ரம், ரமா, ரம்மி!

அர்ச்சனா. பள்ளி ஆசிரியர். அவருடைய நான்கு வயது மகள் மிக அழகாக எழுதுவாள். நன்றாகப் படிப்பாள். அவளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது, “நீங்கதான் மெச்சிக்கறீங்க. இவ பிறக்கும்போது ரொம்பச் சிக்கலாகிவிட்டது. ஆபரேஷன் முடிந்து, மயக்கம் தெளிந்தபோது அருகில் கணவர் இல்லை. என் கண் குழந்தையைத் தேடுது… என்ன பொட்ட புள்ளையைப் பெத்துப் போட்டிருக்கே!. பையன்னு நினைச்சு வாசல்லேயே கிடையா கிடந்தோம்ன்னு சொன்னார் என் மாமியார். நாலு வருஷமாகியும் அந்தப் பேச்சு மறக்கலை. உயிர் பிழைச்சு வந்திருக்கேன். என்னை ஒரு வார்த்தை எப்படி இருக்கேன்னு கேட்கலை. நான் படிச்சதெல்லாம் சிபிஎஸ்சி பள்ளியில். வட இந்தியால இருந்ததால ஹிந்தி, பெங்காலி எல்லாம் நல்லா தெரியும். எனக்கு விருப்பமானது ஆசிரியர் வேலைதான். வேலைக்குப் போறேன்னு வீட்டில் அரைகுறையாக விடக்கூடாது. வீடு, குழந்தையை முழுசா பார்த்துக்கறதோட வேலைக்குப் போறதுன்னா எங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னு சொன்னாங்க… என்ன படிச்சாலும் திறமை இருந்தாலும் நம்மளை ஒருநாளும் அங்கீகரிக்க மாட்டாங்க’ என்றார். அர்ச்சனாவின் மாமியார் ஒன்றும் படிக்காதவரோ, விஷயம் தெரியாதவரோ இல்லை. ஆனாலும் பெண் என்றவுடன் அவரையும் அறியாமல், அவர் மூளையில் பதிந்துள்ள பிம்பம் வெளிப்பட்டுவிட்டது.

45 பி பேருந்து. கூட்டம் அதிகம். எனக்கு அருகில் ஒரு பெண் நிற்க முடியாமல் நின்றுகொண்டிருந்தார். சைதாபேட்டையில் ஏறிய ஒருவன் அந்தப் பெண்ணை இடித்துக்கொண்டே இருந்தான். அந்தப் பெண் வேறு பக்கம் போக முயற்சி செய்தார். கூட்ட நெரிசலில் முடியவில்லை. “என்னால முடியலை. கொஞ்சம் தள்ளி நில்லுங்க. டிரெஸ் மட்டும் டீசண்டா பண்ணினால் பத்தாது’ என்று கத்தினார். உடனே அவன் திரும்பிப் பார்த்தான். பின்னால் நான்கு கல்லூரி மாணவியர் நின்றுகொண்டிருந்தனர். உடனே ஆங்கிலத்தில், “அழகான சின்னப் பொண்ணுங்க நீங்க இருக்கும்போது, இவங்களை இடிக்கிறேன்னு சொல்றதில் கொஞ்சமாவது லாஜிக் இருக்கா?’ என்று கேட்டவுடன், அந்த மாணவியர் வெட்கத்துடன் சிரித்துவிட்டு, அந்தப் பெண்ணை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். ஸ்மார்ட்டாக இருந்து, ஆங்கிலத்தில் பேசிவிட்டால் அவன் தப்பு செய்திருக்க மாட்டான் என்ற முடிவுக்கு அந்தப் பெண்கள் எப்படி வந்தார்கள்? முன்பெல்லாம் பேருந்துகளில் அடிக்கடி பெண்கள் சண்டை போடுவார்கள். இப்போதெல்லாம் கத்துவதோ, சண்டை போடுவதோ கூட அநாகரிகம் என்று படித்த பெண்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டனர். அதனால் தவறைக் கண்டு ஒதுங்கிப் போய்விடுகிறார்கள்.

