விசாரணை கமிஷன் / பகுதி 1

pic2ஒரு கனவின் வரைபடம் / அத்தியாயம் 5 

காட்சி எண் 1

இடம்: மலை அருவி

நேரம்: அதிகாலை

ஏராளமான மக்கள் சுற்றி நிற்கிறார்கள். அருவிக்கு அருகில் இருக்கும் பாறையில் கை கால்கள் தனித்தனியாக வெட்டப்பட்ட நிலையில் இறந்து கிடக்கிறான் காவலன். சுற்றிலும் மரக் கிளைகளில் கழுகுகள் கூடியிருக்கின்றன. காவலனின் தலைப் பகுதி மட்டும் இல்லாத நிலையில் டாக்டரும் ஊர் பெரியவர்களும் அருவியை நெருங்கிப் பார்க்கிறார்கள். சிறு பாறை இடுக்குகள் தேங்கிக் கிடக்கும் நீரில் தலை மட்டும் மிதந்து கொண்டிருக்கிறது. அதன் வாயில் வெட்டப்பட்ட ஆண் குறி திணிக்கப்பட்டிருக்கிறது. அனைவரும் அதிர்ச்சியில் உறைகின்றனர். ஆனால், சிறிது நேரத்தில் இறந்தது காவலன் என்பது உறுதியாகத் தெரிந்ததும் உற்சாகத்தில் ஆரவாரம் செய்கின்றனர். பெண்கள் குலவையிட்டு ஆடிப் பாடி தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்துகின்றனர். அவர்களுடைய தலைவர் அவர்களை சமாதானப்படுத்த முயல்கிறார். யாருக்குத் தெரியப் போகிறது என்ற தைரியத்தில் அவரையும் தோளில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுகிறது கூட்டம். ஆனால், அவர்கள் மிகப் பெரிய தவறு செய்துவிட்டனர். உயிரோடு இருந்த இன்னொரு காவலனை மறந்துவிட்டனர். அவனிடம் கேமரா ஒன்று இருந்ததை மறந்துவிட்டனர். நடப்பவற்றையெல்லாம் மறைந்திருந்து அவன் புகைப்படம் எடுத்ததையும் அவர்கள் கவனிக்கத் தவறிவிட்டனர். அவர்களால் என்றுமே சரி செய்ய முடியாத பிழையாக அது ஆகிப்போகிறது. அதற்கு அவர்கள் கொடுக்க வேண்டியிருந்த விலை அவர்களால் கனவில்கூட நினைத்துப் பார்க்க முடிந்திராத ஒன்று. அது ஆரம்பமாகிவிட்டது.

காட்சி எண் 2

இடம்: காவல் நிலையம்

நேரம்: காலை 10.00 மணி

கமிஷனரின் முன்னால் கொலை செய்யப்பட்ட காவலனின் புகைப்படங்கள் வரிசையாக பரப்பப்பட்டுள்ளன. வெறியுடன் அதையே உற்றுப் பார்க்கும் கமிஷனர் தலையை உயர்த்துகிறார். வரிசையாக காவல் துறை அதிகாரிகள் நின்று கொண்டிருக்கிறார்கள்.

கமிஷனர் :  மலைல மொத்தம் எத்தனை பேர் இருக்காங்க?

ஒரு அதிகாரி :  100 குடும்பங்களுக்கு மேல இருப்பாங்க சார். மொத்தம் 600 பேர்கிட்ட இருப்பாங்க.

கமிஷனர் : நீங்க மொத்தம் எத்தனை பேர்?

அதிகாரி : 150 பேர் சார்.

கமிஷனர் : அப்படின்னா ஒருத்தருக்கு 4 பேர்… கணக்கு சரிதான். (போட்டோக்களையே வெறித்துப் பர்க்கிறார் கமிஷனர். போட்டோக்களைச் சுட்டிக்காட்டி) இது எனக்கு நடந்ததா நினைக்கிறேன். என்னை இப்படிப் பண்ணினதா நினைக்கிறேன். உங்களுக்கு 24 மணி நேரம் டயம் தர்றேன். அந்த 24 மணி நேரத்துக்குள்ள நீங்க என்ன செஞ்சாலும் உங்கள யாரும் எதுவும் கேட்க மாட்டாங்க.. போங்க. நான் இங்க காத்துக்கிட்டிருப்பேன். போங்க…

காவலர்கள் சிறிது தயங்குகிறார்கள்.

கமிஷனர் : தைரியமா போங்க. மலைக்கிராமத்துல இருந்தவங்க சாலை கேட்டு அமைதியா போராடிக்கிட்டிருந்தவரை அவங்க பக்கம் நியாயம் இருந்தது. நாம எதுவும் செய்ய முடியலை. இப்ப நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அரசியல்வாதிகிட்ட கூட மோதலாம். ஆனா,  போலீஸ்காரன் கிட்ட மோதக்கூடாதுங்கறதை அவங்களுக்குப் புரியவைச்சாகணும். போலீஸ்காரன்னா தொப்பி வெச்சுக்கிட்டு தொந்தியைத் தள்ளிக்கிட்டு நிக்கறவன்னு நினைச்சிட்டானுங்க போல இருக்கு.

(சட்டென்று ரிவால்வரை உருவி குறி மேடையை நோக்கிச் சுடுகிறார்.) இதுவரை வெற்றுப் பலகையைச் சுட்டுப் பயிற்சி பெற்றிருப்பீர்கள். இப்போது உங்களுக்கு லைவ் மூவிங் டார்கெட்கள் தரப்படுகிறது. குறி பார்த்துச் சுடுபவர்களுக்குப் பரிசுகள் நிச்சயம்.

(புகைப்படங்களை மீண்டும் தொட்டுக் காட்டி)

இந்த அடி என் மார்பில் பட்டிருக்கிறது.

இந்த ரத்தம் என் ரத்தம்.

இந்த ஆண்குறி என் வாயில் திணிக்கப்பட்டிருக்கிறது.

உங்களுக்கு 24 மணி நேரம் தரப்படுகிறது.

தயங்கி நிற்காதீர்கள்.

திரும்பிப் பார்க்காதீர்கள்.

நரகத்தின் கதவுகளைத் திறந்துவிடுங்கள்.

துப்பாக்கிகள், லத்திகள், கேடயங்கள், ஹெல்மெட்டுகள் எடுத்துக்கொண்டு திமுதிமுவென காவலர்கள் மலைப் பகுதியை நோக்கி வெறியுடன் புறப்படுகிறார்கள்.

 காட்சி எண் 3

இடம்: மலைப் பகுதி கிராமம்

நேரம்: காலை 9.00 மணி

மலைப் பகுதியில் மேகங்கள் பனிபோல் படர்ந்திருக்கின்றன. அதனூடே காவலர்கள் மெல்ல அணிவகுத்து வருகின்றனர். கிளைப்பாதைகளில் பிரிந்து சென்று அந்தக் கிராமத்தைச் சுற்றி வளைக்கின்றனர். மக்கள் இந்தப் பயங்கரம் எதுவும் தெரியாமல் தங்கள் நிலங்களில் வேலைகளில் ஈடுபட்டபடி இருக்கின்றனர். திடீரென்று, ‘அட்டாக்’ என்று ஒரு குரல் காற்றைக் கிழித்தபடி மலை முகடுகளில் பட்டு எதிரொலிக்கிறது. வானை நோக்கி துப்பாக்கிகள் சுடப்படுகின்றன. மரங்களில் அமர்ந்திருக்கும் பறவைகள் பயத்தில் பறந்து செல்கின்றன. வீடுகளுக்குள் இருப்பவர்கள் வெளியில் வருகிறார்கள். சுற்றி வளைத்து அவர்களைக் காவலர்கள் அடிக்க ஆரம்பிக்கிறார்கள். அவர்களது வீடுகளை இடிக்கிறார்கள். சிதறி ஓடுபவர்கள் ஒரு வாழைத் தோட்டத்தில் கூடுகிறார்கள். காவலர் நான்கு பக்கத்திலிருந்து வாழை மரங்களை வெட்டி வீழ்த்தியபடி வருகிறார்கள். கண் மூடிக் கண்ணைத் திறப்பதற்குள் நூற்றுக்கணக்கான வாழை மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டு விட நடுவில் மக்கள் மாட்டிக் கொள்கிறார்கள். வாழை மரத்தோட சேர்ந்து காவலர்கள் அவர்களையும் வெட்டுகிறார்கள். ரத்தம் வழிய எல்லாத் திசைகளிலும் ஓடுகிறார்கள். வயதானவர்களைத் தோளில் சுமந்து கொண்டு ஓடுகிறார்கள். ஒரு பெண் மூளை வளர்ச்சி குன்றிய தன் மகனைத் தோளில் சுமந்து கொண்டு காட்டுச் செடிகளை விலக்கியபடியே ஓடுகிறாள். அவனுக்கு திடீரென்று வலிப்பு ஏற்படுகிறது. இரும்பைத் தேடி ஓடுகிறாள். எதிரில் ரத்தம் கசியும் அருவாளுடன் ஒரு காவலன் வருகிறான். தன் மகனின் நிலையைச் சொல்லிக் காப்பாற்றும்படிக் கெஞ்சுகிறாள். பின்னாலேயே வரும் வேறு சில காவலர்களும் சேர்ந்து கொண்டு அவளைக் கேலி செய்கிறார்கள்.

“நான் உனக்குக் கத்தியைத் தருவேன்… நீ என்ன என்ன தருவே…?” என்றபடியே காவலர்கள் அவளைச் சுற்றி வளைக்கிறார்கள்.

“என் புள்ளயக் காப்பாத்துங்கய்யா… என்ன என்ன வேணா செஞ்சுக்கோங்கய்யா” என்று கதறுகிறாள்.

“உன் புள்ள முன்னாலேயே உன்ன என்ன வேணா செய்யலாமா? அது ரொம்பத் தப்பு. இப்படி ஓரமா நீயே வா பாப்போம்” என்று அவளைத் தள்ளிக் கொண்டு போகிறான் ஒரு காவலன்.

காவலன் :  எங்க உன் பொடவையை நீயா அவுத்துப் போடு பாப்போம்…

பெண்  :   ஐயா முதல்ல எம் புள்ளயக் காப்பாதுங்கய்யா.

காவலன் :   டாக்டரக் கூப்பிடுடி… வருவான். அவன் பின்னால போனீங்களேடீ… வரச் சொல்லு அவன. கொடி பிடிச்சுக்கிட்டுப் போறயாக்கும்… உனக்கெல்லாம் வீட்டோட அடைஞ்சு கெடக்க முடியலை இல்லை.

பெண்  :  ஐயா தெரியாம செஞ்சுப்புட்டோமய்யா… என் புள்ள செத்துக்கிட்டிருக்கான்யா… முதல்ல அவனக் காப்பாத்துங்கய்யா… உங்களுக்குப் புண்ணியமாப் போகும்….

காவலன் :   நான் நிறைய புண்ணியம் செஞ்சவன்டி… இனிமே பாவம்தான் பண்ணணும்… ஒவ்வொண்ணா நீயா அவுத்துப் போடறியா… இல்லை நான் அவுக்கட்டுமா…

திமிறியபடி ஓட முற்படுபவளைக் கீழே தள்ளி விட்டு, அவள் மீது மூர்க்கமாகப் பாய்கிறான். “என் புள்ள என் புள்ள” என்றபடியே கதறுகிறாள் அந்தப் பெண்.

காவலன் :  அதுக்குத்தானடி நானும் சோலி பாக்கறேன். கத்தாத…

காவலன் எழுந்து சென்றதும் ரத்தம் தோய்ந்த கத்தியை எடுத்துக் கொண்டு தன் மகனை நோக்கி ஓடுகிறாள். மகனின் கையில் கத்தியைத் தருகிறாள். ஆனால், அவனோ சிறிது நேரத்தில் அம்மாவின் மடியில் தலை வைத்தபடியே இறந்து போகிறான். தன் மகனைக் கட்டி அணைத்தபடி கதறி அழும் அவளைக் காவலர்கள் சூழ்கிறார்கள்.

 காட்சி : 4

இடம் : மலைக்கிராமம்

நேரம் : காலை

ரத்தம் வழிய பக்கத்தில் இருந்த வீடுகளுக்குள் ஓடி ஒளிபவர்களை சிந்திய ரத்தத் துளிகளை வைத்து தடம் கண்டுபிடித்து வெளியில் இழுத்துவந்து அடிக்கிறார்கள். பக்கத்தில் இருந்த வாழைத்தோப்புக்குள் போராட்டக்காரர்கள் ஒளிந்து கொள்கிறார்கள். காவலர்கள் நான்கு பக்கத்தில் இருந்தும் வாழை மரங்களை வெட்டி வீழ்த்தியபடி வருகிறார்கள். நூற்றுக்கணக்கான வாழைமரங்கள் கண் மூடிக் கண் திறப்பதற்குள் வெட்டி வீழ்த்தப்பட மக்கள் நடுவில் மாட்டிக் கொள்கிறார்கள். வாழை மரத்தோடு சேர்த்து மக்களையும் வெட்ட ஆரம்பிக்கிறார்கள் காவலர்கள்.

அருகில் இருந்த கோவில் கருவறைக்குள் சிலர் ஒளிந்து கொள்கிறார்கள். ஷூ அணிந்திருப்பதால் உள்ளே நுழையாமல் கோவிலைச் சுற்றிச் சுற்றி வருகின்றனர் காவலர்கள். கர்ப்பக்கிரக இருளில் சிலர்  பயந்து ஒடுங்கிக் கொள்கின்றனர். கருவறை ஜன்னல் வீசும் காற்றில் மெல்ல மெல்லத் திறந்து மூடுகிறது. ஒரு காவலன் கசியும் சிறு வெளிச்சத்தினூடாக உள்ளே எட்டிப் பார்கிறான். ஜன்னல் கதவை முழுவதுமாகத் திறக்கிறான். உள்ளே நடுங்கிக் கொண்டிருப்பவர்களைப் பார்க்கிறான். நாலைந்து காவலர்களை அழைத்து காண்பிக்கிறான். உள்ளே இருப்பவர்கள் பயந்து அலறி அடித்து வெளியே ஓடுவதற்குள் காவலர்கள் வாசலை மறித்தபடி சூழ்ந்துவிடுகிறார்கள். கோவிலின் கதவை மெதுவாக மூடுகிறார்கள். முற்றாகக் கவிழ்ந்த இருளில் மயான அமைதி நிலவுகிறது. பூட்ஸ் கால் சத்தம் மட்டுமே கேட்க காவலர்கள் உள்ளே நுழைகின்றனர். கருவறையில் சிலையின் பின்னால் போராட்டக்காரர்கள் பயந்து ஒடுங்கிக்கொள்கிறார்கள். காவலர்கள் கருவறைக்குள்ளும் நுழைகிறார்கள். ஜன்னல் கதவைச் சாத்துகிறார்கள். அகல் விளக்கு ஒன்றை ஏற்றுகிறார்கள். அந்த வெளிச்சத்தில் பயந்து ஒடுங்கி இருப்பவர்களின் உருவம் மங்கலாகத் தெரிகிறது. கேமரா மெதுவாக வெளியே நகர்கிறது. அபிஷேக தீர்த்தம் வரும் மடை வழியாக ரத்தம் சொட்டுச் சொட்டாக வழியத் தொடங்குகிறது.

