ரம், ரமா, ரம்மி!
அர்ச்சனா. பள்ளி ஆசிரியர். அவருடைய நான்கு வயது மகள் மிக அழகாக எழுதுவாள். நன்றாகப் படிப்பாள். அவளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது, “நீங்கதான் மெச்சிக்கறீங்க. இவ பிறக்கும்போது ரொம்பச் சிக்கலாகிவிட்டது. ஆபரேஷன் முடிந்து, மயக்கம் தெளிந்தபோது அருகில் கணவர் இல்லை. என் கண் குழந்தையைத் தேடுது… என்ன பொட்ட புள்ளையைப் பெத்துப் போட்டிருக்கே!. பையன்னு நினைச்சு வாசல்லேயே கிடையா கிடந்தோம்ன்னு சொன்னார் என் மாமியார். நாலு வருஷமாகியும் அந்தப் பேச்சு மறக்கலை. உயிர் பிழைச்சு வந்திருக்கேன். என்னை ஒரு வார்த்தை எப்படி இருக்கேன்னு கேட்கலை. நான் படிச்சதெல்லாம் சிபிஎஸ்சி பள்ளியில். வட இந்தியால இருந்ததால ஹிந்தி, பெங்காலி எல்லாம் நல்லா தெரியும். எனக்கு விருப்பமானது ஆசிரியர் வேலைதான். வேலைக்குப் போறேன்னு வீட்டில் அரைகுறையாக விடக்கூடாது. வீடு, குழந்தையை முழுசா பார்த்துக்கறதோட வேலைக்குப் போறதுன்னா எங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னு சொன்னாங்க… என்ன படிச்சாலும் திறமை இருந்தாலும் நம்மளை ஒருநாளும் அங்கீகரிக்க மாட்டாங்க’ என்றார். அர்ச்சனாவின் மாமியார் ஒன்றும் படிக்காதவரோ, விஷயம் தெரியாதவரோ இல்லை. ஆனாலும் பெண் என்றவுடன் அவரையும் அறியாமல், அவர் மூளையில் பதிந்துள்ள பிம்பம் வெளிப்பட்டுவிட்டது.
45 பி பேருந்து. கூட்டம் அதிகம். எனக்கு அருகில் ஒரு பெண் நிற்க முடியாமல் நின்றுகொண்டிருந்தார். சைதாபேட்டையில் ஏறிய ஒருவன் அந்தப் பெண்ணை இடித்துக்கொண்டே இருந்தான். அந்தப் பெண் வேறு பக்கம் போக முயற்சி செய்தார். கூட்ட நெரிசலில் முடியவில்லை. “என்னால முடியலை. கொஞ்சம் தள்ளி நில்லுங்க. டிரெஸ் மட்டும் டீசண்டா பண்ணினால் பத்தாது’ என்று கத்தினார். உடனே அவன் திரும்பிப் பார்த்தான். பின்னால் நான்கு கல்லூரி மாணவியர் நின்றுகொண்டிருந்தனர். உடனே ஆங்கிலத்தில், “அழகான சின்னப் பொண்ணுங்க நீங்க இருக்கும்போது, இவங்களை இடிக்கிறேன்னு சொல்றதில் கொஞ்சமாவது லாஜிக் இருக்கா?’ என்று கேட்டவுடன், அந்த மாணவியர் வெட்கத்துடன் சிரித்துவிட்டு, அந்தப் பெண்ணை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். ஸ்மார்ட்டாக இருந்து, ஆங்கிலத்தில் பேசிவிட்டால் அவன் தப்பு செய்திருக்க மாட்டான் என்ற முடிவுக்கு அந்தப் பெண்கள் எப்படி வந்தார்கள்? முன்பெல்லாம் பேருந்துகளில் அடிக்கடி பெண்கள் சண்டை போடுவார்கள். இப்போதெல்லாம் கத்துவதோ, சண்டை போடுவதோ கூட அநாகரிகம் என்று படித்த பெண்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டனர். அதனால் தவறைக் கண்டு ஒதுங்கிப் போய்விடுகிறார்கள்.
ஈவ் டீசிங் பிரச்னையால் பாதிக்கப்பட்ட பெங்களூரு பெண் வழக்கறிஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். பிரச்னைகளை எதிர்த்து நின்று போராட வைக்காமல், இப்படி ஒரு முடிவை எடுக்க வைத்தது எது? ஒருபக்கம் தவறைக் கண்டுகொள்ளாமலும் இன்னொரு பக்கம் பிரச்னையை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாமலும் செய்துவிட்டதா இன்றைய கல்வி முறை?
