செய்யுள் முதல் கண்ணதாசன் வரை
செய்யுள்களையும் காவியங்களையும் மொழிபெயர்க்க முடியும் என்ற விவாதம் மிகவும் பழமையானது. எவ்வளவுதான் உண்மையாகவும், சாதுர்யமாகவும் மொழிபெயர்த்தாலும், செய்யுளின் ஜீவனைக் கொண்டு வர முடியாது என்று எட்னா செயிண்ட் வின்சன் மிலே என்பவர் குறிப்பிடுகிறார்.
செய்யுள் என்பது மொழிபெயர்க்கக்கூடியதுதான் என்று ஜான்சன், போப், ஹொரேஸ் ஆகியோர் கருதுகின்றனர். செய்யுளை வேறு மொழிக்குக் கொண்டு போவது என்பது அநேகமாக இயலாத ஒன்றாகும் என்கிறார் டிரைடன் என்ற அறிஞர். கால்களை சங்கிலியால் பிணைத்துக் கொண்டு கயிறுமீது நடனம் ஆடுவதற்கு ஒப்பாகும் என்றும் அவர் வர்ணிக்கிறார்.
ஷெல்லி இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்கிறார். ஒலியும் உணர்வும்தான் செய்யுளின் ஜீவன். இதனை மொழி மாற்றம் செய்வது வீணான வேலை என்கிறார் அவர்.
செய்யுளை மொழிபெயர்ப்பது என்பது மிகவும் கடினமான பணிதான். இருந்தும் உலகம் பூராவும் பாராட்டப்படும் மொழிபெயர்ப்புகள் நான்கை இங்கே குறிப்பிடவேண்டும்.
- ஷேக்ஸ்பியரின் பதினேழு நாடகங்களை ஜெர்மன் மொழியில் Schlegel மொழிபெயர்த்தது.
- கதேயின் ஃபாஸ்ட் ஆங்கிலத்தில் Bayard Taylor என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டது.
- உமர்கயாமின் ருபியாத் எட்வர்டு ஃபிட்ஜெரால்டால் மொழிபெயர்க்கப்பட்டது.
- கீதை சம்ஸ்கிருதத்திலிருந்து ஆங்கிலத்தில் சுவாமி பிரபாவானந்தா மற்றும் கிறிஸ்டோபர் ஷர்வுட் ஆகியோரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.
நவீன மொழிபெயர்ப்பாளர்கள் பல்வேறு முறையைப் பரிசோதித்து வருகிறார்கள்.
- மூலத்தின் ஒலியையும் மற்ற மொழியையும் இணைப்பது.
- வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பது.
- மூலச் செய்யுளின் மாத்திரைகளைக் கணக்கில் கொள்வது.
- உரைநடையில் சொல்வது.
- எதுகை மோனையைக் கணக்கில் கொள்வது.
- செய்யுளுக்கு அர்த்தம் (பொழிப்புரை) தருவது.
- செய்யுளை விளக்குவது.
ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்புடையது என்றாலும் செய்யுளை மொழிபெயர்ப்பதில் உள்ள சிக்கல் தீரவில்லை.
மேடைப் பேச்சும் மொழிபெயர்ப்பும்
மேடைப் பேச்சை மொழிபெயர்ப்பவருக்கும் எழுதியதை மொழிபெயர்ப்பவருக்கும் ஏராளமான வித்தியாசம் உண்டு. எழுத்தை மொழிபெயர்ப்பவருக்குச் சிறந்த எழுத்துத் திறமை வேண்டும். மொழிபெயர்க்கப்பட வேண்டிய மொழியில் வெளிப்படுத்தும் திறமை வேண்டும். இதனால்தான் மொழிபெயர்ப்பாளர்கள் ஒரே ஒரு மொழியை மட்டும் தேர்ந்தெடுக்கிறார்கள். குறிப்பாக, தங்களுடைய தாய்மொழியை. மூல மொழியைப் புரிந்துகொள்வதும், அந்த மொழி பேசும் நாட்டின் நாகரிகத்தைப் புரிந்துகொள்வதும் சிறந்த அகராதிகளைக் கொண்ட படிப்பகத்தைப் பயன்படுத்துவதும், துணை நூல்களை வைத்துக் கொள்வதும் அவசியமாகும்.