ஈவ் டீசிங் பிரச்னையால் பாதிக்கப்பட்ட பெங்களூரு பெண் வழக்கறிஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். பிரச்னைகளை எதிர்த்து நின்று போராட வைக்காமல், இப்படி ஒரு முடிவை எடுக்க வைத்தது எது? ஒருபக்கம் தவறைக் கண்டுகொள்ளாமலும் இன்னொரு பக்கம் பிரச்னையை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாமலும் செய்துவிட்டதா இன்றைய கல்வி முறை?

நான்கு மாதங்களுக்கு முன்பு ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபெற்ற பெண்கள் அனைவரும் படித்தவர்கள். நல்ல பொருளாதாரச் சூழலில் இருப்பவர்கள். அவர்களில் பெரும்பாலானோர் கணவர்களிடம் ஒருமுறையாவது அடி வாங்கியிருக்கிறார்கள். கணவர் அடித்தால் அதில் நியாயம் இருக்கும் என்றும் கணவர் அடிப்பதில் தவறு ஒன்றும் இல்லை என்றும் உலகறியச் சொன்னபோது அதிர்ச்சியாக இருந்தது.

இன்று 56 சதவிகித இந்தியப் பெண்கள் தினம் தினம் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுகிறார்கள். வாழ்க்கையில் சிலமுறையாவது கணவர்களிடம் அடி வாங்கிய பெண்கள் சுமார் 83 சதவிகிதம் பேர். (முன்பை விட தற்போது குடும்ப வன்முறை அதிகரித்து வருகிறது.) மனைவி தன்னைப் போல் ஓர் உயிர் என்று அடிக்கும் ஆண்களுக்குத்தான் அறிவில்லை, அடிவாங்குற பெண்கள் அதைப் பற்றிச் சிந்திக்க வேண்டாமா? எப்பேர்ப்பட்ட பிரச்னைகளையும் பேசித் தீர்த்துவிட முடியாதா? சில வீடுகளில் மாமியார், மருமகள் பிரச்னை லேசாக ஆரம்பிக்கும்போதே கணவன் வந்து மனைவியை அடித்து, அந்தப் பிரச்னையை வளரவிடாமல் பார்த்துக்கொள்கிறார்கள்! சிலர் அடித்த பிறகுதான் விசாரணை நடத்துகிறார்கள். ஆண்களுக்கு இந்த அதிகாரத்தைக் கொடுத்தது யார்? அடிப்பது ஆண்களின் உரிமை, அதை ஏற்றுக்கொள்வது பெண்களின் கடமை என்று சொல்லி வைத்தது யார்? அடிக்கும் ஆண்களை எதிர்ப்பது இருக்கட்டும், முதலில் அடிப்பது தவறு என்று கூட பெண்கள் நினைக்கும் நிலையை இன்னும் எட்டவில்லையே, ஏன்?

அதேபோல நிறைய படித்து, லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் பெண்களைக் கூட திருமணத்தின்போது 50 பவுன், 100 பவுன் என்று வாங்கிக்கொண்டுதான் திருமணம் செய்துகொள்கிறார்கள். இருவரும் ஒரே நிலையில் இருக்கும்போது கூட ஆணுக்கு வரதட்சனை தந்துதான் திருமணம் செய்துகொள்ள வேண்டிய சூழலை ஏன் பெண் ஏற்றுக்கொள்கிறாள்? பெண்களுக்குத் திருமணம்தான் வாழ்க்கையின் உன்னதமான, உயர்ந்தபட்ச இலக்காகச் சமூகம் நிர்ணயித்து வைத்திருக்கிறது. ஆந்திராவைச் சேர்ந்த தோழி சொன்னாள்,  ‘படிக்காதவனுக்குக்கூட 40,50 லட்சம் கொடுத்து மருத்துவ சீட் வாங்கிவிடுகிறார்கள். திருமணத்தின்போது அவன் ஒன்றுக்கும் லாயக்கில்லாதவன் என்றாலும் ஒரு கோடி, ரெண்டு கோடின்னு வரதட்சனை வாங்கி விடுகிறார்கள்’ என்றாள்.