நான்கு மாதங்களுக்கு முன்பு ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபெற்ற பெண்கள் அனைவரும் படித்தவர்கள். நல்ல பொருளாதாரச் சூழலில் இருப்பவர்கள். அவர்களில் பெரும்பாலானோர் கணவர்களிடம் ஒருமுறையாவது அடி வாங்கியிருக்கிறார்கள். கணவர் அடித்தால் அதில் நியாயம் இருக்கும் என்றும் கணவர் அடிப்பதில் தவறு ஒன்றும் இல்லை என்றும் உலகறியச் சொன்னபோது அதிர்ச்சியாக இருந்தது.
இன்று 56 சதவிகித இந்தியப் பெண்கள் தினம் தினம் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுகிறார்கள். வாழ்க்கையில் சிலமுறையாவது கணவர்களிடம் அடி வாங்கிய பெண்கள் சுமார் 83 சதவிகிதம் பேர். (முன்பை விட தற்போது குடும்ப வன்முறை அதிகரித்து வருகிறது.) மனைவி தன்னைப் போல் ஓர் உயிர் என்று அடிக்கும் ஆண்களுக்குத்தான் அறிவில்லை, அடிவாங்குற பெண்கள் அதைப் பற்றிச் சிந்திக்க வேண்டாமா? எப்பேர்ப்பட்ட பிரச்னைகளையும் பேசித் தீர்த்துவிட முடியாதா? சில வீடுகளில் மாமியார், மருமகள் பிரச்னை லேசாக ஆரம்பிக்கும்போதே கணவன் வந்து மனைவியை அடித்து, அந்தப் பிரச்னையை வளரவிடாமல் பார்த்துக்கொள்கிறார்கள்! சிலர் அடித்த பிறகுதான் விசாரணை நடத்துகிறார்கள். ஆண்களுக்கு இந்த அதிகாரத்தைக் கொடுத்தது யார்? அடிப்பது ஆண்களின் உரிமை, அதை ஏற்றுக்கொள்வது பெண்களின் கடமை என்று சொல்லி வைத்தது யார்? அடிக்கும் ஆண்களை எதிர்ப்பது இருக்கட்டும், முதலில் அடிப்பது தவறு என்று கூட பெண்கள் நினைக்கும் நிலையை இன்னும் எட்டவில்லையே, ஏன்?
அதேபோல நிறைய படித்து, லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் பெண்களைக் கூட திருமணத்தின்போது 50 பவுன், 100 பவுன் என்று வாங்கிக்கொண்டுதான் திருமணம் செய்துகொள்கிறார்கள். இருவரும் ஒரே நிலையில் இருக்கும்போது கூட ஆணுக்கு வரதட்சனை தந்துதான் திருமணம் செய்துகொள்ள வேண்டிய சூழலை ஏன் பெண் ஏற்றுக்கொள்கிறாள்? பெண்களுக்குத் திருமணம்தான் வாழ்க்கையின் உன்னதமான, உயர்ந்தபட்ச இலக்காகச் சமூகம் நிர்ணயித்து வைத்திருக்கிறது. ஆந்திராவைச் சேர்ந்த தோழி சொன்னாள், ‘படிக்காதவனுக்குக்கூட 40,50 லட்சம் கொடுத்து மருத்துவ சீட் வாங்கிவிடுகிறார்கள். திருமணத்தின்போது அவன் ஒன்றுக்கும் லாயக்கில்லாதவன் என்றாலும் ஒரு கோடி, ரெண்டு கோடின்னு வரதட்சனை வாங்கி விடுகிறார்கள்’ என்றாள்.
வட இந்தியாவில் ஒரு பழமொழி சொல்வார்கள். “ரம், ரமா, ரம்மி’ இது மூன்றும் இருந்தால் ஒரு மனிதன் உருப்பட மாட்டான். ரம், ரம்மி சரி. இதில் ரமா எங்கே இருந்து வந்தாள்? குடி, சூதாட்டத்துடன் ரத்தமும் சதையும் உள்ள பெண்ணை இணைக்கும் போக்கு எப்படி வந்தது? நம் மண்ணில் பெண்கள் பற்றிய புரையோடிப் போன எண்ணங்களின் விளைவே இதுபோன்ற கருத்துகள்.
