மர்ம சந்நியாசி – 2

மேஜோ குமார் தனக்குப் பிரியமான ஃபுல்மாலா யானையின் மீது ஏறி வேட்டைக்கு செல்வோரை வழிநடத்திச் சென்றான். மரத்தின் உச்சியில் மறைவான கூடாரம் அமைக்கப்பட்டது. கீழே, புலியை வரவைப்பதற்காக மூன்று மாடுகள் கட்டப்பட்டிருந்தன. கூடாரத்தில் கிச்சனர் துரை துப்பாக்கியும் கையுமாக தயாராக இருந்தார். கூடவே மேஜோ குமார் மற்றும் வேட்டைக்குழுவை சேர்ந்தவர்களும் தயாராக இருந்தனர். ஆனால் புலிதான் வரவில்லை. கிச்சனர் துரை பொருத்து பொருத்துப் பார்த்தார், புலி வருவதாகத் தெரியவில்லை. வேறுவழியில்லாமல், அங்கு அப்பாவியாக வந்த ஒரு மானைச் சுட்டுவிட்டு, தனக்கு இது போதும் என்று புலியைச் சுட்ட பெருமிதத்துடன் விடைபெற்றுக்கொண்டார்.

கிச்சனர் துரை கல்கத்தா சென்றவுடன், முதல் வேலையாக ராஜ்பாரிக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், பாவல் அரண்மனையில் தான் தங்குவதற்கும் பின்னர் வேட்டையாடுவதற்கும் சிறந்த முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததை நினைவுகூறி, தன்னுடைய மகிழச்சியையும் நன்றியையும் ராஜகுமாரர்களுக்குத் தெரிவித்தார். அதிலும் குறிப்பாக, மேஜோ குமாரை வெகுவாகப் பாராட்டியிருந்தார். சந்தர்ப்பம் கிடைத்தால் மேலும் ஒருமுறை மேஜோ குமாருடன் புலி வேட்டைக்கு வருவதாகத் தெரிவித்திருந்தார். அதன் பின்னர் கிச்சனர் துரையால் புலி வேட்டைக்கு வர முடியவில்லை. ஆனால் மேஜோ குமார், அந்த ஆண்டு இறுதியில் ஒரு அருமையான ராயல் பெங்கால் டைகரை வீழ்த்தி, அதை அரண்மனைக்குப் பரிசாக எடுத்துவந்தான். இது நடந்தது 1909ம் ஆண்டு. மேஜோ குமார் தன் குடும்பத்துடன் டார்ஜிலிங் செல்வதற்கு சிறிது நாட்களுக்கு முன்னர். இந்த செய்திகளிலிருந்து, மேஜோ குமார் மருத்துவ சிகிச்சைக்குப் பின்னர் சிப்பிலிஸ் நோயிலிருந்து தேறி, உடல் நலத்துடன் இருந்தான் என்பது தெரிகிறது.

இதன் பிறகுதான் மேஜோ குமாரின் மச்சினனான சத்திய பாபு, இந்த வருடத்தின் கோடையை மேஜோ குமார் தன் மனைவியுடன் டார்ஜிலிங்கில் கழிக்கலாம் என்று யோசனை கூறி, அதற்கான ஏற்பாடுகளையும் செய்தான். மேஜோ குமார், அவனுடைய மனைவி பிபாவதி தேவி, மச்சினன் சத்திய பாபு, டாக்டருக்குப் படித்து வரும் அஷுதோஷ் கோஷ் மற்றும் சிப்பந்திகள் என அனைவரும் டார்ஜிலிங் சென்றடைந்தனர். டார்ஜிலிங்கில் அவர்கள் தங்கியது Step Aside என்ற பிரபல பங்களாவில். டார்ஜிலிங் சென்ற சில நாட்களிலேயே மேஜோ குமார் உயிரிழந்தான். அதன் பின்னர் நடந்த சம்பவத்தைத் தான் நாம் முதலிலேயே பார்த்தோம்.

0

மேஜோ குமாரின் சாவில், ஏதோ மர்மம் இருப்பதாகவே அரண்மனையில் இருந்தவர்கள் கருதினர். மேஜோ குமார் உயிருடன் இருப்பதாக, ராஜ்ஜியம் முழுவதும் வதந்தி பரவியது. மேஜோ குமாரின் உடல் தீயூட்டப்பட்டதை யாரும் பார்க்கவில்லை, அதனால் மேஜோ குமாருக்கு ஷ்ரத்தம் (11 ஆம் நாள் செய்யவேண்டிய சடங்கு) செய்வதில் அரண்மனையில் குழப்பம் நீடித்தது.

ஆங்கிலேய அரசாங்கம் இந்த விஷயத்தில் ஒரு விசாரணை நடத்த வேண்டும் என்றும் பலர் பரவலாக கருத்து தெரிவித்தனர். ஆனால் அரசாங்கம், இந்த விஷயத்தில் மூக்கை நுழைக்க விரும்பவில்லை. காரணம் ஒரு பிரபலமான ஜமீனின் உள்விவகாரத்தில் தலையிடக்கூடாது. அப்படிச் செய்தால் அது மக்களுக்கு ஆங்கிலேயர்களின் மீதான வெறுப்பை அதிகரிக்கும். மேலும் நாடெங்கும் சுதந்தர வேட்கையில் பலர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக மக்களைத் தூண்டி வன்முறையில் ஈடுபட்டு வந்த சூழல். இந்த நேரத்தில் புதிய தலைவலி எதற்கு என்று ஆங்கிலேய அரசு ஒதுங்கிகொண்டது. மேலும் டார்ஜிலிங்கில் உள்ள பிரதான அரசு மருத்துவரே (Resident Civil Surgeon) மேஜோ குமார் இறந்துவிட்டதாகக் கூறி, இறப்புச் சான்றிதழ் வழங்கியிருக்கிறார். அதனால் இந்த விவகாரத்தில் மூக்கை நுழைக்க வேண்டியதில்லை என்று அரசு முடிவெடுத்தது.

அரசு முடிவெடுத்தால் என்ன, அரண்மனையின் ராஜமாதாவும் மூன்று குமாரர்களின் பாட்டியுமான ராணி சத்தியபாமா, பர்தவான் மகாராஜாவுக்குக் கடிதம் எழுதி அனுப்பினார்.
அந்தக் கடிதத்தின் சுருக்கம் பின்வருமாறு. ‘என்னுடைய பேரன் மேஜோ குமாரின் இறுதிச் சடங்கில் நீங்கள் கலந்து கொண்டதாக நான் கேள்விப்பட்டேன். அவனை சுடுகாட்டுக்கு எடுத்து செல்லும் வழியில் பெரும் இடியும் மழையும் பெய்த சூழ்நிலையில், அவனது உடல் காணாமல் போனதாகக் கேள்விப்பட்டேன். அதன் பின்னர் அவனை சன்னியாசி கூட்டத்தினர் கூட்டிச் சென்றதாகவும், மேஜோ குமாரும் அந்த சாமியார்களுடன் ஊர் ஊராக சஞ்சாரம் செய்வதாகவும் மக்களிடையே வதந்தி பரவியிருக்கிறது. என்னையும், மக்கள் இதுபற்றி விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள். நான் ஆற்றாத துயரத்துடன் இருக்கிறேன். எனக்கு குழப்பமாக இருக்கிறது. எந்தக் கூற்று உண்மை? உங்களுக்கு உண்மை தெரியும். அதை நீங்கள் எனக்கு தெரியப்படுத்தினால் நான் மிகவும் நிம்மதி அடைவேன்.’

பர்தவான் மகாராஜா, ராணி சத்தியபாமாவுக்கு பதில் கடிதம் அனுப்பினார். அதில் அவர், மேஜோ குமாரின் இறுதிச் சடங்கில் கொஞ்சம் பேர்தான் இருந்தனர்; தூரத்தில் இருந்த சிதையைக் காட்டி, அது மேஜோ ராஜாவினுடையது என்று அங்கிருந்தவர்கள் தெரிவித்ததாகக் குறிப்பிட்டிருந்தார். சிதைக்கு தீ மூட்டப்பட்டது சாயங்காலமா அல்லது விடியற்காலையா என்று தனக்கு நினைவில்லை என்று தன் கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில் சத்திய பாபுவின் செயல்களிலும் நடவடிக்கைகளிலும் அரண்மனையில் இருந்தவர்களுக்கு நம்பிக்கையில்லை. சத்திய பாபு, மேஜோ குமாரின் சடங்கில் கூட கலந்து கொள்ளவில்லை, மாறாக அவன் வழக்கறிஞரின் ஆலோசனையைப் பெற கல்கத்தா சென்றிருந்தான்.

மூத்த ராஜகுமாரான் பாரா குமார், இனி பிபாவதி தேவி ராஜ்ஜியத்தின் நிர்வாகத்தில் எந்த விதத்திலும் தலையிடக்கூடாது என்ற வகையில் முடிவெடுத்து அதற்கான பத்திரத்தை தயார் செய்தான். பத்திரத்தின்படி ஜமீனின் நிர்வாகத்தில் பிபாவதிக்கு எந்த உரிமையும் இல்லை, மாறாக மாதந்தோறும் பிபாவதி தேவிக்கு 1100 ரூபாய் ஜமீனிலிருந்து பணம் வந்து சேரும் என்று முடிவு செய்யப்பட்டு, அது இரண்டு தரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சத்திய பாபுவை ராஜ்ஜிய நிர்வாகத்தில் தலையிடமுடியாமல் செய்யும் முயற்சியாகவே இது கருதப்பட்டது. அரண்மையிலிருந்த அனைவரும் இந்த முடிவை ஆமோதித்தனர்.

ஆனால் இன்னொரு பக்கம், சத்திய பாபு தன் தங்கையிடம் தான் தான் அவளுடைய பிரதிநிதி என்ற முறையில் பிபாவதியிடமிருந்து ஒரு பவர் பத்திரத்தை பெற்றுக்கொண் டான். 19 வயதே நிரம்பிய, இளம் வயதில் விதவையான பிபாவதிக்கு தான் செய்வது சரிதானா என்றெல்லாம் தெரியாமல், தன் அண்ணன் சொல்பேச்சு கேட்டு நடந்தாள். பவர் பத்திரத்தை பெற்றவுடன் சத்திய பாபு நேரே கல்கத்தா சென்று மேஜோ குமார் காப்பீடு எடுத்த நிறுவனத்திலிருந்து அவன் தங்கைக்கு கிடைக்க வேண்டிய 30,000 ரூபாயைப் பெற்று, அதை தனது வங்கிக் கணக்கில் போட்டுக்கொண்டான். பிபாவதியிடம் வங்கிக் கணக்கில்லை. ஜமீனிலிருந்து அவளுக்கு கிடைக்கவேண்டிய தொகை ஆண்டாண்டுக்கு அதிகரித்துக் கொண்டே இருந்தது. 1911ம் ஆண்டு பிபாவதிக்கு வழங்கப்பட்ட 1100 ரூபாய் மாதத் தொகை, 1913ல் 2500 ரூபாயாகவும், 1915ல் 4000 ரூபாயாகவும், 1917 ஆம் ஆண்டு 5000 ரூபாயாகவும் பின்னர் 1917ம் ஆண்டில் 7000 ரூபாயாகவும் உயர்ந்தது. இந்த மாதந்திர தொகை போக, ஒரு முறை அவளுக்கு ரூபாய் 4,00,000 கிடைத்தது. ஆனால் பிபாவதியின் பேரில் சொத்தோ முதலீடோ இல்லை.

0

1921ம் ஆண்டு, டாக்கா ரயில் நிலையத்தில் ஒரு சந்நியாசி வந்திறங்கினார். நீண்ட ஜடாமுடி அவரது முழங்கால்வரை தொட்டது. அவருக்கு நீண்ட தாடியும் இருந்தது. இடுப்பில் ஒரு துண்டை மட்டும் சுற்றியிருந்தார். அவரது உடம்பெல்லாம் சாம்பல் பூசப்பட்டிருந்தது. அந்த சந்நியாசிக்கு, டாக்கா ரயில் நிலையம் ஏற்கெனவே பரிச்சயமானது போல் தோன்றியது. ரயில் நிலையத்துக்கு வெளியில் வந்தவர், சற்று தொலைவில் ஒரு ஆற்றங்கரையின் ஓரத்தில் இருந்த அரச மரத்தின் அடியில் போய் பத்மாசனத்தில் அமர்ந்துகொண்டார். அவருக்கு முன்னால் ஒரு துணியில் நெருப்பு எப்பொழுதும் எரிந்து கொண்டிருந்தது. அருகில் ஒரு கமண்டலம் இருந்தது. இவற்றைத்தவிர அந்த இளம் சந்நியாசியின் சொத்து என்று பார்த்தால் ஒரு கம்பளமும் குறடும்தான். எதிரே சற்று தூரத்தில்தான் ஓய்வு பெற்ற சார்பு நீதிபதியான தெபரதா முகர்ஜியின் வீடு இருந்தது.

தெபரதா முகர்ஜி, அந்த இளம் சந்நியாசியை நான்கு மாதங்களாக கவனித்துக்கொண்டிருக்கிறார். மழை, வெயில், இரவு, பகம் பேதமின்றி அந்த சந்நியாசி ஒரே இடத்தில்தான் அமர்ந்திருந்தார். ஒரு நாள் இரவு 2:30 மணியிருக்கும். பெரும் மழை பெய்து கொண்டிருந்தது. அந்த சமயத்திலும், இளம் சந்நியாசி அந்த இடத்தில் இருப்பாரா என்று தெபரதா முகர்ஜிக்கு சந்தேகம் எழுந்தது. உடனே அவர், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அரச மரத்தடிக்குச் சென்றார். என்ன ஆச்சர்யம், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று சற்றும் கவலைப்படாமல், மிகவும் அமைதியாக சந்நியாசி அமர்ந்திருந்தார்.

மேலும் நான்கு மாதங்களுக்கு அவர் அங்கேதான் தங்கியிருந்தார். அவரைப் பார்க்க மக்கள் வந்தனர். அவர் ஹிந்தியில் பேசினார். மக்கள் அவரிடம் தங்களுக்கிருக்கும் வியாதி குணமாக வேண்டும் என்று மருந்து கேட்டால், அவர் சிறிது விபூதியை எடுத்துக் கொடுப்பார். இளம் சந்நியாசியைப் பற்றிய செய்தி ஊர் முழுவதும் பரவியது. காசிம்பூர் ஜமீன்தாரான பிரசாத் ராய் சவுத்ரி, இளம் சந்நியாசியைப் பார்க்க வந்தார். காசிம்பூர், பாவல் ராஜ்ஜியத்தின் தலைமையிடமான ஜெய்தேபூருக்கு அருகிலிருந்தது. காசிம்பூர் ஜமீன்தார், சந்நியாசியை தன்னுடைய ஜமீனுக்கு கூட்டிச்சென்றார். காசிம்பூரில் 6 நாட்கள் தங்கிய பிறகு, சந்நியாசி அங்கிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜெய்தேபூருக்கு ஒரு யானை மீது அனுப்பி வைக்கப்பட்டார்.

1921ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதி, காலை ஆறு மணியளவில் சந்நியாசி ஜெய்தேபூருக்கு வந்து சேர்ந்தார். அங்கு வந்து ஒரு மரத்தினடியில் தங்கிக்கொண்டார். தங்கள் ஜமீனுக்கு ஒரு இளம் சந்நியாசி வந்திருப்பது காட்டுத்தீ போல் பரவியது. மக்கள் அவரைக் காண வந்தனர். மேஜோ குமாரின் மாமாவும், அவருடைய மகனான புத்துவும் இளம் சந்நியாசியை சந்தித்தனர். புத்து, இளம் சன்னியாசியை தங்கள் வீட்டுக்கு அழைத்துச்சென்று, தன்னுடைய தாயாரான ஜோதிர்மாயி தேவியிடம் அறிமுகம் செய்து வைக்கவேண்டும் என்று விரும்பினான். ஜோதிர்மாயி வேறு யாரும் இல்லை, மேஜோ குமாரின் இரண்டாம் அக்கா.

இளம் சன்னியாசி, ஜோதிர்மாயி வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு வீட்டில் ஜோதிர்மாயியின் கணவனும், அவளது இரண்டு பெண்களும், மேஜோ குமாரின் பாட்டியுமான சத்தியபாமா தேவியும் மற்றும் சில உறவினர்களும் இருந்தனர்.
இளம் சன்னியாசி தலையைக் குனிந்திருந்தார். அங்கு சுற்றியிருந்தவர்களை, ஒரு பக்கமாக கீழிருந்துப் பார்வையிட்டார். மேஜோ குமாரும் இப்படித்தான் பார்ப்பது வழக்கம். சந்நியாசியின் உருவம், கண், காது, உதடு, விரல்கள், கை, பாதம், முக வடிவம் அனைத்தும் மேஜோ குமாருடையது போல் இருந்தது. ஜோதிர்மாயி உட்பட அங்கிருந்தவர்கள் அனைவரும் இந்த உருவ ஒற்றுமையைப் பற்றித்தான் பேசினர்.

ஜோதிர்மாயி சந்நியாசியைப் பார்த்து, தாங்கள் இன்னும் எவ்வளவு நாட்கள் தங்கத் தீர்மானித்திருக்கிறீர்கள் என்று ஹிந்தியில் கேட்டாள். அதற்கு சன்னியாசி, தான் மறுநாள் காலை பிரம்மப்புத்திரா நதிக்குச் சென்று தீர்த்தம் ஆடப்போவதாக ஹிந்தியில் தெரிவித்தார். சன்னியாசிக்குப் பழங்களும் தயிரும் வழங்கப்பட்டது. சந்நியாசி தயிரை மட்டும் சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பினார். அவர் நடந்து போவதைப் பார்த்ததும், ஜோதிர்மாயிக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம். சந்நியாசி மேஜோ குமாரைப் போலவே நடந்து சென்றார்.

மறுநாள் காலை சந்நியாசி ஜோதிர்மாயி இல்லத்துக்குச் சென்றார். முந்தைய தினம் இருந்தவர்கள் அனைவரும் அங்கு குழுமியிருந்தனர். அப்போது மேஜோ குமாரின் மூத்த சகோதரி இந்துமாயியின் மகள் தபு, மேஜோ குமாரின் பழைய புகைப்படத்தை சந்நியாசியிடம் காட்டினாள். அந்தப் புகைப்படத்தைப் பார்த்தவுடன் சன்னியாசி அழத் தொடங்கிவிட்டார். பின்னர் தபு, சோட்டா குமாரின் புகைப்படத்தை காண்பித்தவுடன் இளம் சந்நியாசி தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார்.

ஜோதிர்மாயி சன்னியாசியைப் பார்த்து, “நீங்கள் சன்னியாசி ஆயிற்றே, அழலாமா” என்று கேட்டாள்.

அதற்கு சன்னியாசி, “மாயை என்னை அழச்செய்கிறது” என்று தெரிவித்தார்.

“நீங்கள் உலகத்தைத் துறந்தவராயிற்றே, உங்களுக்கா மாயை” என்று ஜோதிர்மாயி கேட்டாள்.

அதற்கு சன்னியாசி பதில் ஒன்றும் சொல்லவில்லை.

“என்னுடைய இரண்டாம் தம்பி டார்ஜிலிங்கில் இறந்துவிட்டார். அவரை இடுகாட்டுக்கு எடுத்துச்செல்லும் வழியில் இடி மின்னலுடன் மழை பெய்தது. மழையிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தம்பியின் உடலை தூக்கிச்சென்றவர்கள், அவரது உடலை ஓரிடத்தில் இறக்கி வைத்துவிட்டு பாதுகாப்பான இடத்திற்குச் சென்றனர். பின்னர், சிலர் தம்பியின் உடல் எரியூட்டப்பட்டது என்று தெரிவித்தனர். ஆனால் வேறு சிலர், அவரது உடலைக் காணவில்லை, என்னுடையத் தம்பியின் உடல் எரியூட்டப்படவில்லை என்று தெரிவித்தனர்” என்று ஜோதிர்மாயி தகவலை சொல்லி முடிக்கும் முன்னரே சன்னியாசி குறுக்கிட்டார்.

“அது உண்மையில்லை, அவன் உடல் எரியூட்டப்படவில்லை. அவன் உயிரோடுதான் இருக்கிறான்.”

ஜோதிர்மாயி சந்நியாசியைப் பார்த்து, “உங்களுடைய அங்க அடையாளங்கள் என்னுடைய தம்பி மேஜோ குமாரை ஒத்து இருக்கிறது, நீங்கள்தான் அவரா?” என்று வங்காளத்தில் கேட்டாள்.

“இல்லை. இல்லை. நான் யாருக்கும் ஒன்றும் இல்லை” என்று சன்னியாசி தெரிவித்தார்.

சந்நியாசி உண்பதற்கு உணவு கொண்டுவந்து கொடுக்கப்பட்டது. எல்லோரும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர். சன்னியாசி சாப்பிடும்போது, அவருடைய ஆள்காட்டி விரல் மற்ற விரல்களுடன் சேராமல் தனியே நீட்டிக் கொண்டிருந்தது. மேஜோ குமார் சாப்பிடும்போதும் அப்படித்தான் சாப்பிடுவான். சந்நியாசின் குரல்வளை முடிச்சு, அவரின் சிகப்பும் பழுப்பும் கலந்த முடி, பழுப்பு நிறக் கண்கள், முகத்தில் உள்ள வடு, காது, மூக்கு, வாய், பல், உள்ளங்கை, கையின் பின்புறம், கால், கால் விரல்கள், நகம் என அனைத்தும் மேஜோ குமாரினுடையது போலவே இருந்தது. ஜோதிர்மாயியின் கணிப்பு பொய்ப்பதற்கு வாய்ப்பே இல்லை, ஏனென்றால் அவள்தான் மேஜோ குமாரை குழந்தையிலிருந்து பார்த்து வந்தவளாயிற்றே. சந்நியாசியின் வார்த்தைகள் தெளிவில்லாமல் இருந்தாலும், அவருடைய குரல் மேஜோ குமாரை ஒத்திருந்தது.

சந்நியாசி, தான் அஷ்டமி ஸ்தானத்துக்காக வேண்டி டாக்காவுக்கு செல்ல வேண்டும் என்று தெரிவித்தார். அவர் கிளம்பும் போது ஜோதிர்மாயி, டாக்காவில் எவ்வளவு நாள் இருப்பீர்கள் என்று கேட்டதற்கு, பத்து நாட்கள் என்று அறிவித்தார். சன்னியாசி ஜெய்தேபூரிலிருந்து, சந்திரநாத் மற்று சித்தகாங் அருகாமையில் உள்ள தலங்களுக்கு தீர்த்த யாத்திரை சென்றார். தீர்த்த யாத்திரை முடித்த பிறகு, அவர் டாக்காவில் தன்னுடைய பழைய இடமான அரச மரத்தினடியில் போய் அமர்ந்து கொண்டார்.

ஜோதிர்மாயி தன்னுடைய மகனான புத்துவையும், அதூல் பாபுவையும் அனுப்பி, சந்நியாசியை டாக்காவிலிருந்து ஜெய்தேபூருக்கு அழைத்து வருமாறு கேட்டுக்கொண்டாள். அவர்களும் அப்படியேச் செய்தனர். இம்முறை சந்நியாசி ரயில் மூலம் ஜெய்தேபூர் வந்திறங்கினார். அவர் ஜெய்தேபூர் வந்த செய்தி, பாவல் ராஜ்ஜியத்தில் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. மேஜோ ராஜா என்று கருதப்பட்ட சந்நியாசியைப் பார்க்க கூட்டம் கூடிவிட்டது.

0

ஒருநாள் சந்நியாசி விடியற்காலையில் குளிப்பதற்காக ஆற்றங்கரை சென்றார். அப்போது ஜோதிர்மாயி சந்நியாசியைப் பார்த்து, நீங்கள் உடம்பெல்லாம் சாம்பலைப் பூசி வரக்கூடாது என்று கேட்டுக்கொண்டாள். சன்னியாசி குளித்துவிட்டு, சாம்பல் பூசிக் கொள்ளாமல் வீடு திரும்பினார். வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் அவரை ஏற இறங்கப் பார்த்தனர். மேஜோ குமாரின் தோல் நிறத்தைவிட சிறிது வெண்மையாகவும் பளிச்சென்றும் இருந்தது சந்நியாசியின் தோல் நிறம். சந்நியாசி பிரம்மச்சரியத்தைக் கடைபிடிப்பதால் முகத்தில் தேஜஸ் தெரிந்தது. ஜோதிர்மாயி சந்நியாசியின் காலைப் பார்த்தாள். ஆம் அவள் எதிர்பார்த்த வடு இருந்தது. தன் தம்பி சிறு வயதில் விளையாடிக்கொண்டிருக்கும்போது, அவனது காலில் ஒரு குதிரை ரதம் ஏறி காயம் பட்டு அதனால் ஏற்பட்ட வடு அது.