வட இந்தியாவில் ஒரு பழமொழி சொல்வார்கள். “ரம், ரமா, ரம்மி’ இது மூன்றும் இருந்தால் ஒரு மனிதன் உருப்பட மாட்டான். ரம், ரம்மி சரி. இதில் ரமா எங்கே இருந்து வந்தாள்? குடி, சூதாட்டத்துடன் ரத்தமும் சதையும் உள்ள பெண்ணை இணைக்கும் போக்கு எப்படி வந்தது? நம் மண்ணில் பெண்கள் பற்றிய புரையோடிப் போன எண்ணங்களின் விளைவே இதுபோன்ற கருத்துகள்.

பெண்கள் படித்து, கை நிறையச் சம்பாதித்தாலும் எத்தனை ஆண்கள், தங்கள் மனைவியிடம் ஏடிஎம் கார்டுகளைக் கொடுக்கிறார்கள்? அலுவலகங்களில் உயர்ந்த பொறுப்பு வகிக்கும் பெண்கள் தங்கள் வீடுகளில் எந்த முடிவையும் எடுக்க முடியாமல் வைக்கப்பட்டிருக்கிறார்கள். கணவரை எதிர்த்து கருத்து சொன்னால், படித்த திமிர் என்ற பட்டம் கிடைத்துவிடுமோ என்ற பயத்தில், வேலைக்குச் செல்லும் சலுகையாவது கிடைக்கிறதே என்ற எண்ணத்தில், கணவர் தவறாகச் சொன்னாலும் எதிர்த்துப் பேச மாட்டேன் என்கிறார் ஒரு கல்லூரிப் பேராசிரியை! அந்தப் பேராசிரியையின் மகன் அடிக்கடி, அவன் அம்மாவிடம் சொல்லும் வார்த்தை, “போம்மா, உனக்கு ஒண்ணும் தெரியாது’ என்பதுதான். கணவர் சொல்வதைக் கேட்டு, அவனும் அப்படிச் சொல்ல ஆரம்பித்துவிட்டான். அவனுக்காவது புரிய வைக்கக்கூடாதா என்றால், “என் பிள்ளையிடம் முட்டாள் பட்டம் வாங்கிறதில் எனக்கொன்றும் வருத்தமில்லை’ என்றார்! விட்டுக் கொடுத்து வாழலாம், ஆனால் எதை விட்டுக் கொடுப்பது என்பது முக்கியம் அல்லவா!

வேலைக்குப் போவதோ, வேலையை விடுவதோ பெண்ணின் முடிவாக இங்கு பெரும்பாலும் இல்லை. எந்தப் பிரச்னை என்றாலும் முதலில் வரும் வார்த்தைகள், “வேலையை விடு. என் சம்பளத்தில் குடும்பம் நடத்திக்கலாம்’ என்பதுதான். பொருளாதாரச் சுதந்தரம் இருந்தால் பெண்கள் தாங்கள் இழுக்கும் இழுப்புக்கெல்லாம் வளைந்துகொடுக்க மாட்டார்கள் என்று ஆண்கள் நினைப்பதன் விளைவே இந்தக் கோரிக்கை.

பெண் சிசுக்கொலை, குழந்தை திருமணம், வரதட்சனை, கல்வி, ஆரோக்கியம், ஊட்டச் சத்து குறைபாடு என்று ஏராளமான பிரச்னைகளைப் பெண்கள் சந்தித்து வருகிறார்கள். இந்தப் பிரச்னைகளை எல்லாம் தீர்க்க வேண்டியது எல்லோரின் கைகளிலும்தான் இருக்கிறது. குறிப்பாக பெண்கள் பிரச்னைகளை, பெண்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். பிரச்னைகளைத் தீர்க்கவும், ஆண்களுக்கு இணையாக சம வாய்ப்புகளைப் பெறவும் போராட வேண்டும்.

