ஆழி பெரிது!
சில வரலாற்றுப் புதிர்கள்
வேத காலத்தை ஒரு பொற்காலமாகவோ ஆதர்சமாகவோ சித்தரிக்கும் எண்ணம் இக்கட்டுரைத் தொடருக்கு இல்லை என்பதை வாசகர்கள் உணர்ந்திருப்பார்கள். வேத ரிஷிகள் அல்லது கவிகள் வேறெந்த பண்டைய சமுதாயத்தையும் போன்ற சமுதாயத்திலேயே வாழ்ந்தார்கள். நன்மைகளும் தீமைகளும் குறைகளும் நிறைகளும் அதிகார மையங்களும் விளிம்பு நிலைகளும் கொண்ட சமுதாயம். ஆனால் இந்த கவிகள் இச்சமுதாய கட்டுப்பாடுகளுக்கு அப்பால் தங்கள் பார்வையை அகமும் புறமும் செலுத்தினார்கள். அவர்கள் கண்டுணர்ந்த உண்மைகளை பாடல்களாக வெளிப்படுத்தினார்கள். இந்த ரிஷிகள் யார்? குல மூப்பர்கள், குருக்கள், பெண்கள், புரோகிதர்கள், தொழிலாளிகள், மருத்துவர்கள் என பல்வேறு தொழில்களை செய்தவர்கள். சமுதாயத்தின் பல்வேறு அடுக்குகளிலிருந்து வந்தவர்கள். மிக முக்கியமாக பல்வேறு சித்தாந்தப்பற்றுகளுடன் சத்தியத்தை தேடி அப்பற்றுகளையும் ஒரு தருணத்தில் துறந்தவர்கள்.
இவர்களின் தரிசனங்களின் தொகுப்பே வேத இலக்கியம் என்பது. இது ஒரு குறிப்பிட்ட இனத்துக்கோ அல்லது சாதிக்கோ அல்லது மொழியினருக்கோ சொந்தமானது அல்ல. ஆனால் மேற்கத்திய இந்தியவியலாளர்கள் இந்திய வேதங்களை ஆராய்ந்த போது அவற்றை தாம் கொண்டிருந்த இனவாத அடிப்படையிலேயே ஆராய்ந்தார்கள். குறிப்பாக தஸ்யு-ஆரிய என்பதை இன அடிப்படையிலான வேறுபாடாக கண்டார்கள். இதனை ஒரு வரலாற்று உண்மையாக நம் மீது சுமத்தினார்கள். நம்மவர்களும் இதை உண்மை என நம்பி ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் இந்திய மரபுவழி சிந்தனையாளர்களும் சரி சுய புத்தி கொண்ட ஆராய்ச்சியாளர்களும் சரி இந்த இனவாதக் கோட்பாட்டினை எதிர்த்தார்கள்.
உதாரணமாக சுவாமி விவேகானந்தர். கடுமையான ஏளனத்துடன் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
‘நமது ஐரோப்பிய ஆய்வாளரின் கனவில் இந்தியா முழுக்க முழுக்க அடர்ந்த கருமை விழிகளுடனான பூர்விக வாசிகளால் நிரம்பப்பட்டிருக்கிறது. பின்னர் வெண்ணிற ஆரியர்கள் வருகின்றனர், எங்கிருந்து என்பது கடவுளுக்குதான் வெளிச்சம். சிலர் அவர்கள் மத்திய திபெத்திலிருந்து வந்ததாக கருதுகின்றனர். தேசப்பற்றுடைய ஆங்கிலேயர்கள் ஆரியர்கள் சிவப்பு தலைமுடி கொண்டதாக கருதுகின்றனர். நமது ஐரோப்பிய ஆய்வாளரின் முடி கருமையானதாக இருந்தால் ஆரியர்களின் முடி நிறமும் கருப்பாகி விடும். சமீபகாலமாக சுவிஸ் தேச ஏரி ஓரங்கள் ஆரிய இனத்தின் தாயகமென அறிவிக்கப்படுகிறது. அவர்கள் அந்த ஏரியிலேயே இந்த ஆராய்ச்சி வினோதங்களுடன் மூழ்கிவிட்டாலும் பாதகமில்லை என கருதுகிறேன். ஆண்டவர் ஆரியர்களையும் அவர்களது பிறப்பிடங்களையும் ஆசிர்வதிப்பாராக.ஆனால் இந்த ‘ஆராய்ச்சி’ களைப் பொறுத்த மட்டில் ஒரு உண்மை என்னவென்றால் நம் வேத புராணங்களில் ஒரு வார்த்தை, ஒன்று கூட, ஆரியர்கள் இத்தேசத்திற்கு வெளியே இருந்து வந்தார்கள் என்று கூறச் சான்றாக இல்லை…அதைப்போல சூத்திரர்கள் ஆரியர்களல்ல என்பதும் (ஆரிய இனவாதம் போன்றே) பகுத்தறிவற்ற மடத்தனம். பாரதியர் அனைவருமே ஆரியர் , ஆரியரன்றி வேறல்ல. ‘
