வீட்டுக் கதை

சில மாதங்களுக்குப்பின் மீண்டும் கலிஃபோர்னியா வருகிறேன். சின்ன வயதில் கேட்ட மூன்று நாட்டவர்கள் வானத்தில் பறக்கும்போதே தங்களது நாட்டைக் கண்டுபிடிக்கும் (அதாவது இந்தியாவைக் கிண்டலடிக்கும்) ஜோக்கைப்போல் கலிபோர்னியாவின்மேல் பறக்கும்போதே சிலிக்கான் வாசனை மூக்கைத் தொலைக்கிறது. ப்ளேனில் எல்லோரும் திடிரென்று #include <stdio.h> என்றெல்லாம் ப்ரோக்ராம் உளறுகிறார்கள்.

விமானம் சான் ஃப்ரான்சிஸ்கோவில் எப்போதும் படர்ந்திருக்கும் மேகத்தைக் கிழித்தபடி அதிவேகமாக நகர்ந்து சான் ஹொசே ஸ்டேஷனில் இறங்கிவிடுகிறது.  ரோடெல்லாம் தங்கமும் வைடூரியமும் கிடைக்கும் என்று நினைத்தலாகாது. பொட்டைக் காடாக எல்லா இடத்திலும் வானம் தெரியும் பாலைவனமாக இருந்த இடத்தில் திடீரென்று ஒரு முப்பது வருடங்களில் உலகம்முழுவதிலும் இருந்து டெக்னாலஜி ப்ரஜைகள் வந்து அடைத்துக்கொண்டிருக்கும் ஓர் artificial சொர்க்கம். எங்கெங்கும் பணச் செழிப்பு தெரிகிறது. ரேச்சல் வெங்கடாசலம் என்றெல்லாம் பெயர்கள் காணக் கிடைக்கிறது.  சரவணபவன் இருக்கிறது. தக்காளி ரசத்தை சூப் என்கிறார்கள். மினி டிபன் முதற்கொண்டு அடை அவியல், கைமா இட்லிவரை எல்லாம் கிடைக்கிறது. ஏப்பம் உள்பட. எந்தக் கம்பெனி போனாலும் வந்தாலும் இந்தியன் ஸ்டோர்கள் மாறுவதே இல்லை. காய்ந்துபோன டஜன் கறிவேப்பிலைகளை ப்ளாஸ்டிக் பையில் போட்டு ஒரு டாலருக்கு விற்றுவிடுகிறார்கள்.

இங்கிருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ்தான் அமெரிக்காவிலேயே rudest நகரமாம். சாண்டா க்ளாராவில் பெல்ட் போடாத கார் ட்ரைவர்கள் வருகிறேன் வருகிறேன் என்று சித்த ஞாழி காக்கவிட்டு 101 ஹைவேயில் கம்ப்யூட்டர் இன்ஜினியர்களுடன் மல்லுக்கட்டி ப்ளேனை எடுக்கும்முன் எப்படியோ கொண்டுவந்து போட்டுவிடுகிறார்கள்.

0000

போன வருடம் படித்த ஆங்கில வரிசையில் எனக்குப் பிடித்த புத்தகம் பில் ப்ரைசன் (Bill Bryson) எழுதிய At Home – A Short History of Private Life என்ற புத்தகம். பில் ப்ரைசன் ஓர் ஆதர்ச எழுத்தாளர். படிக்கும் ஒவ்வொருவரிடமும் 1-1 பேசுகிறமாதிரி எழுதக்கூடியவர். ப்ரபஞ்சத்தில் இருந்து பெருவெடிப்பு, கல் மனிதன் எனக் கடினமான விஷயங்களை A Short history of nearly everythingல் விளக்கியிருப்பவர். ஓவ்வொரு புத்தகத்திலும் புதியவைகளைமட்டுமே எழுதக்கூடியவர்.

ஐம்பதுகளில் இருந்த அமெரிக்காவைப் பற்றி இவர் எழுதிய சுயசரிதையான The Life and Times of the Thunderbolt Kid எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. ஓரிரு அத்தியாயங்களை இரண்டு மூன்று முறைகூடப் படித்திருக்கிறேன். விழுந்து விழுந்து சிரித்திருக்கிறேன். ஓரிருவருக்குப் பிறந்தநாள் பரிசாக இந்தப் புத்தகத்தை அளித்திருக்கிறேன்.படித்தால் உங்களின் குழந்தைப் பருவத்தை மீண்டும் நினைத்துப் பார்ப்பீர்கள். படித்தபடியே சிரிப்பு வரவில்லை என்றால் நீங்கள் டாக்டரை நாடவேண்டிவரலாம்.

தற்போது இங்கிலாந்தில் வசிக்கும் ப்ரைசனின் வீட்டில் ஒரு நாள் எங்கிருந்தோ தண்ணீர் ஒழுகுகிறது. அவர் ஆட்டிக்(Attic) என்னும் வீட்டின் உட்கூரையின்மேலிருக்கும் அறையில் ஏறிப் பார்க்கிறார்.  முதன்முறையாக அந்த அறைக்கு வரும் அவருக்குத் தோன்றுவது, உலகத்தைப் பற்றியெல்லாம் பேசும் எனக்கு என் வீட்டைப் பற்றியே தெரியாத விஷயங்கள் எத்தனை இருக்கிறது!

இதையடுத்து அவர் தன் வீட்டில் இருக்கும் ஒவ்வோர் அறையாக நம்மை அழைத்துச்செல்கிறார். அந்த அறையின் பின்னணியில் இருக்கும் வரலாறை ஆராய்ந்து விளக்குகிறார். இப்படி உருவானதுதான் இந்தப் புத்தகம் At Home – A Short History of Private Life.

டைனிங் டேபிளில் ஏன் உப்பும் மிளகும்மட்டும் வைக்கிறார்கள், forkல் ஏன் நான்கு பற்கள்மட்டும் இருக்கிறது, பாத்ரூம் உருவானது எப்படி எனச் சுவாரசியமான, ஆனால் அதிகம் பிரசித்தம் இல்லாத விஷயங்களை ஆராய்கிறார். ப்ரசன் சொல்லவருவது உங்கள் வீட்டிற்கும் வரலாறுக்கும் சம்பந்தமில்லை என நினைக்காதீர்கள். வரலாறு கடைசியாக முடிவது வீட்டில்தான்!

ரோமானியர்கள்தான் குளியலறைப் பழக்கத்தைக் கொண்டுவந்தார்கள். அதற்குமுன் கிரேக்கர்கள் Gymnasium என்றோர் இடத்தை வைத்திருந்தார்கள். Gymnasium என்றால் ’ஆடையில்லாத அறை’ என்று அர்த்தம். கொஞ்சம் உடலை வியர்க்கவிட்டுவிட்டுக் குளித்த இடம்தான் அது. அவர்களோடு ஒப்பிடும்போது ரோமானியர்கள் கொஞ்சம் சொகுசானவர்கள். அவர்கள் குளியறை பல ஏக்கர்களுக்குப் பரந்து விரிந்தது. அதனுள் சலூன், நூலகம், ப்யூட்டி பார்லர், டென்னிஸ் கோர்ட், ரெட் லைட் ஏரியா என்று பலதும் இருந்ததாம்.  நகரத்தில் நடுவில் இருந்த இந்தக் காமென் குளியலறைதான் அவர்களின் டைம் பாஸ். கொடுத்துவைத்தவர்கள்!

ரொம்பவும் அபாயகரமான அறை அல்லது இடம் மாடிப்படிதான்.  அமெரிக்காவில் வருடத்திற்குப் பன்னிரெண்டாயிரம் பேர் கீழே விழுகிறார்கள். மீண்டும் எழுவதே இல்லை. அவர்கள் விழுவது படிகட்டிலா, மொட்டை மாடியிலிருந்தா, அல்லது மரக் கிளையிலிருந்தா எனத் தெரிவதில்லை. இங்கிலாந்தில் வருடத்திற்குச் சுமார் மூன்று லட்சம் பேர் படிகட்டிலிருந்து விழுந்து டாக்டர் க்ளினிக் செல்கிறார்கள். இந்த மாடிப் படி பற்றியே MIT ப்ரொஃபஸர் ஒருவர் ஆராய்ச்சி செய்திருக்கிறார். இதன்படி இந்த நம்பர்கள் ரொம்பவே குறைந்தவை என்கிறார் அவர். கார் விபத்திற்கு அடுத்தபடி அதிகமாக நடக்கும் விபத்து இந்த மாடிப்படிச் சறுக்கல்தான்.  ஆனாலும் மற்ற இடங்களுக்குச் செய்யப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மாடிப்படிகளுக்குச் செய்யப்படுவதில்லை என்பதுதான் சோகமே.  நியுயார்க்கில் ஒரு சப்வேயில் சறுக்காமல் இருக்கப் போடப்பட்டிருந்த ரப்பர் படிகட்டுகள் எங்கு ஆரம்பிக்கின்றன என்று தெளிவாக தெரியவில்லை. அதனால் சுமார் ஆறு வாரங்களில் 1400 பேர் விழுந்துவிட்டிருந்தார்கள். அப்புறம் அதை விழுந்தடித்துக்(!)கொண்டு மாற்றினார்கள்.

கிட்டத்தட்ட எல்லோரும் ஏதாவது தருணத்தில் மாடிப்படியில் இருந்து சறுக்கி விழுகிறார்கள்.  2,222 முறைகளில் ஒரு முறையாவது கண்டிப்பாக நீங்கள் ஒரு படியாவது தவறுவீர்களாம். 63,000 முறைகளில் ஒரு முறையாவது ஒரு சின்ன விபத்தாவது நேருகிறதாம். முப்பது லட்சம் முறைகளில் ஒரு முறையாவது ஹாஸ்பிட்டலுக்கு செல்ல நேர்கிறதாம்.  திருமணமாகாதவர்களும் கொஞ்சம் ஒல்லியானவர்களும் அதிகம் விழுகிறார்களாம்.  ஒருமுறை சறுக்கினீர்கள் என்றால் மீண்டும் சறுக்கும் வாய்ப்பு அதிகமாகிறதாம்.  ஏறுவதைவிட இறங்கும்போதுதான் விபத்துகள் அதிகம் நடக்கிறதாம். நல்ல ஆரய்ச்சி, ந.ப.