காட்சி எண் : 5

இடம் : மலை அருவி

நேரம் : காலை

சிறுமி ஒருத்தியைத் தோளில் சுமந்தபடி அருவிக்குப் பக்கத்தில் இருக்கும் பாறைக்குள் மார்பளவு நீரில் மறைந்து நின்று கொண்டிருக்கிறான் ஒருவன். பாறையில் பூட்ஸ் கால்கள் எழுப்பும் சத்தம் கேட்கிறது. குழந்தையின் அழுகைகுரல் கேட்டுவிடக்கூடாதே என்று பயந்து சிறுமியின் வாயை இறுக மூடுகிறான். பதட்டத்தில் மூக்கையும் சேர்த்துப் பொத்திவிடவே சிறுமிக்கு மூச்சு முட்டுகிறது. தந்தையின் கைகளில் இருந்து திமிறி நீரில் விழுகிறாள். பிடிமானாமாகப் பற்றிக்கொள்ளும் பாறைகள் வழுக்கிவிடவே நீரில் அடித்துச் செல்லப்படுகிறாள். மகளைக் காப்பற்ற தந்தையும் பின்னாலேயே பாய்ந்து செல்கிறார். அவரைப் பார்த்துவிடும் காவலர்கள் நீண்ட லத்தியால் அவரது தலையில் அடிக்கிறார்கள். மண்டை உடைந்து ரத்தம் வழிய நீரிலேயே மயங்கி விழுகிறார். கீழே ஒரு மூலையில் மரத்தின் வேர் ஒன்றைப் பற்றியபடி மறைந்து கொண்டிருக்கும் சிறுமியின் முன்னால் ரத்தம் கலந்த நீர் வழிந்தோடுகிறது. தலையில் அடிபட்டு மயங்கிய தந்தையின் உடல் அவளுக்கு முன்பாக வந்து பாறையில் சிக்கி நிற்கிறது. சிறுமி பயத்தில் ஒடுங்கிக் கொள்கிறாள். ஓடும் நீர் தந்தையின் கையை மெல்ல மெல்லத் திருப்பிப் போடுகிறது. இறுதியில் கை விறைத்துப் போகிறது. சிறுமி தந்தையின் உடலின் மீது மயங்கிச் சரிகிறாள்.

காட்சி எண் : 6

இடம் : மலை கிராமம்

நேரம் : காலை

pic1வாழைத்தோட்டங்கள் வெட்டப்பட்டுக் கிடக்கின்றன. ரத்தக் கறை மரங்களிலும் தரையிலும் சிதறிக் கிடக்கின்றன. வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. வீட்டில் உள்ள பொருட்கள் எல்லாம் வீதியில் வீசி எறியப்பட்டுக் கிடக்கின்றன. சில வீடுகள் தீ வைக்கப்பட்டு எரிந்து கிடக்கின்றன. கால் ஊனமுற்ற பாட்டி ஒருத்தி இடிபாடுகளினூடே நடந்து போகிறாள். அவளது தாங்கு கட்டையின் சப்தம் மட்டுமே அந்த வனாந்திரத்தில் கேட்கிறது. தள்ளாடித் தள்ளாடி ஒரு வீட்டுக்குள் போகிறாள். கட்டில்கள் பீரோக்கள் உடைத்துப் போடப்பட்டிருக்கின்றன. வீட்டில் இருந்த படங்கள் அடித்து உடைக்கப்பட்டிருக்கின்றன. படங்களில் அம்பேத்கர் படம் வெகு மோசமாகத்  தாக்கப்பட்டிருப்பது தெரிகிறது. அதை கையில் எடுக்கிறாள் பாட்டி. போட்டோவில் இருந்து ஏதோ ஒரு திரவம் கீழே சொட்டுகிறது. லேசாக முகர்ந்து பார்க்கும் பாட்டி அதன் வாடை தாங்காமல் கீழே  போடுகிறாள். அவளுக்கு அழுகை பொங்கி வருகிறது. அடக்கிக் கொள்கிறாள். கண்களில் இருந்து கண்­ணீர் வழிகிறது. மெல்ல வீட்டை சுத்தம் செய்கிறாள். அடுப்பை சோதித்துப் பார்க்கிறாள். அது அதிக சேதம் இன்றி இருக்கிறது. பத்த வைக்கிறாள். ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்து அடுப்பில் வைத்துவிட்டு அரிசி எடுக்க பானைக்குள் கையை நுழைக்கிறாள். கையை மெதுவாக வெளியே எடுகையில் ரத்தம் கசிய அவளது இரண்டு கரங்கள் அவளது கழுத்தை நெரிக்க வருவது போல் வெளியே வருகிறது. பயந்து அலறியபடியே கிழே விழுகிறாள். கைதட்டி பானை கீழே விழுகிறது. உடைந்து போன பானைக்குள் கண்ணாடித் துண்டுகள் போடப்பட்டிருப்பது தெரிகிறது. ரத்தம் தோய்ந்த கரங்கள் அவள் கழுத்தை நெறிக்க வருவதுபோல் மனப் பிரமையில் சித்தம் கலங்கி கதறியபடியே ஓடுகிறாள்.

 காட்சி எண் : 7

இடம்: மலைப்பகுதி மருத்துவமனை

நேரம்: மதியம்

மலையின் ஒவ்வொரு கிளைப் பாதையின் வழியாகவும் பெண்களைத் தரதரவென்று இழுத்தபடி காவலர்கள் மருத்துவமனை முன் கூடுகின்றனர். பிடித்து வரப்பட்ட பெண்களை கூட்டமாக உட்கார வைக்கின்றனர். சுற்றி சுற்றி வந்து காவலர்கள் அவர்களை அடித்தும் மிதித்தும் திட்டியும் அவமானப்படுத்துகின்றனர்.

காவலர்கள்     :        அப்படி என்னத்தடி டாக்டர் கிட்ட கண்டுட்டீங்க. சிவப்பா இருக்கானேன்னு அவன் கூடப் படுக்கவாடி போறீங்க. உங்களுக்கெல்லாம் உங்க புருஷன் சோலி பாக்கறது பத்தலையாடீ… எங்க கிட்ட சொன்னாப் போதுமே… டே ஷிப்ட், நைட் ஷிப்ட் போட்டு நாங்க வந்து சோலி பாப்போமேடி…

இந்தக் கையாலே தானடி கொடி பிச்ச

இந்த வாய் தானடி கோஷம் போட்டுச்சுது

இந்த மார்ல தானடி கொடியைக் குத்தின..

ஒரு போலீஸ்காரனக் கொன்னு போடற அளவுக்கு உங்களுக்கு கொழுப்பு  கூடிப் போச்சாடி…

என்ன ஆட்டம் போட்டீங்கடி.. வக்காலி போலீஸ்ன்னா அவ்வளவு இளக்காரமாப் போச்சாடி உங்களுக்கு…

எங்கடீ உங்க புது மாப்பிள்ளை…

பொட்டப் புள்ள மாதிரி எங்கடி ஒளிஞ்சிருக்கான். புடவைக்குள்ள ஒளிச்சு வச்சிருக்கீங்களாடி..

நீங்க கத்தற கத்துல ஒக்காலி அவன் ஆம்பளையா இருந்தா இங்க வரணும்டி…

எவன் அந்தப் போலீசைக் கொன்னானோ அவன் இந்த இடத்துக்கு வந்து சேரணும்டி…

இல்லைன்னா இங்க ஒரு மயிராண்டியும் உயிரோட இருந்திட முடியாது…

கத்துங்கடி… இன்னும் பலமாக் கத்துங்கடி… கோஷம் போடும் போது மட்டும் கத்தத் தெரியுதுல்ல…

சுற்றிச் சுற்றி வந்து அடிக்கின்றனர்.

பெண்களின் கதறல் மலைப் பகுதியில் எல்லா பகுதிகளிலும் பட்டு எதிரொலிக்கிறது.

0

‘நான் மட்டும் பணக்காரனாக இருந்தால்…’

பேசு மனமே பேசு / அத்தியாயம் 6

talkநாம் செய்து முடிக்க வேண்டிய வேலைகள் தள்ளிப் போனால் அல்லது செய்ய முடியாமல் போனால், அதைப் பற்றி பிறரிடம் கூறும்போது என்ன சொல்கிறோம்? ‘அவசியம் செய்யணும், அல்லது செய்திருக்கணும்’. ‘விடமாட்டேன் கண்டிப்பா செய்வேன்’. ஆனாலும் விஷயங்கள் நடக்காமல் போகின்றன. செய்ய முடியாமல் பாதியில் நிற்கின்றன. உதாரணமாக உடற்பயிற்சி, நெடுநாள் கடன் தீர்ப்பது, உறவினர்/நண்பரைப் பார்ப்பது போன்றவையும் இன்னும் பல சிறிய மற்றும் பெரிய விஷயங்கள் இந்தப் பட்டியலில் சேரும்.

இவை போன்ற காரியங்களைச் செய்ய நமக்கு விருப்பம் இருக்கிறது என்பது மட்டுமின்றி தேவையும் இருக்கின்றது. நமக்குள் பலமுறை நினைவுபடுத்தியும் கொள்கிறோம். ஆனாலும் செய்ய முடிவதில்லை. இதற்கு என்ன காரணம்?

எதைச் செய்வதற்கும் முன்னால் அதைப்பற்றி எண்ணுகிறோம். அதாவது உள்ளூக்குள் பேசிக் கொள்கிறோம். நாம் இதை அதிவேகமாகச் செய்கிறோம். ஒரு விஷயத்தை எண்ணிக்கொண்டு இருக்கும்போதே மற்ற பல விஷயங்களும் மனத்தில் எழ அனுமதிக்கிறோம். குறைந்த பட்சம் அதைத் தடுக்கக்கூட முனைவதில்லை. இதனால் செய்யவேண்டிய விஷயத்தைக் குறித்து சரியான உரையாடல் நிகழ்த்த வேண்டியது மிக அவசியம். அதாவது காரண, காரியங்களோடு அர்த்தம் மனத்துக்கு செல்கிறார்போல வாக்கியங்கள் இருக்க வேண்டும். உதாரணமாக, ‘நாளையிலிருந்து நான் உடற்பயிற்சி செய்ய வேண்டும்’, ‘கண்டிப்பாக, அவரைப் பார்த்தேயாக வேண்டும்’ … ‘இந்த விஷயத்தை முன்னாலேயே செய்திருக்க வேண்டும். ஆனால், செய்யாமல் விட்டுவிட்டேன்.’

இவையெல்லாம், மேலோட்டமாகப் பார்க்கும்போது சரியான, முழுமையான வாக்கியங்கள் போலவே இருக்கின்றன. ஆனாலும் இவற்றால் வேலை நடந்ததா? நாம் மாறியிருக்கிறோமா? மாற்றங்கள் ஏற்பட்டதா என்று கேட்டால், பதில் ‘இல்லை’ என்பதாகவே இருக்கும். இதற்குக் காரணம் என்ன?

நமக்குள் பல்வேறு விஷயங்கள் குறித்து எண்ணும்போது, அதாவது உள் உரையாடல்களின் போது, பிரச்னையை, செய்யவேண்டியதை மட்டுமே திரும்பத் திரும்பச் சொல்கிறோம். குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி நாம் என்ன செய்வதாக இருக்கிறோம் என்பவற்றை மட்டுமே சொல்கிறோம்.

‘நாளையிலிருந்து சீக்கிரமாக அலுவலகம் செல்ல வேண்டும்’ என்று ஒருவர் நினைத்தால், இதில் பிரச்னைக்கான காரணம், தீர்வு என்று எதுவுமே இல்லாத ஒரு எண்ணம் என்று கூறலாம். இதை எப்படி நினைக்க வேண்டும்?

‘நாளையிலிருந்து அலுவலகத்துக்கு சீக்கிரமாகப் போக வேண்டும். அதற்கு காலையில் சீக்கிரமாக எழ வேண்டும். செய்தித்தாளுக்கான நேரத்தைக் குறைத்து, நேரத்தை சமன் செய்யவேண்டும். இதைத்தான் தினமும் செய்வேன்’ என்று சொல்லிக்கொள்வதுதான் சரியானதாக இருக்குமே தவிர, வேறு எந்தவிதமான வாக்கியமும் எதிர்பார்த்த பலனைத் தராது.

இதே உதாரணம், அனைத்து விஷயங்களுக்கும் பொருந்தும். சுருக்கமாகக் கூறினால், பிரச்னைகளை, அதற்கான காரணம் மற்றும் தீர்வுடன் முழுமையாக எண்ணிப் பாருங்கள். உங்களுக்குள் பேசினாலும் சரி, அதையே வெளியே மற்றவர்களிடம் சொன்னாலும் – இதே முறையை கடைப்பிடியுங்கள்.

நாம் ஒவ்வொரு முறையும் உள்ளுக்குள் பேசும்போது அதாவது எண்ணும்போது, அதை யார் அல்லது எது கேட்கிறது? நமது ஆழ்மனது கேட்டுக்கொண்டிருக்கிறது. அதை அப்படியே பதிவும் செய்துகொள்கிறது. இந்தப் பதிவு செய்யப்பட்ட விஷயம்தான் நம்மை இயக்குகிறது. பதிவு செய்யப்படும் விஷயம் முழுமையானதாக இருந்தால், நமது ஆழ்மனதின் செயல்பாடும் முழுமையாக இருக்கும்.