இன்று காலையில் இருந்து குறுஞ் செய்திகளிலும் தொலைபேசியிலும் ஏராளமானவர்கள் வாழ்த்து தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள். அவர்களிடம் உங்கள் மனைவிக்கு/அம்மாவுக்கு வாழ்த்து தெரிவித்தீர்களா என்றால் இல்லை என்றார்கள். சிலர் மகளிர் தினத்துக்காக ட்ரீட் கேட்டார்கள். மகளிர் தினம் என்றால் என்ன? என்று கேட்டதும், “வாலண்டைன்ஸ்டே மாதிரி வுமன்ஸ்டே’ என்றார்கள்!

இன்றைய இந்தியாவில் வாலண்டைன்ஸ் டே, மதர்ஸ் டே வரிசையில் பெண்கள் தினத்தையும் சேர்த்து, வியபார உலகம் கொண்டாடி வருவது வருத்தத்தை அளிக்கிறது. நகைக்கடை, புடைவைக் கடை, செருப்புக் கடை, விமானக் கட்டணம், உணவு விடுதி போன்றவற்றில் சிறப்புச் சலுகைகளை அளித்து, இந்த நாளையும் ஒரு வெற்றிகரமான வியாபார தினமாகப் பார்க்கும் உத்தியைப் பெண்கள் புரிந்துகொள்ள வேண்டும். பாரிலும் பஃபிலும் இருக்கும் பெண்களைப் போட்டு, பெண்கள் தினம் என்று திட்டமிட்டுச் செய்தி பரப்பும் ஊடகங்களைக் கண்டிக்க வேண்டும். இதுவரை உலக அளவில் 10 கோடி பெண்கள் மாயமாகியிருக்கிறார்கள். அதில் 5 கோடி பெண்கள் இந்தியாவில் இருந்து மாயமானவர்கள். பண்பாடு என்ற பெயரில் இன்னும் பெண்களை இரண்டாம் தர பிரஜையாக நடத்துவதை அனுமதிக்க முடியாது!

0

திலகவதி

யாழ் நூலகம் : அழிக்கப்பட்ட அறிவுச் சுரங்கம்

புதிய பகுதி : நிகழ்வுகள், நினைவுகள்!

அண்ணா நூற்றாண்டு நூலக இடமாற்றம் தொடர்பாக நடைபெற்றுவரும் விவாதங்களில், யாழ் நூலக எரிப்பு தவறாமல் இடம்பெறுகிறது. அவசியம் கருதி, அந்தச் சம்பவத்தைச் சுருக்கமாக அறிமுகம் செய்கிறது இந்தக் கட்டுரை. சமகால அரசியல், சமூக நிகழ்வுகளுக்கு வலு சேர்க்கும் வகையில் ’நிகழ்வுகள், நினைவுகள்’ பகுதி தொடர்ந்து வெளிவரும்.

தமிழர்களின் கலாச்சாரக் குறியீடுகளை அழிப்பது தமிழர்களை அழிப்பதைக் காட்டிலும் முக்கியமானது – சிங்கள இனவெறியர்களுக்குச் சொல்லித் தரப்பட்ட சித்தாந்தங்களுள் இதுவும் ஒன்று. அத்தகைய கலாச்சாரக் குறியீடுகளுள் ஒன்று யாழ்ப்பாணம் பொதுமக்கள் நூலகம். ஆசியாவின் மிகச்சிறந்த நூலகமாகக் கருதப்பட்ட நூலகம். ஈழத் தமிழர்களின் பெருமை, பெருமிதம், கௌரவம் என்று யாழ் நூலகத்தைச் சொல்லலாம்.