பெண்கள் படித்து, கை நிறையச் சம்பாதித்தாலும் எத்தனை ஆண்கள், தங்கள் மனைவியிடம் ஏடிஎம் கார்டுகளைக் கொடுக்கிறார்கள்? அலுவலகங்களில் உயர்ந்த பொறுப்பு வகிக்கும் பெண்கள் தங்கள் வீடுகளில் எந்த முடிவையும் எடுக்க முடியாமல் வைக்கப்பட்டிருக்கிறார்கள். கணவரை எதிர்த்து கருத்து சொன்னால், படித்த திமிர் என்ற பட்டம் கிடைத்துவிடுமோ என்ற பயத்தில், வேலைக்குச் செல்லும் சலுகையாவது கிடைக்கிறதே என்ற எண்ணத்தில், கணவர் தவறாகச் சொன்னாலும் எதிர்த்துப் பேச மாட்டேன் என்கிறார் ஒரு கல்லூரிப் பேராசிரியை! அந்தப் பேராசிரியையின் மகன் அடிக்கடி, அவன் அம்மாவிடம் சொல்லும் வார்த்தை, “போம்மா, உனக்கு ஒண்ணும் தெரியாது’ என்பதுதான். கணவர் சொல்வதைக் கேட்டு, அவனும் அப்படிச் சொல்ல ஆரம்பித்துவிட்டான். அவனுக்காவது புரிய வைக்கக்கூடாதா என்றால், “என் பிள்ளையிடம் முட்டாள் பட்டம் வாங்கிறதில் எனக்கொன்றும் வருத்தமில்லை’ என்றார்! விட்டுக் கொடுத்து வாழலாம், ஆனால் எதை விட்டுக் கொடுப்பது என்பது முக்கியம் அல்லவா!
வேலைக்குப் போவதோ, வேலையை விடுவதோ பெண்ணின் முடிவாக இங்கு பெரும்பாலும் இல்லை. எந்தப் பிரச்னை என்றாலும் முதலில் வரும் வார்த்தைகள், “வேலையை விடு. என் சம்பளத்தில் குடும்பம் நடத்திக்கலாம்’ என்பதுதான். பொருளாதாரச் சுதந்தரம் இருந்தால் பெண்கள் தாங்கள் இழுக்கும் இழுப்புக்கெல்லாம் வளைந்துகொடுக்க மாட்டார்கள் என்று ஆண்கள் நினைப்பதன் விளைவே இந்தக் கோரிக்கை.
பெண் சிசுக்கொலை, குழந்தை திருமணம், வரதட்சனை, கல்வி, ஆரோக்கியம், ஊட்டச் சத்து குறைபாடு என்று ஏராளமான பிரச்னைகளைப் பெண்கள் சந்தித்து வருகிறார்கள். இந்தப் பிரச்னைகளை எல்லாம் தீர்க்க வேண்டியது எல்லோரின் கைகளிலும்தான் இருக்கிறது. குறிப்பாக பெண்கள் பிரச்னைகளை, பெண்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். பிரச்னைகளைத் தீர்க்கவும், ஆண்களுக்கு இணையாக சம வாய்ப்புகளைப் பெறவும் போராட வேண்டும்.
இன்று காலையில் இருந்து குறுஞ் செய்திகளிலும் தொலைபேசியிலும் ஏராளமானவர்கள் வாழ்த்து தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள். அவர்களிடம் உங்கள் மனைவிக்கு/அம்மாவுக்கு வாழ்த்து தெரிவித்தீர்களா என்றால் இல்லை என்றார்கள். சிலர் மகளிர் தினத்துக்காக ட்ரீட் கேட்டார்கள். மகளிர் தினம் என்றால் என்ன? என்று கேட்டதும், “வாலண்டைன்ஸ்டே மாதிரி வுமன்ஸ்டே’ என்றார்கள்!
இன்றைய இந்தியாவில் வாலண்டைன்ஸ் டே, மதர்ஸ் டே வரிசையில் பெண்கள் தினத்தையும் சேர்த்து, வியபார உலகம் கொண்டாடி வருவது வருத்தத்தை அளிக்கிறது. நகைக்கடை, புடைவைக் கடை, செருப்புக் கடை, விமானக் கட்டணம், உணவு விடுதி போன்றவற்றில் சிறப்புச் சலுகைகளை அளித்து, இந்த நாளையும் ஒரு வெற்றிகரமான வியாபார தினமாகப் பார்க்கும் உத்தியைப் பெண்கள் புரிந்துகொள்ள வேண்டும். பாரிலும் பஃபிலும் இருக்கும் பெண்களைப் போட்டு, பெண்கள் தினம் என்று திட்டமிட்டுச் செய்தி பரப்பும் ஊடகங்களைக் கண்டிக்க வேண்டும். இதுவரை உலக அளவில் 10 கோடி பெண்கள் மாயமாகியிருக்கிறார்கள். அதில் 5 கோடி பெண்கள் இந்தியாவில் இருந்து மாயமானவர்கள். பண்பாடு என்ற பெயரில் இன்னும் பெண்களை இரண்டாம் தர பிரஜையாக நடத்துவதை அனுமதிக்க முடியாது!
0
திலகவதி