இது கணிணியின் யுகம். நாம் எல்லாவற்றிற்கும் கணிணியை நாடுகிறோம். அதில் எதாவது தெரிந்துகொள்ள வேண்டுமானால், அதைப் பற்றிய கேள்வி கூட முழுமையாக இருந்தால்தான், முழுமையான பதிலும் கிடைக்கும். அதே போலத்தான் நமது ஆழ்மனதும். நமக்கு எதைப் பற்றியாவது முடிவெடுக்க வேண்டும் என்றால், அல்லது எடுத்த முடிவை செயல்படுத்த வேண்டும் என்றால், அதற்குத் தேவையான விவரங்களை, முதலில் ஆழ்மனதுக்கு முழுமையாக அனுப்ப வேண்டும். அதற்கு முன்னால் இந்த முழுமையான நிலையைப்பற்றி மனத்தில் பேசி ஆய்வு செய்ய வேண்டும். அதாவது யோசனை செய்ய வேண்டும். பாதிச் செய்திகள், முழுமையில்லாத யோசனைகள் மற்றும் எதிர்பார்ப்புகள், குறைகள் ஆகியனவற்றை ஆழ்மனதுக்கு அனுப்பினால் எந்தப் பயனும் இருக்காது.

‘நான் மட்டும் பணக்காரனாக இருந்தால்’ … ‘எனக்கு மட்டும் அந்த வாய்ப்பு கிடைத்தால்’ …‘அந்த வேளையில், அல்லது சமயத்தில் சரியான யோசனை தோன்றியிருந்தால்’ … என்று ஆரம்பித்து பல விஷயங்களை, இதே பாணியில் நினைத்திருப்போம். இதுபோல அரைகுறையான விஷயங்களை உள்ளே செலுத்தினால், மாற்றங்கள் வராது. மாறாக ஏமாற்றங்களும், ஏக்கங்களும்தான் பலனாக வரும். ஏனென்றால், வாக்கியங்கள், பேச்சுக்கள் முழுமையாக இல்லாது போகும்போது, அவை ஆழ்மனதுக்குள் அதே நிலையில்தான் பதிவாகும்.

வெற்று அறையில் பேசும்போது, அவை எதிரொலியாக, அதே சமயம் குழப்படியான சத்தத்துடன்தான் திரும்ப வரும். அதுபோலவே முழுமையான அர்த்தம் தராத வார்த்தைகளும், ஆழ்மனத்தில் போய், திரும்ப வரும்போது, கூடவே வெறுமையைக் கொண்டுவரும். இவற்றை ஏக்கங்கள் என்றும், ஆதங்கம் என்றும் கூறலாம். இதைச் சரிசெய்ய மனத்துக்குள் சரியான உரையாடல் இருக்க வேண்டும். உதாரணமாக, ‘நான் மட்டும் பணக்காரனாக இருந்தால்’ … என்ற வாக்கியம் முற்றுப் பெறாத வாக்கியம். இதை சரி செய்வது எப்படி?

‘நான் மட்டும் பணக்காரனாக இருந்தால்… நன்றாகத்தான் இருக்கும். ஆனால் இல்லையே… அதனால் பணம் சம்பாதிக்கக்கூடிய முயற்சிகளைத் தொடங்கி அதைத் தொடர்ந்து செல்வேன்…’ என்று நினைக்க ஆரம்பித்தால்…. அடுத்த கட்டமான எப்படிப் பணம் சம்பாதிப்பது என்ற நிலைக்குச் செல்ல முடியும்.

அதே போல, ‘எனக்கு மட்டும் அந்த யோசனை, அந்த சமயத்தில் தோன்றியிருந்தால்… சரியான விதத்தில் பிரச்னையை, சூழ்நிலையை அணுகியிருக்கலாம். அதனால் நான் நினைத்ததை நடத்திக் கொண்டிருக்கலாம். ஆனால் தோன்றவில்லை. அதனால் அதன் விளைவை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், இனி அதுபோன்ற சூழ்நிலை உருவாக விடமாட்டேன். அதனாலேயே, அடுத்த நிலை குறித்து யோசிக்கவும், செயல்படுத்தவும் போகிறேன்’ என்று மனத்தினுள் செலுத்தினால் அதனால் நன்மை விளையும்.

இதனால் பல லாபங்கள் உள்ளன. இறந்த காலத்தின் பிடியிலிருந்து விடுபட முடியும். மனத்தில் அதனால் ஏற்பட்டு இருக்கும் தேக்கநிலை, இறுக்கம் போன்ற தேவையற்ற உணர்ச்சிகள் நீர்த்துப் போகும். இவை அனைத்துக்கும் மேலாக நிகழ்காலத்தின் முக்கியத்துவம் விளங்கும். இதற்கெல்லாம் அடிப்படைத் தேவை சரியான உரையாடல். இந்த உள் உரையாடல் சரியானதாக இருப்பதுபோல முழுமையாக இருப்பதும் அவசியம். அப்போதுதான் அதில் கடந்த காலத்தின் காயங்கள், வடுக்கள் மீதுள்ள தேவையற்ற ஆத்திரம், வருத்தம் மற்றும் வெறுப்பு போன்றவை உள்ளதா என்பதை அடையாளம் காண முடியும். இவற்றோடு நிகழும், நிகழ்கால திட்ட உரையாடல்களால் பாதிப்புகள் உண்டாகும் என்பதையும் நினைவில் வைத்திருக்க வேண்டும். இதை எப்படிச் செய்வது?

0

சாதியை ஒழிக்கமுடியவில்லை!

gandhiபறையர்கள் / அத்தியாயம் 6

சாதியை ஒழிப்பதற்காக இந்நாட்டில் இயக்கங்கள் பல தோன்றின. பவுத்தம், சீக்கியம், ஆரிய சமாஜம், பிரம்ம சமாஜம், சுயமரியாதை இயக்கம் முதலியன குறிப்பிடத்தக்கவை. இவற்றாலும் சாதியை ஒழிக்க முடியவில்லை.

‘அந்நியர் ஆட்சி இருப்பதால்தான், அந்த ஆட்சிக்காரன் நம்மைப்பிரித்து ஆளுகின்றான் அவனை வெளியேற்றிவிட்டால் ஒரு நொடிப்பொழுதில் சாதியை ஒழித்துவிடலாம் என்றார்கள் நாட்டு சுதந்தரத்துக்காகப் போராடிய காங்கிரஸ்காரர்கள். அந்நிய ஆட்சி ஒழிந்து 17 ஆண்டுகளுக்கும் மேலாகி, (இன்றைய தேதிக்கு 60 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது) விட்டது. ஆனால் சாதி ஒழிவதற்கு மாறாக அமோகமாக வளர்ந்திருக்கிறது. மற்றவர்கள் ‘சாதி ஒழிப்பு மாநாடுகள்’ என்ற பெயரால் பேச்சுக் கச்சேரி நடத்தி வருகின்றனர்.

இன்றுள்ள ஆளும் கட்சியிடம் சாதி ஒழிப்புப் பற்றிய திட்டமேயில்லை. இது பற்றிய கவலையுமில்லை. சாதியை அடிப்படையாக வைத்தே தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் ‘மக்கள் ஆட்சி முறை’ (ஜனநாயகம்) என்ற போலி நாடகம் – பிறவிக் குருடனுக்கு ‘கண்ணாயிரம்’ என்று பெயரிடுவது போல் நடந்து வருகிறது. சுதந்திரம் வந்த பிறகு சாதி ஒழியவில்லை. சாதி ஒழிப்புக்கான சட்டதிட்டங்களைப் பற்றிக் கவலையற்றுக் கிடக்கின்றனர்.’ (குத்தூசி குருசாமி கட்டுரைகள்).

போர்முனைக்குச் சென்று உயிரைவிடத் தயாராயிருக்கும் இளைஞர்கள்கூட சாதி முனையில் நின்று போரிட மறுக்கின்றனர். பெற்றோர்கள் தங்கள் இளைஞர்களைப் போர் முனைக்கு அனுப்பும் துணிவு பெற்றிருந்தாலும் கூட, சுய சாதியை விட்டு அப்பால் அனுப்பும் துணிவு பெற்றவர்களாக இல்லை.

சாதியின் வடிவம் எப்போதும் சமத்துவ உணர்வுக்கு எதிரானது. சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களின் கண்ணிய உணர்வைக் காயப்படுத்தவும், இழிவுப்படுத்தவும் அது விடாது முயல்கிறது. சங்கம் வைத்து முத்தமிழ் வளர்த்த தமிழினம் இன்று இனவுணர்வையும் மொழிப்பற்றையும் முற்றாகப் புறந்தள்ளிவிட்டு மலிவான கட்சி அரசியலிலும், சமூக நீதிக்குத் தடைச்சுவராக விளங்கும் சாதி உணர்விலும் சங்கமித்துவிட்டதுதான் மிக மோசமான அவலம்.

‘என்னுடைய மதத்தில் எனக்குக் கீழான ஒருவர் என்ற எண்ணத்துக்கு வாய்ப்பே இல்லை’ என்ற மகாத்மா காந்தி ‘தீண்டாமை ஒழிப்போடு சேர்ந்து சாதியும் ஒழிந்தால் நான் ஒரு சொட்டுக் கண்ணீரும் சிந்த மாட்டேன்’ என்று பிரகடனம் செய்தார்.

‘இந்தியாவின் உயர்சாதி மக்களே உங்களுக்கு உயிர் இருக்கிறதா? பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட எகிப்திய மம்மியின் சவம் போன்று நீங்கள் இருக்கிறீர்கள். ‘நடமாடும் அழுகல் சவங்கள்’ என்று உங்கள் மூதாதையர் வெறுத்து ஒதுக்கிய மக்களிடம்தான் இந்தியாவின் எஞ்சியுள்ள வீரிய சக்தி தரிசனம் தருகிறது. நீங்கள்தான் உண்மையில் நடமாடும் பிணங்கள்’ என்று சினத்துடன் சபித்தார் சுவாமி விவேகானந்தர்.

‘சகல மனிதரும் சகோதரர், மனுஷ்ய வர்க்கம் ஆருயிர், இப்படியிருக்க நாம் ஒரு வீட்டுக்குள்ளே மூடத்தனமான ஆசாரச் சுவர்கள் கட்டி நான் வேறு சாதி; அவன் வேறு சாதி; எங்கள் இருவருக்குள் பந்தி போஜனம் கிடையாது. ஆவண சாதிப் பிரஷ்டம் பண்ண வேண்டும் என்பது சுத்த மடமை’ என்று எழுதி, சாதி வேற்றுமை அகற்ற வாழ்க்கை முழுவதும் எழுத்து வேள்வி நடத்தினான் பாரதி. இப்படியாக சாதி கூடவே கூடாது என்று கூப்பாடுப் போட்ட தேசிய, இலக்கிய, மதவாதிகளின் பேச்சை நாம் கேட்பதாகவே இல்லை.

அரசும் சாதி, மதமற்ற சமத்துவ சமுதாயம் அமைக்கப் போராடித்தான் வருகிறது. 1996ம் ஆண்டு கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது சமூகச் சீர்திருத்தத் துறை என்று தனித்துறையை உருவாக்கினார். கிறிஸ்துதாஸ் காந்தி தான் செயலாளர். அந்தத் துறையில் எந்தச் செயல்பாடுகளும் இல்லை. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் அந்தத் துறையை கலைத்தார். மறுபடியும் கடந்த முறை கருணாநிதி வந்ததும் அந்தத் துறையைக் கொண்டு வந்து கிறிஸ்துதாஸ் காந்தியையே செயலாளராக நியமித்தார். ஆனால் எந்த நிதியும் ஒதுக்கவில்லை. மறுபடியும் இப்போது வந்த ஜெயலலிதா அதைப்பற்றி கண்டுகொள்ளவில்லை. தற்போது சமூக சீர்திருத்தத் துறை திரும்பவும் செயல்படும் என்று சொல்லி ஓய்வு பெறப்போகும் கிறிஸ்துதாஸ் காந்தியையே செயலாளராக நியமித்து உள்ளார்.

கிட்டத்தட்ட 16 ஆண்டு காலத்தில் இந்தத் துறையில் ஒரே ஒருவருக்குக்கூட நன்மை ஏற்படவில்லை. மாற்றி மாற்றி தமிழகத்தை ஆண்டு வரும் இரண்டு திராவிட கட்சிகளின் சாதி ஒழிப்புக் கொள்கை இந்த லட்சணத்தில்தான் இருக்கிறது.

0

பிரமிப்போடு நிறுத்திவிடாதே!

impஜெயிப்பது நிஜம் / அத்தியாயம் 6

Determination, Passion இரண்டும் எனக்கு இயல்பாகவே உண்டு. இந்த இரண்டையும் ஒட்டித்தான் என்னுடைய வாழ்க்கைப் பயணமே. சுயபச்சாதாபத்துக்கு என்றைக்குமே நான் இடம் கொடுத்ததில்லை.

‘எது வரையிலும் நீங்கள் போராடுவீர்கள்?’ என்று யாராவது என்னை கேள்வி கேட்டால்… ‘வெற்றி கிடைக்கும் வரை… அல்லது உயிரோடு உள்ளவரை’ என்பதே என் பதிலாக இருக்கும்.

‘வாழும் வரை போராடு… வழி உண்டு என்றே பாடு’ என்பதுதான் இந்த விஷயத்தில் என் கொள்கை.

+1 மற்றும் +2 வகுப்பு இரண்டுமே நான் ஆங்கில மீடியத்தில் படித்திருந்தாலும் அதன் மூலம் எனக்கு ஆங்கிலத்தில் fluency என்று சொல்லப்படும் புலமை ஏற்படவில்லை. தட்டுத் தடுமாறி திக்கித் திணறித்தான் ஆங்கிலம் பேசிவந்தேன். ஆனால் அது ஆங்கிலத்தில் எனக்கு இருக்கும் பற்றை எள்ளளவும் குறைக்கவில்லை.

இந்தச் சூழ்நிலையில், லயோலா கல்லூரியில் இளங்கலை பட்டப் படிப்பில் சேர்ந்தேன்.

எங்கள் வகுப்பில் மொத்தம் 110 பேர். அங்கே டிசில்வா என்று ஒரு பேராசிரியர் இருந்தார். 110 பேருக்குமான வருகைப் பதிவேட்டை ஓர் ஒன்றரை நிமிஷத்துக்குள் டக் டக்கென்று எடுத்து விடுவார். அவரைப் பற்றி ரெண்டு விஷயங்கள் சொல்லலாம்.