ஜோதிர்மாயியும் மற்றவர்களும் பரபரப்படைந்தனர். “நீங்கள் மேஜோ குமார் போல தென்படுகிறீர்கள். நீங்கள் அவராகத்தான் இருக்கக்கூடும். தயவுசெய்து நீங்கள் யார் என்று கூறிவிடுங்கள்!”

“இல்லை. நான் அவர் இல்லை. என்னை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள். நான் இங்கிருந்து போய்விடுகிறேன். என்னை விட்டுவிடுங்கள்” என்று சாது பதிலளித்தார்.

“நீங்கள் உண்மையைக் கூறியாகவேண்டும். நீங்கள் உண்மையைக் கூற மறுக்கமுடியாது. நீங்கள் உண்மையை சொல்ல மறுத்தால் நான் சாப்பிடமாட்டேன், பட்டினி கிடப்பேன்” என்றாள் ஜோதிர்மாயி.

கூடியிருந்த ஊர் மக்கள் அனைவரும் சந்நியாசியைச் சுற்றிக்கொண்டனர். உண்மையைச் சொல்லுங்கள் என்று கூச்சலிட்டனர்.

நேரமாக நேரமாக கூட்டம் அதிகமாகிக் கொண்டே போனது. கூட்டத்தில் இருந்த ஒருவன், “உங்கள் பெயர் என்ன? ” என்று கேட்டான்.

“இராமேந்திர நாரயண ராய் சவுத்ரி” என்று பதிலளித்தார் சந்நியாசி.

“தந்தை பெயர்? ”

“ராஜா ராஜேந்திர ராய் சவுத்ரி.”

“தாயின் பெயர்? ”

“ராணி பிலாஸ்மணி தேவி. ”

அங்கிருந்த மற்றொருவன், “ராஜா, ராணி பெயர் எல்லாருக்கும் தெரியும். உன்னை யார் வளர்த்தார் என்று சொல்? ” என்றான்.

அலோகா என்று பதிலளித்தார் சன்னியாசி. கூட்டத்திலிருந்தவர்களுக்கு ஒரே சந்தோஷம். “இரண்டாம் குமார் சாகவில்லை” என்று கோஷம் போட்டார்கள். சந்நியாசி மயங்கி விட்டார். அவரை வீட்டுக்கு தூக்கிச் சென்று ஆசுவாசப்படுத்தினார்கள். கண் விழித்த சந்நியாசி, அனைவரும் ஆச்சர்யம் அடையும் வகையில் வங்காளத்தில் பேசினார். ஆனால் அது ஹிந்தி பேசும் தொனியிலிருந்தது. வாயில் ஏதோ கூழாங்கல்லை வைத்துக்கொண்டு பேசுவது போல் இருந்தது.

சந்நியாசியுடனான மக்களின் விசாரணை அடுத்த நாளும் தொடர்ந்தது. அங்கு கூடியிருந்தவர்களிடம் ஆஷு குப்தா என்பவர், “நான் கேட்கும் கேள்விக்கெல்லாம் இந்த சாது சரியாக பதில் சொல்லிவிட்டார் என்றால், நான் இவரை இரண்டாவது குமாராக ஒப்புக்கொள்கிறேன்” என்றார்.

“டார்ஜிலிங்கில், நாம் தங்கிய பங்களாவின் மேற்தளத்தின் கூரையில் ஒரு பறவை இருந்தது. அந்தப் பறவையை சுட்டது யார்? அதற்காக நீ ஏன் கோபித்துக் கொண்டாய்?”

சந்நியாசி இந்த கேள்விக்கான பதிலை சொல்வதற்கு முன்னால், கூட்டத்தில் இருந்த ஒருவன் “இந்த கேள்விக்கான பதிலை, ஆஷு குப்தா முதலில் கவுரங் பாபுவிடம் தனியாக சொல்லவேண்டும்” என்று கேட்டுக்கொண்டான். கவுரங் பாபு ஜெய்தேபூரின் சார் பதிவாளர். அவருக்கு அந்த ஊரில் நல்ல மதிப்பு இருந்தது. பாவல் அரண்மனையைச் சேர்ந்தவர்களுக்கும் நன்கு தெரிந்தவர். ஆஷு குப்தா, கவுரங் பாபுவின் காதில் ரகசியமாக தன்னுடைய கேள்விக்கான பதிலைத் தெரிவித்தார்.

அங்குக் குழுமியிருந்த நூற்றுக்கணக்கான மக்கள், சன்னியாசி என்ன பதில் சொல்லப்போகிறார் என்று மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். சன்னியாசி அமைதியாக, ஆனால் தீர்க்கமாக பதிலைச் சொன்னார்.

“அந்தப் பறவையை சுட்டது ஹரி சிங். ”

ஆஷு குப்தா வானத்துக்கும் பூமிக்கும் குதித்தான். சந்நியாசி சொன்ன பதில் தவறு என்றான். அந்தப் பறவையை சுட்டது பிரேந்திர பானர்ஜி என்றான். குழுமி இருந்தவர்கள், கவுரங் பாபுவை பார்த்தார்கள். அவரும் தன்னிடம் சொல்லப்பட்ட பதில் பிரேந்திர பானர்ஜி என்று தெரிவித்தார்.
அங்கு கூடியிருந்தவர்களிடம் ஒரே கூச்சலும், குழப்பமும் நிலவியது. கவுரங் பாபு, பிரேந்திர பானர்ஜியை யாரவது அழைத்துக் கொண்டு இங்கு வந்தால் உண்மை தெரிந்துவிடும் என்று கருத்து தெரிவித்தார்.

ஒருவன் வேகமாகச் சென்று, பிரேந்திர பானர்ஜியை கூட்டி வந்தான். பிரேந்திர பானர்ஜி வந்ததுதான் தாமதம். கவுரங் பாபு, “டார்ஜிலிங்கில் பங்களாவில் நீ பறவையை ஏதாவது சுட்டாயா? ”என்று கேட்டார்.

எல்லோரும் பிரேந்திர பானர்ஜி என்ன பதில் சொல்லப்போகிறான் என்று ஆவல் மிகுதியுடன் காத்திருந்தனர்.

வந்தது பதில். “இல்லை. நான் சுடவில்லை. ஹரி சிங்தான் சுட்டான். எனக்கு துப்பாக்கியால் எப்படி சுடுவது என்று கூட தெரியாது” என்றான் பானர்ஜி.

அங்கிருந்த கூட்டத்தினர் ஹோவென்று கத்தினர். அவர்கள் அனைவருக்கும் சந்தோஷம்.
தினந்தோறும் சந்நியாசியை பார்க்க நூற்றுக்கணக்கில் வந்தவர்கள், இப்போது ஆயிரக்கணக்கில் வந்தனர். ஜெய்தேபூருக்கு சிறப்பு ரயில்களெல்லாம் இயக்கப்பட்டன. ஜோதிர்மாயி வீட்டிலிருந்து ராஜ்பாரி அரண்மனை வரை எங்கு பார்த்தாலும் ஜனக்கூட்டம்தான். இறந்ததாக கருதப்பட்ட தங்களுடைய அரசர் 12 ஆண்டு காலம் கழித்து மீண்டும் திரும்பி வந்ததில் மக்களுக்குச் சந்தோஷம்தான். அதுவும் சந்நியாசியாக வந்திருப்பதால், அந்த ஆச்சர்யத்தைக் காண்பதற்காகவே நிறைய கூட்டம் திரண்டது. நிறைய பேர் சந்நியாசியிடம் ஆசிபெற்றனர்.

கல்கத்தாவிலிருந்து வெளிவந்த பிரபல ஆங்கில பத்திரிக்கையான ‘தி ஸ்டேட்ஸ்மென்’, இந்த நிகழ்வுகளைப் பற்றி “டாக்காவின் கிளர்ச்சி – Dacca Sensation” என்று தலைப்புச் செய்தி வெளியிட்டது.

ஜெய்தேபூர் காவல் நிலையத்தில், அந்த ஊரில் நடக்கும் அன்றைய தின நிகழ்வுகள்/ செய்திகள் போன்றவை பதிவேட்டில் பதியப்படுவது வழக்கம். சன்னியாசி மறுபடியும் ஜெய்தேபூர் வந்த சமயத்தில், காவல்துறை பதிவேட்டில் பின்வரும் செய்திகள் பதியப்பட்டிருந்தன.

தேதி – 04.05.1921 – காலை 9 மணி

நீண்ட ஜடாமுடி வைத்திருந்த ஓர் அழகான சந்நியாசி புத்து பாபு வீட்டில் சில நாட்களாக தங்கி இருக்கிறார். அவர் ஊரும் பேரும் தெரியவில்லை. அந்த சந்நியாசியைப் பார்க்க நிறைய பேர் வந்து போகிறார்கள். அவருடைய உருவ அமைப்புகள் மேஜோ குமாரை ஒத்து இருப்பதாக பலர் கருதுகிறார்கள். மேஜோ குமார் இறக்கவில்லை என்றும் சந்நியாசிகளுடன் சன்னியாசியாக தேச சஞ்சாரம் செய்து கொண்டிருந்ததாகவும், அப்படி ஊர் சுற்றி கொண்டிருக்கும் தருவாயில் இங்கு வர நேர்ந்தது என்றும் மக்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

தேதி – 05.05.1921 – மாலை 3 மணி

வானம் தெளிவாக இருக்கிறது. மழை வருவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. ஊரில் தொற்றுநோய் அபாயம் எதுவும் இல்லை. ஒரு சந்நியாசி ஜெய்தேபூருக்கு வந்திருக்கிறார். அவரை மக்கள் அனைவரும் மேஜோ குமார் என்று கருதுகிறார்கள். சன்னியாசியும் தான் தான் மேஜோ குமார் என்று அறிவித்திருக்கிறார்.

0
இதற்கிடையில், மேஜோ குமார் டார்ஜிலிங்கில் இறந்துபோய், டாக்காவில் சந்நியாசியாகத் தோன்றும்வரை ராஜ்பாரியில் பல துரதிர்ஷ்ட சம்பவங்கள் நடந்துவிட்டன. 1909ம் ஆண்டு மேஜோ குமார் இறந்துவிட்டான். அடுத்து, 1910ம் ஆண்டு பாரா குமார் இறந்துவிட்டான். 1913ம் ஆண்டு சோட்டா குமாரும் இறந்துவிட்டான். ராஜ்குமாரர்கள் மூவருக்கும் திருமணம் ஆகியிருந்தாலும் யாருக்கும் வாரிசு கிடையாது. தந்தை, தாய், மகன்கள் என்று ஒவ்வொருவரும் அடுத்தடுத்து சில ஆண்டுகளில் இறந்ததால், இது ராஜ்பாரியின் சாபக்கேடு என்று நினைத்து ஏனையவர்கள் ராஜ்பாரியில் தங்குவதை தவிர்த்து வந்தனர். சில வேலையாட்கள் மட்டுமே பராமரித்து வந்தனர்.

மூன்று ராஜகுமாரர்களும் வாரிசு இல்லாமல் இறந்ததன் காரணமாக, அரசாங்கம் பாவல் ஜமீனை சமரஷ்னை செய்துவிட்டது. அதாவது வாரிசு இல்லாத ராஜ்ஜியத்தை அரசாங்கம் எடுத்துக்கொண்டு Court of Wards மூலமாக நிர்வகித்து வந்தது. அப்போது ஜமீனின் மேலாளராக செயல்பட்டவர் நீதாம் என்ற ஆங்கிலேயர். அவர் டாக்கா கலெக்டரான லின்ஸ்டேவுக்கு ஒரு கடிதம் எழுதினார்.

‘விசித்திரமான சம்பவம் ஒன்று ஜமீனில் நடந்து கொண்டிருக்கிறது. சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்னர் நல்ல சிவப்பு நிறம் கொண்ட ஒரு சந்நியாசி டாக்காவுக்கு வந்திருக்கிறார். அவர் ஹரித்வாரிலிருந்து வந்ததாக தெரிகிறது. அவரை காசிம்பூர் ஜமீன்தார் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று இருக்கிறார். சில நாட்களுக்குப் பிறகு, சந்நியாசி ஜெய்தேபூருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார். பின்னர் ஜோதிர்மாயி வீட்டுக்கு அழைக்கப்பட்டிருக்கிறார். அங்கு அந்த சந்நியாசியை பார்த்த மாத்திரத்தில் ஜமீனின் மக்களெல்லாம், அவர் தான் இரண்டாம் குமாரான மேஜோ குமார் என்று கூறுகிறார்கள். ஜமீனுக்கு உட்பட்ட அனைத்து கிராம மக்களும் அவரைக் காண வருகிறார்கள். அவரை இரண்டாவது குமார் என்றும் சுட்டிக்காட்டுகிறார்கள். அந்த சன்னியாசி ஜமினீல் இருப்பது, பெரும் கிளர்ச்சியை உண்டுபண்ணுகிறது.

‘நேற்று இரவு, கிராமவாசிகள் அந்த சந்நியாசியைக் கட்டாயப்படுத்திக் கேட்டதில், தான் ராமேந்திர நாராயண ராய் என்றும், தன்னை சிறு வயதில் பார்த்துக் கொண்டிருந்த தாதியின் பெயர் அலோகா டாஹி என்றும் தெரிவித்திருக்கிறார். அதன் பிறகு அந்த சந்நியாசி மயக்கம் அடைந்துவிட்டார். கூடியிருந்த மக்கள் அனைவரும் ‘ஹுல்லா தனி’, ‘ஜெய் தனி’ என்று கோஷம் போட ஆரம்பித்துவிட்டார்கள்.

‘அங்கு இருந்த மக்கள் அனைவரும் அவர் இரண்டாவது குமார் என்று ஏற்றுக்கொண்டனர். ஜமீன் அவரை அங்கீகரிக்கவில்லை என்றாலும், தாங்கள் அவர் பக்கம் இருப்பதாக தெரிவித்தனர். மேஜோ குமாரின் உறவினர்கள் அந்த சன்னியாசியிடம், தான் யார் தன்னைப் பற்றிய பழைய விவரங்கள் அனைத்தும் கூறுமாறு கேட்டுக் கொண்டனர்.

‘இந்த நிலையில் அரசாங்கம் ஒரு விசாரணை நடத்தவேண்டும். நாளுக்கு நாள் சாதுவைப் பார்க்க கூட்டம் கட்டுக்கடங்காமல் ஜெய்தேபூருக்கு திரண்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், தங்களை தக்க நடவடிக்கை எடுக்குமாறு ஆவண செய்கிறேன். இப்படிக்கு, நீதாம்.’

(தொடரும்)

மர்ம சந்நியாசி – 1

ராஜ்குமார் இறந்துவிட்டார் என்று டார்ஜிலிங்கிலிருந்து பாவல் சமஸ்தானத்துக்கு தந்தி அனுப்பப்பட்டது. குடும்பத்துடன் கோடை விடுமுறையை கழிக்கச் சென்ற பாவல் ஜமீனின் இரண்டாவது ராஜகுமாரன். ராஜ்குமார் ராமேந்திர நாராயண ராய் என்பது முழுப்பெயர்.  மேஜோ குமார் என்றும் அழைக்கப்படுவார். பாவல் ஜமீன் டார்ஜிலிங்கிலிருந்து நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஜமீனைச் சேர்ந்தவர்கள், குடும்ப உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் என்று யாரும் இன்னும் வந்து சேரவில்லை. இன்னும் அவர்களுக்குத் தந்தியே கிடைக்கவில்லை. இருப்பினும் இறந்த இராஜ்குமாரை அவசரமாக அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

1909ம் ஆண்டு, மே மாதம் 8ம் தேதி மாலை சுமார் 7 மணியளவில் அவர் இறந்துபோனார். அக்கம் பக்கத்தில் யாராவது பிராமணர்கள் இருக்கிறார்களா என்று விசாரித்து வர, மேஜோ குமாரின் சிப்பந்திகள் அனுப்பப்பட்டனர். இறந்தவர் பிராமணர் என்பதால், பிராமண முறையில் சடங்குகள் செய்யவேண்டும். ஆனால் யாரும் கிடைக்கவில்லை. அதனால் என்ன, பிணம் அடக்கம் செய்யப்பட்டாகவேண்டும். இரவு 9 மணி. உடல் பாடையில் ஏற்றப்பட்டது. அடக்கம் செய்ய செல்லவிருந்த கும்பலில் சுமார் 20 பேர் இருந்தனர். பங்களாவின் ஒரு அறையில் மேஜோ குமாரின் மனைவி பிபாவதி தேவி ஆற்றமுடியாமல் அழுதுகொண்டிருந்தாள். அவளுக்கு 19 வயதுதான் ஆகியிருந்தது.

மேஜோ குமார் இறக்கும் போது அவனுக்கு 25 வயது. இந்தியாவின் கவர்னர் ஜெனரல் மற்றும் வைசிராயான மிண்டோ பிரபு வரும் நேரம் அது. அதனால் டார்ஜிலிங்கில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தடபுடலாக இருந்தன. ஆங்கிலேயர்களால் இந்தியாவின் கோடை வெப்பத்தை தாங்கமுடியவில்லை. அருகிலிருந்த மலைவாசஸ்தலத்திற்குச் சென்று கோடைகாலத்தை கழித்தனர். அவர்களுடன் அரசாங்க ஊழியர்களும் சென்றனர். ஏன் ராஜ்ஜியத்தின் அரசாங்கமே கோடைகாலங்களில் மலைவாசஸ்தலங்களில்தான் நடைபெற்றது. முக்கிய சாலைகளில் கூட்டமாக செல்ல தடை விதிக்கப்பட்டிருந்ததால் (சுதந்தரப் போராளிகள் ஆங்காங்கே ஆங்கிலேயர்கள் மீதும், அவர்களின் நிர்வாகத்தின் மீதும் தாக்குதல் நடத்தியால் இந்த சிறப்பு ஏற்பாடு), மேஜோ குமாரின் உடல் இடுகாட்டுக்கு வேறொரு வழியில் எடுத்துச் செல்லப்பட்டது. அது சுற்று வழி, மேலும் தூரமும் கூட. ஆனால் மேஜோ குமாரை அன்றே தகனம் செய்யவேண்டும் என்பதில் கும்பல் உறுதியாக இருந்தது. அந்த கும்பலுக்கு தலைமைதாங்கி, அனைத்து காரியங்களையும் மும்முரமாக கவனித்துக் கொண்டிருந்தவர் மேஜோ குமாரின் மைத்துனர் மற்றும் பிபாவதி தேவியின் அண்ணனான சத்தியேந்திர பானர்ஜி (சத்திய பாபு என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்).

நகர்புறத்தைத் தாண்டி மேஜோ குமாரின் இறுதி ஊர்வலம் சென்றது. டார்ஜிலிங் இமயமலைத் தொடர்ச்சியில் பயணம் தொடர்ந்தது. பச்சைப் பசேல் என்ற புல்வெளி. அதைத் தொடர்ந்து அடர்ந்த காடுகள். மேகங்கள் மலைகளுடன் எப்பொழுதும் உரசியும் வளைந்தும் சென்று கொண்டிருக்கும். எப்பொழுது வேண்டுமானாலும் மழை வரும். இரவு நேரம் என்பதால் குளிர் அதிகமாக இருந்தது.  இடுகாட்டுக்கு அருகில் வரும் தருவாயில், சீற்றத்துடன் புயல்காற்று வீசத் தொடங்கியது. அதற்குமுன் கண்டிராத பெருங்காற்று. கையில் எடுத்து வந்த விளக்குகளும், ஏற்றிவந்த தீப்பந்தங்களும் அணைந்துவிட்டன. அடிக்கின்ற காற்றில் ஒருவராலும் திடமாக நிற்கமுடியவில்லை. காற்றைத் தொடர்ந்து ஜோவென்று மழையும் கொட்டியது. ஒருவருக்கொருவர் தன் பக்கத்தில் மற்றவர் இருக்கிறாரா இல்லையா என்று கூட பார்க்கமுடியவில்லை. சிறிது நேரத்திற்கெல்லாம் அங்கு கூச்சலும் குழப்பமும் நிலவியது.

உடனே சத்திய பாபு முடிவெடுத்தான். அங்கிருந்தவர்களிடம் தாங்கள் ஏந்தி வந்த மேஜோ குமாரின் உடம்பை பாதுகாப்பாக ஓரிடத்தில் வைத்துவிட்டு, மழை நிற்கும் வரை பாதுகாப்பாக ஒதுங்கி கொள்ளுமாறு கூச்சல் போட்டான். சிப்பந்திகளும் அப்படியே செய்தனர். மேஜோ குமாரின் உடல், அந்த இயற்கைச் சீற்றத்தின் நடுவே பாதுகாப்பான இடம் என்று கருதப்பட்ட பகுதியில் கிடத்தப்பட்டது. பிணத்தைத் தூக்கி வந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடம் நோக்கி ஓடினார்கள். அங்கு தொலைவில் சில குடிசைகள் தென்பட்டன. அவையெல்லாம் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்யும் கூலித் தொழிலாளிகளின் வீடுகள். ஆனால் அனைத்து வீடுகளும் பூட்டியே இருந்தன. அதனால் ஊர்வலத்தினர் அனைவரும் ஒரு பாறையின் தாழ்வாரத்தின் அடியில் ஒதுங்கிக் கொண்டனர்.

அடித்துப் பெய்த மழையுடன் அவ்வப்போது இடியும் மின்னலும் தாக்கியது. சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு மழை சற்று ஓய்ந்தது. எங்கும் மயான அமைதி. மழைநீர் மலைகளின் பாறைகளின் இடையே சிற்றோடையாக ஓடிக்கொண்டிருந்தது. அந்த நிசப்தத்தின் இடையில் மரக்கிளைகளிலிருந்து மழைநீர்த் துளிகள் சொட்டிக்கொண்டிருந்தன. தொப்பலாக நனைந்த இறுதி ஊர்வலத்தினர் அனைவரும் ஒன்று திரண்டனர். மேஜோ குமாரின் உடலைத் தேடினர்.

என்ன ஆச்சர்யம்! மேஜோ குமாரின் உடல் கிடைக்கவில்லை. செய்வதறியாமல் களைப்புடன் வீடு திரும்பினர். மேஜோ குமாரின் உடலை அடக்கம் செய்யவேண்டும் என்று தான் எடுத்த முயற்சி வீணாகிப்போனதை நினைத்து மனம் வருந்தினான் சத்திய பாபு. பங்களாவின் மேற்தளத்தில் உள்ள ஒரு அறைக்கு சத்திய பாபு சென்றான். கூடவே அவனுடைய நம்பிக்கைக்குரியவர்கள் நால்வரும் சென்றனர். அறைக்கதவு தாழிடப்பட்டது. சிறிது நேரத்துக்கெல்லாம் நால்வரும் வெளியே வந்தனர்.

மே மாதம் 9 ஆம் தேதி, காலை 9 மணி அளவில் பங்களாவின் வாயிலில் ஒரு பாடை தயாராக கிடத்தி வைக்கப்பட்டிருந்தது. அதில் முழுதும் துணியால் சுற்றப்பட்ட ஒரு உடல் கிடத்தப்பட்டது. பங்களாவில் இருந்தவர்களும், அக்கம்பக்கத்தினரும் கிடத்தப்பட்ட உடலுக்கு மலர்வளையம் வைத்து நினைவு கூர்ந்தனர். பாடை தூக்கப்பட்டது. சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. கூடவே 30 நபர்கள் சென்றனர். அதில் சில முக்கியஸ்தர்களும் இருந்தனர். குறிப்பிடும்படியாக பர்தவான் சமஸ்தானத்தின் ராஜாவும் அந்த இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார். பர்தவானும் பாவலைப் போல ஒரு பெரிய ராஜ்ஜியம். இறுதி ஊர்வலம் செல்லும் வழியெல்லாம் ஏழைகளுக்கும் பிச்சைக்காரர்களுக்கும் தானம் வழங்கப்பட்டது. சீருடை அணிந்த கூர்காக்கள் ஊர்வலத்தை வழிநடத்திச் சென்றனர். சமுதாயத்தில் உயர்ந்த மனிதர் ஒருவர் இறந்துவிட்டார் என்பதைக் காட்டுவதற்காக ஒரு மணி நேரத்துக்கெல்லாம் மேஜோ குமாரின் உடல் இடுகாட்டுக்குக் கொண்டுசெல்லப்பட்டது.

