ஆம்னெஸ்டி இண்டெர்நேஷனல் கையெழுத்து இயக்கப் பிரசுரத்தின் தமிழாக்கம்
ஆம்னெஸ்டியின் பிரசாரத்துக்கு ஆதரவு தாருங்கள். இலங்கையில் நீதி கோருங்கள். 080670-06666 என்ற செல்பேசி எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் தாருங்கள். அல்லது இந்த இணையத்தளத்துக்குச் சென்று கையெழுத்திடுங்கள்.
இலங்கையில் தற்போது நடந்துவரும் மனித உரிமை மீறல்களை நிறுத்துவதாகவும் உள்நாட்டுப் போரின்போது நடைபெற்ற போர்க்குற்றங்களை விசாரணை செய்வதாகவும் இலங்கை அரசு உறுதிகூறியிருந்தது. இலங்கை சொன்னபடி நடக்குமாறு அதனை வற்புறுத்தவேண்டும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைக் கேட்டுகொண்டு ஆம்னெஸ்டி இண்டெர்நேஷனல் இந்தியா ஒரு இணையக் கோரிக்கைப் பிரசாரம் ஒன்றை நடத்தியது. ஆகஸ்ட் மாதம் அதில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் கையெழுத்திட்டிருந்தனர்.
ஆண்டுமுழுதும் நடக்கப்போகும் இந்தப் பிரசாரத்தின் இரண்டாம் கட்டத்தை ஆம்னெஸ்டி இண்டெர்நேஷனல் இப்போது செயல்படுத்த உள்ளது. இந்தியக் குடிமக்களின் கையெழுத்துடன் ஓர் இணையக் கோரிக்கை, ஐ.நாவின் மனித உரிமை மீதான யுனிவர்சல் பீரியாடிக் ரிவ்யூ (யூ.பி.ஆர்) நடக்கப்போவதற்கு முன்பாக, நவம்பர் 1-ம் தேதி அன்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அளிக்கப்படும்.

‘இலங்கையில் நீதி கோருவோம்’ பிரசாரம், ஆகஸ்ட் மாதத்தில் வெறும் ஏழே நாள்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோரின் பங்களிப்பைப் பெற்றது. அதில் பெரும்பாலானோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். ஆம்னெஸ்டி இண்டெர்நேஷனலின் இரண்டாம் கட்டப் பிரசாரம் இந்தியா முழுமையிலிருந்தும் ஐந்து லட்சம் பேரின் பங்களிப்பைப் பெற விழைகிறது.
ஐ.நாவின் யூ.பி.ஆரில் தொடங்கி அக்டோபர் 2013-ல் இலங்கையில் நடக்க உள்ள காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்வுவரை, இலங்கை சர்வதேச கவனத்தை ஈர்க்கப்போகிறது.
சர்வதேச அளவிலும் பிராந்தியத்திலும், இந்தியா மனித உரிமையில் தலைமை வகிக்கவும் ஓர் ‘உண்மையான குடியாட்சி’யாக நடந்துகொள்ளவும் செய்யும் ஓர் இயக்கத்தில் ஆம்னெஸ்டி இண்டெர்நேஷனல் சேர்ந்துகொண்டுள்ளது என்றார் ஆம்னெஸ்டி இந்தியாவின் தலைமை நிர்வாகி ஜி. அனந்தபத்மநாபன்.
‘இந்தியா தன் தென் அண்டை நாட்டின்மீது கட்டாயம் அழுத்தம் செலுத்தவேண்டும். உலகளாவிய தலைமை நாடு, உண்மையான குடியாட்சி என்று கருதப்படவேண்டும் என்று இந்தியா நினைத்தால், ஐ.நா பாதுகாப்புச் சபையில் பெரும் பங்கு வகிக்கவேண்டும் என்று இந்தியா கருதினால், உள்நாட்டிலும் சரி, பிராந்தியத்திலும் சரி, மனித உரிமை சார்பாக வலுவான தலைமைத்துவத்தைக் காண்பிக்கவேண்டும்’ என்றார் அவர்.
நவம்பரில், இந்தியாவின் தலையீட்டில் இலங்கையின் மனித உரிமை நிலை, யு.பி.ஆரால் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். ராஜபக்ஷே அரசின் கடந்த நான்கரை ஆண்டுகால மனித உரிமைச் செயல்பாடுகள் கேள்விக்கு உள்ளாக்கப்படும். ஐ.நாவால் தரப்படும் பரிந்துரைகளுக்கு இலங்கை பதில் சொல்லவேண்டிவரும். 2008-ல் இலங்கை, பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது ஐ.நா அளித்த பரிந்துரைகளைச் செயல்படுத்த அந்த நாடு தவறிவிட்டது. இந்த ஆண்டு, இலங்கையை வற்புறுத்தி நிஜமான மாற்றத்தைக் கொண்டுவர இந்தியாவுக்கு ஒரு பெரும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
‘இலங்கையுடன் தான் நெருங்கிய உறவு கொண்டுள்ளதாக இந்தியா சொல்கிறது. அப்படியானால், இலங்கை அரசிடம் அல்ல, இலங்கை மக்களிடம்தான் அதன் உண்மையான கடப்பாடு உள்ளது என்பதை இந்தியா புரிந்துகொள்ளவேண்டும்’ என்கிறார் அனந்தபத்மநாபன்.
இந்தியப் பிரதமர் இலங்கை அரசுக்குக் கீழ்க்கண்ட வகையில் அழுத்தம் தரவேண்டும் என்கிறது இந்தக் கோரிக்கை:
- சித்திரவதை, காணாமல்போதல், கொலைகள் ஆகியவை தொடர்பான வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவேண்டும்.
- ஐ.நாவின் தனி விசாரணையை அனுமதிக்கவேண்டும். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தன் வேலையைத் திறம்படச் செய்ய அனுமதிக்கவேண்டும்.
- வழக்கே போடாமல் கைது செய்தவர்களையும் சர்வதேச மனித உரிமை எதிர்பார்க்கும் தரத்துக்கு அருகில் வராத ‘நெருக்கடி நிலை’ அல்லது ‘தீவிரவாத எதிர்ப்பு’ சட்டத்தின்கீழ் கைது செய்தவர்களையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும்.
2008-ல் இலங்கை மேலே குறிப்பிட்டவற்றை ஏற்றுக்கொள்வதாகச் சொன்னது. ஆனால் சில மாதங்களுக்குள்ளாகத் தான் கொடுத்த வாக்கைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டது. வலுவான அண்டை நாடாக உள்ள இந்தியா தன் செல்வாக்கைப் பயன்படுத்தி சாதாரண இலங்கை மக்களின் மனித உரிமை காக்கப்படுவதில் தனக்குள்ள உறுதியை நிலைநாட்டவேண்டும்.
இந்தப் பிரசாரத்துக்கான உங்கள் ஆதரவைக் காண்பிக்கவும் இலங்கையில் நீதியைக் கோரவும் 080670-06666 என்ற செல்பேசி எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் தரவும் அல்லது கீழ்வரும் தளத்துக்குச் சென்று கையெழுத்திடவும்.

0