இப்படிக் கீழே விழுவதை ஒரு ஸ்லோ-மோஷனில் ஓட்டிப் பார்க்கலாம். படிகட்டில் இறங்குவதே ஒருவிதக் கீழே விழுதல்தான். என்ன, நாம் கொஞ்சம் கண்ட்ரோலில் இருக்கிறோம். ஆகவே விழாமல் இறங்குகிறோம். சட்டென அடுத்த படி சறுக்கிவிட்டால் இந்த மனிதன் இறங்கவில்லை, சறுக்க ஆரம்பித்திருக்கிறான் என மூளைக்குப் புரிந்து உங்கள் ரிஃப்ளக்ஸ் இயக்கத்தில் இறங்க ஆகும் நேரம் 190 மில்லி செகண்டுகள்.  இந்தப் பூதாகர இடைவெளியில் நீங்கள் சரியாக ஏழு இஞ்ச்கள் இறங்கியிருப்பீர்கள். விழலாம், அல்லது விழாமல் சுதாரித்துக்கொண்டும்விடலாம்.

இப்படியான மாடிப்படியில் அதிகம் கவனமாக இருக்கவேண்டிய இடம் முதலும் முடிவும்தான். மூன்றில் ஒரு விபத்து முதல் படியிலோ கடைசிப் படியிலோ நடக்கிறது. மிச்ச இரண்டு பங்குகள் முதல் மூன்று படிகளிலோ கடைசி மூன்று படிகளிலோ நடக்கிறது. ஆக நடுவில் மோட்டு வளையத்தை பார்த்தபடி நடக்கலாம். திடிரென்று ஒரு படி இருக்கக்கூடிய இடங்களும் நான்குக்கும் குறைவான படிகள் இருக்கக்கூடிய பிரதேசங்களிலும் அஜாக்கிரதை அதிகம் இருக்கிறது.

பெட்ரூம் பற்றிக்கூடச் சுவாரசியமான பல குறிப்புகள் இருக்கின்றன. எஜமானர்கள் தூங்கும் படுக்கைகளின் கால் பகுதியில் வேலைக்காரர்கள் படுத்து உறங்கியிருக்கிறார்கள். மன்னர் ஐந்தாம் ஹென்றி அவர் மனைவியுடன் கூடியபோது அவருடைய சமையல்காரரும் வேலைக்காரரும் உடன் இருந்ததாகத் தெளிவான குறிப்புகள் இருக்கின்றன. படுக்கையின் மேல் திரைச்சீலை ஒன்று இருந்திருக்கலாம் என்று சந்தேகத்துடன் எழுதிய குறிப்பும் மங்கலாக இருக்கிறது.

பன்சாலிப்பூர்

போன வாரம் எழுதியிருந்த eclectic writing பற்றி இன்னமும் கொஞ்சம் கதைக்கலாம். அன்பர் ஒருவர் “நீர் சொல்ல வருவது வேலிக்கு ஓணான் சாட்சியாக இருக்கிறது. எதை வேண்டுமானாலும் எழுத இது ஒரு சாக்கு” என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். இருக்கலாம், யோசித்துப் பார்த்தால் அதட்டல் தொனியோடு வரும் குறுக்கு வழிப் புத்தகங்களுக்கும் ’அழகி கொலை’ என மூன்றாவது பாராவில் மூன்று வரி எழுதிவிட்டுப் பாதி பக்கத்துக்குப் பாடியின் பயமுறுத்தும் போட்டோ போடுகிற தினசரிகளுக்கும் நடுவே பத்திரிக்கைகளைதான் சாமானியர்கள் அதிகம் படிக்கிறார்கள்.  காரணம் அவற்றை அணுக முடிகிறது என்பதுதான்.  ஏற்கனவே சொன்னமாதிரி எத்தனை பதற்றமான /சந்தோஷமான சூழ்நிலையிலும் படித்துவிட்டுப் போகக்கூடிய எளிய கட்டுரைகளைதான் மனித மனங்கள் விரும்புகின்றன. நான் சொன்னால் அடிக்க வருவீர்கள் என்பதால் சமுகவியலாளர்களைத் துணைக்கு அழைத்துக்கொள்கிறேன்.

உதாரணத்துக்கு எகனாமிஸ்ட் ஜார்ஜ் லோவென்ஸ்டைன் செய்து காண்பித்த ஓர் ஆய்வு. அதில் கலந்து கொண்டவர்களிடம் ஒரே ஒரு கேள்வி கேட்கப்பட்டது: ’இன்றிரவு பார்ப்பதற்கு ஒரு படமும், பின்னொரு நாள் பார்ப்பதற்கு ஒரு படமும் தேர்ந்தெடுங்கள்’.

ரொம்பவும் யோசித்து குழப்படி செய்யாமல் மக்கள் இன்றிரவு பார்ப்பதற்குத் தேர்ந்தெடுத்த படங்கள் காமெடிப் படங்கள் அல்லது ப்ளாக்பஸ்டர்கள். அதாவது பஞ்சதந்திரம் மற்றும் எந்திரன். மற்றொரு நாள் பார்ப்பதற்கு பத்திரமாகச் சேர்த்து வைத்த படங்கள் முக்கியமானவை – இருவர், ஹே ராம் மற்றும் நந்தலாலா போன்ற படங்கள்.

இதில் விஷயம் என்னவென்றால் அந்த ‘நல்ல’ படங்களைப் பார்க்கும் நாள் வரும்போது காவலனோ, சிறுத்தையோ, ஒட்டகச்சிவிங்கியோ ஏதாவதுஒரு காமெடி / ப்.பஸ்டர் படம் வந்துவிடும் ‘இன்று போய் நாளை வா’ கதைதான்.

இதன் பாடம் மக்கள் philistines  என்பதல்ல, அவர்களின் தேர்ந்தெடுப்புகள் எல்லா நேரத்திலும் ஒரேமாதிரியாக இருப்பதில்லை. எத்தனை பேர் ‘இந்த ஞாயித்துக்கிழமை எல்லா பில்லையும் டாலி செஞ்சு பாங்க் பாலன்ஸைக் கணக்கு பண்ணிடலாம்’ என்று நினைத்துக்கொண்டு வேட்டியை மடித்துக் கட்டிவிட்டு, கடைசியில் டிவி முன் தவமிருக்கிறார்கள். மக்களின் ஆசைகள் குறுகிய கால, நீண்ட காலத் திட்டங்களுக்கு நடுவே ஊசலாடிக்கொண்டிருக்கின்றன.

ஆக, சொல்ல வந்தது eclectic writing என்பது சுவாரசியமாக எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதுகிறேன் பேர்வழி என்ற சாக்கில் மக்களை நம்பவைத்துச் சற்றே கடினமான விஷயத்தையும் மக்களின் மனத்தினுள் கடத்தும் சாகசம். I rest my case, யுவர் ஆனர்.

0000

ஒத்திப்போடுதல் நமது வாழ்வுடன் இரண்டறக் கலந்த செயல். மேலே சொன்ன நல்ல படமா / லைட் படமா ஆய்வில் வந்த முடிவுக்குக்கூடக் காரணம் ஒத்திப்போடுதல்(Procrastination)தான். கேம் தியரி ஆய்வாளர் ஜேம்ஸ் ஷெல்லிங் இதை ’உங்கள் மனத்தில் இருக்கும் ’divided self’ செய்யும் காரியம்’  என்கிறார். நீங்கள் ஏதாவது ஒன்றை முடிவு செய்யும்போது உங்கள் மனத்தில் ஒரு பாராளுமன்றம் கூடுகிறது. ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் வாதிடுகின்றன. அதாவது குறுகிய கால ஆசைகள் கொண்ட மனத்தின் ஒரு பாதியும், நீண்ட நாள் குறிக்கோள்கள் கொண்ட உங்களின் மற்றொரு பாதியும் திட்டித் தீர்த்துக்கொண்டு கடைசியில் அனேகமாக வெற்றி பெறுவது குறுகிய கால ஆசையே.

நாளையிலிருந்து ஜாகிங் செய்யணும்,  அடுத்த வாரம் முதல் சிகரெட்டுக்குத் தடா,  இதுதான் என்னோட லாஸ்ட் குவார்டர் மாமே என்று எத்தனையோ நீண்ட நாள் குறிக்கோள்கள் உங்களுக்கு முன் இருக்கும் ஷிவாஸ் ரிகலின் உடனடி கிக்கினால் தள்ளிப்போடப்படுகின்றன.

ஒத்திப்போடுதலை ஒத்திப்போடுவதற்கு ஓர் எளிமையான வழி, நமக்குள்ள தேர்வுரிமைகளை எளிமையாக்குதல். அதாவது 110 சானல்கள் இருந்தாலும், அவற்றை இரண்டு மணி நேரம் மாற்றி மாற்றிப் பார்த்தாலும் வராத திருப்தி, இரண்டே இரண்டு சானல்களை வைத்துக் கொண்டு பிடித்ததைப் பார்க்கும் திருப்தியை போலதான்.

உங்கள் கூகிள் ரீடரில் எத்தனை வலைப்பதிவுகள் படிக்கப்படாமல் கிடக்கின்றன? அவற்றைப் ’பிறகு படிக்கலாம்’ என்று தள்ளிப்போடாமல், தயவு தாட்சண்யம் பார்க்காமல் நீக்கிவிடுங்கள். மிச்சமிருப்பதுமட்டும்தான் நீங்கள் விரும்புவது.

0000

மேலே இருக்கும் இரண்டு விஷயங்கள் இப்படி ஒரே கோட்டில் இணையப்போகின்றன என்று எனக்கு முன்னமே தெரிந்திருக்கவில்லை என்பதுதான் உண்மை.

0000

சஞ்சய் லீலா பன்சாலியின் படங்கள் பன்சாலிப்பூர் என்ற இடத்தில்தான் நிகழ்கின்றன என்று இணையத்தில் நக்கலடித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் ரசிக்கும் சில இயக்குநர்களில் பன்சாலியும் ஒருவர்.  குருதத்போல மக்களிடம் இருந்து ஒதுங்கிப்போய்ப் படமெடுக்கும் இயக்குநர்.