மேஜோ ராஜாவின் உடல் தீக்கிரையாக்கப்படுவதற்கு முன்னர் செய்யப்படவேண்டிய சடங்குகளெல்லாம் சரியாகச் செய்யப்படவில்லை.  உடல்மீது சுற்றப்பட்ட துணி கடைசிவரை அகற்றப்படவில்லை. மேஜோ ராஜாவின் முகத்தை அங்கு குழும்பி இருந்தவர்கள் யாரும் பார்க்கவில்லை. உடல் குளிப்பாட்டப்படவில்லை. உடலில் நெய் பூசப்படவில்லை. உடலுக்கு புதிய துணி அணிவிக்கப்படவில்லை. சிதைக்கு தீ மூட்டுவதற்கு முன்னர், அங்கு உள்ளவர்களுக்கு பிண்டம் வழங்கவேண்டும். அதுவும் வழங்கப்படவில்லை. ஆனால், மேஜோ ராஜாவின் உடல் தகனம் செய்யப்பட்டது. குறிப்பிடப்படவேண்டிய விஷயங்கள், இறுதிச் சடங்கை புரோகிதர் நடத்தவில்லை; மேஜோ குமாரின் அஸ்தியும் எடுத்துச்செல்லப்படவில்லை.

வீடு திரும்பிய சத்திய பாபு, ‘மேஜோ குமாரின் உடல் தகனம் செய்யப்பட்டது’ என்று ஜெய்தேபூருக்கு தந்தி அனுப்பினான். கல்கத்தாவிலிருந்து வெளியாகும் பிரபல பத்திரிக்கையான ஸ்டேஸ்மெனில் மேஜோ குமாரின் இரங்கல் செய்தி வெளியிடப்பட்டது. மேஜோ குமாரின் சொந்த ஊரில் நடக்க வேண்டிய ஏனைய சடங்குகளை நிறைவேற்றும் பொருட்டு, டார்ஜிலிங்கிலிருந்து அனைவரையும் புறப்படச் செய்தான் சத்திய பாபு. ஜெய்தேபூருக்குச் சென்றவர்களில் அஷுதோஷ் கோஷ் என்ற மருத்துவக் கல்லூரி மாணவனும் ஒருவன். அவன் பாவல் அரண்மனையின் ஆஸ்தான மருத்துவரின் மகன். மருத்துவக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தான். மேஜோ குமார் டார்ஜிலிங் செல்லும் போது, அவனுடன் சென்ற கூட்டத்தில் அஷுதோஷ் கோஷும் ஒருவன். அவனுக்கும் இந்த வழக்கில் முக்கியப் பங்கு இருக்கிறது. அதைப் பின்னர் பார்ப்போம். இப்பொழுது பாவல் ராஜ்ஜியத்தைப் பற்றி பார்த்துவிடுவோம்.

0

இந்தியாவில் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டிலிருந்த வளமான மாகாணம் வங்கதேசம். சிப்பாய் கலகத்துக்குப் பிறகு, ஆங்கிலேயர்களுக்கு எதிராக புரட்சியை ஆரம்பித்துவைத்து, அதிகளவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வங்காளிகள்தான். புரட்சியை ஒடுக்கவேண்டியே, அப்போதைய இந்திய கவர்னராக இருந்த கர்ஸன் துரை, 1905ம் ஆண்டு மத அடிப்படையில் வங்காளத்தை இரண்டாகப் பிரித்தான். இந்துக்கள் அதிகமாக இருந்த மேற்குப் பகுதியை மேற்கு வங்காளமாகவும், முஸ்லீம்கள் அதிகமாக இருந்த கிழக்குப் பகுதியை கிழக்கு வங்காளமாகவும் பிரித்துவைத்தான். மேற்கு வங்காளம் மற்றும் இந்தியாவின் அப்போதைய தலைநகரம் கல்கத்தா. கிழக்கு வங்காளத்தின் தலைநகரம் டாக்கா.

பாவல் ராஜ்ஜியம் கிழக்கு வங்காளத்திலேயே உள்ள ஒரு பெரிய ஜமீன். சுமார் 1500 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இதன் தலைநகரம் ஜெய்தேபூர். டாக்காவிலிருந்து 20 மைல் தொலைவில் உள்ளது இந்த ஜெய்தேபூர். சுமார் 2300 கிராமங்களை உள்ளடக்கியது. இந்த ஜமீனில் சுமார் 5 லட்சம் மக்கள் வசித்து வந்தனர். பெரும்பான்மையானவர்கள் முஸ்லிம்கள். இவர்களுக்குப் பிரதான தொழில் விவசாயம். மக்கள் ஆண்டொன்றுக்கு ஜமீனுக்கு செலுத்தி வந்த வரி 10 லட்சம் ரூபாய்க்கும்மேல். சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தத் தொகை அளப்பரியது. மக்களுக்கு தங்கள் ஜமீன் தான் கோயில், அதை நிர்வகித்து வரும் ராஜாதான் தெய்வம்.

பாவல் அரண்மனையைச் சுற்றி ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாய நிலங்கள், நூற்றுக்கணக்கான பழத்தோட்டங்கள், அடர்ந்த காடுகள், வளைந்து நெளிந்து ஓடும் ஆறுகள், போலோ மைதானம், கிரிக்கெட் மைதானம், கால்பந்து மைதானம், குதிரை கொட்டம்,  யானைகள் என ஒரு ராஜ்ஜியத்துக்கே உரித்தான அனைத்து சங்கதிகளும் இருந்தன.

பாவல் அரண்மனையின் பெயர் ராஜ்பாரி. இந்த அரண்மனை சுமார் 30,000 நீட்டளவில் கட்டப்பட்டது. இந்த அரண்மனை இரண்டு தளங்களைக் கொண்ட பத்து தொகுப்புகளைக் கொண்டது. ஏகப்பட்ட அறைகளை உள்ளடக்கியது. ஐரோப்பிய விருந்தாளிகள் வந்தால், அவர்களைத் தங்க வைப்பதற்காகவே தனியே அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. பாவல் ராஜ்ஜியத்துக்கு ஆங்கிலேய துரைகள் வேட்டையாடுவதற்காக அடிக்கடி வருவது வழக்கம். அவர்களை வேட்டைக்கு அழைத்துச் செல்வது மேஜோ குமார்தான். அரண்மனையில் நடனம், நாட்டியம் மற்றும் இன்ன பிற கலைநிகழ்ச்சிகள் நடப்பதற்காக இரண்டடுக்கு கட்டடம் கட்டப்பட்டது. அரண்மனையில் பல அடுப்பங்கறைகள் உள்ளன. அசைவம் சமைப்பதற்கென்றே தனியாக ஒரு பெரிய அடுப்பங்கறை உண்டு. அரண்மனையைச் சுற்றி ராஜ்ஜிய நிர்வாகத்துக்கான அலுவலகங்கள், கருவூலம், அரண்மனைக்கான மருத்துவமனை, சிப்பந்திகள் தங்கும் விடுதி என பலவும் இருந்தன. அரண்மனையை நிர்வாகம் செய்ய ஏகப்பட்ட அலுவலர்கள் இருந்தனர். வெள்ளைக்கார அலுவலர்களும் இருந்தனர். இவர்களைத் தவிர, சேவை செய்வதற்காக ஆயிரக்கணக்கான சிப்பந்திகள், பாதுகாவலர்கள் மற்றும் இன்ன பிறர் நியமிக்கப்பட்டிருந்தனர். ஜமீனின் ராஜா ராஜேந்திர நாராயண ராய் 1901ம் ஆண்டு வாக்கில் இறந்துவிட்டார்.

ராஜாவின் மனைவியான ராணி பிலாஸ்மனியும் 1907ம் ஆண்டு இறந்துவிட்டார். மேஜோ ராஜாவுடன் கூடப் பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்கள், மூன்று சகோதரிகள். சகோதரிகள் திருமணமாகிச் சென்றுவிட்டனர். தந்தை, தாய் இறந்த பிறகு, மூன்று சகோதரர்களும் ராஜ்ஜியத்திற்கு சொந்தக்காரர்களானார்கள். ராஜகுமாரர்கள் ஒவ்வொருவருக்கும் ராஜ்ஜியத்தில் மூன்றில் ஒரு பங்கு கிடைத்தது. மேஜோ ராஜாவிற்கு ஒரு அண்ணன், பெயர் ரானேந்திரா (சுருக்கமாக பாரா குமார் என்று அழைக்கப்பட்டான்). மேஜோ குமாரின் தம்பி ரபிந்திரா (சுருக்கமாக சோட்டா குமார் என்று அழைக்கப்பட்டான்).

நாம் வழக்கு விவகாரத்துக்கு மறுபடியும் வருவோம்.

0

ஜமீன் குடும்பத்தை நிர்வகிக்க, பேருக்குத்தான் மூன்று குமார்கள் இருந்தனர். மூவரும் பொறுப்பர்வர்கள். யார் சொல் பேச்சும் கேட்க மாட்டார்கள். முரட்டு சுபாவம் கொண்டவர்கள். படிப்பு சுத்தமாக ஏறவில்லை. ஊதாரிகளும்கூட. வாழ்க்கையை எப்பொழுதும் இன்பகரமாக கழிப்பதே தங்கள் கடமை என்று வாழ்ந்து வந்தவர்கள்.

மூவரில், மேஜோ குமாரைத்தான் அரண்மனையிலிருந்த அனைவருக்கும் பிடிக்கும். அவன் முரடனாக இருந்தாலும், சில நற்குணங்கள் படைத்தவனாக இருந்தான். அவனை அவ்வளவு எளிதில் யாராலும் புரிந்து கொள்ளமுடியாது. தன்னுடைய மூன்று சகோதரிகளிடமும் அவன் பிரியமாக இருப்பான். அவனிடம் தலைமைப் பண்புகள் காணப்பட்டன. மேஜோ குமாரிடம் உறுதியான தன்மையும், அனைவரையும் வசீகரிக்கும் தோற்றமும் இருந்தது.

மேஜோ குமாருக்கு மிருகங்கள்மீது அலாதிப் பிரியம். அதனால் தன்னுடைய அரண்மனையிலேயே தனியாக ஒரு மிருகக்காட்சிசாலையை தோற்றுவித்து அதை திறம்பட நிர்வகித்து வந்தான். அந்த மிருகக்காட்சி சாலையில் புலி, சிறுத்தை, கரடி, நரி, குரங்கு, நெருப்புக் கோழி மற்றும் ஏனைய காட்டு மிருகங்களும் இருந்தன. மேஜோ ராஜாவின் செல்லப் பிராணி ஃபுல்மாலா என்ற பென் யானை. மேஜோ குமார் பிரமாதமாக குதிரை சவாரி செய்வான். அவன் காட்டு மிருகங்களை வேட்டையாடுவதில் வல்லவன். திறமையாக போலோ விளையாடுவான். பாரம்பரிய இந்திய சங்கீதம் மிகவும் பிடிக்கும். அதுவும் வங்காள மொழியில் உள்ள ஆன்மிகப் பாடல்கள் என்றால் மேஜோ குமாருக்கு உயிர். தபலா, சித்தார் மற்றும் கிளாரினெட் வாசிப்பதிலும் வல்லவன்.

மேஜோ குமார் ஒரு அற்புதமான அலங்கார ரதம் வைத்திருந்தான். அதில் அவன் தன் குதிரையைப் பூட்டி ராஜ்பாரி மைதானத்தை வலம் வருவான். அதைப் பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். ஒருமுறை மேஜோ குமாருக்கும், டாக்காவின் நவாப் சலீமுல்லாஹ்வுக்கும் நூற்றுக்கணக்கான பார்வையாளர்களின் ஆரவாரத்துக்கிடையே ரதப் போட்டி நடைபெற்றது. அதில் மேஜோ குமார் சர்வ சாதாரணமாக வெற்றி பெற்று, போட்டிக்கான 1000 ரூபாய்க்கான பரிசுத் தொகையையும் தட்டிச் சென்றான்.

இன்பமயமான வாழ்க்கை மேஜோ குமாருடையது. பகலில் போட்டி, வேடிக்கை, விளையாட்டு என்றால் இரவில் களியாட்டம். மேஜோ குமாருக்கு 16 வயது இருக்கும்போதுதான் அவனுக்குப் பலான அனுபவம் கிடைத்தது.  டாக்காவில் உள்ள ஒரு பிரபல விலைமகள் வீட்டுக்கு அழைத்துச்செல்லப்பட்டான். அவளுக்கு மேஜோ குமாரை விட இரண்டு மடங்கு வயது அதிகம். அவள், மேஜோ குமாருக்கு காமக்கலைகள் அனைத்தையும் கற்றுத்தர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டாள். அவளும் மேஜோ குமாருக்கு ஐயம் திரிபுர கற்றுக்கொடுத்தாள். மேஜோ குமார் அனைத்தையும் சீக்கிரமாக கற்றுக்கொண்டுவிட்டான். விளைவு அவன் பெண் பித்தனாகிப் போனான். மேஜோ குமார் நித்தம் ஒரு விலை மாதரிடம் சென்றான். அரண்மனை முழுவதும் அரசல் புரசலாக மேஜோ குமாரின் நடவடிக்கையை பற்றித்தான் பேச்சு. இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என்று மேஜோ குமாரின் பாட்டி முடிவெடுத்தாள். கால்கட்டு போடுவதுதான் ஒரே வழி என்று அரண்மனையில் முடிவெடுக்கப்பட்டது.

கல்கத்தாவுக்கு அருகே உள்ள உத்தர்புரா என்ற ஒரு பிரபல ஜமீன் குடும்பத்தை சேர்ந்த பெண் பிபாவதி தேவி. அவளுக்கும் மேஜோ குமாருக்கும் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு, வெகு விமரிசையாக 1902ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அரண்மனையே விழாக்கோலம் பூண்டது. திருமணம் முடிந்த பிறகும், மூன்று நாள்களுக்குக் குறையாமல் விருந்து பரிமாறப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் தினந்தோறும் வந்து விருந்தில் கலந்து கொண்டனர். திருமணத்துக்குப் பிறகு, பிபாவதி அதிகமாக தன் பிறந்த வீட்டில்தான் இருந்தாள். மேஜோ குமாரின் மூர்க்ககுணம் பிபாவதியை மிகவும் பயத்துக்குள்ளாக்கியது.

அரண்மனைக்கு நாட்டிய மங்கைகள் வருவதும், அவர்கள் தங்கள் நாட்டியத்தையும் இதர சாகசங்களையும் வெளிப்படுத்துவதும் தொடர்ந்தது.  அப்படியொரு நாட்டிய நிகழ்ச்சியில், மேஜோ ராஜாவைத் தன்னுடைய நளினத்தால் அதிகமாக கவர்ந்தவள் எலோகேஷி. அவளுக்கு 17 வயது. நல்ல அழகு. தாள வாத்தியங்களுக்கு ஏற்றவாறு அவள் பிரமாதமாக ஆடினாள். மேஜோ குமாரும் அவளது நடனத்தால் சுண்டி இழுக்கப்பட்டான். பிறகென்ன, எலோகேஷிக்கு அரண்மனையிலேயே ஒரு அறை ஒதுக்கப்பட்டது. மேஜோ ராஜாவின் இதயத்தில் இடம்பிடித்த எலோகேஷிக்கு, ராஜாவின் அரண்மனையில் இடம் கிடைக்காதா என்ன? எலோகேஷி அரண்மனையில் குடியேறியதால், அரண்மனையில் ஒரே சலசலப்பு, கூச்சல், குழப்பம். வேறுவழியில்லாமல் மேஜோ குமார், எலோகேஷியை டாக்காவில் உள்ள பேகம்பசாரில் தங்க வைத்தான். பாவம் மேஜோ குமார், எலோகேஷியை பார்ப்பதற்காக 20 மைல் செல்லவேண்டியிருந்தது.

மேஜோ குமார் 1905ம் ஆண்டு சத்திய பாபுவின் தொந்தரவு தாங்கமுடியாமல் 30,000 ரூபாய்க்கு ஒரு ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுத்தான். அந்த பாலிசியில் தன்னுடைய மனைவியான பிபாவதி தேவியை நாமினியாக நியமனம் செய்தான். மேஜோ குமாருக்கு காப்பீடு வழங்கிய நிறுவனம் ஸ்காட்லாந்தைச் சேர்ந்தது. அந்நிறுவனத்தின் தலைமையகம் எடின்பரோவில் இருந்தது. 30,000 ரூபாய்க்கு காப்பீடு எடுப்பது என்பது அந்தக் காலத்தில் பெரிய விஷயம். காப்பீட்டு பாலிசியை பெறுவதற்கு முன்னர் மேஜோ குமார் மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டார். பாலிசி எடுப்பவர் நல்ல உடல்நிலையில் இருக்கிறாரா இல்லையா என்பதை தெரிந்து கொள்வதற்காக நடத்தப்படும் ஆய்வு இது. மேஜோ குமாரை பரிசோதித்தவர் டாக்டர் காண்டி. மருத்து சோதனையில் மேஜோ குமாரின் உடலில் உள்ள மச்சம் மற்றும் இதர அறிகுறிகள் எல்லாம் குறிப்பெடுக்கப்பட்டன.

1906ம் ஆண்டு வேல்ஸ் இளவரசர் ஜார்ஜ் கல்கத்தாவுக்கு வருகை தந்தார். அவரை வரவேற்க வங்கதேசத்தில் உள்ள ராஜாக்கள், நவாப்புகள் மற்றும் ஜமீன்தார்கள் கல்கத்தாவில் குழுமினர். பாவல் ராஜ்ஜியத்தை சேர்ந்த மூன்று ராஜகுமாரர்களும் கல்கத்தாவுக்குச் சென்றனர். கல்கத்தாவுக்குச் சென்ற மேஜோ குமார் தன்னுடைய லீலைகளை அங்கு தொடங்கினான். அங்கு அவனுக்கு பலதரப்பட்ட, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மங்கைகள் கிடைத்தனர். மேஜோ குமார் எதிர்பார்த்த அளவுக்கு அதிகமாகப் பெண்கள் கிடைத்தனர். கூடவே அவன் எதிர்பார்க்காத ஒன்றும் கிடைத்தது. சிப்பிலிஸ் (syphilis) – மேக நோய். விரைவில், நோய் முற்றிப்போய் உடம்பெல்லாம் புண்ணாகி சீழ்பிடித்து அறுவறுப்பான ரணமாகிவிட்டது.

அந்த காலத்தில் சிப்பிலிஸை குணமாக்க பிரத்தியேக மருத்துவ சிகிச்சை முறையில்லை. இருக்கும் மருந்தை எடுத்துக்கொண்டால், குணமாக சில மாதங்கள் அல்லது ஆண்டுகள் ஆகும். சிப்பிலிஸ் நோயிலிருந்து மீண்டாலும் அது உடலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். உடம்பிலுள்ள கொப்பளங்கள் ஆறினாலும், அந்த இடத்தில் நீங்கா வடு ஏற்படும். வடுக்கள் ஏற்பட்ட இடத்தில் இருக்கும் எலும்புகள் மற்றும் தண்டுவடம் கடினமாகி புறந்தள்ளியிருக்கும். மருத்துவர் ஒருவர் இம்மாதிரி வடுக்களைப் பார்த்தால், அது சிப்பிலிஸ் நோயால்தான் ஏற்பட்டிருக்கிறது என்று சரியாகக் கூறிவிடுவார். உடம்பில் காயம் ஏற்பட்டு அதனால் உண்டான வடுவுக்கும், சிப்பிலிஸ் நோயால் உருவான வடுவுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. சிப்பிலிஸ் கண்டவர்களுக்கு உடம்பின் பல பகுதிகளில் வெள்ளைத் தழும்புகள் ஏற்படும். குறிப்பாக கண்ணத்தில், வாய்ப்பகுதியில், நாக்கில் மற்றும் பிறப்புருப்பில்.  மூக்கின் இரண்டு நாசிகளுக்கும் இடையில் இருக்கும் எலும்பு கடினமாகி மூக்கு கருடமூக்கு போல காட்சியளிக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக, சிப்பிலிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைப்பையில் (testicles) எவ்வித உணர்ச்சியும் இருக்காது. விரைப்பைக்கு அழுத்தம் கொடுத்தாலும் வலி எதுவும் இருக்காது.

மேஜோ குமாருக்கு சிசிக்சைகள் ஆரம்பிக்கப்பட்டன.

0

1909ம் ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்திலிருந்து கிச்சனர் துரை (இவர் இராண்டாம் உலக யுத்தம் நடந்த போது, இங்கிலாந்து அரசின் Secretary of State for war ஆக நியமிக்கப்பட்டார்). கல்கத்தாவுக்கு ஒருமுறை வருகை தந்தார். ஒரு ராயல் பெங்கால் புலியை எப்படியாவது வேட்டையாடவேண்டும் என்று அவருக்கு ஆசை. புலி வேட்டை என்பது பெரும் சாகசம் என்பதால் அதை முயன்று பார்க்கவிரும்பினார்.

ராயல் பெங்கால் டைகரை வேட்டையாடவேண்டும் என்றால், பாவல் ராஜ்ஜியத்தில் உள்ள கானகத்துக்குத்தான் செல்லவேண்டும். உடனே இந்திய அரசாங்கம் பாவல் அரண்மனைக்கு கிச்சனர் துரை வரவிருப்பதாக தகவல் அளித்தது.

செய்தி கிடைத்ததும், ராஜ்பாரி அரண்மனையில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கிச்சனர் பிரபு வருவது அரண்மனைக்குப் பெருமை என்பதால் அவர் வருகையை சிறப்பிக்கவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.  கிச்சனர் வேட்டையாடச் செல்லும்போது யாரை அவருடன் அனுப்புவது? புலி வேட்டையில் புலியாகத் திகழ்ந்த மேஜோ குமாரைவிட சிறந்த வீரன் அகப்பட்டுவிடுவானா என்ன?

(தொடரும்)

ஆஷ் கொலை வழக்கு – 2

பகுதி 1

அரசு தரப்பு வழக்கறிஞர்களாக, அப்போதைய பப்ளிக் பிராஸிக்யூட்டராக இருந்த நேப்பியர், அவருக்கு துணையாக ரிச்மண்ட், சுந்தர சாஸ்திரி ஆகியோர் செயல்பட்டனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிறைய பேர் இருந்ததால் அவர்களுக்காக வாதாட நிறைய வழக்கறிஞர்கள் ஆஜர் ஆனார்கள். அவர்களில் முக்கியமானவர்கள், ஜே.சி. ஆடம் என்ற பிரபல பாரிஸ்டர், ஆந்திர கேசரி என்று அழைக்கப்பட்ட பிரபல வழக்கறிஞர் தங்குதூரி பிரகாசம் (1946 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக பதவி வகித்தார்), எம்.டி.தேவதாஸ் (பின்னாளில் நீதிபதியாக ஆனார்), ஜெ. எல். ரொஸாரியோ, பி. நரஸிம்ம ராவு, டி.எம். கிருஷ்ணசாமி ஐயர் (பின்னாளில் திருவாங்கூர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்தார்), எல்.ஏ. கோவிந்தராகவ ஐயர், எஸ்.டி.ஸ்ரீனிவாச கோபாலாச்சாரி மற்றும் வி.ரையுரு நம்பியார்.

அரசுத் தரப்பின் முக்கிய சாட்சிகள், அப்ரூவர்களாக மாறிய ஆறுமுகப்பிள்ளை மற்றும் சோமசுந்தரப்பிள்ளை. இவர்கள் கூண்டில் ஏற்றப்பட்டு விசாரிக்கப்பட்டனர். எதிர் தரப்பு, இவர்களை குறுக்கு விசாரணை செய்தது. இரு தரப்பிலிருந்தும் சுமார் 100 க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். வழக்கு விசாரணையின் போது கடிதங்கள், டயரிகள் (நாட்குறிப்புகள்), பத்திரிக்கை வெளியீடுகள், அரசு ஆய்வறிக்கைகள் என நிறைய ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டன.

நீதிமன்ற விசாரணையின் போது சாட்சிகள் சொன்ன வாக்குமூலத்தின் அடிப்படையிலும், மேலும் இந்த வழக்கு சம்பந்தமாக பத்திரிக்கைகளில் வெளியிடப்பட்ட செய்திகளிலிருந்தும் திரட்டப்பட்ட விவரங்கள் பின்வருமாறு :

வாஞ்சிநாதன் திருவாங்கூர் சமஸ்தானத்துக்கு உட்பட்ட செங்கோட்டையைச் சேர்ந்தவர். அவருடைய தந்தை ரகுபதி ஐயர், திருவாங்கூர் தேவஸ்தானத்தில் ஊழியராக இருந்து ஒய்வு பெற்றவர். வாஞ்சிநாதன் திருவாங்கூர் சமஸ்தானத்தின் வனத்துறையில், புனலூர் என்ற இடத்தில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு திருமணமாகி பொன்னம்மாள் என்ற மனைவி இருந்தாள். வாஞ்சிநாதனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து இறந்துவிட்டது. அவர் அலுவலகத்திலிருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு மூன்று மாத காலம் எங்கோ சென்றுவிட்டுத் திரும்பினார். வாஞ்சிநாதனுடைய தந்தைக்கு மகனின் நடவடிக்கைகள் பிடிக்கவில்லை. வாஞ்சிநாதன் இறந்த பிறகு கூட ஈம காரியங்கள் செய்ய அவருடைய தந்தை வரவில்லை.