விவேகானந்தருக்கு பல பத்தாண்டுகளுக்குப் பின்னர் சாதியத்தின் உருவாக்கத்தை ஆராயப் புகுந்த பாபா சாகேப் அம்பேத்கர் விவேகானந்தரின் முடிவை இன்னும் அதிகாரபூர்வமான ஆதாரத்தன்மையுடன் முன்வைக்கிறார்:
”ஆரிய படையெடுப்பு என்பது புனையப்பட்ட ஒரு கதை. இந்த புனைவு சிலரை மனமகிழ்விக்க உருவாக்கப்பட்ட நம்பிக்கைகளாலும் பிறகு அந்த நம்பிக்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சித்தாந்தங்களாலும் கட்டப்பட்டது.
அறிவியல் ஆராய்ச்சி என்ற பெயரில் செய்யப் பட்ட வக்கிரத்தின் விளைவே இந்தக் கோட்பாடு. ஆரிய இனக் கோட்பாடு உண்மைகளின் அடிப்படையில் பரிணமித்ததல்ல. மாறாக முதலில் ஒரு கோட்பாட்டினை எடுத்துக் கொண்டு அதன் அடிப்படையில் அதனை நிரூபிக்க பொறுக்கியெடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒன்று. ஒவ்வொரு புள்ளியிலும் தகர்ந்து விழும் கோட்பாடு இது.”
வேத இலக்கியங்களில் சொல்லப்படும் ஆரியர்கள் மற்றும் தஸ்யுக்கள் குறித்து அம்பேத்கர் கூறுகிறார்:
”இது குறித்து என் முடிவுகள் பின்வருமாறு:
1. வேதங்கள் ஆரியர் என்போரை ஒரு இனமாக அறியவில்லை.
2. ஆரிய இனம் என்ற ஒன்று படையெடுத்ததற்கோ அது இங்கிருந்த தஸ்யுக்கள் எனும் பூர்விக குடிகளை அடிமைப்படுத்தியதற்கோ எவ்வித சான்றுகளும் வேதத்தில் இல்லை.
3. ஆரிய/தஸ்யு வித்தியாசங்கள் இனரீதியிலானவை என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.
4.வேதங்கள் ஆரியரும் தஸ்யுகளும் வெவ்வேறு தோல் நிறம் கொண்டவர்கள் என கருத இடம் தரவில்லை. பிராமணர்கள் ஆரியரெனில் தலித்துகளும் ஆரியரே. பிராமணர்கள் திராவிடர்களெனில் தலித்துகளும் அவ்வாறே. ‘
இன்றைக்கு தொல்லியலும். மரபணுவியலும் சத்தியமென சொல்லும் வார்த்தைகளை அம்பேத்கர் வேதங்களை தன் பார்வையில் ஆராய்ச்சி செய்து சொல்லிவிட்டார்.
இன்றைய ஆராய்ச்சியாளர்கள் இது குறித்து கூறுவதையும் சிறிது காணலாம்:
ஆரிய இனவாத கோட்பாடு மொழியியல் புனைவுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. பிறகு இனவாத வரலாறாக முன்வைக்கப்பட்டது. ஆனால் இக்கோட்பாட்டை உருவாக்கியவர்கள் ஒரு மொழி எவ்விதமாக சமூக பரிமாணம் அடைகிறது என்பதை சரியாகக் கணிக்கத் தவறிவிட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். மொழிகளின் பரிணாமம் என்பது மிகவும் மெதுவாக நடக்கக்கூடியது. மொழிக்குடும்பங்கள் என்று இன்று அறியப்படுபவை மிகப் பழமையான ஒரு வடிவிலிருந்து உருவானவை.