போன வருடக் கடைசியில் வெளிவந்த Guzaarish(வேண்டுதல்) என்னும் படத்தைச் சமீபமாகப் பார்த்தேன்.  Quadriplegia என்னும் ஒருவிதமான பக்கவாத நோயினால் அவதிப்படும் மேஜிக் நிபுணன் தன்னை வலியின்றிக் கொன்றுவிடுமாறு கோர்ட்டில் மனுச் செய்கிறான்.

Euthanasia அல்லது Mercy Killing என்ற சற்றே சர்ச்சைக்கிடமான விஷயம் உலகத்தில் ஆங்காங்கே ஆதரிக்கப்பட்டுவருகிறது. இந்தியாவில் இன்னமும் இது சட்டமாக்கப்படவில்லை. ஆகவே இப்படி வரும் ஒரு வேண்டுதலைக் கோர்ட்டும், அவனைச் சுற்றி இருப்பவர்களும் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பதை உங்கள் டிவி / டிவிடியில் காண்க. ஏனென்றால் நல்ல படங்கள் ஓடுவதில்லை என்ற தியரிப்படி இதுவும் தியேட்டரை விட்டு உடனடியாக வெளியேற்றப்பட்டுவிட்டது.

பன்சாலியின் படங்கள் நடக்கும் இடங்கள் எங்கிருக்கின்றன என நினைக்கவைக்கும்படி ஓர் ஊரில் கதை நடக்கிறது. இந்தக் கதை கோவாவில் நடந்தாலும் அந்த வீடும் இப்படி 1910களில் வாழ்ந்தவர்கள்போல ஐரோப்பிய உடையணிந்த மனிதர்களும் இன்னமும் அங்கே இருக்கிறார்களா என்ன? ஓர் அழகுணர்ச்சிக்காகவே பன்சாலி இப்படிச் செய்கிறார் என்றாலும் மக்கள் இதை ஒரு குறையாக சொல்லிப் படத்தை டிஸ்கவுண்ட் செய்துவிடுகிறார்கள்.

உணர்ச்சியூட்டும் இசை, துல்லியமான ஒளிப்பதிவு, மிகச் சாதுர்யமான வசனங்கள் என எல்லாத் துறைகளிலும் படம் ஜொலிக்கிறது. கழுத்தைமட்டுமே அசைக்கமுடிந்தாலும் அதில்கூட அவார்டு சாகசம் காட்டும் ரித்திக் ரோஷனும், ’சுக்கு முளகு தட்டி என்ன சூப் வச்சு குடியா’ என்று தமிழ்நாட்டில் தட்டிப்போட்டுவிட்டுப் போய்ப் பாந்தமாக அருமையாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராயும், பன்சாலியும், அவருடைய எழுத்தாளர் பவானி ஐயரும் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.

இடுப்பு மடிப்புகளையும் ’ஐ லவ் யூ’ பாடல்களையும் காட்டுக் கத்தல் காமெடிகளையும்மட்டுமே எத்தனை நாள்தான் பார்த்துக் கொண்டிருப்பது? ஒத்திப்போடாமல் பார்த்துவிடுங்கள்.

மறந்து போனவை

டிசம்பரின் கடையிறுதி வாரங்களில் ஆபிஸில் லீவு சொல்லி விட்டு, வீட்டில் இருந்தேன். சுவாரஸ்யமாக எதாவது தென்படுகிறதா என்று டிவியை மேய்ந்தேன். அமெரிக்கத் தாய்மார்கள் எப்படித்தான் மதிய நேர டெலிவிஷனைப் பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை.  எல்லா முக்கிய சானல்களிலும் பொழுதெல்லாம் பேசித் தொலைக்கிறார்கள். பெண்களுக்கான டாக்-ஷோவாம். ராவிலும் இதே தொல்லை. லேட்-நைட் ஷோ. ஹூஹும் நீங்கள் நினைக்கிற மாதிரி இல்லை, அவையும் டாக்-ஷோக்கள் தான். பேசுவது ஆண்கள்.

எல்லா டாக்-ஷோக்களும் ப்ரைம் டைம் ஷோ மாதிரி மார்க்கெட்டிங் செய்யப்பட்டு, அதற்கேற்ற மாதிரி பேச்சுக்கள் திசை திருப்பப்பட்டு, டிவி சீரியல் மாதிரி கமெர்ஷியல் ப்ரேக்குகளுக்காக கரெக்டாக கொக்கிக் கேள்விகள் கேட்கப்படுகின்றன. பதில் ப்ரெக் கே பாஸ்.

என்.பி.சியில் வரும் ஓப்ரா வின்ப்ரே ஷோவிற்கு இது கடைசி சீசன்.  மனுஷி ரிடையர்டாகி விடுவார் என்று பார்த்தால், பெப்பே. ஒரு மணிநேர ஷோவுக்கு OWN(Oprah Winfrey Network) என்று ஒரு சானலே ஆரம்பித்து விட்டார். ஆடின காலும் பேசின வாயும் என்று பழமொழியை மாற்றி விடலாம். தாய்க்குலங்களின் பேராதரவோடு 25 வருடமாக பேசிக் கொண்டிருக்கிறார் ஓப்ரா. ஆங்காங்கே நல்ல விஷயங்கள் செய்தாலும், பேசப்படும் விஷயங்களை விரல்களால் எண்ணிவிடலாம். கைவிட்ட கணவனும், கடன் தொல்லையில் மூழ்கியவர்களும் அவர்களை மீட்க எடுக்கப்படும் முயற்சிகளும், குண்டாவது மற்றும் ஒல்லியாவது மற்றும் ஒன்றும் ஆகாகது எப்படி எனப்படும் ஹவ்-டூ வகை விஷயங்கள்.

நான் பார்த்த ஒரு மதிய ஷோவில், ஹாரி பாட்டர் கதாசிரியர் ஜெ.கே, ரவுலிங்கை ஸ்காட்லாண்டில் சந்தித்து உரையாடினார். ஓப்ரா வாய்க்கு அவல் கிடைக்குமா என முடிந்த மட்டும் தேட, ரவுலிங்கோ நேரெதிர்.  மொத்தத்தில் அந்த பேட்டி சுத்த வேஸ்ட்.   ரவுலிங் ஒரு சொட்டு கண்ணீர் விடவில்லை, பாவம் ஓப்ரா.

ஓப்ரா ஒரு புக்-கிளப் வைத்திருக்கிறார், அவற்றில் பரிந்துரைக்கப்படும் புத்தகங்கள், ஜெயமோகனின் உலோக வேகத்தை தூசி ஆக்கி விடக்கூடியவை.  சமீபத்திய பரிந்துரை, டிக்கின்ஸின் The Tale of Two Cities. நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

நான்சி க்ரேஸ் என்று ‘ரொம்பப் பேசும்’ ஒரு வக்கீல் மாலை நேரங்களில் தொலைந்து போன சிறுவர்களின் கேஸ்களை சத்தமாக பேசியபடியே ஆராய்கிறார்.  மற்ற நேரங்களில் ப்ரைவேட் கோர்ட் நடத்துகிறார். அதை ஒளிபரப்பவும் செய்கிறார்கள். மற்ற குடும்பங்களின் சண்டையை நாமும் அந்த குடும்ப கோர்ட்டுகளில் பார்க்க நேர்கிறது.  மெகா சிரியலாய் இருந்தால் என்ன கோர்ட்டாக இருந்தால் என்ன, நமக்கு தேவை அண்டை குடும்பங்களின் கண்ணீர் வம்புகள்.  ரொம்ப சந்தோஷம்.

இதற்கு நடுவில் ஜெர்ரி ஸ்பிரிங்கர் எனும் ஒரு செக்ஸ் வம்பு டாக் ஷோவும் உண்டு.  இந்த ஷோவில் சக்காளத்தி சண்டை நடக்கிறது. திடீரென்று இரண்டு பெண்மணிகளும் அல்லது இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணுக்காகவோ/ஆணுக்காகவோ தலை மயிரை பிடித்துக் கொள்கிறார்கள். எனக்கு சென்னையின் மெட்ரோ பம்பு சண்டை ஞாபகம் வந்தது, குடம் தான் இல்லை, மற்றபடி அதே குழாயடி கூத்து. Pun Intended.

இவைகளின் நடுவே எலன் டிசெனரஸ் எனும் ஒரு பெண்மணி செய்யும் டாக் ஷோ கொஞ்சம் ப்ராக்டிகலாக தெரிந்தது. ஷோவின் நடுவே எலன் தினம் ஒரு டான்ஸ் ஆடுகிறார், இதைத் தவிர அச்சு பிச்சு கேள்விகள் கேட்பதில்லை, வேண்டுமென்றே ட்ராமா செய்வதில்லை எனப் பட்டது. எதுவாக இருந்தாலும் பகலில் டிவி பார்ப்பது உங்கள் IQவிற்கு ஆபத்து.

இரவுகளின் டாக் ஷோக்கள் 8 மணிக்கு ஜான் ஸ்டுவேர்டில் (Jon Stewart)  ஆரம்பித்து Conan O’Brien, Jay Leno என எல்லோரும் ஜோக் அடிக்கிறார்கள். ஜோக் அடிக்கப்படுபவர்கள் அ.சியல்வாதிகள், ஹாலிவுட்காரர்கள் மற்றும் சாமானியர்கள். ஆக அமெரிக்காவில் யாரையும் விட்டு வைப்பதில்லை.  இப்படி தன்னைப் பற்றியே ஜோக் அடித்துக் கொள்வது, அந்த சகிப்புத்தன்மை இந்த நாட்டின் ஆரோக்கியத்துக்கு நல்லது. நக்கல் கொஞ்சம் அதிகமாகிப் போய் யாராவது கேஸ் போட்டால் அந்தந்த சானல்கள் பார்த்துக் கொள்கின்றன.  இவர்கள் சிலரின் ஷோக்களை நான்கைந்து வருடங்களாக பார்த்துக் கொண்டு வருகிறேன். ஜே லெனோ மாதிரி ஜோக்கை ரசித்துக் கொண்டே அடிப்பவர் யாரும் இலர். என்னுடைய பேவரைட்.  கொஞ்சம் பி.பி குறைந்த மாதிரி தெரிகிறது.