வாஞ்சிநாதனுக்கு வ.உ.சியின் (வ.உ.சிதம்பரம் பிள்ளை) மீது பக்தியும் பற்றுதலும் இருந்தது.

வ.உ.சிக்கு கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் என்ற வேறு பெயர்களும் உள்ளன. வ.உ.சி, அவர் தந்தையைப் போல சட்டம் பயின்று விட்டு வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். சுதந்தரப் போராட்டத்தில் ஈடுபட்டார். காங்கிரஸில் சேர்ந்தார். அந்தச் சமயத்தில் (1903 -1905) காங்கிரஸ்காரர்களான பால கங்காதர திலகர், பிபின் சந்திர பால், லாலா லஜபதிராய் ஆகியோர் சுதேசி இயக்கத்தைத் தொடங்கி இருந்தனர். ஆங்கிலேயர்களின் பொருள்களை வாங்காமல் புறக்கணித்தால், அவர்களுக்குப் பொருளாதார இழப்பு ஏற்படும் என்று சுதேசி இயக்கம் நம்பியது. பலவீனமடைந்த நிலையில் ஆங்கிலேயரை நாட்டை விட்டே விரட்டி விடலாம் என்றும் அவர்கள் நம்பினர்.

சுதேசி இயக்கம் தோன்றியவுடன், நாட்டின் பல பகுதிகளில் சுதேசிப் பொருள்கள் தயாரிப்பும் விற்பனையும் அதிகரித்தன. யாரும் எதிர்பாராத வகையில் வ.உ.சி, ஆங்கிலேயர்களுக்குப் போட்டியாக கப்பல் போக்குவரத்தைத் தொடங்கினார்.  தமிழகத்தில், தூத்துக்குடி- கொழும்பு வழித்தடத்துக்கு, ஆங்கிலேயக் கப்பல் British Steam Navigation Company  ஏகபோக உரிமை கொண்டாடியது. கப்பல் வர்த்தகம் தடபுடலாக நடந்து கொண்டிருந்தது. அதை முறியடிக்கும் பொருட்டு, வ.உ.சி ஏகப்பட்ட செலவில் S.S.Geneli, S.S.Lawoe ஆகிய இரண்டு கப்பல்களை வாங்கினார். Swadeshi Steam Navigation Company என்ற நிறுவனத்தைத் தொடங்கி தூத்துக்குடி – கொழும்பு மார்க்கத்தில் கப்பல்களை இயக்கினார்.

வ.உ.சியின் போட்டியைத் தாங்கமுடியாத ஆங்கிலேய கம்பெனி நியாயமற்ற வர்த்தகத்தில் ஈடுபட்டது. தூத்துக்குடியிலிருந்து கொழும்பு செல்வதற்கான பயணக் கட்டணத்தைத் தடாலடியாக 16 அனா (ஒரு ரூபாய்)  குறைத்தது. போட்டியைச் சமாளிக்க, வ.உ.சியும் தன்னுடைய கப்பல் கட்டணத்தை 8 அனாவாகக் (50 காசு) குறைத்தார். ஆங்கிலேய கம்பெனி இன்னும் ஒரு அடி மேலே போய், கப்பல் பயணத்துக்கான தன்னுடைய கட்டணத்தை மொத்தமாக ரத்து செய்தது. போதாக்குறைக்கு, தன் கப்பலில் பயணம் செய்பவர்களுக்கு இலவசக் குடை எல்லாம் கொடுத்தது. கேட்கவா வேண்டும் நம் மக்களை? பயணிகள் அனைவரும் ஆங்கிலேய கப்பலிலேயே பயணம் செய்தனர். மேலும், அப்பொழுது தூத்துக்குடி சப்-கலெக்டராக இருந்த ஆஷ், அவ்வப்போது தன் பங்குக்கு வ.உ.சியின் கப்பல் கம்பெனியின் அலுவலகத்துக்குச் சென்று, கணக்கு வழக்கு சரியில்லை என்று சொல்லி, சோதனை செய்து வந்தான். ஒரு கட்டத்தில் வ.உ.சியின் கப்பல்கள் காலியாகத்தான் இலங்கைக்கு சென்றுவந்தன. விளைவு வ.உ.சியின் கப்பல் கம்பெனி விரைவிலேயே திவாலானது. இதனால் வ.உ.சிக்கு பெருத்த நஷ்டம். இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் ஆங்கிலேய கம்பெனியே வ.உ.சியின் இரண்டு கப்பல்களையும் ஏலத்தில் எடுத்தது.

வ.உ.சி தன்னுடைய முயற்சியில் மனம் தளரவில்லை. தன்னுடைய போராட்டத்தின் ஒரு கட்டமாக, தூத்துக்குடியில் கோரல் மில்ஸ் கம்பெனியில் (ஆங்கிலேய கப்பல் கம்பெனியின் ஏஜென்டாக செயல்பட்டு வந்த ஏ அண்ட் எஃப் கம்பெனிதான் இந்த நூற்பாலையையும் நிர்வகித்து வந்தது) வேலை பார்த்த ஊழியர்களை ஒன்று திரட்டி, ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் தீமைகளை விளக்கினார். வ.உ.சியுடன் சுப்பிரமணிய சிவாவும் போராட்டத்தில் தோள் கொடுத்தார்.

(சுப்ரமணிய சிவா திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டில் பிறந்தவர். சிறந்த எழுத்தாளர். பேச்சளாரும் கூட. இவர் ஆங்கிலேய அரசுக்கு எதிராகப் பல போராட்டங்கள் நடத்தியதற்காக, பல முறை சிறை சென்றிருக்கிறார். தமிழகத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து சிறைக்குச் சென்ற முதல் தமிழர் இவர்தான். சிறையில் இவருக்கு தொழுநோய் தொற்றிக்கொண்டது. தொழுநோயால் பாதிக்கப்பட்டதால் இவர் ரயிலில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டார். மனம் தளராத சிவா, பல ஆயிரம் மைல்கள் கால் நடையாகவே சென்று ஆங்கிலேயருக்கு எதிராகப் பிரசாரம் செய்தார். உடல் முழுவதும் கொப்பளங்கள் தோன்றி மிகவும் வேதனைப்பட்டார்).

மில் ஊழியர்களும் ஆங்கிலேய முதலாளிகளுக்கு எதிராகப் பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் இறங்கினர். ஆஷ் துரை தொழிலாளிகளையும் முதலாளிகளையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தான். பேச்சுவார்த்தையின் போது, தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் நிலைக்கு முதலாளிகள் தள்ளப்பட்டனர். தொழிலாளர்கள் போராட்டம் வெற்றி பெற்றது. தொழிலாளர்கள் அடைந்த வெற்றி, ஆஷ் துரையை உறுத்திக்கொண்டே இருந்தது. இவற்றுக்கெல்லாம் காரணமாக இருந்த வ.உ.சி மீது கடும் கோபத்தில் இருந்தான்.  தகுந்த சமயத்துக்காக காத்திருந்தான். சமயமும் வந்தது. பிபின் சந்திர பால் சுதந்திர போராட்ட வீரர், சுதேசி இயக்கத்தை வெற்றிகரமாக நடத்தியவர். அவர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படும் நாளை சுதந்தர நாளாக கொண்டாட முடிவெடுத்தது தூத்துக்குடி சுதேசி இயக்கம். ஆஷ் துரை வ.உ.சி யையும், சுப்பரமணிய சிவாவையும் கைது செய்தான். இதனால் திருநெல்வேலி ஜில்லா முழுவதும் கலவரம் ஏற்பட்டது. கலவரத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்கினான் ஆஷ் துரை. மற்ற மாவட்டங்களிலிருந்து காவலர்கள் வரவழைக்கப்பட்டனர். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் நால்வர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

வ.உ.சி மீதும், சுப்பரமணிய சிவா மீதும் தேச துரோகம் செய்ததாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவை அனைத்திற்கும் பின்புலத்திலிருந்து ஆஷ் துரை செயல்பட்டான். வழக்கு விசாரிக்கப்பட்டு, வ.உ.சிக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

வாஞ்சிநாதனால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அந்தச் சமயத்தில்தான் வாஞ்சிநாதனுக்கு, தன்னுடைய மைத்துனன் சங்கரகிருஷ்ணன் மூலமாக நீலகண்ட பிரம்மச்சாரியின் அறிமுகம் கிடைத்தது. 1910 ஆம் ஆண்டு வாக்கில், நீலகண்ட பிரம்மச்சாரி தென்தமிழகத்தில் தென்காசி உள்ளிட்ட இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்குள்ள இளைஞர்களை எல்லாம் சந்தித்தார். வெள்ளைக்காரர்களை இந்தியாவை விட்டு விரட்ட வேண்டும் என்று பிரசாரம் செய்தார். போராளி குழுக்களைத் தயார்படுத்தினார். நீலகண்ட பிரம்மச்சாரியால் உந்தப்பட்டு, தன்னையும் போராட்டக் குழுவில் இணைத்துக்கொண்டார் வாஞ்சிநாதன். குழுவில் இடம்பெற்றவர்கள் ரகசியமாகச் சந்தித்துக்கொண்டனர்.

நீலகண்ட பிரம்மச்சாரியின் போராட்டக் குழுவில் இடம் பெற்றிருந்த ஆறுமுகப்பிள்ளை நீதிமன்றத்தில் பின்வருமாறு சாட்சி சொன்னார். ‘போராட்டக்காரர்கள் சந்தித்து கொள்ளும் இடத்தில் காளியின் படம் மாட்டப்பட்டிருக்கும். விபூதி, குங்குமம், பூ ஆகியவை வைக்கப்பட்டிருக்கும். குழுவில் இடம்பெற்றிருக்கும் நான்கு அல்லது ஐந்து நபர்கள் வரிசையாக உட்கார்ந்திருப்போம். நீலகண்ட பிரம்மச்சாரி சற்று தொலைவில் உட்கார்ந்து காகிதங்களில் ஏதோ எழுதிக் கொண்டிருப்பார். காகிதத்தின் தலைப்பில் ‘வந்தே மாதரம்’ என்று எழுதப்பட்டிருக்கும். நாங்கள் குங்குமத்தைத் தண்ணீரில் கரைப்போம். பின்னர் நீலகண்ட பிரம்மச்சாரி எழுதி வைத்திருந்த காகிதத்தில் நாங்கள் ஒவ்வொருவராக குங்குமத் தண்ணீரை தெளிப்போம். காகிதத்தில் தெளிக்கப்பட்ட தண்ணீர்தான் ஆங்கிலேயர்களின் ரத்தம். குங்குமம் கலந்த தண்ணீரைப் பருகுவோம். வெள்ளைக்காரர்களின் ரத்தத்தை குடித்ததாக அர்ததம்… அனைத்து வெள்ளைக்காரர்களையும் கொல்வோம் என்று உறுதி எடுப்போம். இந்த காரியத்துக்காக எங்களுடைய உயிர், உடைமை அனைத்தையும் தியாகம் செய்வோம் என்று சத்தியப் பிரமானம் செய்வோம். குழுவில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொருவருக்கும் புனைப்பெயர்கள் உண்டு. புனைப்பெயர்களை வைத்துதான் நாங்கள் ஒருவரையொருவர் அழைத்துக் கொள்வது வழக்கம். வந்தே மாதரம் என்று எழுதப்பட்ட காகிதத்தில் நாங்கள் எங்களுடைய கைவிரல்களைக் கீரி, அதிலிருந்து வெளிப்படும் ரத்தத்தைக் கொண்டு எங்களுடைய புனைப்பெயருக்கு எதிராக கையொப்பம் இடுவோம்.’

வாஞ்சிநாதன் மூன்று மாதம் அலுவலகத்தில் இருந்து விடுமுறை எடுத்துக்கொண்டு புதுச்சேரியில் வி.வி.எஸ்.ஐயரைச் சந்தித்தார். புதுச்சேரியில் பாரத மாதா என்ற அமைப்பைத் திறந்திருந்தார் வி.வி.எஸ் ஐயர். இந்த அமைப்பு சாவர்கர் ஆரம்பித்த அபினவ் பாரத் என்ற அமைப்பின் கிளையாகச் செயல்பட்டது. வாஞ்சிநாதன் பாரத மாதா அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டார். புதுச்சேரியிலும் பரோடாவிலும் ஆயுதப்பயிற்சி எடுத்துக்கொண்டார். பின்னர் ஊருக்குத் திரும்பினார்.

திருநெல்வேலிக்கு வந்த வாஞ்சிநாதன், தன்னுடைய நண்பரான சோமசுந்ததரப்பிள்ளையிடம் ஆஷ் துரையைக் கொல்ல வேண்டும் என்று சொன்னதாக அரசு தரப்பில் சொல்லப்பட்டது. அதை நிரூபிக்கும் பொருட்டு, சோமசுந்தரப்பிள்ளையின் சாட்சியம் நீதிமன்றத்தில் பின்வருமாறு பதிவாகியது.

‘ஆங்கிலேய ஆட்சி இந்திய நாட்டை சீரழித்துக் கொண்டிருக்கிறது. ஆங்கிலேய ஆட்சியை நீக்கவேண்டுமென்றால், இந்தியாவிலிருக்கும் அனைத்து ஆங்கிலேயர்களும் கொல்லப்படவேண்டும். அதற்கு முன்மாதிரியாக ஆஷ் கொல்லப்படவேண்டும். ஏனென்றால் அவன் தான் ஜில்லா கலெக்டராக இருந்து, சுதந்தரப் போராட்ட வீரரான வ.உ.சி தோற்றுவித்த சுதேசி கப்பல் கம்பெனியை மூடச்செய்தவன் என்று வாஞ்சிநாதன் என்னிடம் தெரிவித்தான்.’

நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்கள், நீலகண்ட பிரம்மச்சாரி சார்பாக அலிபி (Alibi) — வேறிட வாதத்தை முன்வைத்தனர். அதாவது வாஞ்சிநாதனை நீலகண்ட பிரம்மச்சாரி செங்கோட்டையில் சந்தித்தாக சொல்வது தவறு, நீலகண்ட பிரம்மச்சாரி அந்த சமயத்தில் அங்கு இல்லை, வேறு ஒரு ஊரில் இருந்தார் என்று சாட்சியம் அளிக்கப்பட்டது. மேலும் ஆறுமுகப்பிள்ளையும், சோமசுந்தரப்பிள்ளையும் காவல்துறையின் கட்டாயத்தின் பேரில்தான் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக பொய் சாட்சி சொல்கிறார்கள் என்ற வாதத்தை முன்வைத்தனர். குற்றத்துக்கு உடந்தையாக இருந்தவர்களின் சாட்சியங்களை வைத்து மட்டுமே, குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தண்டிப்பது தவறு. குற்றத்துக்கு உடந்தையாக இருந்தவர்களின் சாட்சியங்களைத் தவிர, அந்த சாட்சியத்தை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக தனிப்பட்ட சாட்சியங்கள் இருந்தால் ஒழிய, குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றம் இழைத்தவர்களாக கருதப்படமாட்டார்கள் என்று இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 114 ஐ காட்டி குற்றவாளிகள் தரப்பில் வாதிடப்பட்டது. அதாவது ஆறுமுகப் பிள்ளையும் சோமசுந்தரப் பிள்ளையும் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் என்று காவல்துறை குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதால், அவர்களுக்கு தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. காவல்துறையின் தூண்டுதலாலும், கட்டாயத்தினாலுமே ஆறுமுகப்பிள்ளையும், சோமசுந்தரப்பிள்ளையும் அப்ரூவராக மாறியிருக்கிறார்கள். அவர்களது சாட்சிகளில் நம்பகத்தன்மை இல்லை. எனவே அவர்களது சாட்சியங்களை நிராகரிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் அரசு தரப்பில், இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 133 மேற்கோள் காட்டப்பட்டது. இந்தப் பிரிவின் படி, குற்றத்துக்கு உடந்தையாக இருந்தவர்களின் சாட்சியின் பேரில் மட்டுமே (அந்தச் சாட்சியத்தை ஊர்ஜிதப்படுத்த வேறு சாட்சியங்கள் இல்லாத சமயத்தில்கூட) ஏனைய குற்றவாளிகளைத் தண்டித்தால், அந்தத் தண்டனை செல்லாது என்று சொல்லமுடியாது என்று வாதாடினார்கள். மேலும், அப்ரூவர் சாட்சியங்கள் இல்லாமலே மற்ற சாட்சியங்கள் மூலமாகவே குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது என்றும் வாதிடப்பட்டது.

வாதப் பிரதிவாதங்கள் முடிந்த பிறகு, அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த தீர்ப்பு வெளியிடப்பட்டது. நீதிபதி சர் அர்னால்ட் வைட்டும் நீதிபதி அய்லிங்கும் சேர்ந்து ஒரு தீர்ப்பை வெளியிட்டனர். நீதிபதி சங்கரன் நாயர் தனியே தன் தீர்ப்பை வெளியிட்டார். நீதிபதி சங்கரன் நாயரின் தீர்ப்பு மிகவும் பாராட்டப்பட்டது. இவர் தன்னுடைய தீர்ப்பில், இந்திய சுதந்தரப் போராட்ட வரலாற்றை பற்றி அலசி ஆராய்ந்திருந்தார். இவருடைய இந்த தீர்ப்பு, பின்னர் Role of Students in Freedom Movement with a Special Reference to Madras Presidency என்ற தலைப்பில் புத்தகமாகக்கூட வெளி வந்தது. மேலும் நீதிபதி, தன்னுடைய தீர்ப்பில், பாரதியாரின் ‘என்று தனியும் இந்த சுதந்திர தாகம்’ என்ற பாடலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டார். நீதிபதி சங்கரன் நாயர் தன்னுடைய தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக கொலைக்குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றும், ஆனால் அரசாங்கத்துக்கு எதிராக நீலகண்ட பிரம்மச்சாரி மட்டும் செயல்பட்டிருக்கிறார் என்றும் தெரிவித்தார்.

நீதிபதிகளின் பெரும்பான்மையான தீர்ப்பின் படி, நீலகண்ட பிரம்மச்சாரிக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. சங்கர கிருஷ்ணனுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஏனைய குற்றவாளிகளுக்கு குறைந்த தண்டனை வழங்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றவாளிகளின் தரப்பில், மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. முதல் விசாரணை மூன்று நீதிபதிகள் முன்னர் நடைபெற்றதால், மறு ஆய்வு மனு ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. ஐந்து நீதிபதிகள் பின்வருமாறு : 1) சர் ரால்ப் பென்சன், 2) ஜான் வாலஸ், 3) மில்லர், 4) அப்துல் ரஹிம் 5) பி.ஆர்.சுந்தர ஐயர். மறு ஆய்வு மனுவை விசாரித்த நீதிபதிகளில் சர் ரால்ஃப் பென்சன், ஜான் வாலஸ் மற்றும் மில்லர் ஆகிய மூவரும், மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் சரியான தீர்ப்பைத்தான் வெளியிட்டிருக்கிறார்கள், அதனால் அதில் மறு ஆய்வு செய்வதற்கு ஒன்றுமில்லை என்று தெரிவித்தனர். நீதிபதி அப்துல் ரஹிம் தன்னுடைய தீர்ப்பில், குற்றவாளிகளுக்கு எதிராக குற்றம் நிரூபிக்கப்படவில்லை, எனவே குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படவேண்டும் என்று தெரிவித்தார். நீதிபதி சுந்தர ஐயரோ தன்னுடைய தீர்ப்பில், குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு செல்லுபடியாகுமா என்ற சந்தேகத்தை தெரிவித்தார். பெரும்பான்மையான தீர்ப்பின்படி, குற்றவாளிகளின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டு, குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனை உறுதி செய்யப்பட்டது.

தமிழகத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்த முதல் மற்றும் கடைசி அரசியல் கொலை இதுவே. கொலை நடந்து சுமார் 100 வருடங்கள் ஓடிவிட்டன. கால ஓட்டத்தில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களெல்லாம் கரைந்து போய்விட்டனர்.

வ.உ.சி :

கோயம்புத்தூர் சிறையில் அடைக்கப்பட்ட வ.உ.சியை செக்கு இழுக்க வைத்தனர் ஆங்கிலேயர்கள். கீழ் நீதிமன்றத்தில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். சென்னை உயர் நீதிமன்றம், வ.உ.சிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை குறைத்தது. வ.உ.சி 1912 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். கப்பல் கம்பெனியால் ஏற்பட்ட நஷ்டம் போக, அவர் மீது தொடுக்கப்பட்ட தேச துரோக வழக்கை நடத்துவதற்காக தன்னுடைய அனைத்து சொத்துகளையும் இழந்து மிகுந்த கடனுக்கு ஆட்பட்டார். தேச துரோக வழக்கில் தண்டிக்கப்பட்டதால், அவருடைய வழக்கறிஞர் உரிமம் ரத்து செய்யப்பட்டது. பல ஆண்டுகள் கழித்து, திருநெல்வேலியில் வ.உ.சியின் வழக்கை விசாரித்த நீதிபதி வாலஸ், பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஆன பிறகு, வ.உ.சியின் வழக்கறிஞர் உரிமத்தை, அவர் திரும்பப் பெறும்படி செய்தார். இதற்கு நன்றி பாராட்டும் விதமாக, வ.உ.சி தன்னுடைய மகன்களில் ஒருவருக்கு வல்லேஸ்வரன் என்று பெயரிட்டார். இறுதி காலத்தை கோவில்பட்டியில் மிகவும் கஷ்டத்தில் கழித்தார். வ.உ.சி ஆசைபட்டபடி, அவருடைய உயிர் தூத்துக்குடி காங்கிரஸ் அலுவலகத்தில் 1936 ஆம் ஆண்டு பிரிந்தது. வ.உ.சி திருக்குறளுக்கு உரை எழுதினார், தொல்காப்பியர் இயற்றிய தமிழ் இலக்கணத்தை தொகுத்து பதிப்பித்தார். தன்னுடைய சுய சரிதையை எழுதினார். ஜேம்ஸ் ஆலனின் புத்தகங்களைத் தமிழில் மொழி பெயர்த்தார். மெய்யறிவு, மெய்யாரம் என்று இவர் எழுதிய புத்தகங்கள் மிகவும் பிரசித்தம். பல நாவல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார்.

சுப்பிரமணிய சிவா

தொழுநோயால் பாதிக்கப்பட்ட சுப்பிரமணிய சிவாவுக்கு உதவ பலர் மறுத்தனர். காரணம் அவர் ஆங்கிலேய அரசை பகைத்துக் கொண்டதுதான். தொழு நோயால் பாதிக்கப்பட்ட அவர், 1925ம் ஆண்டு தன்னுடைய 40வது வயதில் உயிரிழந்தார்.

சுப்ரமணிய பாரதி

புதுச்சேரியில் 10 ஆண்டுகள் இருந்த பிறகு, 1918 ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சிக்கு உட்பட்ட கடலூரில் நுழையும் போது கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஆங்கிலேய அரசு அவருக்கு பொது மன்னிப்பு வழங்கியதை அடுத்து, அவர் சென்னைக்கு வந்தார். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயில் யானைக்கு பாரதி உணவு வழங்கும் போது, அந்த யானை அவரைத் தாக்கியது. இதனால் காயம் அடைந்து, பின்னர் நோய்வாய்ப்பட்டு, 1921 ஆம் ஆண்டு தன்னுடைய 38வது வயதில் உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கில் வெறும் பதினான்கு பேர்தான் கலந்து கொண்டனர். பாரதியார் காலத்தால் அழியாத பல பாடல்களை எழுதி மக்கள் மனதில் இன்றளவும் மகாகவியாக வாழ்ந்து வருகிறார்.