அந்த மூத்த வடிவங்களின் காலத்தை மிகப் பழங்காலத்துக்கு தள்ளுகின்றன. எனும் முறையில் அவை பழமை வாய்ந்தவை ஆகும். உதாரணமாக இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பங்களை சார்ந்த மொழியாக கருதப்படுபவை ஆரிய-படையெடுப்பு வாதிகளால் அண்மைக்கால தோற்றமுடையவை என கூறப்பட்டன. ஆனால் நவீன ஆராய்ச்சியாளர்கள் (உதாரணமாக ரென்ஃப்ரு) அனதோலிய பிரதேசங்களில் கிமு 7000 காலகட்டத்திலேயே இம்மொழி பேசுபவர்கள் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
ஆரிய-படையெடுப்புக் கோட்பாட்டாளர்களால் இப்படையெடுப்பு அல்லது மக்கள் புலப்பெயர்ச்சி நிகழ்வுகள் எப்போது நடைபெற்றதாகக் கணிக்கின்றனர்? அவர்கள் கணக்கின் படி கிமு இரண்டாயிரம் ஆண்டுகளில் மேற்காசியாவிலும் பின்னர் கிமு 1500 காலகட்டங்களில் வட இந்தியாவிலும் நிகழ்ந்திருக்க வேண்டும். இதன் அடிப்படையிலேயே கிமு 2700 களிலேயே உச்சமடைந்த ஹரப்பா பண்பாட்டுக்கும் வேத பண்பாட்டுக்கும் எவ்விதத் தொடர்பும் இருக்க முடியாது என சொல்லப்படுகிறது. ஆனால் இந்தோ-ஐரோப்பிய மொழி பேசுபவர்கள் என அறியப்படும் ஹிட்டைட்கள் எனப்படுவோர், அனதோலியாவில் கிமு 2200 காலகட்டங்களிலும், ஹாஸைட்கள் எனப்படுவோரும் மற்றும் மித்தானிகள் என்போரும் கிமு 1600 களிலும் அரச பரம்பரைகளை நிறுவும் அளவுக்கு பண்பாடும் வலிமையும் அடைந்திருந்தார்கள். இந்த வரலாற்று உண்மைகள் ஆரியர்கள் அல்லது இந்தோ-ஐரோப்பிய மொழி பேசுவோர் ஏதோ நாடோடிகளாக, அல்லது நிலையான வாழ்க்கையற்ற புலம் பெயர்வோராக நகர்ந்த படி இருந்தார்கள் என்பதைக் கேள்விக்குள்ளாக்குகின்றன.
மேலும் இந்திய இலக்கியங்கள் எதிலும் -வேத-பௌத்த-ஜைன-தமிழ் இலக்கியங்களில்- இத்தகைய புலப்பெயர்வு அல்லது படையெடுப்பின் நினைவு குறித்து எவ்வித குறிப்பும் இல்லை. ஜைன இலக்கியங்களிலும் தஸ்யு என்பது இனரீதியான பதமாக பயன்படுத்தப்படவில்லை குணரீதியிலான பதமாகவே பயன்படுத்தப்படுகிறது.
இன்று சிந்து-சரஸ்வதி பண்பாடு என அறியப்படும் ஹரப்பா பண்பாட்டு கூறுகளுக்கும் பிற்கால பாரத பண்பாட்டு அம்சங்களுக்கும் மறுக்கவியலாத தொடர்ச்சியான தொடர்புகள் தெளிவாக உள்ளன. சமய-ஆன்மிக கோட்பாடுகள் மட்டுமல்ல சாதாரண எடைகற்களில் கூட இந்த தொடர்பு அறுந்து படாமல் உள்ளது. உதாரணமாக அர்த்த சாஸ்திரம் கூறும் அங்குலம் என்பதன் அளவு 17.86 மில்லி மீட்டராகும். இது சிந்து சரஸ்வதி பண்பாட்டில் கண்டறியப்பட்ட அளவான 17.7 மில்லி மீட்டரிலிருந்து பெறப்பட்டதாகும் (டி.பி.அக்ரவால், Ecological Factors and the Harappan Civilisation) .