000000

இந்தப் பத்தியை பற்றி கொஞ்சம் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.  இது ecletic writing எனும் வகையை சேர்ந்தது. அதாவது கலவை எழுத்து என்று சுமாராய் தமிழில் சொல்லலாம். இதைப் பற்றித்தான் என்றில்லாமல் எதைப் பற்றி வேண்டுமானாலும் எவ்வளவு ஆழமாகவோ மேலோட்டமாகவோ எழுதப்படும் ஒரு பத்தி. இதைத் தமிழில் சிலர் எழுதியிருந்தாலும் பிரபலமாக்கியது சுஜாதா தான். ஆங்கிலத்தில் மிகவும் ரசித்து படிக்கப்படும் ஒரு எழுத்து வகை. இவ்வகை பத்திகளை படிக்க ஒருவர் எந்த மனநிலையிலும் இருக்கலாம். பிசியான ஆபிஸ் லஞ்சுகளிலும், காபி ஷாப்களிலும், ஷேர் ஆட்டோக்களிலும் பெண்கள் கல்லூரி பஸ் நிலையங்களிலும் படிக்கக் கூடிய அளவிற்கு லைட் ரீடிங் வகையை சார்ந்தது.

அமெரிக்காவில் இவ்வகை eclectic எழுத்தாளர்கள் ஒரு வரியில் கூட சில செய்திகளை சொல்வார்கள், ஐம்பது வரிகளிலும் இழுத்து ஆடிப்பார்கள். அது சொல்லப்படும் விஷயத்தை ஒட்டியது.  ஒரு முறை ஒரு எழுத்தாளர் பத்தியை ஆரம்பித்த ஐந்தாவது வரியில், இந்த வாரம் உங்களுக்கு விடுமுறை தருகிறேன், படித்தது போதும் என்று அந்த வாரப் பத்தியை அத்தோடு நிறுத்தி விட்டார். ஆக எடிட்டர் என்ற ஒரு நல்ல மனிதரைத் தாண்டி வாசகர்களுடன் நேரடியாக உறவாடும் வகையை சார்ந்தது.  இந்த மாதிரி ஒரு பத்தியை அந்த காலத்தில் வாரப் பத்திரிகைகளில் அனுமதித்தார்கள் என்றால் அந்தந்த எழுத்தாளர்களுக்கு கொடுக்கப்பட்ட சுதந்தரம் புரிகிறதா?  அவர்களும் சுதந்தரத்தை பயன்படுத்தி குப்பையாக்காதது தான் முக்கிய காரணம்.

ஹிந்துவின் கடைசி பக்கத்தில் வரும் ஆர்ட் புக்வால்ட் ஞாபகம் இருக்கலாம். ஆர். கே.நாராயணை நினைவு படுத்தும் சாயல். இவரின் எழுத்தை எக்லெடிக் வகையில் சேர்க்க முடியாது என்று சிலர் சொன்னாலும் மிகப் பிரபலமான ecletic  columnist இவராகத் தான் இருக்க முடியும். இவர் எழுத்தின் உச்சத்தில் இருந்த போது உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 550 நாளிதழ்கள் இவரது வாரப் பத்தியை பிரசுரித்தன. சுத்தமான காமெடி ஜென்மம். இவரின் எழுத்து புரிய கொஞ்ச அமெரிக்க அரசியல் தெரிந்திருத்தல் அவசியம். தன் கடைசி நாள்வரை எழுதிக் கொண்டிருந்தார்.  வாஷிங்டன் போஸ்டில் Goodbye, My Friends என்று இவர் எழுதிய கடைசி பத்தி எதிர்ப்பார்த்தபடி மிக பிரசித்தம். கொஞ்சம் முயற்சித்தால், You Can Fool All of the People All the Time  எனும் இவரின் புத்தகத்தில் இருந்து ஆரம்பிக்கலாம். பேசப்படும் விஷயம் பழையதாய் இருந்தாலும் சுவாரசியம் கொஞ்ச நஞ்சமல்ல.

00000

அல்செய்மரின் வியாதி என்று அமெரிக்க மீடியா ரொம்பவே கூக்குரலிட்டாலும் நானும் எதோ பணக்காரர்களின் வியாதி போலும் என்று விட்டுவிட்டேன். 2006ல் நண்பர்(ரொம்பவே வயதான)  ஒருவரின் மனைவி இறந்ததை பற்றி அவரிடம் உரையாடும் போது தான் இந்த வியாதியின் பயங்கரம் புரிந்தது. சமீபத்தில் படித்த Finding Life in the Land of Alzheimer’s எனும் புத்தகத்திலும் இப்படியே.

அல்செய்மரின் வியாதி எனும் பெயர் புதிதாய் இருந்தாலும் இது இந்தியாவில் புதிதல்ல. நமக்கெல்லாம் தெரிந்த டிமென்ஷியா தான். அலோய்ஸ் அல்செய்மா எனும் ஜெர்மனிய நியூரோ டாக்டர் இதை அழுத்தமாக விளக்க அவரின் பெயரே நிலைத்து விட்டது.  65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே அதிகமாய் வரும் இவ்வகை டிமென்ஷியாவில் ஞாபகங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் விலகுகின்றன.  மறக்கிறார்கள். மறந்து மறந்து மறிக்கிறார்கள். இதற்கு முற்றிலுமாக குணப்படுவதற்கு மருந்தில்லை, தள்ளிப் போடவும் முடிவதில்லை, வந்து விட்டால் மறதி தான். எதோ ஒரு ஆராய்ச்சியில் அல்செய்மர் வந்த பிரபலங்களை அனலைஸ் செய்த போது மிக அதிகமாக இருந்தது எழுத்தாளர்கள் மற்றும் நடிகர்கள்.  பள்ளியில் இருந்த போது ரசித்துப் படித்த எனிட் ப்ளைடன் என்ற எழுத்தாளரும் அல்செய்மர் வந்து தான் காலமானார்.

இதில் பயங்கரம் என்பது இவ்வகை நோயாளிகளை பார்த்துக் கொள்ளும் கணவனோ மனைவிக்கோ தான். இன்றைய நிலவரப்படி, நோயாளிகளை விட அவர்களை பார்த்துக் கொண்டு அவர்களின் மறதியுடன் போராடும் கடினத்தை தாங்கிக் கொண்டுள்ளவர் நோயாளிகளுக்கு முன் இறந்து விடுகிறார்கள் என்பது.

இவ்வியாதியில் ஞாபகங்கள் விலகுவதும் பயங்கரம் தான். அதாவது, கணினித் துறையில் சொல்வது போல Last In First Out Stack. கடைசியாக நடந்த விஷயங்கள் முதலில் மறந்து விடும் என்கிறார்கள். கடைசியாய் பிறந்த குழந்தையை ஒரு பெண்மணி மறந்து விட்டார். தன் முதல் பையனை மட்டும் ஞாபகம் வைத்திருந்தார். மற்றோரு மனைவி தன் கண் முண் நடமாடும் கணவனை மறந்து விட்டார். ஆனால் ஸ்டீவ் எனும் பெயரில் இருந்த தனக்கு அன்பான கணவன் ஒருவர் இருந்தார் என்று தன் கணவரிடமே சொல்லிக் கொண்டிருந்தார்.  அல்செய்மர் நோயாளிகள் ஞாபகத்தில் இளைமையாகிக் கொண்டே போகிறார்கள் என்பதற்கு காரணம் இது தான். பலரின் ஞாபக செல்களில் இருந்து கடைசியாய் கரைவது அவர்களின் தாய்.  கவித்துவம் என்று சொல்லலாமா?

கடிகாரத்தைக் காணவில்லை

இந்த வருடம் டெக்னாலஜி பற்றி ஜல்லியடிக்க சில வார்த்தைகள்.

Cloud Computing (க்ளவுட் கம்ப்யூட்டிங்) – மேகக் கணினிச் சேவை என்று கூட அழகாகச் சொல்லலாம். ஆனால் ஐ.டி ஆட்கள் பயந்து போய் விடுவார்கள்.  கேள்விப்பட்டிருக்கிறீர்களோ இல்லையோ, இந்த கட்டுரையை இணையத்தில் படித்துக் கொண்டிருந்தால் நீங்கள் கண்டிப்பாக ஒரு முறையாவது டெக்னாலஜி மேகம் உங்கள் வாழ்வைத் தொட்டிருக்கிறது.

இந்த வருடம் நம்மை தொடப் போவது பர்சனல் க்ளவுட் எனப்படும் உங்களுக்கே உங்களுக்கான ஒரு தனி மேகம். அதாவது உங்கள் கம்ப்யூட்டரில் சேமித்து வைத்திருக்கக்கூடிய பல வகையான புகைப்படங்கள், விடியோ மற்றும் அனைத்து பைல்களையும் இணையத்தில் சேமித்து வைக்கிற சேவை.  இப்படி ஸ்டோர் செய்வதினால் வரும் வருடங்களில் நீங்கள் உங்கள் கணினியை பேக்-அப் எடுக்க வேண்டிய அவசியமில்லை என்பது முதல் நல்ல விஷயம். ஆக நீங்கள் எடுக்கிற ஆயிரமாயிரம் போட்டோக்களை உங்களுக்காக அவர்களின் டேட்டாசெண்டரில் சேமித்து வைக்கப் போகிறார்கள் க்ளவுட் கம்ப்யூட்டிங் கம்பெனிகள்.

இதற்காக பிரத்யேகமான மென்பொருள்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. அவற்றின் வருகைக்குப் பிறகு, கணினிகள் டம்ப் டெர்மினல்களாகக்கூடும் (dumb terminal). அதாவது இணையத்துக்கு உங்களை கனெக்ட் செய்யும் உலாவி மட்டுமே இருக்கக்கூடிய ஒரு இயந்திரம். மற்றபடி நீங்கள் எக்ஸலில் வேலை செய்வதோ, படம் பார்ப்பதோ, பேக்-மேன் விளையாடுவதோ எல்லாமே இணையத்தில் தான். இதற்காக முப்பெரும் டெக்-தேவர்களான மைக்ரோசாஃப்ட், கூகிள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் கங்கணம் கட்டிக் கொண்டுள்ளன. உங்களை, கணினியை விட்டுவைக்க மாட்டார்கள். தயாராகுங்கள்.