வி.வி.எஸ் ஐயர்

உலக யுத்தமெல்லாம் முடிந்த பிறகு 1921 ஆம் ஆண்டில் சென்னைக்குத் திரும்பினார் வி.வி.எஸ் ஐயர். தேசபக்தன் என்ற பத்திரிக்கையில் பதிப்பாசிரியராக பணியாற்றினார். 1925 ஆம் ஆண்டு பாபநாச அருவியில் குளிக்கும் போது மர்மமான முறையில் உயிரிழந்தார். அவர் இறக்கும் பொழுது அவருக்கு வயது 44. அவர் கம்பராமாயணத்தைப் பற்றிய ஒரு ஆய்வுக் கட்டுரையை ஆங்கிலத்தில் எழுதினார்.  திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

நீலகண்ட பிரம்மச்சாரி 

ஆஷ் கொலை வழக்கில், நீதிமன்றம் தண்டனை விதித்த போது நீலகண்ட பிரம்மசாரிக்கு வயது 21. ஏழாண்டுகள் கடுங்காவல் தண்டனை முடிந்த பிறகு, நீலகண்ட பிரம்மச்சாரி 1919 ஆம் ஆண்டு விடுதலையானார். விடுதலையான பிறகும் கூட, அவர் ஆங்கிலேயருக்கு எதிராக தன்னுடைய நடவடிக்கைகளை தொடர்ந்தார். இதன் பொருட்டு, நீலகண்ட பிரம்மச்சாரி 1922 ஆம் ஆண்டு மறுபடியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 8 ஆண்டுகள் கழிந்து 1930 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். அதன் பின்னர் உலக வாழ்கையில் நாட்டமில்லாமல் துறவியானார். தேசம் முழுவதும் சுற்றித் திரிந்தார். 1936 ஆம் ஆண்டு மைசூரில் உள்ள நந்தி மலையில் ஆஸ்ரமம் அமைத்து தங்கினார். சுற்றியிருந்த ஏழை எளியவர்களுக்கு உதவி செய்து வந்தார். ஆன்மிகத்தில் கவனம் செலுத்தினார்.  சத்குரு ஒம்கார் என்றும் அவர் அழைக்கப்பட்டார்.  தன்னுடைய 89வது வயதில் மரணமடைந்தார். கம்யூனிஸ்டாக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பெரிய மகானாக இருந்து சமாதி அடைந்தார்.

ஆஷ் துரையின் மனைவி மேரி லில்லியன் பேட்டர்சன்

கணவன் இறந்த பிறகு, தன்னுடைய தாய்நாடான அயர்லாந்துக்கு சென்றுவிட்டார். மறுமணம் எதுவும் செய்து கொள்ளவில்லை. அரசாங்கம் கொடுத்த ஓய்வூதியத்தில் வாழ்க்கையை நடத்தி வந்தார். 1954 ஆம் ஆண்டு உயிரிழந்தார். ஆஷின் மூத்த மகன், இந்தியாவில் ராணுவத்தில் கர்னலாக பணிபுரிந்து 1947 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றான். இரண்டாவது மகன், இரண்டாவது உலக யுத்தத்தில் பங்கு கொண்டு அதில் உயிரிழந்தான். மகள்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

ஆஷ் துரைக்கு நினைவுச்சின்னங்கள்

இந்தியாவில் ஆஷ் துரை சுட்டுக் கொலை செய்யப்பட்ட செய்தியை கேட்ட மிதவாதிகள் மற்றும் அரசாங்கத்துக்கு பயந்தவர்கள், நாங்கள் அரசாங்கத்தின் பக்கம் இருக்கிறோம் என்று வெளிக்காட்டிக்கொள்ளும்விதமாக இரண்டு ஞாபகச் சின்னங்களை எழுப்பினர். பாளையங்கோட்டையில் ஆஷ் துரை எங்கு அடக்கம் செய்யப்பட்டாரோ அங்கு ஒரு கல்லறைச் சிலையையும், தூத்துக்குடி நகராட்சி அலுவலகத்தில், எண்கோண வடிவம் கொண்ட ஒரு மணிமண்டபத்தையும் நிறுவினர். மணிமண்டபம் எழுப்ப அந்த காலத்திலேயே ரூபாய் 3,002 செலவாகியது. இந்தச் செலவை 38 இந்தியர்கள் ஏற்றுக்கொண்டனர். அதில் சில பேர் வ.உ.சிக்கு சாதகமாக நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தவர்கள்!

சரி வாஞ்சிநாதனுக்குச் சிலை? மணியாச்சி ரயில் நிலைய பிளாட்பாரத்தில் வாஞ்சி மணியாச்சி சந்திப்பு என்று அமைக்கப்பட்ட பெயர் பலகை ஒன்று இருக்கிறது. அவ்வளவுதான். வாஞ்சிநாதனின் மனைவி பொன்னம்மாள் 1967 ஆம் ஆண்டு உயிரிழந்ததாக ஒரு தகவல் உண்டு.

இன்று வாஞ்சிநாதனின் பெயர் பலருக்கு தெரிந்திருக்காது. தெரிந்தவர்களுக்கும் மறந்து போயிருக்கும். 100 வருடங்களுக்கு முன்னர் வாஞ்சிநாதன் செய்த செயலின் தன்மையை நம்மால் உணர்ந்து கொள்ளமுடியாது. வாஞ்சிநாதன் நிகழ்த்திக் காட்டிய அந்தச் செயலை, மேடம் காமா தன்னுடைய பத்திரிக்கையான வந்தே மாதிரத்தில் பின்வருமாறு நெகிழ்ச்சியூட்டும்படி தெரிவிக்கிறார். ‘அலங்கரிக்கப்பட்ட இந்திய அடிமைகள், லண்டன் நகரத்தின் தெருக்களில் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவில், சர்க்கஸ் நடனம் நடத்தி, தங்களுடைய அடிமைத்தனத்தை வெளிபடுத்திய வேளையில், நம் தேசத்தின் இரண்டு இளைஞர்கள் மட்டும் தங்களுடைய தீர செயலால், இந்தியா இன்னும் உறங்கிக் கொண்டிருக்கவில்லை என்று உணர்த்தியிருக்கின்றனர். வாஞ்சிநாதனின் துப்பாக்கியிலிருந்து வெளிப்பட்ட குண்டு, நூற்றாண்டுகளாக அடிமைப்பட்டுக்கிடக்கும் இந்த தேசத்தை நிமிர்ந்து நிற்கச் செய்திருக்கிறது.’

0

S.P. சொக்கலிங்கம்

ஆஷ் கொலை வழக்கு – 1

மணியாச்சி சந்திப்பில் ரயில் வந்து நின்றது. முதல் வகுப்புப் பெட்டி அந்த ரயிலிலிருந்து கழற்றப்பட்டது. அதில் ஆங்கிலேய துரை ஆஷ், அவருடைய மனைவி இருவரும் இருந்தனர். ஊர் மக்கள், ஆஷ் துரையைக் காண வந்திருந்தனர். அந்த ஊரில், ஏன் அந்த ஜில்லாவிலே ஏதாவது நடக்க வேண்டுமென்றால், அதற்கு துரை மனது வைத்தால்தான் முடியும்.

ஆஷ் துரை வந்த ரயிலின் பெட்டியை, போட் மெயில் ரயிலோடு இணைக்க வேண்டும். துரையும் அவரது மனைவியும் கொடைக்கானலில் இருந்த தங்களது நான்கு குழந்தைகளையும் பார்க்கப் புறப்பட்டிருந்தனர்.

போட் மெயில் வருவதற்கு இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தன. அந்தச் சமயத்தில் இரண்டு வாலிபர்கள், துரை இருந்த ரயில் பெட்டிக்குள் நுழைந்தனர். ஒருவன் எடுப்பான தோற்றத்துடன் காணப்பட்டான். தன்னுடைய நீண்ட தலைமுடியை சீவி, கொண்டை போட்டிருந்தான். மற்றொருவன் வேட்டி, சட்டை உடுத்தியிருந்தான். துரை தன்னுடைய மனைவி மேரியுடன் ஆர்வமாக ஏதோ பேசிக் கொண்டிருந்தார். மேரியும் துரையும் எதிரெதிராக அமர்ந்திருந்தனர். ரயில் பெட்டியினுள் இருவர் ஏறி வருவதை துரை கவனிக்கவில்லை. வந்தவர்களில் ஒருவன், துரைக்கு அருகாமையில் அவர் முன் நேராக நின்றான். பெல்ஜியத்தில் தயாரிக்கப்பட்ட, பிரவுனிங் என்ற தானியங்கித் துப்பாக்கியை எடுத்தான். துரையின் நெஞ்சில் சுட்டான். அதுவரை அமைதியாக இருந்த ரயில் நிலையம் அதிர்ந்தது. துரை அவர் அமர்ந்திருந்த இடத்தில் அப்படியே சரிந்தார். அவருடைய மனைவி அதிர்ச்சியில் உறைந்தார்.

துரையைச் சுட்டவன், பிளாட்பாரத்தில் இறங்கி ஓடினான். ரயில் நிலையத்திலிருந்த வெகுஜன மக்கள் அவனைத் துரத்திக்கொண்டு ஓடினார்கள். ஓடியவன் நேராக பிளாட்பாரத்திலிருந்த கழிவறையின் உள்ளே நுழைந்து தாழிட்டுக்கொண்டான். மற்றவன், பிளாட்பாரத்தின் இன்னொரு பக்கம் ஒடி மறைந்தான்.

கழிவறையில் மறைந்த அந்த வாலிபன், தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டான். துரையை, அவருடைய சிப்பந்திகள் திருநெல்வேலி மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே துரையின் உயிர் பிரிந்தது.

ஆஷ் துரையின் கொலை, மதராஸ் மாகாணம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பரப்பரப்பாக பேசப்பட்டது. இறந்தவர் சாதாரண ஆள் இல்லை. அவர் திருநெல்வேலி ஜில்லாவின் கலெக்டர். மேலும் ஆங்கிலேயர். சுட்டவன் ஓர் இந்தியன். கொலை நடந்த தேதி ஜூன் 17, 1910. இன்னும் 5 நாள்களில், இங்கிலாந்தில் 5 வது ஜார்ஜ் மன்னர் முடிசூடிக்கொள்ள இருந்தார்.

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து புரட்சிகரமான செயல்கள் பல நாட்டில் நடந்து கொண்டிருந்தன. ஆனால் அனைத்து புரட்சிகர சம்பவங்களும், வட நாட்டில் அதுவும் குறிப்பாக வங்காளத்தில்தான் நடைபெற்றன. யாரும் தமிழகத்தில் இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. யார் இதை செய்திருப்பார்கள்? அவர்களுடைய பின்னணி என்ன? விசாரணையில் இறங்கியது ஆங்கிலேயக் காவல்துறை.

துப்பாக்கிச் சூடு நடத்தியவன் இளைஞன். அவனுக்கு சுமார் 25 வயது இருக்கும். அவனுடைய சட்டைப்பையில் காவல்துறை எதிர்பார்த்தது கிடைத்தது. அது ஒரு துண்டுக் காகிதம். அதில், ‘ஆங்கிலேய மிலேச்சர்கள் நம் நாட்டைப் பிடித்ததோடல்லாமல், நம்முடைய சனாதன தர்மத்தை இழிவுபடுத்தி அதை அழிக்க முற்படுகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் மிலேச்சர்களை விரட்டிவிட்டு , சுந்தரம் பெற்று, சனாதன தர்மத்தை நிலைநிறுத்த போராடிக்கொண்டிருக்கிறான். ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்த சிங், அர்ஜூனன் வாழ்ந்த இந்த பாரதத்தில் பசு மாமிசத்தை உண்ணும், 5 வது ஜார்ஜ் என்ற மிலேச்சனுக்கு மணிமகுடம் சூட்டுவதா? ஐந்தாவது ஜார்ஜ் மன்னன் இந்தியாவில் அடியெடுத்து வைத்தவுடனேயே, அவரைக் கொல்ல 3000 மதராசிகள் உறுதி மொழி எடுத்திருக்கின்றனர். அதை வெளிப்படுத்தும் விதமாகத்தான், அக்குழுவின் கடைநிலைத் தொண்டனாக இந்த காரியத்தை இன்று செய்தேன். பாரதத்தில் உள்ள அனைவரும் இப்படிசெய்வதைத்தான் தங்களுடைய கடமையாக நினைக்க வேண்டும்!’ என்று குறிப்பிட்டிருந்தது.

காவல்துறையினர், துப்பாக்கிச் சூடு நடத்தியது யார் என்று விரைவிலேயே கண்டுபிடித்து விட்டனர். அவர் தான் வாஞ்சிநாத ஐயர்.

வாஞ்சிநாதனின் வீட்டில் காவல்துறை சோதனை நடத்தியது. அதில் அவர்களுக்கு சில கடிதங்கள் கிடைத்தன. கடிதங்களில் கண்ட விவரங்களின் மூலம், ஆஷ் துரையைக் கொல்ல ரகசியக்குழு ஒன்று கூட்டுச்சதி செய்திருப்பது தெரியவந்தது. அந்தக் கடிதங்களில் ஆறுமுகப்பிள்ளையின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. காவல்துறை ஆறுமுகப்பிள்ளையின் வீட்டை இரவோடு இரவாக முற்றுகையிட்டது. ஆறுமுகப்பிள்ளை கைது செய்யப்பட்டார். அவர் வீட்டிலும் சில கடிதங்கள் கிடைத்தன. காவல்துறை அவரை மேலும் விசாரித்ததில், அவன் சோமசுந்தரப்பிள்ளை என்ற இன்னொருவரை காட்டிக் கொடுத்தார். காவல்துறை சோமசுந்தரத்தை சுற்றி வளைத்தது. சோமசுந்தரமும் கைது செய்யப்பட்டார். ஆறுமுகப்பிள்ளையும், சோமசுந்தரமும் அரசு தரப்பு சாட்சிகளாக (அப்ரூவர்) மாறினர்.

ஆறுமுகப்பிள்ளையும் சோமசுந்தரமும் கொடுத்த வாக்குமூலத்தை வைத்து, காவல்துறை தென்னிந்தியா முழுவதும் தேடுதல் வேட்டையை நடத்தியது. பதினான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பின்வருமாறு.

  1. நீலகண்ட பிரம்மச்சாரி (முக்கியக் குற்றவாளி) – தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்தவர். பத்திரிக்கையாளர். சூர்யோதையம் என்ற பத்திரிகையை நடத்திவந்தார். ஆங்கிலேய அரசாங்கம் அப்பத்திரிக்கையைத் தடை செய்தது. அதன் பின்னர் பல பத்திரிகைகளைத் தொடங்கினார். ஆனால் ஆங்கிலேய அரசாங்கம் அனைத்தையும் முடக்கியது. ஆயுதப்புரட்சியில் நம்பிக்கையுடையவர். அரவிந்த கோஷைப் பின்பற்றியவர். (அரவிந்த கோஷ் வங்காளத்தைச் சேர்ந்தவர். ஆங்கிலேயர்களை ஆயுதம் கொண்டு விரட்டமுடியும் என்று நம்பியவர். அலிப்பூர் குண்டு வெடிப்பில், குற்றம் சாட்டப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார். விடுதலையான பிறகு அரசியலை விட்டு விலகி ஆன்மீகத்தில் ஈடுபட்டார். புதுச்சேரியில் குடிபுகுந்தார்.)
  2. சங்கரகிருஷ்ண ஐயர் (வாஞ்சிநாதனின் மைத்துனன்) – விவசாயம் செய்துவந்தார்.
  3. மாடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை – காய்கறி வியாபாரம் செய்துவந்தார்.
  4. முத்துகுமாரசாமி பிள்ளை – பானை வியாபாரம் செய்துவந்தார்.
  5. சுப்பையா பிள்ளை – வக்கீல் அலுவலகத்தில் குமாஸ்தாவாக வேலை பார்த்து வந்தவர்.
  6. ஜகனாதா அய்யங்கார் – சமையல் செய்யும் உத்தியோகம்
  7. ஹரிஹர ஐயர் – வியாபாரி
  8. பாபு பிள்ளை – விவசாயி
  9. தேசிகாச்சாரி – வியாபாரி
  10.  வேம்பு ஐயர் – சமையல் செய்யும் உத்தியோகம்
  11. சாவடி அருணாச்சல பிள்ளை – விவசாயம்
  12. அழகப்பா பிள்ளை – விவசாயம்
  13. வந்தே மாதரம் சுப்பிரமணிய ஐயர் – பள்ளிக்கூட வாத்தியார்
  14. பிச்சுமணி ஐயர் – சமையல் செய்யும் உத்தியோகம்

கைது செய்யப்பட்டவர்களில் பல பேர், இருபது வயதிலிருந்து முப்பது வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்களைத் தவிர குற்றம் சாட்டப்பட்ட இருவர், தற்கொலை செய்து கொண்டனர்.  தர்மராஜா ஐயர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். வெங்கடேச ஐயர் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆங்கிலேய அரசு, ஆஷ் கொலை வழக்கு மற்றும் தேச துரோக நடவடிக்கைகளில், மேலும் சிலருக்கு பங்கு இருக்கக்கூடும் என்று சந்தேகித்தது. அவர்கள் :

1) வி.வி.எஸ். ஐயர்

திருச்சியில் பிறந்த வரஹனேரி வெங்கடேச சுப்ரமணியம் ஐயர், சட்டம் படித்து விட்டு வழக்கறிஞராக பணியாற்றினார். பின்னர் பாரிஸ்டர் பட்டம் பெற லண்டனுக்குச் சென்றார். அங்கே அவருக்கு வினாயக் தாமோதர் சாவகர்க்கரின் தொடர்பு ஏற்பட்டது. (சாவர்க்கர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டவர். ஹிந்துத்துவா கொள்கையை முன்மொழிந்தவர். ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னாளில் மகாத்மா காந்தியைச் சுட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தால் நிரபராதி என்று அறிவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்). ஆங்கிலேயர்களுக்கு எதிராக வி.வி.எஸ்.ஐயர் செயல்பட்டதால், அவரைப் பிடிக்க ஆங்கிலேயர்கள் வாரண்ட் பிறப்பித்தனர். இதையடுத்து இங்கிலாந்திலிருந்து தப்பித்த ஐயர், பாண்டிச்சேரியில் அடைக்கலம் புகுந்தார். புதுச்சேரியில் அவருக்கு பாரதியாருடனும், அரவிந்த கோஷுடனும் நட்பு ஏற்பட்டது. பின்னாளில், முதல் உலகப் போரின் போது ஜெர்மன் கப்பலான எம்டன், சென்னையில் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு காரணம் வி.வி.எஸ் என்று கருதிய ஆங்கிலேய அரசாங்கம், அவரையும் அவரது சகாக்களையும், ஆப்பிரிக்காவுக்கு நாடு கடத்தும்படி பிரெஞ்சு அரசிடம் வலியுறுத்தியதுதான். பிரெஞ்சு அரசு, வி.வி.எஸ் ஐயரின் மீது நிறைய குற்றங்களை சுமத்தி விசாரணை நடத்தியது. ஆனால் குற்றங்கள் எதுவும் நிரூபிக்கப்படாத சூழ்நிலையில், அவர் மீதான நடவடிக்கையை கைவிட்டது பிரெஞ்சு அரசு.
2) சுப்பரமணிய பாரதி

பாரதியார் திருநெல்வேலி ஜில்லாவில் உள்ள எட்டயபுரத்தில் பிறந்தவர். கவிஞர், பெண் விடுதலைக்காகப் போராடியவர், சமூக சீர்திருத்தவாதி, சிறந்த கட்டுரையாளரும் கூட. சுதேசமித்திரன் என்னும் பத்திரிக்கையை இவர் பதிப்பித்து வந்தார். ஆங்கிலேயருக்கு எதிராக அப்போது போராடி வந்த காங்கிரஸ் கட்சியில் இரு வேறு நிலைப்பாடுகள் இருந்தன. கோபால கிருஷ்ண கோகலேவும் அவரைச் சார்ந்தவர்களும், அறவழியில்தான் ஆங்கிலேயர்களிடம் சுதந்தரம் பெற வேண்டும் என்ற கருத்து கொண்டிருந்தனர். பால கங்காதர திலகரும் அவரைச் சார்ந்தவர்களும் புரட்சிகரமான போராட்டங்களை நடத்தித்தான் சுதந்தரம் பெற வேண்டும் என்று கருதி வந்தனர். பாரதி பால கங்காதர திலகரைப் ஆதரித்துவந்தார்.  வ.உ. சிதம்பரம் பிள்ளையின் மீது போடப்பட்ட தேச துரோக வழக்கில் நீதிமன்றத்துக்கு சென்று சாட்சியம் அளித்தார். மேலும்ஆங்கிலேயருக்கு எதிராக, தன்னுடைய பத்திரிக்கையில் எழுதி வந்ததால் ஆங்கிலேய அரசாங்கம் அவரைக் கைது செய்ய முற்பட்டது. அதனால் புதுச்சேரியில் தஞ்சம் புகுந்தார். புதுச்சேரியிலிருந்தபடி இதழ் பணிகளை நடத்தி வந்தார். புதுச்சேரியில் அவருக்கு அரவிந்த கோஷ், வி.வி.எஸ் மற்றும் பல சுதந்தரப் போராளிகளுடன் தொடர்பு ஏற்பட்டது.

மற்ற மூவர்,  3) ஸ்ரீனிவாச ஆச்சாரி 4) நாகசாமி ஐயர் மற்றும் 5) மாடசாமி பிள்ளை.

மேற்சொன்ன ஐவரையும் கைது செய்யுமாறு, ஆங்கிலேய அரசு வாரண்ட் பிறப்பித்தது. ஆனால் வாரண்டை காவல் துறையால் நிறைவேற்ற முடியவில்லை. காரணம் முதல் நால்வர் புதுச்சேரியில் இருந்தனர். ஐந்தாமவரான மாடசாமி பிள்ளை எங்கே இருந்தார் என்று கடைசி வரைக்கும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த மாடசாமி பிள்ளைதான் ஆஷ் துரை சுடப்பட்ட போது வாஞ்சிநாதனுடன் இருந்தவர்.

அன்றைய தேதிகளில் பல சுதந்தரப் போராளிகள், அரசியல் குற்றவாளிகள், ஆங்கிலேயர்கள் கெடுபிடியில் பாதிக்கப்பட்டவர்கள் என அனைவரும் புதுச்சேரியில்தான் தஞ்சம் புகுந்தனர். காரணம், புதுச்சேரி ஆங்கிலேயர்கள் கட்டுப்பாட்டில் இல்லை. பிரெஞ்சு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. ஆங்கிலேய காவல் துறை, பிரெஞ்சு ஆதிக்கம் உள்ள பகுதிக்குள் நுழைந்து ஒருவரை கைது செய்யமுடியாது. அப்படிச் செய்தால் மற்ற நாட்டின் இறையாண்மைக்கு பங்கம் விளைவித்தாக ஆகும்.

ஆங்கிலேய அரசால் தேடப்படும் குற்றவாளி, பிரெஞ்சு பகுதியில் இருந்தால் அவரை Extradite செய்ய முயற்சி செய்யவேண்டும். அதாவது எங்கள் நாட்டில் தேடப்படும் குற்றவாளி உங்கள் நாட்டில் ஒளிந்திருக்கிறான். அவனை எங்களிடம் ஒப்படையுங்கள் என்று கேட்கவேண்டும். சரி என்று அந்த நாடு உடனே ஒப்புக்கொள்ளாது. சம்மந்தப்பட்ட குற்றவாளி, அந்நிய நாட்டிடம் ஒப்படைக்கப்படவேண்டுமா,  வேண்டாமா என்று அந்நாட்டின் நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்களை ஒப்படைப்பதில், நிறைய சட்ட திட்டங்கள் இருக்கின்றன. எந்த விதமான குற்றம் இழைத்தவரை ஒப்படைக்க வேண்டும் அல்லது ஒப்படைக்கக் கூடாது என்பதற்கான விதிகள் ஏராளம். பொதுவாக அரசியல் குற்றங்கள் புரிந்தவர்களை, ஒரு நாடு மற்ற நாட்டிடம் ஒப்படைக்காது. அதனால் மேற்சொன்ன நபர்களை கைது செய்ய முடியவில்லை.

ஆனால் மற்ற விதத்தில் குடைச்சல் கொடுத்தார்கள். புதுச்சேரி எல்லையில், ஆங்கிலேய காவலர்கள் எப்பொழுதும் தயார் நிலையில் இருந்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் எப்போது தங்கள் நாட்டு எல்லையில் காலடி எடுத்து வைக்கின்றனரோ, அப்பொழுது அவர்களைக் கைது செய்வதற்கு தயாராக இருந்தனர். நிறைய உளவாளிகள் அமர்த்தப்பட்டனர்.  குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வரும் கடிதங்கள், மனிஆர்டர்கள் ஆகியவை தடுக்கப்பட்டன. புதுச்சேரியில் அச்சிடப்பட்டு வெளியான புத்தகங்கள், பத்திரிக்கைகள் ஆகியவற்றை ஆங்கிலேய ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வினியோகிக்க முடியாமல் தடை செய்தது.