இன்னும் சொல்லப்போனால் ஈழத்தமிழர்களின் கல்வியறிவுக்கான ஆதாரப்புள்ளியாக அந்த நூலகத்தைத்தான் சுட்டிக்காட்டுவார்கள். அதுதான் சிங்கள இனவெறியர்களை உறுத்திக்கொண்டே இருந்தது. தமிழர்களின் முன்னேற்றத்துக்கு உத்வேகம் கொடுக்கின்ற அந்த நூலகத்தை என்றாவது ஒருநாள் தடம் தெரியாமல் அழித்துவிட வேண்டும் என்று உள்ளுக்குள் வன்மம் வளர்த்துக் கொண்டிருந்தனர். தகுந்த நேரத்துக்காகக் காத்திருந்தனர்.

1981 ஆம் ஆண்டின் மே மாதம் யாழ்ப்பாணத்தில் மாவட்ட சபைத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. பிரசாரம் உச்சத்தில் இருந்தது. தேர்தல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிங்களக் காவலர்கள் வந்திருந்தனர்.

31 மே 1981 அன்று தமிழர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் சிங்கள காவலர் ஒருவர் மரணம் அடைந்தார். அவ்வளவுதான். எங்கிருந்து வந்தார்கள் என்று தெரியாது. எப்படி வந்தார்கள் என்று தெரியாது. கொத்துக் கொத்தாக வந்த சிங்களர்கள் தமிழர்கள் மீது ஆவேசத் தாக்குதலில் ஈடுபட்டனர். இங்கே சிங்களர்கள் என்றால் சிங்களக் காவலர்கள், ராணுவத்தினர், இனவெறியர்கள், வன்முறையாளர்கள் என்று அத்தனை பேரும் அடக்கம்.

முதலில் புத்தகக் கடைகளைக் குறிவைத்தனர். அடுத்தது, பத்திரிகை அலுவலகம். இலங்கையில் முதல் தமிழ்ப் பத்திரிகை என்ற பெருமைக்குரிய ஈழநாடு பத்திரிகை அலுவலகம் தீக்கிரையானது. யாழ்ப்பாணம் நாச்சியார் கோயிலுக்குத் தீவைத்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் வீட்டுக்குத் தீ வைக்கப்பட்டது. அவருடைய வாகனமும் எரிக்கப்பட்டது. அக்கம்பக்கத்தின் தென்பட்ட தமிழர்களின் வீடுகள், கடைகள், வாகனங்கள் அனைத்தையும் நெருப்பு கொண்டு எரித்தனர்.

அதன்பிறகும் வெறி அடங்கவில்லை அவர்களுக்கு. அடுத்து எதை அழிப்பது என்று அலைந்த இனவெறியர்களின் கழுகுக் கண்களில் யாழ்ப்பாணம் பொதுமக்கள் நூலகம் சிக்கியது. உற்சாகமடைந்த இனவெறியர்கள் யாழ் நூலகத்துக்குள் நுழைந்தனர். தடுத்து நிறுத்திய காவலாளியை நெட்டித் தள்ளினர். கைவசம் கொண்டுவந்த பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் கொண்டு நூலகத்தின் ஒவ்வொரு பகுதியாகப் பார்த்துப் பார்த்துத் தீவைத்தனர். பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதாகவும் சில சாட்சியங்கள் இருக்கின்றன.

நூலகத்தின் மேற்கு மூலை பகுதிதான் முதலில் எரியத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக நூலகத்தின் அடுத்தடுத்த பகுதிகளும் எரியத் தொடங்கின. நூலகம் எரிகிறது என்றால் புத்தகங்கள் எரிகின்றன என்று அர்த்தம். புத்தகங்கள் எரிகின்றன என்றால் தமிழர்களின் கலாச்சாரக் குறியீடுகள் எரிகின்றன என்று அர்த்தம். செய்தி கேள்விப்பட்ட தமிழர்கள் பதைபதைத்தனர்.