ஆனால், மேடை மொழிபெயர்ப்பாளரின் பணி கொஞ்சம் வித்தியாசமானது. அவர் தொடர்ச்சியாகவம் உடனடியாகவும் மொழிபெயர்க்க வேண்டும். எந்த விதமான உதவியையும் எதிர்பார்க்க முடியாது. ஒரு புறம் மூல மொழியிலிருந்து மொழிபெயர்த்துக் கொண்டே மற்றொரு புறம் மூல மொழியில் பேசப்படுவதையும் கவனிக்கவும் வேண்டும். மனதில் அடுத்த வாக்கியத்துக்கான வார்த்தை அடுக்குகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
மொழிபெயர்த்ததை சரி பார்க்கக்கூட நேரம் இருக்காது. விரைவுதான் முக்கியம். இல்லை என்றால் பேச்சாளர் சொன்னது மறந்து விடும்.
பொதுவாக பேச்சாளர் குறிப்பிட்ட கால அளவில் நிறுத்தி மொழிபெயர்ப்பாளருக்கு அவகாசம் கொடுப்பார். தொடர்ச்சியான மொழிபெயர்ப்பின் போது அவர் குறிப்புகளை எடுத்துக் கொள்வார். இந்தக் குறிப்புகள் ஒரு உதவியாளரின் குறிப்பு போன்று இராது. அது மூலப் பேச்சாளரின் சிந்தனையின் குறியீடாக இருக்கும்.
எழுத்தை மொழிபெயர்ப்பவருக்கும், பேச்சை மொழிபெயர்ப்பவருக்கும் அடிப்படையான வித்தியாசம் உண்டு. அதே சமயம் இருவருமே மூல மொழி, பெயர்ப்பு மொழி ஆகிய இரண்டிலும் ஆழமான ஞானம் உடையவர்களாக இருக்க வேண்டும். விஷய ஞானம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். இங்கு ஒரு மொழியின் வார்த்தைக்குப் பதிலாக வேறு மொழி வார்த்தையை இட்டு நிரப்பினால் போதாது. ஒரு மொழியில் கூறப்பட்ட சிந்தனையை மற்ற மொழியில் சொல்லவேண்டும். அவர் மூல மொழி வார்த்தைக்கு அர்த்தம் கொடுக்கிறார். அந்த அர்த்தத்துக்கு மாற்று மொழியில் வார்த்தைகளைக் கொடுக்கிறார்.
மேடையில் மொழிபெயர்ப்பவர்
- பேசப்படும் பொருள் பற்றிய முழுமையான ஞானம் வேண்டும்.
- இரண்டு மொழியின் கலசாரத் தன்மை பற்றிய முழுமையான தெளிவு வேண்டும்.
- இரண்டு மொழி வார்த்தைகளையும் நன்கு தெரிந்து பயன்படுத்துபவராக இருக்க வேண்டும்.
- சிந்தனைகளைத் தெள்ளத்தெளிவாக இரண்டு மொழியிலும் வெளிப்படுத்தும் திறமை வேண்டும்.
- தொடர்ச்சியாக மொழிபெயர்க்கும் போது குறிப்புகளைத் திறமையாக எடுக்கத் தெரிய வேண்டும்.
- உடனடி மொழிபெயர்ப்பில் சில ஆண்டுகள் அனுபவம் வேண்டும்.
தகவல் தொழில் நுட்பமும் மொழிபெயர்ப்பும்
தாஷ்கண்ட நகரில் அன்றைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி மாரடைப்பால் இறந்து போனார். டெலி பிரிண்டரில் வந்திருந்த செய்தியை ‘தினமலர்’ பத்திரிகை டெலிபிரிண்டர் செய்தி வந்த காகிதத்தையே போட்டோ பிடித்து முதல் பக்கத்தில் போட்டது. தமிழ் நாளிதழ்களில் இது புதுமையாகப் பேசப்பட்டது.
இன்று கம்ப்யூட்டர் மூலம் மொழிபெயர்க்கும் காலம் வந்து விட்டது. எட்டு வயது சிறுவன் Popeye கார்ட்டூன் பார்க்கிறான். Popeye தமிழ் பேசுகிறான். அலை மாறினால் இந்தி பேசுகிறான். வங்க மொழியும் தெலுங்கும்கூடப் பேசுகிறான்.
அன்று தந்தி வந்தால் குடல் பதற ஆங்கிலம் தெரிந்தவரைத் தேடி ஓடுவோம். தமிழ்நாடடிலிருந்து சென்ற எம்.பி. நல்லசிவன் அவர்கள் தமிழிலேயே தந்தி அனுப்பும் உரிமையைப் பெற்றுத் தந்தார்.
தகவல் தொழில் நுட்பத்தின் காரணமாக மொழிபெயர்ப்பு பணி குறைந்து விட்டதா என்றால் இல்லை; அது அதிகமாகியிருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.