புதுச்சேரியில் இருந்த குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தவிர, கைது செய்யப்பட்ட ஏனைய குற்றவாளிகள் மீது காவல்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

பொதுவாக குற்றம் எந்த இடத்தில் விளைவிக்கப்பட்டதோ, அந்த இடத்தின் மீது அதிகார வரம்புள்ள (Jurisdiction) நீதிமன்றத்தில்தான் வழக்கு விசாரணை நடைபெறும். ஆஷ் துரை கொலை வழக்கு, திருநெல்வேலி அமர்வு நீதிமன்றத்தில்தான் நடந்திருக்கவேண்டும். ஆனால் வழக்கத்துக்கு மாறாக சென்னை உயர் நீதிமன்றம், ஆஷ் கொலை வழக்கை தானே விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இதற்கு காரணம், கொலை செய்யப்பட்டவன் ஒரு ஆங்கிலேயன், அதுவும் ஒரு ஜில்லா கலெக்டர்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியே (சர் ஆர்னால்ட் வைட்) விசாரணையில் பங்கு கொண்டார். அவருடன் விசாரணையில் பங்கு கொண்ட மற்ற நீதிபதிகள், நீதிபதி அய்லிங் மற்றும் நீதிபதி சங்கரன் நாயர்.

பொதுவாக கொலை வழக்குகளில் ஜூரி (நடுவர் குழு) நியமிக்கப்படும். ஆனால் ஆஷ் கொலை வழக்கில் ஜூரி அமைக்கப்படவில்லை. ஆஷ் கொலை, ஆங்கிலேயர்களுக்கும் இந்தியர்களுக்கும் இடையே நடைபெற்ற சண்டையாகத்தான் பார்க்கப்பட்டது. அதனால் ஜூரியில் இந்தியர்கள் இடம் பெற்றால் அவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு சொல்லலாம் என்றும், அதேபோல் ஜூரியில் ஆங்கிலேயர்கள் இடம்பெற்றால் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக தீர்ப்பு கூறலாம் என்றும், அதனால் நடுநிலையாக வழக்கு விசாரணை நடக்காது என்றும் கருதிய நீதிமன்றம் ஜூரியை நியமிக்காமல், தன்னுடைய தீர்ப்புக்கு வழக்கை விட்டுவிட்டது.

(தொடரும்)

0

S.P. சொக்கலிங்கம்

லோகாயுக்தாவும் மாநிலங்கள் உரிமையும்

லோக் ஆயுக்தாவைக் கொண்டு வருவதில் கட்சிகளின் சாயம் வெளுத்தது என்ற தலைப்பில் தினமலரில் சில தினங்களுக்கு முன் செய்தி வெளிவந்தது. அரசியல் கட்சிகளுக்கு எதிரான செய்திகள் எப்போதும் மக்களை உடனே கவர்ந்துவிடுகின்றன. எந்தெந்த கட்சிகள் லோகாயுக்தாவை எதிர்த்தன, ஏன் எதிர்த்தன என்று விளக்காமல்,  லோகாயுக்தா வந்தால் ஆபத்து என்று அவை அஞ்சியதாகவும் ஆகவே அதை வரவிடாமல் தடுத்துவிட்டதாகவும் இவர்கள் கதைக்கிறார்கள். ஒருவிதத்தில் அது சரிதான் என்றாலும், குறைந்தபட்சம் மாநிலக் கட்சிகள் எதிர்ப்பதில் உள்ள உள் அர்த்தங்களை அறியவேண்டியது அவசியமாகிறது.

உண்மையில், லோக்பால், லோகாயுக்தா ஆகியவற்றால் பெரிய அளவில் சமூகத்தில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. இந்த நாட்டில் தேர்தல் ஆணையமும் நீதி மன்றங்களும் சில நேரங்களில் மட்டுமே விழிப்புடன் உள்ளன. அண்ணா ஹசாரேவின் போராட்டத்திலும் ஜனநாயக மறுப்புத்தன்மை உள்ளது. மேலும் அவர்கள் கோருகிற லோக்பால் அதிகார மையத்துக்கு வழி வகுக்கும். ஊழல் என்பதே எங்கு அதிகாரம் உள்ளதோ அங்கிருந்து ஆரம்பிக்கிறது. அப்படி இருக்கையில், லோக்பாலுக்கு ஹசாரே அணியினர் சொல்லும் வழிவகைகள் அதிகாரத்தை ஓரிடத்தில் குவிக்கச் செய்யும் முயற்சியே. அது மேலும் மேலும் ஊழலை வளர்க்கும். ஒழிக்க உதவாது.

இட ஒதுக்கீடு உள்பட பல விடயங்களில் ஹசாரே குழுவினர் ஒதுங்கி வேடிக்கை பார்த்ததை நாடறியும். ஹசாரே குழுவினர் கோருகிற லோகாயுக்தாவுக்கும், மத்திய அரசு கொண்டு வர முயற்சி செய்யும் லோகாயுக்தாவுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இந்த நிலையில் எங்களுடைய லோக்பாலை மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்கிற ஹசாரே குழுவினரின் கருத்து விமர்சனத்துக்கு உரியது.

லோக் ஆயுக்தா என்ற விவகாரத்தை வைத்தே திரிணமூல் காங்கிரஸ், அதிமுக, திமுக மற்றும் இன்ன பிற மாநிலக் கட்சிகள், ஏன் பாஜக உட்பட பல கட்சிகள் ராஜ்ய சபாவில், லோக்பால் தீர்மானத்தை தோற்கடிக்கச் செய்தது நினைவிருக்கலாம். இரு தினங்களுக்கு முன்பு அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப் பட்டது. அதில் மாநிலக் கட்சிகள் தங்கள் எதிர்ப்பை தீவிரமாகவே காட்டியது.அது வரவேற்கப் படவேண்டியதே!.

லோகாயுக்தா என்பது மாநில அரசின் நிர்வாகத்தில் லஞ்சத்தைத் தடுப்பதற்கான விதிமுறைகளைக் கொண்டது. ஆனால் அதை அமல்படுத்தினால் மாநில அரசுகளின் உரிமைகளில் மத்திய அரசு தலையிடுவதாக மாறிவிடும் என்று மாநிலக் கட்சிகள் கூச்சலிடுகின்றன. ஆனால், அரசியல் சட்டப் பிரிவு 253 விதிப்படி, அவ்வாறு செய்வதற்கு தனக்கு அதிகாரம் இருப்பதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால் சட்டப் பிரிவு 252 விதிப்படி, லோகாயுக்தாவை நிறைவேற்றலாம் என்று பாஜக உள்ளிட்ட சில எதிர்கட்சிகள் கோரிக்கை வைக்கின்றன.

சட்டப் பிரிவு 253 ன் கீழ், சர்வதேச சட்டங்களை நாடு முழுவதும் நிறைவேற்றலாம் என்கிறது மத்திய அரசு. அதற்கு மத்திய அரசு சொல்கிற காரணம் என்னவென்றால், லஞ்சத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு வேண்டிய சட்டத்தை, ஐ. நா. வில் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்ததத்தின் அடிப்படையில் கொண்டுவரலாம் என்பதே. ஆனால், ஐ. நாவில் போடப்பட்ட ஒப்பந்தத்திற்கும் லோக் ஆயுக்தாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

சட்டப் பிரிவு 252 விதிப்படி, இரண்டுக்கும் மேற்பட்ட மாநில அரசுகளின் வேண்டுகோளுக்கு இணங்க, மத்திய அரசு சில பொதுவான சட்டங்களை மாநில அரசுகளுக்காக நிறைவேற்றலாம் என்கிறது. அவ்வாறு உருவாக்கப்படுகிற சட்டங்களை, அம்மாநில அரசுகள் சட்டமன்றத்தில் வாக்கெடுப்பில் வெற்றி பெற்று நிறைவேற்றிக் கொள்ளலாம் என்கிறது.

சட்ட விதி 253 உடன் ஒப்பிடும் போது 252 பரவாயில்லை. சட்ட விதி 253 மற்றும் 252 இரண்டையுமே எந்த மாநிலக் கட்சிகளும் ஏற்றுக் கொள்ளக் கூடாது. சட்ட விதி 253 ஐ நாம் இப்போது அனுமதித்தால், இன்னும் பல சட்டங்களை மத்திய அரசு கையாள முற்படும். யார் சட்டத்தைக் கொண்டு வந்தால் என்ன என்ற கேள்வியே பெரும்பாலும் எல்லோராலும் முன்வைக்கப்படும். அதை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ளலாகாது. ஏனெனில், 356 சட்டப்பிரிவின் கீழ் மாநில அரசுகளைக் கலைப்பது, பஞ்சாயத்து ராஜ் என பல விடயங்களை தன் கைக்குள் வைத்திருந்த மத்திய அரசு இன்னும் பல சட்டங்களை நிறைவேற்ற முயற்சிக்கும். அது மாநிலக் கல்வி திட்டத்தில் இருக்கலாம். ஒவ்வொரு மாநிலத்திலும் தொழில் நுட்பக் கல்லூரிகள் மத்திய அரசு ஒப்புதலோடு திறக்க வேண்டும் என்று சட்டத் திருத்தம் கொண்டுவரப்படலாம். காவல் துறை, மத்திய அரசு கட்டுப்பாட்டுக்குள் வரவேண்டும் என்று புதுப்புது சட்டங்களை உருவாக்கலாம்.

சட்ட விதி 252 சரி என்றால் மாநில அரசுகள் சில சட்டத்திருத்தங்கள் கொண்டுவரவோ, நிராகரிக்கவோ முடியாமல் போகலாம். சில நேரங்களில் ஒருவேளை மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இணக்கமான சூழ்நிலை இல்லாதபோது, எந்த மாற்றத்தையும் மாநில அரசால் ஏற்படுத்த முடியாது. ஏனெனில், அவ்வாறு சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டுமானால் மீண்டும் மத்திய அரசின் ஒப்புதலோடுதான் கொண்டு வர இயலும். ஒருவேளை இரு அரசுகளும் எதிரெதிர் அணியில் இருந்தால், மாநில அரசால் எதுவும் செய்ய இயலாத ஒரு சூழ்நிலை உருவாகும்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் காங்கிரஸ் மாநில அரசின் உரிமைகளைத் தன் கையில் வைத்துக் கொள்ளத் துடிக்கிறது. அவ்வாறிருந்தால் மட்டுமே, பல மாநில அரசுகள் எதிர்காலத்தில் தன் கட்டுக்குள் வரும் என்று கணக்குப் போடுகிறது. பாஜக, காங்கிரஸ் போல அரசாணையில் அமர்வதில் பல சிக்கல்கள் இருப்பதால், அது சற்று நழுவி சட்ட விதி 252 ஐ கையில் எடுக்கிறது. இவ்விடயத்தில் மாநில அரசுகள் ஒருபோதும் தங்கள் உரிமையை விட்டுக் கொடுக்கக் கூடாது. தங்களுக்குத் தேவையான சட்டங்களைத் தாங்களே உருவாக்க முயல்வதில் தவறேதும் இல்லை.

கூட்டாட்சி தத்துவம் இருப்பதால் காங்கிரஸ் இன்று சற்றேனும் அடக்கி வாசிக்கிறது. ஹசாரே அணியினர் தங்களுடைய முக்கியக் கோரிக்கையாக லோகாயுக்தாவை லோக்பால் சட்டத்தோடு கொண்டு வர வேண்டும் என்று அர்த்தமில்லாமல் கோருவது வேடிக்கையே! ஹசாரே குழுவினரும் தங்கள் பங்குக்கு மற்ற கட்சிகளை அதிகம் பழிக்காமல் எல்லாவற்றுக்கும் காரணம் காங்கிரஸ் என்று தங்கள் அரசியலை செவ்வனே நகர்த்தும்.

எது எப்படியோ, மாநிலக் கட்சிகளின் தயவில்லாமல் இன்று எந்த தேசியக் கட்சியும் ஆட்சி செய்ய இயலாது என்பதால், லோகாயுக்தாவைக் கொண்டு வருவது எளிதல்ல. மத்திய அரசு சட்டங்களின் மூலமாக அதிகாரத்தை கைப்பற்ற முற்படுமேயானால், ஒருநாள் அது இந்திய ஒற்றுமையைக் குலைக்கும் என்பதில் ஐயமில்லை. பாரதத்தின் நலனுக்கும் அது உகந்தது அல்ல.

0

லஷ்மண பெருமாள்

நானாவதி கொலை வழக்கு

பெண்களால் தான் உலகில் பாதி பிரச்சனை! பொதுவாக கொலைக்கான காரணங்களைப் பார்த்தால் அது ஒரு பெண் சம்மந்தப்பட்டதாகத்தான் இருக்கும். சில்வியாவால் ஒருவன் கொலை செய்யப்பட்டான், மற்றொருவன் சிறைக்குச் சென்றான். கொலை செய்தவன் கவாஸ் மெனக்ஷா நானாவதி (சுருக்கமாக நானாவதி). கொலை செய்யப்பட்டவன் பிரேம் பகவான்தாஸ் அகுஜா (சுருக்கமாக அகுஜா). இந்தக் கொலை வழக்கு விசாரணை நடைபெற்றது 1959 ஆம் ஆண்டு. அந்த சமயத்தில் நானாவதி மற்றும் அகுஜா என்ற பெயர்கள் நாடு முழுவதும் பிரபலம். எந்த அளவுக்கு என்றால், அகுஜா டவல் துண்டுகளும், நானாவதி விளையாட்டு கைத் துப்பாக்கிகளும் சந்தையில் அமோகமாக அன்று விற்பனையாயின.

இந்த வழக்கு விசாரணைக்குப் பிறகுதான் இந்திய அரசாங்கம் ஜூரி முறையை (நடுவர் குழு முறையை) ரத்து செய்தது. கொலையுண்ட அகுஜா சிந்தி சமுதாயத்தை சேர்ந்தவன். கொலை செய்த நானாவதி பார்சி சமுதாயத்தை சேர்ந்தவன். வழக்கு விசாரணையின் போதும் சரி, அதற்கு பிறகும் சரி உயர் மட்ட அரசியல் தலையீடுகள் இருந்தன. அன்றைய பாரதப் பிரதமர் நேரு, பாம்பே ஆளுநர் விஜயலட்சுமி பண்டிட் (இவர் நேருவின் சகோதரி) போன்றவர்கள்கூட தலையிட வேண்டிய அவசியம் நேரிட்டது. போதாக்குறைக்கு பாம்பே உயர் நீதிமன்றத்துக்கும் மும்பை மாகாண சட்டசபைக்கும் மோதல் நடக்காத குறை.

யார் இந்த சில்வியா? அவள் ஒரு வெள்ளைக்காரப் பெண். அழகானவள். நானாவதி கப்பல் படைத் தளபதி. அவனும் பார்ப்பதற்கு மன்மதன் மாதிரி தான் இருப்பான். அதுவும் அந்த ராணுவ சீருடையில் நானாவதி ரொம்பவும் கம்பீரமாக இருப்பான். கப்பல் படையில் முக்கியமான பொறுப்பில் இருந்தான். அதனால் இந்திய ராணுவ அமைச்சகத்தின் உயர் மட்டக் குழுவில் இடம் பெற்றிருந்தான். ராணுவ அமைச்சர் கிருஷ்ண மேனன் லண்டன் சென்ற போது நானாவதியும் சென்றான். நானாவதி வகித்திருந்த உயர் பதவியின் காரணமாக நேரு குடும்பத்தாரிடம் பழக்கம் ஏற்பட்டது. பின்பு அது நட்பாக மாறியது.

இப்படியிருந்த சூழ்நிலையில் தான் உத்தியோக நிமித்தமாக லண்டனுக்கு சென்ற நானாவதிக்கு சில்வியாவின் அறிமுகம் கிடைத்தது. 18 வயதான சில்வியா, 24 வயதான நானாவதியை சந்தித்தார். சினிமாவில் வருவது போல் சந்திப்பு காதலாக மாறியது. நானாவதி தன்னுடைய ராணுவப் பணியின் போது கடல் பிரயாணத்தில், தான் சந்தித்த வீர தீர சாகசங்களையெல்லாம் சொல்லக் கேட்ட சில்வியா சிலிர்ப்புற்றாள். நானாவதி இந்தியா திரும்பும் முன்னர், சில்வியாவிடம் தன்னை கல்யாணம் செய்து கொள்வாயா என்று கேட்டான். சம்மதம் தெரிவித்த சில்வியாவுக்கும் நானாவதிக்கும் இங்கிலாந்தில் எளிமையான முறையில் பதிவுத் திருமணம் நடைபெற்றது.

நானாவதி, சில்வியா திருமணம் 1949 ஆம் ஆண்டு நடைபெற்றது. திருமணம் நடந்த கையோடு புது மணத் தம்பதியினர் இந்தியாவுக்குத் திரும்பினர். பம்பாயில் குடி புகுந்தனர். நானாவதி, சில்வியா தம்பதிக்கு மூன்று குழந்தைகள் பிறந்ததன. இரண்டு ஆண் குழந்தைகள். ஒரு பெண் குழந்தை. இந்நிலையில், நானாவதி-சில்வியா தம்பதியரின் அமைதியான வாழ்க்கையில் அகுஜா என்ற புயல் வீச ஆரம்பித்தது.

அகுஜா! இவன் ஒரு பணக்காரன். யுனிவர்சல் மோட்டார் நிறுவனத்தின் மேலாளர். அந்நாளைய ரோமியோ. மிடுக்கான தோற்றம், பெண்களைக் கவரும் வசீகரப் பேச்சு. பெண்களுக்கு ஏதாவது ஒரு சிக்கல் என்றால் இவனுக்குத் தாங்காது. பெண்களுடைய கஷ்டத்தைக் காதுகொடுத்து கேட்பான். இதைத்தான் பல ஆண்கள் தங்கள் மனைவியுடன் செய்ய தவறி விடுகின்றனர். இவனுடைய கரிசனத்தை பார்த்த பெண்கள் கரைந்து போய் உருகி விடுவர் அல்லது உருகிப் போய் கரைந்து விடுவர்.

அகுஜாவின் முக்கிய வேலையே பார்ட்டிக்கு போவதுதான். அதுவும் பெரிய இடத்துப் பார்ட்டிகள். முக்கியமாக ராணுவத்தினருக்காக நடக்கும் விருந்துகள். அங்கு தான் அகுஜாவுக்கு பல ராணுவ அதிகாரிகளின் மனைவிகளைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் சில பேரிடம் அவனுக்கு நெருங்கிய தொடர்பும் கிடைத்ததாகச் சொல்லப்படுகிறது. அப்படித்தான் அகுஜாவுக்கு சில்வியாவுடனான சந்திப்பு ஏற்பட்டது. அகுஜாவும் நானாவதியும் சுமார் 10 வருடங்களுக்கு மேலாக நண்பர்கள். நானாவதி, சில்வியா, அகுஜா, அகுஜாவின் சகோதரி மாமேயி அனைவரும் ஒன்றாகச் சுற்றித் திரிந்தனர். உல்லாசமாக காலத்தை கழித்தனர்.

நானாவதியின் துரதிர்ஷ்டம் அவனால் தொடர்ந்து குடும்பத்துடன் இருக்க முடியாது. அவனுடைய உத்தியோகம் அப்படி. வருடத்தில் பாதி மாதங்கள் அவன் ராணுவக் கப்பலில் இருந்தாக வேண்டும். விடுமுறை நாட்களில் தான் அவன் குடும்பத்தாருடன் இருக்க முடியும். சில்வியாவோ தன்னுடைய சொந்த நாட்டை விட்டு விட்டு தனக்கு பரிச்சயம் இல்லாத வேறொரு நாட்டில் குடி புகுந்திருக்கிறார். கணவன் தான் தனக்கு சொந்தம், கணவன் இல்லாத சமயத்தில் தன்னுடைய சுற்றம் வெறிச்சோடியிருக்கும். அவரச ஆபத்துக்குக் கூட ஆறுதல் சொல்ல சொந்தம் கிடையாது. இந்தச் சூழ்நிலையை உணர்ந்து கொண்ட அகுஜா சந்தர்ப்பத்தை தனக்கு சாதமாக பயன் படுத்திக் கொண்டான். சில்வியாவுடன் நட்பாகப் பழகினான். நட்பு சில நாட்களில் காதலாக மாறியாது. இருவரும் நானாவதி இல்லாத சமயத்தில் கணவன் மனைவி போல் வாழ்ந்தனர். அகுஜா இல்லாமல் தன்னால் வாழவே முடியாது என்ற நிலைக்கு ஆளானாள் சில்வியா. அகுஜாவிடம் நானாவதியை விவாகரத்து செய்துவிட்டு அவனுடன் வந்துவிடுவதாக சொன்னாள். தன்னை கல்யாணம் செய்து கொள்ளும்படி வேண்டிக் கொண்டாள், வற்புறுத்தினாள்.

அகுஜா இப்பொழுது பின் வாங்கினான். சில்வியாவை சமாதானப் படுத்தினான். நாம் ஒரு மாத காலம் சந்திக்காமல் இருக்கவேண்டும். அப்படியிருந்தால் தான் நம்முடைய உண்மையான காதல் வெளிப்படும் என்று ஏதோ சாக்கு போக்கு கூறினான். அப்பொழுதுதான் சில்வியாவுக்கு உண்மை புரிந்தது. தான் ஏமாந்து விட்டோம் என்று உணர்ந்தாள்.

சிறிது நாட்களில் தன்னுடைய விடுமுறை நாட்களை குடும்பத்தாருடன் செலவிட வீடு திரும்பினான் நானாவதி. வீட்டுக்கு வந்த நானாவதிக்கு சில்வியாவின் செயல்பாடும் பேச்சும் ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. சில்வியாவிடம் பெரும் மாறுதல். அவள் பட்டும் படாமல் இருந்தாள். நானாவதி, விஷயம் என்னவாக இருக்கும் என்று தெரிந்து கொள்ள சில்வியாவை தோண்டித் துருவினான். இறுதியாக சில்வியா நடந்த விவரத்தை நானாவதியிடம் தெரிவித்தாள்.

நானாவதி நடந்ததைக் கேட்டு மிகவும் வருந்தினான். தற்கொலை செய்து கொள்ளப் போவதாக சில்வியாவிடம் தெரிவித்தான். நீ தப்பு எதுவும் செய்யாத போது எதற்காக தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று கூறி நானாவதியை ஆசுவாசப்படுத்தினாள் சில்வியா. நிலைமையை உணர்ந்து கொண்ட நானாவதி நடைமுறைக்கு சாத்தியமான ஒரு முடிவை தீர்மானித்தான்.

சில்வியாவையும், குழந்தைகளையும் சினிமா தியேட்டருக்கு அழைத்து சென்றான். அவர்களை அங்கு படம் பார்க்கச் சொல்லிவிட்டு வெளியே சென்றான். அவன் எங்கே செல்கிறான் என்று சில்வியா கேட்டதற்கு, நீங்கள் படம் பார்த்து முடியுங்கள் நான் திரும்பி வந்து கூட்டிச் செல்கிறேன் என்று மட்டும் கூறி விட்டு தியேட்டரை விட்டுச் சென்றான்.

நானாவதி தன்னுடைய கப்பலுக்கு சென்றான். ஏதோ ஒரு காரணத்தை சொல்லி கப்பலின் ஆயுத கிடங்குக்குள் சென்றான். அங்கிருந்து ஒரு துப்பாக்கியை எடுத்துக் கொண்டான். மேலும் தேவையான அளவு தோட்டாக்களை எடுத்துக் கொண்டான். பின்னர் அவன் அகுஜாவின் அலுவலகத்துக்குச் சென்றான். நானாவதி சென்ற நேரம் மதிய வேளை. அகுஜா அங்கு இல்லை. அகுஜா வீட்டுக்குச் சென்றுவிட்டதாக அவனுடைய சிப்பந்தி தெரிவித்தான். நானாவதி அகுஜா வீட்டிற்குச் சென்றான். அகுஜா அப்போதுதான் குளித்து விட்டு, டவலுடன் குளியலறையிலிருந்து வெளியே வந்தான்.

நீ சில்வியாவை திருமணம் செய்து கொண்டு அவளது குழந்தைகளை பார்த்துக் கொள்வாயா என்று நானாவதி அகுஜாவைப் பார்த்துக் கேட்டான். என் கூட படுத்திருந்த ஒவ்வொரு பெண்ணையும் நான் கல்யாணம் செய்து கொள்ள முடியுமா என்று பதிலுக்கு கேட்டான் அகுஜா. அங்கு உடனே துப்பாக்கிச் சத்தம் கேட்டது. இரண்டு நொடிகளுக்குள்ளாக மூன்று தோட்டாக்கள் அகுஜாவின் உடலில் பாய்ந்தது. அகுஜா உயிரிழந்தான். அகுஜா கொலை சம்பவத்தின் போது நானாவதி, அகுஜாவைத் தவிர அந்த இடத்தில் வேறு யாரும் இல்லை.