Augmented Reality (ஆக்மெண்டட் ரியாலிடி) – டெக்னாலஜியில் வேலை பார்க்கும் ஐந்து பேரை இப்படி என்றால் என்ன என்று கேட்டால் ஆறு விதமாய் பதில் சொல்வார்கள்.  ரொம்பவும் எளிமையாக சொல்ல வேண்டுமானால், க்ராபிக்ஸை நம் வாழ்வில் கலக்கும் ஒரு பெருந்திட்டம் தான் ஆக்.ரியாலிடி. டெர்மினேட்டர். …ஏன் நம் எந்திரனில் கூட ரோபோவின் கண்கள் மூலம் பார்க்கும் போது அது பார்க்கும் ஆளின் எடை, பெயர் விலாச விவரங்கள் தெரிகிற ஸீன் ஞாபகம் இருக்கிறதா? அதே போல் உங்களாலும் செய்ய முடியும், கூடிய சீக்கிரம். அதாவது நம் நிஜ வாழ்வில் க்ராபிக்ஸையும்,  அதன் சத்தங்களையும் வாசனைகளையும் சூப்பர் இம்போஸ் செய்யப் போகிறார்கள்.

2009 TED எனப்படும் விஞ்ஞானக் கருத்தரங்கில் ப்ரணவ் மிஸ்திரி செய்து காண்பித்த வித்தைதான் இந்த இயலைத் தொடங்கி வைத்தது – http://bit.ly/ieXplW .  உங்களிடம் ஐ-போன் இருந்தால், அதிலுள்ள ஒரு அப்ளிகேஷனின் மூலம், நீங்களும் இந்த AR விளையாட்டை விளையாடலாம். அதாவது உங்களின் செல்போனை ஓப்பன் செய்து எதாவது ஒரு பில்டிங்கை நோக்கி காட்டினால், இந்த அப்ளிகேஷன், அந்த கட்டிடத்திலுள்ள கம்பெனிகள் எவை, எந்த மாடியில் மதிய உணவு கிடைக்கலாம், எந்த மாடியில் புகைக்கலாம் என்றெல்லாம் சொல்லிவிடும். அல்லது உங்கள் போனை ஒரு ரோடை நோக்கிக் காண்பித்தால், உங்கள் நண்பர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று வரைபடத்தில் காண்பித்து விடும். இதெல்லாம் ஆரம்பம் தான், ப்ரணவ் காண்பித்த விஷயங்கள் வந்து விட்டால், கணினி என்பதே தேவைப்படாது போலிருக்கிறது.  மைக்ரோசாப்டின் Aug. Reality விளம்பரம்.

இவை தவிர HTML5, வெப்ஸ்டோர், Quora,  கூகிளின் சோஷியல் நெட்வொர்க், விண்டோஸ் டேப்லட், இணையத்துக்கும் டிவிக்கும் திருமணம், Net Neutrality, 3டி டிவி,   clean tech,  மின் புத்தகங்கள் படிப்பான் போன்றவைகளை கேள்விப்பட்டிருந்தால் இணையத்தில் ஜல்லியடிக்கலாம். டுவிட்டர்-பேஸ்புக் தெரிந்திருந்தால் போதும். ஒரு பத்து பேராவது உங்களை தொடரவேண்டியது அவசியம்.  குட்லக்.

0000

கைக்கடிகாரம் மற்றும் நயந்தாரா

நேரத்திற்கு நேரமாகிவிட்டது. இது புத்தகச் சந்தையில் வரப் போகும் புத்தகமல்ல, கைக்-கடிகாரத்தின் நேரம் முடிந்து விட்டது.  அதாவது இந்தக் கால இளைஞர்களிடம் மணிக்கட்டை காட்டி என்ன என்று வினவினால் பேந்தப் பேந்த முழிக்கிறார்கள். கைக் கடிகாரங்கள் இல்லாத கரங்கள் அவை.  இவர்கள் அலாரம் வைப்பதோ ஐ-போன் time app-ல் தான்.

கடிகாரம் கட்டுவது என்பது இக்காலத்தில் அழகிற்காகத்தான். யோசித்துப் பார்த்தால் நம்மைச் சுற்றி கணினி, செல்போன் என்று நேரம் காட்டுகிற விஷயங்கள் பல வந்து விட்டன, ஆகையால் கைக்-கடிகாரம் கட்டுவது குறைந்து போய்விட்டது என்கிறார்கள். கடிகாரக் கடைகள் இனிமேல் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கின்றன.

என் முதல் கைக்கடிகாரம், ஐந்தாம் வகுப்பின்போது அத்தைமார்கள் வாங்கிக் கொடுத்தது. அதைப் போட்டுக்கொண்டதாக ஞாபகம் இல்லை. எங்கே போயிற்று என்றும் தெரியவில்லை. பன்னிரண்டாம் வகுப்பின்போதுதான், நானாக விரும்பி கடிகாரம் கட்டியது. Allwyn கம்பெனியின் Trendy ப்ராண்ட் கைக்கடிகாரங்கள். அவற்றின் டி.வி விளம்பரங்களில் மயங்கிப்போய் வாங்கினேன். பிறகுதான் தெரிந்தது அந்த விளம்பரங்களின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் என்று.  அந்த நீல வாட்சுக்கு அ-மேச்சிங்காக வெள்ளை ஸ்ட்ராப் போட்டிருந்தேன். பிறகு சிவப்பிற்கு மாறி வீட்டினரைத் திகைக்க வைத்தேன். அது நின்று போனபின் ஒன்றிரண்டு டைட்டன் வாங்கியிருக்கிறேன். ஏழு வருடங்களுக்குமுன் கைக்கடிகாரத்தை கட்டுவதை நிறுத்தி விட்டேன். யாராவது ரொம்பவும் சொன்னால் ஒழிய அவற்றை தொடுவதில்லை.  என் கைக்கடிகாரத் தேவை நின்று போய் நாளாகி விட்டது.

டைட்டன் கடை ஃப்ரான்சைஸ் எடுக்க நினைத்திருந்தால் கொஞ்ச ’நேரம்’ யோசியுங்கள், உங்கள் செல்போனில் மணி பார்த்தபடி.

0000

இந்த வாரம் சென்னை புத்தகச் சந்தை ஆரம்பிக்கிறது. நண்பர் வெங்கட் இதன் பொருட்டு வரும் அத்தனை செய்திகளையும், வலைப்பதிவுகளையும், புத்தக விலைப்பட்டியல்களையும் இங்கே   சேமித்துக் கொண்டிருக்கிறார். தேவைப்பட்டால் ஒரு லுக் விடலாம்.

கல்லூரி படிக்கும்போது,  புத்தகச் சந்தைக்குச் சென்று பனியன் கழட்டாத குறையாக புத்தகங்கள் வாங்கியிருக்கிறேன். கொஞ்ச வருடங்களுக்குப் பின் படித்த புத்தகங்களை விட படிக்காத புத்தகங்கள் என்னிடம் அதிகமாகி விட்டன. அதன் பின் கண்டிப்பாய் படிக்க போகிறேன் என்று எண்ணும் புத்தகங்களை மட்டும்தான் வாங்குகிறேன். படித்ததும் சிலவற்றைக் கொடுத்து விடுகிறேன்.

புத்தகச் சந்தையில் செய்யப்படும் impulse buy ரொம்பவும் அதிகம். சும்மா அட்டைப்படம் பார்த்தே மயங்கிப்போய் வாங்குபவர் என்றால், முதல் நாள் போய் அட்டைப் படங்களை பொம்மை பாருங்கள், அடுத்த நாள் செல்லும் போது நினைவிருக்கும் புத்தகங்களை மட்டுமே வாங்குங்கள். அல்லது இணையத்தில் கொஞ்சம் உலாவி எந்தெந்த புத்தகங்கள் எப்படி என்று பார்த்து விட்டு பிறகு வாங்கிப் படியுங்கள்.  திடீரென்று எல்லா புத்தகங்களையும் வாங்குவது யாருக்கும் உதவாது. பதிப்பாளருக்கு இந்த வருடம் வருமானமாய் தோன்றலாம், ஆனால் அடுத்த வருடம் நீங்கள் சந்தைப் பக்கமே போக மாட்டீர்கள்.

மற்றபடி முக்கியமாய் – வீட்டிலுள்ள குழந்தைகளை கண்டிப்பாய் கூட்டிச் செல்லுங்கள்.  அவர்களுக்கு இதைவிடப் பெரிய உபகாரம் வேறொன்றுமில்லை.

குழப்படி கேஸ்

மன்மதன் அம்பு பார்த்துக் கொண்டிருக்கும்போது தான் தோன்றிற்று, கமல் மணி ரத்னம் போன்ற திரைக்கதாசிரியர்கள், தமிழ் சினிமாவின் வழக்கமான அபத்தத் தொடக்கத்தினை சற்றே மாற்றிக் கொண்டு வருகிறார்கள். ஆற்றங்கரையில் பொழுது புலர்ந்து, சூரியன் உதித்து, பறவைகள் பறந்து, இலைகள் அசைந்து ஆரம்பிக்கும் படங்கள் வருவது நின்று சில காலம் ஆகிற்று. ஆனாலும் ஒரு கதாபாத்திரத்தை அறிமுகம் செய்ய எடுத்துக் கொள்ளப்படும் ஆயத்தங்கள் குறையவில்லை. ராவணனிலும் ம.அ.விலும் படமும் கதையும் சடுதியில் ஆரம்பிக்கின்றன. என்ன ஏது என புரிய சற்றே நேரமெடுத்தாலும் படத்துக்குள் போய்விடுகிறோம். கமலைத் தவிர மற்ற காரெக்டர்கள் டக்கென அறிமுகமாகி சட்டென மனதில் பதிந்து விடுகின்றன. நிற்க. இதற்கு மேல் ஏறக்குறைய, ஆமாம் ஏறக்குறைய, எல்லாமே குறைகளின் பட்டியல் தான்.  படிக்க விரும்பாதவர்கள், வலது மேல்புறம் இருக்கும் இண்டூ குறிக்கு குறி வைக்கலாம்.