பத்திரிகைத் துறை, தொலைக்காட்சி, அரசு அலுவலகங்கள் என்று மொழிபெயர்ப்பின் தேவை கூடி வருகிறது. இதன் காரணமாக அனுபவமும் பயிற்சியும் பெற்ற மொழிபெயர்ப்பாளர்கள் அதிகமாக வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.
அனுபவமும் பயிற்சியும் இல்லாதவர்களால் பத்திரிகைத் துறையில் ஏற்பட்ட வேடிக்கை விநோதங்களைக் கதை கதையாகச் சொல்லலாம். பத்திரிகைத் துறை நண்பர் ஒருவரின் வேடிக்கையான மொழிபெயர்ப்பைப் பார்க்கலாம். பஞ்சாப் முதலமைச்சருக்கு தொல்லைக் கொடுக்கிறார் என்று கருதிய இந்திரா காந்தி அம்மையார், கியானி ஜெயில் சிங்கை மத்திய அமைச்சரவைக்குக் கொண்டு வந்தார். ஆனால், அவரோ மத்திய அரசாணைகளை மூலம் பஞ்சாப் அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட்டார்.
Jail Singh interferes in Punjab through his fiat என்று விமரிசனம் வந்தது. பத்திரிகை நண்பர் இதைத் தமிழ்ப்படுத்தும்போது, ‘ஜெயில்சிங் தன்னுடைய ஃபியட் காரை ஓட்டுவது போல் பஞ்சாப் அரசை ஓட்டுகிறார்’ என்று எழுதியிருந்தார். ஃபியட் எனும்போது அது அரசாணையைக் குறிக்கிறது என்ற விஷய ஞானம் இல்லாதாதல் இந்தத் தவறு ஏற்பட்டது.
ஆரம்ப காலத்தில் சில இந்தி தொடர்கள் தமிழில் பேச ஆரம்பித்தன.
வருகிறேன் சாப்பிட.
போகிறேன் வீட்டுக்கு.
என்கிறரீதியில் பாத்திரங்கள் பேசும். வினைச் சொல் முதலில் வரும்; கேட்பவன் நொந்து போவான்.
மொழிபெயர்ப்பில் தமிழ் மொழியின் நளினம்,மென்மை,மேன்மை தெரியாதவர்களைப் பயன்படுத்துவதல் எற்படுவது இது.
நவீன தொழில்நுணுக்கத்துக்கும் ஈடு கொடுக்க வேண்டும். முப்பது நாற்பது ஆண்டுகளுக்குமுன் திருமண வீடுகளில் வாத்தியக்கரர்கள், நாதஸ்வரமாயினும், பாண்டுவாத்தியமாயினும் ஒரு பாட்டை வாசிக்கமல்இருக்க மாட்டார்கள். அதுவும் பெண்ணோ,மாப்பிள்ளையோ ஊர்வலமாகவரும்போது கண்டிப்பாக வாசிப்பார்கள். அது
கல்யாண
ஊர்வலம் வரும்
உல்லாசமே தரும் –மகிழ்ந்து நான்
ஆடிடுவேன்
என்ற பாடலாகும். இது இந்தி படத்தின் திரைப்பாடலாகும். ’அவன்’ என்ற படத்தின் பாடல். இந்தியில் ‘Aah’ என்று வந்த படத்தின் டப்பிங் வடிவமாகும்.
ராஜ்கபூர் ,நர்கீஸ் நடித்தார்கள்.இசை அமைத்தவர்கள்சங்கர்-ஜெய்கிஷன்.பாடலை எழுதியவர் ஷைலேந்தர் என்ற உருதுக் கவிஞர்.
ராஜா கி- ஆயேகி பாராத்
ரங்கீலி ஹோகீ ராத், மகனு மே நாசூங்கி
என்பது அந்தப் பாடல்.
இந்தப் படத்தின் அத்தனை பாடல்களும் பிரபலமானவை. ஜி.கிருஷ்ணவேணிஎன்ற ஜிக்கி பாடியவை. அந்தக்காலத்தில் இசைத் தட்டு விற்பனையில் முதலிடம் பெற்றவை. தமிழ் பாடலைக் கேட்டு ஷைலேந்திரா பாடலாசிரியரை பார்க்க தமிழ்நாடு வந்தார். ஐயா! மூலத்தை நீங்கள் தமிழில் எழுதி அதனை நான் உருது மொழியில்மொழிபெயர்த்தது போல் இருக்கிறது என்றாராம் அவர்.
மனதில் கவித்துவமும்,மடியில் தமிழும் இருந்தால் கவிதையை மொழிபெயர்ப்பது ஒரு அற்புதமான அனுபவமாகும்.
அந்தப் பாடலாசிரியர், கண்ணதாசன்.
0
