நானாவதி கப்பல் படையில் தன்னுடைய தலைமை அதிகாரியைச் சந்தித்து தான் ஒரு கொலை செய்து விட்டதாக தெரிவித்தான். அந்த அதிகாரி காவல் துறையினரிடம் சரண் அடையுமாறு கூறினார். நானாவதி மும்பை காவல் துறை துணை ஆணையரிடம் நடந்த விவரத்தை தெரிவித்து சரண் அடைந்தான். காவல் துறை வழக்குப் பதிவு செய்து, மும்பை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தது.

நீதிமன்றத்தில் நீதிபதி ரதிலால் பாய்சந்த் மேத்தா, நானாவதியைப் பார்த்து நீ உன் மீது சாட்டப்பட்ட குற்றத்தை ஒப்புக் கொள்கிறாயா என்று கேட்டதற்கு, நானாவதி நான் குற்றம் இழைக்கவில்லை என்று கூறினான். விசாரணை ஆரம்பமானது. நானாவதி கொலை வழக்கில், 9 நபர் கொண்ட ஜூரி (நடுவர் குழு) அமைக்கப்பட்டது. நானாவதி கோபம் தூண்டப்பட்டு ஆத்திரத்தால் அறிவை இழந்து சந்தர்ப்ப வசத்தால் அகுஜாவை கொலை செய்தானா (Culpable homicide not amounting to murder) அல்லது அகுஜாவை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் திட்டமிட்டு கொலை (Preplanned murder) செய்தானா என்று ஜூரி முடிவு செய்ய வேண்டும். நானாவதி சந்தர்ப்ப வசத்தால் கொலை செய்தான் என்று முடிவு செய்யப்பட்டால் அவனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும் (இ.பி.கோ 304 ஆம் பிரிவு). திட்டமிட்டு கொலை செய்தான் என்று முடிவானால் நானாவதிக்கு தூக்குஙம தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும் (இ.பி.கோ 302 ஆம் பிரிவு).

அரசுத் தரப்பில் நானாவதி திட்டமிட்டுதான் அகுஜாவை கொலை செய்தான் என்ற வாதம் முன் வைக்கப்பட்டது. இல்லை நானாவதி சந்தர்ப்பவசத்தால் தான் அகுஜாவை கொலை செய்தான் என்று அவனுக்கு ஆஜரான வழக்கறிஞர்கள் வாதாடினர். கரல் கண்டல்வாலா என்ற பார்சி வழக்கறிஞர் நானாவதிக்காக ஆஜரானார். பிரபல குற்றவியல் வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி அரசு தரப்புக்கு ஆதரவாக வாதாடினார். விசாரணை முடிந்த பிறகு ஜூரி 8:1 என்ற விகிதத்தில் நானாவதி குற்றமற்றவர், நிரபராதி என்ற அதிரடி தீர்ப்பை வெளியிட்டது.
அமர்வு நீதிபதி ஜுரியின் முடிவை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக அவ்வழக்கை பாம்பே உயர் நீதிமன்றத்தின் ஆலோசனை வேண்டி அனுப்பி வைத்தார்.

பாம்பே உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் பின்வரும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அமர்வு நீதிபதி, ஜூரிக்கு வழக்கு விசாரணையில் தகுந்த முறையில் வழிகாட்டவில்லை.

1. குறிப்பாக அகுஜாவை சுட்டது தற்செயலான விஷயம்தான், அது திட்டமிட்டு செய்யப்படவிலை என்று நிரூபிக்க வேண்டியவன் நானாவதி. ஆனால் அவன் அதைச் செய்யவில்லை.

2. அகுஜாவை கொல்வதற்கு, நானாவதிக்கு சந்தர்ப்பவச தூண்டுதல் எப்பொழுது ஏற்பட்டது? சில்வியா நானாவதியிடம் உண்மையை சொன்ன போதா அல்லது நானாவதி அகுஜாவை அவனுடைய இல்லத்தில் சந்தித்தப் போதா?

3. அமர்வு நீதிபதி, ஜூரிக்கு வழக்கு விசாரணை ஆரம்பிக்கும் தருவாயில் தூண்டுதல் (Provocation) என்பது சந்தர்ப்பவசத்தால் குற்றம் இழைக்கத் தூண்டும் காரணி கொலை செய்தவரிடமோ அல்லது கொலை செய்யப்பட்டவரிடமோ தான் வரவேண்டிய அவசியம் இல்லை மூன்றாவது நபரிடமிருந்து கூட வரலாம் என்று தவறாக வழிகாட்டியுள்ளார்.

4. நானாவதி குற்றவாளி இல்லை என்று நியாயத்துக்குட்பட்ட ஒரு சாதரண மனிதனுக்குக் கூட ஐயம் திரிபுர நிரூபிக்கப்பட வேண்டும்.

இவை நான்கும் ஜூரியின் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என்று வாதிடப்பட்டது. அரசுத் தரப்பு வாதத்தில் நியாயம் இருப்பதை உணர்ந்த உயர் நீதிமன்றம், ஜூரியின் முடிவைத் தள்ளுபடி செய்ததோடு மட்டுமல்லாமல் வழக்கை மறுவிசாரணை செய்ய, தானே முன் வந்தது. ஊடகத்தில் வரும் செய்திகளுக்கும் பொது மக்களின் கருத்துக்கும் ஆட்பட்டு ஜூரி முடிவெடுப்பதால் வழக்குகளில் நியாயமான தீர்ப்பு கிடைப்பதில்லை என்று முடிவு செய்த இந்திய அரசு நானாவதி வழக்குக்குப் பிறகு ஜூரி முறையை ரத்து செய்தது.

பாம்பே உயர் நீதிமன்றத்தில் நானாவதி தரப்பிலிருந்து, சந்தர்ப்பவசத்தால்தான் கொலை நிகழ்ந்துள்ளது என்பதற்கு பின் வரும் வாதம் முன்வைக்கப்பட்டது. நானாவதி அகுஜாவை அவனது இல்லத்தில் சந்தித்து, சில்வியாவை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டான். அதற்கு அவன் தன் கூட படுத்திருந்த பெண்களை எல்லாம் தான் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறியபடியே,  காக்கி கவரில் வைத்து கொண்டு வந்திருந்த துப்பாக்கியை எடுக்க எத்தனித்தான். அதை யூகித்துக்கொண்ட நானாவதி அகுஜாவை தடுப்பதற்காக முயன்றபோது எதிர்பாராத விதமாக துப்பாக்கி சூடு நிகழ்ந்து விட்டது. அகுஜா உயிரிழந்தான்.

அரசுத் தரப்பு மறுத்தது. நானாவதிக்கும் அகுஜாவுக்கும் துப்பாக்கியைப் பிடுங்குவதில் சண்டை ஏற்பட்டிருந்தால், அகுஜா இடுப்பில் கட்டியிருந்த துண்டு கீழே அவிழ்ந்து விழுந்திருக்கும். ஆனால் அப்படி ஒன்றும் நிகழவில்லை. சில்வியா தனக்கும் அகுஜாவுக்கும் ஏற்பட்ட உறவை பற்றி சொல்லிய பிறகும் எந்த வித சலனுமும் இல்லாமல், தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளை சினிமா தியேட்டரில் கொண்டு விட்டு, தன்னுடைய கப்பலுக்குச் சென்று ஆயுத கிடங்கிலிருந்து போலியான காரணத்தை சொல்லி அங்கிருந்து கைதுப்பாக்கியையும் தேவையான தோட்டாக்களையும் எடுத்துக் கொண்டு நிதானமாக அகுஜாவின் வீட்டுக்கு நானாவதி சென்றுள்ளான். மேலும் அகுஜாவின் வேலைக்காரர், சம்பவம் நடந்த இடத்திலிருந்து மூன்று தோட்டாக்கள் காலதாமதமின்றி அடுத்தடுத்து சுடப்படும் சத்தம் கேட்டதாகவும் தன்னுடைய சாட்சியத்தில் தெரிவித்துள்ளான். அகுஜா சுடப்பட்ட பிறகு நானாவதி அகுஜா வீட்டிலிருந்து செல்லும்போதுகூட, அங்கிருந்த அகுஜாவின் சகோதரியிடம் நடந்தது விபத்து என்று கூட தெரிவிக்காமல் சென்றுவிட்டிருக்கிறான். கப்பல் படை தலைமை அதிகாரியிடமும், காவல் துறை துணை ஆணையரிடமும் நான் தான் அகுஜாவைக் கொன்றேன் என்று வாக்குமூலம் அளித்திருக்கிறான். இந்தச் செயல்களை வைத்து பார்க்கும்பொழுது நானாவதி சந்தர்ப்பவசத்தால் அகுஜாவைக் கொன்றிருக்கிறான் என்று எப்படி சொல்லமுடியும்?

அரசுத் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம் நானாவதியை குற்றவாளி என்று அறிவித்து, ஆயுள் தண்டனை அளித்தது. நானாவதி உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தான். இதற்கிடையில் பாம்பே மாகாண ஆளுநரான விஜயலட்சுமி பண்டிட், நீதிமன்றத் தீர்ப்பை தாற்காலிகமாக நிறுத்தி வைத்து, அவனை கப்பல் படையின் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார். இச்செயல் நீதிமன்றத்துக்கும் அரசாங்கத்துக்கும் இடையே ஒரு பூசலை ஏற்படுத்தியது. இறுதியில் மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றமும் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது. நானாவதி சிறையில் அடைக்கப்பட்டான்.

நானாவதிக்கு மக்கள் ஆதரவு இருந்தது. மக்கள் நானாவதி செய்தது சரியே என்ற கருத்தைக் கொண்டிருந்தனர். கூடவே நானாவதிக்கு அரசியல் செல்வாக்கும் இருந்தது. இதன் காரணமாக நானாவதிக்கு கருணை அடிப்படையில் விடுதலை அளிக்க எத்தனித்தது இந்திய அரசு. ஆனால் அப்படி விடுதலை செய்தால் சிந்தி சமுதாயத்தைப் (அகுஜா சிந்தி சமுதாயத்தை சேர்ந்தவன்) பகைத்துக் கொள்ள வேண்டியிருக்கும் என்று செய்வதறியாமல் கையை பிசைந்து கொண்டிருந்தது. முடிவாக அரசாங்கத்துக்கு ஒரு யோசனை தோன்றியது.

பாய் பிரதாப் ஒரு சிந்திக்காரர். இவர் ஒரு வியாபாரி. முன்னாள் சுதந்திர போராட்ட வீரரும் கூட. இவர் தன்னுடைய வர்த்தகத்துக்காக அரசாங்கத்தில் கொடுக்கப்பட்ட ஏற்றுமதி உரிமத்தை துஷ்பிரரோயகம் செய்திருக்கிறார். அதன் காரணமாக நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த பாய் பிரதாப்பை தண்டனை காலம் முடிவதற்கு முன்னரே விடுதலை செய்வதன் மூலம், நானாவதியை விடுதலை செய்வதில் ஏற்படும் சிந்தி சமுதாயத்தினரின் எதிர்ப்பை சமாளித்துவிடலாம் என்று இந்திய அரசாங்கம் முடிவெடுத்தது.

நானாவதி சிறைக்குச் சென்று மூன்றாண்டுகள் தான் ஆகியிருக்கும். நானவதியும், பாய் பிரதாப்பும் ஒரு சேர 1963 ஆம் ஆண்டு அரசாங்கத்தால் விடுதலை செய்யப்பட்டு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். விடுதலையான பிறகு நானாவதி, மனைவி சில்வியா மற்றும் 3 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு இந்தியாவை விட்டு விட்டு கனடா நாட்டில் குடி புகுந்தான்.

நானாவதியின் கொலை வழக்கை மையமாக வைத்து, மக்கள் அதை மறக்காமல் இருக்க அவ்வப்பொழுது திரைப்படங்களும், புத்தகங்களும் வெளியிடப்பட்டு வருகின்றன.

0

S.P. சொக்கலிங்கம்

பகூர் கொலை வழக்கு

சமீபத்தில் வெளியான ஏழாம் அறிவு படத்தில் டோங் லீ என்ற வில்லன், தெருநாய்க்கு ஒரு ஊசியை போட்டு, அதன் மூலம் தொற்று வியாதியை பரப்பி பல உயிர்களைப் பலி வாங்குவான். இந்தத் தொற்று வியாதியின் சிகிச்சைக்கான மருந்து சீனர்களிடம் இருக்கும். இந்தியாவில் இறந்து கொண்டிருப்பவர்களைக் காப்பாற்ற வேண்டுமானால், அதற்கு சீனாவின் உதவி தேவை. சீனா உதவி செய்யவேண்டும் என்றால், இந்தியா சீனாவுக்கு அடிமையாக இருக்க வேண்டும். இது போன்று நுண்ணுயிரிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தி, ஒருவர் தனக்கு வேண்டியதை சாதித்து கொள்வதைத்தான் ஆங்கிலத்தில் Biological Warfare என்று அழைக்கிறார்கள்.

நுண்ணுயிரிகளைக் கொண்டு தாக்குதல் புரிவது இன்று நமக்கு பரிச்சயமான விஷயம். ஆனால் நுண்ணுயிரியைக் கொண்டு ஒருவர் இந்தியாவில் நிஜமாகவே கொல்லப்பட்டிருக்கிறார். அதுவும் எப்போது தெரியுமா? சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்னர். என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா?

பகூர் என்பது ஓர் ஊரின் பெயர். ஊர் என்று சொல்வதைவிட, அது ஒரு பெரிய ஜமீன் என்று சொல்வது சரியாக இருக்கும். ஆங்கிலேயர்கள் ஆட்சியில், வங்காள மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது பகூர். இந்த ஜமீனை நிர்வகித்து வந்தவர்கள் பகூர் ராஜா வம்சத்தவர்கள். பகூர் ஒரு காலத்தில் முகலாயர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. இப்பொழுது ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம்.

பகூரை நிர்வகித்து வந்த ராஜா 1929ஆம் ஆண்டு இறந்துபோனார். அவருக்கு இரண்டு மகன்கள். ஒருவன் பெயர் பினயேந்திரநாத் பாண்டே, வயது 29. இன்னொருவன் அமரேந்திரநாத் பாண்டே, 16 வயது. இவர்கள் இருவருக்கும் தந்தை ஒருவரே என்றாலும் தாய் வெவ்வேறானவர்கள். இந்நிலையில் தந்தை இறந்த பிறகு, ஜமீன் சொத்துக்கு இருவரும் அதிபதியாகி விட்டனர். ஆனால் அமரேந்திரா மைனராக இருந்ததால், பினயேந்திரா ஜமீனை நிர்வகித்து வந்தான்.

பினயேந்திராவின் போக்கு சரியில்லை. எப்பொழுதும் குடியும் கும்மாளமுமாக இருந்தான். அவனுக்கு நாட்டியக்காரி பாலிக்கபாலாவின் தொடர்பு வேறு இருந்தது.  கேட்கவா வேண்டும்?பினயேந்திராவுக்கு அதிகமாக பணம் தேவைப்பட்டது. அதனால் பல தில்லுமுல்லுகளில் ஈடுபட்டான். அமரேந்திராவுக்கு தெரியாமல் ஜமீன் சொத்துகளை விற்றான். இதனால் அமரேந்திராவுக்கும் பினயேந்திராவுக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டது. ஆனால் அமரேந்திராவால் ஒன்றும் செய்யமுடியவில்லை. காரணம் அவன் மைனர்.

1931 ஆம் ஆண்டு அமரேந்திரா மேஜர் ஆகிவிட்டான். குடும்பத்தார் அனைவரும் அமரேந்திராவுக்கு ஆதரவாக இருந்தனர். குறிப்பாக அமரேந்திராவின் அத்தை, ராணி சுரவதி. அவள் டியோகர் ராஜ்ஜியத்தின் ராணி. அவளுக்கும் நிறைய சொத்து இருந்தது. அவளுடைய சொத்திலும் சகோதரர்களுக்கு பின்னடை உரிமை (Reversionary Interest) இருந்தது. அதாவது சுரவதிக்குப் பிறகு அவளுடைய சொத்துகள் சகோதரர்கள் இருவருக்கும் வந்து சேரும்.

மேஜரானதும் அமரேந்திரா ஜமீன் சொத்து தொடர்பாக, பல நபர்களுக்கு பகர அதிகாரப் பத்திரத்தை (Power of Attorney) எழுதிக்கொடுத்தான். இதன் பொருட்டு மறுபடியும் சண்டை மூண்டது.  அப்போது, சகோதரர்களுக்கிடையே சொத்தை பிரித்துக்கொள்வதற்கான பேச்சு முன்வைக்கப்பட்டது. ஆனால் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.

1932ஆம் ஆண்டு துர்கா பூஜை கொண்டாட்டத்தின் போது, அமரேந்திரா டியோகரில் உள்ள தன்னுடைய அத்தை வீட்டில் தங்கியிருந்தான். அப்போது அங்கு பினயேந்திரா ஒரு கம்பவுண்டருடன் (மருந்து கலந்து கொடுப்பவர்) வந்தான். பினயேந்திரா தன்னுடைய தம்பிக்கு ஆசையாக ஒரு மூக்கு கண்ணாடி வாங்கி வந்தது மட்டுமல்லாமல், அதை அவனே தன் தம்பிக்கு அணிவித்து விட்டான். என்ன ரொம்ப அழுத்தம் கொடுத்து மாட்டி விட்டான். அதனால் அமரேந்திராவிற்கு மூக்கில் இரத்தக் கசிவு ஏற்பட்டது. பின்னர் பினயேந்திரா சென்றுவிட்டான்.
சிறிது நாட்களில் அமரேந்திராவுக்கு கடும் ஜுரம் ஏற்பட்டது. டாக்டர் சவுரேந்திரநாத் முக்கர்ஜீ என்ற மருத்துவர் வரவழைக்கப்பட்டார். அவர் வந்து அமரேந்திராவை பரிசோதித்துவிட்டு அவனுக்கு டெட்டனஸ் காய்ச்சல் கண்டிருப்பதாகத் தெரிவித்தார். கூடவே, ஆண்ட்டி டெட்டனஸ் (anti tetanus serum) ஊசி போடப்பட்டது.

சுரவதி பினயேந்திராவுக்கு தந்தி கொடுத்தார். பகூரிலிருந்து குடும்ப மருத்துவரை அழைத்துவரச் சொன்னார். ஆனால் குடும்ப மருத்துவரை அழைத்துவராமல், தாராநாத் பட்டாஜார்ஜி என்று கல்காத்தாவிலிருந்து ஒரு மருத்துவரை பினயேந்திரா அழைத்து வந்தான். அழைத்து வந்ததோடு அல்லாமல், தாராநாத்தை சவுரேந்திரநாத்தின் உதவியாளராக வைத்துக்கொள்ளுமாறு வற்புறுத்தினான். ஆனால் சவுரேந்திரநாத் அதற்கு சம்மதிக்கவில்லை. மேலும் அமரேந்திராவுக்கு ஆண்ட்டி டெட்டனஸ் ஊசி போடவேண்டாம் என்று சவுரேந்திரநாத் வலியுறுத்தப்பட்டார். ஆனால் சவுரேந்திரநாத் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.
பினயேந்திரா விடவில்லை. இரண்டொரு நாள்களில் டாக்டர் துர்கா ரத்தன் தர் என்பவரை அழைத்து வந்து, சவுரேந்திரநாத் போடும் ஊசியுடன் ரத்தன் தர் கல்கத்தாவிலிருந்து கொண்டுவந்த ஊசியையும் அமரேந்திரநாத்துக்குப் போடும்படி வலியுறுத்தினான்.

டாக்டர் ரத்தன் தர் கொண்டுவந்த ஊசி அமரேந்திராவுக்கு போடப்பட்டது. இது போதாதென்று பினயேந்திரா, டாக்டர் சிவபாத பட்டாஜார்ஜி என்ற இன்னொரு மருத்துவரையும் அமரேந்திராவுக்கு மருத்துவம் அளிக்க அழைத்து வந்தான். ஆனால், சந்தேகம் அடைந்த குடும்பத்தார் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. இதற்கிடையில் டாக்டர் ரத்தன் தர் அமரேந்திராவுக்கு ஊசி போட்ட இடம் கட்டியாகி சீழ் பிடித்திருந்தது. அதற்கும் சேர்த்து அமரேந்திராவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எப்படியோ அமரேந்திரா 1933 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாத வாக்கில் உடல் நலம் தேரி உயிர் பிழைத்துக்கொண்டான். ஆனால் அமரேந்திராவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையால், அவனுடைய இதயம் பாதிக்கப்பட்டிருந்தது.

பினயேந்திரா தன்னுடைய பேரிலும், தன்னுடைய சகோதரன் பெயரிலும் வாரிசுரிமை சான்றிதழ் பெற்று, அதன் மூலம் அலகாபாத்தில் பகூர் ஜமீனுக்கு வரவேண்டிய 13,000 ரூபாய் பணத்தை தானே வசூல் செய்து கொண்டான். இந்தச் சம்பவம் நடந்தது 1933 ஆம் ஆண்டு ஜூன் மாதம். விவரம் அறிந்த அமரேந்திரா, ஜமீன் சொத்தில் தன்னுடைய உரிமையைப் பாதுகாத்துக்கொள்ள வழக்கறிஞர்களை ஆலோசித்தான். பினயேந்திராவின் மீது வழக்கு தொடர்ந்து, ஜமீன் சொத்தைப் பிரிக்கப்போவதாக அறிவித்தான். பினயேந்திரா, அமரேந்திராவிடம் வழக்கு வம்பெல்லாம் வேண்டாம், நாம் சமாதானமாக போய்விடலாம். ஜமீன் சொத்தை சரி சமமாக பிரித்துக் கொள்ளலாம் என்று தெரிவித்தான். சொத்தை பிரித்துக்கொள்ளும் பொருட்டு, நீதிமன்றத்தில் சமரச தீர்ப்பாணை (Compromise Decree) பெறுவதற்காக சகோதரர்கள் 17,000 ரூபாய் பணத்தை நீதிமன்றத்தில் கட்டினார்கள்.

இதற்கிடையில் பினயேந்திரா என்ன நினைத்தானோ, நீதிமன்றத்தில் செலுத்திய 17,000 ரூபாய் பணத்தைத் திரும்பிப் பெற, மனு தாக்கல் செய்தான். இதை அறிந்த அமரேந்திரா, நீதிமன்றம் பினயேந்திராவுக்கு பணத்தை திருப்பி கொடுக்கக் கூடாது என்று எதிர்மனு தாக்கல் செய்தான். சகோதரர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு முற்றியது. பினயேந்திரா சுரவதியிடம், பகூரில் இருந்து அமரேந்திராவை கல்கத்தாவுக்கு வரவழைக்கும்படி வற்புறுத்தினான். ஆனால் சுரவதி அதற்கு மறுத்திடவே, சுரவதி அழைப்பது போல் தானே அமரேந்திராவுக்கு ஒரு தந்தி அனுப்பி, அவனை கல்கத்தாவுக்கு அழைத்தான்.

கல்கத்தாவுக்கு வந்த அமரேந்திராவிடம் சொத்தைப் பிரிக்கும் விவகாரத்தை எடுத்தான் பினயேந்திரா. ஆனால் அமரேந்திரா சொத்தைப் பிரிப்பதைப் பற்றி கல்கத்தாவில் பேசவேண்டாம், பகூரில் பேசிக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டான்.
பின்னர் அமரேந்திரா தன்னுடைய சொந்தக்காரப் பெண்ணான ஜோதிர்மயி உடன், கல்கத்தாவில் உள்ள பூர்ணா தியேட்டரில் படம் பார்க்கக் சென்றான். அப்போது தியேட்டரின் வெளியே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில், உயரம் குறைவான மனிதன் ஒருவன் சுற்றிக்கொண்டிருந்தான். அவன் கருப்பான தோற்றத்துடன் இருந்தான். அவனுடைய முகம் அரைகுறையாக போர்வையால் மூடப்பட்டிருந்தது. அந்த மனிதனும் பினயேந்திராவும் ஒன்றாகவே காணப்பட்டனர்.

சுரவதியும் அமரேந்திராவும் கல்கத்தாவைவிட்டு புறப்படத் தயாராயினர். இந்த விவரத்தை அறிந்து கொண்ட பினயேந்திரா, அவர்களை வழியனுப்ப ஹவுரா ரயில் நிலையத்துக்கு வந்தான். அன்று நவம்பர் மாதம் 26 ஆம் தேதி, 1933 ஆம் வருடம். அமரேந்திராவையும் சுரவதியையும் வழியனுப்ப குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்களும் நண்பர்களும் ரயில் நிலையத்துக்கு வந்திருந்தனர். ஹவுரா ரயில் நிலையத்தில், பினயேந்திராவைப் பார்த்ததும் அனைவருக்கும் ஆச்சரியம். அமரேந்திரா ரயில் நிலையத்தில், பிளாட்பாரத்துக்குச் செல்வதற்காக உள்ளே நுழைந்தான். அப்போது அவனுடைய வலது கையில் சுரீர் என்று ஏதோ குத்தியதை உணர்ந்தான். அந்த சமயத்தில் அவனைத் தாண்டி ஒருவன் சென்றான். அவன் வேறு யாருமில்லை. பூர்ணா தியேட்டரில் சுற்றிக்கொண்டிருந்தவன்தான்.