அவரது ஆங்கிலம் பேசும் ஸ்டைல். அவர் மொழி மிகவும் ஸ்டைலிஷாக இருக்கும். அடுத்து அவருடைய தோற்றம். கை கடிகாரத்திலிருந்து, ஷூ வரைக்கும் எல்லாமே போட்டிருக்கும் உடைக்கு தகுந்தாற்போல் மேட்ச்சிங்காக இருக்கும்.

அவர் பாடம் நடத்தும்போது வகுபே பின்டிராப் சைலன்ஸ்ஸில் இருக்கும். பாடம் நடத்தும்போதும் நடத்தி முடித்த பின்னரும், கண்டிப்பாக கேள்விகள் கேட்பார்.

அவருடைய கேள்விகளுக்கு நல்ல ஆங்கிலப் புலமை இருக்கும் நான்கைந்து ஸ்டூடண்ட்ஸ் மட்டும்தான் எப்போதும் பதில் கூறுவார்கள். மற்றவர்கள் அமைதியாகத்தான் அமர்ந்திருப்பார்கள். பெரும்பாலும் அது vocabulary சம்பந்தமாகத்தான் இருக்கும். எனக்கு அவர் பேசுவது ஒன்றும் புரியாது.

ஒரு பக்கம் ஆங்கிலத்தின்மீது தீராத தாகம். மறுபக்கம் இந்தப் புரியாமை நிலைமை. இந்த இரண்டுக்கும் இடையில்தான் எனது பெரும்பாலான இங்கிலீஷ் வகுப்புகள் கடந்தன. இதனால் டிசில்வா சாரின் வகுப்புகளில் என்னால் மன ரீதியாக மனமொன்றி பங்கெடுத்துக்கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு மணிநேரமும் வீணாகக் கழிந்தது.

ஒவ்வொரு முறையும் அவர் கேட்கும் கேள்விக்கு ஏதாவது பதில் சொல்லிவிடவேண்டும் என்று மனத்துக்குள் சபதம் செய்து தயாராவேன். ஆனால் இறுதியில் வாய் பேசா ஊமையாகவே இருந்து விடுவேன்.

இப்படியே சில காலம் உருண்டது. இரண்டு செமஸ்டர்கள் முடிந்து மூன்றாவது செமஸ்டர் தொடங்கியது.

இடைப்பட்ட காலங்களில் என்னுடைய ஆங்கில சொல் திறனை வளர்த்துக்கொண்டேன்.

ஒரு நாள் டிசில்வா சார், ‘தி பாரடைஸ் லாஸ்ட்’ என்கிற பாடம் நடத்தினார். அப்போது ஒரு கேள்வி கேட்டார்.

அதாவது Imp என்றால் என்ன? என்பதுதான் அந்தக் கேள்வி. அவர் கேள்வி, கேட்டால் பொதுவாக ஐந்து அல்லது ஆறு நொடிகள்தான் காத்திருப்பார். சில விதி விலக்கான சமயங்களில் மட்டும், மாணவர்கள் சரியான பதில் சொல்கிறவரைக்கும் காத்திருப்பார். மாணவர்கள் எப்படியாவது அவருடைய கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட வேண்டுமென்று துடிப்பார்கள். இதனால அவருடைய ஒவ்வொரு கிளாஸுமே எல்லாருக்கும் சவாலாவே இருக்கும். குறிப்பா எனக்கு…

அதனால் ‘imp என்றால் என்ன?’ என்று அவர் கேட்டதுதான் தாமதம், நான் உடனே கை தூக்கி விட்டேன்.

அவர் உடனே என்னை பார்த்து, ‘எஸ்…’ என்றார். அவர் கேட்கும் விதமே கொஞ்சம் பயமாத்தான் இருக்கும்.

நான் உடனே, எனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் imp என்றால் பேபி டெவில் என்று கூறினேன்.

அவர், ‘அப்சல்யூட்லி’ என்றார் உடனே.

அந்த நொடி நான் பட்ட சந்தோஷத்துக்கு அளவே கிடையாது.

மேலோட்டமாகப் பார்த்தால் இந்த நிகழ்வு சாதாரணமாகத் தெரியலாம். ஆனா, இது போன்ற அனுபவத்தை உணர்ந்தவர்களுக்குத்தான் இதன் உண்மையனா மதிப்பு புரியும்!

இது விஷயமாக நான் சொல்ல ஆசைப்படுவது ஒன்றுதான்.

அதாவது விடாமுயற்சி… ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகுப்பிலும் ‘டிசில்வா சார் கேள்விக்கு இன்றைக்கு எப்படியாவது பதில் சொல்லிடணும்’, ‘இன்றைக்கு எப்படியாவது பதில் சொல்லிடனும்’ என்று ஒரு வெறியுடனேயே நான் காத்திருந்திருக்கிறேன். அவர் நூறு கேள்வி கேட்டிருப்பார் என்றால் அதில் பல கேள்விகளுக்கு நான் பதிலை யூகித்து சொல்ல முற்படுவதற்குள் வேறு யாராவது கையைத் தூக்கிவிடுவார்கள். ஆனாலும் என் முயற்சியை நான் விடவில்லை. என் தீர்மானத்தைக் கைவிடவில்லை.

மாணவர்கள் எல்லோரும் அதற்குப் பிறகு, ‘என்னய்யா… டிசில்வா கிளாஸ்லயே பேசிட்டியா நீ… பெரிய ஆளு தான்யா?’ என்று சொல்லி என்னை ஒரே குஷிப்படுத்திவிட்டார்கள். டிசில்வா சாரின் கிளாஸில் பதில் சொல்வது என்பது அந்த அளவுக்கு மிகப் பெரிய விஷயம். கௌரவம்.

இது போன்ற சாதனைகளில் கிடைக்கக்கூடிய சந்தோஷத்தை நாம் மறுக்கக்கூடாது. அதை அனுபவிக்கவேண்டும்.

மேற்கூறிய சம்பவத்துக்குப் பிறகு, டிசில்வா சார் வகுப்பில் என்னுடைய பங்கேற்பு  ஏதாவது ஒரு வகையில் இருக்கும். சில சமயம் தப்பாகக்கூட பதில் சொல்லியிருக்கிறேன். அவர், ‘நாட் எக்சாக்ட்லி தட்’ என்று சொல்லி அதைத் திருத்திச் சொல்வார்.

நான் முதன்முதலில் பதில் சொன்ன மேற்கூறிய அந்த imp சம்பவம் என்னைப் பொருத்தவரையிலும் மிக முக்கியமான ஒரு நிகழ்வாகவே மாறிப் போனது. அதாவது எனக்கும் டிசில்வா சாருக்கும் இடையே இருந்த ஒரு திரையை அது விலக்கிவிட்டது. அப்படித்தான் நான் நினைத்தேன்.

யாருடைய வகுப்பில் நாம் ஒரு கேள்விக்காவது பதில் சொல்ல மாட்டோமா என்று ஏங்கினேனோ அவரை அவருடைய டிபார்ட்மென்ட் அலுவலகத்தில் தனியாகச் சந்தித்து பாடம் தவிர்த்து பிற பொதுவான விஷயங்களும்கூட உரையாடும் அளவுக்கு வந்தேன்.

இதை எப்படிச் சொல்வதென்றால் அதாவது நாம் யாரைப் பார்த்து பிரமிக்கிறோமோ… ரசிக்கிறோமோ அந்த நடிகரையோ நடிகையையோ அருகில் பார்த்துப் பேசி, அவர்களுடன் அறிமுகம் ஏற்பட்டு அவர்களுடன் கூடவே ஒன்றாகச் சேர்ந்து சாப்பிட்டால் எப்படி இருக்குமோ அதுபோன்று இருந்தது மேற்கண்ட எனது அனுபவம்.

எப்படியாவது ஒரு கேள்விக்காவது பதில் சொல்லிவிட வேண்டுமென்று எனக்கு ஏற்பட்ட வைராக்கியம் கடைசியில் எங்கே கொண்டு போய் உயர்த்தியது என்று பார்த்தீர்களா! எனவே எப்போதுமே மிகப் பெரிய விஷயங்களைப் பார்த்து ‘நம்மால் முடியுமா?‘ என்கிற மலைப்போடு நிறுத்திவிடக்கூடாது. தொட்டுப்பாருங்கள்… வானமே ஒருநாள் வசப்படும்!

 

ஸ்பார்டகஸ் : பாட்டாளி வர்க்கத்தின் பிரதிநிதி – II

gladiatorபுரட்சி / அத்தியாயம் 4

பொயுமு 73 வாக்கில் இத்தாலியின் தெற்கு கரைப் பகுதியில் கூடாரமிட்டிருந்தது ஸ்பார்டகஸின் படை. இத்தாலி, ஆல்ப்ஸ் ஆகியவற்றைக் கடந்து கால் (இப்போது பிரான்ஸில் உள்ள இப்பகுதி அப்போது ரோமின் ஆளுகைக்கு முழுக்க ஆட்படாமல் இருந்தது) நோக்கி முன்னேறி தப்பிப்பதே ஸ்பார்டகஸின் திட்டம்.

ஸ்பார்டகஸை இனியும் முன்னேறவிடக்கூடாது என்பது ரோம் செனட்டின் தீர்மானமான திட்டம். பலம் வாய்ந்த இரு படைப் பிரிவுகளை இந்த முறை ரோம் ஸ்பார்டகஸை நோக்கி அனுப்பிவைத்தது. ஆனால், இதைக் காட்டிலும் பெரிய சவலை ஸ்பார்டகஸ் தன் தரப்பில் இருந்தே எதிர்கொள்ளவேண்டியிருந்தது. கமாண்டர் கிரிக்சஸ் ஸ்பார்டகஸின் தலைமையை ஏற்க மறுத்து 30,000 அடிமை வீரர்களைத் தனியே பிரித்துச் சென்றான். புளூடார்க்கின் குறிப்புகளின்படி கிரிக்சஸ் தன் பலத்தின்மீது அதீத நம்பிக்கை கொண்டவனாக அப்போது மாறியிருந்தான். முந்தைய வெற்றிகள் கொடுத்த துணிச்சல் இது. ஸ்பார்டகஸின் திட்டத்தையும் தலைமையையும் ஏற்க அவன் மறுத்தான். எதற்காக ஸ்பார்டகஸின் கீழ் பணிபுரியவேண்டும், நானே ஒரு தலைவன்தான் என்று கிரிக்சஸ் நினைத்திருக்கவேண்டும். இந்த நினைப்போடு இத்தாலிக்குள் நுழைந்த கிரிக்சஸும் அவனுடைய வீரர்களும் உற்சாகமாக நகரைக் கொள்ளையடிக்க ஆரம்பித்தனர்.

ரோம் செனட் தனது திட்டத்தை மாற்றியமைத்தது. ஸ்பார்டகஸை நோக்கி ஏவிவிடப்பட்ட இரு படைப் பிரிவுகளும் இப்போது கிரிக்சஸை நோக்கி திருப்பிவிடப்பட்டன. தான் செய்தது சாதாரணத் தவறல்ல பெரும் தவறு என்று கிரிக்சஸ் உணர்வதற்குள் அவன் படையில் இருந்த 20,000 வீரர்கள் கொல்லப்பட்டிருந்தனர். கிரிக்சஸையும் கொன்ற ரோம ராணுவம் தனது முதல் பெரும் வெற்றியை ஈட்டியது. ஆனால் அதே வேகத்தில் ஸ்பார்டகஸை நோக்கிப் பாய்ந்து வந்த இந்த இரு படைகளும் திட்டவட்டமாக முறியடிக்கப்பட்டது.

கிரிக்சஸைத் தோற்கடித்த ரோமால் ஸ்பார்டகஸைத் தோற்கடிக்க முடியாததற்கான காரணங்கள் ஆலன் உட்ஸின் ஆய்வில் கிடைக்கின்றன. கிரிக்சஸ் தலைமைக்குக் கீழ்படிய மறுத்தான். அதே சமயம், ஒரு நல்ல தலைவனாக வளரவும் அவனால் இயலவில்லை. தான் பிரித்துச் சென்ற முப்பதாயிரம் வீரர்களை ஒன்றுபடுத்தி ஒரே இலக்கை நோக்கி நகர்த்த அவனுக்குத் தெரியவில்லை. அதற்கும் மேலாக, அவன் ஒழுக்கமற்றவனாக இருந்தான். வர்க்க நலன் அல்ல, சுயநலனே அவனை உந்தித்தள்ளியது. அதுவே அவனை வீழ்த்தவும் செய்தது.

மாறாக, ஸ்பார்டகஸ் தன்னிடம் இருந்த வெவ்வேறு பின்னணியைச் சேர்ந்த, வெவ்வேறு மொழி பேசும், பல்வேறு பிரதேசத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான வீரர்களை ஒழுங்குபடுத்தியும் தொகுத்தும் வைத்திருந்தார். நம்பிக்கையையும் ஊக்கத்தையும் மட்டுமின்றி நல்லொழுக்கத்தையும் அவர்களுக்கு ஊட்டியிருந்தார். ரோமப் படைகளைத் தொடர்ச்சியாக வென்றபோதும் ஸ்பார்டகஸ் கர்வமோ குருட்டு துணிச்சலோ கொள்ளவில்லை.வெற்றி, தோல்வி இரண்டையும் சமமாக அணுகி, இரண்டில் இருந்தும் பாடங்கள் கற்று, இரண்டையும் கடந்து தன் வழியில் அவர் முன்னேறிக்கொண்டிருந்தார். இறுதிவரை ஒரே இலக்கு. அடிமைகளின் விடுதலை. தன்னை எதிர்த்து வெளியேறிய கிரிக்சஸின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த ஸ்பார்டகஸ் தயங்கவில்லை. அந்த வகையில், ஒரு வீரனாகவும் திறமையாளனாகவும் மட்டுமின்றி மனிதாபிமானம் மிக்க மனிதானாகவும் ஸ்பார்டகஸ் திகழ்ந்தார்.