படத்தின் கதை தமிழ் சினிமாவின் சாஸ்வதமான பார்முலாக்களில் ஒன்று.  கட்டிக்கப் போகும் பெண்ணைத் சந்தேகப்படும் டு-பி கணவனும்,  அவளை பல்வேறு காரணங்களுக்காக துரத்தி, சிரித்து, அழுது ஒருவழியாய் மணம் செய்யும் ஹீரோவும் தொல்பொருள் கண்டுபிடிப்புகள். ஆரம்பத்தைத் தவிர திரைக்கதையில் புதிதாக ஒன்றுமேயில்லை. இதையே முழுமையான காமெடியாக செய்திருக்கலாம் என்றாலும் கமல் தேர்ந்தெடுத்திருப்பது ஒரு மாதிரியான ப்ளாக் காமெடி தான். கதையில் ஒரு எமோஷனல் உபகதையும், காமெடி கதையும் உடன் பயணிக்கின்றன. காமெடி சீன்களில் ஹீரோ காமெடியாய் நடித்தாலும் பின்னால் ஓடிக்கொண்டிருக்கும் சோகம் சிரிப்பை மட்டுப்படுத்துகிறது. இவ்வகை கதையைத் தான் எடுக்க வேண்டும் என நினைப்பது தப்பல்ல, ஆனாலும் விளம்பரமும் கதையும் வெவ்வேறு ஜான்ராவைக் குறிப்பதனால் குழப்படி கேஸ் என மக்கள் திண்டாடுவது தெரிகிறது. மும்பை எக்ஸ்ப்ரஸுக்கு பிறகு இது இரண்டாவது முறை.

இருபதாவது முறை என்றும் படத்தில் ஒன்று இருக்கிறது. கதையில் இறந்து போன மனைவியோ காதலியோ, கமலுக்கு அமைவது. விக்ரமில் ஆரம்பித்து, வேட்டையாடு விளையாடு வரை என்று இணையத்தில் லிஸ்ட் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். கமலின் தனி வாழ்க்கைச் சோகம் அவரையும் தாண்டி அவர்தம் படத்தில் வழிகிறதோ என தோன்றுகிறது. அவ்வை சண்முகி, விருமாண்டி, வசூல்ராஜா போன்ற படங்களின் பாடல்களில் கொஞ்சம் சோகச் சரித்திரம் எட்டிப் பார்த்தன.

எதிர்பாராத விதமாய் வந்து விழும் கதாபாத்திரம் என்று எதுவுமே இல்லை. வாயாடி குழந்தை, கான்செர் நண்பன்,  குடிகார சந்தேகப் பிராணியான ஆண்டி-ஹீரோ என எல்லோரும் கார்ட்போர்ட் காரெக்டர்கள். எந்த கதாபாத்திரமும் முன்னுக்கு பின் முரணாக நடப்பதில்லை. ஹீரோ ஏமாற்றுவதற்கு ஒரு சரியான காரணம் இருக்கிறது, ஒரு சோக ப்ளாஷ்பேக் இருக்கிறது.  இந்த ப்ளாஷ்பேக்கில் வரும் ஒரு ரிவர்ஸ் ஸ்லோமோஷன் பாடல் ஒன்று தான் நிமிர்ந்து உட்காரச் செய்கிறது. என்ன தான் இதற்கு பல ஹாலிவுட் மற்றும் அலைபாயுதே உதாரணங்களைக்  காட்டினாலும், இத்தகைய கிளைக்கதைக்கு இவ்வகை தயாரிப்பு ஏக பொருத்தம்.

பாரீஸ் விமான நிலையக் காட்சிகளில் மனுஷ் நந்தன் கலக்குகிறார். ஆனால் கடைசி வெனிஸ் காட்சிகளில், அவற்றில் நடிப்பவர்களின் சன் க்ளாஸ்களில் சினிமா ஷூட்டிங் ரிப்லெக்டர்களும், காமிராவும் அதன் அருகில் நிற்பவர்களும் தெரிவது துரதிஷ்டம்.

இவை தவிர கமலுக்கு வயசாகி விட்டதும், குழந்தைகளுக்கு கமல் எடுக்கும் கோலோசியம் பாடமும், மாதவனின் காரியர் அசம்பாவிதமும், திரைக்கதை ஓட்டைகளும், கவிதா பிரதாபங்களும் இன்னபிற விஷயங்களும் ஏகமாய் இருந்தாலும், தமிழ்நாட்டில் எல்லோரும் கமல்/ரஜினி படங்களை ஒரு முறையேனும் பார்த்துவிடும் சங்கல்பம் செய்து கொண்டிருப்பதால், அதிகம் விவாதிக்காமல் இருந்து விடலாம்.

0

சமீபத்தில் பார்த்த மற்றொரு சுமார்ப் படம், டெவில். மனோஜ் நைட் ஷ்மாளன் தயாரிக்கும் முப்பெரும் படங்களில் முதல் படம். நகர வாழ்க்கையில் அமானுஷ்யத்தை கலக்கும் முயற்சி.

நகரத்தின் நடுவில் இருக்கும் ஒரு அடுக்கு மாடிக் கட்டடத்தின் லிப்ட் நடுவழியில் நின்று விடுகிறது. காமிரா மூலம் செக்யூரிடியும் போலீஸும் உள்ளே நடப்பதைப் பார்த்தபடி இருக்கிறார்கள். உதவி செய்யப் போகிறவர்கள் சாகிறார்கள். லிப்டின் உள்ளே ஐந்து பேர். போலீஸ் அவர்களைப் பற்றி ஆராயும் போது தான் எல்லோரும் ஒருவிதத்தில் குற்றவாளிகள் எனத் தெரிகிறது. உள்ளே இருக்கும் பேய்(!) ஒவ்வொருவராய் கொல்கிறது. யாராவது தப்பித்தார்களா என்பது மிச்சக் கதை. இவ்வகைப் படங்களில் முதல் பாதி பயமுறுத்தினாலும் முடிவு சுமாராய்த்தான் இருந்தாக வேண்டும் என்பது இவ்வகைக் கதைகளின் கதி. படுபயங்கரமான முடிவுடைய பேய்ப் படங்கள் மிகக் குறைவு. க்யூப்ரிக்கின் The Shining  கூட so so முடிவு தான்.

சின்னத் தீர்மானங்கள்

சினிமாவை நன்கு அறிந்தவர்கள் என்று நான் எண்ணும் சில நண்பர்கள் கூட அவ்வப்போது இயக்குநர் மணிரத்னத்தைத் திட்டித் தீர்ப்பதைப் பார்க்கிறேன்.  காரணத்தை அறிய முற்பட்டால், சென்ஷேனல் விஷயத்தை படத்துக்கு பின்புலமாக வைத்துக் கொண்டு, பணம் பண்ணி, விஷயத்துக்கு சரியான முடிவு சொல்லாமல் எஸ்கேப் ஆகிறார் என்பது தான்.  மணி செய்த விஷயங்களை மறந்து போய்த் தாக்குகிறார்கள். அவர்தான் சினிமாவில் மகேந்திரன் ஆரம்பித்து வைத்த ஸட்டிலிடியை தொடர்ந்தார்.

கதை எழுதுவது ஒரு கதாசிரியனின் உரிமை. அவனுடையது மட்டுமே. அதை அவன் எங்கே வேண்டுமானாலும் நடக்கிற மாதிரி எழுதலாம். மகாபாரதத்தில் எஸ்.வி சேகர் போய் மாட்டிக் கொள்கிற நாடகம் மாதிரி, சுவாரசியமான பின்புலங்களில் கதைச்சத்து அதிகமில்லாத கதையைச் சொல்லலாம். அது கதைக்கு முக்கியத்துவத்தை அதிகரிக்கும்.  இதைத் தான் மணி ஒவ்வொரு படத்திலும் செய்கிறார். பிள்ளையைப் பரிகொடுக்கும் தாயின் சோகத்தை சொல்லும் கதையில் அவர் இலங்கையைப் பின்புலமாக வைத்தால்,  அவர் அந்தப் பிரச்னைக்கு முடிவு சொல்ல வேண்டும் என்பது எந்த நியாயம். அப்படி சொல்பவர்களெல்லாம் என்றைக்காவது அரசியல்வாதியின் வீட்டுக் கதைவைத் தட்டி பிரச்னைக்கு முடிவு தேடுங்கள் என்று சொல்ல மாட்டார்கள். ஆனால் மணி ரத்னம் மட்டும் காஷ்மீர் என்று சொல்லி விட்டால், யூ.என் தலைவர் போல் முடிவையும் சொல்லி விட வேண்டும் என்பது கையாலாகாத்தனம்.

படம் பிடிக்கவில்லை என்றால் இனியொரு முறை அதைப் பார்க்காமல் இருக்கலாம், அல்லது மற்றவர்களிடம் அதைப் பற்றிச் சொல்லலாம், அதை விடுத்து கதாசிரியன் இதைச் செய்ய வேண்டும், இப்படிச் செய்ய வேண்டும் என்று சொல்வது அவனது உரிமைகளில் தலையிடுவது போல்.

நான் சமீபத்தில் எழுத நினைத்திருக்கும் ஒரு கதை நடப்பது, மான்ஹாட்டன் நகரத்தில் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசிக்கும் ஒரு லிவ்-இன் ஜோடியைப் பற்றியது. ஒரு நாள் முன்னிரவில் நடக்கும் அந்தக் கதையில், அந்த ஆண் தனக்கும் மற்றொரு பெண்ணிற்கும் இருக்கும் ரகசிய உறவை அன்று சொல்லிவிடுவது என்று இரண்டு நாட்களாக நினைத்திருக்கிறான்.  அவன் காதலியோ தன்னைத் திருமணம் செய்து கொள்வாயா என்று கேட்கத் தயராய் இருக்கிறாள்.