அமரேந்திரா சட்டைக் கையை விலக்கி தன்னுடைய வலது கையைப் பார்த்தான். குத்தப்பட்ட அடையாளம் இருந்தது. அதை தன்னை வழியனுப்ப வந்தவர்களிடம் காட்டினான். அமரேந்திராவின் சொந்தக்காரர்களில் ஒருவனான கமலா பிரசாத் பாண்டே, இதில் ஏதோ சதி இருக்கிறது, நீ பகூருக்கு போகவேண்டாம். கல்கத்தாவில் ரத்தப் பரிசோதனை செய்து விடலாம் என்று அமரேந்திராவிடம் தெரிவித்தான். ஆனால் அதற்குள் அங்கிருந்த பினயேந்திரா கமலா பிரசாத்தைப் பார்த்து ஒன்றுமில்லாத ஒரு சிறிய விஷயத்தை ஏன் பெரிது படுத்தவேண்டும், பூச்சி ஏதாவது கடித்திருக்கும் என்று கூறிவிட்டு, அமரேந்திரா நீ புறப்படு என்று வழியனுப்பி வைத்தான் (ஒரே அடியாக வழியனுப்பி வைத்தான் என்றும் சொல்லலாம்).

பகூருக்குச் சென்ற அமரேந்திராவின் உறவினர்களுக்கு ஒரே கவலையாக இருந்தது. அதே சமயத்தில் கமலா பிரசாத்திடமிருந்து ஒரு அவசரக் கடிதமும் வந்தது. அதில் அவர், ஹவுரா ரயில் நிலையத்தில் நடந்த சம்பவம் தனக்கு தற்செயலாக நடந்ததாக தெரியவில்லை, இதில் சூழ்ச்சி ஏதோ இருப்பதாக தெரிகிறது. அதனால் அமரேந்திரா உடனே கல்கத்தா வந்து தன்னுடைய ரத்தத்தை பரிசோதனை செய்து கொள்ளவேண்டும் என்று வேண்டிக்கொண்டார். மற்றவர்களும் அதே கருத்தை கொண்டிருந்தனர். அதனால் அமரேந்திரா, நவம்பர் 26 ஆம் தேதி மறுபடியும் கல்கத்தா வந்திறங்கினான்.

கல்கத்தா வந்த அமரேந்திராவை, டாக்டர் நளினி ராஜன் சென் குப்தா சோதனை செய்தார். அமரேந்திராவின் கையில், Hypodermic needle என்னும் தோலுக்கு அடியில் கீழ்ப்புறமாக மருந்துபோட பயன்படுத்தப்படும் ஊசி குத்தப்பட்டிருப்பதாக தெரிவித்தார். டாக்டர் நளினி ராஜன், அமரேந்திராவை உடனே ரத்தப் பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார். நவம்பர் 30 ஆம் தேதி, அமரேந்திராவிடமிருந்து ரத்தம் எடுக்கப்பட்டு, Blood culture பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆய்வுக் கூடத்திலிருந்து பரிசோதனை அறிக்கை வருவதற்கு முன்னரே, அமரேந்திரா டிசம்பர் 4 ஆம் தேதி மரணமடைந்தார்.

அமரேந்திராவின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட ரத்தம் எலிகளுக்கு போடப்பட்டது. எலிகளுக்கு பபூனிக் பிளேக் (Bubonic plague) என்ற நோய் தோன்றியது. பிளேக் ஒரு கொடிய நோய். உலகம் முழுக்க பலரைக் கொன்றிருக்கிறது. அந்த சமயத்தில், கல்கத்தாவில் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்ததாக எந்தத் தகவலும் இல்லை. அமரேந்திரா பிளேக் நோயால் இறந்ததற்கு சுமார் 5 வருடங்களுக்கு முன்னர் ஒருவர் பிளேக் நோயால் இறந்ததாக, அரசாங்கக் குறிப்பில் இருந்தது. அமரேந்திரா பிளேக் நோய் தாக்கி இறந்திருக்கிறார் என்ற தகவல், சுகாதார துறைக்கு தெரிவிக்கப்பட்டது. அமரேந்திராவின் உடல் தகனம் செய்யப்பட்டது. ஈமக் காரியங்கள் செய்து முடிக்கப்பட்டன.

அமரேந்திராவின் உறவினர்களுக்கு, அமரேந்திராவின் சாவில் ஏதோ மர்மம் இருப்பதாகவே தோன்றியது. பல யோசனைகளுக்குப் பிறகு, அமரேந்திராவின் உறவினர் கமலா பிரசாத் பாண்டே, ஜனவரி 22 ஆம் தேதி, 1934 ஆம் ஆண்டு, காவல் துறை துணை ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்தார்.

வழக்கு, கல்கத்தா காவல் துறையின் துப்பறியும் பிரிவுக்கு மாற்றப்பட்டது. அப்போது துப்பறியும் அதிகாரியாக இருந்தவர் லெ பிராக் என்ற ஆங்கிலேயர். அவர் நன்கு அனுபவமுள்ள, கை தேர்ந்த துப்பறியும் நிபுணர். லெ பிராக்கின் விசாரணையில், ஆச்சிரியமூட்டும் பல புதிய தகவல்கள் கிடைத்தன.

அமரேந்திராவின் அண்ணனான பினயேந்திராவும் டாக்டர் தாராநாத்தும் நெருங்கிய நண்பர்கள். டாக்டர் தாராநாத்தின் மூலமாகத்தான் பினயேந்திராவுக்கு நாட்டியக்காரி பாலிகாம்பாவின் தொடர்பு ஏற்பட்டது. டாக்டர் தாராநாத் நுண்ணுயிரிகள் ஆராய்ச்சியில் நிபுணர்.

அமரேந்திரா பகூர் ஜமீன் சொத்து தொடர்பாக, பல பேருக்கு பவர் அதிகாரம் எழுதிக் கொடுத்த அதே நாளில், தாராநாத் மும்பையில் உள்ள Haffkine Institute-க்கு (இதை நிறுவியவர் ஒரு ரஷ்ய யூதர். இவரைப் பற்றியும், இவர் இந்த ஸ்தாபனத்தில் ஆற்றிய தொண்டைப் பற்றியும் தெரிந்து கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன!) ஓர் அவசர தந்தியை அனுப்பி, தன்னுடைய ஆராய்ச்சிக்கு, ஆய்வுக் கூடத்தில் வளர்க்கப்பட்ட உக்கிரமான பிளேக் கிருமி (virulent plague culture) வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

அந்த இன்ஸ்டிட்யூட், வங்காளத்தின் ஜெனரல் சர்ஜனின் அனுமதி இருந்தால் மட்டுமே, பிளேக் கல்ச்சரைத் தருவோம் என்று பதிலளித்தது.

தாராநாத், கல்கத்தாவில் டாக்டர் உகில் என்பவரை சந்தித்து, தான் பிளேக் நோய்க்கு மருந்து கண்டுபிடித்திருப்பதாகவும், அதை பிளேக் கல்ச்சர் கொண்டு சோதனை செய்யவிருப்பதாகவும், அதை டாக்டர் உகிலின் கீழ் அவருடைய ஆய்வுக் கூடத்திலே செய்ய வேண்டும் என்றும் தன்னுடைய விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறார். டாக்டர் உகிலும் தாராநாத்தை, தன்னுடைய ஆய்வுக் கூடத்தில் தனக்குக் கீழ் ஆராய்ச்சி செய்ய அனுமதித்தார். ஹாஃப்கைன் இன்ஸ்டிட்யூடிலிருந்து பிளேக் கல்ச்சர் வரவழைக்கப்பட்டது. ஆனால் அதை தாராநாத் தனியே பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை. உகிலின் ஆய்வுக் கூடத்தில், ஹாஃப்கைன் இன்ஸ்டிட்யூடிலிருந்து தருவிக்கப்பட்ட கல்ச்சரிலிருந்து மேலும் சில கல்ச்சர்கள் உருவாக்க முயற்சி செய்யப்பட்டது. ஆனால் ஒன்றும் ஒப்பேரவில்லை. அதனால் ஹாஃப்கைன் இன்ஸ்டிட்யூடிலிருந்து கொண்டுவரப்பட்ட கல்ச்சர் அழிக்கப்பட்டது.

தாரநாத் உகிலிடம் மீண்டும் ஒருமுறை பிளேக் கல்ச்சரை வைத்து ஆராய்ச்சி செய்யவேண்டும் என்று தன்னுடைய விருப்பத்தைத் தெரிவித்தார். ஆனால் அதற்கு உகில் ஒத்துக்கொள்ளவில்லை. அதற்கு பதிலாக உகில் தாரநாத்துக்காக, ஹாஃப்கைன் இன்ஸ்டிட்யூட்டுக்கு ஒரு சிபாரிசுக் கடிதம் கொடுத்து, டாக்டர் தாராநாத் தன்னுடைய கண்டுபிடிப்பு தொடர்பாக ஆய்வு செய்வதற்கு ஹாஃப்கைன் இன்ஸ்டிட்யூட் வசதி செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து பினயேந்திரா பம்பாய்க்கு கிளம்பிச் சென்றான். அங்கு ரத்தான் சலாரியா என்ற ஒரு கைடை (வழிகாட்டுபவர்) நியமித்துக் கொண்டான் (பின்னர் இந்த ரத்தான் சலாரியாதான் நீதிமன்றத்தில் பினயேந்திராவும் தாராநாத்தும் எங்கெங்கெல்லாம் சென்றார்கள் என்று சாட்சியம் அளித்தான்). ஹாஃப்கைன் இன்ஸ்டிட்யூடில் வேலை பார்த்த டாக்டர் நாயுடுவை தொடர்பு கொண்டான். தாராநாத்துக்கு வழங்கப்பட்ட சிபாரிசு கடிதத்தைக் காட்டினான். பினயேந்திரா, நாயுடுவிடம் தான் தன்னுடைய நண்பர் ஒருவரின் ஆராய்ச்சிக்கு ஒத்துழைக்கும் நோக்கில் பம்பாய்க்கு வந்திருப்பதாகவும் தெரிவித்தான். டாக்டர் நாயுடு, ஹாஃப்கைன் இன்ஸ்டிட்யூடின் இயக்குனரின் அனுமதி இல்லாமல் எந்த உதவியும் செய்யமுடியாது என்று திருப்பி அனுப்பிவிட்டார்.

சிறிது நாள்கள் கழித்து பினயேந்திரா மறுபடியும் பம்பாய்க்குச் சென்றான். இம்முறை லஞ்சம் கொடுத்தாவது, எப்படியாவது பிளேக் கல்ச்சரை வாங்கிவிட வேண்டும் என்று பிரயத்தனப்பட்டான். ஹாஃப்கைன் இன்ஸ்டிட்யூடில் வேலை பார்த்த டாக்டர் நாகராஜன் மற்றும் டாக்டர் சாத்தேவைச் சந்தித்தான். ஆனால் அவனால் ஒன்றும் சாதிக்க முடியவில்லை. இறுதியாக டாக்டர் நாகராஜன் மூலமாக, பாம்பே அர்தர் ரோடில் உள்ள தொற்று நோய் மருத்துவமனையில் பிளேக் கல்ச்சர் கிடைக்கும் என்று தகவல் கிடைத்தது. பினயேந்திரா, பாம்பே அர்தர் ரோடில் உள்ள தொற்று நோய் மருத்துவமனைக்குச் சென்றான். அங்கு மருத்துவமனை மேலதிகாரி டாக்டர் பாட்டேலைப் பார்த்து தன்னுடைய நண்பன் தாராநாத் தொற்று நோய் மருத்துவமனையின் ஆய்வுக்கூடத்தில் ஆராய்ச்சி செய்யும் அனுமதியை எப்படியோ பெற்றுவிட்டான். டாக்டர் பாட்டேல் தன்னுடைய உதவியாளரான டாக்டர் மேத்தாவிடம், கல்கத்தாவிலிருந்து வரும் டாக்டர் தாராநாத்துக்கு அனைத்து உதவிகளையும் செய்து தருமாறு உத்தரவிட்டார்.

தாராநாத் பாம்பே வந்து இறங்கினான். தாராநாத் கேட்டுக்கொண்டதன் பேரில் டாக்டர் மேத்தா, டாக்டர் பாட்டேலின் மூலம் ஹாஃப்கைன் இன்ஸ்டிட்யூட்டிலிருந்து பிளேக் கல்ச்சரை வரவழைத்தார். டாக்டர் மேத்தா, வரவழைக்கப்பட்ட பிளேக் கல்ச்சரிலிருந்து மாதிரிகளை எடுத்து தாரநாத்துக்கு கொடுத்தார். தாராநாத், அர்தர் ரோடு தொற்று நோய் மருத்துவமனை ஆய்வுக் கூடத்தை சுதந்திரமாக பயன்படுத்த அனுமதிக்கப்பட்டார். தாராநாத் தனக்கு கிடைத்த பிளேக் கல்ச்சரை வைத்து எலிகளுக்கு ஊசி போட்டார். எலிகள் செத்து மடிந்தன. பிறகென்ன! பினயேந்திராவும், தாராநாத்தும் எதற்காக பம்பாய் வந்தார்களோ, அந்த லட்சியம் ஈடேறிவிட்டது.

1933 ஆம் ஆண்டு, ஜூலை மாதம், 12 ஆம் தேதி தாராநாத்தும் பினயேந்திராவும், தங்களுக்கு தேவைப்பட்ட பிளேக் கல்ச்சரை எடுத்துக்கொண்டு கிளம்பினர். கிளம்பும் முன் டாக்டர் மேத்தாவிடம் ஏதாவது சொல்லியாக வேண்டுமே? தனக்கு கல்கத்தாவில் முக்கியமான அலுவல் வந்திருக்கிறது, அதை முடித்து விட்டு திரும்புவதாக தாராநாத் சொன்னான். கட்டாயமாக டாக்டர் பாட்டேலுக்கு தன்னுடைய நன்றியை தெரிவிக்கும்படி தாராநாத், டாக்டர் மேத்தாவை கேட்டுக்கொண்டான்.

போனவர்கள் போனவர்கள்தான். அப்புறம் பம்பாய் பக்கம் திரும்பியே பார்க்கவில்லை. பிளேக் நோய்க்கு மருந்தும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் பம்பாயைவிட்டு கிளம்புவதற்கு முன் பினயேந்திரா, தன்னுடைய ஆசைத் தம்பி அமரேந்திராவுக்காக 51,000 ரூபாய்க்கு ஆயுள் காப்பீடு பாலிஸி ஒன்றை எடுக்க முயன்றான். ஆனால் ஆயுள் காப்பீட்டு நிறுவனம், பினயேந்திரா கேட்ட பாலிஸியை கொடுக்க முடியாது என்று தெரிவித்தது. காரணம் பினயேந்திரா முன்வைத்த நிபந்தனைதான். அப்படி என்ன நிபந்தனை? அமரேந்திரா இறந்த பிறகு, எந்த காரணத்தைக் கொண்டும் ஆயுள் காப்பீட்டு நிறுவனம், பாலிஸி செல்லாது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரக்கூடாது. எப்படி இருக்கிறது பாருங்கள்!

அப்பறம் என்ன நடந்தது என்பதைத்தான் நாம் முன்பே பார்த்தோம்.

காவல் துறை பினயேந்திராவையும் டாக்டர் தாராநாத்தையும் கைது செய்தது. கூடவே டாக்டர் துர்கா ரத்தன் தர் மற்றும் டாக்டர் சிவபாத பட்டாஜார்ஜியை கைது செய்தது. முன்னொரு சமயம் பினயேந்திரா சொன்னதின் பேரில், அமரேந்திராவிற்கு ஏதோ ஒரு ஊசியைப் போட்டு, அமரேந்திராவின் உடலை நலிவடையச் செய்தவர்கள் என்பதால். ஆனால் முக்கியமான ஒரு ஆளைக் கைது செய்யமுடியவில்லை. முகத்தை அரைகுறையாகப் போர்த்திக்கொண்டு திரிந்த, அந்தக் கருத்த குள்ள உருவம். அமரேந்திராவிற்கு ஊசி போட்டவன்.

நீதி மன்றத்தில் காவல்துறை, மேற்சொன்ன நான்கு பேர் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. வழக்கு விசாரணையின் போது, குற்றம்சாட்டப்பட்டவர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை. எந்த குற்றவாளிதான், தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொள்வான். கிரிமினல் வழக்குகளில் அரசு தரப்புதான், குற்றம் சாட்டப்பட்டவர்களின் மீதான குற்றத்தை நிரூபிக்கவேண்டும்.

அரசு தரப்பில் நடந்த குற்றத்தை நிரூபிக்க நிறைய ஆதாரங்களைத் திரட்டியிருந்தாலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் சில முக்கிய கேள்விகள் எழுப்பப்பட்டன.

1. ஹவுரா ரயில் நிலையத்தில், அமரேந்திராவுக்கு பிளேக் ஊசி போட்டதாகச் சொல்லப்படும் நபரை காவல் துறையால் கைது செய்யமுடியவில்லை. பினயேந்திராவின் தூண்டுதலின் பேரில் தான், அந்த மர்ம நபர் அமரேந்திராவுக்கு ஊசி போட்டார் என்று நிரூபிக்க ஆதாரம் எதுவுமில்லை.

2. அமரேந்திரா பூச்சி கடித்து கூட இறந்திருக்கலாம். மரணமடைந்த அமரேந்திராவின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்படவில்லை.

3. சம்பவம் நடப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர்தான், அமரேந்திராவின் சகோதரி கண்ணன்பாலா என்பவர் mumps எனப்படும் கழுத்தில் ஏற்படும் ஒரு வீக்க வியாதியால் பாதிக்கப்பட்டு இறந்துபோயிருக்கிறார். கண்ணன்பாலாவின் மூலமாகக் கூட அமரேந்திராவுக்கு நோய் தொற்றி, அதன் தாக்குதலால் இறந்திருக்கக்கூடும்.

4. பினயேந்திராவுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்று விருப்பம். அதன் பொருட்டு தான், அவர் அடிக்கடி பம்பாய் சென்றிருக்கிறார்.

5. தாராநாத் நுண்ணுயிரிகள் ஆராய்ச்சியில் நிபுணர். அவர் பிளேக் நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதற்காகத்தான் பிளேக் கல்ச்சரைத் தேடி அலைந்திருக்கிறார். அந்த சமயத்தில் பம்பாய்க்கு அடிக்கடி சென்று வந்த பினயேந்திரா, தன்னுடைய நண்பனுக்கு உதவி செய்யும் வகையில் செயல்பட்டிருக்கிறார். இதற்கு உள்நோக்கம் கற்பிப்பது தவறு.

இதற்கு பதிலளிக்கும் வகையில் அரசுத் தரப்பு பின்வரும் வாதத்தை முன்வைத்தது.

1. அமரேந்திராவுக்கும் பினயேந்திராவுக்கும் பகூர் ஜமீன் சொத்து சம்மந்தமாக அடிக்கடி சண்டை நடந்திருக்கிறது. இது தொடர்பாக இவர்களது உறவினர்கள் சாட்சியம் அளித்திருக்கின்றனர்.

2. பினயேந்திரா, பம்பாயில் எந்த சினிமா கம்பெனிக்கும் அல்லது ஸ்டுடியோவுக்கும் செல்லவில்லை என்று அவனுக்கு பம்பாயில் வழிகாட்டியாக செயல்பட்ட ரத்தன் சார்லியா சாட்சியம் தெரிவித்திருக்கிறான்.

3. தாராநாத், பிளேக் நோய்க்கு மருந்து கண்டிபிடித்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை. தாராநாத்தின் ஆராய்ச்சிக்கு உதவிய டாக்டர் உகில் மற்றும் டாகடர் மேத்தா இருவரும் தாராநாத் எதையும் கண்டுபிடிக்கவில்லை என்று சாட்சியமளித்துள்ளனர்.

4. அமரேந்திரா பிளேக் நோயால் இறந்த தருவாயில், வங்காள மாகாணத்தில் வேறு யாரும் அந்த நோயால் பாதிக்கப்பட்டு இறக்கவில்லை. அந்த சமயத்தில் பிளேக் நோய் தொற்று நோயாக பரவவில்லை.

5. பினயேந்திராவுக்கு அமரேந்திராவைக் கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கம் இருந்திருக்கிறது. பினயேந்திராவின் நோக்கம் நிறைவேற, தாராநாத் உதவியிருக்கிறார். இதன் பொருட்டு தான், இருவரும் பம்பாய் சென்று பிளேக் கிருமியை கல்கத்தாவுக்குக் கொண்டு வந்திருக்கின்றனர்.

6. ஜூலை மாதத்தில் கொண்டுவரப்பட்ட பிளேக் கிருமியை நவம்பர் மாதம் வரை அழிந்து விடாமல் பாதுகாக்க முடியும் என்று சாட்சியம் அளிக்கப்பட்டிருக்கிறது.

7. சந்தர்ப்ப சூழ்நிலை சாட்சியங்கள் எல்லாம், குற்றம் சாட்டப்பட்ட பினயேந்திராவுக்கும் தாராநாத்துக்கும் எதிராகவே இருக்கிறது. எனவே குற்றம் சாட்டப்பட்டவர்கள் தான் இந்தக் கொலையை செய்திருக்க முடியும்.

அரசுத் தரப்பின் வாதத்தை ஏற்றுக்கொண்ட ஜூரி பினயேந்திராவையும், தாராநாத்தையும் குற்றவாளிகளாக அறிவித்தது. ஆனால் மற்ற இருவரையும், அதாவது துர்கா ரத்தன் தர்ரையும், சிவபாத பட்டாஜார்ஜியையும் நிரபராதி என்று அறிவித்தது. அதற்கு காரணம், மருத்துவ நிபுணர்கள் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கையில், டெட்டனஸ் நோய் தாக்கியவர்களுக்கு இழுப்பு வரும்; அந்த சமயத்தில் வலிப்பையையும், வலியையும் குறைப்பதற்காக மார்பைன் கொடுக்கப்படுவது சகஜம்தான், அதில் ஒன்றும் தவறில்லை என்று கூறினர். அதைத்தான் துர்கா ரத்தன் தர்ரும், சிவபாத பட்டாஜார்ஜியும் செய்திருக்கிறார்கள். இதை குற்றம் என்று சொல்லமுடியாது. அதனால் அவர்கள் மேல் சுமத்தப்பட்ட கொலைக் குற்றம் ஏற்புடையதல்ல என்று ஜூரி முடிவெடுத்தது.

ஜூரியின் முடிவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, துர்கா ரத்தன் தர்ரையும், சிவபாத பட்டாஜார்ஜியையும் விடுதலை செய்தார். பினயேந்திராவுக்கும் தாராநாத்துக்கும் அமரேந்திராவைக் கொலை செய்ததற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது. மே மாதம் 1934 ஆம் ஆண்டு தொடங்கிய விசாரணை , பிப்ரவரி மாதம் 1935 ஆம் ஆண்டு முடிவடைந்தது. அதாவது 10 மாதத்திற்குள்ளாக, விசாரணை முடிந்து தண்டனையும் வழங்கப்பட்டது.

ஒரு வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டால், அதை உயர் நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் கொண்ட பென்ச் உறுதி செய்ய வேண்டும். பகூர் கொலை வழக்கிலும், குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனையை உறுதி செய்யும் பொருட்டு, கல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு வழக்கு அனுப்பப்பட்டது. அதே சமயத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளான பினயேந்திராவும் தாராநாத்தும் தங்கள் மீது விதிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

தூக்கு தண்டனையை உறுதி செய்ய அனுப்பப்பட்ட வழக்கையும், குற்றவாளிகளின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்மூறையீட்டு வழக்கையும் ஒரு சேர விசாரித்த கல்கத்தா உயர் நீதிமன்றம், சந்தர்ப்ப சாட்சியங்களின் அடிப்படையில்தான், குற்றம் சாட்டப்பட்டவர்களின் மீதான குற்றம் நிருபிக்கப்பட்டிருக்கிறது, இவர்கள் குற்றம் இழைத்தற்கான நேரடி சாட்சிகள் இல்லாத காரணத்தால், குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து, குற்றவாளிகளுக்கு ஆயுள் முழுவதும் நாடு கடத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படவேண்டும் என்று தண்டனையை விதித்தது. இவ்வாறாக பகூர் கொலை வழக்கு முடிவடைந்தது.

0

S.P. சொக்கலிங்கம்