இதற்கிடையில் கால் நோக்கி முன்னேறத் திட்டமிட்டிருந்த ஸ்பார்டகஸ் திடீரென்று மீண்டும் இத்தாலியை நோக்கி திரும்பத் தொடங்கியது ஏன் என்பதற்கு விளக்கங்கள் இல்லை. ஒருவேளை ஸ்பார்டகஸ் கால் வழியாக ஜெர்மனிக்குச் சென்றிருந்தால் ரோமிடம் இருந்து முற்றிலுமாகத் தப்பியிருக்கலாம். அருகில் ஸ்பெயினில் கிட்டத்தட்ட இதே போன்றதொரு எழுச்சி ஆரம்பமாகியிருந்தால் அங்கும்கூட அவர் பாதுகாப்பாக இருந்திருக்கலாம்.

இத்தாலி நோக்கி நகர ஆரம்பித்த ஸ்பார்டகஸின் படை இப்போது பலவீனமடைந்திருந்தது. காரணம், பெண்கள், குழந்தைகள், முதியோர் என்று அடிமைகளின் குடும்பத்தைச் சேர்ந்த சுமார் பத்தாயிரம் பேர் இப்போது ஸ்பார்டகஸின் பயணத்தில் இணைந்திருந்தனர். அவர்களுடைய வரவால், பயணத்தின் வேகம் குறைந்தது. அவர்களைக் கவனித்துக்கொள்ளவேண்டிய கூடுதல் பொறுப்பும் இப்போது வீரர்களுக்குச் சேர்ந்திருந்தது.

மற்றொரு பக்கம், தன் எதிரியின் பலத்தை இப்போது நன்கு உணர்ந்திருந்த ரோம் தன் பலம் அனைத்தையும் திரட்டி பாய்ந்து வந்தது. ஒரு மோதலின்போது ஸ்பார்டகஸ் ரோம ராணுவக் கைதி ஒருவனை சிலுவையில் அறைந்து தண்டித்தார். உடனே ரோமில் பிரசார இயந்திரம் வேகமாக இயங்க ஆரம்பித்துவிட்டது. அடிமைகளின் ‘குரூரமான, காட்டுமிராண்டித்தனமான’ செய்கைகள் குறித்து அவர்கள் அங்கலாய்க்க ஆரம்பித்தார்கள். அடிமைகளை இத்தனை காலம் அழுத்தி வைத்திருந்ததன் காரணம் இப்போது புரிகிறதா என்று ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினார்கள். பல நூறு அடிமைகளை அவர்கள் சிலுவையில் அறைந்து கொன்றதை வசதியாக அவர்கள் மறந்துபோனார்கள். நடைபெற்றது போர் என்பதையும் ஸ்பார்டகஸ் நிறைவேற்றியது போர்க்காலத் தண்டனை என்பதையும் அவர் தண்டித்தது ஒரு போர் வீரனைத்தான் என்பதையும் அவர்கள் மறைத்தார்கள்.

மிகத் திறமையாகவும் வஞ்சகத்துடனும் அவர்கள் செய்த இன்னொரு காரியம், ரோம ராணுவத்தின் வன்முறையையும் அதனை எதிர்த்தும் அதிலிருந்து மீண்டெழவும் ஸ்பார்டகஸ் செலுத்திய வன்முறையையும் ஒன்றாக்கிச் சமன்படுத்தியது. ஸ்பார்டகஸ் காலம் தொடங்கி இன்றுவரை தொடரும் பிரசாரப் போக்கு இது. ஆதிக்கசக்திகளின் அழுத்தத்தையும் அதற்கு எதிரான ஒடுக்கப்பட்டவர்களின் எதிர்வினையையும் பலர் இன்றும் சமமாகவே பாவிக்கிறார்கள்; சமமாகவே மதிப்பிடுகிறார்கள். இந்த இரு போக்குகளையும் மறுதலிக்கிறேன் என்று சொல்லி ‘நடுநிலை’ வகிக்கவும் சிலரால் முடிகிறது.

இந்தப் பின்னணியில், அடிமைகளின் தலைவன் என்னும் பெயரோடு காட்டுமிராண்டி என்னும் பெயரும் இப்போது ஸ்பார்டகஸுக்குச் சேர்ந்திருந்தது. புரட்சியை முன்னெடுக்கும் யாவருக்கும் அவப்பெயரும் சேர்ந்தே வரும் என்பது வரலாற்று உண்மை அல்லவா?

ரோம் இரு பிரிவுகளாக பிரிந்து நின்றது. அடிமைகள், எஜமானர்கள். அல்லது, அடிமை முறையால் நலன் பெறும் ஆளும் வர்க்கம், ஸ்பார்டகஸின் கிளர்ச்சியால் தூண்டப்பட்ட அடிமை வர்க்கம். ஸ்பார்டகஸை வளரவிடுவது தம் வர்க்க நலன்களுக்கு எதிரானது என்று கருதிய செல்வந்தர்களில் ஒருவனான லிசினியஸ் கிராசஸ் முன்பைவிடத் தீவிரமாக ரோமப் படைகளைத் திரட்டிக்கொண்டான். பலமுறை ரோமப் படைகளை வீழ்த்திவிட்ட ஸ்பார்டகஸோடு நேருக்கு நேர் மோதுவதைவிட மறைமுகமாக பலவீனப்படுத்தலாம் என்று கருதிய கிராசஸ், மிகப் பலமான தடுப்புச் சுவர் ஒன்றை அமைத்தான்.ஒரு பக்கம் சுவர், இன்னொரு பக்கம் ராணுவம், மற்ற பக்கங்களில் கடல். ஸ்பார்டகஸை ஒரு சிறிய மூலையில் தனிமைப்படுத்தி வீழ்த்துவதே அவன் திட்டம். தொழில்நுட்பரீதியிலும் சரி, போர்முறையிலும் சரி, நுட்பமான முறையில் வடிவமைக்கப்பட்ட வியூகம் இது. ஸ்பார்டகஸால் சுவரையும் உடைக்கமுடியாது. உணவு கிடைக்க மார்க்கமில்லை என்பதால் இருக்கும் இடத்தில் தங்கியிருக்கவும் முடியாது. ஒன்று, பசியால் சாகவேண்டும் அல்லது, திரண்டிருக்கும் ரோம ராணுவத்தின் முழு வலிமையையும் எதிர்கொண்டு சாகவேண்டும்.

ஸ்பார்டகஸ் கிராசஸின் நுட்பமான வியூகத்தை புத்திசாலித்தனமாக எதிர்கொண்டார். சுவருக்கு அருகில் பள்ளங்கள் வெட்டப்பட்டன. மரங்கள் சாய்க்கப்பட்டன. பள்ளங்களில் மரங்களை நிறுத்தி, வீரர்கள் மேலே ஏறத் தொடங்கினார்கள். மூன்றில் ஒரு பங்கு படையை ஸ்பார்டகஸ் இவ்வாறு கடத்திச்சென்றான் என்கிறார் புளூடார்க். கிராசஸ் நடுங்கிவிட்டான். அடுத்து ரோமுக்குள் நுழைந்து ஆட்சியையும் கைப்பற்றிவிடுவார்களா அடிமைகள்?

ஆனால், கிராசஸ் நம்பிக்கை இழக்கவில்லை. த்ரேஸில் இருந்தும் போம்பேயிடம் இருந்தும் கூடுதல் படைகள் வேண்டி முன்கூட்டியே கிராசஸ் விண்ணப்பித்திருந்தான். இறுதிப்போரில் வெல்லப்போவது தானே என்பது அவனுக்குத் திட்டவட்டமாகத் தெரிந்தது. அதே சமயம், அவனுக்குள் புதிதாக வேறொரு பயம் புகுந்திருந்தது. போம்பேயை (Pompey) அழைத்தது தவறோ? போர் இறுதிக்கட்டத்தில் இருக்கும் இந்தச் சமயத்தில் உள்ளே புகுந்து ஸ்பார்டகஸை வீழ்த்தி ஒட்டுமொத்த புகழுயும் போம்பே அபகரித்துவிடுவானா? ஆலன் உட்ஸ் இந்த மனநிலையைத் துல்லியமாகப் படம்பிடித்து காட்டுகிறார். புகழ் சேர்க்க ஒரே சிறந்த வழி, போர். அது யாரை எதிர்த்து நடத்தப்படுகிறது, எப்படி நடத்தப்படுகிறது என்பதெல்லாம் முக்கியமில்லை. வெற்றி மட்டுமே முக்கியம். கிராசஸ் மட்டுமல்ல இன்றுவரை தலைவர்கள் தங்கள் புகழை உயர்த்திக்கொள்ள போரையே நாடிச் செல்கிறார்கள்.

கிராசஸ் பயந்ததைப் போலவே அடிமைகளின் எழுச்சியை வீழ்த்திய பெருமையை கடைசி நேரத்தில் போம்பே தட்டிச்சென்றான். கிராசஸுக்குச் சாதாரண வரவேற்பும் போம்பேவுக்கு அரசு மரியாதையும் (போம்பே தி கிரேட் என்று அவன் அழைக்கப்பட்டான்) வழங்கப்பட்டன. பிற்காலத்தில் ஜூலியஸ் சீஸரின் மகளைத் திருமணம் செய்துகொண்ட போம்பே, ஒரு கட்டத்தில் ரோமக் குடியரசைக் கைப்பற்ற சீஸருடனும் போட்டியிடத் தொடங்கினான். இருவருக்குமான பகை ரோமில் சிவில் யுத்தத்தை ஏற்படுத்தியது. இறுதியில் தோல்வியுற்ற போம்பே எகிப்துக்குத் தப்பிச்சென்று, அங்கேயே கொல்லப்பட்டான். ஆளும் வர்க்கம் தனது வர்க்க எதிரிகளுக்கு எதிராக முதலில் போரிடுகிறது. பிறகு அதிகார வெறிõயல் உந்தப்பட்டு தனது வர்க்கத்தைச் சார்ந்தவர்களையே வீழ்த்தத் துடிக்கிறது. இந்த வழக்கமும் இன்றும் தொடர்வதுதான்.

ஸ்பார்டகஸ் தனது இறுதிக் கட்டப்போரில் மேலும் ஒரு பிளவைச் சந்தித்தார். அவனது படைப் பிரிவில் இருந்து மேலும் ஒரு குழு பிரிந்து சென்றது..அவர்களும் தோல்வியையே சந்தித்தனர். மரணத்துக்குப் பிறகு ஸ்பார்டகஸின் கூடாரத்தில் இருந்து மூவாயிரம் ரோம ராணுவக் கைதிகளை உயிருடன் மீட்ட ரோம ராணுவத்தால் நிச்சயம் வெட்கம் அடைந்திருக்கமுடியாது; ஆனால் குறைந்தபட்சம் அவர்கள் திகைத்திருக்கவேண்டும். காரணம், ரோம அதிகாரிகள் வழியெங்கும் தொடர்ச்சியாக அடிமைகளைக் கொன்றொழித்து வந்தனர். ஒருமுறை கபுவா, ரோம் வழித்தடத்தில் கிராசஸ் ஆறாயிரத்துக்கும் அதிகமான அடிமைகளைச் சிலுவையில் அறைந்து கொன்றான். அவர்களுடைய உடல்களைக்கூட அகற்ற உத்தரவிடாததால் அந்தத் தடத்தில் பயணம் செய்தவர்கள் அனைவரும் வீரர்களின் உடல்களைத் தரிசித்தபடியேதான் கடந்து செல்ல வேண்டியிருந்தது.

spartacus-representative-of-proletariat-2போரில் இறுதியாக வென்றது ரோம்தான் என்றாலும் அடிமைகளின் எழுச்சி அவர்களுக்குச் சில பாடங்களைக் கற்றுக்கொடுத்தது. வரலாற்று உண்மைகள் உணர்த்தும் இந்தப் பாடங்கள் உலகப் பொதுவானவை. எவ்வளவு பலவீனமானவர்களாக இருந்தாலும் சரி, தொடர்ச்சியாக ஒரு பிரிவினரை யாராலும் ஒடுக்கிவைத்திருக்கமுடியாது. அசைக்கமுடியாத பெரும்பலம் என்று இந்த உலகில் எதுவுமில்லை. திராணியற்ற உதிரிகள் ஒரு வர்க்கமாகத் திரளும்போது பெரும் சக்தியாக உருமாறுகிறார்கள். அடிமைகள் எப்போதும் அடிமைகளாக நீடிப்பதில்லை.

காலப்போக்கில் ரோம சாம்ராஜ்ஜியம் தனது பளபளப்பையும் செல்வாக்கையும் இழந்து உதிர்ந்துபோனது. பெரும் சாம்ராஜ்ஜியங்கள் அனைத்துக்கும் இதுவே நிலை என்பதை வரலாறு நமக்கு மீண்டும் மீண்டும் உணர்த்துகிறது. அதே வரலாறு, ஸ்பார்டகஸைத் தோற்கடிக்கப்பட்டவனாக நமக்கு இன்று அடையாளம் காட்டவில்லை. ஒரு வர்க்கத்தை எழுச்சி கொள்ள வைத்த தலைவனாகவும் உத்வேகமூட்டும் ஒரு வலிமையான சக்தியாகவும் உயர்த்திக் காட்டுகிறது.

27 பிப்ரவரி 1861 அன்று கார்ல் மார்க்ஸ் எங்கெல்ஸுக்கு எழுதிய கடிதத்தில், பலம் வாய்ந்தவராகக் கருதப்பட்ட போம்பே புழுதியாக மாறியதையும் ஸ்பார்டகஸ் சக்தியுடன் உயர்ந்து நிற்பதையும் கோடிட்டுக் காட்டினார். ‘பண்டைய வரலாற்றிலேயே ஸ்பார்டகஸ்தான் ஒரே முக்கியக் கதாபாத்திரமான எழுந்து நிற்கிறார்… அவர் தலைசிறந்த ராணுவ ஜெனரல் மட்டுமல்ல, அவர் காலத்தைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் பிரதிநிதியும்கூட.’