அன்று காலை நடக்கும் ஒரு சம்பவம் இருவரின் வாயையும் அடைத்து விடுகிறது.  அன்று சாயந்திரம் இருவரும் சமைத்து சாப்பிட்டு விட்டு பால்கனியில்  சென்று அமர்கிறார்கள். இருவருக்கும் இடையேயும் ஒரு மயான அமைதி நிலவுகிறது.  தூரத்தில் பெரும் கரும்புகை தெரிகிறது. டி,வியில் நியூஸ் ஓடிக் கொண்டிருக்கிறது. மேலேறும் புகையைப் பார்த்திருக்க அமர்ந்திருப்பவர்கள் கொஞ்ச நேரத்தில் கட்டிக் கொள்கிறார்கள்.  ஏதும் பேசாமல் அந்தப் புகை அவர்களை ஒன்று சேர்த்து வைக்கிறது.

அந்தப் புகையின் காரணம் 9/11 என்று புரிந்திருக்கலாம். இப்படி ஒரு கதை எழுதுபவனை, ”9/11க்கு ஒரு முடிவு சொல்லி விட்டுப் போ, இல்லாவிட்டால் கதை வேஸ்டுமா” என்றால் எப்படியோ அப்படித்தான் மணிரத்ன விஷயமும். யோசித்து பாருங்கள்.

0000

கதையைப் பற்றிப் பேசும்போது,  தற்போதெல்லாம் நல்ல தமிழ்க் கதை வருவதேயில்லை என்று சொல்லிக் கொள்ளும் வாசகர்களுடன்(விமர்சகர்களுடன் அல்ல) நானும் சேர்ந்து கொள்கிறேன். கிட்டத்தட்ட உண்மை தான்.  என்ன தான் இலக்கியம்,கலை, ரசனை என்றெல்லாம் ரொமாண்டிக்காகக் கனவு கண்டாலும் இது ஒரு மாதிரி டிமாண்ட்/சப்ளைகளுக்கு உட்பட்ட மார்க்கெட் தான். விகடனும், குமுதமும், கல்கியும், குங்குமமும் எல்லாமே ஒரு மாதிரி கதைகளைத் தான் தேர்வு செய்கின்றன. அதிக வித்தியாசமில்லை. எல்லா மாகஸின்களிலும் அவ்வப்போது நல்ல கதைகள் வருகின்றன. கழுகு போல் வாராவாரம் காத்திருக்க வாசகர்கள் ரெடியில்லை என்பதுதான் உண்மை. தேவை – சிறந்த தமிழ்ச் சிறுகதைகள் 2010 என்ற தொகுப்பு. பல நூறு கதைகளைப் படித்து சிறந்த 25 கதைகளைத் தேர்ந்தெடுத்துத் தர நான் ரெடி.

இதற்கு நடுவே இலக்கிய சர்ச்சைகள் என்ற கொசுத் தொல்லைகள் நல்ல கதைகள் வருவதைத் தவிர்க்கின்றன.  பக்கம் பக்கமாகத் திட்டித் தீர்க்கிறார்கள்,  ஆளுக்கு ஒரு பக்கம் சேர்ந்து கொண்டு கோதாவில் இறங்குகிறார்கள். இந்த விமர்சகர்களைப் படித்து யாரும் எந்தப் புத்தகத்தையோ படித்ததாகவோ, கிழித்ததாகவோ வரலாறு இல்லை. எல்லோரும் அவர்களுக்கு தேவையானதைப் படிக்கிறார்கள் அல்லது நிராகரிக்கிறார்கள்.  இதை மேதைவிலாச விமர்சகர்கள் புரிந்து கொண்டாலே உலக ஷேமம்.  இந்த இலக்கிய குஸ்தியில் தற்போது கூட்டத்துக்கு ஆள் சேர்பது போன்ற அரசியல் தந்திரங்கள் வந்து விட்டன. இனி லாரிகளும் பிரியாணி பொட்டலங்களும் தான் பாக்கி. நமக்கும் இவ்வித கிறுக்குத்தனங்கள் புரிவதால், இந்த வருடத்துடன் இவர்களின் போஸ்ட்-மாடர்னிஸ புல்ஷிட்டுகளை ஸ்டாப் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

0000

இந்த வருடம் நான் படித்த சிறந்த தமிழ்ப் புத்தமாக நான் நினைப்பது – சீனா – விலகும் திரை.  ஆங்கிலத்தில் இருந்து மொழி பெயர்க்கப்பட்ட இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் பல்லவி ஐயர். தமிழில் மொழி பெயர்த்தவர் ராமன் ராஜா. போன வருட புத்தக சந்தையில் வாங்கிய இந்தப் புத்தகத்தை எனக்கு அறிமுகம் செய்தது ஒரு பிரபலம். சியாட்டலில் தரையிரங்கும் முன் படித்து முடித்து விட்டேன்.

தன் காதலனுடன் சீனாவிற்கு வேலைக்காகச் செல்லும் பல்லவி ஐயர், சீனாவில் வாழ்ந்த அந்த ஐந்தாண்டுகளின் கதை. இரண்டு முக்கியமான  விஷயங்கள், சீனாவைப் பற்றி ஏற்கனவே கொஞ்சம் படித்திருந்தாலும், இதில் புதிதாகப் பட்டது பல்லவி என்னும் அந்த ஆங்கில ஆசிரியை/நிருபரின் பார்வை. எதைத் தேர்ந்தெடுத்து சொல்வது என்பதில் அவர் காட்டியிருக்கக் கூடிய தேர்ச்சி. இரண்டாவது, அதை அவர் சொன்ன விதம், பயன்படுத்தப்பட்ட வார்த்தைப் பிரயோகங்கள். மிதமான நகைச்சுவை.

இரண்டாவது காரணத்தைத் தான் சந்தேகமாக பார்க்கிறேன்.  இந்த வார்த்தைகளை இப்படி சரளமாக மிகச் சரியாக வந்து விழுந்ததற்கு காரணம் பல்லவியா ராமன் ராஜாவா? என்னவாக இருந்தாலும் இந்தப் புத்தகத்தின் ஆங்கிலப் பதிப்பைப் படிக்கவில்லை. படிக்கிற எண்ணமுமில்லை.  காரணம், தமிழாக்கத்தில் ஒரு பிரமாதமான உதாரணம் இந்தப் புத்தகம். காரணம் மிகச் சரளமான நடை. ஆனால் எனக்கு முக்கியமாகப் பட்டது ரா.ராஜாவின் வொக்காபுலேரி. ராமன் ராஜா கண்டிப்பாக ஒரு revelation.

00000

வருட ஆரம்பத்தில் எடுக்கப்படும் ரெசல்யூஷன்களைப் பற்றி கொஞ்சம் சினிகலாகவே பார்க்கிறோம்.  ஜனவரி 2ம் தேதி எல்லோரும் ஜிம்மில் ஓட 7ம் தேதி அந்தக் கூட்டம் பாதியாக மாற, 15ம் தேதிக்குள் எல்லாவற்றையும் அடுத்த வருட ஆரம்பத்திற்கு மூட்டை கட்டி வைத்து விட்டு சக்கரைப் பொங்கலால் தொந்தி வளர்க்கிறார்கள்.  இது உண்மை தான்.

ஆனால் சின்னச் சின்னதாய் முடிவுகள் எடுத்தால் நிறைவேற்ற முடியும் என்று நினைக்கிறேன்.  இனிமேல் மோர் சாதத்திற்கு உப்பு போட்டு சாப்பிடப் போவதில்லை, தலைக்கு தலைகாணி வைத்துக் கொள்வதில்லை, ஜீன்ஸானாலும் கசக்கிக் கட்டு, நாளுக்கு 10 பக்கம் படிப்பது போன்ற விஷயங்கள் உருப்படியானவை. நாளையிலிருந்து சீரியல் பார்க்கப் போவதில்லை, நோ ஆபீஸ் பாலிடிக்ஸ் போன்றவைகள் பயங்கரம். நடக்காது.

இவைகளுக்கு நடுவே ஒரு ஸ்வீட் ஸ்பாட் இருக்கிறது. மார்ச் மாதத்திற்குள் எத்தனை சேர்த்து வைத்திருக்கிறோம் என்று கணக்கெடுப்பது,  ஏப்ரலுக்குள் அட்லீஸ்ட் ஒரு பயிற்சி வகுப்பிற்காகவாவது போவது, பிறந்த நாளுக்கு முன் தேவையில்லாத டஜன் சுடிதார்களை தேவையானவர்களுக்கு கொடுப்பது போன்ற மைல்கற்கள் உடைய முடிவுகளில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். இந்த முடிவுகளை உடனே ஃபேஸ்புக்கில் ஏற்றிவிடாமல், இவை முடியும் என மனதால் நம்புவது நல்லது.

இந்த மனதால் நம்புவது என்பது பற்றி ஒரு ஆயிரம் வார்த்தைகளில் எழுத முடியும். ஆனால் ஒரு முடிவு எடுக்கும் போது சற்றே உற்று நோக்கினால் அது நல்லதா கெட்டதா என்பது கிட்டத்தட்ட தெரிந்து விடும். இங்கே கொடுக்கப் பட்டிருக்கும் பூவா தலையா போட்டோவைப் போலத்தான்.

ஆகவே வருட ஆரம்பத்தில் நீங்கள் பெரும் முடிவுகள் எடுக்கக் கூடாது என்று சொல்ல வரவில்லை. பெரும் முடிவுகளுக்கு வருட ஆரம்பங்கள் ரொம்ப தூரம் என நினைக்கிறேன். நீங்கள் அர்விந்த் அடிகா ஆக வேண்டும் என்றாலும், ஐஸ்வர்யா ராய் ஆக வேண்டும் என்றாலும் உடனே நினைக்க ஆரம்பிக்கலாம். யோசித்துப் பார்த்தால் அடுத்த ஐஸ்வர்யா ராய் எங்கோ மூக்கொழுக விளையாடிக் கொண்டிருக்கிறாள். அடுத்த சல்மான் ரஷ்டி, எங்கேயோ புஷ்டியாக சாப்பிட்டுவிட்டு டின்- டின் படித்துக் கொண்டிருக்கிறான்.

இதற்கு மேல் சொன்னால் ஆசிரியர், இந்தப் பத்தி எதோ சுய-முயற்சிப் பயிற்சியாகிக் கொண்டிருக்கிறது என்று நினைத்து கத்திரி போட்டுவிடுவார் என்பதால் இத்துடன் நிறுத்.

இந்த வாரம் எப்படி?