நூலகம் எரிந்துகொண்டிருக்கும் செய்தி மாநகரசபை ஆணையாளர் சிவஞானத்துக்குக் கிடைத்தது. பதறித் துடித்த அவர், உடனடியாக தீயணைப்பு வீரர்களையும் மாநகரசபை ஊழியர்களையும் நூலகத்துக்கு அனுப்பினார். தீயை அணையுங்கள், ஆவணங்களைக் காப்பாற்றுங்கள் என்று உத்தரவிட்டார். அதன்படி நூலகத்தை நெருங்கிய தீயணைப்பு வீரர்களைத் தடுத்து நிறுத்தினர் சிங்கள காவலர்கள். மேலிடத்து உத்தரவு அவர்களை அப்படிச் செய்யவைத்திருந்தது.

நூலகத்தின் ஒவ்வொரு அங்குலமும் அழிந்துகொண்டிருந்தது. நூலகத்துக்குள் சேமித்து வைக்கப்பட்டிருந்த 97000 நூல்கள் கருகிச் சிதைந்தன. மருத்துவம், இலக்கியம், ஜோதிடம் உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த நூல்கள், ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் சாம்பலாகின. கலாநிதி ஆனந்த குமாரசுவாமி நூற்தொகுதி, சி. வன்னியசிங்கம் நூற்தொகுதி, ஐசாக் தம்பையா நூற்தொகுதி, கதிரவேற்பிள்ளை நூற்தொகுதி, அமெரிக்காவில் இருந்து நன்கொடையாக வந்திருந்த நூற்தொகுதிகள் ஆகியன அழிந்து போன பொக்கிஷங்களில் அதிமுக்கியமானவை.

யாழ் நூலகம் எரிக்கப்பட்ட செய்தி தமிழர்களை அதிர்ச்சியில் உறையச் செய்தது. செய்தியைக் கேள்விப்பட்ட பன்மொழிப் புலவர் தாவீது அடிகளார் அதிர்ச்சியில் மரணம் அடையும் அளவுக்கு இருந்தது யாழ் நூலக எரிப்பின் தாக்கம். நூலக எரிப்பை நேரடியாகப் பார்த்த பற்குணம் என்பவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டது. யாழ் நூலக எரிப்பு தமிழர்களின் மனத்தில் ஆற்றமுடியாத வடுக்களை ஏற்படுத்திவிட்டன. அந்த நூலகம் உருவான வரலாறு அப்படிப்பட்டது.

மனிதனுக்கு சுவாசிப்பது எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியமானது வாசிப்பது என்பதில் ஈழத்தமிழர்கள் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டவர்கள். அதன் காரணமாகவே 1842 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் முதல் நூலகம் உருவாக்கப்பட்டது. அந்த நூலகம் பெரிய அளவில் வளர்ச்சி அடையாவிட்டாலும்கூட புத்தகங்கள் வாசிப்பதில் தமிழர்களுக்கு ஆர்வம் குறைந்துவிடவில்லை. அதன் காரணமாகவே பெரிய நூலகம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் உருவாக்க விரும்பினர்.

ஆர்வம் கொண்ட இளைஞர்களும் பொதுநல ஆர்வலர்களும் நூலகம் உருவாக்கும் பணியில் ஈடுபட்டனர். சிறிய அளவில் கட்டப்பட்ட அந்த நூலகம் மெல்ல மெல்ல வளர்ச்சி அடைந்தது. பொதுமக்களிடம் இருந்து திரட்டும் நிதியைக் கொண்டே நூலகக் கட்டடம் வளரத் தொடங்கியது. நூலகத்தை நிர்மாணிக்கும் பணியில் இந்தியாவைச் சேர்ந்த கட்டடக் கலைஞர் நரசிம்மன் ஈடுபட்டார். அமைதியான வாசிப்புக்குத் தேவையான அத்தனை வசதிகளுடனும் கூடிய யாழ்ப்பாணம் பொது மக்கள் நூலகம் 11 அக்டோபர் 1959 அன்று வாசிப்புக்குத் திறந்துவிடப்பட்டது.

உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூல்கள் வந்துசேர்ந்தன. புத்தக ஆர்வலர்கள் சேமித்துவைத்திருந்த புத்தகங்களும் பத்திரிகைப் பிரதிகளும் யாழ் நூலகத்துக்கு அன்பளிப்பாகத் தரப்பட்டன. அரிய நூல்களும் ஆவணங்களும் அங்கு பாதுகாக்கப்பட்டன. தமிழ் இளைஞர்களின் வாசிப்புப் பழக்கத்தைத் தூண்டுவதற்கு யாழ் நூலகம் பேருதவி செய்தது.

ஏராளமான இளைஞர்கள் நூலகத்துக்கு வருவதை வழக்கமாக்கிக் கொண்டனர். பத்திரிகைகள் மற்றும் புத்தகங்கள் வாசிப்பது தமிழர்களின் தினசரி நடவடிக்கைகளுள் ஒன்றாக மாறிப்போனது யாழ் நூலகத்தின் வருகைக்குப் பிறகுதான். யாழ் நூலகத்தைப் பார்த்து பரவசம் அடைந்த தமிழ் இளைஞர்கள், அதேபோன்று இல்லாவிட்டாலும் சிறிய அளவிலான நூலகங்களையும் வாசக சாலைகளையும் தத்தமது பகுதிகளில் உருவாக்க ஆர்வம் செலுத்தினர்.

தமிழர்களின் வாசிப்பு ஆர்வமும் கல்வியறிவும் சிங்கள அரசாங்கத்துக்கு ஆத்திரத்தை வரவழைத்தன. தமிழர்கள் படிப்பதால்தான் சிந்திக்கிறார்கள். சிந்திப்பதால்தான் கேள்வி கேட்கிறார்கள். போராட்டத்தில் இறங்குகிறார்கள். உரிமைக்குரல் எழுப்புகிறார்கள். எல்லாவற்றுக்கும் காரணம் அவர்களுடைய கல்வியறிவு. அதற்கு உந்துசக்தியாக இருப்பது அந்த யாழ் நூலகம். அதை அழித்துவிட்டால் தமிழர்களின் எதிர்காலத்தையே சீர்குலைத்துவிடமுடியும் என்று கணித்தனர்.

நூலகத்தை எரிக்கும் பொறுப்பு இரண்டு அமைச்சர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. சிறில் மேத்யூ மற்றும் காமினி திசநாயகா என்ற இரண்டு அமைச்சர்கள் களத்தில் இறங்கினார்கள். (பின்னாளில் அதிபரான ரணசிங்கே பிரேமதாசா கொடுத்த வாக்குமூலம் இது) கொழும்புவில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சிங்கள வன்முறையாளர்களை யாழ்ப்பாணம் நகரத்துக்கு அழைத்துவந்து தங்கவைத்தனர். என்ன செய்வீர்கள் என்று தெரியாது.. யாழ் நூலகம் எரிக்கப்படவேண்டும். இதுதான் அந்த வன்முறையாளர்களுக்கு அமைச்சர்கள் கொடுத்த உத்தரவு.

தகுந்த தருணத்துக்காகக் காத்துக்கொண்டிருந்தனர் வன்முறையாளர்கள். அந்த நேரம் பார்த்து போலீஸாருக்கும் தமிழர்களுக்கும் மோதல் மூண்டது. இதுதான் சமயம் என்று மின்னல் வேகத்தில் களமிறங்கினர் வன்முறையாளர்கள். அமைச்சர் இட்ட உத்தரவை அப்படியே நிறைவேற்றி முடித்தனர்.

நூலகத்தை எரித்த நெருப்பு தமிழர்களின் நெஞ்சுக்குள் பரவியது. தங்களுடைய உரிமைக்குரலை உரத்து எழுப்பியது நூலக எரிப்புப் பிறகு என்றே சொல்லலாம். பாவத்துக்குப் பரிகாரம் தேடும் முயற்சியாக யாழ் நூலகத்தை மீண்டும் கட்டியிருக்கிறது சிங்கள அரசு. செங்கல். சிமெண்ட். மேசை. நாற்காலி. எல்லாம் புதிதாக வந்துவிட்டன, அழிந்துபோன அரிய ஆவணங்களைத் தவிர!

0

ஆர். முத்துக்குமார்