(அடுத்த பகுதி : இந்தியாவின் முதல் புரட்சியாளர்)

கார்ப்பரேட் சி.இ.ஓவும் சில கலைப்படங்களும்

veerapandiya_kattapomman_tamil_king_statue_tamil_naduஒரு கனவின் வரைபடம் / அத்தியாயம் 5

ஜே சம்பந்தப்பட்டு நான் பங்கேற்கும் இரண்டாவது பொதுக்கூட்டம் இது. அதுவே அவருடைய அஞ்சலிக் கூட்டமாக ஆனதில் நிறைய வருத்தமே. இரண்டு கூட்டத்திலும் அழையா விருந்தாளியாகவே கலந்துகொண்டிருக்கிறேன். முதலில், ஜே நடத்திய திரைப்பட இதழின் 25 ஆண்டுவிழாவுக்கு நான் போனபோது அங்கே யாருக்கும் என்னைத் தெரிந்திருக்கவில்லை. பார்வையாளர்கள் பங்கேற்ற விவாத நேரத்தில் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டபோது ஓரிரு தலைகள் திரும்பிப் பார்த்தன அவ்வளவுதான். வேறு கூட்டமாக இருந்திருந்தால் அந்த நிமிடமே அந்த அரங்கமானது என்னுடைய நாற்காலியை மையமாகக்கொண்டு திரும்பி அமர்ந்திருக்கும். ஆனால், ஜேயின் கூட்டத்தில் நான் பார்வையாளனாகவே கடைசிவரை இருந்தேன்.

வணிகப் படங்கள் மீது குறை சொல்லியபடியே இருக்கிறீர்களே… கடந்த தலைமுறையில் சிற்றிதழ் இயக்கமும் வெகுஜன பத்திரிகைகளைப் பழித்தபடியே நடந்துகொண்டதுபோல் நீங்களும் செயல்படுகிறீர்களே. அப்படித் தனித்தீவாக அவர்கள் இயங்கியதில் சூழலுக்குப் பெரும் பங்கு உண்டு என்றாலும் தீவிர படைப்பாளர்கள் கொஞ்சம் இறங்கி வந்திருக்கலாம். அதிகம் பேர் படிக்கும் இதழ்களில் அவர்களுடைய பங்களிப்பு இடம்பெற்று அதன் மூலம் வாசகர்களின் ரசனையில் மாற்றம் வந்திருக்கும். அதிகம் பேர் சம்பந்தப்பட்ட இடத்தை நோக்கி நகரும்போது சமரசங்கள் செய்துகொள்ள வேண்டியிருக்கும் என்பது உண்மைதான். ஆனால், சமரசத்தைவிடக் கூடுதலாகச் சாதித்திருக்கமுடியும் என்று சொன்னேன்.

எதிர்பார்த்தது போலவே, அந்தக் கூட்டத்தில் அது தொடர்பாக எதிர்மறைக்கருத்துகளே அதிகமும் வந்தன. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்… எங்கள் நிறுவனத்தின் கதவுகள் உங்களுக்காகத் திறந்தே இருக்கும் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். ஆளற்ற வனாந்தரங்களில் பொழியும் அருவிகள் ஊருக்குள் பாய்ந்து கொஞ்சம் குப்பை மலைகளை இடம்பெயர்த்திருக்கலாம்… சாக்கடைகளை நீர்க்கச் செய்திருக்கலாம் என்பதுதான் என் எண்ணம். இது தொடர்பாக என்னால் முடிந்தவற்றை மனப்பூர்வமாக நான் செய்திருக்கிறேன்.

இதற்கு முன்பாக ஜேயுடனான என் முதல் சந்திப்பை நினைவுகூரவிரும்புகிறேன். அவருடைய திரைப்பட விமர்சனங்கள், குறும்படச் செயல்பாடுகள், திரைப்பட விழா முயற்சிகள் ஆகியவற்றைப் பல வருடங்களாகக் கவனித்துவந்திருக்கிறேன். அதோடு அவருடைய அதிரடிச் செயல்பாடுகள் அவரைப் பற்றி ஒரு சித்திரத்தை என் மனத்தில் அழுத்தமாகப் பதியவைத்திருந்தது. ஆனாலும் வேறு காடுகளில் தலை தெறிக்க ஓடிய எத்தனையோ குதிரைகள் எங்கள் லாயங்களுக்குள், வீசும் புல்லுக்கட்டுக்காக சேணம் பூட்டி தலை குனிந்து நிற்பதை நான் பார்த்திருக்கிறேன். ஒருநாள் போன் செய்து உங்களைச் சந்திக்கவிரும்புகிறேன். முகவரி சொல்லுங்கள், கார் அனுப்புகிறேன் என்று சொன்னேன். பொதுவாக, எல்லோரும் என்னைச் சந்திக்கத்தான் நாட்கணக்கில் காத்திருப்பது வழக்கம். நான் யாரையாவது சந்திக்க விரும்புவதாகச் சொன்னால், தொலைபேசியை நான் கீழே வைப்பதற்கு முன்பாக அவர்கள் விழுந்தடித்து என் அலுவலகத்துக்கு வந்து சேர்ந்துவிடுவார்கள்.

ஜேயும் நான் முகவரி கேட்டதும் ‘சொல்கிறேன்’ என்று சொன்னார். இவரைப் பற்றி நிறைய பூச்சாண்டிகள் காட்டினார்களே… இவரும் அழைத்தால் வருபவர்தான் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். ஆனால், அடுத்ததாக ஜே சொன்ன வாக்கியம் அவர் யார் என்பதை எனக்குக் காட்டியது. ‘முகவரியைச் சொல்கிறேன். அந்த காரிலேயே நீங்களும் வந்துவிடுங்கள்’ என்று சொன்னார். இப்படியான ஒரு மூக்குடைப்பை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. இருந்தும் வெளிக்காட்டிக்கொள்ளாமல், முகவரியைச் சொல்லுங்கள் என்று வாங்கிக்கொண்டு போனை வைத்துவிட்டேன்.

சிறிதுநேரம் யோசித்தேன். உட்காரச் சொன்னால் காலில் விழுபவர்கள் மத்தியில் அவர் கொஞ்சம் நிமிர்ந்து நின்றது என்னைக் கவர்ந்தது. அந்தக் காலத்தில் மன்னர்கள் அந்தப்புரத்தில் சல்லாபத்தில் ஈடுபடும்போது சற்று தள்ளி திரைக்கு அப்பால் இருந்துகொண்டு கலைஞர்கள் வாத்தியம் இசைப்பதைப் படித்திருப்பீர்கள். அந்தக் கலைப் பாரம்பரியத்தின் வாரிசுகள் நவீன யுகத்திலும் கோலோச்சுவது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதிலும் சில நவீன கலைஞர்கள் ஜலக்கிரீடை செய்ய விரும்பும் மன்னருக்கு எண்ணெய் தேய்த்துவிடும் மகளிரைப்போல, கூடுதல் சேவைகளுக்கும் தயாராகவே இருப்பதைப் பார்த்திருக்கிறேன். ஆணாகப் பிறந்துவிட்டோமே என்ற கவலை அவர்கள் உள்ளுக்குள் ஓடுகிறதோ என்று நாம் நினைக்கும்வகையில் நடந்துகொள்வார்கள். உலக இலக்கியங்கள், சர்வதேசப் படங்கள் என பக்கம் பக்கமாக கதை அளந்தாலும் திரைப்பட டிஸ்கஷனுக்கு வரும்போது நல்ல பிள்ளையாக செருப்புடன் சேர்த்து கலைக்கிரீடத்தையும் கழட்டிவைத்துவிட்டு நுழையும் அவர்களுடைய சமத்காரம் எனக்கு நன்கு தெரியும். என் அரண்மனையில் அப்படியான ஆஸ்தான வித்வான்கள் பலர் உண்டு. ஒருவகையில் அவர்களால் நான் சோர்வடைந்து போயிருந்தேன் என்றுதான் சொல்லவேண்டும். ஜே, வேறுவகை ரத்தம் ஓடும் உடலைக் கொண்டவர்… என் லாயத்துக்குள் இந்தக் குதிரை முடங்காது என்பது நன்கு தெரிந்தது. உடனே, காரை எடுத்துக்கொண்டுபோய் சந்தித்தேன்.

ஒரேயடியாக மாற்றத்தைக் கொண்டுவந்துவிடமுடியாது. படிப்படியாக முயன்று பார்ப்போம் என்று சொன்னேன். 25 வருடங்கள் பேரலல் மூவ்மெண்ட் ஒன்றை நடத்திய களைப்பு அவரில் படிந்திருந்தது. அது ஒருவேளை என் மன மயக்கமாகக்கூட இருக்கலாம். மாற்றுவழி ஒன்றைத் தேடும் மனநிலையில் அவர் இருந்திருக்கலாம். எதிர்பார்த்ததைவிட இதமாகவே பேசினார்.  எடுத்துக்கொள்ளும் விஷயத்தை மலினப்படுத்திவிடுவதுதான் வணிகப்படங்கள் தொடர்பாகத் தனக்குப் பெரிய குறையாகப்படுவதாகச் சொன்னார். எனக்குமே அந்த எண்ணமே இருந்தது. நாலைந்து படங்கள் எங்களுடன் பணியாற்றுங்கள். அதன் பிறகு நீங்கள் விரும்பும்படியான ஒரு படத்தைத் தயாரிக்கிறேன் என்று சொன்னேன். அப்படித்தான் எங்கள் நிறுவனத்தில் அவருடைய பங்களிப்பு ஆரம்பித்தது. முதலில் நாலைந்து வணிகப்படங்கள்… அதன் பிறகு அவர் விரும்பும் கலைப் படங்கள். அதன் பிறகு அவருடைய அரசியல் படங்கள்… இதுதான் நான் அவரிடம் சொன்ன வழிமுறை.

உண்மையில் கலை சார்ந்து அவர் முன்வைக்கும் மதிப்பீடுகளை என்னால் முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடிந்தது. ஆனால், அரசியல் சார்ந்து அவர் சொன்னவற்றை நெருங்க முடியவில்லை. பிறவி படம் பற்றி அவர் எழுதிய கட்டுரையைப் படித்திருப்பீர்கள்.

ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் ஒரு கல்லூரி மாணவன் விடுமுறைக்கு வீட்டுக்குத் திரும்பியிருக்கமாட்டான். அவனுடைய வயதான தந்தை காலையில் இருந்து இரவு வரை  பேருந்து நிறுத்தத்தில் காத்திருப்பதில் இருந்து படம் தொடங்கும். ஒரு கட்டத்தில் அந்த கல்லூரி மாணவன் காவல் துறையினரால் ஒரு வழக்கு தொடர்பாக காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட விவரம் தெரியவரும். வயதான தந்தை தனக்குத் தெரிந்த மந்திரி ஒருவரைச் சென்று சந்தித்து, மகன் வீடு திரும்பாமல் இருப்பது பற்றிச் சொல்வார். மந்திரியும் காவல்துறை ஆணையரைச் (ஜேயின் வார்த்தையில் காவல்துறை ஆணையன்) சென்று சந்திக்கும்படி கடிதம் எழுதிக்கொடுப்பார். காவல்துறை அதிகாரியோ அப்படி யாரையும் கைது செய்யவே இல்லை. விசாரணைக்கு அழைத்துச்சென்று அன்று மாலையே விடுவித்துவிட்டார்கள். பையன் எங்காவது நண்பர்கள் வீட்டுக்குப் போயிருப்பான். வந்துவிடுவான். கவலைப்படாமல் வீட்டுக்குச் செல்லுங்கள் என்று சொல்லி அனுப்பிவிடுவார்.

வயதான தந்தையும் அதை நம்பி வீட்டுக்குத் திரும்பிவிடுவார். ஆனால், பேருந்து நிலையத்தில் தினமும் வந்து காத்திருப்பதை நிறுத்தமாட்டார். அந்த கல்லூரி மாணவரின் அக்கா அவனைத் தேடி அவன் படித்த கல்லூரிக்குச் செல்வாள். கல்லூரியில் நடந்த ஒரு விழாவில் அந்தப் பையனும் அவனுடைய மூன்று நண்பர்களும் மந்திரி ஒருவரை கேலி செய்து பாட்டுப் பாடியிருப்பார்கள். மந்திரி அந்த மாணவர்களைக் கொஞ்சம் கவனிக்கும்படி காவல்துறைக்கு சொல்லியிருப்பார். நால்வரையும் அழைத்துச்சென்று கவனித்ததில் மூவர் அடிகளை வாங்கிக் கொண்டு உயிருடன் வீடு திரும்பியிருப்பார்கள். இந்த மாணவன், பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதாலோ அடி பலமாகக் கிடைத்ததாலோ என்னவோ லாக் அப்பிலேயே இறந்திருப்பான். காவல்துறையோ நால்வரையும் விடுதலை செய்துவிட்டதாக வழக்கை மூடிவிட்டிருக்கும்.

இந்த விஷயங்களைத் தெரிந்துகொண்ட கல்லூரி மாணவனின் சகோதரி சோகத்துடன் வீடு திரும்புவாள். இனி அவன் வருவான் என்று காத்திருக்க வேண்டாமென்று அப்பாவிடம் சொல்வாள். அவரோ எப்படிக் காத்திருக்காமல் இருக்க முடியும். நான் அவனுடைய தந்தை ஆயிற்றே. இவள் அவனுடைய தாய் ஆயிற்றே… நீ அவனுடைய அக்கா ஆயிற்றே நாம் காத்திருக்காமல் வேறு என்ன செய்ய முடியும் என்று ஆதங்கத்தைக் கொட்டித் தீர்ப்பார். கடைசியில் என்ன ஆகும் என்றால் காத்திருந்து காத்திருந்து அவருடைய சித்தம்கலங்கிவிடும். தன் மகன் திரும்பி வந்துவிட்டதாகவும், அவனுடைய பெட்டி படுக்கைகளை எல்லாம் எடுத்து வீட்டில் பூட்டி வைக்கவேண்டும் என்றும் இனிமே அவனை எங்கும் அனுப்பக்கூடாது என்றும் பேச ஆரம்பித்துவிடுவார். அவருடைய மகள் வாய் பொத்தி அழுதபடியே உறைந்து நிற்பாள். படம் அதோடு முடியும்.

எளிய நேர்கோட்டு பாணியிலான கதை. எந்த ஆர்பாட்டங்களும் இல்லாமல் காட்சிப்படுத்தப்பட்ட படம். படத்தின் மைய கதாபாத்திரமான அந்த கல்லூரி மாணவனுடைய சிறு புகைப்படம்கூடப் படத்தில் காட்டப்பட்டிருக்காது. ஆனால், அவனுடைய இழப்பு பார்ப்பவர் அனைவரும் உணரும்வகையில் சித்திரிக்கப்பட்டிருக்கும். அதிலும் வயதான தந்தையாக நடித்த பிரேம்ஜி படத்தில் நடிக்கவில்லை… வாழ்ந்திருக்கிறார். தேய் வழக்குதான் என்றாலும் அதை வேறு வார்த்தைகளில் சொல்ல எனக்குத் தெரியவில்லை.

