசைத்தட்டு என்றால், அதனை அடிக்கடி மாற்ற வேண்டும்; மற்றும், இரண்டிலும், தேய்ந்த தட்டுகள் ஒரே இடத்தில் மாட்டிக்கொளும்போது முள்ளைக் கொஞ்சம் தள்ளி வைக்க வேண்டும். இந்த வேலையைச் செய்வதற்கு இளைஞர்களிடம் பெரும் போட்டி நிலவும். இந்த வேலையைச் செய்வது ஒரு கௌரவம்.
ஒலி அமைப்பவர் இந்த வேலையை தனக்குப் பிடித்த யாராவது ஓர் இளைஞரிடம் ஒப்படைத்துவிட்டு ஊர் சுற்றக் கிளம்பி விடுவார் (எங்கள் ஊரை, எவ்வளவு மெதுவாக நடந்தாலும், ஒரு 10 நிமிடத்தில் சுற்றி வந்து விடலாம்; வேறு என்னதான் செய்வாரென்றால் – அது இந்தக் கட்டுரையில் அடங்காது). அவ்வாறு ஒப்படைக்கப்படுவது, பெரும்பாலும் ஒரே குழுவைச் சேர்ந்த இளைஞர்களிடம்தான். இவர்கள், எங்களுக்கு ஒரு தலைமுறைக்கு முந்தையவர்கள். இவர்கள், எப்போதுமே, 60/70 களின் பாடல்களை மட்டுமே ஒலிக்க விடுவார்கள். அந்த வயதில் எங்களுக்கு அது பழைய பாடல்கள்; மேலும் ஒலிபெருக்கி ஒலி, எங்கள் விருப்பப் பாடல்களை எங்கள் டேப் ரெக்கார்டரிலும் கேட்க விடாது. இதுதான் சிக்கல்.
இவ்வாறு பல சிக்கல்களுக்கிடையிலும் எங்களோடு எங்களது பாடல் வேட்கையும் வளர்ந்தது. ஆண்டுகள் உருண்டோட, எங்களுக்குச் சிறிய டேப் ரெக்கார்டரில் பாட்டுக் கேட்பது பிடிக்காமல் போய்விட்டது. மிகப் பெரிய போராட்டத்துக்குப் பின் எங்களது பொருளாதாரச் சக்திக்கு மீறி, பெற்றோரை நச்சரித்து கடைசியாக, டேப் ரெக்கார்டரை ஒரு மாபெரும் ஜப்பான் மியூசிக் சிஸ்டம் கொண்டு ஒழித்துக்கட்டினோம். நாங்கள் பாடல்களை மேலும் இனிமையாகக் கேட்க ஆரம்பித்தோம். வளரவளர உடன் பிறந்த ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ரசனைகளும் சேர்ந்து கொண்டன. தனிப்பட்ட முறையில், எனக்கு, அண்மைய பாடல்களுடன், அனைத்து பழைய பாடல்களும் பிடிக்க ஆரம்பித்து விட்டன.
சற்றே வளர்ந்து விட்ட பின்னர், திரைப்பாடல்கள் கேட்பதென்றால், இந்தியாவில் அம்பாசிடர் கார்கள் போல, இளையராஜாவை விட்டால் வேறு வழியில்லை என்ற நிலை உருவானது. மனோஜ்-கியான்களோ, எஸ்.ஏ. ராஜ்குமாரோ, மரகதமணியோ, அம்சலேகாவோ, சந்திரபோஸோ ஒருவராலும் இளையராஜா புயலைத் தாக்குப் பிடிக்க முடியவில்லை. இளையராஜாவின் நிழலில் சிறிது காலம் தேவா வண்டி ஓடியது. எங்களது முந்தைய தலைமுறைகள், வயதுக்கேற்ப, ‘பாகவதர் போல வருமா’, ‘ஏ.எம். ராஜா போல வருமா’, ‘எம்.எஸ்.வி. போல வருமா’ என்று தமிழ்நாட்டு மரபினை விடாமல் கட்டிக் காத்து வந்தனர். நாங்கள் இளையராஜா பக்தர்களாகி விட்டோம்.
கடைசியில் அந்த நாளும் வந்தது. ரோஜா படப்பாடல் வெளிவந்தது. அகில இந்தியாவே கொண்டாடியது. எங்களனைவருக்கும், மற்ற இசையமைப்பாளர்களின் நல்ல பாடல்கள் வெளிவந்தபோது எப்படிப் பிடித்திருந்ததோ அவ்வாறே பிடித்திருந்தது. பின்னரும் இளையராஜாவின் ஆதிக்கம் சற்று தொடர்ந்தது. அடுத்து, தமிழில், ரஹ்மானின் 2வது படமான புதியமுகம் வந்தது. பாடல்கள் சற்று சுமார்தான். இருந்தும் ரோஜா புயலால் அதுவும் கரையேறியது. எங்களுக்கும் பிடித்திருந்தது.