ரத்த சரித்திரத்தின் முதல் பகுதியை இந்தியில் பார்த்தேன். இம்மாதிரி கேங்ஸ்டர் படங்களில் திடீரென்று யார் யாரை சுடுகிறார்கள்,  கூறு போடுகிறார்கள், வெட்டிச் சாய்கிறார்கள் என்று புரிவதற்கு முன் இடைவேளை வந்து விடும். இதில் சின்ன மாற்றம் , படம் முடிந்தே போய் விடுகிறது. மார்ட்டின் ஸ்கார்ஸஸி இத்தகைய படங்களில் பேச்சின் மூலம் கதையை நகர்த்தி, பயமுறுத்தி, டக்கென்று கொன்று விடுவார்கள். இதில் நேரெதிர்.

சுவாரசியமாய் ஒன்றுமேயில்லை.  ரத்தத்தை பார்த்து விட்டு தூங்கப் போக முடியாது என்பதால் வீடு வந்து ஒரு நூறு பக்கம் படித்து விட்டே தூங்கப் போனேன்.  அடுத்த பகுதியில் சூர்யா வருகிறார் என்று டைட்டிலுக்கு முன் ட்ரைலர் போட்டார்கள். பார்க்கலாம்.  ரத்தக் களறி சண்டைக்கு நடுவே நாகேந்திரஹாராய என்று உமாச்சி பாட்டை எல்லாம் போடுவது ரொம்பவும் மெல்லிழைவாக மனித மனங்களில் வன்முறையை நியாயப்படுத்தும் என்பதை இயக்குநர் அறிவாரா?

0000

பாவை பிரபந்தங்கள் பாடும் மாதமிது.  சென்னை வெள்ளாளத் தெருவில் ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலுக்கு அருகில் வசித்தவன் என்பதால் மார்கழியில் திருப்பாவை சொல்லச் செல்லும் அம்மாவுடன் கோவிலுக்கு போன ஞாபகங்கள் இன்னமும் மிச்சமிருக்கின்றன. திருப்பாவை என்பதை விட சுடச்சுட வெண்பொங்கல் வாசனை தான் என்னை ஈர்த்தது என்று சொல்ல வேண்டும்.  கோவிலுக்கு போகாத நாட்களில், அம்மா தொன்னையில் வெண் அல்லது சக்கரைப் பொங்கலோ வாங்கி வருவாள். மட மடவென எழுந்து பல் தேய்க்கிற மாதிரி தேய்த்து, கிச்சனில் நுழைந்து ஒரே அமுக்.

பத்தாவது படிக்கும் போது நண்பனின் காதலை ஆதரிக்க ஒரு குழாமாக போன போது தான் ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் தினப்படி விஷயமானது. சுபா என்கிற அந்தப் பெண் ஆஞ்சநேயரை சுற்றும் போது எண்ணைக் கையால் அருகில் இருந்த சுவற்றில் ஒரு புள்ளி வைக்க, சுரேஷ் என்கிற என் நண்பன் அடுத்த புள்ளி வைக்க, தினமும் 108 புள்ளிகள் முடிய நாங்கள் எண்ணிக் கொண்டிருந்தோம். இதற்கு நடுவில் யாரோ ஒரு சிறுவன் வந்து அவன் ஹால் டிக்கெட் நம்பரை எழுதி விட்டு போவான். இப்படியே எண்களாலும் கோடுகளாலும் சூழப்பட்டிருந்த ஆஞ்சநேயருக்கு வெண்ணெயையும் தாண்டி மூச்சடைத்துப் போயிருக்கும்.

சட்டென்று ஒரு டைவர்ஷன். திருப்பாவை எப்படி மனப்பாடம் ஆகிற்று என்று இன்னமும் தெரியவில்லை. காலை சமையல் செய்து கொண்டே கிச்சனில் இருந்து பாடும் அம்மாவும் காரணமாய் இருந்திருக்கலாம். ஆடி மாத லவுட்ஸ்பீக்கரில் இருந்து தாயே கருமாரி என்று எல்.ஆர்.ஈஸ்வரி பாடியதும், எங்கள் வீட்டு மர்ஃபி டேப்ரிக்கார்டரில் இருந்து வந்த பெங்களூர் ரமணி அம்மாளின் கணீர் குரலும் மனனம் ஆயின. நானாகவே ரொம்பவும் விரும்பிக் கேட்ட டிவோஷனல் பாடல்களை பாடியது ஒன்று எம்.எஸ் அல்லது பித்துக்குளி முருகதாஸ். வீட்டில் அடிக்கடி ஒலிக்கும் டி.எம்.எஸ்ஸின் கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் பாடல்களும், நாகூர் ஹனிஃபாவின் இறைவனிடம் கையேந்தும் குரலும் பின்னர் பிடித்துப் போயின.

பள்ளியில் படிக்கும் காலத்தில், தினத்தந்தியில் அன்றைய திருப்பவையையும் திருவெம்பாவையையும்,  ஐந்து வரி தெளிவுரையோடு ஒரு கட்டம் கட்டி போடுவார்கள்.   திருப்பாவை அறிந்திருந்ததால் திருவெம்பாவையை திரும்பத் திரும்பப் படித்தேன். எம்பாவாய் வார்த்தையை காப்பியடித்தது ஆண்டாளா மாணிக்க வாசகரா என்று சந்தேகத்தோடு உலாத்தியதுண்டு. ஆண்/பெண் வித்தியாசங்கள் இருந்தும், திருவெம்பாவையின் பத்தொன்பதாம் பாடலில் தான் இரண்டிற்கும் ஒற்றுமை தெரிந்தன. இப்போது படித்தாலும், அந்த ஒற்றுமைகள் வாழ்கின்றன.  இது திருப்பாவையா, திருவெம்பாவையா என்று தெரியாமல் படித்தால், கண்டிப்பாய் குழம்பிப் போவீர்கள்.

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று
அங்கப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்
எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகல் எங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கிப் பரிசே எமக்கு எங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்.

0000

வாரப் பத்திரிக்கைகளில் Most read/emailed என்று செக்‌ஷன்கள் வைத்துப் பார்த்தால் டாப் டென்னில் வருவது எவை என்பதை யோசித்துப் பார்க்கலாம்.

1. இந்த வாரம் எப்படி?
2. எதாவது ஒரு பெயர்ச்சிப் பலன்.
3. கோலிவுட் ரவுண்ட்-அப்
4. _____ நடிகருக்கு பிறந்த குழந்தைப் படங்கள்
5. ______ நடிகை திரும்ப நடிக்க வரும் முன்னர் வரும் மணியோசை
6. எதாவது ஒரு கருத்துக் கணிப்பு

இப்படியாக முக்கிய செய்திகளில் முக்கியமாக இருப்பது ஜோசிய ஹேஷ்யங்கள். வருடத்தின் முதல் வாரத்தில் இந்த வருடம் எப்படி இருக்கும் என்று மாத வாரியாக எழுதும் ஜோசியர்கள், வார ஜோசியம் எழுதும் பொழுது வருட முதலில் எழுதியதை ரெஃபர் செய்து எழுதுகிறார்களா? இப்படி சமீபத்தில் தேடிப் பார்த்த பொழுது, அக்டோபர் மாதத்தில் அமேசிங் வைபவம் ஒன்றும் வேலை சார்ந்த கவலை ஒன்றும் வரலாம் என்று எழுதியிருந்தார் ஒரு ஜோதிடர். அக்டோபர் மாதத்தில் வார வாரம் என்ன எழுதியிருக்கிறார் என்று படித்துப் பார்த்த பொழுது இரண்டுக்கும் ஆறல்ல அறுபது வித்தியாசங்கள் தெரிந்தன. இம்மாதிரி ஜோசியங்கள் ஒருவேளை வானிலை மாதிரி மாறிக் கொண்டே இருக்கும் போலிருக்கிறது.

இவை எதனால், எவரால், எப்படி எழுதப்படுகின்றன என்பதை எல்லோரும் அறிவோம். ஆனாலும் எல்லோரும் வருங்காலத்தை எட்டிப் பார்க்கிற ஆர்வத்தில் இருக்கிறோம் என்பது தான் மனித இயல்பாய் இருக்கிறது. இந்த பத்திரிகையிலும் இப்படியெல்லாம் போட்டால் pageviews பிய்த்துக் கொண்டு பறக்கும் என்பதால், ஆசிரியரை இவற்றை பரிசீலிக்குமாறு மெயிலனுப்பியிருக்கிறேன். நீங்களும் பரிந்துரைக்கலாம்.

0000

சமீபத்தில் ஜூலியன் அசாஞ்ச் பற்றி நாராயணன் எழுதியிருந்த கட்டுரை மிகையாக அவரை ஒரு ஹீரோவாக மட்டுமே காட்டி இருப்பதாய் எனக்கு தோன்றினாலும், கட்டுரைக்குப் பின் இருந்த கடின உழைப்பு தெரிந்தது. பிடித்திருந்தது.  ரெண்டு நாள் பேப்பர் படிக்காமல் போனால் இப்படி ஏதாவது ஒரு பெரிய விஷயம் நடக்கும் நாட்களில் நாமிருக்கிறோம்.  அப்படியிருக்க இந்த மாதிரி சுருக்கமான ஆனால் தெளிவான விவரிப்புகள் ரொம்பவும் முக்கியம். இவைகளை எழுத ஆள் அதிகமில்லை.

இந்த மாதிரி ஒரு 1000 வார்த்தை கட்டுரை எழுத அவர் குறைந்தது ஆறிலிருந்து பத்து மணிநேரம் வெறும் படிக்க மட்டுமே செலவழித்திருக்கலாம்.  இதற்கு பிறகு படித்ததில் இருந்து விவரங்களை தவிர்த்து கருத்துக் கூறுகளை மட்டும் உள்ளடக்கிய ஒரு கட்டுரை எழுதுவதற்கு முன் முழி பிதுங்கி விட்டிருக்கும்.

இம்மாதிரி கட்டுரைகளை முதலில் படிக்கவும்,  பிடித்திருந்தால் ஓரிரு வார்த்தைகளில் ஒரு மெயிலோ/கமெண்டோ அனுப்பலாம், தப்பில்லை.