ஒரு காட்சியில் பரிசலில் போய்க்கொண்டிருக்கும்போது ஒரு குழந்தை அம்மாவின் மடியில் அமர்ந்துகொண்டு வீல் என்று கதறி அழுதுகொண்டிருக்கும். எதிரில் அமர்ந்திருக்கும் பிரேம்ஜிக்குத் தன் மகனுடைய நினைவுகளை அந்த அழுகை கிளறிவிடும். பற்களைக் கடித்தபடி அழுகையை அடக்கிக்கொள்வார். கண்களில் நீர் தாரையாக வழியத் தொடங்கும். ஒரு வார்த்தைகூடப் பேசப்படாமல், பார்க்கும் நமக்கும் அந்த அழுகை தொற்றிக்கொள்ளும். நிஜ வாழ்க்கையில் சோகமும் உணர்வெழுச்சிகளும் அப்படியாகத்தானே நம்மால் உணரவும் வெளிப்படுத்தவும்படுகின்றன. கலை என்பது திரையில் காட்டப்படும் கதாபாத்திரத்தின் உணர்வுடன் நம்மை ஒன்றச் செய்வதுதானே.

ஒரு காட்சியில் ஒரு சிறு கதாபாத்திரம் தலையில் தேங்காய் மூட்டையைச் சுமந்தபடி வேகமாக ஓடும். ஓரிரு காட்சிகள் கழித்து அந்த கதாபாத்திரம் தலையில் சுமை எதுவும் இல்லாத நிலையிலும் சிறு கேனொன்றைப் பிடித்தபடி வேகமாக ஓடிக்கொண்டிருக்கும். அதாவது, அந்த உழைப்பாளி கதாபாத்திரத்துக்கு இயல்பான நடை என்பதே இல்லாமல் போய், எப்போது பார்த்தாலும் பெரும் சுமையைச் சுமந்து கொண்டிருப்பதுபோல ஓடிக்கொண்டே இருப்பதுபோல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

சாப்ளின் ஒரு படத்தில் தொழிற்சாலையொன்றில் அசெம்பிளி லைனில் ஸ்க்ரூவை முறுக்கும் பணியில் இருப்பார். மெஷின் ஓடுவது நின்ற பிறகும் இவருடைய கைகள் நிற்காமல் தொடர்ந்து ஸ்க்ரூவை முறுக்கிக்கொண்டே இருக்கும். ஒரு மனிதன் தன்னுடைய படைப்பூக்கத்தை இழந்து ராட்சச முதலாளித்துவ இயந்திரத்தின் ஓர் அங்கமாக ஆகிபோகும் அவலத்தை அதில் காட்சிப்படுத்தியிருப்பார். அந்தக் காட்சியின் நகைச்சுவைக்குப் பின்னால் ஒரு மெளனமான வலி இருக்கும். இந்தக் கதாபாத்திரமும் அப்படியான ஒரு நிலையில்தான் இருக்கும். இரண்டே ஃப்ரேம்களில் மட்டும் வரும் இந்தக் கதாபாத்திரம், ”பாட்டாளியின் கண்ணீரால்தான் கடல் உப்புக் கரிக்கிறது… அரிவாளை எடு… சுத்தியலைப் பிடி’ வகையறா புரட்சிகீதங்களைவிட அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தியது. கலையின் இயங்குதளமே அதுதானே.

படத்தின் ஆரம்பக் காட்சியில் ஒரு பெரு மழையின் புயல் சீற்றம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். வயல்வெளியில் நெற்கதிர்கள் படபடவென அடித்துக் கொள்ளும். நூலகத்தின் போர்டு காற்றில் அலைபாயும். ஜன்னல்கள் பட் பட் என்று சாத்திக்கொள்ளும். செய்தித்தாள்கள் வீசும் பேய்க்காற்றில் வீசி எறியப்படும். ஒரு கறுப்பு நிறப் பூனை பயந்து நடுங்கியபடியே ஒரு தடுப்புக்குப் பின்னால் ஓடி ஒளியும். படத்தின் ஒட்டுமொத்த உணர்வும், கதையின் கருவும் வெகு இயல்பாக, அருமையான குறியீட்டு ரீதியில் எந்தவித செயற்கைத்தனமும் இல்லாமல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். கடைசி காட்சியில் ஓடம் ஒன்று நதியின் நடுவில் அநாதையாக அலைபாய்ந்து கொண்டிருப்பது காட்டப்பட்டிருக்கும். இப்போது வரும் படங்களுக்கு, நம் இலக்கிய சாம்ராட்கள் தங்களுடைய முழுத் திறமையையும் பயன்படுத்தி முட்டுக்கொடுக்கும் பொழிப்புரைபோன்ற குறியீடுகள் அல்ல. மிக எளிய காட்சிகள். எளிய மனம்கூடப் புரிந்துகொள்ளும்படியான படிமங்கள். அந்தக் குறியீட்டைப் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும் அடிநாதமான உணர்வைக் கடத்திவிடும் தன்மை கொண்டகாட்சிகள். கலையின் மேதைமை என்பது அதுதானே. காளிதாசனின் சைகைகளுக்கெலாம் தத்துவ விளக்கம் தந்த  பாண்டித்தியம் போன்றது அல்லவே அது.

ஜே அந்தப் படத்தின் கலாபூர்வமான காட்சிகளை எல்லாம் பாராட்டிவிட்டு, லாக் அப் டெத் விஷயத்தை இப்படி மயிலிறகால் வருடியதுபோல் எடுத்தது தவறு என்று சொல்லியிருந்தார். அதிகார மையத்தை எதிர்க்க முடியாத ஏழை நம்பூதிரிக் குடும்பத்தின் கையறு நிலையே படத்தின் அடிநாதம். இருண்ட மலைப்பாதையில் நடந்து செல்லும்போது, முன்னால் இருக்கும் பயங்கரமான பள்ளத்தாக்கை ஒரு மின்னல் வெட்டில் பார்க்கும்போது ஏற்படும் அதிர்ச்சியைப்போல் இந்தப் படத்தில் அதிகாரமையத்தின் சுயரூபம் சட்டென்று தோன்றி மறையும். ஜே அந்த அம்சத்தை நிறுத்தி நிதானமாகச் சித்திரித்திருக்க வேண்டும் என்று சொன்னார்.

காவல்துறை அந்த வழக்கை மூடிவிட என்னவெல்லாம் தகிடு தத்தங்கள் செய்தது? அரசியல்வாதியின் அராஜகம் எப்படிப்பட்டது? அடித்துக் கொல்லப்பட்ட மகனின் உடலைப் பார்த்து அல்லது புகைப்படங்களைப் பார்த்து தந்தைக்கு சித்தம் கலங்கியதாகக் காட்டியிருக்கலாம். அரசியல் தலைவரின் மிரட்டலால் சொந்த மகனின் சடலத்தைப் பார்த்தும், ”இவன் என் மகன் இல்லை… அவன் கண் காணா தேசத்துக்கு போயிருக்கிறான். காசிக்கு புனித யாத்திரை போயிருக்கிறான். திரும்பி வந்துவிடுவான். இந்த உடல் அவனுடையது அல்ல’ என்று சொல்லி அழுதபடியே வருவதாகக் காட்டியிருக்கவேண்டும் என்பது ஜேயின் கருத்து. உண்மையில் அவர் அந்தப் படத்தை தமிழ் சூழலுக்கு மாற்றுவது தொடர்பாக எழுதிய விமர்சனக் கட்டுரை அது. எனவே, கலை சார்ந்து சில பிராந்திய மாற்றங்கள் வேண்டும் என்று சொல்லியிருந்தார். தமிழில் கருணாநிதி ஆட்சி காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை வெளிப்படையாகச் சொல்லி இந்தப் படத்தை மொழிமாற்றம் செய்யவேண்டும் என்று சொல்லியிருந்தார்.

இப்படிச் செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஒரு குறிப்பிட்ட கட்சியை அல்லது அதிகாரமையத்தை வெளிப்படையாகச் சுட்டிக்காட்டினால் அந்த கட்சிமட்டுமே தவறு செய்ததுபோல் ஆகிவிடும். கூடவே, எதிர்கட்சியின் அடியாள் என்ற முத்திரையும் விழுந்துவிடும். எனவே, எந்த அதிகாரமையத்தையும் வெளிப்படையாகச் சுட்டிக்காட்டாமல் எல்லா அதிகார மையத்தையும் சேர்த்து விமர்சிக்கும் தொனியில் படமாக்குவதே சரி என்பதுதான் என் கருத்து. ஆனால், ஜே யோ இந்தக் கேள்விக்கு அவருக்கே உரிய லாகவத்துடன் ஒரு பதில் சொன்னார். ஒரு அதிகார மையத்தை வெளிப்படையாக சித்திரிப்பதால், இன்னொரு அதிகார மையத்தின் ஆதரவாளர் என்ற பெயர் வருமென்றால், இன்னொரு படத்தில் அந்த இன்னொரு அதிகாரமையத்தை எதிர்த்துவிட்டால் அப்படி ஒரு பேச்சு வராது அல்லவா? இது ஜேயின் டிபிக்கல் ஸ்டாண்ட்.

சுருக்கமாகச் சொல்வதானால், கலை என்பது அதிகார வர்க்கத்தை வெளிப்படையாக எதிர்க்கத் துணிவில்லாமல் பதுங்கிக் கொள்வதற்காகப் பயன்படும் போர்வையாக இருக்கக்கூடாது.  உங்கள் படைப்புகள் தடை செய்யப்படவில்லை என்றால் நீங்கள் நிச்சயம் ஒரு கலைஞனாக இருக்கமுடியாது என்று ஜே முழங்கினார். ஆனால், கோடிகளைக் கொட்டிப் படமெடுக்கும் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் சி.இ.ஓ.வான எனக்கு அது அதிகப்படியானது. எனவே, ஜே மைனஸ் அரசியல் என்பதுதான் என்னுடைய எதிர்பார்ப்பாக இருந்தது. ஜேயோ கலை வாங்கினால் அரசியலும் இலவசம் என்ற பாணியில் இன்னும் சரியாகச் சொல்வதானால், அரசியல் வாங்கினால்தான் கலையே கிடைக்கும் என்று அடம்பிடித்தார்.

பேச்சுவாக்கில், அப்போது நாங்கள் எடுக்கத் தீர்மானித்திருந்த ப்ராஜெக்ட் பற்றி லேசாகச் சொன்னேன். உண்மையில் எந்தப் பெரிய நம்பிக்கையும் இல்லாமல்தான் அவரிடம் பகிர்ந்துகொண்டேன். ஆனால் ஜே அந்தக் கதையில் சொன்ன சிறிய மாற்றம் எங்கள் நிறுவனத்தின் தலையெழுத்தையே மாற்றிவிட்டது. ஐ நோ வாட் யு டிட் லாஸ்ட் சம்மர் படத்தின் கதையைத் தழுவி ஒரு படம் எடுக்கத் தீர்மானித்திருந்தோம். அந்தரத்தில் மிதந்துகொண்டிருந்த அந்தப் படத்தின் வில்லனை கொஞ்சம் தரையில் கால் பதிக்க வைத்தார். நமது இந்தியா அப்படியான வில்லன்களின் சொர்க்கபூமி அல்லவா… ஒவ்வொருமொழிக்கும் அந்தந்தப் பகுதியில் இருக்கும் அடிப்படைவாத சக்தியை வில்லனாக வைத்துக்கொண்டோம். படத்தின் விளம்பரப் பொறுப்புகளை அவர்களே எடுத்துக்கொண்டார்கள். படம் இந்தியாவிலேயே அதிக மொழிகளில் எடுக்கப்பட்ட ஒரே படம் என்ற பெருமையையும் வெளியான அனைத்து மொழிகளிலும் வசூலில் சாதனை படைத்த படம் என்ற பெருமையையும் ஒரு சேர தட்டிச்சென்றது.

அதற்கு பிரதியுபகாரமாக அவர் விரும்பும் ஒரு படமொன்றைத் தயாரிக்க முன்வந்தேன். நாலைந்து வருடங்கள் சேர்ந்து பணிபுரிந்த பிறகுதான் உங்களுடைய படம் என்பதுதான் எங்களுடைய முதல் ஒப்பந்தம். ஆனால், முதல் படம் மூலம் கிடைத்த வெற்றி எங்களைத் திக்குமுக்காடவைத்துவிட்டது. எனவே, ஒப்பந்தத்தை சிறிது மாற்றிக்கொண்டேன். அடுத்தது உங்க படம்தான் ஜே என்றேன்.

வீரபாண்டியக் கட்டபொம்மன் படத்தை எடுங்களேன் என்றார். எனக்கு தூக்கிவாரிப் போட்டது. அதுதான் ஏற்கெனவே எடுக்கப்பட்டாச்சே என்றேன். அது கணேசனோட கட்டபொம்மன். நான் நிஜமான கட்டபொம்மனைச் சொல்றேன் என்றார். என்ன அப்படி சொல்லிவிட்டீர்கள்… தமிழக மக்களுக்கு கட்டபொம்மன் என்றால் உடனே நினைவுக்கு வருவது சிவாஜி கணேசன்தானே… என்று கேட்டேன். அது கட்டபொம்மனின் தவறு அல்ல. பெரியார்ன்னு சொன்ன்னதும் எனக்கு சத்யராஜ்தான் நினைவுக்கு வருவார் என்று யாரேனும் சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும் என்று சரமாரியாகப் பிடித்துக்கொண்டுவிட்டார்.

பாளையக்காரரான கட்டபொம்மனை சாதா வேஷ்டியும் துண்டும் கட்டினவராகக் காட்டவேண்டும் என்பதில் இருந்து ஆரம்பித்தார். பானர்மேன் கட்டபொம்மனை நிற்க வைத்து கேள்விகள் கேட்டதையும் எட்டப்ப மகாராஜா பற்றி புனையப்பட்டிருக்கும் கட்டுக்கதைகளை நீக்கியும் காட்டவேண்டும் என்றார். கட்டபொம்மன் உண்மையில் எப்படிப்பட்ட வீரனாக இருந்தானோ அதை, அதிகாரபூர்வமாக என்ன ஆவணங்கள் கிடைத்திருக்கின்றனவோ அதன் அடிப்படையில் காட்டுவோம். சுதந்தரப் போராட்ட காலத்தில் வெளிவந்திருந்தாலாவது கணேசனின் கட்டபொம்மனைச் சில சலுகைகள் தந்து சிரமப்பட்டு ஏற்றுக் கொண்டிருக்கலாம். 1960களில் தமிழ் நாட்டில் இருந்த வாய்ச் சொல் வீரர்களைப் போலவே அவரைச் சித்திரித்தது பெரும் துரோகம். கட்டபொம்மனின் ஆன்மா பெரும் துயரத்தில் அலைந்துகொண்டிருக்கும். அதை சாந்தப்படுத்தவேண்டும் என்றார். அப்படிச் செய்ய முயன்றால் சிவாஜியின் ஆவி நம்மைச் சும்மாவிடாதே… என்று சொல்லிச் சமாளித்தேன்.