பின்னரும் இளையராஜாவின் ஆதிக்கம் தொடர்ந்தது. அடுத்து, தமிழில், ரஹ்மானின் 3வது படமான ஜென்டில்மேன் வந்தது. அது சற்றே ராஜாவின் அபிமானிகளை ஆட்டிப்பார்த்தது. பின்னர் வரிசையாக உழவன், வண்டிச்சோலை சின்னராசு, புதிய மன்னர்கள் போன்ற மரண மொக்கைப் படங்களில்கூட பாடல்கள் நன்றாகவே இருந்தன. மெதுவாக, எனது வயதையொத்தவர்கள்,’ ராஜா போல வருமா? ரஹ்மான் எல்லாம் இன்னும் ஒரு நாலஞ்சு படத்துக்குத்தான் தாங்குவார். எல்லா பாட்டும் ஒரே மாதிரியே இருக்கு. இது தாங்காது’ என்று சொல்லத் தொடங்கினார்கள். பல பத்திரிகைகள் ‘ரஹ்மானின் பாடல்கள் அனைத்தும் ஒரே மாதிரி இருக்கின்றன’ என்று எழுதின. ராஜாவின் அபிமானிகளான நாங்கள் – அதற்கு முன்பு போல் இல்லாமல் – ராஜா இசையமைக்கும் அனைத்து படங்களின் பாடல்களையும் விடாமல் வாங்கிக் கேட்க ஆரம்பித்தோம் (அதற்கு முன்பெல்லாம் பாடல்கள் வெளிவந்து நன்றாக இருந்தால் மட்டுமே வாங்கி கேட்போம். அதிலும் நல்ல பாடல்களை மட்டும் தனியாக கேசட்டில் பதிந்து வைத்துக் கொள்வோம். இல்லா விட்டால் எங்காவது ஒலிக்கும்போது காதில் வாங்கிக் கொள்வதோடு சரி).
ராஜாவைத் தவிர வேறொருவர் இசையுலகை ஆளமுடியாது என்று (பலவீனமாக) நம்பினோம். வீரா, கோயில்காளை போல சில கேட்கும்படியான பாடல்கள் வந்தாலும் ராசைய்யா போன்ற பாடல்களை ராஜாவின் அபிமானத்தால் வலுக்கட்டாயமாகக் கேட்பது போன்ற ஒரு கொடுமையான விதி எந்த எதிரிக்கும் வாய்க்கக் கூடாது. ‘தென்றல் வந்து தீண்டும்போது’ பாட்டெல்லாம் முதல்முறை கேட்கும்போது எனக்கு சுக்குக் கஷாயம் குடிப்பதுபோல அவ்வளவு கஷ்டமாக இருந்தது. ராஜா அபிமானி என்பதால் மீண்டும் மீண்டும் கேட்டேன்.
அநேகமாக 95-96ல் ராஜாவின் சிம்மாசனம் முழுமையாகவே அகன்று விட்டது. ராஜா உள்பட, ரஹ்மான், தேவா, சிற்பி, எஸ்.ஏ.ராஜ்குமார், வித்யாசாகர் என்று பல இசையமைப்பாளர்கள் வரிசையாக ‘ஹிட்’ பாடல்களைக் கொடுக்க ஆரம்பித்தார்கள். மறுக்க முடியாத வகையில் மகுடம் ரஹ்மான் தலையை அடைந்து விட்டது. எனக்கு அவ்வளவுதான் நினைவா அல்லது அதுவேதான் உண்மையா என்று தெரியவில்லை. 96-97க்குப் பின் காதலுக்கு மரியாதை அதற்குப் பின் கண்ணுக்குள் நிலவு, பின்னர் சற்று சுமாராக பாரதி தவிர்த்து ராஜாவின் வேறெந்த படங்களின் பாடல்களும் இனிமையாக அமையவில்லை என்பது என் எண்ணம்.
இப்போதெல்லாம் எந்த டேப் ரெக்கார்டரும் இல்லை மியூசிக் சிஸ்டமும் இல்லை. அனைத்துமே கணினிதான். என் இசைத் தொகுப்பில் பெரும்பாலும் ராஜா பாடல்கள்தான். நான் பல அரிய பாடல்களைச் சேகரித்து வைத்திருக்கிறேன். அவ்வப்போது கேட்கும்போது இங்கே சொன்னதெல்லாம் மனத்துக்குள் ஓடும். ஆனால் ராஜா பித்தெல்லாம் இல்லை. ராஜாவோ, ரஹ்மானோ, அனிருத்தோ யாராயிருந்தாலும், நன்றாக இருந்தால், உறுத்தலின்றி ரசிக்க முடிகிறது. அண்மையில் ’தேரோடும் வீதியிலே’ என்றொரு படத்தின் பாடல்களைக் கேட்டவுடன் பிடித்துவிட்டது.
ஆனால், ராஜாவின் பாடல்கள் வெளிவரும்போது உண்டாகும் ஏக்கம் தவிர்க்க முடியாமல் ஆகிவிட்டது. ஆனால், வெளிவந்தபின் கிடைக்கும் ஏமாற்றமும் தவிர்க்க முடியாமல் போய்விட்டது. பழசிராஜா பாடல்கள் வருவதற்குமுன் அதற்கு கொடுக்கப்பட்ட விளம்பரமும், அது வந்தபின் மரபுப்படி அதற்கு அளிக்கப்பட்ட புகழாரங்களும் மிகவும் சங்கடப்படுத்திவிட்டன. அதற்குப் பின் வந்த ‘தோனி’, தற்போது ‘நீதானே என் பொன் வசந்தம்’ – ம்ஹூம்; கொஞ்சம் கஷ்டம்தான்.
ராஜா மிகவும் ரசிக்கத்தக்க பல பாடல்களைக் கொடுத்திருக்கிறார். வேற்று மொழிப் பாடல்களை மட்டுமே கேட்டுக்கொண்டு, அதுதான் பெருமை என்று கருதிக் கொண்டிருந்த பலரைத் தமிழ்பாடல் கேட்பதும் பெருமை என்று மாற்றியவர், இளையராஜா. ஒவ்வொருவருக்கும், ஓர் உச்சம் இருக்கும். மகாநதிபோல, எவ்வளவு அகன்றதாக இருந்தாலும், கடைசியில், ஒரு வாய்க்கால்தான். அதற்காக அதன் ஏற்றம் குன்றி விடாது. ஏற்றத்தையும் இறக்கத்தையும் நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
0
அனானிமஸ்