ஆனால், ஜேக்குக் கொடுத்த வாக்கை மாற்றிக்கொள்ள விரும்பவில்லை. வேறொரு கதை சொல்லுங்கள் என்றேன். அப்போதுதான் காணி நிலம் பற்றிச் சொன்னார். இந்தப் படத்துக்கு வேறு பிரச்னை எழுந்தது. படத்தை எடுக்க நான் தயாராக இருந்தேன். ஆனால், என் நிறுவனம் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. பட்ஜெட் குறைவு என்பதால், என்னால் முடிந்தவரை முயற்சி செய்தேன். எனக்கு இருந்த செல்வாக்கு என் பதவியினால் வந்ததுதான் என்பது எனக்குத் தெரிந்தே இருந்தது. இருந்தும் இந்தப் படத்தை எடுப்பதற்காக என் பதவியை இழக்க நேருமென்ற நிலைவந்தபோது நான் அதையே தேர்ந்தெடுத்தேன். ஜேவை என் இடத்துக்குக்கொண்டு செல்ல நான் விரும்பினேன். ஜே என்னை அவரிடத்துக்குக் கொண்டுவந்து நிறுத்திவிட்டார். ஆனால், பிழையான திசையில் காத தூரம் ஓடுவதைவிட சரியான திசையில் ஓர் அடி எடுத்து வைப்பது மேல் அல்லவா… நான் வந்துவிட்டேன். இப்போது பார்த்து ஜே போய்விட்டார். அவர் போனால் என்ன… அவர் விட்டுச் சென்றவை நம்முடன் இருக்கின்றன. அதில் பத்தில் ஒரு பங்கை நாம் நிறைவேற்றினால்கூட போதும். அதுவே அவருக்கு நாம் செய்யும் சரியான அஞ்சலியாக இருக்கும்.

0

இருண்ட கண்டம், இருண்ட உண்மை

bad-thoughts-72பேசு மனமே பேசு / அத்தியாயம் 5

மனித மூளையில் வரை திட்டங்களாக (programmes) இருக்கும் பல்வேறு சிந்தனைக்கூறுகள், பல்வேறு வழிகளில் உள்ளே செல்கின்றன. பிறரின் அபிப்பிராயம், விமரிசனங்கள், அறிவுறுத்தல்கள், கேள்விகள், பதில்கள், நமது சுற்றுப்புறச் சூழ்நிலைகளைப் பற்றிய நமது புரிதல்கள் போன்றவை இதில் அடங்கும். இவை உருவாக்கும் சிந்தனைக் கூறுகள், மனத்தில் எண்ணங்களாக, நம்பிக்கைகளாக, பல்வேறு உணர்ச்சிகளாக உருமாறி, நமது முடிவுகளை, வாழ்க்கைப் பாதையை, நடத்தைகளை தீர்மானிக்கின்றன. இவற்றைத்தான் நாம் சுய உருவகமாகப் புரிந்துகொள்கிறோம். நமது புரிதலின்படி வாழ்க்கையையும் அமைத்துக் கொள்கிறோம்.

நாற்பது வயதை எட்டிய மனோகரன், சிறந்த ஓவியக் கலைஞர். கலைகளின் மையமான, பாரிஸ் சென்று இக்கலையை நன்கு கற்றுத் தேர்ந்தவர். அங்கேயே சில வருடங்கள் வாழ்ந்தும் இருக்கிறார். ஆனால் வாழ்க்கையில் திருமணம் என்பது வேண்டாம் என்று பிடிவாதமாக இருந்து வந்தார். பெற்றோர்களும், மற்றவர்களும் வலியுறுத்தியும் பயனில்லாமல் போனது. இவரை திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள வைக்க வழி தெரியாமல் வயதான பெற்றோர்கள் திணறினர். நண்பர்களில் ஒரு சிலர், தொடர்ந்து வலியுறுத்தியதால், இதுபற்றி ஆலோசிக்க மனோதத்துவ நிபுணரை சந்திக்க சம்மதித்தார்.

மனோதத்துவ மருத்துவருடன் பல அமர்வுகளுக்குப் பிறகு, மனோகரனின் திருமணத் தயக்கத்துக்குக் காரணம் தெரிய வந்தது. அவரது 16ம் வயதில், விளையாடிக்கொண்டிருந்தபோது, பிறப்புறுப்பின் மேல் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கே சிகிச்சைக்காக சில நாட்கள் தங்க நேர்ந்தது. அப்போது ஒரு சந்தர்ப்பத்தில், அவர் கண்ணை மூடிப் படுத்திருந்ததைத் தூங்குவதாக நினைத்துக்கொண்டு, ஒரு நர்ஸ் மற்றவரிடம், ‘பாவம், பையன் வாழ்க்கையே போச்சி. இவன் கல்யாணம் செய்துகொண்டால் பிரச்னைதான். ஆண்தன்மையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது’ என்று சொல்வதை மனோகரன் கேட்டிருக்கிறார். அதன் பிறகு தொடர்ந்து சிகிச்சை நடந்தது. ஆனால் அந்த உரையாடல் இவரிடம் தங்கிவிட்டது. அந்த வயதில் ஏற்படுத்தப்பட்ட ஒரு கருத்து, சந்தேகம், கேள்விக்கு உட்படுத்தப்படாமல் உண்மை என்று ஏற்றுக் கொள்ளப்பட்டது. ‘தான் ஆண் மகனாக, எந்தப் பெண்ணிடமும் நடந்துகொள்ளமுடியாது’ என்ற நினைப்பு, திருமணம் வேண்டாம் என்கிற முடிவுக்கு வரக் காரணமானது. அவரது இந்த சுய உருவகம்தான், வாழ்க்கையின் பாதையைத் தீர்மானித்தது.

விஷயத்தைத் தெரிந்துகொண்ட மனோதத்துவ நிபுணர், மருத்துவ ரீதியாக அவரை பரிசோதனைக்கு உட்பட வைத்து அவரது பயத்துக்குக் காரணம் ஏதுமில்லை என்பதை நிரூபித்துப் புரிய வைத்தார். இதன் பிறகுதான், மனோகரன் திருமணத்துக்கு சம்மதித்தார். இது உண்மையில் நடந்த சம்பவம்.

நமக்குள்ளே, ஏற்கெனவே உண்டாகி இருக்கும் சந்தேகங்கள், பயங்கள், நம்பிக்கைகள் ஆகியன, எத்தனை வயதானாலும், தகுதிகள் கூடினாலும் மாறுவதில்லை, மறைவதுமில்லை. அதனால்தான், உத்வேகப் பேச்சுகள், எழுத்துகள் ஆகியன எதிர்பார்த்த அல்லது நீடித்த பலன்களை அளிப்பதில்லை. இதை மாற்றுவதற்கு நமக்குள் இருக்கும் பழை படிமங்களை, நினைவுகளை, வரை திட்டங்களை முதலில் மாற்ற வேண்டும். எழுது பலகையில் புதிதாக எழுத வேண்டுமானால், ஏற்கெனவே இருப்பதை அழித்தால்தானே, புதிதாக எழுத முடியும்? அது போலத்தான், புதிய எண்ணங்கள், சிந்தனைகள், நம்பிக்கைகள் ஆகியனவற்றை புகுத்துவதற்கு முன்பாக, பழைய எண்ணங்களை அழிக்க அல்லது மாற்ற வேண்டும். இதற்கு, முதலில் முன்னேற்றத்தை தடை செய்யும் எண்ணங்கள், எந்த வடிவங்களில் இருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இதை எப்படிச் செய்வது? எந்த விஷயமாக இருந்தாலும், அது தொடர்பானவற்றை அணுகும்போது எப்படிப்பட்ட மனநிலையுடன், நம்மால் அணுக முடிகிறது என்பது பற்றி நம்மால் கவனித்து அறியமுடியும். இந்த மனநிலை குறிப்பிட்ட தடையுடன் தொடர்பு உடையதாக இருப்பதையும் புரிந்துகொள்ள முடியும். இதற்காக மிகவும் சிரமப்பட வேண்டியதில்லை. நமது மூளைத்திறனை இதற்காக செலவழித்தால் போதுமானது.

எந்த சந்தர்ப்பமாக இருந்தாலும், நாம் நடந்துகொள்ளும் விதத்தில்தான் அடையாளம் காணப்படுகிறோம். நமது நடத்தை என்பதில், செயல், பேச்சு, சைகைகள், உடல்மொழி ஆகியன அடங்கும். சில சமயங்களில் குறிப்பிட்ட முறையில் நடந்துகொள்ளவேண்டும் என்பது நமக்குத் தெரியும். ஆனால் அவ்வாறு நடந்துகொள்வதில்லை. அல்லது நடந்துகொள்ள முடியாமல் போகிறது. அதற்கான சரியான காரணத்தையும் கண்டுபிடிக்க முடிவதில்லை. சூழ்நிலை பற்றி நமது புரிதலின் விளைவாக எழுந்த முடிவை, நம்மால் செயல்படுத்த முடிவதில்லை. நமது மனம், நமக்கு உணர்த்தும் அறிவுரையை நாமே கேட்காத, அல்லது கேட்க முடியாததற்குக் காரணங்கள் இருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ளலாம். இவைதான் நம்மைக் கட்டுப்படுத்துகின்றன என்பதை உணரலாம். இவற்றிற்குப் பெயர்தான் உணர்ச்சிகள் மற்றும் உணர்வுகள் என்று கூறலாம். இப்படியாக இருக்குமானால், நமது அறிவுத்திறன் வெளிப்படும் மூளை என்ன செய்து கொண்டிருக்கிறது என்ற கேள்வி எழும்.

மனித மூளையைப் பற்றி ஆராய்ச்சி செய்தவர்கள் அனைவரும், ஒரு விஷயத்தைப் பற்றித் தீர்மானமாகக் கூறுகின்றனர். நமது மூளை, நாம் எதைச் சொன்னாலும் அதை அப்படியே நம்பி, கேள்வி எதுவும் கேட்காமல் காரியங்களை நிறைவேற்ற உடலுக்கு வழிகாட்டுகிறது. ஏனென்றால், மூளைக்கு வேறு வழி எதுவும் தெரியாது. ஏதோ ஒரு வகையில் உருவான அபிப்பிராயம் மூளைக்குள் உறைகிறது. அதற்கு ஏற்ப, நமது செயல்கள், பேச்சுகள் ஆகியன அமைகின்றன. கணிணியில் நாம் என்ன விதமான வரை திட்டங்களை உருவாக்குகிறோமோ, அதை வைத்துதான் கணிணியைப் பயன்படுத்த முடியும். மூளையும், கணிணியும் பல விதங்களில், ஒரே மாதிரியானவை. மனித மூளையில் உதித்த கணிணி, அதைப்போலவே செயல்படுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

மூளையில் உள்ள எண்ணப் பதிவுகள், நம்பிக்கைகள் ஆகியன பல்வேறு உணர்ச்சிகளை உருவாக்கி, அவற்றையும் சேர்த்தே வரைதிட்டங்களாகப் பாதுகாக்கிறது. மூளைக்குள் புதிதாக வரும் தகவல்கள், எந்த விதமான உணர்ச்சிகளை தட்டி எழுப்புகிறதோ, அதன் வடிவத்தை அத் தகவல்கள் பெறும். இவற்றை கேள்விகளுக்கு உட்படுத்தும்போது, அவை உண்மைகளாக, நம்பிக்கைகளாக மாறுகின்றன.

வெகு காலத்திற்கு ஆப்பிரிக்கா என்ற கண்டம் இருந்ததே ஐரோப்பியர்களுக்குத் தெரியவில்லை. ஆகவே, அந்த கண்டம் கண்டுபிடிக்கப்பட்டவுடன் அதற்கு ‘இருண்ட கண்டம்’ என்று பெயரிட்டனர். அவர்களது மூளையில், அந்த கண்டம் பற்றிய தகவல்கள் ஏதுமின்றி சூனியமாக, இருளாக இருந்ததால், அதைப் பிரதிபலிக்கும் வகையில், ‘இருண்ட கண்டம்’ என்ற பெயர் உருவானது. ஆனால் உண்மை என்னவென்றால், உலகின் மிகப் பழமையான நாகரிகங்களில் ஒன்றான எகிப்து நாகரிகம், உலகத்தின் கம்பீரமான மற்றும் மிக நீளமான நதிகளில் ஒன்றான நைல் நதிக்கரையில்தான் தழைத்தோங்கியிருந்தது. இது ஆப்பிரிக்கக் கண்டத்தில்தான் இருந்தது. மூளையில் ஏற்படும், அல்லது உருவாக்கப்படும் அபிப்பிராயங்கள் கேள்வி கேட்காமல் கருத்தாக வெளிப்படும்போது இவ்வாறும் நடக்கும்.

மூளைக்குச் செல்லும் தகவல், அது புரிந்துகொள்ளப்படும் விதம், ஆகியன சங்கிலித் தொடர்போல செயல்படக்கூடியவை. இவற்றில் மாற்றம் வேண்டுமானால், சங்கிலித் தொடரில் மாற்றம் வேண்டும். அல்லது புதிய தொடர்புகள் இணைக்கப்பட வேண்டும். இதைத் தன்னோடு பேசுதல் மூலம் செய்ய முடியும். இதன் மூலம் புதிய புரிதல்களை ஏற்படுத்திக்கொள்ள முடியும். அதற்கு ஏற்றாற்போல், உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளில் மாற்றங்கள் தானாக வரும். மாற்றம் நிகழ, அதன்படி உருவகங்கள் மாற்றம் பெற நம்முள் நிகழும் உரையாடல்கள்தாம் காரணமாக இருக்க முடியும். இதை எப்படிச் செய்வது?

0